பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, November 23, 2022

50. கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபீ அவர்களுடனான நேர்காணல்

 கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபீ அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

நான் மலையகத்தில் பிறந்து வளர்ந்தேன். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், இஸ்லாமிய கற்கைத்துறைத் தலைவராகவும் பணியாற்றிய எம்.வை. ஷாபீ அவர்களைத் திருமணம் செய்தேன். தற்போது என் கணவருடன் நியூஸிலாந்தில் வசித்து வருகிறேன்.


தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்பப் பின்னணி, இளமைப் பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள்?


நான் கடந்து வந்த பாதையை நினைத்தத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நான் தெஹிதெனிய மடிகே என்ற ஒரு குக்கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தேன். இது சிங்களக் கிராமங்களுக்கு மத்தியில் உள்ள ஒரு சிறிய பிரதேசம். இலக்கித் துறையில் முன்மாதிரிகளோ வழிகாட்டல்களோ எனக்கு இருக்கவில்லை. குறைந்தபட்சம் எங்கள் ஊரில் ஒரு நூலகம்கூட இருக்கவில்லை. என் தந்தை மர்ஹூம் இல்யாஸ் அவர்கள் சிங்கள மொழியில் கல்வி பயின்றவர். ஆனால், என்னில் வாசிப்புப் பழக்கத்தை விதைத்தவர் அவர்தான். நான் விரும்பும் பத்திரிகைகளையும் நூல்களையும் வாங்கித் தந்தார். வானொலி, பத்திகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவந்த போதெல்லாம் பரிசில்கள் வாங்கித்தந்து என்னை உற்சாகப்படுத்தினார். ஆதனால்தான், நான் தொடர்ந்தும் எழுதி வந்தேன்.


நீங்கள் உங்களுடைய ஆரம்பக் கல்வியை எங்கு கற்றீர்கள் என்று கூற முடியுமா?

ஆரம்பக் கல்வியை எனது ஊர் பாடசாலையான தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றேன். பின்னர் மாவனல்ல சாஹிரா கல்லூரியில் என் கல்வியை தொடர்ந்தேன். படிக்கும் காலத்தில் இருந்தே மாணவர் மன்றம் நிகழ்ச்சிகளில் தலைமை ஏற்று நடாத்தி உள்ளேன். மீலாத் விழா, தமிழ்த்தின விழா என்று எல்லா வகையான கலை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று என் திறமையை வளர்த்துக்கொண்டேன். மேடைப் பேச்சுகளிலும் விவாத அரங்குகளிலும் பங்கு பற்றினேன். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மும்மொழிக் கற்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு  காட்டினேன்.


தங்களது பல்கலைக்கழக வாழ்வு, பார்த்த தொழில்கள் பற்றிக் கூறுங்கள்?

நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றேன். ஆங்கில ஆசிரியையாக சிறிதுகாலம் பணியாற்றினேன். மலேசியாவில் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றபின், தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் ஆங்கில விரிவுரையாளராக சிறிது காலம் பணியாற்றினேன். நியூஸிலாந்தில் விக்டோரியாப் பல்கலைக்கழத்திலும் மேற்படிப்பைத் தொடர்ந்தேன். இன்று கல்வி ஆலோசகராகவும், விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறேன். 


தங்களது முதற் படைப்பு எப்போது எதில் வெளியானது? இலங்கையில் இருந்த காலத்தில் எந்தெந்தப் பத்திரிகைகளில் எழுதினீர்கள்?

எனது முதலாவது கட்டுரை, முதல் சிறுகதை, முதல் கவிதை எல்லாமே தினகரனில்தான்  வெளியானது. 1980 களின் ஆரம்பத்தில் தினகரன் சிறுவர் பகுதியில் நிறைய எழுதினேன். பின்னர் தினகரன், சிந்தாமணி, நவமணி, மித்திரன், வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களில் எல்லாம் என் ஆக்கங்கள் வெளியாகின. வானொலியிலும் நிறையவே எழுதினேன். சஞ்சிகைகளிலும் என் படைப்புகள் வெளியாகி உள்ளன. 


ஏன் புலம்பெயர்ந்து செல்லவேண்டி ஏற்பட்டது?

உலகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறு வயதில் இருந்தே எனக்கிருந்தது. திருமணத்தின் பின்னர் என் கணவரும் அதே எண்ணத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. திருமணம் ஆனபின் ஒரு வாரத்துக்கும் குறைவாகவே இலங்கையில் இருந்தோம். பின்பு மேற்படிப்புக்காக இருவரும் சேர்ந்து மலேசியாவுக்குச் சென்றோம். நாங்கள் சர்வதேச பல்கலைக்கழகத்தில் படித்ததால், வெளிநாட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு நிறையவே கிடைத்தது. அங்கு படிக்கும்போதே, பகுதி நேர தொழிலும் செய்தேன். நமது நாட்டின் கல்விமுறை, வேலைத்தளம் என்பன வித்தியாசமாக இருந்தன. கற்றல், கற்பித்தல் முறைகளில் மாற்றங்களை அவதானித்தேன். வெளியுலகம் பற்றிய என் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. குறுகிய மனப்பான்மையில் இருந்து விடுபட்டு பரந்த மனதுடன் சிந்திக்க ஆரம்பித்தேன். சமூக செயற்பாடுகளில் அக்கறை ஏற்படாத தொடங்கியது. இந்த மாற்றங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. வேறு நாட்டில் வேறு சூழ்நிலைகளிலும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. மேலும் படிக்க வேண்டும் என்று இருவருமே ஆசைப்பட்டோம். உயர் கல்விக்கான வாய்ப்புகளும் சூழலும் இருவருக்குமே தேவைப்பட்டன. அதற்கான  சந்தர்ப்பம் கிடைத்ததும் புலம் பெயர்ந்தோம்.


இதுவரை வெளிவந்த தங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

01. குமுறுகின்ற எரிமலைகள் - சிறுகதைத் தொகுப்பு

02. தென்னிலங்கை முஸ்லிம்களின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு 

03. இரவைக் காக்கும் இமைகள் - கவிதைத் தொகுப்பு 

ஆகிய மூன்று நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளேன். அதாவது "குமுறுகின்ற எரிமலைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பும் "தென்னிலங்கை முஸ்லிம்களின்  தமிழ்ச் சிறுகதைகள் - ஓர் ஆய்வு" நூலும் 1998 ஆம் ஆண்டு கல்ஹின்னை தமிழ் மன்றம் மூலமாக வெளியிடப்பட்டன. ஷஷகுமுறுகின்ற எரிமலைகள்' சிறுகதைத் தொகுப்பில் எனது ஆரம்ப கால 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.


"இரவைக் காக்கும் இமைகள்" - கவிதைத் தொகுப்பு 2020 இல் வெள்ளாப்புவெளி  பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மேமன் கவி அவர்களின் தலைமையில் இணையத்தில் வெளியீட்டு விழா நடந்தது. புரவலர் ஹாஷிம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்கள். உள்நாட்டு இலக்கியவாதிகளும் ஆர்வலர்களும் மட்டுமன்றி ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், துபாய், இந்தியா, ஜப்பான்  போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் பலர் இணையம் மூலமாக எங்களோடு இணைந்து கொண்டனர். கொரோனா சூழ்நிலையில் இணையவெளியில் வெளியீட்டு விழா நடாத்தப்பட்ட முதலாவது  நூல் இதுவாகும். 


கடைசியாக வெளியிட்ட உங்களது "இரவைக் காக்கும் இமைகள்" கவிதை நூலின் தலைப்பு, உள்ளடக்கம் பற்றி என்ன கூறப் போகின்றீர்கள்?

நான் ஆரம்ப காலத்தில் எழுதிவந்த கவிதைகள் பலவற்றின் பிரதிகளைத் தொலைத்துவிட்டேன். சேமிப்பில் இருந்த ஆரம்ப காலகட கவிதைதைகள் சிலவற்றுடன் சேர்த்து அண்மைக் காலப் கவிதைகளையும் ஒன்று திரட்டி 30 கவிதைகளைத் தாங்கி "இரவைக் காக்கும் இமைகள்" கவிதை நூல் வெளிவந்திருக்கிறது.


கிட்டத்தட்டட இரண்டு தசாப்தங்களைக் கடந்து கவிதை நூலை வெளியிட்டமைக்கான காரணம் என்ன?

இரண்டு தசாப்தங்களாக வெளிநாட்டில் வசித்து வருவதுதான். காரணம் நூல் வெளியீட்டை முழுவதுமாகப் பொறுப் பேற்றுச் செய்ய நம்பிக்கைக்குரிய ஒருவரின் தேடலில் இருந்தேன் என்றே சொல்லலாம்.


மலையக இலக்கிய வளர்ச்சி பற்றி என்ன சொல்வீர்கள்?

மலையகத்தில் இலக்கியவாதிகள் தனித்தனியாக  இயங்கி வருவதாக நினைக்கிறேன். தலை  நகரிலும் கிழக்கிலங்கையிலும் இலக்கியம் சம்பந்தமான நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் பற்றி அடிக்கடி  கேள்விப்படுகிறேன். ஆனால், மலையகத்தில் இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய செய்திகள் வெளியுலகத்துக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. அல்லது அத்தகைய செய்திகள் என்னை வந்தடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


எழுத்துத் துறை தவிர்ந்த வேறு எவ்வகையான செயற்பாடுகளில் இயங்கி வருகிறீர்கள்?

நானும் என் கணவரும் சமூக சேவையில்  மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறோம். இதுபற்றிய விளம்பரங்களோ, புகைப்படங்களோ எங்கும் வெளிவரக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறோம். அகதிகளாக வந்து குடியேறிய குடும்பங்களின் நலனிலும் கவனம் செலுத்தி வருகிறோம். உற்சாகமூட்டும் பேச்சாளராகவும் நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை சமூகத்துக்கு சொல்லி வருகிறேன். உளவியல் துறையிலும் ஈடுபாடு உண்டு. இன, மத நல்லிணக்க செயற்பாடுகளில் என் கணவருடன் சேர்ந்து பணியாற்றுகிறேன்.


எழுத்துத் துறையில் உங்களை வியப்பில் ஆழ்த்தியவர்கள் யார்? ஏன்?

ஒரு படைப்புக்கு வாசகர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இருக்குமானால் அதுவே ஓர் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. மூத்த எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இன்றைய சூழலில் நிறைய இளம் எழுத்தாளர்களும் காத்திரமான படைப்புக்களை முன்வைக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். ஒருசிலரை மட்டும் பெயர்ப் பட்டியல் போட்டுக்காட்ட விரும்பவில்லை.


நீங்கள் எழுதி, நடித்த நாடகங்கள் பற்றிக் கூறுங்கள்?

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஏராளமான நாடகங்கள் எழுதியுள்ளேன். இதில் ஷஷபாறையில் பூத்த மலர்' என்ற தொடர் நாடகமும் அடங்கும். நான் முதன் முதலில் குரல் கொடுக்க ஆரம்பித்தது ஆவுஸ்திரேலியா வானொலி வளர்பிறை முஸ்லிம் நிகழ்ச்சியில்தான். இதற்கான சந்தர்ப்பத்தை நிகழ்ச்சித்  தயாரிப்பாளர் முஹம்மது முஹுசீன் அவர்கள் எனக்கு வழங்கினார்கள். பின்னர் ஒரே நாடகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குரலில் பேசி நடித்த அனுபவமும் உண்டு. ஷஷஇலையுதிர் காலம்' என்ற நாடகத்தில் - ஓர் இளம் பெண், நடுத்தர வயதுப் பெண், ஒரு மூதாட்டி என்று மூன்று வேடங்களில் நடித்தேன். நான் இரட்டை வேடமேற்று நடித்த ஷஷபெருநாள் சட்டை' என்ற நாடகம் நேயர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றதால் பல தடவை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது. 


உங்களது எழுத்துக்கள் மற்றும் நாடகங்கள் மூலமாக சமூகத்தில் எவ்வகையான மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே அநேகமாக படைப்புகளை முன்வைக்கிறேன். வாழ்க்கையில் சரிந்து விழுந்து, நம்பிக்கையைத் தொலைத்து வாடுவோருக்கு ஊக்கமூட்டும் ஊன்றுகோலாக என் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன். 


உளவியல் துறையில் உங்களுக்குள்ள ஈடுபாடுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

மேலைத்தேய உளவியல் ஆலோசனை முறைகள் முழுக்க முழுக்க தனிமனிதனை முன்னிறுத்தியே வழங்கப்படுகின்றன. சமயங்களில் அவர்களது ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் எங்கள் சமயக் கோட்பாடுகளுடன் முரண்படுகின்றன. இதற்காகவே, நானும் என்  கணவரும் சேர்ந்து இஸ்லாத்தை வழிகாட்டியாகக் கொண்ட உளவியல் வழிகாட்டல் முறையை ஆரம்பித்தோம்.

கணவன் - மனைவிக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படும்போதும், பெற்றோர் - பிள்ளைகளுக்கிடையில் பிளவுகள் ஏற்படும்போதும் மறுமை வாழ்க்கையை முன்னிறுத்தி, அல்லாஹ்வின் அளப்பரிய கருணையையும் மன்னிக்கும் மனப்பான்மையையும் நினைவூட்டி அவர்களுக்கு வழிகாட்டுவதே எங்கள் நோக்கமாகும்.


முகநூலை அதிகமான இலக்கியவாதிகள் பயன்படுத்துகின்றார்களே. இதுபற்றி நீங்கள் நினைப்பது என்ன? காத்திரமான இலக்கியப் பங்களிப்புக்களை முகநூலினுடாக செய்ய முடியுமா?

முகநூல் என்பது ஓர் ஊடகம் மட்டுமே. அதனை பாவிக்கும் விதத்திலேயே அதன் பயன்பாடு அடங்கி இருக்கிறது. முகநூல் மூலமும் காத்திரமான இலக்கிய பங்களிப்பு செய்யலாம். நம் படைப்புக்கள் எல்லை தாண்டிப் பயணிக்கும் வாய்ப்பு முகநூலில் கிடைக்கிறது. முகநூல் மூலமே நான் இலக்கிய உலகில் மறு பிறவி எடுத்தேன் என்றால் அது மிகையாகாது.


