பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, April 7, 2020

42. வஸீலா ஸாஹிர் உடனான நேர்காணல்

வஸீலா ஸாஹிர் உடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்



உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் பிறந்தது மாத்தளை, வாழ்ந்தது மினுவாங்கொடை. இப்போது வசிப்பதோ நீர்கொழும்பு. அழகின் அரங்கம் என் மகள் அஸ்ரிகா, அன்பின் அவதாரங்கள் ஆசிக், ஆதில், அசீம். இறைவன் எனக்களித்த பெரும் செல்வங்கள் இவர்கள்.

உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் படித்தது கல்லொளுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தான். எனது பாடசாலைக் காலத்திலேயே நான் வாசிப்பில் தீவிர ஆர்வம் காட்டி வந்தேன். பல கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று அந்தப் பாடசாலை நாட்களிலேயே நான் பல நூல்களை வாசித்தேன். இந்தப் பாடசாலைக் காலம் எனக்கு ஒரு பொற்காலமாகும்.


நீங்கள் எப்போது, எந்த வயதில் எழுத்துத் துறைக்குள் நுழைந்தீர்கள்? உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக ஆரம்பித்தது?


ஒவ்வொரு நாட்களும் நான் காத்திருந்தேன். என்னில் என் எழுத்துகள் எந்த வடிவத்தை செதுக்கப் போகின்றது என்று. என் எதிர்பார்ப்புகளின் கனவுகள் உறங்கிக் கொண்டுதான் இருந்தது. இப்படியாக காலம் நகர்கையில் முதன் முதலாக 1986 இல் எழுத்துத் துறையில் கால் பதித்தேன். என் எழுத்துக்கள் சிந்தாமணி வார ஏட்டில், 'சங்கீதா' என்ற புனைப் பெயரில் களம் கண்டன. என் கன்னிக் கதையான அந்த நிலவுக்குள் சில ரணங்கள், சங்கீதாவைத் தேட வைத்தது. அதன் பின்னர் நான் வஸீலா அபூபக்கர் என்று பயணித்தேன். தொடர்ந்து இன்றுவரை வஸீலா ஸாஹிர் ஆக, வலம் வருகின்றேன்.


நீங்கள் பல்வேறு வகையான ஆக்கங்களையும் எழுதத் தூண்டப்பட்ட சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் வௌ;வேறு மொழிகளைப் பேசினாலும் அவர்களுடைய இதயம் ஒரே மொழியில் தான் பேசுகிறது. அது கண்ணீராலும் புன்னகையாலும் ஆன மொழி. எல்லோருக்கும் பொது மொழி. திணிக்கப்படும் மொழி அல்ல. சுவாசத்தை போல் காதலைப் போல் சுயமாகச் சுரக்கும் மொழி. இந்தக் கண்ணீர் காயங்களின் இரத்தம். இந்த புன்னகை நம் பொது வெற்றிகளின் திருவிழாத் தீபம். இந்த தீபங்கள் என்னுள் தீயாக காயங்கள் பலவற்றை ஏற்படுத்தியது. நான் தூண்டப்பட்டேன். இருட்டில் ஒற்றை விண்மீன் போல் எத்தனை உள்ளங்கள் சோக விஷக் கண்களால் சுட்டெரிக்கப்படுகிறார்கள் என்பதனை நன்கு உணர்ந்தேன். அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே என் ஊக்கங்கள் ஆக்கங்களாக, கொண்டு வரப்பட்டது.


உங்களது சிறுகதைகளின் தனித்துவம் பற்றிக் குறிப்பிட முடியுமா?


தனித்துவம் என்று சொல்ல முடியாது. உணர்வுச் சுரத்தில் அவை கனமான கதைகள். வெளி உலகை பார்க்கும் கண்களை தேட வைக்கிறது. ஒரு விரத வேதனையை, சாதனை செய்யச் தூண்டுகிறது.

இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

01. நிலவுக்கு சில ரணங்கள் (2016 ஜுன்)
02. மொழியின் மரணம் (2016 டிசம்பர்)

ஆகிய 02 சிறுகதைத் தொகுதிகளையே நான் இதுவரை வெளியிட்டுள்ளேன். மொழியின் மரணம் என்ற சிறுகதை நூல் சென்னை பூவரசி வெளியீட்டகத்தினால் வெளிவந்தது குறிப்படத்தக்கது.


உங்கள் ''நிலவுக்குள் சில ரணங்கள்'' என்ற சிறுகதை நூலின் வரவு பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? இந்த நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

விண் மேகங்கள் மழை பொழியத்தான். என் கண் மேகங்கள், பொழிந்த முதல் மழை நிலவுக்குள் சில ரணங்கள். மொழி சமூகம் வளர்த்த நந்தவனம். ஒவ்வொரு சொல்லும் ஒரு மலர் - நிலவுதான். கவிதையை தூண்டும். ஆனால் அந்த நிலவுக்குள்ளே ரணங்கள் என்றால் - நிலவு தான் கவிதையை புனைய வேண்டும். தன்னையும் தான் மறந்து தாழ்போட்டுக் கொண்டு உறங்கும் அபலைகள். இன்பங்கள் இன்றி அன்றிலைப் போல் துணையை பிரிந்து அறுந்த நூல் போல் அவதிப்படும். அவலங்கள் பனி சுமந்து சோகத்தில் தலையசைக்கும் தாரகைகளின் தாபங்கள். பல்வேறு வேடங்களில், தங்களை ஒப்பனை செய்து வாழப் பழகிக் கொள்ளும். இதயங்களின் ஒப்பனையை நீக்கி, உண்மை நிலையை உணர்த்தும் சக்தி வலிமை என் எழுத்துக்களில் உண்டு.


உங்களது இரண்டாவது சிறுகதை நூலான ''மொழியின் மரணம்'' பற்றி என்ன சொல்வீர்கள்? ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்? இந்த நூலினூடாக நீங்கள் இலக்கிய உலகுக்கு குறிப்பாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

தண்ணீர் இரும்பை விட கனமானது. ஆனால் இரகசியமோ தண்ணீரை விடக் கனமானது. அது நெஞ்சுகுள்ளேயே இருக்கும் வரை நிம்மதி கிட்டாது. என் கதாபாத்திரத்தின் மனதின் சுமைகள், மரணமானது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.

எனது மொழியின் மரணம் சிறுகதைத் தொகுதி கடந்த 2016.12.03 இந்தியாவில் பூவரசி பதிப்பகத்தினால் கவிஞர் சல்மா அவர்களினால் வெளியிடப்பட்டது. முதல் பிரதி பேரா. கோவை மு.சரளா பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் அமிர்தம் சூர்யா வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் கவிதாயினி ஈழவாணி அவர்கள் இந்த நிகழ்வை நடத்த எனக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார்.

இந்த கதையை நாவலாக விரித்து எழுத வேண்டும் என்று இருக்கையில் இது சிறுகதையாக முடிந்தது. கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் அவசரம் போல என் காலங்களும் என்னை அவசரப்படுத்தியது. அதன்பின் இந்தக் கதை என் தோழி எழுத்தாளர் நஸீமா மூலம் எழுத்தாளர் ஜின்னா சார் மூலம் படைப்புக் குழு அமீரக வாசகர் வட்டத்தில் மகளிர் தின சிறப்பு தேர்வாக என்னுடைய மொழியின் மரணம் சிறுகதை தெரிவு செய்யப்பட்டது. பின் அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த நூலுக்கான விருதில் என்னுடைய சிறுகதை நூல் மொழியின் மரணம் தெரிவு செய்யப்பட்டது. 2017.03.18 ஆம் திகதி சென்னை மியூசிக் அகடமியில் இடம்பெற்ற விருது விழாவில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என். வள்ளி நாயகம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழக வேந்தர் கெல்வின் குமார் சிறப்புரை ஆற்றினார். சென்னை மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் இந்த விழாவில் வாழ்த்துரை வழங்கினார். இலக்கிய உலகம் அது ஒரு பெரும் சமுத்திரம். நான் ஒரு குட்டி மீன். சமுத்திரம் குட்டி மீனான என்னையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவா.


உங்கள் சிறுகதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?


நிச்சயமாக. துள்ளித் திரியும் பருவத்தில் துவண்டு போகும் துயரத்தில் துணையின்றி தூக்கமின்றி கண்ணீரை அருவியாக பொழிந்து கலங்கிய நெஞ்சோடும், பிசைந்த கைகளோடு திக்குத் தெரியா செல்லா காசுகளாக சொல்லால் கொல்லப்பட்டு துரத்தப்படும் அபலையான உங்களை நான் வடிக்கின்றேன். அவர்களின் துடிப்புக்களை கனவுகள் இமைபோல் வசிக்கும் கல்யாண கனவுகள் கைப்பிடி அளவு தானியம் விதைத்தால் தாரகை அளவு கதிர்கள் விளையாதோ? என்று பல தாரகைகளின் கனவுகள் தவிடுபொடியாக்கிய தசாப்தங்களை தட்டி எழுப்பும் என் எழுத்து. ஸ
எல்லோருடைய கண்ணீரும் நம் கண்ணீரில் இருக்கிறது. எல்லோருடைய புன்னகையும் நம் புன்னகையில் இருக்கிறது. இதை உணர்ந்து சமூகத்தில் சுமூகமாக எழுதுவதால் பல மாற்றங்களை நான் காண்கின்றேன். ஒரு வேதனை என்னுள் இருந்தது. அமைதியாக அதை உணர்கின்றேன். வெறும் வானத்தில் வானவில்லின் விலாசம் மேகத்தில் இல்லை. அதன் கண்ணீர்ச் சுமையில் தான் இருக்கிறது. நான் விலாசம் கொடுக்கின்றேன். சுமைகளை சுகமாகுகின்றேன். இருட்டில் அச்சத்திற்கு ஆறுதலாகவும் தனிமைக்குத் துணையாகவும் என் எழுத்துக்கள் மாற்றங்களை தருகின்றன.


சிறுகதைகள் எவ்வாறு படைக்கப்பட வேண்டும்? ஒரு சிறந்த சிறுகதை எவற்றைப் பிரதிபலிக்க வேண்டும்?

ஒவ்வொரு சிறுகதைகளுக்கும் தனித்தனி முகவரி வேண்டும். நான் எதைக் கூற வருகின்றேன் என்று என்னிடம் கதை கேட்பவருக்கு நன்கு புரிய வேண்டும். சமூகத்தைப் பொருத்தவரை பெண் என்பவள் ஓர் ஏழை, நடிகை. வாழ்க்கை நாடகத்தில் அவளுக்கு எந்தப் பாத்திரம் தரப்படுகிறதோ அதை அவள் முனுமுனுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பாத்திரத்தை அவள் வெறுமனே நடிக்கக் கூடாது. அவள் அந்தப் பாத்திரமாகவே மாற வேண்டும். கடைசிவரை கதை, வசனம், இயக்குதல் ஒப்பனை எல்லாமே சமூகம் தான். அவருடைய சொந்த விருப்பு வெறுப்புக்கு அதில் இடமில்லை. சமூகத்தின் கவலை எல்லாம் நாடகம் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதுதான். பொதுவாக என்னுடைய கதைகள் பெண்கள் படும் அவலங்களையும் அவமானங்களையும் தான் பிரதிபலிக்கின்றது. நான் கதை கூறும் பாங்கு அப்படித்தான். இருப்பினும் கதைகள் யாவும் யதார்த்தங்களை பிரதிபலிக்க வேண்டும் என்பதே முக்கியமான விடயமாகும்.


ஆரம்ப காலத்தில் கவிதைகளை எழுதிய நீங்கள் முதலில் சிறுகதை நூலை வெளியிடக் காரணம் என்ன?

அவனியில் அன்னையின் வயிற்றில் இருந்து அவதரிக்கும் முன்னே 4 மாத கருவாக இருந்த பொழுதே, என் அன்புத் தந்தை அபூபக்கர் காலமானார். தந்தையின் கரம் பற்றி நடைபோட நாட்டமில்லை. இருப்பினும் அந்த உன்னதமான உயர்ந்த மனிதனின் மகள் நான் என்று சொல்லிக்கொள்ள பெருமைபடுகின்றேன். காரணம் என் தந்தையும் ஒரு எழுத்தாளர். அந்த விருட்சத்தின் சிறு துளியே இந்த வஸீலா அபூபக்கர். கவிஞர், எழுத்தாளர் இந்தப் பெருமை என்னைப் பெற்றவர்கள் தந்தது. அன்பு உம்மா செகீனா, வாப்பா அபூபக்கர். காரணமும் அதுதான் கவிதைகள் என் மூச்சு என்றால் கதைகள் என் பேச்சு.


ஆரம்பத்தில் வானொலிக்கு பல்வேறு ஆக்கங்களை எழுதிய நீங்கள் பத்திரிகைத் துறையில் உங்களது ஆக்கங்களைக் களப்படுத்தி வந்ததற்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா?

என்னுடைய கவிதைகளை கவர வைத்த, காலஞ்சென்ற இராசையா ஆசிரியர் மற்றும் பலகத்துறை ஜெலீல் ஆசிரியர் இவர்களின் ஊடே ஊடுருவிய கவிதைகள் பிறர் மத்தியில் பாராட்டப்பட்டது. ஷஷஉன்னால் முடியும்' என்ற வாசகத்தின் வரப்பிரசாதமாக என் தமிழ்ப் பாட ஆசிரியை ஜெஸ்மினா கலீல் (புத்தளம்) என்னை கதை எழுத ஊக்குவித்தார். எழுதிய கதைகளை பிற மாணவர்களுக்கு வாசித்துக் காட்டி என்னை உயரப் பறக்கவிட்டார். இன்னும் என் நெஞ்சில் இவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பது உண்மை என் முயற்சியின் பயிற்சியாளர்கள் இவர்கள். இவ்வாறு எழுதிய படைப்புக்களை பத்திரிகையிலும் கலப்படுத்துவது காலத்தின் தேவையாகிவிட்டது.


இலக்கிய வடிவங்களில் கவிதைக்கும் சிறுகதைக்கும் இடையில் எந்த மாதிரியான வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

இறைவனின் அருட்கொடைகளில் எழுத்தும் ஒரு கொடை வரம் தான். கவிஞன், எழுத்தாளன், படைப்பாளிகள் ஒரு அபூர்வ சக்திகள் புதிய தரிசனங்களை தருகிறது. கவிதை வாழ்க்கையின் அகல நீளங்களை அளந்து சொல்கிறது, கதைகள். கவிதைகள் நம்மீது சுகந்தம் இறைக்கும் புதிய காற்றாய் ததும்பும் கதைகள் உலகை பார்க்கும் கண்களாய் கதை சொல்லும். இரண்டும் இரண்டு வகையானது.


இலக்கிய இரசனையுள்ளவர்கள் நூல்களை வெளியிடுவது வழமை. உங்களது நூல் வெளியீடுகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் யார்?

என்னுடைய எழுத்துக்களின் தந்தை, மூத்த எழுத்தாளரும் இருதுறை (சிறுகதை, கவிதை) விற்பனரும் எனது மதிப்புக்குரிய ஆசான் கலாபூஷணம் மூ. பஷீர், லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்கள் உபதலைவர் எம்.ஏ.எம். நிலாம், பிரதம ஆசிரியர் நவமணி தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அல். என்.எம். அமீன், மனித நேயன் இர்ஷாத், ஏ.காதர், கிண்ணியா அமீர் அலி, காவ்யாபிமானி கலைவாதி கலீல், சாய்ந்தமருது எம்.எஸ்.எம். ஷாகிர், மதனி உவைஸ், செயற்திட்ட உத்தியோகஸ்தர் ஹிஷாம் சுஹைல். என்னுடைய அருமை மகள் அஸ்ரிகா இப்படி கூறிக்கொண்டே போகலாம். எனக்கு முதல் எழுத தொடங்கியவர் என் சகோதரி ஜெமீலா அபூபக்கர். அவள் எழுதுவதைப் பார்த்து எழுதியவள் நான் இன்று என்னை பார்த்து பெருமைப்படுகின்றாள் என் சகோதரி ஜெமீலா.


பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றிய நீங்கள் மாணவர்களிடையே இலக்கிய வளர்ச்சியைத் தூண்ட என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

என் ஆசிரியர் வட்டத்துக்குள் பல வண்ணங்கள் இலக்கிய தாகத்துடன் என்னை வட்டமிட்டது உண்மை. அவர்களுக்கு அதிகளவு வாசிப்பை பழக்கியதுடன் நல்ல பல நூல்களை வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தினேன். மாணவிகளில் ஒரு சிலர் கதை, கவிதைப் போட்டிகளில் பங்குபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தேன். அதன் வெற்றிகளைக் கொண்டாட என்று அவர்களுக்கு மேடை அமைத்து பரிசுகளையும் பாராட்டுகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்த மாணவிகள் இன்றும் எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் ஆக்கங்களை பத்திரிகைகளில் பிரசுரித்து அவர்களை உற்சாகபடுத்தினேன். பல சிறுகதைகள் எழுதி அதை புத்தகமாக வெளியிட அந்த உள்ளங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


பெண் படைப்பாளிகளின் வருகைபற்றி என்ன சொல்வீர்கள்?

இறைவன் தனது படைப்புகளைப் பற்றி கூறும் பொழுது தான் சகல படைப்புகளையும் சோடி சோடியாக படைத்துள்ளதாக இறைவன் கூறுகின்றான். இவ்வுலகை கட்டியாழும் படைப்பினங்களின் மனிதனே முதலிடம் பெறுகின்றான். அதே தோரணையில் மனிதனும் ஆண், பெண் எனும் சோடிகளாக படைக்கப்பட்டுள்ளான். மனிதன் இப்பூவுலகில் வியாபித்து வாழ்வதுடன் தனது ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றான். இதில் புதுப்புது விஞ்ஞான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப அறிவு, விஞ்ஞானம், களஞ்சியம், விண்ணியல், மருத்துவம், கலை கலாசாரம், மொழி ஊடகம், தொலை தொடர்பாடல் போன்ற அனைத்தும் நாளுக்கு நாள் முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைந்து வருவது உள்ளங்கை நெல்லிக்கனி போல இவ் அபிவிருத்திகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் ஊடகமானது சமூக மாற்றத்திற்கும் சமூக அபிவிருத்திக்கும் இதன் பங்குதாரிகளாக ஆண், பெண் இரு பாலருக்கும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஊடகம் எனும் பொழுது. சமூக ஊடகங்களே முதல் இடம் வகிக்கின்றது. சமூக ஊடகம் எனும் பொழுது. ஊடகங்களை மாறுபட்டதாகவும் இலகுவாக கையாளக்ககூடியதாகவும் சகலரையும் சென்றடைய கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளமை பெண் படைப்பாளிகள் சகல துறைகளிலும் ஈடுபடுவதற்கு பங்களிப்பை செய்வதற்கும் உறுதுணையாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. முன்னைய காலங்களில் போன்றல்லாது தற்காலத்தில் அதிகமான பெண் படைப்பாளிகளும் கலைஞர்களும் பெண் ஊடகவியலாளர்களும் ஊடகம் எனும் களத்தில் அதிக ஈடுபாடையும் பங்களிப்புகளையும் செய்து வருகின்றார்கள். இந்நிலைமையானது மிகவும் வரவேற்கத்தக்கதாக இன்றைய காலகட்டங்களில் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது. பெண்கள் தமது சேவையை இப்பணிக்கு மிகவும் நிதானமாகவும் சூட்சுமமாக அவதானத்துடனும் நுட்பத்துடனும் பங்காற்ற வாய்ப்பு பெற்றுள்ளமை இதற்கான காரணங்களாகக் கூற முடியும். எனவே இன்றைய நவீன காலத்தில் இவ்வாறான சாதகமான சூழ்நிலைகளில்  பெண்கள் சிரமமின்றி இலக்கியம் படைக்க முடிகின்றது. இது வரவேற்கத்தக்கதாக அமைகிறது.


பொதுவாக கலைஞர்கள், பிரபலமானவர்கள் மக்கள் மத்தியில் பேசப்படுபவர்கள். ஆனால் அவர்களது நிஜ வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் சோகம் நிறைந்திருக்கும். இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

எல்லாக் கலைஞர்களும் தங்களுடைய அனுபவங்களின் ஊடாக தங்களுடைய வலியைக் கொண்டு படைப்புகளை உருவாக்குபவர்கள். தங்களுடைய அனுபவங்களின் ஊடாக மக்களுக்கு புதிய படிப்பினையும் புதிய பாதையையும் உருவாக்குபவர்கள் இவர்கள். கலைஞர்கள் அடிப்படையில் மென் உணர்வு கொண்டவர்கள். அவ் மென் உணர்வு என்பது கதை, கவிதை, கட்டுரை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்கும். அவ் மென் உணர்வு வளமானதாக இருக்கும். அவ் மென் உணர்வு என்பது தியாகம், துரோகம், வன்மம் இவைகளை விட்டுக்கொடுத்தல் மூலம் கலைஞர்கள் உருவாகிறார்கள்.

அடுத்து கலை உணர்வு மிக்கவர்கள் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதாந்த வருமானம் இருப்பதில்லை. அதனால்தான் 50 வீதம் சந்தோசம் 50 வீதம் சோகமாக இருக்கிறது. இன்னும் சில மேன்மை குணம் படைத்தவர்கள், சால்ஸ் இஸ்டைல், பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். பண்ணைக்கு சொந்தக்காரர். ஆனால் இவர் பிறருடைய சோகங்களை எழுதி இருக்கிறார். நிஜ வாழ்க்கையில் சந்தோசமாக இருந்தவர் ஆனால் எழுதுவது எல்லாமே சோகமாக இருக்கும்.


இளையவர்களிடையே இணையப் பாவணை அதிகரித்து வாசிப்புத்திறன் அருகிவரும் இந்தக் காலகட்டத்தில் வாசிப்பை மேம்படுத்த என்ன செய்யலாம்?

வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். இதை இன்றைய இளம் சமுதாயம் முழுமனதோடு ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அல்லது அவர்கள் இதுதொடர்பில் மறக்கடிக்கப்பட்டு உள்ளனர். புத்தகங்களைச் சுமந்த கைகள் இன்று மொபைல்களை சுமக்கிறது. உலக செய்திகளை வானொலி, பத்திரிகை என்று பார்த்த கண்கள் சிந்தித்து செயற்பட்ட சமுதாயம் போய் இன்று சீக்கிரம் என்று செயல்படுகின்ற சமுதாயம் ஆரம்பித்துள்ளது. வாசிப்பதற்கோ நேரமில்லை, நேசிப்பதோ மொபைல், இதில் யோசிக்க எங்கே அவர்களுக்கு நேரம்.


பல தசாப்த இலக்கிய வாழ்வில் கிடைத்த வரவேற்புகள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் கூற முடியுமா?

எனக்கு பல்வேறு வரவேற்புக்கள், பரிசுகள், விருதுகள் கிடைத்துள்ளன. அதில் அமெரிக்க பல்கலைக்கழக விருது, இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வக விருது ஆகியவற்றையே நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னுடைய எழுத்துக்களில் நேசிக்கும் மக்களை அதிகரிக்க வேண்டும். வெளிநாடுகளில் புத்தகங்களை வெளியிட வேண்டும். அண்மையில் குவைத் போக இருக்கின்றேன். தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் என்னுடைய நாவல் 'ஊசி முனை காயங்கள்|| ஆகும். இதனை விரைவில் வெளியிட இறைவன் அருள்புரிய வேண்டும். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.

வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு தாங்கள் கூறும் செய்தி என்ன?
இருள் ஒளியை அனுமதிக்க வேண்டும். அல்லது இருள் இருளாகவே இருக்கும். கற்கள் விழுந்து கொண்டேயிருக்கும், குளம் கலங்கிக் கொண்டே இருக்கும். சேறாகி நாற்றம் எடுக்கும். உண்மையாக முயற்சி செய் உயர்வடைவாய். உன்னை நீ அறிந்தால் உலகம் தானே உன்னை அறிந்து கொள்ளும்.

நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்

41. இஸ்மத் பாத்திமா அவர்களுடனான நேர்காணல்

கவியரசி எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

பஸ்யால கவியரசி எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா ஒரு அதிபர்;, கவிஞர், எழுத்தாளர். இலக்கிய கலை கற்றல் பிரதேச மட்ட போட்டி நிகழ்வில் ஒரே தடவையில் தமிழ், ஆங்கில மொழிகளில் 09 போட்டிகளில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்தவர். அத்தோடு 'இரண்டும் ஒன்று', 'புதையல் தேடி' ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டு பிரபல்யமானவர். மும்மொழித் தேர்ச்சியும் சிறந்த நிருவாகத் திறனும் கொண்டவர். அவருடனான நேர்காணலை தினக்குரல் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். 

'நம்மவர்களின் இலக்கிய இரசனை பெரிதாக செறிவை அடைந்துள்ளதாக எண்ணத் தோன்றவில்லை'


உங்களுடைய குடும்பப் பின்னணி, பாடசாலை வாழ்க்கை, தொழில் அநுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

குருனாகல், பானகமுவயைப் பிறப்பிடமாகக் கொண்டு திருமணத்தின் பின் பஸ்யாலையை வசிப்பிடமாகக் கொண்டு ஆங்கில ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக அதன் பின் தற்போது பஸ்யாலை மே.மா/மினு/ எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றுகின்றேன். 
நான் ஓய்வு பெற்ற அதிபரும் சமாதான நீதிவானுமான அல்ஹாஜ் ஏ.சீ. செய்யது அஹமது அவர்களதும் மர்ஹூமா ரஹ்மா உம்மா அவர்களதும் ஏழு பிள்ளைகளில் நான் 6 ஆவது புதல்வியாகவும் இருக்கின்றேன். எனது அன்புக் கணவர் என்னைப் போலவே களுத்துறை பஸ்துன்ரட்ட கல்விக் கல்லூரியில் கல்வி பயின்று விசேட சித்தி எய்தி ஆங்கில ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராகக் கடமையாற்றியவர். தற்போது தர்கா நகர் ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தில் முகாமையாளராகக் கடமையாற்றுகின்றார். எங்களுக்கு ஒரே மகன் எம்.ஆர். அகீல் அஹமத், தரம் 6 இல் மே.மா/மினு/ பாபுஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றார். 

பாடசாலை வாழ்க்கை எனும் போது எனக்கு பல பாடசாலைகளில் பல மாவட்டங்களில் கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிட்டியது. தரம் 01 தொடக்கம் 04 வரை எனது பிறப்பிடமான பானகமுவையில் வ.மே.மா.கு.இப். அந்நூர் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்றேன். தரம் நான்கு வரை ஊர்ப் பாடசாலையிலேயே கல்வி கற்று விட்டு தரம் ஐந்தில் பஸ்யாலை மே.மா/மினு/ நாம்புளுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் (தற்போது பாபுஸ் ஸலாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் என அழைக்கப்படுகிறது) கல்வி பயின்றேன். 

இங்கு அல்லி கம்பனியின் உரிமையாளரும் ஆசிரியர் அல்ஹாஜ் மர்ஹூம் எம்.ஆர்.எம். ரில்வான் அவர்களது தனியார் பாடசாலையில் சேர்ந்து ஆங்கிலத்தை கற்றுக் கொண்டேன். இங்குதான் ஆங்கிலக் கல்வியின் அத்திவாரம் சரியாக கற்க வாய்ப்புக் கிடைத்தது எனலாம். இங்கு தரம் ஏழு வரையே கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பின்னர் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் வரை எனது ஊர்ப் பாடசாலையான வ.மே.மா/கு/இப்/ அந்நூர் முஸ்லிம் மஹா வித்தியாலயத்திலேயே கற்றேன். அப்போது க.பொ.த. (சா/த) பரீட்சையில் 08 பாடங்களே இருந்தன. ஆங்கிலத்தில் விசேட சித்தியும் மற்றைய 07 பாடங்களில் திறமைச் சித்தியும் பெற்றேன். உயர் தரக் கல்வியை வணிகத் துறையில் தொடர ம.மா/க/ மடவளை மதீனா தேசிய பாடசாலைக்குச் சென்றேன். உயர் தரத்தில் ஒரு A சித்தியும் 3C சித்தியும் பெற்றேன். 
அதனைத் தொடர்ந்து களுத்துறை பஸ்துன்ரட்ட கல்விக் கல்லூரியில் அனுமதி பெற்று அங்கே ஆங்கிலக் கல்வி கற்று அதில் விசேட சித்தி பெற்று ஆங்கில ஆசிரியராக குருனாகல் பரகஹதெனிய தேசியப் பாடசாலையில் முதல் நியமனத்தைப் பெற்றேன். திருமணத்தின் பின்னர் மே.மா/கம்/ நாம்புளுவ பாபுஸ் ஸலாம் மஹா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தேன். அதன் பின்னர் ஆசிரிய ஆலோசகர் போட்டிப் பரீட்சையில் தெரிவாகி கம்பஹா மினுவாங்கொட வலயங்களில் ஆசிரிய ஆலோசகராக சேவையாற்றினேன். அதனைத் தொடர்ந்து அதிபர் போட்டிப் பரீட்சையையும் எழுதி அதில் தெரிவாகி திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் சிறந்த ஒரு பிரதி அதிபராகக் கடமையாற்றினேன். 
அதனைத் தொடர்ந்து 1000 பாடசாலைகள் திட்டத்தின் கீழ் திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு புதியதொரு பாடசாலையாக தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலை என ஆரம்பிக்க கடும் போட்டிக்கு மத்தியில் அதிபர் எனும் தலைமைத்துவத்தை ஏற்று நடாத்தும் பாக்கியம் எனக்குத்தான் கிடைத்தது. அதன் பின்னர் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் உள்வாரியாகச் சென்று 03 வருடங்கள் ஆங்கில மொழி மூலம்  கற்று பட்டதாரியாகும் பாக்கியம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சேவையின் தேவையின் நிமித்தம் அப்போது பெண் அதிபர்கள் இல்லாததனால் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்திற்கு அதிபராக செல்ல வேண்டி ஏற்பட்டது. அந்தப் பாடசாலையில் மிகவும் விருப்புடனும் சகலரதும் ஒத்துழைப்புடனும் பணி புரிந்ததில் குறுகிய காலத்திலேயே சிறந்த பெறுபேறு பெற்று சாதாரண தரத்தோடு இருந்த பாடசாலையை உயர் தரத்திற்கு மாற்றும் பாக்கியம் கிட்டியது. இந்த விடயத்தில் நிறையவே பல போராட்டங்கள் மேற்கொண்டு வெற்றி வாகை சூடியதில் மகிழ்ச்சி. இருப்பினும் பல கண்களுக்கும் உள்ளங்களுக்கும் வருத்தம் ஆதலால் மனக் கசப்புக்களுடன் அப்பாடசாலையில் இருந்தும் வெளியேறி எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்ற இணைந்து கொண்டேன். இங்கு தான் எனது முதல் கவிதை நூல் இரண்டு ஒன்றினை வெளியிட்டேன். இங்கு சேவை செய்யும் காலகட்டத்தில் எனக்கு அதிபர் தர உயர்வு (SLPS-2) பெற்றேன். இங்கு கடமை புரியும் காலப் பகுதியில்தான் இ.ஒ.கூ.தா. முஸ்லிம் சேவை செய்தி மஞ்சரியில் பல உரைகளை ஆற்றும் சந்தர்ப்பம் கிட்டியது. இங்கிருந்து எனது சொந்த விருப்பிலேயே களுத்துறை மாவட்டம் சீனன் கோட்டை ஆரம்பப் பிரிவு பாடசாலையின் அதிபராக இணைந்து குறுகிய காலப் பகுதியில் சிறந்த சேவையாற்றி பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி அலிகார் மகா வித்தியாலயத்தில் சேவை செய்ய இணைந்து கொண்டேன். இங்கு தான் எனது இரண்டாவது கவிதை நூல் 'புதையல் தேடி'யை வெளியிட்டேன். 
அதன்பின் சேவையின் தேவையின் நிமித்தம் எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராக 20.02.2020  முதல் எனக்குப் பதவி உயர்வு கிடைத்து சேவையாற்றி வருகிறேன்.

பாடசாலை அதிபராகக் கடமையாற்றும் நீங்கள், கவிதைத் துறைக்குள் எவ்வாறான சூழ்நிலையில் பிரவேசித்தீர்கள்?

பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் நான் கவிதைத் துறைக்குள் திடீரென பிரவேசிக்கவில்லை. நான் படிக்கும் காலங்களிலிருந்தே எனக்கு கவிதையை இரசிப்பதிலும் லயிப்பதிலும் படைப்பதிலும் பெருத்த ஈடுபாடு இருந்தது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் என்னைத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தி கவிதைகளை பத்திரிகைக்கு அனுப்ப, பிரசுரிக்க அதற்கான வழிகாட்டுதல்கள் தூண்டுதல்கள் கிடைக்கவில்லை. 

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைத்த பொழுது மாணவர்களின் அடைவுகளை நவமணியின் பிரதம செய்தியாசிரியர் சகோதரர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ஸாஜஹான் அவர்கள் உடனுக்குடன் பிரசுரித்துத் தருவார்கள். இதில் பெரிய உற்சாகம் எம் எல்லோருக்கும். ஒரு நாள் எனது ஊரைச் சேர்ந்த வேறு பாடசாலை மாணவி ஒருவரின் வெற்றியினை பத்திரிகையில் பிரசுரித்து தருமாறு எழுதிய வரிகளே எனது முதல் கவிதை 'இடங்கொடுங்கள் இலைமறை காய்களுக்கு' இக் கவிதையில் அந்த மாணவியின் வெற்றியைப் பிரசுரித்து தருமாறு தான் எழுதிக் கேட்டிருந்தேன். இதனை படித்த பின் நவமணியின் பிரதம ஆசிரியரான சகோதரர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ஸாஜஹான் அவர்கள்  ''இது அழகான கவிதை ஒன்று.. பத்திரிகையில் பிரசுரிக்கவ?'' என்று கேட்டார்கள். நானும் "சரி" என்றதும் அடுத்த நாளே 27.03.2017 புதன் கிழமை நவமணிப் பத்திரிகையில் அந்தக் கவிதை பிரசுரமானது. சொல்ல முடியாத மகிழ்ச்சி எனக்கு. 

ஒரு அதிபரின் உள் உறங்கியிருந்த திறமையை இனங்கண்டவர் ஒரு பத்திரிகையின் செய்தியாசிரியர். பிறகு வாராந்தம் எனது கவிதைகள் - பாடசாலையைப் பற்றி, இயற்கையைப் பற்றி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் அனர்த்தங்கள் பற்றியெல்லாம் எழுத ஆரம்பித்தேன். அத்தோடு படிப்படியாக தினகரன், விடிவெள்ளி, சுடர் ஒளி, மெட்ரோ நியூஸ் போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளான பூங்காவனம், அல்ஹஸனாத், ஞானம், அகரம், இந்திய சஞ்சிகை, உதயம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை, முகநூல், இணையத்தளம் போன்ற பல ஊடகங்களிலும் எனது கவிதை விரிவாக்கம் பெற்றது. கனதியானகவும் யதார்த்தமானதாகவும் பேசப்படுபவையாகவும் எனது கவிதைகள் திகழ்ந்தன. இன்னும் திகழ்ந்து கொண்டு இருக்கின்றது. 


உங்கள் நூல் வெளியீடுகள் பற்றி என்ன கூறுவீர்கள்?

நான் எனது முதலாவது கவிதையை வெளியிட்ட நாளில் இருந்தே கவிதைகள் பிரசுரமான பிரதிகளை அழகாகக் கோவைப்படுத்தி சேகரித்து வைத்து வந்திருந்தேன். ஒரு தடவை அதிபர்களின் விருதிற்காக விண்ணப்பப் படிவம் நிரப்பும் போது ஒரு விடயம் என்னை விளிப்படையச் செய்தது. 'நீங்கள் வெளியிட்ட நூல்கள்...?' எனவே அதனை நிரப்பும் போது நூல்கள் எதுவும் நான் வெளியிட்டிருக்கவில்லை. இதுவே எனக்கு நூல் வெளியிடும் ஆவலைத் தூண்டியது. அத்தோடு 27.09.2017 இல் திடீரென எனது தாயார் இவ்வுலகை விட்டும் விடை பெற்றதையடுத்து தந்தையின் முன் எனது நூலை வெளியிட்டு அவர்களை மகிழ்விக்க வேண்டும், இலக்கியத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் என தீராத அவாவில் மிகவும் வேகமாக விவேகமாக எனது முதலாவது படைப்பாக 'இரண்டும் ஒன்று' என்ற நூலை 84 சிறியதும் பெரியதுமான கவிதைகளாக 132 பக்கங்களைக் கொண்ட புத்தகமாக அதனை வெளியிட்டேன். இறைவனின் அருளால் நான் செய்த முயற்சியின் படியே தந்தைக்கு அந்தப் புத்தக வெளியீட்டு சந்தோசத்தைக் கொடுத்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தேன். இறைவனுக்கே எல்லாப் புகழும். 

எனக்கு ஏற்கனவே புத்தகம் வெளியிட்ட அனுபவங்கள் ஏதும் இல்லாததனால் ISBN இலக்கம் எடுத்தல் மற்றும் இன்னோரன்ன வேலைகளைச் செய்ய எனக்கு வழிகாட்டியவர் கிண்ணியா - 07 ஐச் சேர்ந்த கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் அவர்கள். எனது இந்த முதலாவது நூல் முதலாவது கவிதை பத்திரிகையில் வெளியிட்டு எட்டே மாதங்களில் வெளியிட்ட நூலாகும். எட்டு மாதக் குழந்தை என்பது குறை மாதமாக இருந்தாலும் 'இரண்டும் ஒன்று' பிரசவத்தில் எந்தக் குறையுமில்லாமல் அங்க சம்பூரணமாகவே இருந்தது. 

இரண்டாவது நூல் 'புதையல் தேடி' என்பது தேடிப் பெற்ற புதையலாகவே எனக்குத் தெரிகிறது. அறிவையும் நிறைய மனித உறவுகளையும் இந்த நூல் மூலம் புதையலாகப் பெற்றுக் கொண்டேன். நான் பெற்ற அறிவு அநுபவம், ஆளுமையை 'புதையல் தேடி' எனும் வடிவத்தில் நூலாக சமூகத்தின் கரங்களில் சேர்த்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நூல் வெளியீடு என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. அந்தக் கஷ்டத்தைத் தாங்கி முழுமையாகப் போராடியே வெற்றியைப் பெற்றுக் கொண்டேன். ஆண்டுகள் பல கவிதை எழுதுவோர்களுக்கு மத்தியில் குறுகிய ஒரு காலப் பகுதியில் இரண்டு கவிதைப் புத்தகங்களை வெளியிடக் கிடைத்தமை பெரிய பாக்கியமாகும். இது எனது முயற்சிக்குக் கிடைத்த தக்க பலன் எனக் கருதுகிறேன். இதில் எனக்கு அளவேயில்லா ஆனந்தம். எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஒரு அதிபராக கடமையாற்றிக் கொண்டு இவ்வாறு கலையோடு தொடர்பு பட்டிருப்பதானது எதிர்கால சந்ததியினரும் இலக்கியத் துறையில் பயணிக்க ஒரு சிறந்த வழியாகக் கருதுகிறேன். 


'இரண்டும் ஒன்று' கவிதைத் தொகுதி குறித்தும் இந்தப் பெயரைத் தெரிவு செய்வதற்கான காரணத்தையும் குறிப்பிட முடியுமா?

'இரண்டும் ஒன்று' என்பது இந்த நூலில் வரும் ஒரு கவிதையின் தலைப்பாகும். இந்தத் தலைப்பு மிகவும் சுருக்கமாகவும் மிகவும் வித்தியாசமாகவும் இருந்தது. இது எனக்குப் பிடித்திருந்தது. இந்தத் தலைப்பைச் சொல்லும் போதே மனதில் பதிவதாகவும் மிகவும் குறுகியதாகவும் தோன்றியது. 'இரண்டும் ஒன்று' என்றால் என்ன, எதைப் பற்றி அந்தப் புத்தகம் உள்ளது, அதில் உள்ள கவிதைகள் என்ன சொல்கின்றன என்ற வகையில் பல கேள்விகள் வாசகர்கள் மனதில் எழும்புகின்றன. அதனால் தான் இந்தத் தலைப்பினைத் தெரிவு செய்தேன். 


'புதையல் தேடி' கவிதை நூலின் கருப்பொருட்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?

புதையல் தேடி கவிதை நூலின் கருப்பொருட்களாக சமூகப் பிரச்சினைகள், இயற்கை, பெண்ணியம், யதார்த்த நிகழ்வுகள், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், மனதை உறுத்தும் சமூக நிகழ்வுகள், உண்மைச் சம்பவங்கள், இழப்புகள், பாசம், பிரிவினைகள் போன்ற இன்னோரன்ன விடயங்களை உள்ளடக்கியுள்ளன.

கவிதைகளினூடாக நல்ல மனித பண்புகளை மக்கள் மனதில் விதைக்கலாம். இயற்கையோடு ஒன்றித்து வாழும் இரசனையை சமூக மாற்ற சீர்திருத்தங்களை மாத்திரமன்று எதை எல்லாம் மாற்ற வேண்டுமோ அந்த விடயங்களையெல்லாம் ஒரு சிறந்த கவிதையூடாக மாற்றலாம். நல்ல மனித பண்புகளை மனித மனங்களில் அன்பாக பண்பாக விதைக்கலாம். ஆதலால் தான் அன்பும் பண்பும் குறைந்து செல்லும் கால ஓட்டத்தில் அதிகளவு மனித பண்புகளை, நாகரிகத்தை வளர்க்கும் வகையில் எனது கவிதைகள் அமைந்துள்ளன. 


உங்களது கவிதை நூலின் ஊடாக வாசகர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்திகள் என்ன?

கவிதை நூலில் உள்ள கவிதைகளை வாசித்து அதன் கருத்துக்களை தலைமேற்கொண்டு ஒழுகினால் சிறந்ததொரு சமூகம் உருவாகும். சிறந்த தேசத்தை அதன் ஊடாக கட்டியெழுப்பலாம். வாசிப்பதானது எப்போதும் மனித நேசிப்பை உண்டு பண்ணும். இதனால் ஒரு ஐக்கியமான சூழலும் சமூகமும் உருவாகும் என்பதனையே சமூகத்திற்கு வாசகர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன். 


கவிதைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கருகின்றீர்கள்?

கவிதைகள் கவிதைகளாக இருக்க வேண்டும். அவை எப்போதும் சுருக்கமாகவும் ஆழமான கருத்துக்களைக் கொண்டதாகவும் முக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். நல்ல கவிதை எனும் போது உணர்ந்து அனுபவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். கவிதையானது மனிதனின் உணர்வலை. எனவே அதனை வாசிக்கும் போது அபூர்வமான சிந்தனையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். கவிதைக்கே உரிய உயரிய சோடிக்கும் தன்மை கொண்ட உவமை, உருவகம், படிமம், குறியீடு என்பன தேவைக்கு ஏற்ப இடம், பொருள், ஏவல் அறிந்து பயன்படுத்தப்படுவதாக வாழ்வின் உலகின் இயற்கையின் மறைந்திருக்கும் புதிர்களை அவிழ்த்து விடுவிப்பதாகவும் உள்ளத்தை உள்ளபடி சொல்வதாயும் கவிதை என்பது கருத்துச் செரிந்ததாக இருக்க வேண்டும். மொத்தத்தில் கவிதைகள் கவிதைகளாக இருக்க வேண்டும்.  

ஒரு படைப்பாளன் என்பவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு படைப்பாளன் தனது எழுத்துக்கள், கருத்துக்கள், செயல்கள் யாவும் ஒன்றித்த மனிதனாக இருக்க வேண்டும். ஒரு படைப்பாளன் என்பவன் நல்லவனாக திறந்த மனதுடன் பழகுபவனாக பலருக்கும் பல விதத்திலும் உதவக் கூடிய பரந்த மனம் கொண்டவனாக இருக்க வேண்டும். தனக்கு அருளாக வழங்கப்பட்டிருக்கும் அறிவு, ஆற்றல் என்பவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடியவனாகவும் மற்றவர்களுடைய படைப்புக்களைப் பாராட்டத்தக்கவனாக பெருந்தன்மை கொண்டவனாகவும் இலக்கியப் படைப்புக்களை எந்தப் பாகுபாடுமின்றி வளர்க்கக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். சகல விதத்திலும் திறமைசாலியாகவும் இருத்தல் வரவேற்கத்தக்கது. 

சமகால இலக்கியவுலகு, இலக்கிய ஆர்வலர்கள், இலக்கிய ஆளுமைகள், இலக்கியங்களின் வருகை பற்றி தங்களுடைய பார்வை எப்படி?

சமகால இலக்கியவுலகில் இலக்கிய ஆர்வலர்கள், இலக்கிய ஆளுமைகள், இலக்கியங்களின் வருகை என்பன அன்றாடம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஒவ்வொருவரும் அவரவர்களது திறமைகளுக்கு ஏற்றாற் போல் இலக்கியம் படைக்கின்றனர். இலக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் இலக்கியம் பேசப்பட வேண்டும். பலராலும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு கருத்துக்கள் பயன்பட வேண்டும். ஆதலால் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அதேநேரம் இலக்கியப் படைப்பாளிகள் சமூகத்தில் நின்று நிலைக்க அர்ப்பணிப்புடனான சேவையின் தேவை முக்கியமாகும். 

தமிழில் கவிதை நூல் வெளியிட்ட நீங்கள் உங்களது ஆங்கில மொழிப்புலமை காரணமாக வேறு என்ன செய்ய உத்தேசம்?

தமிழில் கவிதை நூல் வெளியிட்ட நான் எனது ஆங்கில மொழிப் புலமையை வைத்து சமூகத்திற்கு கற்பித்தல் பணியினைச் செய்தாலும் ஆங்கில சிறுவர் கதைகள், ஆங்கில கவிதைத் தொகுப்பு, நூல்கள் மொழிபெயர்ப்பு, பாடசாலைக் கல்விப் புலத்துடன் தொடர்புபட்ட பயிற்சிப் புத்தகங்கள் போன்றன அச்சிட்டு மாணவர் சமூகத்திடம் கரம் சேர்க்க வேண்டும் என்பது எனது அவா.  


தாங்கள் அதிபராகக் கடமையேற்றதும் கல்லூரியில் நடந்த முன்னேற்றங்கள் அபிவிருத்திகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் பல பாடசாலைகளில் அதிபராகக் கடமையேற்று சேவை செய்துள்ளேன். அந்த வகையில் எனது சேவையில் முதற் தடவையாக அதிபராகவும், திஹாரிய மே.மாÆகம்Æ தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் முதலாவது அதிபராகவும் பொறுப்பேற்று நடாத்தினேன். ஒரு சிறிய காலப் பகுதிக்குள்ளேயே முதற் தடவையாக 18 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தார்கள். அந்தப் பதிவு இன்னும் முறியடிக்கப்படவில்லை. 

அடுத்து கஹட்டோவிட்ட மே.மா/கம்/ கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் அதிபராகப் பொறுப்பேற்று உயர்தர வகுப்புக்களை பெறும் இலக்கோடு உயரிய எண்ணத்தோடு செயல்பட்டேன். எனது இலட்சியம் போன்றே கணித பாடத்தோடு 74 வீதமான மாணவர்கள் சித்தி எய்தி உயர்தரம் செய்ய தகுதி பெற்றனர். எனவே அதே வருடம் க.பொ.த உயர் தரத்தை (கலை) பெற்றுக் கொடுத்த திருப்தியும் மகிழ்ச்சியும் எனக்கு நிறையவே உண்டு. 

அடுத்ததாக மே.மா/களு/ சீனக்கோட்டை ஆரம்ப பாடசாலையில் மிகவும் குறுகிய காலமாக 10½ மாதங்கள் சேவை செய்ததில் புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரு மாணவி சித்தி எய்தினார். அத்தோடு, பாடசாலை கல்வி, கலை, இணைப்பாட விதான செயற்பாடுகள் மற்றும் ஒழுக்க விழுமியங்கள் பாடசாலைக்கு நேர காலத்தோடு மாணவர்கள் வருதல், பெற்றார்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகளது ஒழுத்துழைப்பு என்பன மிகைத்துக் காணப்பட்டது. ஒரு குறுகிய காலப் பகுதியில் பாடசாலை அனைத்து விடயங்களிலும் அழகு பெற்றது. உயர் நிலையை அடைந்தது. அந்தத் திருப்தியும் மனமகிழ்ச்சியும் நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கிறது. 

அதே நேரம் பிரதி அதிபராக: திஹாரிய மே.மா/கம்/ அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி மற்றும் கல்எளிய மே.மா/மினு/ அலிகார் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலும் மாணவர்களது கல்வி கலை இணைப் பாடவிதான செயற்பாடுகளின் வளர்ச்சி ஒழுக்கம் போன்றவற்றிற்காகவும் பெரிதும் சேவையாற்றியுள்ளேன். 

தற்போது அதிபர் சேவையின் தேவை கருதி மே.மா/மினு/ எல்லலமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடந்த 20.02.2020 அன்று கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டேன். தற்போது சேவையாற்றும் இந்தப் பாடசாலைக்கும் உயர் தரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனும் அவாவுடன சேவை செய்கிறேன். இத்தகைய வெற்றிகளுக்கு என்னோடு ஒன்றித்து நின்று கடமை புரிந்த ஆசிரிய ஆசிரியைகளுக்கும், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரியப்படுத்துகின்றேன். அதேவேளை கலைத் துறையில் எனக்கு நிறையவே ஈடுபாடு இருப்பதனால் எனது ஆசிரியர் குழாம், மாணவர்கள் யாவரும் கவிதை இரசனையில் ஈர்க்கப்பட்டார்கள். மாணவர்களுக்கு குறிப்பாக கவிதைத் துறையில் ஊக்குவிப்பை நிறையவே கொடுத்து மாணவர் மன்றங்களில் காலைக் கூட்ட நிகழ்வுகளில் கவி பாட களமமைத்துக் கொடுத்ததுண்டு. பல போட்டி நிகழ்வுகளில் பங்கு கொள்ள வழி அமைத்துக் கொடுத்ததுண்டு. அத்துடன் பாடசாலை காட்சிப் பலகையிலும் மாணவர்களது ஆக்கங்களான கவிதை, கதை, கட்டுரை, சித்திரங்களை காட்சிப்படுத்தி ஊக்குவிப்பதுண்டு. இதனால் மாணவர்கள் எனக்கு மிகுந்த அன்பும் மதிப்பும் மரியாதையும் நிறையவே தருவார்கள். இதனால் எனக்கு எப்போதுமே சந்தோசம் தான். 

உங்களது கலைப் பயணத்தில் ஊக்குவிப்பவர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

எனது கலைப் பயணத்தில் ஊக்குவிப்பவர்கள் எனும் பட்டியலில் பலரை நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். முதலில் எனது கவிதையை நவமணியின் பக்கங்களில் நவமணியின் பிரதம செய்தியாசிரியர் சகோதரர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். ஸாஜஹான் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். அவர் எனது கவித் திறமையை இனங்கண்டு பத்திரிகையில் பிரசுரித்ததனால் தான் இன்று இலக்கியத்திற்கு இரண்டு படைப்புக்களைச் சேர்க்க முடிந்தது. 

அடுத்ததாக எனது அன்புக் கணவரும் தர்கா நகர் ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளருமான எம்.ஏ.எம். றிப்தி அவர்கள் எனது கவிதை பிரசுரமாகும் பிரதிகளை மிகவும் விருப்போடு வாங்கிக் கொடுப்பவர். அடுத்து எனது அன்பு மகன் எம்.ஆர். அகீல் அஹமத் எனது கவிதைகள் தாங்கி வரும் பிரதிகளை பத்திரமாக எடுத்து வைப்பவர். மேலும் குடும்ப அங்கத்தவர்கள் மேலும் எனது இரண்டு நூல்களும் நூலுருப் பெறுவதற்கு மிகவும் ஒத்துழைப்பு நல்கியவர் கிண்ணியா - 07 ஐச் சேர்ந்த கலாபுஷணம் பீ.ரீ. அஸீஸ் அவர்கள். மேலும் சகல பத்திரிகை உதவியாசிரியர்கள் கலாபூஷணம் நூருல் ஐன் நஜ்முல் ஹூஸைன், கொழும்பு வகவம் அங்கத்துவ கலைஞர்கள், தர்கா நகர் ஓய்வு பெற்ற அதிபர் அரும்பு ஆசிரியர் ஹாபிஸ் இஸ்ஸதீன் மற்றும் எனது வாசகர்கள், ரசிகர்கள், ஆசிரியர்கள், எனக்கு ஊக்கம் தருபவர்களே எனது கலைப் பயணத்தில் ஊக்குவிப்பவர்கள். இவர்கள் யாவருக்கும் எனது அன்பு கலந்த நன்றியினைத் தெரியப்படுத்துகின்றேன்.  


ஆரம்ப காலக் கவிதைகளுக்கும் தற்காலக் கவிதைகளுக்குமிடையே எவ்வகையான வேறுபாட்டை உணர்கிறீர்கள்? 

ஆரம்ப காலக் கவிதை 'கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்' எனும் வரையறை இருந்தது. ஆனால் தற்காலக் கவிதை 'புதுக் கவிதை' என புது வடிவம் பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் இலக்கியப் படைப்பாளிகள் குறைவாகவே இருந்தார்கள். ஆனால் தற்போது புதுக் கவிதை எனும் அங்கீகாரம் இருப்பதனால் கவிதை நவீன யுகத்தில் உயிரோட்டம் பெற்றுள்ளது. பெறுகிறது. அதேவேளை ஒவ்வொரு கலைஞரும் அவரவருக்கே உரிய இரசனையில் பாணியில் கவிதைகளை யாத்து வருகிறார்கள். இது இலக்கியத்தை மெருகூட்டுவதனால் வரவேற்கத் தக்க விடயமாகக் கருதலாம்.

நம்மவர்களின் இலக்கிய இரசனை எந்த அளவு செறிவை அடைந்துள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நம்மவர்களின் இலக்கிய இரசனை பெரிதாக செறிவை அடைந்துள்ளதாக எண்ணத் தோன்றவில்லை. ஏனென்றால் நம் மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தின் தன்மை மிகவும் குறைந்து கொண்டே போகின்றது. யாரைப் பார்த்தாலும் அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதாக ஓர் உணர்வு எனக்குள் எழுகிறது. ஏனென்றால் இருக்கும் இலக்கியத்தை படித்துச் சுவைத்து அதன் செறிவை அனுபவிக்க அதன் அழகைக் கண்டு மகிழ்வதற்கோ நேர காலம் இல்லாமல் அனைவரும் திண்டாடுவதை உணரக் கூடியதாகவும் பார்க்கக் கூடியதாகவும் உள்ளது. 

இன்டர்நெட், பேஸ்புக், டுவிட்டர் என்பவற்றில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளம் சமுதாயத்தினர் மத்தியில் இலக்கிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நினைக்கின்றீர்களா?

மாணவப் பருவத்தில் புத்தகங்களை; இலக்கிய ரசனைக்காக வாசிக்காதவர்கள், புரட்டாதவர்கள் நவீன ரக வாசிப்புக்கள் மூலம் இலக்கிய மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நவீன ரக வாசிப்புக்களைப் பயன்படுத்தி நீண்ட நேரம் வாசிக்க முடியாது. அத்தோடு ஏதாவது ஒரு காரணத்தால் இன்டர்நெட், பேஸ்புக், டுவிட்டர் என்பன செயல் இழந்தால் இலக்கியம் என்ற பக்கங்களையே புரட்ட முடியாமல் போய்விடும்.  ஏனென்றால் இவற்றைப் பார்த்து வாசிக்கும் பொழுது கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் புத்தகத்தில் வாசிப்பதானது மிகுந்த உற்சாகத்தையும் மனதில் பதியும் தன்மையையும் ஆறுதலையும் இரசனைப் பெருக்கெடுப்பையும் தருகிறது. புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாசித்து இலக்கிய மாற்றம் கொண்டு வர முடியுமான அளவிற்கு நவீன உத்திகளால் இலக்கிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது என்பது எனது எண்ணம்.
 

விருதுகள் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

வெற்றிகளும் பாராட்டுக்களும் யாவரும் விரும்பும் ஒன்று. இதில் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது. எனவே விருதுகள் வழங்குவதனால் எழுத்தாளன் அல்லது கவிஞன் ஊக்குவிக்கப்படுகின்றான். அவ்வாறு ஊக்குவிக்கப்படும் போது மேலும் நல்ல பல இலக்கிய படைப்புக்கள் வெளிவரும் என்பது உறுதி. எனவே விருதுகள் உண்மையாகவே சேர வேண்டியவர்களுக்கு கிடைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியே. 


இன்று நிறையப் பெண்கள் எழுதுகிறார்கள். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் இவர்கள் கவனிக்கப்படுகிறார்களா?

எழுத்துப் பணியில் இயங்கும் பெண்கள் உண்மையில் பாரிய பணியாற்றுபவர்கள். அவர்கள் தமது வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு சிலர் தனது கணவனுக்கு சமனான தொழிலையும் செய்து கொண்டு எழுத்துப் பணியிலும் ஈடுபடுவது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயம்;. அப்படியான பெண்களைப் பாராட்டி, வாழ்த்தி கௌரவிக்க வேண்டும். உற்சாகம் வழங்க வேண்டும். ஆனால் சில கணவன்மார்கள் தம் மனைவியர் எழுத்துத் துறையில் பயணிக்க அணுமதிப்பதில்லை. இதனால் அவர்கள் இருந்த இடம் தெரியாலே மறைந்து போய்விடுகிறார்கள். அதேநேரம் எழுத்துலகில் ஆண் வர்க்கத்தினரோடு சமமாகப் போராடுவதில் சிக்கல்கள் நிறைய உள்ளன. மற்றும் பெண்களுக்கு சமவாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இவ்வாறான இன்னோரன்ன காரணங்கள் பெண்களை முன்னேறவிடாமல் தடுக்கின்றது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பெண் எழுத்தாளர்கள் ஆணாதிக்க சமுதாயத்தில் கவணிக்கப்படாமலேயே போவது கவலைக்குரிய விடயமாகும். 

'ஒருவருக்கு தாரமும் குருவும் அமைவது தலை விதிப்படி' என்பார்கள். சிலருக்கு தலைவிதி நன்றாக அமைந்ததாயில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது. சிலருக்கு உண்மையிலேயே உரிய கவனிப்பும் உற்சாகமும் பாராட்டும் வீட்டுக்குள்ளேயே கிடைப்பதானது திருப்தியடையக் கூடியது. அத்தகையவர்களுக்கு சமூகத்திலும் கவனிப்புக் கிடைக்கிறது.


அடுத்ததாக தாங்கள் எதனை வெளியிடப் போகிறீர்கள்?

அடுத்த வெளியீடு சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டு கவிதை நூல்களை வெளியிட்ட நான் மூன்றாவதாக இளைய தலைமுறையினரை இலக்காகக் கொண்டு அவர்களது உள்ளத்தில் நல்ல விதைகளை எண்ணங்களை சிந்தனைகளை சிறுவர் கதைகளாக ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது இரண்டிலும் சேர்த்து வெளியிடலாம் என உத்தேசித்துள்ளேன். 

இறுதியாக என்ன சொல்லப் போகிறீர்கள்?

'இயற்கையை நேசியுங்கள். இயற்கையோடு கலந்து வாழும் அனைத்து உயிரினங்களையும் நேசியுங்கள். கவிதைகளை வாசியுங்கள். அவற்றில் வரும் கருத்துக்களை யோசியுங்கள் என்று சொல்வதோடு அடுத்த மனிதர்களுக்கு உதவுங்கள். உடலால், பணத்தால், பொருளால், எண்ணத்தால் உதவப் பெரும் இன்பம் அளப்பரியது. எனவே ஒருவருக்கொருவர் உதவி உலகை உயிர்ப்பிப்போம்' என்று கூறவே விரும்புகிறேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Sunday, March 29, 2020

40. காத்தான்குடி பாத்திமா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2020.01.26

காத்தான்குடி பாத்திமா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது பெயர் பாத்திமா  முகம்மத். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பில் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவள். காத்தான்குடி பாத்திமா என்ற பெயரில் இலக்கிய உலகிற்குள் வந்தவள். எனது கணவர் ஏ.எம்.முகம்மத். இவர் ஓய்வு பெற்ற அதிபர். எனக்கு ஒரே மகன். இவர் டாக்டராகப் பணிபுரிகிறார்.


உங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் எனது கல்வியைத் தொடர்ந்தேன். பின் அரச முகாமைத்துவ உதவியாளராக கிட்டத்தட்ட முப்பத்து மூன்று வருடங்கள் கடமை  செய்து சென்ற வருடம் ஓய்வு பெற்றேன். சுகாதார சேவைகள் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகம் என்பவை எனது அரச பணிக்கான தளங்களாக அமைந்தன.


நீங்கள் எழுத்துத் துறைக்குள் காலடி வைத்த சந்தர்ப்பம் பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக, எப்போது ஆரம்பித்தது?

நான் பாடசாலைக் காலத்திலேயே கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதைப் பொழுது போக்காகக் கொண்டேன். எனது தந்தை மர்{ஹம் காசீம் முகம்மத் வாழும் காலத்தில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தார்கள். அதேபோல எனது கல்லூரியின் தமிழ் ஆசிரியர்களான திருமதி அகஸ்டீன் ஜோசப், எம்.எஸ்.எஸ்.ஹமீட், மருதமைந்தன் ஆகியோர்கள் எனது திறமை கண்டு என்னை மென்மேலும் ஊக்குவித்தார்கள். கல்லூரியில் எட்டாம் ஆண்டு படிக்கும் போதே அக்கல்லூரியில் பவள மல்லிகை என்றதொரு கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்து அதன் பிரதான ஆசிரியராக நானே இருந்து திறம்பட நடாத்தி கல்லூரி மட்டத்திலும் கல்வித் திணைக்கள மட்டத்திலும்  பாராட்டப்பட்டேன். 1972ம் ஆண்டு மிகச் சிறிய வயதில் தேசிய பத்திரிகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின. தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மற்றும் உள்ளுர் சஞ்சிகைகள் என்பவற்றில் நிறையவே எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன.


உங்களது சிறுகதைப் படைப்புக்கள் பற்றிக் கூற விரும்புவது? சிறுகதைகளை எழுதும் போது அவற்றுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக்கொள்கின்றீர்கள்?

நான் அடிக்கடி கூறுவேன் ஒரு எழுத்தாளன் என்பவன் கற்பனையில், ஆழமாய் சிந்திப்பதில், பரந்து சிந்திப்பதில், மற்றவர் துயரங்களில் அல்லது கஷ்டங்களில் தன்னையும் கற்பனை மூலம் ஆற்றுப்படுத்தி அதுபற்றி தனக்குள்ளே வினா எழுப்பி அதற்காக விடை காணத் துடிப்பதில் விளைவதுதான் கவிதை, அல்லது சிறுகதை. அந்தவகையில் நான் சமூக சேவையிலும் அதீத ஈடுபாடு காட்டுவதனால் பலரது துயரம், கஷ்ட நிலை என்பவற்றில் எனது ஆழ்ந்த கவனத்தைச் செலுத்துவேன். அவர்களது கண்ணீர் களையப்படத்தக்கதாக கருவொன்றை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டு சிறுகதைகளை உருவாக்குவேன். முற்போக்கான சீர்திருத்தங்களை இந்தச் சமூகத்தில் கொண்டுவரத் தக்கதாக எனது ஆக்கங்கள் அமைய வேண்டும் என்பதையே எனது எதிர்பார்ப்பாகக் கொள்வேன்.


இதுவரை எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளீர்கள்? 

இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.

01. அத்தனையும் முத்துக்கள் (சிறுகதை) 2003
02. பொய்த் தூக்கங்கள் (சிறுகதை) 2004
03. நா இடற வாய் தவறி (கவிதை) 2009

என்பனவே அவையாகும். இன்ஷா அல்லாஹ் நான்காவது நூல் விரைவில் வெளிவரலாம்.


உங்களது முதலாவது நூல் வெளியீட்டின் போது உங்களது மனநிலை எவ்வாறிருந்தது?

எனது சிறுகதைகளை நூலுருவாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம்  எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை. எனினும் எனது கணவர், மகன், மற்றும் வாசகர்கள், இலக்கிய அன்பர்கள் இந்த எண்ணத்தை எனக்கு ஊட்டினார்கள். அதிலும் நவ இலக்கிய மன்றத்தின் தலைவர் பாவலர் சாந்திமுகைதீன்  ஹாஜியார் என் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.இஸற். அஹ்மத் முனவ்வர் என் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பைச் செய்த என் அன்புச் சகோதரராவார். இந்த எனது முதலாவது நூல் வெளியீட்டில் பொருளாதாரத்தில் எனக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஆனால் வெளியீட்டின் வெற்றியைப் பற்றியே சிந்தித்தேன். நான் பிறந்தவூரான காத்தான்குடி, இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றும் ஒரு ஊர். இஸ்லாமியப் பெண்ணான என்னை இந்தச் சமூகம் அங்கீகரிக்குமா எனப் பயந்தேன். இறை உதவியால் நான் எதிர்பார்த்ததை விடவும் பல மடங்கான வெற்றியாக எனது புத்தக வெளியீடு அமைந்தது. ஊர் முழுமையாக ஒத்துழைத்தது. அல்ஹமதுலில்லாஹ்.


'அத்தனையும் முத்துக்கள்' என்ற உங்களது சிறுகதை நூல் பற்றி என்ன சொல்வீர்கள்?

இது எனது முதலாவது நூற் பிரசவம். இதிலமைந்த பெரும்பாலான கதைகள் தேசிய மற்றும் பிரபல்யமான பத்திரிகைகளில் வெளிவந்தவை. பொதுவாக இதிலுள்ள அநேகமான சிறுகதைகள்  என் இளமைக் காலத்தில் அப்போதிருந்த மனநிலையில் எழுதப்பட்டவை. காதல் தோல்வி, பொதுவாக பெண்கள் சீதனத்தைக் காரணம் காட்டி ஏமாற்றப்படுதல், பலதார திருமணங்களில் சமூகத்தில் செய்யப்படும் துஷ்பிரயோகங்கள் என்பன போன்ற நிகழ்வுகள் எனது எண்ணக் கோப்பில் ஏற்படுத்திய தாக்கங்களினால் பிரசவமானவை. என் முழு உணர்வுகளையும் ஒன்றாய்த் திரட்டி எழுத்துருக்களைத் தாங்கிய நூல் இது.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியை திருமதி றூபி வலன்ரீனா பிரான்ஸிஸ் இந்நூலைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். ஷஷபாத்திமாவின் சிறுகதைகள் சிறுகதை என்ற வரம்பிற்குள் சட்டமிட்டு மாட்ட முடியாதவை. மன உணர்வுகளால் ஆன வெளிப்பாடுகளே அவைகள்' என்று. அதேவேளை எனது இன்னுமொரு சிறுகதைத் தொகுப்பிற்கு வனப்புரை வழங்கிய பிரபல கல்விமானும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியும் நாடறிந்த எழுத்தாளருமான மர்கூம் ஏ.எல்.எம். பளீல் அவர்கள் தனது வனப்புரையில் ஷஷபாத்திமாவின் சிறுகதைகள் ஒரு கைதேர்ந்த திரைப்பட இயக்குனர் போல கதையின் ஆரம்பத்திலிருந்து ஆரம்பமாகி பின்னர் கதையை விபரித்து முழுக்கதையும் விளங்கும் படியாகும் திரைப்படம் போல அமைந்துள்ளமை சிறுகதைத் துறையில் அவருக்குள்ள ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு சிறுகதைகளையும் விரிவாக்கினால் ஒவ்வொரு நாவலாகப் பரிணமிக்கும் சிறந்த கருப் பொருளைக் கொண்டிருக்கிறது' எனக் கூறியுள்ளார். எனவே ''அத்தனையும் முத்துக்கள்'' என்ற எனது முதலாவது நூல் என் உணர்வுகளைப் பொறுத்த வரையில் முத்துக்களே..


நீங்கள் இந்தத் துறையில் பெற்றுக்கொண்ட மறக்க முடியாத அனுபவமாக எதை முன் வைப்பீர்கள்?

பல அனுபவங்கள் உள்ளன. அவை இனிப்பாகவும் அமைந்திருக்கின்றன. கசப்பாகவும் அமைந்தன. ஒரு பெண் எழுத்துத் துறையில் அல்லது இலக்கியத் துறையில் நிமிர்ந்து நிற்பது என்றால் இலேசுப்பட்ட விடயமல்ல. சவால்கள் பல ரூபமாகவும் வரலாம். அவற்றைச் சமாளிக்கின்ற திறமை, விடா முயற்சி, தைரியம் என்பன ஒருங்கே அமைந்திருப்பது அதுவும் ஒரு பெண்ணிடம் என்பது இறையருள் என்றே நம்புகின்றேன். இவை என்னிடம் மிகுதமாக இருந்தன. இப்போதும் இருக்கின்றன. எனக்கு மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றை நான் வாசகர்களுக்குச் சொல்லித்தானாக வேண்டும்.

எனது முதலாவது புத்தக வெளியீட்டு விழாவுக்கு எமதூரிலுள்ள பிரபலமான இரண்டு இலக்கியவாதிகளிடம் எனது விழாவில் அதிதிகளாகக் கலந்து கொள்ளுமாறும் அவர்களது பெயர்களை அழைப்பிதழில் இடுவதற்கு சம்மதிக்குமாறும் கேட்டு நின்றேன். அதற்கு அவர்கள் என்னிடம் நேரடியாக எந்தப் பதிலும் சொல்லாது பிறிதொரு நபரிடம், ''பெண்கள் புத்தகம் வெளியீடு செய்வது வெற்றி பெறாது'' என்ற பொருட்படப் பேசி தங்களது விருப்பமின்மையை மறைமுகமாகத் தெரிவித்தனர். இது இவ்வாறிருக்க எனது புத்தக வெளியீட்டை அரசியல் கலப்பற்றதாக நடாத்த வேண்டுமென்ற என் விருப்பத்திற்கிணங்க எனது அழைப்பிதழைத் தயாரித்ததோடு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் அந்நாள் பணிப்பாளர் அஹ்மத் முனவ்வர் ஹாஜியாரையே நான் பிரதம அதிதியாகவும் அழைத்தேன். என் விழாவுக்கு வர மறுப்புத் தெரிவித்த எனதூர் இரண்டு இலக்கியவாதிகளும் வானொலியில் தங்களுக்கான களந்தேடி அலைபவர்கள், ஏங்கிக் கிடப்பவர்கள் என்பதும் எனக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும். எனவே வானொலியோடு தொடர்புடைய ஒருவர் எனது விழாவுக்கு வருகிறார் என்பதனால் அந்த இலக்கியவாதிகள் இருவரும் என் வீடு தேடிவந்து என்னென்னவோ சொல்லி நின்றபோது நான் அழைப்பிதழும் அச்சிட்டாகிவிட்டது எனக்கூறியபோது அவர்கள் பரவாயில்லை எங்களுக்கு பேச ஒரு சந்தர்ப்பம் தந்தால் போதுமென்றார்கள். அவர்களது பரிதாபம் கண்டு அச்சந்தர்ப்பத்தை அவர்களுக்கே வழங்கவேண்டியதாயிற்று. இதுவே எனது எழுத்துலக வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். வெட்டுக்குத்தும், குழி பறிப்பும், காட்டிக்கொடுப்பும் நிறைந்த இலக்கிய உலகில் நானொரு பீனிக்ஸ் பறவையானேன்.


முற்போக்குச் சிந்தனை கொண்டு நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது? ஏன்?

என் கதைகளில் அநேகமாக எனக்கு எல்லாக் கதைகளும் பிடிக்கும். அதிலும் பெண்களுக்கு சமூகத்தில் இஸ்லாத்தைப் பிழையாக விளங்கிக்கொண்டு இஸ்லாத்தின் திருமணச் சட்டங்களைப் பிழையாக விளங்கி, அதனைத் துஷ்பிரயோகம் செய்கின்ற வகையில் ஒரு மனைவி குழந்தைகள் வாழவைக்கப்பட வேண்டியவர்களாக இருக்க அவர்களைக் கைவிட்டு மறுமணம் என்ற பெயரில் துரோகம் செய்கின்ற ஆண்கள், இதற்கு உடந்தையாக இருந்து செயற்படும் பள்ளிவாயல்களின் பரிபாலன சபைகள் என்பவற்றை என் கருத்துக்கள் மூலம் விளாசியிருக்கிறேன். அத்தோடு இளவயதில்  சந்தர்ப்ப வசத்தால் காதல் என்ற மாய வலையில் மாட்டிப் பின் முதுகெலும்பற்ற ஆண்களால் சீதனத்துக்காக ஏமாற்றும் ஆண்களையும் சாடியிருக்கிறேன். மட்டுமல்ல எனது சிறுகதைகளில் தமிழின் மூவகை நிலையான தன்மை, முன்னிலை, படர்க்கை என்பதில் எனது அநேக கதைகளில் பாதிக்கப்படும் பாத்திரமாக நானே மாறியிருக்கிறேன். அதாவது கதாபாத்திரமாக தமிழின் தன்மை நிலையாக நான், எனக்கு, என்னை என்றே கதைகளில் பேசியிருக்கிறேன். எனவே இந்த உணர்வுதான் எனது சிறுகதைகள். எனது பிரசவங்கள் எனக்கு மிகவும்; பிடிக்கும்.


உங்களது படைப்புக்கள் அதிகமாகவே பெண்களின் பிரச்சினைகளைத்தான் பேசியிருக்கின்றதா? என்ன காரணம்?

வாழ்க்கையின்  பல்தரப்பட்ட சுமைகளையும்  தூக்குவதற்கும்  கல்லடிபடுவதற்கும், துயரங்களை அனுபவிப்பதற்கும் என்று அகப்படுபவர்கள் பெண்களே. இது முