பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Saturday, September 12, 2026

62. எழுத்தாளர் பவானி சற்குணசெல்வம் அவர்களுடனான நேர்காணல்

 எழுத்தாளர் பவானி சற்குணசெல்வம் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?


நான் பவானி சற்குணசெல்வம். பதுளையில் பிறந்த நான், இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தில் பட்டம் பெற்று, அங்கு மூன்று வருடங்கள் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். திருமணத்திற்குப் பின்னர் நெதர்லாந்திற்குப் புலம்பெயர்ந்து, உளவியல் மற்றும் சட்டத்துறைகளில் கல்வி கற்றதுடன், அரச நிறுவனங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளேன். நான் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறேன். சிறுவயதிலிருந்தே தமிழ் மொழியிலும் எழுத்துத் துறையிலும் ஆர்வம் கொண்ட நான், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், திறனாய்வுகளை எழுதி வருகிறேன்.  'கடலின் கதை', 'அன்பு திகட்டாது' 'சிலகணங்கள்', 'மனச்சோலை', 'குழந்தைமொழி', 'மௌனத்தின் மொழி', 'சிந்தனைச் சிறகுகள்' உள்ளிட்ட நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் உள்ளேன். 'பைந்தமிழ்ச்சாரல்' தளத்தின் மூலம் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.



02. உங்களது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது ஆரம்பக் கல்வியைப் பதுளை கன்னியாஸ்திரியர் பாடசாலையில் கற்று, பின்னர் அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் கற்றேன். தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உயர்தரக் கல்வியை மேற்கொண்டேன். இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் பட்டம் பெற்று, அங்கு விரிவுரையாளராகவும் கடமையாற்றினேன்.

திருமணத்திற்குப் பின்னர் நெதர்லாந்திற்குப் புலம்பெயர்ந்தேன். அங்கு டச்சு மொழியைத் திறம்படக் கற்றுக்கொண்டேன். மேலும் உளவியல் மற்றும் சட்டத்துறையில் கல்வி கற்று பட்டம் பெற்றேன். நெதர்லாந்தில் அரச நிறுவனங்களிலும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளேன். பின்னர் அகதிகளுக்கான உதவி அலுவலகத்திலும் பணியாற்றினேன். தற்போது அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறேன்.

தமிழில் மட்டுமன்றி டச்சு மொழியிலும் எனக்கு சிறப்பான திறமைகள் உள்ளன. புலம்பெயர்ந்த நாடுகளில் சிறுவர்களின் தமிழ் வளர்ச்சியில் அயராது பாடுபட்டு வருகிறேன். தமிழ் பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றி மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளேன். தமிழ் மாணவர்களுக்கு நாடகம், நாட்டியம், இசை போன்றவற்றைப் பயிற்றுவித்து அவர்களை முன்னேற்றியுள்ளேன். புலம்பெயர்ந்த மக்கள் தமிழையும் சமயத்தையும் இரு கண்களைப் போலப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.


03. உங்களை எழுத்தாளராக வளர்த்த பின்னணி என்ன? விசேடமாக உங்களது பல்கலைக்கழக வாழ்வு உங்களுடைய எழுத்தாற்றலை எவ்வகையில் மேம்படுத்தியது?

சிறு வயதிலிருந்தே தமிழ் மொழியிலும் கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதிலும் எனக்கு ஆர்வம் இருந்தது. எனது பாடசாலை ஆண்டு மலர்களுக்கு தொடர்ச்சியாக எழுதி வந்தேன். பின்னர் பல்கலைக்கழக இந்து மாமன்றம் வெளியிட்ட 'இந்துநதி' பத்திரிகையின் உதவி இதழாசிரியராகவும் கடமையாற்றினேன்.


04. ஆரம்ப காலங்களில் உங்களை எழுத ஊக்கப்படுத்தியவர்கள் யார்?

சிறுவயதிலிருந்தே தமிழ் மொழியின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. எனது பள்ளிப் பருவத்தில் தமிழ் ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும் பாராட்டும் என்னை எழுதுவதற்கு மேலும் தூண்டியது. குறிப்பாக, நான் எழுதிய கவிதைகள், கட்டுரைகளை ஆசிரியர்கள் வாசித்து பாராட்டியபோது, தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் உருவானது. பாடசாலை ஆண்டு மலர்களில் எனது படைப்புகள் வெளிவந்ததும் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. பின்னர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, நண்பர்களும், வாசகர்களும் என்னுடைய எழுத்தார்வத்தை மேலும் வளர்த்தனர். இவ்வாறு சிறிய வயதில் விதைக்கப்பட்ட எழுத்தார்வம், காலப்போக்கில் எனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியது.


05. முதலாவது எழுத்து அனுபவம் எப்படி இருந்தது?

ஆரம்ப காலங்களில் பாடசாலை இதழ்களிலும் பல்கலைக்கழக இதழ்களிலும் மட்டுமே எழுதி வந்தேன். இலக்கிய எழுத்தாளராகத் தொடர்ந்து எழுதத் தொடங்கியது சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புதான். அதற்கு முன்னர் குடும்பம், குழந்தைகள், அவர்களுக்கான நேரம், உத்தியோகம் என வாழ்க்கைச் சூழல் அமைந்திருந்ததால் இலக்கியத் துறையில் முழுமையாக ஈடுபடுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. குழந்தைகள் வளர்ந்த பின்னரே மீண்டும் எழுதத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் மீண்டும் எழுதுவது சற்றுச் சவாலாக இருந்தாலும், மிகக் குறுகிய காலத்திலேயே இலக்கிய உலகில் எனக்கென ஒரு இடத்தைப் பெற முடிந்தது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, நான் முதலில் கட்டுரை எழுத்தாளராகவே இலக்கிய உலகிற்கு அறிமுகமானேன்.


06. உங்களது முதலாவது படைப்பு எப்போது, எந்த ஊடகத்தில் வெளியானது?

எனது முதலாவது படைப்பு ஒரு கவிதை. அது 'நடு' இணைய இதழில் வெளியானது. அது எப்போது வெளியானது என்பது தற்போது எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால், எனது படைப்பு முதன்முதலாக ஓர் இலக்கிய ஊடகத்தில் வெளிவந்த அந்தத் தருணம் எனது எழுத்துப் பயணத்தில் முக்கியமான தொடக்கமாக அமைந்தது. அதன்பின்னர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், திறனாய்வுகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் எனத் தொடர்ந்து எழுதி வருகின்றேன்.


07. உங்கள் படைப்புகளுக்கு தொடர்ந்து களம் தந்த ஊடகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது படைப்புகள் 'தாய்வீடு', 'பதிவுகள்', 'நடு', 'ஜீவநதி', 'ஞானம்', 'வெற்றிமணி', 'சிவஒலி', 'மகுடம்' ஆகிய இதழ்களிலும், 'தினக்குரல்', 'வீரகேசரி' ஆகிய பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

இவற்றுள் 'பதிவுகள்' மற்றும் 'நடு' ஆகிய இணைய இலக்கியத் தளங்கள் எனது எழுத்துப் பயணத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளன. 'பதிவுகள்' ஊடாக எனது கதைகள், கட்டுரைகள் திறனாய்வுகள்,  உள்ளிட்ட பல படைப்புகள் வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அதேபோன்று, 'நடு' இதழில் எனது ஆரம்பகாலக் கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. புதிய எழுத்தாளர்களுக்கும் பல்வேறு இலக்கியப் படைப்புகளுக்கும் களம் அமைத்துத் தரும் இவ்விரு தளங்களும், எனது எழுத்துப் பயணத்தை வளர்த்தெடுக்க முக்கியமான வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இவற்றுடன் ஏனைய இதழ்கள் மற்றும் பத்திரிகைகளும் எனது படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு, எனது எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கி வருகின்றன.


08. இதுவரை வெளிவந்த உங்களது நூல் வெளியீடுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

சேரனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை மொழிபெயர்த்து 'கடலின் கதை' எனும் நூலை தமிழ் மற்றும் டச்சு ஆகிய இருமொழிகளில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் நெதர்லாந்தில் வெளியிட்டேன்.

சேரனின் காதல் கவிதைகள் அடங்கிய 'அன்பு திகட்டாது' எனும் நூலை டச்சு மொழியில் மொழிபெயர்த்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நெதர்லாந்தில் வெளியிட்டேன்.

'சிலகணங்கள்' எனும் இளையோருக்கான கவிதைத் தொகுதியை 2020 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியிட்டேன்.

'மனச்சோலை' என்ற 26 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலை 2021 ஆம் ஆண்டு வெளியிட்டேன். இந்தப் புத்தகம் இலங்கைக் கல்வியமைச்சின் அங்கீகாரம் பெற்ற நூலாகும். பல பாடசாலைகளும் நலன்புரிச் சங்கங்களும் இந்த நூலைப் பயன்படுத்தி வருவதுடன், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இந்நூல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், இந்தக் கட்டுரைகள் திருமதி ஆனந்தராணி பாலேந்திராவின் குரலில் லண்டன் எஸ்.ஆர்.எஸ். வானொலியில் 'கட்டுரைப்பூங்கா' என்ற நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டு, இணையத்தளத்திலும் பதிவாகியுள்ளன. இந்த நூல் மேலும் எட்டு கட்டுரைகளை உள்ளடக்கி 34 கட்டுரைகளுடன் இரண்டாவது பதிப்பாகவும் அண்மையில் வெளிவந்துள்ளது.

அண்மைக் காலங்களில் சிறுகதைகள், திறனாய்வுகள், விமர்சனங்கள் போன்றவற்றையும் எழுதி வருகிறேன். பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளையும் பெற்றுள்ளேன்.

நான் எழுதிய 'குழந்தைமொழி' எனும் முன்பள்ளி மாணவர்களுக்கான நூல் 2024 ஆம் ஆண்டு வெளிவந்தது. இளம் குழந்தைகள் பாடசாலைப் பாடங்களைக் கற்பதற்கு முன், பாடங்களைப் பாடல் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கற்கும் வகையில் 'குழந்தைமொழி' என்ற இந்த நூலை வடிவமைத்துள்ளேன்.

இதில் கதைகள், பாடல்கள், எண்கள், நிறங்கள், உயிரினங்கள் போன்றவை தெளிவான வண்ணப் படங்கள் மூலம் குழந்தைகள் புத்தகத்தை விரும்பிப் படிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் எனது 'மௌனத்தின் மொழி' எனும் சிறுகதைத் தொகுப்பும், 'சிந்தனைச் சிறகுகள்' எனும் கட்டுரைத் தொகுப்பும், 'மனச்சோலை 2' எனும் கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.


09. அண்மையில் வெளிவந்த 'மௌனத்தின் மொழி' சிறுகதைத் தொகுதி பற்றிக் குறிப்பிடுவீர்களா?

இந்தச் சிறுகதைத் தொகுதி, என் வாழ்வுப் பயணத்தில் பதிந்த அனுபவங்களின் செறிவூட்டிய வெளிப்பாடாகும். வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளிலும் கூட மனித மனத்தின் நுண்ணிய அலைகளை உணர்ந்து, அவற்றைச் சொற்களால் செதுக்கி வாசகர்களின் முன் நிறுத்த வேண்டும் என்ற என் முயற்சியாக இந்நூல் உருவாகியுள்ளது.


10. உங்கள் கதைகளுக்கான பாத்திரங்களையும் களங்களையும் எங்கிருந்து கண்டடைகிறீர்கள்? அவை நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பா அல்லது கற்பனையா?

இக்கதைகளில் தோன்றும் மனிதர்களும் நிகழ்வுகளும் வெறும் கற்பனையின் விளைவுகள் மட்டுமல்ல. அவை என் வாழ்வில் நான் கண்ட நிழல்களும் ஒளிகளும் கலந்த உண்மையின் பிரதிபலிப்புகளாகும். மனித உறவுகளின் நெகிழ்ச்சியும் சமூக வாழ்க்கையின் சிக்கல்களும் இக்கதைகளில் உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.


11. 'மௌனத்தின் மொழி' தொகுதியில் உங்களுக்கு மிகவும் பிடித்த அல்லது எழுதும் போது உணர்வு ரீதியாக உங்களை அதிகம் பாதித்த கதை எது, ஏன்?

'மௌனத்தின் மொழி' சிறுகதைத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதை 'கொக்கைச்சத்தகம்' ஆகும். நுண்ணிய உணர்வுகளால் பின்னப்பட்ட கதை என்பதே அதற்கான முதன்மைக் காரணம். பொதுவாக அதிகம் பேசப்படாத, பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் ஏற்படக்கூடிய உடல் மற்றும் உளவியல் மாற்றங்களையும் சிக்கல்களையும் இக்கதை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. அதோடு, கதையின் முடிவும் வாசகர் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளது.

'கொக்கைச்சத்தகம்' என்ற சொல்லுடன் எனது தனிப்பட்ட வாழ்வுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. நான் பதுளையில் வளர்ந்தவள். யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது அங்கு கேட்ட 'கொக்கைச்சத்தகம்' எனக்குப் புதுமையாக இருந்தது. சிறுவயதில் செல்லமாக வளர்த்த ஆட்டுக்குட்டிக்குக் குளை வெட்டியபோது ஏற்பட்ட ஒரு சிறிய காயமும் அந்த நினைவுடன் என்னுள் பதிந்திருக்கிறது. எனவே, 'கொக்கைச்சத்தகம்' எனது வாழ்வனுபவத்துடனும் ஒரு வகையில் தொடர்புடையதாக அமைந்தது. அதனால் அந்தக் கதையைத் தொகுப்பில் இடம்பெறச் செய்ததுடன், நூலுக்கும் அதே பெயரைச் சூட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் நூலை இந்தியாவில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. 'கொக்கைச்சத்தகம்' என்ற சொல் அங்கு பரவலான பயன்பாட்டில் இல்லாத காரணத்தால், இறுதியில் நூலுக்கு 'மௌனத்தின் மொழி' எனப் பெயரிடப்பட்டது.


12. இன்றைய வேகமான சூழலில், சிறுகதை வடிவத்திற்கான முக்கியத்துவம் மற்றும் வாசகர்களின் வரவேற்பு எவ்வாறு உள்ளது என நினைக்கிறீர்கள்?

இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலிலும் சிறுகதை வடிவத்திற்கான முக்கியத்துவம் குறையவில்லை. காலத்திற்கேற்ப அதன் வடிவங்கள் மாறிவருகின்றன. சிறுகதைகள் மட்டுமன்றி குறுங்கதைகள் உள்ளிட்ட பல்வேறு புதிய வடிவங்களும் இன்று தோன்றியுள்ளன. வாசகர்களின் நேரத்தையும் இன்றைய வாழ்க்கை வேகத்தையும் கருத்தில் கொண்டு எழுத்தாளர்களும் தமது படைப்புகளின் வடிவத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


13. 'சிந்தனைச் சிறகுகள்' என்ற கட்டுரைத் தொகுதியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எவ்வாறு தோன்றியது?

2021ஆம் ஆண்டு கொரோனா காலப்பகுதியில் சமூகச் சீரழிவு, தற்கொலைகள், போதைப்பொருள் பாவனை, மாணவர்களிடையேயான மன அழுத்தம், ஆளுமைக் கோளாறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தீவிரமாகத் தென்பட்டன. அந்தச் சூழலில் சமூகத்திற்குப் பயனளிக்கக்கூடிய வகையில் 'மனச்சோலை' என்ற கட்டுரைத் தொகுதியை வெளியிட்டேன். வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையில் வெளியிடப்பட்ட அந்த நூலை சமூக நிறுவனங்கள், நலன்புரிச் சங்கங்கள் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு இலவசமாக வழங்கினேன். அந்த நூல் இலங்கை கல்வி அமைச்சினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் பதிப்பில் 28 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் பாலியல் கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல சமூக, உளவியல் விடயங்கள் பேசப்பட்டிருந்தன. இந்நூலின் இரண்டாம் பதிப்பு இவ்வாண்டு 34 கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து 'சிந்தனைச் சிறகுகள்' என்ற நூலை உருவாக்கினேன். இதில் சமூகப் பிரச்சினைகள், உளவியல், சமூக உளவியல், கல்வி, பாலியல் விழிப்புணர்வு, பொது அறிவு, நீர்வளம் போன்ற பல்வேறு தளங்களைச் சேர்ந்த 50 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தனித்தனி பிரிவுகளாகப் பிரிப்பதைவிட, பல்வேறு சிந்தனைகளை ஒருங்கிணைத்த ஒரு தொகுதியாக வழங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்நூலை உருவாக்கினேன்.

எதிர்காலத்தில் தற்போதைய சமூக மாற்றங்கள், அவற்றுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சமூக உளவியல் கட்டுரைத் தொகுதி ஒன்றையும் வெளியிடும் எண்ணம் உள்ளது. இலங்கையின் சமகாலப் பிரச்சினைகளை மையப்படுத்துவதுடன், அவற்றை உலக நாடுகள் எவ்வாறு பார்க்கின்றன என்பதையும் அதில் பதிவு செய்ய விரும்புகிறேன்.


14. கட்டுரைத் தொகுதிக்கான உள்ளடக்கங்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?

எனது கட்டுரைகளுக்கான உள்ளடக்கங்களைப் பொதுவாக நானே தேர்ந்தெடுத்துக்கொள்வேன். இலங்கையில் காணப்படும் சமூகப் பிரச்சினைகள் என்ன, அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம், சமூகத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் கருத்தில் கொண்டே தலைப்புகளைத் தெரிவு செய்கிறேன். மனித உரிமைத் துறையுடன் தொடர்புடைய பணிச்சூழல் இருப்பதால், இலங்கை தொடர்பான பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்தும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு உள்ளது. அவற்றை அடிப்படையாகக் கொண்டும் சில கட்டுரைகளை எழுதுகிறேன். அதேவேளை, இலங்கையில் உள்ள சமூக சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைகளை முன்வைத்து, அவை தொடர்பாக எழுதுமாறு என்னைக் கேட்டுக்கொள்வார்கள். அவர்களிடமிருந்து கிடைக்கும் தேவைகளையும் கருத்தில் கொண்டு பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருக்கிறேன்.


15. கட்டுரைகளை எழுதும் போது அல்லது தொகுத்த போது உங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால் எது?

கட்டுரைகளை எழுதுவது எனக்குத் தொடர்ச்சியான செயற்பாடாக இருந்தாலும், அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடுவது உண்மையில் சவாலான பணிதான். ஒரு கட்டுரை எந்தத் தொகுப்பில் இடம்பெற வேண்டும், எந்தத் தலைப்பின் கீழ் அதனை வகைப்படுத்த வேண்டும் என்பதில் சில நேரங்களில் குழப்பம் ஏற்படும்.

மனச்சோலை தொகுதியில் சமூக மாற்றங்கள், அவற்றின் உளவியல் காரணங்கள், ஆளுமைக் கோளாறுகள், போருக்குப் பின்னான மனவடுக்கள் போன்ற பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன. பின்னர் எஞ்சியிருந்த பல்வேறு தலைப்புகளைச் சேர்ந்த கட்டுரைகளைத் தொகுத்து 'சிந்தனைச் சிறகுகள்' என்ற நூலை உருவாக்கினேன். 

எதிர்காலத்தில் சமூக உளவியல் சார்ந்த கட்டுரைகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு தனித்தொகுப்பை வெளியிடும் எண்ணமும் உள்ளது. கட்டுரைகளை எழுதுவதைவிட அவற்றைத் தொகுத்து ஒரு குறிப்பிட்ட கருத்தியல் அடிப்படையில் நூலாக்குவது சவாலானதுதான்.


16. நீங்கள் எழுதிய கட்டுரைகளில் உங்களுக்கு மிகவும் நெருக்கமான அல்லது எழுதச் சிரமமாக இருந்த கட்டுரை எது, ஏன்?

நான் எழுதிய கட்டுரைகளில் அதிக நேரத்தையும் உழைப்பையும் பெற்றுக்கொண்டது, 'நடந்தாய் வாழி வழுக்கையாறு' என்ற கட்டுரை. வழுக்கையாறு எனது பெற்றோரின் பூர்வீகக் கிராமமான அளவெட்டியின் ஊடாகப் பாய்கிறது. எனவே, அந்த ஆற்றைப் பேணிப் பாதுகாப்பதில் அளவெட்டி மக்களுக்கும் முக்கியமான பொறுப்பு இருப்பதாக நான் கருதினேன்.

விவசாயத் துறையில் கல்வி கற்றிருந்ததால், வழுக்கையாற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்ப விடயங்களை ஆராய்வதற்கும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பெரும்பாலும் ஆங்கில மொழியில் இருந்தன. அவற்றைத் தேடி வாசித்து, முதலில் அவற்றைத் தமிழில் புரிந்துகொண்ட பின்னர், ஆற்றின் வரலாறு, அதன் பயன்பாடு, தொழில்நுட்பம், எதிர்காலத்தில் அதனை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பன குறித்து ஆராய்ந்தேன். அத்துடன், வழுக்கையாற்றுடன் தொடர்புடைய இலக்கியச் செய்திகளையும் தேடிப் பதிவு செய்தேன். சின்னத்தம்பிப் புலவர் உள்ளிட்ட பலர் அதனைப் பற்றிப் பாடியிருப்பதும் தெரியவந்தது. அந்தப் பகுதியில் காணப்பட்ட பறவைகள், உயிரினங்கள், இயற்கைச் சூழல், மக்கள் வாழ்க்கை, வழிபாட்டு முறைகள் போன்ற பல விடயங்களையும் கட்டுரையில் இணைத்தேன்.

இதனால் வரலாறு, இலக்கியம், தொழில்நுட்பம் ஆகிய மூன்று தளங்களையும் ஒருங்கிணைத்த ஒரு விரிவான கட்டுரையாக அது அமைந்தது. ஆங்கிலத்தில் வழுக்கையாறு தொடர்பாக பல ஆய்வுகள் இருந்த போதிலும், இம்மூன்று அம்சங்களையும் ஒருங்கிணைத்து தமிழில் எழுதப்பட்ட முதலாவது கட்டுரை இதுவாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. அது எனக்கு மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்தது.


17. இந்தக் கட்டுரைகள் சமூகத்தில் அல்லது வாசகர்களிடம் என்ன மாதிரியான உரையாடலை அல்லது மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறீர்கள்?

'நடந்தாய் வாழி வழுக்கையாறு' என்ற கட்டுரை முதலில் பதிவுகள் இதழில் வெளியாகி வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. பின்னர் 'சிந்தனைச் சிறகுகள்' நூல் வெளியீட்டின்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் அந்தக் கட்டுரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து விரிவாகப் பேசினார். குறிப்பாக, நீர்நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பான உரையாடல்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இன்று உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் நீர்வளப் பாதுகாப்பு குறித்து தீவிரமாகப் பேசப்படுகிறது. இலங்கையிலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். ஒவ்வொருவருக்கும் இந்தப் பிரச்சினை குறித்த புரிதல் ஏற்பட்டு, அது அவர்களின் அன்றாடச் செயற்பாடுகளிலும் வெளிப்பட வேண்டும்.

குளங்களை ஆழப்படுத்துதல், புதிய குளங்களை அமைத்தல், சீரழிந்த நீர்நிலைகளைப் புனரமைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேபோல், வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான கால்வாய்களையும் முறையாக அமைக்க வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இத்தகைய பணிகள் அவசியமாக உள்ளன. இதற்குத் தேவையான வெளிநாட்டு உதவிகளைப் பெற்று, நீண்டகாலப் பயனளிக்கும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது பேரவா.

மலைப் பகுதிகளின் இயற்கையான சூழலியலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும். தேயிலைத் தோட்டங்களிலும் மலைச் சரிவுகளிலும் மண்ணரிப்பு ஏற்படாத வகையில், தாவரப் பாதுகாப்பு, நீர்வடிகால் அமைப்புகள், சரிவுகளை உறுதிப்படுத்தும் கட்டமைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்துச் செயற்பட்டால்தான் மலையகத்தை எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற பேரிடர்களிலிருந்து பாதுகாக்க முடியும். அத்துடன், எனது சமூக, உளவியல் மற்றும் கல்வி சார்ந்த கட்டுரைகளும் பலராலும் வாசிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில கட்டுரைகள் வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பப்பட்டதன் மூலம், உலகளாவிய ரீதியில் பலரைச் சென்றடைந்துள்ளன. இதன் ஊடாக, உளவியல் சார்ந்த பல்வேறு விடயங்கள், ஆளுமைக் கோளாறுகள், குழந்தை வளர்ப்பு போன்ற முக்கியமான விடயங்கள் தொடர்பில் பலரும் பயனுள்ள தகவல்களையும் விழிப்புணர்வையும் பெற்றுள்ளனர்.

அதேபோன்று, இக்கட்டுரைகளின் வாயிலாகப் பெற்ற கருத்துகளையும் அறிவையும் அடிப்படையாகக் கொண்டு, சிலர் பெண்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகளையும் செயல்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். அவற்றின் மூலம் பலரும் பயனடைந்துள்ளதாக எனக்குத் தெரிவிக்கும் செய்திகள் கிடைத்துள்ளன. எனது எழுத்துகள் பலருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளன என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.


18. சிறுகதை, கட்டுரைத் துறை தவிர்ந்த வேறு எந்த இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கி வருகிறீர்கள்?

சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளுக்கு அப்பால் சில நேரங்களில் கவிதைகளையும் எழுதுகிறேன். கவியரங்குகளிலும் பங்கேற்றிருக்கிறேன். எனினும், தொடர்ந்து கவிதை எழுதுவது எனது இயல்பல்ல. மனதை ஆழமாகத் தொடும் ஒரு துயரம், சம்பவம் அல்லது உணர்வு ஏற்பட்டால் மட்டுமே கவிதை எழுதத் தோன்றும். எனது எழுத்துகளில் கட்டுரைகளே அதிகம். அண்மைக் காலமாக சிறுகதைகளிலும் அதிகம் ஈடுபட்டு வருகிறேன்.


19. பல தசாப்த இலக்கிய வாழ்வில் உங்களது எழுத்துப் பங்களிப்புகளுக்காக இதுவரை நீங்கள் பெற்ற பாராட்டுகள், கௌரவங்கள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?

'நான் ஒரு எழுத்தாளர்' என்று கூறுவதற்குப் பதிலாக, என்னை ஒரு எழுத்தாளராக உருவாக்கிக்கொண்டிருப்பவள் என்று பணிவுடன் கூறிக்கொள்கிறேன். ஆரம்ப காலங்களில் எனது எழுத்துக்கள் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக இதழ்களுக்குள் மட்டுமே இருந்தன. சுமார் பதினைந்து ஆண்டுகளாகவே இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கி வருகிறேன். நான் வசிக்கும் நாடு நெதர்லாந்து என்பதாலும், வெளிநாட்டில் வாழும் எழுத்தாளர் என்ற நிலையில் இருப்பதாலும் விருதுகள், பாராட்டுகள் போன்றவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இயல்பாகவே குறைவாக இருக்கலாம். அவற்றை நோக்கி நான் எழுதியதுமில்லை.

ஆனால் சிறுகதை எழுதத் தொடங்கியபோது, கட்டுரை எழுதுவதற்கும் சிறுகதை எழுதுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்வதற்காகவும், எனது சிறுகதைகளை ஒரு குறிப்பிட்ட அளவுகோலில் மதிப்பிடுவதற்காகவும் பல போட்டிகளில் பங்கேற்றேன். குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற சில சிறுகதைப் போட்டிகள் எனக்கு நல்ல அனுபவத்தையும் வழிகாட்டலையும் வழங்கின. பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், படைப்பின் நிறை, குறைகள் குறித்து அவர்கள் விரிவான பின்னூட்டங்களை வழங்கினர். அது எனது சிறுகதைப் பயணத்தில் முக்கியமான வழிகாட்டியாக அமைந்தது.

எனது படைப்புகளுக்குக் கிடைத்த அங்கீகாரங்களில் 'மனச்சோலை' கட்டுரைத் தொகுதியை இலங்கை கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அதேபோல், நான் கல்வி கற்ற அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் எனது கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டபோது, எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் அவர்கள் அதிலுள்ள உளவியல் அம்சங்களைப் பாராட்டிப் பேசியிருந்தார்.

லண்டனில் வசிக்கும் நாடகக் கலைஞரும் அறிவிப்பாளருமான திருமதி ஆனந்தராணி பாலேந்திரா அவர்கள் 'மனச்சோலை' நூலில் இடம்பெற்ற கட்டுரைகளை வாசித்து, அவற்றை எஸ்.ஆர்.எஸ். தமிழ் வானொலியில் நிகழ்ச்சியாக ஒலிபரப்பினார். பின்னர் 2025 ஆம் ஆண்டு என்னை அழைத்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்க அனுபவமாக அமைந்தது.

இந்தியாவில் சிறுகதைகளுக்காகப் பெற்ற பரிசுகளுடன், இலங்கையில் நடைபெற்ற பாலசுப்பிரமணியம் சிறுகதைப் போட்டியிலும் எனக்குப் பரிசு கிடைத்துள்ளது. இவை அனைத்தும் எனது எழுத்துப் பயணத்தில் கிடைத்த முக்கியமான ஊக்கங்களாக அமைந்துள்ளன.


20. வாசிப்பு என்பது இன்றைய சமுதாயத்தினரிடம் குறிப்பாக மாணவர்களிடம் மிகவும் அருகிவிட்ட ஒன்றாகக் காணப்படுகிறதே. இதுபற்றிய உங்கள் கருத்து யாது?

வாசிப்பு என்பது இன்றைய இளம் தலைமுறையினரிடையே குறைந்து வருவது கவலைக்குரிய விடயம். இலங்கையில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியிலும் சமூக வலைத்தளங்கள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட தொழில்நுட்பச் சாதனங்களில் இளைஞர்கள் அதிக நேரத்தைச் செலவிடுவதால் வாசிப்புக்கான நேரம் குறைந்து வருகிறது.

கல்வியைப் பொறுத்தவரை இது ஆபத்தான நிலை. சிறுவயதிலிருந்தே பல்வேறு நூல்களை வாசித்து, தமக்குப் பொருத்தமான கல்வித் துறையைத் தாங்களே அடையாளம் காணும் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். வெறுமனே ஆசிரியர் வழங்கும் தகவல்களைப் பெற்றுக்கொண்டு, அதனை மனப்பாடம் செய்து பரீட்சையில் எழுதுவது அறிவின் விரிவாக்கத்திற்கு போதுமானதல்ல. வாசிப்பின் மூலமே சுயசிந்தனையும் பகுத்தறிவும் வளர்கின்றன. பல்கலைக்கழக மட்டத்திலும் பேராசிரியர்கள் இதுகுறித்து கவலை தெரிவிப்பதை நான் கேட்டிருக்கிறேன். வாசிப்பின் மூலமே ஒருவர் பரந்த அறிவையும் சிந்தனைத் திறனையும் பெற்றுக்கொள்ள முடியும். தாம் விரும்பிய நூல்களைத் தேடி வாசிக்கும் பழக்கமே கல்வியிலும் படைப்புலகிலும் முன்னேறுவதற்கான அடித்தளமாக அமைகிறது. எனவே, வாசிப்பின் வீழ்ச்சி ஒரு சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கே பின்னடைவை ஏற்படுத்தக்கூடியது.

நன்றாக வாசிப்பவரால்தான் நன்றாக எழுதவும் முடியும். குறிப்பாக வழக்குரைஞர் போன்ற துறைகளில் விரைவாக வாசித்து, வாசித்ததைச் சரியாகப் புரிந்துகொள்ளும் திறன் மிகவும் அவசியமானது. எனவே, வாசித்தல், வாசித்துப் புரிந்துகொள்ளுதல், வாசித்ததை ஆய்வு செய்தல் ஆகியவை படிப்படியாக வளர்க்கப்பட வேண்டிய திறன்கள்.

இந்தப் பழக்கம் குழந்தைப் பருவத்திலேயே உருவாக்கப்பட வேண்டும். முன்பள்ளி வயதிலிருந்தே குழந்தைகளுக்கு புத்தகங்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி, வாசிப்பை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்ற வேண்டும். இல்லையெனில், வளர்ந்து வரும் சமுதாயம் அறிவிலும் கல்வியிலும் பலவீனமடைந்த சமூகமாக மாறும் அபாயம் உள்ளது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் இந்த நிலையில் புதிய சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து நாம் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.


21. வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு தாங்கள் கூறும் செய்தி என்ன?

வளர்ந்து வரும் படைப்பாளிகள் காலத்திற்குத் தேவையான விடயங்களை எழுத வேண்டும். ஏற்கனவே பலரும் எழுதியவற்றையே மீண்டும் மீண்டும் எழுதுவதைத் தவிர்த்து, சமுதாயத்திற்குத் தேவையான புதிய சிந்தனைகளை முன்வைக்க வேண்டும். ஒவ்வொருவரும் தமக்கென ஒரு தனித்துவமான எழுத்துப் பாணியை உருவாக்கி, அதில் பயணிக்க வேண்டும்.

அறிவியல் உள்ளிட்ட புதிய துறைகளில் காணப்படும் அறிவையும் தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும். பிற மொழிகளில் உள்ள அறிவியல் தகவல்கள், தத்துவங்கள், சிந்தனைகள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்து வழங்குவதன் மூலம் தமிழ் அறிவுலகை வளப்படுத்தலாம். அதேவேளை, நமது தாய்மொழியான தமிழைத் தூய்மையாகவும் செழுமையாகவும் பேணுவது படைப்பாளிகளின் முக்கியப் பொறுப்பாகும். தேவையற்ற வகையில் பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழின் இயல்பைச் சிதைப்பதைத் தவிர்க்க வேண்டும்.


22. இறுதியாக இந்த நேர்காணல் மூலம் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்ன?

இறுதியாக நான் கூற விரும்புவது, ஒரு சமுதாயத்தில் மிகுதியான ஏற்றத்தாழ்வுகள் காணப்படும் வரை பிரச்சினைகள் தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை. பணக்காரர் - ஏழை, கல்வியறிவு பெற்றவர் - பெறாதவர், அதிகாரம் கொண்டவர் - அதிகாரமற்றவர் என்ற வேறுபாடுகள் குறைக்கப்பட வேண்டும். ஒவ்வொருவரும் தமது திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற கல்வியைப் பெறக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். வசதிபடைத்தவர்கள் வசதியற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதில் பங்களிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ஒவ்வொரு மனிதருக்கும் உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் வளரும் பருவத்திலேயே அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க வேண்டும். கல்வி உரிமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கல்வியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சமமான வாய்ப்பை இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்படுத்துவது சமூகத்தின் கூட்டுப்பொறுப்பாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், சமத்துவமானதும் அறிவார்ந்ததுமான ஒரு சமூகத்தை நிச்சயமாக உருவாக்க முடியும்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Wednesday, August 26, 2026

61. ஓய்வு பெற்ற அதிபர், கதாசிரியர் பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்

 ஓய்வு பெற்ற அதிபர், கதாசிரியர் பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்குக் கூறுங்கள்?

யாழ்ப்பாண மாவட்டம், திருநெல்வேலி எனது பிறப்பிடம். திரு. கதிரவேலு, திருமதி. தில்லைநாயகி தம்பதியினரின் மூத்த மகளான எனக்கு மூன்று சகோதரிகள், ஒரு சகோதரன். எனது தந்தை அரச நிர்வாக சேவையில் பணியாற்றியதால் நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும், பயிலும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எனது கணவர் சிவகுமாரன் ஒரு தொழிலதிபர். முதுகலைமாணி விஞ்ஞானப் பட்டதாரியான எனது மகள் கீர்த்தனா, தன் கணவருடன் அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்.



02. உங்கள் ஆரம்பகால இலக்கிய அறிமுகம் மற்றும் அன்றைய கால சூழல் எவ்வாறு இருந்தது?

எனது தாயார் ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இந்திய இதழ்களையும், அந்நாட்களில் வெளிவந்த வீராகேசரிப் பிரசுரங்களையும் வாசிக்கும் பழக்கமுடையவர். இதனால் வீட்டில் புத்தகங்களிற்குக் குறைவில்லை. இதனால் வாசிப்பு நாளின் ஒரு பாகமாகவே மாறிப் போனது.


03. நீங்கள் எழுத்துத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரண கர்த்தா யார்?


எழுத்துத் துறைக்குள் தற்செயலாகத் தான் நுழைந்தேன். நான் பயிலுனர் ஆசிரியராகப் பலாலி ஆசிரியர் கலாசாலையில் பயின்ற காலத்தில் அங்கு தமிழ்ச் சங்கத்தினரால் நாடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பங்குபற்றினேன். இரண்டாம் பரிசு கிடைத்தது.


04. உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?

எனது தந்தை நிர்வாகத் துறையில் பணியாற்றினாலும், அவர் ஒரு தமிழ் பண்டிதர், கவிஞர். முருகன் பிள்ளைத் தமிழ் நூலொன்றையும் இயற்றியுள்ளார்.


05. நீங்கள் வாசித்த முதல் கதை எது? நீங்கள் எழுதிய முதல் கதை அனுபவத்தையும் சொல்லுங்கள்?

நான் வாசித்த முதல் கதை எனது ஞாபகத்தில் இல்லை. ஏனென்றால் நான் ஏழு வயதிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். ஆரம்பத்தில் சித்திரக் கதைகள் வாசித்ததாக ஞாபகம்.

முன்பு சொன்னது போல் பலாலி ஆசிரியர் கலாசாலையில் வகுப்புகள் நிறைவடைந்த பின் மாலை ஐந்து மணிக்குத்தான் போட்டிகள் ஆரம்பமாகும். அதற்கு முன் மதிய இடைவேளையின் போது ஒரு வரியைத் தந்திருந்தார்கள். அந்த வரி கதையில் எங்கேனும் ஓரிடத்தில் வர வேண்டும் என்பது விதி. தலையங்கம் நாம் தான் தர வேண்டும். நேரக் கட்டுப்பாடு இருந்தது. கடைசி நிமிடம் வரை நான் போட்டியில் பங்குபற்றுவதா, விடுவதா என்ற குழப்ப நிலையில் இருந்தேன். காரணம் என் பத்து மாதக் குழந்தை. வழமையாக காலை ஏழு முப்பதிற்கு வீட்டிலிருந்து புறப்படும் நான் மாலை ஐந்து முப்பதின் பின்பே வீடு செல்வேன். 

இருந்தாலும் கதையை எழுதினேன். வேகமாக எழுதி முடித்து விட்டு, மண்டபத்தை விட்டு முதல் ஆளாக வெளியேறினேன். 'பார்வைகள்!? மனிதர்கள்!?' என்ற அக்கதை இரண்டாம் பரிசைப் பெற்றுத் தந்தது. 


06. உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக, எப்போது வெளிவந்தது?

1993 இல் முதலாவது ஆக்கத்திற்கு களம் அமைத்துத் தந்தது பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை தமிழ்ச் சங்கம்தான்.


07. உங்களைக் கதாசிரியராக வளர்த்த பின்னணி என்ன?


நான் குறிப்பிட்டது போல் எனது முதல் சிறுகதைக்குப் பரிசு கிடைத்தது. அப்போது நிலவிய போர்ச் சூழலில் அதுபற்றி நான் உட்பட எவருமே அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. பன்னிரு வருடங்களின் பின் வீரகேசரி பவளவிழாப் போட்டியில் பங்குபற்றினேன். அதற்கும் பரிசு கிடைத்தது. இவை தந்த உற்சாகமும், அங்கீகாரமும் மூன்றாவதாக உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 'பூபாள ராகங்கள்' போட்டியில் பங்கேற்க உந்தின. முதற் பரிசு கிட்டியது. கதாசிரியராகப் புது பரிமாணம் முளைவிட்டது.


08. நீங்கள் எப்படிப்பட்ட மனநிலையில் சிறுகதைகளை எழுதுகின்றீர்கள்?

நான் பார்த்த, கேள்வியுற்ற சம்பவங்கள் மனத்தைத் தொடும், கோபமூட்டும், வேதனைப்படுத்தும் வேளைகளில் அதுவே கற்பனை கலந்து கதையாக உருமாறும். சிலர் கூறுவது போல் அமைதியான சூழல், பூங்கா, நூலகம் என்று தேடிப் போய் எழுதுவதில்லை. ஓடும் ரெயிலில், இரைச்சல் நடுவே கூட எழுதுவதுண்டு. உண்மையில் நான் என் மகள் சாதாரண, உயர் தரங்களில் கற்கும் போது தான் அதிகம் எழுதினேன். காரணம் அவர் தனியார் வகுப்பில் படிக்கும் வேளை, வகுப்பு முடியும் வரை பின்னாலிருந்து எழுத எனக்கு நிறையவே நேரம் கிடைத்தது.


09. இதுவரை வெளிவந்த உங்கள் நூல்கள் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்?

நான் இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். முதலாவது நூல் 'மரம் வைத்தவன்'. அது 2007 இல் அரச சாகித்திய விருதைப் பெற்றுத் தந்தது. இரண்டாவது நூல் 'தேடலே வாழ்க்கையாய்'. அதன் பின் 'நிஜங்களின் தரிசனம்'. இந்த வருடம் (2026) வெளியானது 'விடியல் தூரமில்லை'.


10. அண்மையில் வெளியிட்ட 'விடியல் தூரமில்லை' சிறுகதை நூல் குறித்து விசேடமாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எனது மூன்றாவது நூலிற்கும், 'விடியல் தூரமில்லை' க்கும் இடையே பதினைந்து வருட இடைவெளி. சேவை ஓய்வின் பின்னர் வெளியானது. இதுவும் அரசியல், சமூகவியல், சமகாலப் பிரச்சனைகளை முன் வைத்து புனையப்பட்ட கதைகளை ஏந்தி நிற்கிறது.


11. உங்கள் எழுத்துக்களை வாசகர்களால் சீக்கிரமாக வாசித்துவிட முடிகிறது. இதற்கு என்ன காரணம்?

மிகச் சிறிய வசனங்கள், எளிமையான சொல்லாடல்கள், சமகால நடப்புகள், பிரதேச வழக்கிலமைந்த உரையாடல்கள், சொல்ல வந்ததை சுருக்கமாக, சுவாரஸ்யமாகக் கூறல் போன்றன காரணமாக இருக்கலாம்.


12. உங்களது ஒட்டுமொத்த சிறுகதைகளை அவதானித்த வகையில் உங்கள் பெரும்பாலான சிறுகதைகள் உரையாடல் பாங்கில் அமைந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்?

எப்போதும் பிரதேச வழக்கிற்கு - அது வடக்கோ, கிழக்கோ, மலையகமோ - ஒரு தனியான ஈர்ப்பு உண்டு. அதுதவிர நாம் பந்தி, பந்தியாக எழுதிப் புரிய வைப்பதை ஒரு உரையாடலில் எளிதாக உணர்த்தி விடலாம். உதாரணமாக ஒரு திருவிழாவில் ஒரு குழந்தை வளையல்கள் வாங்க ஆசைப்படுகிறது. தாயிடம் கேட்கப் பயம். இதை உரையாடலில் இவ்வாறு வெளிப்படுத்தலாம்.

'அம்மா.. ஆ அந்தச் சிவப்பு காப்பு வடிவா?'

'ம்'

'அது நிஷாக்கு (தனக்கு) வடிவா இருக்குமா?'

'ம்'

'நிஷால அம்மாக்கு விருப்பமா?'

'ம்'

'ஐ லவ் யூ டா அம்மா செல்லம்'

'......'

'நிஷா காப்பு கேட்டா அம்மாக்கு கோவம் வருமா?'

குழந்தையின் ஆசை, பயம் கலந்த மனநிலையை விபரிக்க இது போதுமானது.


13. வாசிப்பின் தொடக்கத்தில் உங்களை பாதித்த எழுத்தாளர்கள் யார்? உங்களின் ஆதர்சன எழுத்தாளர்கள் பற்றியும் கூறுங்கள்?

ஆரம்பத்தில் நான் அதிகம் வாசித்தது தென் இந்திய எழுத்தாளர்களின் கதைகளை. அதுவும் பெண் எழுத்தாளர்கள் சிவசங்கரி, வாஸந்தி, லக்ஷ்மி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றோரின் கதைகள், கல்கியின் சரித்திரக் கதைகள் பிடிக்கும். இவர்களைத் தவிர ஜெயகாந்தன், பாலகுமாரன், சுஜாதா போன்ற எழுத்தாளர்களினதும் செங்கை ஆழியான், பாலமனோகரன் போன்ற ஈழத்து எழுத்தாளர்களினதும் எழுத்துகள் என்னைக் கவர்ந்தன.


14. நீங்கள் இப்போதுகளில் தொடர்ந்து வாசிக்கும் எழுத்தாளர்கள் யார்? உங்களை மிகவும் கவர்ந்த சிறுகதை நூல் எது?

நான் இப்போது கையில் கிடைக்கும் சகல கதைகளையும் வாசிக்கிறேன். ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. நான் விரும்பி வாசிக்கும் எழுத்துக்குரியவர்கள் பலர் இப்போது இல்லை. இருப்பவர்களும் எழுதுவதில்லை. தொடர்ந்து வாசிப்பதற்கு எழுதுபவர்களும் தொடர்ந்து எழுத வேண்டுமே.


15. எழுத்து உங்களுக்கு என்னவாக இருக்கிறது? எதற்காக எழுதுகிறீர்கள்?

சாதாரண ஆசிரியராக இருந்த என்னை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது என் எழுத்துத்தான். நெருங்குவதற்கரிய ஆளுமைகளின் அறிமுகம் கிடைத்தது. இலக்கியக் கூட்டங்களில், பொது மேடைகளில் பேசுவதற்கும் வாய்ப்புகள் கிட்டின. எழுத்து என் சுவாசமானது. ஏதோவொரு விடயம் புதியதாய், வித்தியாசமாய் தோன்றும் போது, எங்கேயோ மனதின் ஓரிடத்தில் தொடும் போதெல்லாம் அவற்றை எழுத்தில் கொண்டு வருகிறேன்.


16.  வாழ்வில் இடம்பெறுகின்ற அல்லது அவதானிக்கின்ற பலநூறு சம்பவங்களில் கதையாகும் விடயம் ஒன்றை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?

சமகாலத்தில் பேசுபொருளாக உள்ள விடயங்களே பெரும்பாலும் கதைகளாக உருப்பெறுகின்றன. இதில் தேர்வு என்பதில்லை. உரிமை மீறல்கள், மனிதாபிமானமற்ற செயல்கள், அடக்குமுறைகள், அவலங்கள் எங்கெல்லாம் அறியக் கிடக்கிறதோ அங்கெல்லாம் எழுத்தாளர்கட்கு கதைகள் முளைவிடுகின்றன. தெரிந்தும், தெரியாமலும் என் கதைகளில் மகாபாரதம், மூதுரை, கொன்றை வேந்தன், கூத்துப் பாடல்கள், நாட்டார் பாடல்களின் ஓரிரு வரிகள் வந்து போயுள்ளன. இது தற்செயலே ஆயினும் இவை வாசகர்கட்கு செய்த ஒரு பெரிய விடயமாகக் கருதுகிறேன்.


17. மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் வாசிப்பதுண்டா?

மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனக்குப் பிடிக்கும். ஆனால் அவற்றின் வரவு மிகக் குறைவு. இவை பெரும்பாலும் அந்நிய நாடுகளிலிருந்து வருவதால் வேறுபட்ட வாழ்வியல், காலநிலை, கலாசாரம், இலக்கியம், களங்கள் போன்றவற்றிற்கான சாளரங்கள் எமக்குத் திறக்கப்படுகின்றன. இலக்கியத்திற்குப் புதிய பரிமாணம் கிட்டுகிறது.


18. ஐம்பது சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ள நீங்கள் ஏன் இதுவரை நாவல் ஒன்றையேனும் வெளியிடவில்லை?

ஒரு நாவலை வாசிக்கும் அளவிற்கு இன்றைய தலைமுறையினரிடம் பொறுமை இருக்கிறதா என்கின்ற கேள்வி எனக்குண்டு. எனக்கு நாவல் எழுதும் அளவிற்குப் பொறுமையில்லை என்பதும் மற்றொரு விடயம். ஒரு நாவலை எழுதும் நேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட கதைகளை எழுதி விடலாம் என்பதும் உண்மை. இருந்தும் எனது அடுத்த வெளியீடு ஒரு நாவலாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.


19. இன்றைய இலக்கியப் போக்கு குறித்த உங்கள் பார்வை அல்லது விமர்சனம் என்ன? உங்களுக்கு அடுத்த தலைமுறையில் நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார், யார்?

இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு குறைவு. மிகச் சிறிய தொகையினரே எழுதுகின்றனர். இவர்கள் புதிய விடயங்களைக் கையாள்கிறார்கள். பார்வைகள் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் தொடர்ந்து எழுதுவதில்லை. இவர்கள் தொடர்ந்து எழுதினால் தான் இவர்களை, இவர்களது எழுத்தை இனங்கண்டு கொள்ள முடியும்.


20. வேறு ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?

வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதால் இளம் தலைமுறையினரின் இலக்கிய ரசனை, எழுத்தாற்றல், தேடிக் கற்றல் போன்றவற்றில் மட்டுமல்ல நூல்களின் வெளியீடு, புத்தக விற்பனை, இவை சார்ந்த நிகழ்வுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்துகிறது. சிறு வயதிலிருந்தே புத்தகங்களை வாங்கிக் கொடுத்துப் பிள்ளைகட்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமை. இது கணனி யுகம். AI யுகம். இளம் தலைமுறை பலவிதமான போட்டிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இசை, வாசிப்பு, நட்பு இவற்றைக் களைவதற்குக் கைகொடுக்கும். புத்தகங்கள் நல்ல நண்பர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

60. கவிஞர் டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்

 கவிஞர் டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள்?


மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் கடந்த 15 வருடங்களாக வைத்திய அதிகாரியாகக் கடமை புரிந்து வருகிறேன். தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் பணி புரிகிறேன். தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையில் ஐந்து வருடங்கள் சேவை செய்த அனுபவம் உண்டு. அத்துடன் சுமார் ஐந்து வருடங்களாக இலக்கியத் துறையில் பயணித்து வருகிறேன்.


இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்பட காலாயமைந்த சூழலைக் குறிப்பிட முடியுமா?

எனக்கு சிறு பராயம் முதலே வாசிப்பில் மிகவும் விருப்பமாக இருந்தது. தமிழ் மொழியில் அப்படியொரு பற்று. வாசிப்போடு உறவு கொண்டிருந்ததாலேயே தமிழிலே விருப்பு வந்தது என்றால் அது மிகையாகாது. எனது தந்தை ஹயாத்து முஹம்மது அவர்கள் கணித ஆசிரியராக இருந்தபோதிலும் தமிழ் மொழியிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். மரபுக் கவிதை புதுக்கவிதை போன்றவற்றை இயற்றக் கூடியவர்களாகவும் இருந்தார். செய்யுள்களையும் காவியங்களையும் கதைகளையும் தமிழ் ஊற தமிழ் சொட்டச் சொல்லித் தருவதில் மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட தூண்டுகோலாக இருந்தவர் தந்தை என்று தெரிவிப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப் பாடத்தைச் சுவைபடக் கற்பித்த தமிழ் ஆசான்களும் எனது தமிழின்  வளர்ச்சிக்கு உரியவர்கள். அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள் உரித்தாகட்டும்.


உங்களுக்குள் கவிதைகள் எவ்வாறு கருக்கொண்டு உருப்பெறுகின்றன?

வாழ்வில் அனைத்து சம்பவங்களும் மனதின் ஒரு புள்ளியில் கீறிட்டுச் செல்லும் போது அது கவிதையாக உருமாற்றம் பெறுகிறது. உயிர் ஓவியமாகவே மாறிவிடுகிறது. வாழ்வில் சாதாரணமாக நடக்கின்ற சம்பவங்கள் கவிஞனின் கண்களுக்கு, கவிஞனின் இதயத்திற்கு வித்தியாசமான ஒரு கோணத்தில் புலப்படும் போது அங்கே கவிதை எனும் உயிர் பரிணமிக்கிறது. கவிதை உருப் பெறுகிறது. 

எழுத ஆரம்பிக்கும் போது எழுத ஒன்றுமே இல்லை என்பது போல் தோன்றும். ஆனால் பேனாவை ஊன்றி வார்த்தைகளால் பாத்தி கட்டும் போது கவிச்சுனை மென்மேலும் ஊறிக் கொண்டே இருக்கும். தினமும் எழுத, எழுத கவிதை தனக்கே உரித்தான ஒரு பாங்கினைச் சுவீகரித்துக் கொள்ளும். சுவாரசியமாகவும் சிறப்பாகவும் மிக அழகாகவும் மாறும். கவிதை நடை தன்னை மேலும் மெருகேற்றிக் கொள்ளும். அங்கே உண்மை புனைவுகளாகும், புனைவுகள் உண்மைகளாகும். ஒரு படைப்பாளி என்பவன் மாபெரும் கலைஞன். அவனை தட்டிக் கொடுங்கள். தூண்டி விடுங்கள். சிறு ஊக்கங்கூட மாபெரும் வெற்றிப் பாதையில் அவனை வழி நடாத்திச் செல்லும். கவிஞன் என்பவன் உயிரிலே விளக்கேந்தி காத்துக் கிடப்பவன். பொருள் தேடி ஆவலோடு உணர்தல் வெளியில் வாசகனை அலைந்து குழந்தையாக ஏங்க வைக்கிறது உருப்பெற்ற ஒரு கவிதை.


உங்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளர் அல்லது கவிஞர் என்று யாரைக் கூறுவீர்கள்?

எழுத்துக்களை ருசிக்கத் தொடங்கியவனுக்கு குறிப்பிட்ட எழுத்தாளரை மட்டும் குறிப்பிட்டுக் குருவாகக் கொண்டுவிட முடியாது. அவன் தாகம் தீரும் வரைக்கும் எழுத்துக்களை குடித்துக் கொண்டே இருப்பான். உலகில் கரங்களில் தவழும் அனைத்துப் படைப்புகளும் அவனது இலக்கியப் பசிக்கான தீனிகளாகவே அமையும். இலக்கிய உலகின்  ஜாம்பவான்கள் அனைவரையும் எனக்குப் பிடிக்கும். அதிலும் முக்கியமாக நான் நேசிக்கின்ற எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக கல்கி, சாண்டில்யன், கவிக்கோ அப்துல் ரகுமான், வைரமுத்து, பாலகுமாரன், ஜெயமோகன் போன்றவர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.


வைத்தியராகப் பணியாற்றும் உங்களை நீங்கள் எப்போது ஒரு கவிஞராக உணர்ந்தீர்கள்?

சிறு வயது முதலே கவிதைகள், கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை அதிகமாக வாசித்து வந்ததால், அக்காலங்களில் கவிதை எழுதுவது வழக்கமாக இருந்தது. கல்வியிலான அடைவின் பின்னரும் எழுதுவது தொடர்ந்து கொண்டே இருந்தது. புலன, முகநூல் பக்கத்தில் எழுத்துப் பயணம் ஆரம்பித்த போதே எமது உண்மையான இலக்கியத் தாகம் வெளிப்படத் தொடங்கியது. இப்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.


இதுவரை வெளிவந்த உங்களது நூலாக்கங்கள் தொடர்பாகக் கூற விழைவது?

எனது கன்னி வெளியீடு "சிறகு முளைத்த மீன்" புதுக்கவிதை நூல் கடந்த வருடம் 2022 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இரண்டாவது சுய வெளியீடு "தூரிகை வரையும் மின்மினிகள் ஹைக்கூ" கவிதை நூல் 2023 இல் இலங்கையில் வெளியீடு செய்யப்பட்டது. அத்துடன் பதினைந்திற்கும் மேற்பட்ட இலங்கை, இந்திய கவிதைத் தொகுப்பு நூல்களில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.



உங்களது முதலாவது கவிதைத் தொகுதியான "சிறகு முளைத்த மீன்" கவிதை நூலின் உள்ளடக்கம் குறித்துக் கூறுங்கள்?

"சிறகு முளைத்த மீன்" பல்சுவை அம்சங்களோடு பல்வேறுபட்ட கவிப்பூக்களின் கதம்பமாக உங்களுக்காக வெளிவந்து இருக்கிறது. அதிலே ஒரு வரிசைக் கிரமத்தை நீங்கள் அவதானிக்கலாம். இறைவன், நபிகளார், தந்தை, தாய், கணவன் மனைவி, மகள், நண்பர்கள், உழவர் போன்ற தலைப்பில் அமையக்கூடிய கவிதைகள் ஒவ்வொன்றாக இடம் பெறுவது இன்னூலின் சிறப்பம்சம் என்று நான் நினைக்கிறேன். அத்தோடு ஹைக்கூ கவிதைகள், தன்முனைக் கவிதைகள், நாட்டார் பாடல், கிராமியக் கவிதைகள், காதல் கவிதைகள், ஊக்கக் கவிதைகள், இயற்கை சம்பந்தமான கவிதைகள் மற்றும் மகாத்மா காந்தி, பாரதி, ஆண் தேவதை போன்ற தலைப்பிலான கவிதைகளும் உள்ளடங்கலாக ஒரு கவிதைத் தொகுதியாக இருக்கிறது. இறைவனின் மகத்துவத்தையும், உறவுகளின் முக்கியத்துவத்தையும், காதலின் இரசனையையும், இயற்கையின் வருடலையும், உலகில் வாழ்ந்து மறைந்த சில தலைவர்களைப் போற்றியும் புகழ்ந்தும் நேர்மறை சிந்தனைகளைத் தூண்டி, துவண்டவர்களைத் தூக்கி எழுப்பிவிடும் ஊக்கக் கவிதைகளுமென எனது கவிதை நூலாக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புளகாங்கிதத்தோடு தெரிவிக்கிறேன்.


நீங்கள் வெளியிட்ட ஹைக்கூ நூலுக்கு "தூரிகை வரையும் மின்மினிகள்" எனும் நாமத்தினை ஏன் வைத்தீர்கள்?

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் "மின்மினிகளால் ஒரு கடிதம்" எனும் கவிதை நூல் 2002 இல் வெளிவந்தது. இது அரபி, உருது மொழிகளின் கஸல் என்னும் காதல் கவிதை வடிவத்தைத் தமிழில் அறிமுகம் செய்வதற்காகப் படைத்த அழகிய காதல் இலக்கியமாகும். அந்தக் கவிதைகளில் மயங்காத வாசகர்கள் எவருமில்லை என்றே கூறலாம். எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைகள் தாங்கிய அந்த நூலின் பெயரால் ஈர்க்கப்பட்ட நான் எனது ஹைக்கூ நூலுக்கும் மின்மினிகளைத் தலைப்பாக்க வேண்டும் என்று ஆவல்கொண்டேன். அத்தோடு ஹைக்கூக்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்தவர்களும் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்தான். அதனால்தான் தூரிகை வரையும் மின்மினிகள் என்ற பெயர் உண்டானது.


உங்களது சிறு சிறு கவிதை வரிகள் ஆழமான அர்த்தங்களையும், காத்திரமான விடயங்களையும் வெளிப்படுத்துவதாகவுள்ளது. இதுபற்றி நீங்கள் கூற விழைவது?

அவ்வப்போது மனதில் தோன்றும் எண்ண அலைகளை கவியாக வடிப்பது எனது வழக்கம். அதன் அடிப்பொருள் நேசத்தை, வாழ்வின் தத்துவங்களை விவரிப்பதாகவே இருக்கும். பெரிய, நீளமான கவிதைகளைவிட சிறிய கவிதைகளே அனைவரையும் கவர்ந்து மனதைக் கொள்ளை கொள்ளக் கூடியதாக இருப்பது நிதர்சனம். வாழ்வின் தத்துவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் சிறுகவிதைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரின் எண்ணங்களோடு, சந்தர்ப்பங்களோடு, வாழ்வின் ஒவ்வொரு விடயங்களோடும் ஒன்றுவதே இதற்குக் காரணமாகும். இவ்வாறான சிறு கவிதைகளிலும் எனக்கு மிகவும் பிரியம் உண்டு. அதை எழுதுவதில் மிகவும் திருப்தியாக உணர்கிறேன்.


ஈழத்துக் கவிதையுலக வரலாற்றில் உங்களது கவிதைகள் எவ்வாறான இடத்தினைப் பெறுவதாக நினைக்கின்றீர்கள்?

எமது நூல் வெளியீடுகள் மற்றும் எமது கவிதைப் பிரசுரங்கள் நிச்சயம் எதிர்காலத்தில் ஈழத்துக் கவிதை உலக வரலாற்றில் ஒரு இடத்தை பிடிக்கும் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ். அதற்கு இலக்கியவானில் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டி இருக்கிறது.


நீங்கள் எழுதுகின்ற கவிதைகளில் பொதிந்துள்ள விடயங்கள் சமூக மாற்றத்திற்கு வித்திட்டதுண்டா?

ஒரு கவிஞனின் எழுதுகோல் முனை ஒரு போர்வாளின் முனையைவிட கூர்மையானது என்று சும்மாவா சொன்னார்கள்? கவிஞன் கூற வருகின்ற அனைத்து விடயங்களும் ஏதோ ஒரு வகையில் சமூகத்திற்கு படிப்பினையாக அறிவுரையாக எதிர்வு கூறலாகவே அமைகின்றன. எனது கவிதைகளும் அவ்வாறான சமூக மாற்றத்திற்கு வழி கோலும் என்று நினைக்கிறேன்.


தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர்களுள் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிஞர் ஒருவர் பற்றிக் கூற முடியுமா?

கவிப் பேரரசு வைரமுத்து அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய தமிழில் மயங்காத மனிதர்கள் இல்லை என்றே கூறலாம். அவருடைய கள்ளிக்காட்டு இதிகாசம், இன்னொரு தேசியகீதம், இந்த பூக்கள் விற்பனைக்கல்ல, சிகரங்களை நோக்கி, வில்லோடு வா நிலவே, தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம் போன்ற நூல்கள் நான் மிகவும் விரும்பி வாசித்தவை.


எந்த வகையான ஊடகங்களை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தி உங்களது படைப்புகளைக் களப்படுத்தி வருகின்றீர்கள்?

சுமார் 40 க்கும் அதிகமான இதழ்களில் எனது கவிதைகள் கட்டுரைகள் ஊக்கப் பதிவுகள் வெளிவந்துள்ளன. சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிற்றேடுகள், மின்னிதழ்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் குழுமங்களில் கவிதைகள், கட்டுரைகள், மருத்துவக் குறிப்புகள், மருத்துவக் கட்டுரைகள், ஊக்கப் பதிவுகள் போன்றவற்றை எழுதி வருகிறேன். முகநூல், புலன இலக்கியக் குழுமங்களில் தொடர்ச்சியாக கவிதைகள், கட்டுரைகள் பதிவேற்றம் செய்து வருகிறேன்.

பல்வேறு கலை இலக்கிய மன்றங்களால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பங்குகொள்கின்றமை, சஞ்சிகை இதழாசிரியராகப் பல தடவைகள் பணியாற்றியமை, கவியரங்கங்களில் பங்குகொள்கின்றமை, கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களில் பங்கெடுத்தல், வலையொளிப் பதிவேற்றம், வானொலி ஒலிபரப்பு கவிதை நிகழ்ச்சிகள், பதிவு செய்யப்பட்ட பல்வேறு இலக்கிய அமைப்புகளில் உறுப்பினர், நிருவாக உறுப்பினர் என்ற வகையில் அதன் பல்வேறு கலை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றல் இவ்வாறாக எமது படைப்புகள் களம் அடைகின்றன என்று குறிப்பிடுவதில் பெருமிதமடைகிறேன்.



பொதுவாக ஆக்க இலக்கியப் படைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டுமென கருதுகின்றீர்கள்?

நினைத்ததை மாத்திரம் சொல்லாக்கி விட்டுச் செல்வது இலக்கியம் அல்ல. அது தூரநோக்குடனும் வாழ்வியலின் இன்ப துன்ப மற்றும் இன்னோரன்ன உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். சாதாரண நிலையிலிருந்து அனைத்து நிலைகளிலையும் சாடிக் கேள்வி கேட்பதாக அமைதல் வேண்டும். மக்களின் வேதனைகளைப் படம் பிடித்துக் காட்டும் படைப்புகளே காலத்தைத் தாண்டி நிலைத்து நிற்கும். சமூகத்தின் மாற்றத்திற்கு வித்திடுவதாக அமையும். அந்தந்த காலங்களுக்குரிய சமூக பதிவுகள், வாழ்க்கை முறை, பிரச்சினைகள், மக்களின் அடைவுகள் என்பவற்றைப் பிரதிபலிக்கும் படைப்புகள் நித்தியமானவை.


ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகள் எதுவெனக் கூற முடியுமா?

தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் விரல்கள் எழுத்தாளனுடையவை. சமூகத்தின் நன்மைக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் தங்களை அர்ப்பணித்து, பாமர மக்களின் ஆசாபாசங்கள், வாழ்க்கை முறைகள், அநுபவங்கள் எல்லாவற்றையும் கோடிட்டுக் காட்டுபவனே எழுத்தாளன். பேனா முனை அவ்வாறான வீரம் கொண்டது. அடிமட்டத்து வேதனையிலிருந்து மேல்மட்டம் வரை அனைவரது பிரச்சினைகளையும் அடிக்கோடிட்டு வெளியுலகத்துக்குக் காண்பிப்பதன் மூலம் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய ஒரு கருவியாக எழுத்தாளன் செயற்படுகிறான். அவனது அடிப்படைத் தகுதிகளாவன வெளிப்படைத் தன்மை, உண்மைத்துவம், நேர்மை, கூர் பார்வை, அனுபவம், வலி, ஆழ்ந்த வாசிப்பு, மொழிப்புலமை, தன்னம்பிக்கை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஆண் சமூகத்திலிருந்து மட்டுமே வருகிறது என்று சொல்ல முடியுமா?

அப்படிக் கூற முடியாது. பெண்கள் மீதான ஒடுக்கு முறை என்பது ஆண் சமூகத்திலிருந்து மட்டுமே வருகின்றது என்ற கருத்து முற்றிலும் தவறானது. அவளது பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறுபட்ட சூழல், காலம், ஆண், பெண், தொழில், சமூகம், நாடு, இனம் போன்ற பல்வேறுபட்ட பிரிவுகளில் இருந்தும் ஒடுக்குமுறை எழலாம் என்பது எனது கருத்து.


கவிதை மாநாடுகளில் அல்லது கவியரங்குகளில் கலந்துகொண்டு எவ்வாறான பங்களிப்பினை ஆற்றியுள்ளீர்கள்?

நேரடி மற்றும் இணைய வழிக் கவியரங்கங்கள், உலக சாதனைக் கவியரங்கங்கள், மகளிர் தின கவியரங்குகள் மற்றும் தொடர் ரெங்கா சென்றியு போட்டி போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று கவிபாடி வெற்றி பெற்ற அனுபவமும் உண்டு.


உங்களது கவிதைகளுக்குக் கிடைத்த ஆதரவுகள் பற்றி குறிப்பிட முடியுமா?

ஆமாம். முகநூலிலும் புலனத்திலும் கவிதை பதிவேற்றங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதைவேளை பத்திரிகை, சஞ்சிசைகளில் பிரசுரமாகிய கவிதைகளைப் பதிவு செய்யும் போது அதற்கும் வாசகர்களின் கருத்திடுகைகளும் பின்னூட்டங்களும் திருப்தியாக இருக்கிறது.

சென்ற வருடம் இந்தியாவில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது சிறகு முளைத்த மீன் கவிதை நூலை வெளியீடு செய்த பின்னர் எப்போது இலங்கையில் வெளியிடப் போகிறீர்கள் என்று இலங்கை நண்பர்கள் அடிக்கடி கேட்ட வண்ணம் இருந்தனர். அந்தவகையில் இலங்கையிலும் வெளியீடு செய்து அதனை நான் வாசகர்கள் கையில் தவழவிட்டிருந்தேன். அதிலிருந்து நான் எனது நூலுக்கான வரவேற்பை வாசகர்கள் எவ்வாறு வழங்கியிருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

அதேபோன்று எனது இரண்டாவது நூலான தூரிகை வரையும் மின்மினிகள் ஹைக்கூ நூலுக்கும் கூட நல்ல வரவேற்புகளும், சிறந்த விமர்சனங்களும் கிடைத்துள்ளன. நிச்சயம் எனது கவிதைகள் வாசிப்பவரின் மனதில் புதுத் தெம்பையும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வரவழைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் என்றும் நினைக்கிறேன். அந்தவகையில் எல்லாம் வல்ல இறைவனுக்கே அனைத்துப் புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்.


உங்களது அடுத்த படைப்பு எது பற்றியதாக அமையும் எப்போது வெளிவரும் என்று கூற முடியுமா?

தமிழ் தொண்டர் பைந்தமிழ் சங்கம் நிகழ்த்திய பத்தாயிரம் கவிதைகள் ஒரு நூல் தொகுப்பு உலக சாதனை நூலிற்கு எனது நூறு கவிதைகளும் தேர்வாகி நூலாக்கம் பெற்றுள்ளது. இது இந்திய 'நோபல் உலக சாதனையில்' பதிவாகி உள்ளது. "துயில் நதிப்பூக்கள்" எனப்படும் எனது புதுக்கவிதை நூல் "தமிழ்நாடு உலக சாதனைக் கவிஞர்கள் - 100" எனும் மாபெரும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம் பிடித்துள்ளது. நூறு கவிஞர்கள் பத்தாயிரம் கவிதைகள் உலக சாதனை தொகுப்பு நூலில் இடம்பெற்ற "துயில் நதிப் பூக்கள்" எனும் இக்கவிதை நூல் இலங்கையில் இந்த வருடம் (2024) வெளியீடு காணவிருக்கிறது.

மேலும்

01) மருத்துவக் கட்டுரைகளின் தொகுதி

02) தன்முனைக் கவிதை நூல்

03) நூருல் ஐன் நஜ்முன் ஹூசைன் தொகுக்கவிருக்கும் மின்னும் தாரகைகள் - 2 நூலிலும் எனது பதிவுகள் இடம்பெறவுள்ளது.

04) தன்முனை இயைபுக் கவிதை தொகுப்பு நூல் - கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜ் தமிழ்நாடு

05) ஹைபுன் கவிதை தொகுப்பு நூல் - கவிஞர் அன்புச்செல்வி சுப்புராஜ் தமிழ்நாடு

06) கல்வெட்டு தமிழி மொழியில் தன்முனைக் கவிதைத் தொகுப்பு நூல் - கவிச்சுடர் கல்யாண சுந்தரம் - தமிழ் நாடு

07) திருக்குக்குறள் பொருட்பால் தொகுப்பு நூல் - தமிழ்நாடு கன்னிக்கோவில் ராஜா

08) லிமரைக்கூ தொகுப்பு நூல் - தமிழ் நாடு கன்னிக்கோவில் ராஜா

09) குறள் சாதனைத் தொகுப்பு நூல்

10) 100 கவிஞர்கள் 500 மழலைப் பாடல்கள் தொகுப்பு நூல்

11) ஹைக்கூ நூல் (சுய வெளியீடு) - நூலேணி பதிப்பகம், சென்னை, தமிழ் நாடு.

12) கல்வெட்டு தமிழி எழுத்தில் ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு நூல் - தமிழ் நாடு கன்னிக்கோவில் ராஜா

இந்த நூல்கள் எல்லாம் எதிர்காலத்தில் வெளிவர உள்ளன.


இறுதியாகப் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்ன?

முதற்கண் தமிழன் பத்திரகைக்கும் நேர்காணல் செய்த சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் எனது மனந்திறந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு இலக்கிய உலகில் காலடி வைத்து அதில் மிளிர இதுவரையில் எனக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Friday, March 8, 2024

59. எழுத்தாளர் கீதா கணேஷ் அவர்களுடனான நேர்காணல்

தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் மொழித் துறை விரிவுரையாளரும் எழுத்தாளருமான கீதா கணேஷ் அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


முதலில் உங்களைப் பற்றியும் உங்கள் ஊர், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வாழ்வு பற்றியும் குறிப்பிடுங்கள்?

கீதா கணேஷ் என்ற பெயரில் எழுதிவரும் நான், ஈழத்தின் வடக்கே அமைந்த தீவுப் பிரதேசமாகிய வேலணை மேற்கு சிற்பனை எனும் கிராமத்தில் பிறந்தேன். 1991 ஆம் ஆண்டு இடப்பெயர்வில் அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் பல்வேறு இடங்களில் வசித்து வந்தோம். எங்கள் குடும்பத்தில் மூன்று சகோதரிகளும் சகோதரனுமாக நாங்கள் ஐந்து பிள்ளைகள். தங்கை முகாமைத்துவப் பட்டதாரி, சகோதரர் பொறியியலாளர். எனது கணவர் திரு. கவாஸ்கர் கணக்காளராகப் பணிபுரிகின்றார். லோககீதா கணேசலிங்கம் எனது இயற்பெயராயினும் கீதா கணேஷ் என்ற பெயரிலேயே நான் திருமணத்தின் பின்னும் சிறுகதைகளை எழுதி வருகிறேன்.

நாங்கள் பாடசாலைக் காலத்திலேயே பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்து, பின்னர் வவுனியாவில் எமது பாடசாலைக் கல்வியைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது. அதுவரை பல்வகைச் சூழலுக்குள் வாழவேண்டியிருந்தோம். வவுனியா வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரையான கல்வியையும் உயர்தரக் கல்வியை வவுனியா சைவப் பிரகாச மகளிர் கல்லூரியிலும் கற்றேன். தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானேன். 

பாடசாலைக் கல்வி எனது இணை பாடவிதான செயற்பாடுகளுக்கு பல்வேறு வகையிலும் அடித்தளமிட்டது. அந்த அடித்தளம் பல்கலைக்கழக வாழ்விலும் தொடர்ந்தது. அதனாலேயே யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றேன். பல்கலைக்கழகக் கல்வி பல்வேறு மாணவர்களுடன் பழகுவதற்கான சூழலையும் பல்வேறு அனுபவங்களையும் பெற்றுத் தந்தது. பல்கலைக்கழக கல்வியின் பின்னர் வீரகேசரிப் தலைமைப் பத்திரிகைக் காரியாலயத்தில் உதவி ஆசிரியராகப் பணிபுரிவதற்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டு அங்கு பணிபுரிந்தேன். இங்கு பணிபுரிந்துகொண்டிருந்த சிறிது காலத்தில் இலங்கை ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பித்து ஆசிரியராகப் பணிபுரிந்தேன். பாணந்துறை அல் பஹ்றியா முஸ்லிம் வித்தியாலயத்திலேயே எனக்கு முதல் நியமனம் கிடைத்தது. பின்னர் அங்கிருந்து பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்கு மாற்றலாகி கடமையாற்றினேன். அதன் பின்னர் 2017 இலிருந்து இலங்கைத் தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் மொழித் துறையில் விரிவுரையாளராகப் பதவியேற்று தற்போது வரை அங்கு கடமையாற்றி வருகிறேன்.


இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்படக் காரணமாயமைந்த சூழலைக் குறிப்பிட முடியுமா?

இலக்கியத்துறை ஈடுபாட்டிற்குக் காரணமாக வாசிப்பு அனுபவம், கேட்டல் மற்றும் அதனூடான தேடலும் பிரதான காரணங்களாக அமைந்தன. பாடசாலைக் காலத்திலிருந்தே வகுப்பறைச் சூழல் வாசிப்பிற்கான களமாக அமைந்தது. இலக்கியத் தேடலை ஆர்வப்படுத்தும் வகையிலான நூல்கள், பத்திரிகைகள் வாசிப்பதற்கான ஊடகங்கங்களாக அமைந்தன. தனியே சுயதேடல் மூலமான வாசிப்பு என்பதற்கப்பால் சில விடயங்களை செவிமடுத்தலின் ஊடாக நாங்கள் வாசித்த அந்த இலக்கியச் சுவையை அனுபவிக்க வேண்டும் என்ற உந்துதல் இலக்கியத்தின் மீதான நாட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

குறிப்பாக எங்களுடைய அம்மா பல வகையான விடயங்களை வாசித்து அவற்றை எங்களோடு பகிர்ந்துகொள்வார். ஆன்மிகக் கருத்துக்களாயினும் சரி, இலக்கியக் கருத்துக்களாயினும் சரி தான் வாசித்தவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அந்தவிடயத் தொற்றுதலுக்கப்பால் ஒரு தேடல், நானும் வாசித்து அறிய வேண்டும், பல விடயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தாகத்தை என்னுள் ஏற்படுத்தியது. அம்மா தான் வாசித்து அறிந்த விடயங்களை மிகச் சாதாரணமாகத்தான் எங்களுக்குக் கூறுவார். இதை நாங்கள் படிக்க வேண்டும் என்ற எந்தவிதமான திணிப்பும் அங்கு இருக்காது. பாடசாலையில் சென்றுதான் எல்லா விடயங்களையும் கற்க வேண்டும் என்ற எண்ணப்பாடுகளுக்கு அப்பால் அம்மாவின் வாசிப்புப் பகிர்வுதான் எனக்குள் தேடலை ஆரம்பித்தது. 

உதாரணமாக நான் சிறுமியாக இருந்த போது அம்மா, அபிராமிப்பட்டரின் அபிராமி அந்தாதி படித்துக் கொண்டிருப்பார். அப்போது அந்தாதி என்ற இலக்கிய வடிவம் பற்றி அம்மா கூறி அந்த பதிகங்களைப் பாடுவார். அதன்பின் நான் பாடசாலையில் உயர்தரத்தில் இலக்கியம் கற்கும் போது அந்தாதி இலக்கிய வடிவம் பற்றி அம்மா கூறிய விளக்கமும் அபிராமிப்பபட்டரின்  பதிக விளக்கமும் எனக்கு அப்படியே பதிந்துகொண்டன. இன்றுரை நான் வியந்து கொள்ளும் விடயம் இதுதான். அம்மா மிகச் சாதாரணமாக எங்களுக்குள் ஏற்படுத்திய வாசிப்பும் தேடலும் பற்றித்தான். அம்மா சமையல் செய்துகொண்டோ இன்னொரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டோ சாதாரணமாகக் கூறுவார். அப்பா வாசிப்பதற்கேற்ற பழைய நூல்கள், பத்திரிகைகள் கிடைக்கும் போதெல்லாம் வீட்டிற்குக் கொண்டு வருவார். இன்னொன்று அவரது உரத்து வாசித்தலாலும் பல விடயங்கள் உள்வாங்கப்படும். அவர்களிடம் சாதாரணமாகக் காணப்பட்ட விடயங்கள் எமது நாளாந்த வாழ்விலும் பதிந்துவிட்டன. இத்தகைய சூழல் என்னை அறியாமலேயே என்னுள் இலக்கிய நாட்டத்தையும் தொடர்ந்து எழுத்தார்வத்தையும் தூண்டியது எனலாம். வாசிப்பும் தேடலும் எப்போதும் வாழ்க்கையில் கைவிட முடியாத சொத்துக்கள். 


உங்களுக்கு மிகவும் பிடித்த சிறுகதையாசிரியர் யார்? என்ன காரணம்?

இவர்தான் என தனி ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாது. பல எழுத்தாளர்களைப் பிடிக்கும். சமூகம் சார்ந்து சிந்தித்து சமூகத்தின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் எப்போதும் வாசகர் மனதிலிருந்து நீங்காதவை. அந்தவகையில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், வைத்தியலிங்கம், இலங்கையர் கோன், நந்தி, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தட்சாயினி போன்றவர்களின் சிறுகதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.


உங்களை நீங்கள் எப்போது ஒரு எழுத்தாளராக உணர்ந்தீர்கள்?

இப்போதுவரை நான் எழுதும் போது ஒரு எழுத்தாளர் என்ற நிலையை உணர்வதை விடவும் என் சமூகத்தை எழுத்துக்களின் ஊடாக வாசித்த வாசகர்கள் எனது படைப்புக்கள் பற்றிய கருத்துப் பகிர்வின் ஒவ்வொரு தருணங்களிலும் எழுத்தாளராக உணர்வதோடு மேலும் பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் என்று உணர்வேன்.


சிறுகதைகள் மீதான ஆர்வம் எப்போது இருந்து ஆரம்பித்தது? உங்களது முதலாவது சிறுகதையை எழுதிய தருணம் எப்படியிருந்தது?

பாடசாலைக் காலத்தில் இணை பாடவிதான செயற்பாடுகளுக்காக அவ்வப்போது எழுதியிருக்கிறேன். உயர்தரத்தில் கல்வி கற்கும் போது தமிழ்மொழித் தினப் போட்டியில் சிறுகதை ஆக்கப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றிருக்கிறேன். அப்போதுதான் என்னுள் இருக்கும் திறமையை நான் உணரக்கூடியதாக இருந்தது. பின்னர் பல்கலைக்கழகக் காலத்தில் எழுதிய தொலைபேசி என்ற கதை ஜீவநதி சஞ்சிகையில் முதன் முதலில் பிரசுரமாகியபோது எனக்கு அது பெருமகிழ்வாகவும், என் எழுத்துக்களில் நான் வாழும் சமூகத்தைக் காணுவது வேறுபட்ட அனுபவமாகவும் உணர்ந்தேன். 


எழுத்துத் துறையில் பல்வேறு கூறுகள் இருக்கின்ற போதும் நீங்கள் சிறுகதை; துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கான விசேட காரணம் என்ன?

தமிழ் இலக்கியம் சார்ந்து கட்டுரைகளும் சில கவிதைகளும் எழுதியிருக்கிறேன். தான் சார்ந்த சமூகத்தைப் பிரதிபலித்துக் காட்டவேண்டிய மன உந்துதல் எனக்குள் எழுந்தபோது அதற்கு எழுத்து சிறந்த கருவியாக இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். அந்த எழுத்துத் துறைக்குள் பல்வகைமையான வெளிப்பாட்டு ஊடகங்கள் இருந்தபோதிலும் சிறுகதையூடாக என் கருத்தை நிதர்சனமாக முன்வைப்பதற்கு ஏற்றதாக இருந்தது. விடயத்தை அலட்டல் இல்லாமல் இரசனை குன்றாது அதேநேரம் வாசகரின் நேரத்தை அதிகம் பிடித்துக் கொள்ளாமலும் வாசிப்பவர் மனதில் ஒரு நெருடல் ஒட்டிக்கொள்ளும் வகையிலும் இருப்பதற்கு சிறுகதை வடிவமே எனக்குப் பொருத்தமாகத் தெரிந்தது. ஆனால் சிறுகதைதான் தொடர்ந்து எழுதுவேன் என்றோ அதுமட்டுமே சிறந்த வடிவம் என்றோ கூறமுடியாது. காலம், வெளிப்படுத்தும் விடயத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றமடையலாம்.


நீங்கள் வாசித்து இரசித்த முதலாவது சிறுகதை நூல் எது? உங்களுக்கு மிகவும் பிடித்த சிறுகதை நூல் எது?

முதலாவது சிறுகதை நூல் என்பதைவிட நாங்கள் உயர்தரத்தில் கல்வி கற்கும் போது இருந்த சிறுகதைகளைத்தான் நான் மிகவும் இரசித்துப் படித்திருக்கிறேன். புதுமைப்பித்தனின் ஒருநாள் கழிந்தது, இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம், கனகாம்பரம், பாற்கஞ்சி, பகீரதப் பிரயத்தனம் போன்ற சிறுகதைகளை மீண்டும் வாசித்திருக்கிறேன். இக்கதைகள் எல்லாமே பரீட்சை நோக்கத்திற்கான கற்றலைத் தாண்டி இப்போதும் மனதில் பதிந்து இரசனைக்குரிய சிறுகதைகளாக இருக்கின்றன. இவற்றைவிட நந்தியின் சிங்களத்து மருத்துவிச்சி இன்றுவரை நான் சலிப்படையாமல் மீண்டும் மீண்டும் வாசிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் புதிய படைப்பை வாசிப்பதான அனுபவத்தைப் பெற்றுக்கொள்கிறேன்.


இதுவரை வெளிவந்த உங்களது நூலாக்கங்கள் தொடர்பாகக் கூற விழைவது? 

படைப்பாக்கங்களை எழுதிய போதிலும் நூலுருப்பெற்றவை சிறுகதைகள் மட்டுமே. 2012 ஆம் ஆண்டில் எத்தனங்கள் சிறுகதைத் தொகுதியும், 2022 ஆம் ஆண்டில் இருளைக் கிழித்த கோடு என்ற சிறுகதைத் தொகுதியும் வெளிவந்திருக்கின்றன. இவற்றைவிட பாடசாலை மாணவர்களுக்கான நூல்கள் பலவும் எழுதி வருகிறேன்.


உங்களது கன்னிச் சிறுகதைத் தொகுப்புக்கு எத்தனங்கள் என்ற நாமத்தினை ஏன் எவ்வாறு வைத்தீர்கள்?

அந்தச் சிறுகதைத் தொகுதி நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது எழுதப்பட்டது. எத்தனங்கள் என்ற தலைப்பில் ஒரு சிறுகதை குறித்த சிறுகதைத் தொகுதியினுள் இடம்பெற்றுள்ளது. எத்தனங்கள் சிறுகதை என் போன்ற ஒரு பெண் பிள்ளையின் எத்தனங்களைக் கொண்டு எழுதியிருந்ததோடு அந்தக் கதைக்குரிய தலைப்பும் எனது முதல் தொகுப்புக்குப் பொருத்தமான தலைப்பாக இருந்தமையால் அப்பெயரையே எனது முதல் சிறுகதைத் தொகுதிக்கு வைத்தேன்.


உங்களது சிறுகதைகளில் பெண் சார்ந்த பாத்திரப் படைப்பு, கதைச் சூழல் போன்றவற்றை எந்தக் கோணத்திலிருந்து எழுதியிருக்கின்றீர்கள்? 

நான் வாழும் சமூகத்திலிருந்து என் மனதை நெருடிய விடயங்களே எனது எழுத்துக்களாகியுள்ளன. பெண்கள் சார்ந்த பிரச்சினைகள் என்று சொல்லும் போது அவர்கள் வாழ்க்கையில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகவே அவை இருக்கின்றன. 


இருளைக் கிழித்த கோடு சிறுகதை நூல் வெளியீடு தொடர்பாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

எத்தனங்கள் சிறுகதைத் தொகுதி வெளியாகி பத்து வருடங்களின் பின்புதான் இருளைக் கிழித்த கோடு நூலாக்கம் பெற்று வெளிவந்தது. சிறுகதைகளை அவ்வப்போது எழுதியிருந்தாலும் அவ்வாறு எழுதியவற்றுள் தெரிந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளே இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகள் பல பரந்துபட்ட களங்களையும் மையக் கருக்களையும் உள்ளடக்கியவையாகக் காணப்படுகின்றன. இச்சிறுகதைத் தொகுதி தேசிய மொழிகள் பிரிவு, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு சகோதர மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. மதிப்புக்குரிய ஜீ.எஸ். சரத் ஆனந்த அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். எமது மக்களின் வாழ்வியல் போராட்டங்களை சகோதர மொழி இனத்தவர்களும் வாசிக்கக் கிடைத்துள்ளதோடு எனது எழுத்து இன்னொரு மொழியாக்கத்தில் வெளிவருகின்றபோது அது இரட்டிப்பு மகிழ்வையும் ஊக்குவிப்பையும் தருகின்றது. 

இந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்பெற்றது. அவ்வாறே நாடு கடந்து புலம்பெயர் தமிழர்களிடத்தில் 2023 இல் இதற்கு அறிமுக விழா இடம்பெற்றமை இரட்டிப்பு மகிழ்ச்சி. இதனை லண்டன் விம்பம் ஏற்பாட்டில் ராஜா அண்ணா என்பவர் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தார். 


சிறுகதைகள் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டுமா? பொதுவாக சிறுகதைகளில் வர்ணனைகளும் இடம் பெறலாமா?

கட்டாயமாகப் பிரதிபலிக்கப்படல் வேண்டும். சமூகத்தின் தெரியாத பல பக்கங்களை, மனிதர்களின் பிரச்சினைகளைச் சொல்ல வேண்டும். ஒரு இலக்கியகாரராக, படைப்பாளியாக என் ஆயுதம் எழுத்துத்தான். அதில் யதார்த்தம்; நான் வாழும் சமூகத்தின் பிரதிபலிப்பு. என் மக்களின் இன்ப துன்பங்கள் பகிரப்படாதவிடத்து அவற்றின் இருப்பு கேள்விக்குள்ளாவதோடு படைப்பாளி எனச் சொல்லிக்கொள்வதன் பொருள் யாது என்ற கேள்வியும் எழுகின்றது. எல்லாக் கதைகளும் துன்பத்தையும் அழுகையையும்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. மகிழ்ச்சியை, வெற்றியைக் கொண்டாடுபவையாகவும் இருக்கலாம். ஆனால் யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும். 

அடுத்து வர்ணனைகள் பற்றிக் கேட்டிருக்கிருக்கிறீர்கள். ஒரு விடயத்தை எப்படி வாசகரிடம் கொண்டு செல்லலாம் எனும் போது இலக்கிய நயம், வர்ணனைகள் முக்கியம் பெறுகின்றன. துன்பியலைக்கூட வாசகர் மனதில் நிலைத்து நிற்கத்தக்கதான வெளிப்படுத்தல், வர்ணனை மூலம் சொல்லலாம். இனிப்பு தித்திப்பாக இருக்கும் என்று அதிகமாகச் சாப்பிட்டால் தெவிட்டுவதைப் போன்றுதான் வர்ணனையும் அளவோடு கச்சிதமாக, ஆனால் கனதியாகச் சொல்லிச் செல்லும் போது வாசகர் எங்கு சென்றாலும் அந்தப் படைப்பும் அவர் மனதோடு கூடவே பயணிக்கும். 


சிறுகதை நூல்களை மட்டுமே நீங்கள் வெளியீடு செய்து வருகின்றீர்கள். அப்படியானால் கவிதைகள் மீது உங்களுக்கு ஆர்வமில்லையா?

கவிதைகள் மீது அதிக ஆர்வமும் விருப்பமும் இருந்தாலும் அவற்றை இரசித்துப் படிப்பேன். கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறேன். ஆனால் இதுவரை நூலாக்கம் இடம்பெறவில்லை. சிறுகதைகளைத்தான் அதிகம் எழுதி வருகின்றேன்.


ஆரம்பகால எழுத்தாளர்களுக்கும் சமகால எழுத்தாளர்களுக்குமிடையே காணப்படும் வேறுபாடு குறித்து உங்களுடைய கருத்து என்ன?

ஆரம்பகால எழுத்தாளர்கள், எழுத்தாளர்கள் என அடையாளப்படுத்தப்படுவது கடினமாக இருந்தது. அவர்களது படைப்புக்களை வெளிக்கொணர்வதற்கான களங்கள் மிகவும் அரிதாகவே காணப்பட்டன. அவ்வாறே அவர்கள் படைப்புகளை வெளிக்கொண்டு வரும்போது, அதில் அவர்கள் சமூகத்திற்கு கையளிக்கும் போது காணப்பட வேண்டிய பொறுப்புணர்ச்சி மற்றும் எழுத்துக்களின் தெளிவு, விடயதானம் என்பன மிகவும் கவனமாகக் கையாளப்பட்டிருக்கும். ஆனால் தற்காலத்தில் எழுத்துக்களுக்கான களங்களும் அதிகம். எவரும் எதுவும் எழுதலாம் என்ற நிலையில் பாலை மட்டும் பருகும் அன்னத்தின் நிலையில் வாசகர்கள். இங்கு வாசகர்கள்தான் வாசிப்பைக் கூர்மைப்படுத்தி சிறந்த எழுத்துக்களை வாசிக்கும் போது சமூகத்தை மாற்ற முனையும் எழுத்தாளர் இனங்காணப்பட்டு நிலைநிறுத்தப்படுவார். இது உடனடியாக நிகழும் என்றில்லை. காலம் கடந்தும் வாழும் எழுத்துக்களே உண்மையான படைப்பாளியை இனங்காட்டும். வாசிப்பைக் கூர்மைப்படுத்தும் எழுத்தாளன் மேலும் தன்னை வளர்த்துக்கொள்ளலாம். அதுவே அவரை எக்காலத்திலும் சிறந்த படைப்பாளராக்கும்.


சமூக ஊடகங்கள் உங்கள் படைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றனவா?

தேவையேற்படுகின்றபோது சமூக ஊடகங்களை எனது படைப்பாக்கத்திற்கும் இலக்கியச் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்துகின்றேன். அவ்வாறே எனது இலக்கிய முயற்சிகளுக்கு தேவையானபோது அவை பங்களிப்பும் வழங்குகின்றன.


ஒரு ஆசிரியராக பணியாற்றிய காலங்களில் மாணவர்களிடையே எவ்வாறு வாசிப்பை ஊக்குவித்தீர்கள்?

பாடவேளையில் மாணவர்களே வாசிப்பதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவேன். வகுப்பாசிரியையாக கடமையுயாற்றிய காலங்களில் வகுப்பறை நூலகம் என சிறிதளவில் ஒழுங்கமைத்து வைத்திருந்தோம். மாணவர்கள் நேரம் கிடைக்கும்போது தமது வாசிப்பை மேம்படுத்தக் கூடியவகையில் அது உதவியாக இருந்தது. பாடசாலை நூலகத்தைப் பயன்படுத்துவதற்கு இயன்றவரை வழிப்படுத்தினேன். மாணவர்களை நேரடியாக வாசிப்பதற்குத் தூண்டுவதைவிடவும் மறைமுகமான கற்றற் செயற்பாடுகள் மூலமாக அவர்கள் வாசிப்பிற்குள் ஈர்க்கப்படும்போது அவர்கள் இயல்பாகவே வாசிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கக் கூடியதாக இருக்கும்.


பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஆண் சமூகத்திலிருந்து மட்டுமே வருகிறதது என்று சொல்ல முடியுமா?

நிச்சயமாக இல்லை, பெண்களாலும் இடம்பெறுகின்றது. குடும்ப வாழ்விலும் சரி, அலுவலகங்களிலும் சரி பெண்கள் மீதான ஒடுக்கு முறை பெண்களாலும் இடம்பெறுகின்றது. குடும்பத்தில் பெண் பிள்ளைகள் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும் என்ற பக்குவம் ஆண் பிள்ளைகள் மீதான வளர்ப்பிலும் காட்டப்பட வேண்டும். பெண் பிள்ளைகளோடு எப்படிப் பழக வேண்டும் என்ற பக்குவத்தை, அவர்களது உடலியல் மாற்றங்கள், அவர்களை மதிப்பு மிக்கவர்களாக நோக்கும் பக்குவம் என்பவற்றுடன் ஆண் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும். திருமண வாழ்விற்கும் அவர்கள் வயதால் மட்டுமல்ல மனதளவிலும் பக்குவப்பட்டவர்களாக வளர்க்கப்பட வேண்டும். 

இங்குதான் சில குடும்பங்களில் பாசம் என்ற பெயரில் இடம்பெறும் திணிப்புக்கள் இறுதியில் குடும்ப வாழ்வில் மனைவியை அடிமையாக்குவதாக மாற்றம் பெறுகிறது. அவ்வாறு அடிமையாக்கி வாழ்வதைப் பார்த்து ஷமகன் மனைவியை தன் கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறான்| என்ற எண்ணப் பாங்கு இன்னும் எம் சமூகத்திலிருந்து மாறவில்லை. இதை மாற்றுவதற்கு முதலில்  பெண்களின் மனநிலை மாறவேண்டும். ஒரே ஒரு விடயம்தான். திருமணம் செய்து மனைவியை அடிமையாக்குபவன் அடிமையின் கணவனாகிறான். திருமணம் செய்து மகாராணியாக மனைவியை அழகு பார்ப்பவன் அரசனாகிறான். இவ்வளவுதான். 

அடுத்து பெண்களே தம்மை பலவீனமானவர்களாக தன்னம்பிக்கை அற்றவர்களாக வெளிப்படுத்துவதும் இன்னொரு காரணம். மாற்றம் எங்களுக்குள்ளே இருந்துதான் ஏற்பட வேண்டும். தற்பெருமையும் ஆணவமும் தான் கூடாது. ஆனால் என்னாலும் இயலும் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் வேண்டும். குடும்ப வாழ்வில் பெண்களை மதித்து சம உரிமையுடன் நோக்கப் பழகிக் கொண்டால் தொழிற் துறையில் பெண்களுக்கான சம உரிமைக்கு குரல் எழுப்ப வேண்டிய தேவை இருக்காது.


பாடசாலை மாணவர்களுக்காக நீங்கள் எழுதி வெளியிட்டுள்ள தமிழ்ப் பாட மற்றும் தமிழ் இலக்கிய நூல்கள் தொடர்பாக கூற விழைவது? 

நான் ஆசிரியையாகப் பணியாற்றிய காலத்தில் மாணவர்களது கற்பித்தல் தேவைக்காகப் பல விடயங்களைத் தேடிச் சேகரிப்பேன். கற்றல் செயற்பாடுகளுக்கான தயார்ப்படுத்தல்களை சேகரித்து வைத்திருப்பேன். அந்த விடயங்களை மேலும் பல மாணவர்களும் தெரிந்து தமது கற்றலை விருத்தி செய்யலாம் என்ற நோக்கில் தமிழ் மொழியும் இலக்கியமும், இலக்கிய நயம், சைவநெறி ஆகிய பாடங்களுக்கான வழிகாட்டி நூல்களை எழுதியிருந்தேன். இவற்றோடு மாணவர்களது மொழி விருத்திக்கான மொழி வளம், கட்டுரைக் கதம்பம், ஆக்கத்திறன் மேம்பாட்டிற்கான இன்பத் தமிழ்; போன்ற நூல்களும் மாணவர்களது மொழியறிவு விருத்திக்குத் துணை நிற்கின்றன. மேலும் சாதாரண தர மாணவர்களுக்காக எனது சுய தயாரிப்பில் எழுதப்பட்ட மாதிரிப் பரீட்சை வினாத்தாள் தொகுப்பானது மாணவர்களுக்கு மிகவும் பயனுடையாத விளங்குகின்ற நூலாகக் காணப்படுகின்றது. இவை இலங்கையின் மிக நீண்டகால வெளியீட்டாளர்களான லங்கா புத்தகசாலை வெளியீடுகளாக வெளியிடப்படுகின்றமை எனக்குப் பெருமையாகவும் இருக்கின்றது.


இலக்கிய மாநாடுகளில் பங்குபற்றிய உங்கள் அனுபவங்கள் குறித்து?

இலங்கையிலும் இந்தியாவிலும் நடைபெற்ற இலக்கிய மாநாடுகளில் பங்குபற்றி கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறேன். 


ஈழத்துச் சிறுகதையுலக வரலாற்றில் உங்களது சிறுகதைகள் எவ்வாறான இடத்தினைப் பெற்றுள்ளது?

அதை இப்போது தீர்மானிக்க முடியாது. எனது படைப்புகள் வாசகர்களின் மனதைத் தொட்டு நிலைபெறும் காலம் வரை அது வாழும் என்று நினைக்கிறேன். என் படைப்பின் உள்ளடக்கம் எவ்வாறு என் சமூகத்திடம் இருந்து வந்ததோ, அதுபோலவே படைப்பின் ஆயுட்காலமும் என்னால் தீர்மானிக்க முடியாதது. ஆனால் சமூகத்தின் இன்பமும் துன்பமும் என் எழுத்துக்களால் வெளிக்கொணரப்படும்.


உங்களது அடுத்த படைப்பு எது பற்றியதாக அமையும்? எப்போது வெளிவரும் என்று கூற முடியுமா?

இப்போதுவரை சிறுகதைத் தொகுதிகளை வெளியிடுவதற்குத்தான் உத்தேசித்திருக்கிறேன்.


உங்களுக்கு அல்லது உங்களது படைப்புகளுக்காக இதுவரை பெற்றுக்கொண்ட பாராட்டுகள், பரிசுகள் குறித்துக் கூறுங்கள்? 

பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் எப்போதும் எங்களை ஊக்குவிக்கும் சிறந்த விடயங்கள்தான். பாடசாலைக் காலத்தில் நான் பெற்ற பரிசில்கள்தான் என்னை இனங்காட்டின. ஆனால் எழுத்துலகில் நான் பிரவேசித்தபின் விருதுகளுக்காக அனுப்புவதற்கு படைப்புகளை எழுதி வைத்திருப்பதில்லை. எனது சிறுகதைத் தொகுதிகளையும் அனுப்பவில்லை. அவ்வாறு அனுப்ப வேண்டும் என்று நினைப்பதுமில்லை. 

செம்பியன் செல்வன் நினைவாக அண்மையில் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கு இன்னொரு வ(லி)ழி என்ற எனது சிறுகதையை அனுப்பியிருந்தேன். அதற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. படைப்பை எழுதி சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் வாசித்து, பத்திரிகைகளுக்கோ சஞ்சிகைகளுக்கோ நான் அனுப்பிவிடுவேன். விருதுகளுக்காக எனது படைப்புகளை வைத்துக் கொண்டிருப்பதில்லை. வாசகர்கள் மனதில் சிறந்த எழுத்து என்ற இருப்பும் சமூகத்தில் சிறுமாற்றத்தையும் ஏற்படுத்துமாயின் அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகும்.


இலக்கிய வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடையாகப் பெறமுடியும். எங்களிடம் இப்போது வற்றிச் செல்வது வாசிப்புப் பழக்கமே. இதை வீட்டில் பெற்றோர் முன்னெடுத்தாலே போதும். பிள்ளைகளுக்கும் இயல்பான பழக்கமாகிவிடும். வாசிக்கச் சொல்லி பிள்ளைக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைவிட பெற்றோர் வாசித்து விடயங்களைப் பகிரும்போது பிள்ளைகளும் இலகுவாகப் பழக்கப்பட்டு வாசிப்பில் மூழ்கிவிடுவார்கள். வாழ்க்கையில் எப்போதும் எங்களுக்கு மன ஆறுதலைத் தருவது, தேடலை ஊக்குவிப்பது நூல்களே. எப்போதும் வாசிப்பைக் கைவிடாது இருக்க வேண்டும். இலக்கியங்கள் மனதுக்கு இதம் தருபவை. ஒவ்வொருவரும் தமது துறைக்கு அப்பால் பல விடயங்களையும் கற்றறிந்தவர்களாக இருக்க வேண்டும். மனிதாபிமானம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் வாழ்ந்தால் உலகம் மாற்றமடையும்.


இறுதியாக என்ன சொல்லப் போகின்றீர்கள்?

மகிழ்வான இத்தருணங்களை எனக்குத் தந்த தினகரன் பத்திரிகையின் இணைப்பிதழான செந்தூரம் இதழுக்கும் அதன் பிரதம ஆசிரியர் மற்றும் துணையாசிரியருக்கும் என்னை நேர்காணல் செய்த எழுத்தாளரும் பன்னூலாசிரியருமான ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்