முகநூல் மூலம் வாசிப்பு அதிகரிப்பதாகக் கருத முடியுமா?

இன்றைய தலைமுறையினர் இணையத்தில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், நீளமான பதிவுகளை பலர் கடந்து செல்வதையும் பார்க்கிறோம். இது ஆரோக்கியமான வாசிப்பின் அடையாளம் அல்ல.


இலக்கிய உலகில் கற்றுக்கொண்டவற்றில் நீங்கள் வாசகர்களுக்குக் கூற விரும்புவது என்ன?

நல்ல எழுத்தாளராக வேண்டுமானால் பரந்த வாசிப்புப் பழக்கம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள் இருந்துகொண்டு வாசிக்காமல் பல்வேறுபட்ட எழுத்தாளர்களின் படைப்புகளையும் வாசிக்க வேண்டும். படைப்புகளை விமர்சனப் பார்வையுடன் நோக்கும் திறனையும் இதன்மூலம் வளர்த்துக்கொள்ளலாம்.


உள்நாட்டு இலக்கியப் படைப்புக்கள், வெளிநாட்டு இலக்கியப் படைப்புக்கள் ஆகியவற்றில் தாங்கள் அவதானிக்கும் பிரதான வேற்றுமைகள் எவை?

இலக்கியங்கள் தான் வாழும் சூழலையும் அரசியல் பொருளாதாரக் காரணிகளையும் உள்ளடக்கியே  படைக்கப்படுகின்றன. அந்த வகையில் பார்த்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இலக்கியப் படைப்புக்களில் வேற்றுமைகளைவிட ஒற்றுமைகள்தான் மேலோங்கி இருக்கின்றன.


நீங்கள் நேசித்து வாசித்த படைப்பைப் பற்றியும் அதன் சுவாரஷியத் தன்மை பற்றியும் குறிப்பிட முடியுமா?

நான் அண்மையில் வாசித்து முடித்த நூல், ஷஷஹுஸ்னாவின் கதை'. 2019 இல் நியூஸிலாந்து பள்ளிவாசல்கள் இரண்டில் நடந்த மிலேச்சத்தனமான மனித வேட்டைத் தாக்குதலில் உயிரிழந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை சரிதையை அவர் கணவர் எழுதியிருக்கிறார். 

வாழ்வியல் பண்புகளும் வரலாறும் கலந்த ஒரு சிறந்த நூலாக, "ஹுஸ்னாவின் கதை" வெளிவந்திருக்கிறது. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது - அன்பால்தான் அது சாத்தியம் என்ற சுலோகத்தோடு வெளிவந்திருக்கும் இந்த ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்க்கும் ஆவலில் இருக்கிறேன்.


சமகாலமாக நாவல் இலக்கியங்களின் வரவு கணிசமாக குறைந்து வருகின்றது. அந்தவகையில் நீங்கள் நாவல்கள் வெளியிட ஆர்வம் காட்டவில்லையா?

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் சூழலை மையமாக வைத்து இதுவரை எந்த நாவலும் வெளியிடப்படவில்லை என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சியில் ஈடுபட என்னைத் தயார்படுத்திக்கொண்டு வருகிறேன். மனதுக்குள் சில நாவல்கள் கருக்கட்டி இருக்கின்றன. காலமும் நேரமும் சாதகமாக வந்தால் எழுதி முடிக்கும் எண்ணமுண்டு. 


உங்களுக்கு அல்லது உங்களுடைய படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், கௌரவங்கள் ஏதும் இருப்பின்?

படிக்கும்போது  பாடசாலை மட்டத்திலும், மாவட்ட, மாகாண, தேசிய ரீதியிலும் பல பரிசுகள் வாங்கியுள்ளேன். பல்கலைக்கழக மட்டத்தில் பீடங்களுக்கிடையிலான இலக்கியப் போட்டிகளிலும் வெற்றியீட்டி உள்ளேன்.  

1999 இல் மத்திய மாகாண முஸ்லிம் கலைஞர் கௌரவிப்பில் 'கலைச்சுடர்' பட்டம் வழங்கி  கௌரவிக்கப்பட்டேன். அதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்து வந்துவிட்டேன்.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

இந்த வருடம் பயணக் கட்டுரைத் தொகுப்பொன்றை வெளியிட ஆர்வமாக இருந்தேன். ஆனால், டிசம்பர் மாதம் கொரோனா சூழ்நிலையில் நான் வெளியிட்ட ஷஷஇரவைக் காக்கும் இமைகள்' நூல் இன்னும் மக்களை சென்றடையவில்லை. இலங்கை நாட்டின் பல பகுதிகள் முடக்கப்பட்டிருக்கின்றன. எனவே, நாட்டில் நிலைமை சீராகும் வரையில் அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துள்ளேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Saturday, January 30, 2021

49. UTV தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், பேச்சாளர் (ஊக்குவிப்புப் பேச்சாளர்) ரினோஸா நவ்சாத் அவர்களுடனான நேர்காணல்

 UTV தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், பேச்சாளர் (ஊக்குவிப்புப் பேச்சாளர்) ரினோஸா நவ்சாத் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை, குடும்பப் பின்னணி பற்றி எமது வாசகர்களுக்கு சுருக்கமாகக் கூறுங்கள்?


தற்பொழுது நான் தலைநகரத்தில் வசித்து வந்தாலும், என் பிறந்த ஊர் ராகமை. என் சிறுவயதிலிருந்து நினைவு தெரிந்தவரை கொழும்பில் மாபோலை எனும் நகரத்தில் என் உறவினர்கள் வசித்து வந்தனர். சிறுவயதிலிருந்து என் உம்மம்மாவிடமே வளர்ந்தேன். என் உம்மம்மாவிற்கு 10 பிள்ளைகள். ஆதலால் என் மாமா மற்றும் சித்திமார்களிடமே அதிகமாக இருக்க வேண்டியேற்பட்டது. 



எனக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுதே என் உம்மம்மா மற்றும் உறவினர்கள் அனுராதபுரம் நாச்சியாதீவு எனும் கிராமத்திற்கு குடிபெயர்ந்துவிட்டனர். பின்னர் என் பாலர் பாடசாலையைத் தவிர்த்து முதலாம் தரம் தொடக்கம் க.பொ.த. உயர் தரம் வரை நாச்சியாதீவு மு.ம. வித்தியாலயத்தில் கற்றேன். என் தாய் அவர்களின் ஏனைய சகோதரர்களை கவனிக்க மற்றும் பராமரிப்பதற்காகவும் குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாகவும் வெளிநாட்டுக்கு செல்லவேண்டியேற்பட்டது. தாய் சிறுவயதில் வெளிநாடு சென்றதன் காரணமாக என்னை என் உம்மம்மாவே பராமரித்தார். ஆரம்ப காலங்களில் தாய்க்கும் என் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக எனது தாயார் என் தந்தையை விவாகரத்து செய்துவிட தந்தை என்ற ஸ்தானத்தை என் தாயின் தம்பிமார்களே எனக்கு வழங்கி முழு ஒத்துழைப்பையும் தந்தனர். எனவே என் உயர் தரம் வரை என் மாமாமார் மற்றும் பாட்டியின் கட்டுப்பாட்டிலேயே வளர வேண்டிய சூழ்நிலை எனக்கு இருந்தது. அத்துடன் என் தாய்க்கு நான் ஒரே பிள்ளை என்பதால் எல்லோரும் மிகுந்த பாசத்துடனேயே என்னை வளர்த்து ஆளாக்கினர்.


02. நீங்கள் மாணவப்; பருவத்தில் இருந்த பொழுது பிற்காலத்தில் தொலைக்காட்சித் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆவலையோ அல்லது இலட்சியத்தையோ கொண்டிருந்தீர்களா? தொலைக்காட்சித் துறை மீது எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?

நிச்சயமாக எனக்கு நினைவு தெரிந்தவரை அவ்வாறான ஒரு எண்ணம் இருக்கவில்லை. ஆனால் தமிழ் மொழியின் மீது அதீத பற்று இருந்தது. நான் அதிகமாக  படிப்பதைத் தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதிலும், நகைச்சுவை பட்டி மன்றங்கள் பார்ப்பதிலும் அதிக நேரத்தை செலவிட்டேன். அத்துடன் என் கல்விக்கான முழு ஒத்துழைப்பும் பரந்தளவிலான சுதந்திரமும் என் வீட்டில் எனக்கு மிகையாகவே கிடைத்தது. தாய் என்னருகில் இல்லையெனினும் தாயின் கடமைகள் அனைத்தையும் உம்மம்மா மற்றும் மாமாமார், சித்திமார் என பலரும் தொடர்ந்து எனக்கு அளித்து வந்தனர். எனவே நான் அளவு கடந்து தொலைக்காட்சி பார்ப்பதையும் இணைப்பாட விதானங்களில் கவனம் செலுத்துவதையும் யாரும் தடுக்கவில்லை. அந்த அபரிமித சுதந்திரமே என்னை தொலைக்காட்சிப் பக்கம் திருப்ப மிகப்பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. காலம் செல்லச் செல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் நிகழ்ச்சி வழங்குநர்களாக நானும் மாரி அவர்களைப் போன்று கண்ணாடி முன்னின்றும் தனியாகப் பேசியும் எனக்குள்ளேயே பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதன்பின்பு தரம் 9 இல் கல்வி கற்கும் பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் துறை மீது ஒரு பாரிய ஈர்ப்பு ஏற்பட்டது. எதிர்காலத்தில் என் துறை ஊடகத் துறையாகத்தான் இருக்குமென்று பின்புதான் நானாகவே உணர்ந்துகொண்டேன்.


03. நீங்கள் எப்போது, எந்த வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குள் நுழைந்தீர்கள்?

நான் தரம் பதினொன்றில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பொழுது இலங்கையின் தேசிய தமிழ் தொலைக்காட்சியான நேத்ரா ரீவியில் "ராக மேடை" எனும் இசை நிகழ்ச்சி நடந்தேறியது. சுருதி, சங்கீதம் என்று ஒன்றும் தெரிந்திருக்காவிடினும் அன்றைய நாட்களில் பாடல்கள் பாடவேண்டும் என்று ஆசை இருந்ததால் "ராக மேடை" நிகழ்ச்சியில் பங்குகொண்டேன். மற்றும் இலங்கையின் தனியார் தொலைக்காட்சியான சக்தி ரீவி நடாத்திய "Grand Master" எனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். அப்பொழுது என் அகவை பதினேழு இருக்கும். அங்கு சென்று வந்தவுடன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகத்தான் நான் வரவேண்டும் என்று என் முழு உழைப்பையும் ஊடகத் துறைக்குள் நுழைந்து விடுவதற்கே செலவிட்டேன். பின் உயர் தரம் முடித்த கையோடு இலங்கை தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியில் (SLTTI) ஒரு வருடம் கல்வி கற்றுவிட்டு என் இருபத்து மூன்றாவது வயதில் தொலைக்காட்சிக்குள் நுழைந்தேன்.


04. தொலைக்காட்சியில் எவ்வாறு அறிமுகமாகினீர்கள்?

தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பொழுது என் வசதி கருதி மல்வானையிலுள்ள என் பெரியப்பா வீட்டிலேயே தங்கியிருந்தேன். அக்கால கட்டங்களில் கவிதை எழுதவும், புத்தகங்கள் வாசிப்பதற்கும், நூல் வெளியீட்டு விழாக்களுக்கு செல்லவும் அதிகமான வாய்ப்புக்கள் கிடைத்தன, எனவே கவிதைகள் எழுதி மாதாந்தம் பௌர்ணமி தினத்தில் நடக்கும் கவியரங்கிற்கு சென்று கவிதை பாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது என் கவிதைகளைப் பாராட்டிய கிண்ணியா அமீர் அலி மற்றும் கவிஞர் மேமன் கவி ஆகியோர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஹஜ் பெருநாள் சிறப்பு கவியரங்கில் கவிதை வாசிக்க என்னையும் அழைத்தனர். ஊடகத் துறையில் டிப்ளோமா முடித்த கையயோடு அந்த வாய்ப்பும் கடந்த 2013 ஆம்  ஆண்டு கிடைக்க DAN  எனும் பிராந்திய தொலைக்காட்சியில் பகுதி நேர இஸ்லாமிய பிரிவாக செரண்டிப் எனும் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அங்கு நான் கவிதை வசித்து முடித்த கையோடு  எனக்கு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க அன்றய நாட்களில் செரண்டிப் அலைவரிசை பிரதானியாக இருந்த பஹத் ஏ. மஜீத் அவர்களினால் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது தான் தொலைக்காட்சி என்ற ஒன்றுக்குள் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக  காலடி எடுத்து வைத்தேன்.


05. இத்துறையில் உங்களுக்கு ஈடுபாடு காட்ட ஊக்குவித்தவர்கள் யார்?

உண்மையில் ஊக்குவித்தவர்கள் பற்றிக் கூறும்பொழுது என் குடும்பத்தினருக்கே முதலிடத்தைக் கொடுப்பேன். என் தாய், உம்மம்மா, மாமாமார், மாமி, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா மற்றும் என் ஆசிரியர்களும் என்னை அதிகப்படியாக ஊக்குவித்தார்கள்.


06. பல்வேறு தொலைக்காட்சிகளில் தொழில் புரிந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளலாமே?

ஆம். முதல் காலடி செரண்டிப் தொலைக்காட்சியில் பணிபுரிந்த 5 மாத காலப் பகுதிகள் தான். அலைவரிசை பிரதானியான பஹத் ஏ. மஜீத் மற்றும் நிகழ்ச்சி முகாமையாளராக கடமையாற்றிய இஹ்ஸான் முஹம்மத் மற்றும் இன்னும் இருவருடன் சேர்த்து மொத்தமாக நான்கு பேர்களே அத்தொலைக்காட்சியில் பணிபுரிந்தோம். பின்னர் ஒரு சில உயர் தலையீடு காரணமாக செரண்டிப் ரீவியிலிருந்து பஹத் ஏ. மஜீத் தவிர்ந்து ஏனையோர் அனைவரும் உதயம் ரீவிக்கு மாற்றம் பெற்றோம். 2015 முதல் 2019 வரை நான்கு வருடங்களாக ஏ.எல். இர்பான் என்பவர் அலைவரிசை பிரதானியாக கடமையாற்றினார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, பிரதியாக்கம் என ஆழ்ந்த அறிவும் திறமையும் என்னிடம் இருக்கவில்லை. ஆனாலும் இன்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருக்க முன்னாள் அலைவரிசை பிரதானி ஏ.எல். இர்பான் அவர்களின் கண்டிப்பும் வழிகாட்டலும் ஒருவகை காரணம் எனலாம். ஒரு வரியில் சொல்வதென்றால் "களிமண் சிலையான கதைதான் என் கதை" பல தொலைக்காட்சிகளிலில் பணிபுரியாவிட்டாலும் இவ்விரண்டு தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து மேற்கூறியதற்கு சமம். இன்னும் சுருக்கிச் சொல்வதென்றால் பல சுவாரஷ்யங்கள், பற்பல கண்டிப்புகள் எனலாம்.


07. தொலைக்காட்சித் துறையில் ஈடுபடுபவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், ஆளுமைகள் என்னவென்று கூற முடியுமா?

தொலைக்காட்சித் துறையில் பணிபுரிவோருக்கு இருக்க வேண்டிய ஆளுமைகள் பற்றி குறிப்பிட எனக்கு போதுமான அனுபவம் இல்லை. என்றாலும் எனக்கு தெரிந்தவற்றை நான் குறிப்பிடுவது நல்லது என்று நினைக்கின்றேன். ஒரு நிகழ்ச்சியை கமெராவின் முன் நின்று தொகுத்து வழங்குவதற்கு முதலில் கூச்ச சுபாவமும் தயக்கமும் இருத்தல் கூடாது என்பது முதல் தகுதி. ஒரு நிகழ்ச்சி வழங்குனரைப் பார்த்து திடீர் என்று ஒரு விடயத்தை கையில் கொடுத்து இதைப்பற்றி நீங்கள் அவசரமாக ஒரு காணொளி நேரடி நிகழ்ச்சியில் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளரால் கூறப்பட்டால் எவ்வித தயக்கமும் தாமதமும் இன்றி அதைச் செய்து கொடுக்கக்கூடிய திறன் ஒவ்வொரு நிகழ்ச்சித்தொகுப்பாளருக்கும் அத்தியவசிய தேவை. அதனால் தான் நாளாந்தம் அரசியல், பொது அறிவு, சினிமா என்ற அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சி வழங்குனரும் தயாராக இருத்தல் வேண்டும். ஒரு நிகழ்ச்சி வழங்குனரை தயாரிப்பாளர் "இதை செய், இது இப்படித்தான் வரவேண்டும், இப்படித்தான் வாசித்தல் வேண்டும்" என்று கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை அடிக்கடி ஏற்பட்டால் அது ஒரு நேர்த்தியான நிகழ்ச்சி வழங்குனருக்கு பொருத்தமாக இருக்காது. ஷஷஎள் என்றால் எண்ணையாக நிற்றல்' என்ற பழமொழி நிகழ்ச்சி வழங்குனர்களாக இருக்கும் ஓவ்வொரு தொகுப்பாளர்களுக்கும் பொருந்தும்.


08. 'ஒரு துளி' நிகழ்ச்சி உட்பட நீங்கள் தயாரித்து அல்லது தொகுத்து வழங்கும் ஏனைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

UTV யில் நான் மொத்தமாக ஐந்து நிகழ்ச்சிகளை தயாரித்தும், ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகின்றேன். அவற்றில் "ஒரு துளி" எனும் நிகழ்ச்சி சனிக் கிழமைகளில் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆவணப்படுத்தல் நிகழ்ச்சியாகும். அரசியல், சினிமா, அறிவியல் என பல துறைகளில் உச்சம் தொட்டவர்களினதும் வரலாறு மற்றும் தற்கால சுவாரஷ்யமான சர்ச்சைக்குரிய விடயங்களையும் தொகுத்து ஆராய்ந்து ஆவணப்படுதலே மேற்கூறிய "ஒரு துளி" நிகழ்ச்சி. 

நான்  தொகுத்து மற்றும் தயாரித்து வழங்கும் மற்றுமொரு நிகழ்ச்சி "சூப்பர் சமையல்" இந்நிகழ்ச்சி UTV யில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும். பெண்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் சுவையான மேலைத்தேய, கீழைத்தேய சமையல்களை தொகுத்து வழங்குதலே அந்நிகழ்ச்சி. அதுதவிர்ந்து "World 360" எனும் நிகழ்ச்சியும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு பொது அறிவுசார் நிகழ்ச்சித்தொகுப்பாகும். இதில் வைரலான விடயங்கள், சந்தைக்குப் புதிதாக அறிமுகமாகிய போக்குவரத்து சாதனங்கள், அறிவியல் என பல சுவாரஷ்யமான விடயங்ககளை 30 நிமிடங்களில் வழங்கும் ஒரு நிகழ்ச்சியே இது. அதுதவிர்ந்து ஷஷசினிமா சினிமா' எனும் நிகழ்ச்சி இலங்கை, இந்தியா மற்றும் உலக சினிமா பக்கங்களில் நிகழும் முக்கியமான நிகழ்வுகள் திரைப்படங்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. அத்துடன் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் "Weekend Chat" எனும் நிகழ்ச்சியையும் தயாரிக்கின்றேன். இது முழுக்க முழுக்க நேயர்களுக்குப் பிடித்தமான பாடல்களைத் தெரிவு செய்து பாடல்கள் வழங்கும் நேரடி நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.


09. தற்போது நீங்கள் பிரதானமாக தயாரித்து அல்லது தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் யாவை?

நான் தயாரிக்கும் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

"ஒரு துளி" (ஆவணப்படுத்தல் நிகழ்ச்சி), "சினிமா சினிமா" (சினிமா செய்திகளின் தொகுப்பு), "World 360" (பொது அறிவு சார் மற்றும் அறிவியல், வர்த்தகம் கலந்த வைரல் நிகழ்வுகளின் தொகுப்பு), "Weekend Chat" (பாடல்கள்  வழங்கும் நேரடி நிகழ்ச்சி), "சூப்பர் சமையல்" இது நான் தயாரித்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி போன்நனவாகும்.


10. தொலைக்காட்சித் துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

தொலைக்காட்சித் துறைக்குள் நுழைய வேண்டும் என்றால் நிச்சயமாக நம்மிடம் திறமை எனும் சாவி வேண்டும். அதுதவிர்ந்து பல இடங்களில் அவமானங்களை சந்திக்கும் சமாளிக்கும் திராணி வேண்டும். எந்தவொரு சிகரத்திலும் அவமானம் எனும் சொல்லை தாண்டி வராமல் ஏறி அரியாசனமிட்டு அமர்ந்துவிட முடியாது. இது தொலைக்காட்சிக்கு மிக அதிகமாகவே பொருந்தும். அத்துடன் பெண்ணாக இருந்தால் தைரியமும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் துணிவும் இருத்தலே போதுமானது.


11. ஒரு பெண்ணாக இத்துறையில் தொடர்ந்தும் இருப்பது சவாலானதாகத் தோன்றவில்லையா? இத்துறையில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எப்படியானது?

நிச்சயமாக சவால்தான். மேற்கூறியது போன்று வாழ்க்கையில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து விடாமல் அதனுடன் வாழ்க்கை நடத்துவது மிகப்பெரும் சவால் தான். இது நம் தொழிலுக்கும் கூட பொருந்தும். பெண் என்பதைத் தாண்டி நான் ஒரு முஸ்லீம் பெண்ணாக இருப்பதால் பல அவமானகளையும் பழிச்சொற்களையும் கீழ்த்தரமான வார்த்தைகளையும் வசைகளையும் தாண்டி இத்துறையில் ஆணிவேராய் இறுக்கி பிடித்து நிற்கின்றேன் என்றால் இது என் இமாலய சாதனை என்றே கூறுவேன். சவால்கள் ஒவ்வொரு ரூபத்தில் வரும். சதிகளாகவோ, ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களாகவோ, புதிய ஆண்களது முகவரியற்ற நற்புக்களாகவோ, ஒரு பெண்ணை பல ரூபத்தில் சவால்கள் எதிர்கொள்ளும். ஆனால் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றியது போல் மிகவும் விழிப்போடு இருந்தால் எந்த சவாலையும் அத்திவாரமே இல்லாமல் அழித்து விடலாம்.


12. ஒரு நிகழ்ச்சித் தொகுப்;பாளர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள்?

மேற்கூறியது போல் ஒரு நிகழ்ச்சித்தொகுப்பாளர் சுறுசுறுப்பாகவும் பொது அறிவுத்திறன் கொண்டவராகவும் இருப்பதோடு சொற்களை மிகவும் தெளிவாக உச்சரிக்கக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். உதாரணமாக ஒரு நிகழ்ச்சித்தொகுப்பாளர் அவர் பிரதேச மொழியில் நிகழ்ச்சிகளில் பேசுவதைத் தவிர்த்தல் நல்லது. அத்துடன் இன்றய தலைமுறையினர் மத்தியில் அவர்களை சென்றடையும் வண்ணம் எவ்வாறு கூற வந்த விடயத்தை கொண்டு போய் சேர்த்தல் என்பதை ஆழமாக அறிந்திருத்தல் நல்லது. மற்றும் ஒரு நிகழ்ச்சித்தொகுப்பாளர்  தன்னுடைய தோற்றத்தில் அழகில்லாமலோ, நிறக்குறைவாகவோ, வழுக்கை தலையுடனோ இருக்கலாம். ஆனால் அவரது மூளையில் விடயம் இருக்க வேண்டும். நான் இதை கூறக் காரணம், ஒரு சில தனியார் தொலைக்காட்சிகளில் முகத்தோற்றத்திற்கும், நிறத்திற்கும், அழகுக்குமே முக்கியத்துவம் கொடுக்கின்றனரே ஒழிய திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே தான் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது. ஒரு தொகுப்பாளருக்கு இருக்கக் கூடாத விடயங்களை சுருங்கக் கூறினால் வித்யா கர்வம், அவசரம், தடுமாற்றம், உச்சரிப்புப் பிழை, நேர்த்தியற்ற ஆடை அலங்காரம் இவையனைத்தும் இருந்தால் நிச்சயம் ஒரு நேர்த்தியான நிகழ்ச்சித்தொகுப்பாளராக ஆக முடியாது. எனவே மேற்கூறியவற்றை தவிர்த்தல் நல்லது.


13. தொலைக்காட்சித துறையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களை எப்படி உணர்கின்றீர்கள்?

உலகமயமாதலின் விளைவில் தொழில் நுட்பம், ஊடகம், கல்வி முறை என அனைத்தும் அசுர வேகத்தில் மாறிக்கொண்டே வருகின்றது. இவற்றில் தொலைக்காட்சித் துறையிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நிகழ்ச்சிகளின் தன்மை, மொழியின் வளர்ச்சி, வௌ;வேறுபட்ட சிந்தனைகள் தற்கால சமுதாயத்திற்கு ஏற்றாற்போல நிகழ்ச்சிகளை வழங்கும் தனித்தன்மை, காட்சிப்படுத்தல் ரீதியாக சுருங்கச் சொல்லும் குறுஞ்செய்திகளுடன் கூடிய குறும்படங்கள் என தொழிநுட்ப ரீதியிலும் காட்சி வடிவமைப்பிலும் செய்திப் பிரிவுகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.


14. UTV தொலைக்காட்சிக்கு அண்மைக் காலமாக காத்திரமான பங்களிப்பை நல்கிவரும் உங்களின் தற்போதைய பணிகள் என்ன?

நான் ஒரு தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கும் பட்சத்தில் என் நிகழ்ச்சிகளுக்குரிய அனைத்துப் பணிகளையும் நான் மட்டுமே செய்து முடிப்பது வழக்கம். இதுவரை எனக்கென்று நான் உதவித் தயாரிப்பாளரையோ அல்லது பிரதி எழுத்தாளரையோ வைத்து நான் வேலை செய்ததில்லை. காரணம் தனியாக ஒரு சிந்தனை நின்று பணிபுரிந்தால் மட்டுமே திறம்படவும் நேர்த்தியாகவும் ஒரு வேலையை செய்து முடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஆகையினால் நிகழ்ச்சி செம்மையாக்கம் (Editing) தவிர்ந்து ஆய்வு செய்தல், பிரதி எழுதுதல், தகவல் சேகரித்தல், முன்னோட்டம் பார்த்தல் என அத்தனை பணிகளையும் தினமும் நானே தனியாக செய்து வருகின்றேன்.


15. Confident Group Of Ceylon பேஸ்புக் பக்கத்தில் கூடுதலாக உங்களது எவ்வகையான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளது? அதுபற்றியும் பகிர்ந்துகொள்ளலாமே? அதிகமான நேயர்கள் இப்பக்கத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளார்களே. இதுபற்றி?

ஆம் இப்பக்கம் என்னுடைய முகநூல் பக்கம். இதுதவிர YouTube தளத்திலும் கணக்கு வைத்துள்ளேன். இன்றைய இளைஞர் சமுதாயத்தை சரியான பாதையில் வழிநடாத்திக் கொண்டு செல்ல வேண்டும் மற்;றும்; இனிவரும் தலைமுறை அதீத கல்வியறிவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் ஒரு சில சமூகப் பிரச்சினைகளை இப்பக்கத்தில் பேசி வருகின்றேன். இப்பக்கத்தை பலபேர் விரும்பக் காரணம் நான் குறிப்பிட்ட ஒரு வட்டார மொழிக்குள் நின்றுவிடாமல் இன்றைய தமிழ் மக்களுக்குப் போய் சேரக்கூடிய இலகு தமிழில் நான் உரையாடுவதன் காரணமாவே இலங்கையர்களைவிட இந்தியத் தமிழர்கள் அதிகம் இப்பக்கத்தை ஆக்கிரமித்துள்ளனர்.


16. ஊடகத் துறையில் மறக்க முடியாத அனுபவமாக நீங்கள் எதனைக் குறிப்பிடுவீர்கள்?

மறக்க முடியாத அனுபவங்கள் பல உள்ளன. அவற்றில் நல்லவைகளும் உள்ளன. தீயவைகளும் உள்ளன. பல இடங்களில் அவமானப்பட்டிருக்கின்றேன். நான் பேசும் தமிழை கொச்சைப்படுத்தக் கேட்டிருக்கின்றேன். நான் அதிகமாக பேசுகின்றேன் எனப் பலர் விமர்சனம் செய்ததும், விமர்சனம் செய்து வருவதும் மறக்க முடியாத அனுபவங்கள் தான். சிலவற்றைக் கடந்ததுதான் என் தனித்துவமான ஊடகப் பயணமாக இருக்கிறது.


17. கவிதைகளோடு உங்களுக்கு எவ்வகையான ஈடுபாடு உள்ளது?

கல்வி கற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் கவிதைகள் வாசிப்பது அதிகம். கவிதை எழுதுவதும் அதிகம். ஆனால் தொலைக்காட்சிக்குள் காலடி வைத்த பின்பு புத்தகங்கள்  வாசிப்பதைத் தாண்டி கவிதைகளில் பெருமளவு ஈடுபாடு காட்டுவதில்லை.


18. உங்கள் பலம் என்று எதனை நினைக்கின்றீர்கள்?

எனது பலம் என்று நான் எப்பொழுதும் கூறுவது என் மன தைரியமும் என் கோபமும் மட்டுமே. முன்கோபமும் பெண்ணுக்கென்ற திமிரும் சற்று இருப்பதனால் தான் இதுவரை ஊடகத்துறைக்குள் தாக்குப்பிடித்து நிற்கின்றேன்.


19. இலங்கை ஊடகங்களில் இந்தியப் படைப்புக்கள் அதிலும் குறிப்பாக இந்திய சினிமாப் பாடல்கள் செல்வாக்குச் செலுத்துகின்றதே. தற்காலத்தில் தொலைக்காட்சிகளில் ஈழத்து கலைஞர்களது பாடல்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் நிகழ்ச்சிகளைக் காண முடியாதுள்ளது ஏன்?

அது இலங்கை கலைஞர்களின் பிழையுமல்ல. நம் ஈழத்து இளம் தலைமுறையினரின் பிழையும் அல்ல. ஏனெனில் காலா காலம் தொட்டு வீடுகளில் உள்நாட்டு நிகழ்ச்சிகள் பார்ப்பதைவிட வெளிநாட்டு பாடல்களையும் நம் தாயகம் கடந்த தொலைக்காட்சி நாடகங்களையும் பார்த்துப் பழகியதால் நம் நாட்டுப் படைப்புகள் கண்களுக்கு புலப்படாமல் போனது. முற்றத்து மல்லிகை மனக்காது என்பது உண்மைதான். ஆனால் தற்போதைய கால கட்டங்களில் ஈழத்து படைப்பாளர்களும் திறனான அழகான விடயங்களை படைத்துக்கொண்டு வருவது அதிகமாகி வருகின்றமை சற்று மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவே உள்ளது.


20. உங்களது நேயர்களை அல்லது தொலைக்காட்சி நேயர்களை எவ்வகையில் நோக்குகின்றீர்கள்?

என்னை நம்புபவர்கள். என்னை விமர்சிப்பவர்கள். என்மீது அளவில்லா கண்ணியம் கொண்டவர்கள் என்றே நான் எப்போதும் எனது நேயர்களை நினைக்கின்றேன்.


21. இணைய தொலைக்காட்சிகளின் வருகை பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

இணையத் தொலைக்காட்சிகளின் வருகை ஓரளவு நல்லது தான். தொழிநுட்ப யுகத்தின் வருகை வளர வளர தொழில் நுட்ப ஊடக முறைகளும் மாறிக்கொண்டே வருகின்றன. மூன்று அல்லது நான்கு தசாப்தங்களுக்கு முன்னால் தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் மட்டுமே மனிதர்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. ஆனால் இன்று தொலைக்காட்சியின் பரிணாம மாற்றம் வெறும் உள்ளங்கைக்குள் புதைந்து கிடக்கிறது. தொடர்பு சாலைகளின் பரிமாற்றம், ஊடக வழிப் பரிமாற்றம், காட்சி வழிப் பறிமாற்றம் என அனைத்தும் கையில் உள்ள ஸ்மார்ட் தொலைபேசி மூலமாகவே அடைந்து கொள்ள முடிகின்றது. தொலைக்காட்சியின் யுகம் தாண்டி இன்று இணைய வழி தொலைக்காட்சிகள் பிறந்திருப்பது அடுத்த தலைமுறையினரின் அபரிமித ஊடக வழிகாட்டிகளாக இருப்பதற்குத்தான். சுருக்கமாகச் சொன்னால் நல்ல விடயம்தான்.


22. இத்துறையில் இதுவரை நீங்கள் பெற்ற பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இத்துறையில் கால்பதித்து ஆறு வருடங்கள் தாண்டிவிட்டன. மக்களிடத்தில் அங்ககீகாரமும் ஓரளவு கிடைத்திருக்கின்றது. இன்னும் கற்க வேண்டியவை பல உள்ளன என நம்புகின்றேன். விருதுகள் பற்றிக் கூறினால் 2019 ஆம் ஆண்டுக்கான அரச தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த ஆவணப் படமாக எனது "ஒரு துளி" எனும் ஆவண நிகழ்ச்சி பரிந்துரை செய்யப்பட்டது. ஆயினும் விருது கிடைக்கவில்லை. பரிந்துரைக்கான சான்றிதழ் மாத்திரமே கிடைத்தது. மனதளவில் சிறுகாயங்கள் இருந்தாலும் விருதுகள் பெறவில்லை என்பது பற்றி நான் இதுவரை கவலையடைந்ததில்லை. பார்வையாளர்கள் மற்றும் நேயர்கள் எனது நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு நான் எங்காவது செல்லும் வேலை அதைப்பற்றி மனந்திறந்து பாராட்டுவார்கள். அப்பொழுது கிடைக்கும் அளப்பரிய மகிழ்ச்சி விருதுகளையும்விட மேலானது. அவ்வாறான தருணங்கள் வாழ்வில் நூற்றுக் கணக்குக்கும் மேல் நிகழ்ந்துள்ளன.


23. இறுதியாக உங்கள் தொலைக்காட்சி நேயர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

என்னுடைய  தொலைக்காட்சி நேயர்களுக்கு முதலில் நான் கூற விரும்புவது நன்றிகள் மட்டுமே. அவர்கள் இல்லையென்றால் எனது நிகழ்ச்சிகள் புஸ்வானம் ஆகியிருக்கும். நான் தயாரித்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டுவார்கள். என் குடும்பத்தைத் தாண்டி என் பார்வையாளர்களுக்கு மட்டுமே நான் கோடான கோடி நன்றிகள் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். எனவே அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களின் ஆதரவு என்றும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


 நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Tuesday, April 7, 2020

48. மின்னும் தாரகைகள் எனும் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலைத் தந்த நூலாசிரியை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களுடனான நேர்காணல்

'மின்னும் தாரகைகள்' என்ற நூல் வெளியீட்டை முன்னிறுத்திய விசேட நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.11.11

மின்னும் தாரகைகள் எனும் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலைத் தந்த நூலாசிரியை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் 

அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரியும் படைப்பிலக்கியவாதியும் இலங்கையின் சிரேஷ்ட முஸ்லிம் பெண் பத்திரிகையாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்;, மலையகத்தைச் சேர்ந்த ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியிலுள்ள உடுதெனிய என்ற சிற்றூரில் பிறந்தவர். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பொதுசனத் தொடர்புத்துறை சான்றிதழும், தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை "தினபதி - சிந்தாமணி" ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி' என்ற  பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரசார அதிகாரியாக நியமனம் பெற்ற இவர், அத்திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக (District Information Officer) பதவி பெற்றார். தகவல் திணைக்களத்தின் "திங்கள்" என்ற மாதாந்த சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் அத்திணைக்கள மாதாந்த "புத்தொளி" என்ற பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், திணைக்களத்தினால் சுமார் 35 வருடகாலமாக தொடர்ச்சியாக வெளிவரும் "தெசதிய" என்ற சிங்கள சஞ்சிகையின் சிறப்புக் கட்டுரையாசிரியராகவும் கடமை புரிந்தார்.

1975 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர் அன்று முதல் இன்று வரை கவிதையாக கட்டுரையாக ஆய்வு நூலாக கவிதை நூலாக என எழுத்துலகிற்கு தனது பங்களிப்பை நல்கி வருகின்றார். ஏற்கனவே 'பண்பாடும் பெண்', 'பூஞ்செண்டு' என்று தனதான இரண்டு நூல்களைத் தந்த இவர், தற்சமயம் இலங்கை இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் முத்திரை பதிக்கும் ஒரு முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். இலங்கை இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஓர் ஆய்வு நூலை 460 பக்கங்களுடன் கூடியதாக ஷஷமின்னும் தாரகைகள்|| என்ற பெயரில் வெளியிடவிருக்கிறார். எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி (2018.11.11) கொழும்பில் இந்த சிறப்புமிக்க நூல் வெளியிடப்படவுள்ளது. எனவே இந்த காத்திரமான நூலை ஆக்கிய நூலாசிரியர் கலாபூஷணம் திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களை 'ஞாயிறு தினக்குரல்' பத்திரிகைக்காக நாம் சந்தித்து உரையாடினோம்.

அவருடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் இதோ:-


"தகவல் அதிகாரி"யாக பணியாற்றிய உங்கள் அநுபவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

"தகவல் அதிகாரி"யாகப் பணியாற்றிய எனது அனுபவங்கள் பற்றி குறிப்பிட்டு சொல்வதாயின் தகவல் திணைக்களத்தினால் புதிதாக உள்வாங்கப்பட்ட பதவி தான் 'அரசாங்க தகவல் அதிகாரி' பதவி. போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 24 அதிகாரிகள் மாவட்ட தகவல் அதிகாரிகளாக நியமனம் பெற்றனர். இவர்களுள் நான் 'கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரி'யாக நியமிக்கப்பட்டேன். மூன்று மொழிகளிலும் கடமையாற்றக்கூடிய ஓர் அதிகாரியே கொழும்புக்கு நியமிக்கப்பட வேண்டும் என எமது திணைக்களம் என்னை இப்பதவிக்கு அமர்த்தியது. மாவட்ட செயலகங்கள் தோறும் தகவல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அந்த பிரிவுகளுக்கு கணனி, தொலைபேசி, தொலைகாட்சி, புகைப்படக்கருவி மற்றும் அலுவலக உபகரணங்கள் அடங்களாக அனைத்து வளங்களையும் எமது தகவல் திணைக்களமே வழங்கியது.

கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 13 பிரதேச செயலங்கள் இருக்கின்றன. இந்த 13 பிரதேச செயலகங்களினூடாக அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கை குறித்து மக்களை விழிப்பூட்டுவதே எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளாகும். மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்கள், மாவட்ட விவசாய கமிட்டி கூட்டம், மாவட்ட சூழல் பாதுகாப்புக்கமிட்டி கூட்டம், டெங்கு ஒழிப்புக் கூட்டம், மாதாந்த வீடமைப்பு கமிட்டி கூட்டம் இப்படி பல்வகையான கூட்டங்கள் இடம்பெறும். இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்வதுடன் அதில் பிரஸ்தாபிக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அச்சக மற்றும் இலத்திரன் ஊடகங்களுக்கு தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதுதான். எமக்கிருந்த பாரிய பொறுப்பாகும்.

அத்தோடு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளமான றறற.நெறள.டம என்ற இணையத்தளத்துக்கும் உடனுக்குடன் எமது தகவல்களை வழங்குதல், மாவட்ட வளங்கள் குறித்த தரவுகளை கணனி மயப்படுத்தல், மாவட்டத்தில் நிகழும் அரச மட்ட தேசிய நிகழ்வுகளுக்கு ஊடக இணைப்பாளராக செயல்படுவது போன்றவையும் எமது பணிகளாகும். மாவட்ட செயலகத்தில் தகவல் அதிகாரியாகக் கடமை புரிந்த காலப்பகுதி உண்மையிலேயே எனது அரச சேவையின் பொற்காலம் என்றே கூறத்தோன்றுகிறது. வேலைப் பளுவும் அதிகம் தான். ஆனால் எனக்கு எவ்வளவோ அனுபவங்களையும் அறிவுசார் உயர் அதிகாரிகள் வட்டத்தையும் பெற்றுத் தந்தது இந்த சேவை என்றால் அது மிகையாகாது.

அதுமட்டுமல்ல இந்த அரசாங்க தகவல் திணைக்களத்தில் மிக நீண்ட காலமாக (சுமார் 20 வருட காலமாக) தகவல் அதிகாரியாக கடமையாற்றிய ஒரேயொரு முஸ்லிம் பெண் என்ற பெருமையும் எனக்குண்டு என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


இலங்கையில் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி குறிப்பிட்டு சொல்லும் படியாக இருக்கிறதா?

எனது இந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலுக்காக பெரும் எண்ணிக்கையான முஸ்லிம் படைப்பாளர்களின் நூல்களை பார்க்கும், படிக்கும் அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இதன்படி நோக்கும் போது இந்தத் தேடலின் போது நான் சந்தித்த பல பெண் இலக்கிய ஆளுமைகளைக் கண்டு உண்மையிலேயே நான் பிரமித்துப்போனேன். மும்மொழிகளிலும் ஆக்கங்கள் படைக்கும் ஆற்றல் உடையோர், சிறந்த கவி ஆளுமையுடையோர், சிறந்த சிறுகதை புனைவோர், நல்ல நாவல்களை எழுதுவோர் என பல்துறை ஆளுமைகொண்ட பெண்கள் பலரையும் சந்தித்தேன். இந்த நூலில் உள்வாங்கப்பட்டுள்ள அனைவரிடத்திலும் வௌ;வேறு திறமைகள் இருப்பதைக் கண்டு நான் வியந்து போனேன். இவர்கள் எல்லோரும் நம்நாட்டின் வளங்கள் (சுநளழரசஉநள). இவர்களை நான் "மின்னும் தாரகைகள்" எனப் பெயர் சூட்டியது பொருத்தம் என உணர்கிறேன். இவர்களில் சிலர்  மின்னும் தாரகைகளாக மட்டுமல்ல சுடர் விடும் சூரியனாகவும்  பிரகாசிக்கிறார்கள்  என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

அதேநேரம் இன்னுமொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும் இலக்கிய ஆளுமையுள்ள ஒரு சில பெண் படைப்பாளிகளிடையே மற்றவர்களையும் அரவணைத்துப்போகும் இணக்கப்பாடு சற்று குறைவாகக் காணப்படுவதுதான் கவலைக்குரியதாக உள்ளது. பெண் எழுத்தாளர்கள் என்ற வகையில் அனைவரும் பரஸ்பரம் இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து ஓரணியாய் செயல்பட்டால் எவ்வளது சிறப்பாக இருக்கும். அனைவரிடத்திலும் அந்த ஒற்றுமை மலர வேண்டும் என்று ஆசிக்கிறேன்.


உங்கள் எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

நான் சமகால பிரச்சினைகனை வைத்து வானொலிக்கும் பத்திரிகைகளுக்கும் ஆக்கங்கள் எழுதுவது வழக்கம். இந்த வகையில் நான் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு எழுதும் பிரதியாக்கங்களும் கூட சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவே இருந்தன என்பதற்கு நிகழ்ச்சியைக் கேட்போர் கூறும் விமர்சனங்களே சான்று பகர்கின்றன. குறிப்பாகக் கூறுவதாயின் எனது உறவுக்கார மாமியார் ஒருவர் எனது முன்னிலையில் பேசும் போது ஷஷஐயோ மகளே! உங்கள் முன் ஏதும் பேச பயமாக இருக்கிறது. அப்புறம் நீங்க அதுபற்றி ரோடியோவிலையோ பேப்பரிலையோ எழுதி விடுவீங்க|| என்பார். இன்று அந்த மாமி உயிருடன் இல்லை. ஆனால் அவர் கூறிய ஆணித்தரமான வரிகள் என் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கின்றன. இதுவே எனது ஆக்கங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றத்துக்கு ஒரு சிறு உதாரணம் தானே?

மற்றுமொரு சிறு சம்பவத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். வழமையாக மீன் வியாபாரிகளாக பெரும்பாலும் ஆண்களைத்தான் காண்பதுண்டு. ஆனால் ஒரு பெண் தள்ளுவண்டியில் எமது வீடுகளுக்கு மீன் விற்பனை செய்ய வருவதுண்டு. மீனை வெட்டுவதற்காக இவர் எடுக்கும் பிரயத்தனம் தள்ளு வண்டியை தள்ளித் தள்ளி வரும் பரிதாபம் என் மனதை வருத்தியது. ஒரு நாள் அந்த பெண்மணியிடம் நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாய்? என்று அவரது சகல விபரங்களையும் பெற்று உடனே அவரது புகைப்படத்தையும் எடுத்து லங்காதீப என்ற சிங்கள பத்திரிகையில் அவர் பற்றிய சோகக் கதையைப் பிரசுரித்தேன். அதற்கடுத்த வாரம் அந்த பெண் மீன் வியாபாரி ஆட்டோ வண்டியில் மீன் வியாரம் செய்ய வந்தார். எனக்கும் அவரைக் கண்டதும் தூக்கி வாரிப்போட்டது. அவரும் தான் வந்த வண்டியை நிறுத்திவிட்டு ஓடோடி வந்து தனது கைகளை கூப்பி எனக்கு நன்றி கூறினார். நான் ஏன் எனக் கேட்க அவர் சொன்ன பதில் என்னை மெய்ச்சிலிர்க்கச் செய்தது.

"நோனா நீங்கள் எனது சோகக் கதையை பத்திரிகையில் பிரசுரித்தீர்களல்லவா? உடனே எங்கள் குடும்ப உறவினர் ஒருவர் தள்ளு வண்டியைவிட்டு இதில் போய் வியாபாரம் செய்யுமாறு இந்த ஆட்டோவைத் தந்தார். அவ்வாறே தொண்டர் நிறுவனம் ஒன்றும் வந்து எங்களுக்கு உதவ முன்வந்துள்ளது. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும் நோனா" என்றார். எனது எழுத்துக்களுக்குக் கிடைத்த இந்த வெற்றி குறித்து மனம் குளிர்ந்தது.

இவ்வாறு பல சம்பவங்கள் உண்டு. மனித உணர்வுகளை மதித்து அவலங்களை போக்குவதற்காக நாம் எம் பேனாiவை பயன்படுத்துவது ஒரு நற்கிரிகையாகவே இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த தாரக மந்திரத்தை உள்வாங்கியவளாகவே நான் எனது பேனாவைப் பயன்படுத்துகிறேன். அதனால் நான் மனத்திருப்தியுமடைகிறேன்.


"மின்னும் தாரகைகள்" நூலின் உள்ளடக்கம் பற்றி குறிப்பிட முடியுமா?

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி சிறிய சிறிய பதிவுகள் வந்த போதிலும் இதுவரை காலமும் பரந்த அளவில் ஆராயப்படவில்லை என்பதை எனது நூலுக்கு அணிந்துரை தந்த பேராசிரியர் அனஸ் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் யார்? அவர்கள் எழுதி வெளியிட்ட நூல்கள் எவை? போன்ற விபரங்கள் யாராலும்; பரந்த அளவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் நடைபெறும் வேளைகளில் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. ஆனால் அந்த மாநாடுகள்  முடிவடைந்ததும் அதைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை. அதனை ஆராயத் துணியவுமில்லை.

2007 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சமர்ப்பிப்பதற்;காக "இலங்கை முஸ்லிம் பெண்களின் ஊடகப் பங்களிப்பு" என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினேன். இந்த ஆய்வுக்காக தகவல்களைத் திரட்டும் போதுதான் "இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்" பற்றிய ஆய்வு நூல் ஒன்றையும் எழுத வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் துளிர்விட்டது.

சுமார் பதினொரு வருட கால எனது இந்த நீண்ட நாள் கனவை நனவாக்க கடந்த பல மாதங்களாகப் பாடுபட்டேன். இப்போதுதான் அக்கனவு நனவாகிறது. நான் இந்த ஆய்வு நூலை எழுத எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்தவர் எனது மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய சகோதரியான மலையக இலக்கிய படைப்பாளி நயீமா சித்தீக் அவர்கள்தான். எனவே அன்னாரையும் இங்கு நன்றியுடன் நினைவூட்ட விரும்புகிறேன்.

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய எனது ஆய்வு நூலான "மின்னும் தாரகைகள்" நூல் மூன்று அத்தியாயங்களை கொண்டதாக 460 பக்கங்களுடன் கூடிய ஒரு காத்திரமான நூலாக வெளிவருகிறது. "நூல்களை தந்த நூலாசிரியர் இவர்கள்..", "புத்தகம் வெளியிடாவிட்டாலும் இலக்கியத்தில் வித்தகம் புரிந்த பெண்மணிகள்.." மற்றும் "பேனா வாகனமேறி வானொலியில் வலம் வந்த வனிதையர்" போன்ற தலைப்புகளில்தான் இந்த மூன்று அத்தியாயங்களும் இடம்பெறுகின்றன. இந்த மூன்று அத்தியாயங்களிலிலும் சுமார் 140 பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆராய்ந்துள்ளேன். கோடிட்டுக் காட்டக்கூடிய பல தகவல்களையும் ''மின்னும் தாரகைகளிலிருந்து சிதறிய ஒளிக்கீற்றுக்கள்'' என்ற தலைப்பில் அவற்றைச் சுருக்கமாக  சுட்டிக் காட்டியுள்ளேன்.

அதுமாத்திரமல்ல இந்த ஆய்வு நூலுக்குப் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் சிறப்பான ஆழமான ஒரு அணிந்துரையையும் இந்தியப் பேராசிரியர் சேமுமு. முகம்மதலி அவர்கள் மன நிறைவான மதிப்புரையையும் தந்துள்ளனர்.

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் தனது அணிந்துரையில் ஷஷபெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷமின்னும் தாரகை| என்ற ஆய்வு நூல் நம் கைகளுக்குக் கிடைத்துள்ளது. ஆவணப்படுத்தல் மதிப்பீடு செய்தல் என்பவற்றிற்கு மூலாதார எழுத்து வடிவம் ஒன்று தேவை. நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் 'மின்னும் தாரகை' அவ்வாறான ஒரு தேவையை நிறைவேற்றுகிறது.

இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான தரவுகளைத் தருவதற்கு நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எடுத்த நீண்டகால முயற்சியின் இலக்கிய அறுவடையாக இந்த 'மின்னும் தாரகையை' தயக்கமின்றிக் குறிப்பிட முடியும்.

இலங்கையில் எழுத்துத் துறையில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்புக்களின் வரலாறு மற்றும் தனி நபர் ரீதியில் ஒவ்வொருவரினதும் இலக்கிய வெளியீடுகள் இலக்கிய முயற்சிகள் பற்றி அறிவதற்கு ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இருந்த ஆவலை நூருல் அயினின் "மின்னும் தாரகை" ஆய்வு நூல் ஓரளவாவது நிறைவு செய்கிறது. ஒரு பெண்ணின் முயற்சியாக இப்பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒரு நிகழ்வாகும்" எனக் குறிப்பிடுகிறார்.

தென் கிழக்குப் பல்கலைக்கழக அரபு மொழித்துறைப் பேராசிரியர் மௌலவி எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்கள் இந்நூலைப் பற்றிக் குறிப்பிடுகையில் இந்நூல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு உசாத்துணை நூலாகத் திகழும் என்றும் ஒவ்வொரு வீடுகளில் இருக்க வேண்டிய புத்தகம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியப் பேராசிரியர் சே.மு.மு. முகம்மதலி அவர்கள் தந்த மதிப்புரையில் எனது இந்த ஆய்வு நூல் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இலங்கை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு செம்மைமிகு வகையில் முழுமையாக இன்னமும் ஆவணப்படுத்தப்படாமை நெஞ்சில் ஒரு முள்ளாகவே வலி தந்து கொண்டிருக்கிறது. எண்ணிலடங்காப் படைப்பாளர்கள் பவனி வரும் இலங்கைத் தீவினில் ஆய்வு கொண்டெழுதப் பல்கலைக்கழக வசதிகள் இருந்தும் காலம் இன்னும் கனியாதது பெற்ற பேற்றினில் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் பெண்மணிகளின் பங்கினை எடுத்துரைக்கும 'மின்னும் தாரகைகள்' நூலைத் தந்ததன் மூலம் நூருல் அயின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துள்ளாரென்றே கூறவேண்டும்.

இலங்கையின் முதலாம் முஸ்லிம் பெண் பண்டிதர் எனும் பெருமை பெற்ற 86 வயது நிந்தவூர் மைமூனா ஜெயினுலாப்தீன் முதல் 18 வயது இளம் படைப்பாளி ருஸ்தா பின்த் ஜவ்ரியா முடிய 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண் எழுத்தாளர்களைக் குறித்த தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்துள்ள இந்த ஆய்வு நூல், நூலாசிரியரின் பெரும் முயற்சிக்கும் உழைப்புக்கும் அச்சாரமாக அமைந்துள்ளதோடு இலங்கை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு பொன்னேடாகவும் சிறந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மும்மொழிகளிலும் படைப்பாற்றல் பெற்றிருந்த முஸ்லிம் பெண்மணிகளை - சிறுகதை, கவிதை, புதினம், கட்டுரை எனப் பல்வேறு தளங்களிலும் சுவடுகள் பொறித்துள்ள முஸ்லிம் பெண்மணிகளை - நூலாசிரியர் தக்க வகையில் தமிழ்கூறு நல்லுலகிற்கு அடையாளப்படுத்தியுள்ளார். நூலக அளவில் காரோட்டாமல் களம் சென்று நேர்காணல் கண்டு உணர்வு ஏர் உழுது சாதனைப் பெண்மணிகள் தம்மை வெளிக் கொணர்ந்திருக்கும் நூலாசிரியரின் திறன் போற்றுதற்குரியதாகும்."
இவ்வாறு தொடர்கிறது இந்தியப் பேராசிரியர் சேமுமு. முகம்மதலி அவர்களது மதிப்புரை.  இத்தகைய பெருந்தகைகளின் ஆசி உரைகள் கிடைத்தமை எனதிந்த ஆய்வு நூலுக்குக் கிடைத்த பெரும் பரிசாக கருதுகிறேன். இவ்வாறு இன்னும் பல சிறப்பம்சங்களும் நூலில் உண்டு.


பண்பாடும் பெண் (1997) என்ற நூல் வெளிவந்து சுமார் 21 வருடங்கள் கழிந்தே "மின்னும் தாரகைகள்" (2018) எனும் நூல் வெளிவருகிறது. இவ்வளவு கால இடைவெளியை ஒரு நூல் வெளியீட்டுக்கு எழுத்துக் கொண்டதற்கான விசேட காரணங்கள் ஏதும் உண்டா? 

நான் அரசாங்க தகவல் திணைக்களத்தில் தகவல் அதிகாரியாக கடமை புரிந்த கால கட்டத்தில் தமிழ்மொழி மூல அதிகாரிகள் ஒரு சிலரே அங்கு கடமையாற்றினோம். மும்மொழிகளிலும் சேவையாற்றும் ஆற்றல் இருந்ததால் எமது அன்றாட கடமைகளுக்கு மேலதிகமான வேலைகள் பலவற்றைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதுண்டு. எனவே அலுவலகம் சென்றால் அங்குள்ள வேலைகளைச் செய்யவே நேரம் பற்றாக்குறை. வீட்டுக்கு வந்தால் வீட்டு வேலைகள், குடும்பப் பொறுப்புக்கள் என்றே காலம் கடந்தன. ஓய்வாக இருந்து எமது தனிப்பட்ட வேலைகளைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. வாரத்தில் இரு நாள் விடுமுறையில் இரண்டாயிரம் கடமைகளைச் செய்ய வேண்டிய நிலை. இதுவே எனது நூலாக்க தாமதங்களுக்குக் காரணம்.

அண்மையில் நான் எனது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்துதான் தேங்கிக் கிடந்த எனது இலக்கிய முயற்சிகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதனால் தான் வீடு முழுவதிலும் நிரம்பிக் கிடந்த எனது கணவர் நஜ்முல் ஹுசைனின் கவிதைகளையெல்லாம் திரட்டி "நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள்" என்ற ஒரு தொகுப்பை கடந்த ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி வெளியிட்டேன். அத்தோடு நான் வானொலியில் பாடிய மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த எனது கவிதைகளை "பூஞ்செண்டு" என்ற பெயரில் தொகுத்துள்ளேன். அந்த வேலைகள் முடிந்த உடன் தான் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய எனது இந்த ஆய்வு நூலான "மின்னும் தாரகைகள்" நூலை எழுத ஆரம்பித்தேன். சுமார் ஒரு வருட கால முயற்சிதான் இந்த ஆய்வு நூல். எனவே தேக்க நிலையில் இருந்த எனது இலக்கிய படையல்களை தற்சமயம் ஊக்கத்துடன் வெளியிடக் கிடைத்தமை குறித்து உள்ளம் பூரிப்படைகிறேன்.


"மின்னும் தாரகைகள்" நூலின் நூலின் வெளியீடு பற்றிக் குறிப்பிட முடியுமா?

எனது ஒரு வருட கால  அயராத முயற்சியினால் உருவான எனதிந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி (2018.11.11) கொழும்பு ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள அல் ஹிதாயா கல்லூரி பஹார்தீன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மலையக முன்னணி எழுத்தாளரான கலாபூஷணம் நயீமா சித்தீக் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகவும் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பௌஸி விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மூஷான் இன்டர்நெஷனல் தலைவரான அல்ஹாஜ் முஸ்லிம் சலாஹுத்தீன் எனது ஷஷமின்னும் தாரகை|| நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளவிருக்கிறார்.  சிறப்பதிதிகள் ஊடக அதிதிகள் மற்றும் பிரமுகர்கள் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

அத்தோடு  முக்கியமாக ஒரு விடயத்தைக் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த விழாவின் கதாநாயகி நான் மட்டுமல்ல இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள "மின்னும் தாரகை" களாக என்னால் வர்ணிக்கப்பட்ட அனைத்து எழுத்தாளர்களும் கதாநாயகிகள்தான். எனவே அவர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்பதே என் வேணவா! அதனால் "மின்னும் தாரகை"களான எல்லாப் பெண் எழுத்தாளர்களும் இவ்வெளியீட்டு விழாவில் கட்டாயமாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என நான் அவர்களை வினயமாய் கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு எனது அபிமான அன்பர்கள், நண்பர்கள், உறவினர்கள்  அனைவரும் இந்த விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.


சிங்கள மொழியில் நீங்கள் செய்த இலக்கியப் பங்களிப்புக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தமிழில் ஒரு சஞ்சிகை வெளியிடப்படவுள்ளதாகவும் அதற்காக தமிழ் உத்தியோகத்தர் தேவை என்ற விளம்பரம் ஒன்றை அடுத்தே நான் தகவல் திணைக்களத்துக்குக் காலடி எடுத்து வைத்தேன். ஆனால் விளம்பரத்தில் இருந்த படி தமிழ் சஞ்சிகை வெளியிடும் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் இடம்பெற்றன. அப்போது தான் அந்த திணைக்களத்திலிருந்து சுமார் 35 வருடங்களாக தொடர்ச்சியாக வெளிவரும் "தெசதிய" என்ற சஞ்சிகையின் ஆசிரியரான காலஞ்சென்ற வின்சன்ட் பெரியப்பெரும அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. என்னைக் கண்ட உடனேயே அவர் "உங்களுக்கு சிங்கள மொழி தெரியும் தானே? எங்கள் சஞ்சிகைக்கும் உதவலாமே?" என்று என்னை முதன்முதலாகத் தட்டிக்கொடுத்தார். அவர் தந்த உற்சாகத்தினால்தான் சிங்களத்தில் ஆக்கங்கள் படைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டேன். ஆக்கங்களை எழுதிக் கொடுத்துவிட்டதுடன் எனது கடமை முடிந்துவிட்டதாக நான் கருதுவதில்லை. நான் எழுதிய சிங்களப பிரதியை எவ்வாறு எடிட் பண்ணியுள்ளார்கள்? அதில் நான் எங்கு பிழை விட்டுள்ளேன்? என்றெல்லாம் ஆராய்வேன். ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளை - சஞ்சிகைகளை  வாசிக்கும் போது  அதில் எனக்குத் தெரியாத சிங்கள சொற்கள் இருந்தால் அதுபற்றி இவர்களிடம் கேட்டு விளக்கங்களை பெற்றுக்கொள்வேன். இவ்வாறுதான் நான் எனது சிங்கள மொழித் திறனை வளர்த்துக்கொண்டேன்.

இச்சந்தர்ப்பத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தினால் அரச அதிகாரிகளுக்கான சிங்கள உயர் கல்வி பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பாடநெறியை மேற்கொள்வதற்கும் திணைக்கள அதிகாரிகள் எனக்கு அலுவலக விடுமுறை தந்தார்கள். இச்சலுகைகளை முறையாக பயன்படுத்தி சிறந்த முறையில் பரீட்சை எழுதினேன். அந்தக் கால கட்டத்தில் பரீட்சை எழுதிய திணைக்களத்தின் ஏனைய உத்தியோகத்தர்களை விட நான்தான் அதிக புள்ளிகளைப்பெற்று சிறந்த முறையில் சித்தியடைந்தேன். எனது இந்த பெறுபேறுகளைக் கண்ட திணைக்களத்தின் நிருவாக அதிகாரி கூட "இனி சிங்கள இலக்கணங்களைப் பற்றி ஹுசைன் மிஸ்ஸிடம் தான் நீங்கள் கேட்டுப் படிக்க வேண்டி வரும்" என்று கூறி சக சிங்கள உத்தியோகத்தர்களிடம் என்னைப் பற்றி பெருமையாகக் கூறினார்.

இவ்வாறு சிங்கள இலக்கணத்தையும் நன்கு புரிந்து கொண்டதால் சிங்களத்தில் ஆக்கங்களை எழுதுவது எனக்கு மேலும் இலகுவானது. ஷஷதெசதிய|| சஞ்சிகையின் ஆசிரியர் வின்சன்ட் பெரியப்பெரும அவர்கள்  எனக்கு ஒவ்வொரு தலைப்பில் எழுதுமாறு பணிப்பார். நானும் மிகவும் விருப்பத்துடன் எழுதுவேன். மாதா மாதம் வெளிவரும் "தெசதிய" சஞ்சிகையில் எனது கட்டுரைகளும் வெளிவரும். அத்தோடு அச்சஞ்சிகையின் சிரேஷ்ட சிறப்புக் கட்டுரையாளர்களின் பெயர்ப் பட்டியலிலும் எனது பெயரையும் குறிப்பிட்டு  என்னை கௌரவப்படுத்தினார்.

சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் சில சொற்களிடையே நிலவும் ஒற்றுமைகள் குறித்து (உதாரணமாக படிக்கம - படிக்கம், இலக்கம - இலக்கம், இடியப்ப - இடியப்பம்) ஆராய்ந்து ஒரு புத்தகம் வெளியிடுவோம் என்று என்னை சதா ஊக்கப்படுத்திய "தெசதிய" சஞ்சிகை ஆசிரியர் வின்சன்ட் பெரியப்பெரும திடீரென காலமானார். அதனால் அந்த முயற்சி கைக்கூடவில்லை. அவரின் மறைவையடுத்து வசந்தப்பிரிய ராமநாயக்க அவர்கள் ஷஷதெசதிய|| சஞ்சிகையின் ஆசிரியரானார். ஏற்கனவே என்னை நன்கு தெரிந்து வைத்திருந்த அவரும் எனக்கு அச்சஞ்சிகையில் நிறையவே எழுதுவதற்குச் சந்தர்ப்பம் தந்தார்.

தீவிரவாதம் தலைவிரித்தாடிய கால கட்டத்தில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்கல் திட்டம் குறித்து இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் கட்சி தலைவர்களினதும் கருத்துக்களைக் கேட்டறிந்து அரசியல் பேட்டித்தொடர் ஒன்றை செய்யுமாறு "தெசதிய" சஞ்சிகையின் ஆசிரியரான வசந்தப்பிரிய ராமநாயக்க என்னைப் பணித்தார். அதற்கிணங்க டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன், டீ. சந்திரசேகரன், பீ.பீ. தேவராஜ், இரா சம்பந்தன். சுரேஸ் பிரேமசந்திரன், ஈரோஸ் தலைவரான சங்கர் ராஜ் போன்றோரை நான் பல்வேறு அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பேட்டி கண்டு சிங்கள சஞ்சிகையில் பிரசுரித்துள்ளேன். அன்றைய யாழ் மேயராக இருந்த பொன்னுத்துரை சிவபாலன் குண்டுவெடிப்புக்கு இலக்காகுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அவரை கடைசியாக பேட்டி கண்டது நான்தான்;. எமது சிங்கள சஞ்சிகையில் அவரது பேட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்.

அது மட்டுமல்ல. ஈரோஸ் தலைவரான சங்கர் ராஜை நான் இச்சஞ்சிகைக்கான பேட்டி கண்டுக்கொண்டிருந்த வேளைதான் கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. நாம் இருந்த அந்த அலுவலக சுவர்களில் கூட அதிர்வு ஏற்பட்டது. இதைக் கண்ணுற்ற எமது அலுவலக புகைப்படப்பிடிப்பாளரும் என்னை வாகனத்தில் அழைத்து வந்த வாகன சாரதியும் "{ஐயோ மிஸ்!.. இப்படியான இடங்களுக்கு எம்மை அழைத்து வர வேண்டாம். எங்களுக்குப் பிள்ளை குட்டிகள் உண்டு. நாங்கள் காப்புறுதி செய்துமில்லை. எனவே எங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் எங்கள் பிள்ளைகள் அனாதையாகி விடுவர்" என அங்கலாய்த்தார்கள். இவ்வாறான பயங்கர அனுபவங்களை எனது ஊடகப் பணியிலே எதிர்கொண்டுள்ளேன். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரான பிராகரனைத்தவிர ஏனைய தமிழ் கட்சித் தலைவர்கள் அனைவரையும் நான் இச்சஞ்சிகைக்காக பேட்டி கண்டுள்ளேன்.


ஏன் பிரபாகரனையும் சந்தித்திருக்கலாமே?

ஆமாம் பிரபாகரனையும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. பீ.பீ.சீ. வானொலியின் தமிழ் சேவையில் கடமையாற்றிய ஆனந்தி சூரியகுமாரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் தங்கியிருக்கும் பங்கருக்குச் சென்று பேட்டி காண விருப்பதாகக் கூறி அதற்கான அனுமதியைப் பெற எமது திணைக்களத்துக்கு வந்தார். அச்சமயம் தான் "தங்கச்சி என்னோடு வாரும்" என்று என்னையும் கூட வருமாறு அழைத்தார். ஆனால் எனது கணவர்தான் அதற்குச் சம்மதிக்கவில்லை. இல்லையேல் அவரையும் பேட்டி கண்டிருப்பேன்.

இவ்வாறு கடும் போராட்டங்களுக்கும் பீதிகளுக்கும் மத்தியில் நான் எழுதிய அந்த அரசியல் பேட்டித்தொடருக்காக அரச கரும மொழித் திணைக்களம் "இன ஐக்கியத்துக்கான ஊடக பங்களிப்பு" என்ற மகுடத்தில் எனக்கு சான்றிதழும் பொற்கிழியும் வழங்கி கௌரவித்தது. இவை தவிர, எமது திணக்களத்தின் வாராந்த வெளியீடான 'தொரத்துரு' என்ற பத்திரிகைக்கும் மற்றும் 'பொதுஜன' என்ற பத்திரிகைக்கும் நான் நிறையப் பங்களிப்புக்களைச் செய்துள்ளேன்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக (District Information Officer) பதவி உயர்வு பெற்ற நான் கொழும்பு மாவட்ட செயலக தகவல் பிரிவுக்குப் பொறுப்பதிகாரியாகவும் சுமார் பத்தாண்டு காலம் கடமை புரிந்;தேன். இக்காலப் பகுதியில் (2007 ஆம் ஆண்டு முதல்) 'கொழம்ப புவத்' (கொழும்புச் செய்திகள்) என்ற பெயரில் சிங்கள மொழி மூல காலாண்டு பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டேன். கொழும்பு மாவட்டத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கலை, கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வெளிவந்த இப்பத்திரிகை; உயர் அதிகாரிகளினால் மட்டுமன்றி அன்றைய பொது நிர்வாக அமைச்சரின்  பாராட்டையும் பெற்றது.

சிங்கள மொழிபெயர்ப்பாளர் பரீட்சையிலும் சித்தியடைந்த எனக்கு அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மொழிபெயர்ப்பாளராகவும் நியமனம் கிடைத்தது. நான் உடுவை தில்லை நடராஜாவின் கடற்கன்னி, மந்திரக்கண்ணாடி, பேசும் பேனா ஆகிய மூன்று சிறுவர் நூல்களையும் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளேன். அத்தோடு எனது கணவரின் புதுக்கவிதைகளை தற்சமயம் சிங்களத்தில் மொழிபெயர்த்து வருகிறேன். அது மாத்திரமன்றி அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள எனது "மின்னும் தாரகைகள்" என்ற ஆய்வு நூலையும் "திலென தரு" என்ற அதே பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்க்கும் உத்தேசம் உண்டு. காலம் கனிந்தால் பார்ப்போம்.


உங்கள் நினைவுகளில் இடம்பிடித்து இன்னும் மறக்க முடியாத ஏதாவது சம்பவம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது ஊடகத்துறை, எழுத்துத்துறை வாழ்வில் மறக்க முடியாத நிறைய சம்பவங்கள் உண்டு. நான் ஏற்கனவே குறிப்பிட்ட மத்திய வங்கி குண்டு வெடிப்புச் சம்பவம் எனது ஊடக வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. அவ்வாறே கடந்த ஆண்டு நான் இந்தியா சென்றிருந்த வேளை கவிக்கோ அப்துர் ரகுமான் அவர்களை பனையூரிலுள்ள அன்னாரின் இல்லத்துக்கே போய்ச் சந்தித்து உரையாடிய இந்த இனிய காலைப்பொழுதும் என் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத நினைவுதான். அவ்வாறே டென்மார்க் சிவமீரா அறக்கட்டளை நிறுவனமும் தமிழ்நாடு வளரி சஞ்சிகையும் இணைந்து நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் நான் எழுதிய ஷஷமலையகப் பெண்கள் மனம் மகிழ்வதெப்போது?|| என்ற என் கவிதைக்கு முதலாம் இடம் கிடைத்தமையும் அதற்காகக் கிடைத்த சிவமீரா ஞாபகர்த்த விருதும் பொற்கிழியும் எனது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வேயாகும்.


வானொலி, தொலைக்காட்சிகளிலும் நீங்கள் இலக்கியப் பங்களிப்புக்கள் செய்ததுண்டா?

வானொலியில் நிறையவே பங்களிப்புச் செய்துள்ளேன். சுமார் 17 வருட காலங்களாக முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் என்ற நிகழ்ச்சிக்கு பிரதித் தயாரிப்பாளராக இருந்துள்ளேன். பெருநாள் தின விசேட கவியரங்குகளில் மூத்த கவிஞர்கள் தலைமையில் கவிபாடியுள்ளேன். அன்றைய காலகட்டத்தில் அதிகாலை வேளை ஒலிபரப்பாகும் இஸ்லாமிய நற்சிந்தனை நிகழ்ச்சிகளிலும் எமக்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளன. தமிழ் சேவையில் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சிக்கும் நிறைய ஆக்கங்கள் எழுதியுள்ளேன். அவ்வாறே தொலைக்காட்சியில் அவ்வப்போது நேர்காணல்கள் பலவற்றிலும் கலந்தரையாடல்களிலும் கலந்துக்கொண்டுள்ளேன். நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான கவியரங்குகளிலும் பங்குபற்றியுள்ளேன். அவுஸ்திரேலிய தமிழ் வானொலியின் வளர்பிறை நிகழ்ச்சியிலும் எனது கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.


'தற்போது கிடைக்கும் இலக்கிய விருதுகள் பொருத்தமானவர்களுக்குத் தான் கிடைக்கிறது' என்று கருத முடியுமா?

பொருத்தமற்றவர்களுக்கு கிடைப்பது தான் பிரச்சினை. அதுபற்றி காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இன்று இலக்கியவாதிகளுக்கான பட்டங்கள் விருதுகள் என்பன ஒரு சில அமைப்புகளினால் மலினப்படுத்தப்பட்டுவிட்டன. எனவே முகநூலில் ஓரிரு கவிதை எழுதியவர்களுக்கெல்லாம் பெரும் கவி பட்டங்கள். சில விழாக்களில் பார்வையாளர்களை விட விருது பெற்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுவதாக சபையோர் சிலர் அங்கலாய்த்த சந்தர்ப்;பங்;களும் உண்டு. இதுமட்டுமல்ல அரச மட்டத்தில் வழங்கப்படும் ஒரு சில உயர் பட்டங்களைக் கூட சில அமைப்புகள் வழங்கி அந்த பட்டங்களை கொச்சைப்படுத்துகின்றன. இவற்றை அரசாங்க அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதுதான் வியப்பைத் தருகிறது. இதுபற்றி வேறென்ன சொல்வது?


எழுத்துத் துறையில் உங்களது குடும்பத்தவர்களது ஊக்குவிப்புப் பற்றியும் அதிலும் விசேடமாக உங்களுடைய கணவரின் ஊக்குவிப்புப் பற்றியும் குறிப்பிடுங்கள்?

அன்றைய காலங்களில் எனது ஆக்கங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்தால் அதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தப் பத்திரிகையை வாங்க என்னுயிர் தந்தை கடை கடையாக அலைவார். எனது பிறந்த ஊர் உடுதெனிய என்ற ஒரு கிராமமாகும். அங்கே ஓரிரு கடைகளில் மட்டுமே தமிழ் பத்திரிகைகள் கிடைக்கும். எனவே அந்தக் கடைகளைத் தேடிச்சென்று பத்திரிகை வாங்கி வருவார். முதலில் என் தந்தையே அதனை வாசித்து விடுவார்;. பின்னர் என் தாயாருக்கு அதை வாசித்துக் காட்டுமாறு கேட்பார். அப்போதெல்லாம் நான் என் தந்தையின் பெயரை முன்னிறுத்தி ரஷீத் நூருல் அயின் என்று தான் எழுதுவேன். எனது தந்தை சகலரையும் பகிடி பண்ணி சிரிக்க வைப்பதில் வல்லவர். எனது தாயாரைப் பார்த்து, "இதோ என்னுடைய பெயர் தான் மகளுடைய பெயருடன் வந்திருக்கிறது. உங்களுடையதல்லவே?" என்று கூறி தாயாரைச் சீண்டி விட்டுச் சிரிப்பார்கள். அந்த நினைவுகள் என்னுள்ளத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. எனது முன்னேற்றத்தின் முதற்படியே என்னுயிர் பெற்றோர்கள்தான்.

அதையடுத்து எனதன்புச்சோதர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்தான் என் எழுத்துலக வழிகாட்டி என்பேன். என்னை முதன்முதலாக தினபதி - சிந்தாமணி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதே இந்தத் தம்பி தான். எனவே எனது எழுத்துலக வளர்ச்சியில் பெற்றோரையடுத்து இந்த தம்பிக்கு பெரும் பங்குண்டு. அவ்வாறே காலஞ்சென்ற என்னுயிர் தம்பி மௌலவி ரஷீத் எம். ராஸிக் அவர்களும் எனது ஆக்கங்களை விரும்பிப் படிப்பவர். பத்திரிகையில் ஏதும் ஆக்கங்கள் பிரசுரமானால் குடும்பத்தினர் அனைவருக்கும் அதுபற்றி தகவல் கொடுத்து மகிழ்பவர் அவர்தான். ஏனைய எனது உடன் பிறப்புக்களும் எனது இலக்கிய வளர்ச்சியில் இன்பம் காண்பவர்கள்தான்.  அவ்வாறே வானொலியில் முதன்முதலாக நேரில் பங்கு கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர் எனதன்பு மௌலவி அல்ஹாஜ் எம்.எச்.எம். சுபைர் மாமா மற்றும் மௌலவியா மலீஹா சுபைர் மாமி ஆகியோராவர். கொழும்பில் நான் தொழில் புரிவதற்காக தங்குமிடவசதி தந்து நான் இவ்வளவு தூரம் பயணிக்க வழி சமைத்ததே அவர்கள் தந்த ஒத்துழைப்புத்தான். எனவே அவர்களை இங்கு நான் நன்றியுடன் நினைவுபடுத்துகிறேன்.

அத்தோடு நான் தொழில் நிமித்தம் கொழும்புக்கு வருமுன்னர் 1979 ஆம் ஆண்டளவில் "ஐன் கல்வி வட்டம்" என்ற பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தேன். இந்த நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவ மணிகளுக்கு வானொலி முஸ்லிம் சேவையில் ஷஷபிஞ்சு மனம்|| என்ற சிறுவர் நிகழ்ச்சியில் அன்றைய நிகழ்ச்சி தயாரிப்பாளரும் முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளருமான அல்ஹாஜ். எம்.இஸட். அஹமட் முனவ்வர் அவர்கள் சந்தர்ப்பம் தந்தார். அந்த அரிய சந்தர்ப்பத்தை என்னால் என்றும் மறக்கவே முடியாது. கிராமபுற சிறுவர் சிறுமிகளுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை அன்றைய காலகட்டத்தில் ஊரிலேயே பெரும் மகிழ்ச்சிப் பிரவாகமாக இருந்தது. எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கி சகோதரர் அஹமட் முனவ்வர் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமணம் பல பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு கை விலங்கு போட்டது என்கிறார்கள். ஒருசில பெண் எழுத்தாளர்களை பொறுத்தவரை அது நிதர்சனமான உண்மைதான்.  ஆனால் என்னைப் பொருத்தவரை திருமணம் எனக்கு பூவிலங்கு போட்டது என்பேன்;.  திருமணத்தையடுத்து எனது முன்னேற்றத்தின் முதுகெலும்பே என் கணவர்தான். எனது இல்லறத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலும் எனக்கு பக்கபலமாக இருக்கும் எனது வாழ்க்கை துணைவரின் துணையை எண்ணி மகிழ்கிறேன். ஒரு ஆணின் வெற்றியின் பின்னால் பெண் இருக்கிறாள் என்பார்கள். அதுபோலவே எனது வெற்றியின் பின்னால் எனது கணவரும் இருக்கிறார் என்பதில் நான் பேருவகையடைகிறேன். அவரில்லாமல் நானில்லை. எனவே எழுத்துத்துறை வளர்ச்சியிலும் ஊக்குவிப்பிலும் என்னுயிர் கணவரின் பங்களிப்பு அபரிமிதமானது.

எனது கணவர் தனது பெற்றோரைப் பற்றி எழுதிய கவிதையொன்றில் ஷஷநான் பறப்பதற்காய் அவர்கள் சிறகடிக்கிறார்கள்|| என்று குறிப்பிட்டிருந்தார். என் மனதைக் கவர்ந்த அதே கவி வரிகளை இன்று நான் பாடுகிறேன். ஷஷஇலக்கிய வானிலே நான் பறப்பதற்காய் அவர் சிறகடிக்கிறார்|| என்றே சொல்லத் தோன்றுகிறது. துறைசார் துணைவர் கணவராக வாய்க்கப் பெற்றமை குறித்து இறைவனுக்கு நன்றி பாராட்டுகிறேன்.


இதுவரை உங்களுக்கு அல்லது உங்கள் படைப்புக்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கிடைத்த விருதுகள் பட்டங்களை குறிப்பிட்டால் பட்டியல் நீண்டு விடும். சுருக்கமாக கூறுகிறேன்.

2006 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் கலாபூஷணம்  அரச விருது
2009 ஆம் ஆண்டு மகளிர் விவகார அமைச்சின் சர்வதேச மகளிர் தின கௌரவம் (இலங்கையின் அப்போதைய முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது)
அகில இன நல்லுறவு ஒன்றியத்தால் "இலக்கியத் தாரகை" - "தகவல் ஜோதி"
முஸ்லிம் கலைஞர் முன்னணியினால் "ஊடகத் தாரகை"
மலையக கலை கலாசாரப் பேரவையினால் இரத்தினதீபம் விருது
அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில், படைப்பாளர் விருது
சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தினால்  மாக்கான் மாக்கார் விருது
மத்திய மாகாண கல்வி அமைச்சினால்  சிறந்த எழுத்தாளர் விருது
கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி தமிழ் தின விழாவின் போது கௌரவ விருது
டென்மார்க் சிவமீரா அறக்கட்டளை நிறுவனமும்  தமிழ்நாடு வளரி சஞ்சிகையும் இணைந்து நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் "மலையகப் பெண்கள் மனம் மகிழ்வதெப்போது?" என்ற எனது கவிதைக்கு முதலாம் இடம் கிடைத்ததையிட்டு சிவமீரா ஞாபகர்த்த விருதும் பொற்கிழியும் கிடைத்தது.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னால் முடிந்த வரை முயன்று எனது படைப்புளை நூலாக்கம் செய்வதே எனது எதிர்கால நோக்கமாகும்.  பல்கலைக்கழக பத்திரிகைத்துறை டிப்ளோமா பாடநெறிக்காக நான்  சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையான "எய்ட்ஸ் நோயும் பெண்களும்", உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்காக என்னால் எழுதப்பட்ட "இலங்கை முஸ்லிம் பெண்களின் ஊடகப் பங்களிப்பு" ஆகிய எனது ஆய்வுக் கட்டுரைகள் இரண்டும் நூலுருப் பெற தயாரான நிலையில் உள்ளன. அவ்வாறே எனது கணவர் எழுதியுள்ள கவிதைகள் அனைத்தையும் கூட கணனி மயப்படுத்தி முடித்துவிட்டேன். இறைவன் நாடினால் அவற்றையும் நூலுருப்படுத்துவதுடன் என்னால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வரும் எனது கணவரின் கவிதை தொகுதி ஒன்றையும், "மின்னும் தாரகைகள்" என்ற  ஆய்வு நூலையும் சிங்கள மொழியில் வெளியிட வேண்டும் என்ற ஆவலில் உள்ளேன். காலம் கனிந்தால் பார்ப்போம்.


இளம் எழுத்தாளர்களுக்கு மூத்த எழுத்தாளர் என்ற வகையில் நீங்கள் கூறும் ஆலோசனைகள் யாவை?

மூத்த எழுத்தாளர்களை மதிக்கும் பக்குவம் அவர்களுக்கு வர வேண்டும். அத்தோடு மூத்த படைப்பாளிகளின் எழுத்துக்களை படிக்க வேண்டும்இ நிறைய நிறைய வாசிக்க வேண்டும். வாசிப்பை நேசிப்பதன் மூலமே இளம் எழுத்தாளர்கள் தமது ஆளுமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். இன்று நவீன தொழில் நுட்பம் இளசுகளை ஆட்கொண்டுவிட்டது. பால் குடிக்கும் குழந்தை கூட கையடக்க தொலைபேசியின் அலறலை அறிந்துகொள்கிறது. "உலகமே ஒரே கூரையின் கீழ்" என்பார்கள். எனவே எங்களது காலத்தைப்போல பத்திரிகைகளையோ புத்தகங்களையோ தேடித்தேடி அலையத் தேவையில்லை. தமது கையடக்க தொலைபேசியிலேயே இவை அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஓடும் பஸ்ஸிலும் சரி நடக்கும் பாதையிலும் சரி, வீட்டிலும் சரி இந்தக் கையடக்க தொலைபேசிகளை (ஸ்மார்ட் போன்களை) நவீன தொழில் நுட்ப  கருவிகளையும் இளசுகள் தேவையற்ற விடயங்களுக்கு பயன்படுத்தாமல் புத்தகங்களை வாசிப்பதற்கு பயன்படுத்தினால் நல்ல  புத்தி ஜீவிகளாக நாளைய சமூகத்தை கட்டியெழுப்பலாம். இளம் எழுத்தாளர்களுக்கு அடியேன் கூறும் அறிவுரை இது தான்.


இறுதியாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? 

அகில இலங்கை ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி சுமார் 140 முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களது படைப்புகள், பங்களிப்புகள் பற்றியும் இந்நூலில் பதிவு செய்துள்ளேன். அதுமாத்திரமன்றி இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து கடல் கடந்த நாடுகளில் வாழும் ஒரு சில பெண் எழுத்தாளர்களையும் இந்த ஆய்வில் உள்வாங்கியுள்ளேன். எனினும் எனது இந்த ஆய்வு நூலில் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியுள்ளேன் என்று எனக்கு உறுதியாக கூற முடியாது. ஒரு சிலர் விடுபட்டிருக்கலாம். இன்னும் சிலர் தமது தகவல்களை தருவதில் அசமந்தப் போக்கை கடைபிடித்தனர். இந்த நூலை அச்சகத்துக்கு ஒப்படைத்த பின்னர் கூட இரண்டு நூலாசிரியர்களின் தகவல் எனக்குக் கிடைத்தன. அவற்றை இந்த நூலில் சேர்த்துக்கொள்ள முடியாமற் போனதையிட்டு வருந்துகிறேன்.
எனினும் எனது சக்திக்கு ஏற்றவரை இந்த ஆய்வுகளின் மூலம் 140 முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை இனங் கண்டுள்ளேன். எந்த ஓர் ஊடக விளம்பரமுமின்றி மேற்கொண்ட எனதிந்த ஆய்வு நடவடிக்கை இவ்வளவு பெருவெற்றியை தந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அத்தோடு தகவல்கள் கிடைக்காத மேலும் பலரின் பெயர் பட்டியலையும் இணைத்துள்ளேன். எனினும் இந்த நூலில் விடுபட்டுள்ள ஏனைய பெண் எழுத்தாளர்கள் தத்தமது தகவல்களை தாமதியாது எனக்குத் தந்துதவினால் இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த பதிப்பிலாவது அவற்றை சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா? எனவே இத்தகையோர் தயவு செய்து என்னோடு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக இதனைத்தான் நான் கூற விரும்பினேன்.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

47. பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.11.04

பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப் பிடமாகக் கொண்ட நான் குடும்பத்தின் மூத்த மகள். எனது தந்தை சு.சி. கதிர்வேலு அவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றியவர். மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் கூடப் பிறந்தவர்கள். தொழில் ரீதியாக நான் ஓர் ஆங்கில ஆசிரியை. கல்வித் துறையில் முப்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளேன். தற்போது வெள்ளவத்தை சாந்த. கிளேயர் கல்லூரியில் பிரதி அதிபராகக்க கடமையாற்றி வருகிறேன். நான், கணவன், மகள் என்ற மூவர் அடங்கிய சிறிய குடும்பம் என்னுடையது. எனது கணவர் தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர். எனது மகள் விஞ்ஞானப் பட்டதாரி. தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார்.


உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

1995 இல் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற காலத்தில் அக்கல்லூரியின் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதன்முதல் பங்கேற்றேன். பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்ற அப்போட்டியில் (1995 இல்) எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இவ்வாறுதான் எனது எழுத்துலக பிரவேசம் நிகழ்ந்தது.


சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பரிசுக் கதைக்குப்  பின்னர் பன்னிரெண்டு வருடங்கள் நான் எழுதவே இல்லை. நம்புங்கள். இதன்பின்னர் வீரகேசரி பவள விழா விளம்பரம் பார்த்து எழுதினேன். நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அப்போட்டியில் எனது கதை தெரிவு செய்யப்பட்டது. பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம் என் கதைகளுக்கு பரிசில்கள் கிடைத்ததால் என் எழுத்துக்கு ஓர் அங்கீகாரம் இருப்பதாய் உணர்ந்தேன். இதுவே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவலை என்னுள் விதைத்தது.


இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

சிறுகதைத் துறையில் மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய், நிஜங்களின் தரிசனம் எனும் மூன்று சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். மரம் வைத்தவன் எனும் என் முதல் நூலுக்கு அரச சாகித்திய விருது கிடைத்தது.


உங்கள் சிறுகதைகளில் யதார்த்தமான விடயங்கள் தான் அதிகமாக இருக்கின்றன. யதார்த்தம் படைப்பாகின்ற போதுதான் அது முழுமையாகின்றது என எண்ணுகின்றீர்களா?

நிச்சயமாக. யதார்த்தம் இல்லாத எந்த இலக்கியமுமே முழுமை அடைவதில்லை. சிறுகதைகளின் பண்புகளில் ஒன்று, தான் சார்ந்த சமூகத்தை அது பிரதிபலிப்பது தான். நான் பார்த்த, கேள்வியுற்ற, என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதித்த சம்பவத்தை கதை வடிவில் வெளிக்கொணர்கிறேன். நாம் அங்கம் வகிக்கும் சமூகத்தை இவை பிரதிபலிப்பதால் இவ்வாறான கதைகளையே வாசகர்களும் விரும்புகிறார்கள்.

நீங்கள் எழுதி வெளியிட்ட சிறுகதைகளில் உங்களுக்குப் பிடித்தமான கதைகள் எது? ஏன்?

நான் எழுதியவை எல்லாமே எனக்கு பிடித்தவைதான். குறிப்பாக இலவு காக்கும் கிளிகள், புதை மணலா நீ டானியலா?, வெளிச்ச வீடு, விலகும் மழை மேகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

"இலவு காக்கும் கிளிகள்" ஒரு ஆபிரிக்க போராளியைப் பற்றியும் அவனைச் சூழ்ந்துள்ள அவலத்தைப் பற்றியும் பேசுகிறது. கதை இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஊர்கள், பெயர்கள் போன்றவற்றை இன்டர்நெட் ஊடே பெற்றேன்.

இதுபோல் "புதை மணலா நீ டானியலா?" ஒரு நாட்டில் நடந்த கதையை ஐரோப்பிய நாடொன்றில் நடப்பதாய் எழுதுவது போல சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. இதில் நான் வெற்றி கண்டிருப்பதாய் நினைக்கிறேன்.

ஊருக்கெல்லாம் வெளிச்சம் கொடுத்து இன்று ஒளியிழந்து நிற்கும் வெளிச்ச வீட்டை ஒரு பெண்ணுக்கு ஒப்பிட்டு எழுதப்பட்ட கதை "வெளிச்ச வீடு" ஆகும். "விலகும் மழை மேகம்" ஒரு கூத்துக் கலைஞன் பற்றியது. ஒரு கலையை மையமாக வைத்து எழுதப்பட்டது. இதற்கு சரியான முறையில் பாடல் வரிகள் இடம் பெற வேண்டும் என்பதற்காக கூத்துக்கலை சம்பந்தப்பட்ட புத்தகங்களைவிலைகொடுத்து வாங்க வேண்டி இருந்தது. நூலுருவில் இன்னும் வெளிவராத எனக்குப் பிடித்த கதைகள் இருக்கின்றன.

எனது சிறுகதைகள் பற்றிய பின்வரும் ஆய்வுகளும் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.

* "பவானி சிவகுமாரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு"
   திருமதி. லதாமணி அருந்தவச் செல்வம்
   தமிழ் முதுகலைமாணித் தேர்வு (ஆ.யு)
   2011 யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

* "பவானி சிவகுமாரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு"
  செல்வி. சுதர்சினி நாகரட்ணம்
  தமிழ் சிறப்புக் கலைமாணி
  2014 சப்ரகமுவ பல்கலைக்கழகம்


உங்கள் படைப்புகளுக்குக்கு கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?

நான் கதை எழுதி முடிந்தவுடனேயே என் ஆசிரியர் குழாமிடமிருந்து சுடச்சுட விமர்சனங்கள் கிடைத்துவிடும். உலகளாவிய ரீதியில் எனக்கு முதற் பரிசை ஈட்டித் தந்த "அற்ற குளத்துப் பறவைகள்" என்ற கதையைப் போட்டிக்கு அனுப்ப முன்பே அதை வாசித்த ஆசிரியர் ஒருவர் நிச்சயம் இதற்குப் பரிசுண்டு என்று சொன்னார்.

என் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட பேச்சாளர்கள், வெளிச்ச வீடு, இலவு காக்கும் கிளிகள், தேடலே வாழ்க்கையாய் போன்ற பல கதைகளை சிலாகித்துப் பேசினார்கள். என் கதைகளுக்குக் கிடைத்த விமர்சனங்கள் எல்லாம் உற்சாகமூட்டும் டொனிக் என்றுதான் சொல்ல வேண்டும்.



சிறுகதைகள் என்றால் அவற்றில் முக்கியமாக எந்தெந்த அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்?

முதலில் நல்ல கரு அமைய வேண்டும். அதன் பின் அதனைச் சுற்றிப் பின்னப்படும் இசைவான சம்பவங்கள், சம்பவத்தின் துணையோடு அவற்றைக் கொண்டு செல்லும் ஆற்றொழுக்கமான நடை, பிரதேசப் பேச்சு, வழக்கிலமைந்த கதைக்கு வலுவூட்டும் உரையாடல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கதாசிரியரின் மொழியாட்சி. இவை யாவும் நல்லதொரு சிறுகதைக்கு அவசியம்.


உங்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்?

* பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தமிழ்ச்சங்கம் சிறுகதைப் போட்டியில் "பார்வைகள்! மனிதர்கள்!" என்ற கதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. (1995)

* பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கப் பரிசுக் கதை  "கருணை இன்னும் சாகவில்லை" (2000)

* வீரகேசரி பவளவிழாப் போட்டி பரிசுக் கதை "உறவைத் தேடும் தீவுகள்" (2005)

* உலகளாவிய ரீதியில் பூபாள ராhகங்கள் நடாத்திய சிறுகதைப் போட்டி "அற்ற குளத்துப் பறவைகள்" என்ற கதைக்கு முதற் பரிசு கிடைத்தது. (2006)

* முதல் சிறுகதைத் தொகுதியான "மரம் வைத்தவன்" தொகுதிக்கு அரச சாகித்திய விருது கிடைத்தது. (2007)

* தகவம் சிறப்புப் பரிசு நாலாம் காலாண்டு "விலகும் மழை மேகம்" - தினக்குரல் (2007)

* அமரர் செம்பியன் செல்வன் ஞாபகர்த்தப் போட்டி பரிசுக் கதை "சீண்டச் சீண்டத் தொடரும்" (2007)

* பூபாள ராகங்கள் போட்டிப் பரிசு "மரணங்கள் நடுவே ஜனனம்" (2007)

* தகவம் சிறப்புப் பரிசு இரண்டாம் காலாண்டு "கனவுலகின் வெளியே" - தாயகம் (2008)

* பூபாளராகங்கள் பரிசுக் கதை "குடை பிடிக்கும் நினைவுகள்" (2008)

* கலாபூஷணம் புலோலியூர் சதாசிவம் ஞாபகர்த்தப் போட்டியில் "நம்மவர்கள்'' சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது. (2009)

* மேல் மாகாண சாகித்திய விருது (2010)

* தகவம் சிறப்புப் பரிசு - இரண்டாம் காலாண்டு "நிழல் கொஞ்சம் தா" - ஜீவநதி (2010)

* தகவம் சிறப்புப் பரிசு - மூன்றாம் காலாண்டு "மீண்டும் புதிதாய்ப் பிறப்போம்" - வீரகேசரி (2010)


எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கிறீர்கள்? ஏன்?

கையில் கிடைக்கும் எல்லா வகையான புத்தகங்களையும் வாசிப்பது வழக்கம். இருந்தும் எனது துறை சிறுகதை என்பதால் சிறுகதைகளைத் தேடி வாசிப்பேன். பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களை அதிகம் வாசிப்பேன். ஈழத்து எழுத்தாளர்களில் அன்னலட்சுமி ராஜதுரை தொடக்கம் தாமரைச் செல்வி, கோகிலா மகேந்திரன், தாட்சாயிணி என்பவர்களுடன் இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை இப்பட்டியல் நீளும்.

தமிழ் நாட்டு எழுத்தாளர்களில் சிவசங்கரி, வாசந்தி, அனுராதா ரமணன் இவர்களுடைய கதைகளை அதிகம் வாசிப்பேன். பெண் எழுத்தாளர்களின் பார்வைகள், ஆண் எழுத்தாளர்களில் நின்றும் பல விடயங்களில்  வேறுபடுகின்றன. குறிப்பாக ஒரு குடும்பத்தில் நிகழும் சிறு சம்பவங்களைக் கருவாக்கி கதை சொல்வதில் இவர்கள் ஆண் எழுத்தாளர்களைவிட ஒரு படி மேல்.


வளர்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் என்று இவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. சிறு துணுக்குகளைக்கூட கதையாக்கி விடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இதற்கு இவர்கள் எழுதும் பல கதைகள் சாட்சி. ஒரு கட்டுக்குள்ளும் சிக்காமல் எழுதும் இவர்களை கரு, சம்பவம், மொழியாட்சி... என்று பயமுறுத்த விரும்பவில்லை. ஒன்று சொல்லலாம்.

இப்போதுதான் இன்டர்நெட் இருக்கிறதே. ஒன்றைப்பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை அதனூடாகப் பெறலாம். இதிலிருந்து பல தரமான படைப்புக்களைத் தர முடியும். நூல் நிலையத்தில் புத்தகங்களை தேடிப் புரட்டும் சிக்கல்கள் இன்றில்லை. சிறிய வசனங்களில் கதையை நகர்த்துவது, கதைக்கு வேகத்தையும், சுவாரசியத்தையும் தரும். குறிப்பாக வாசகனுக்கு தலையிடியைத் தராது!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்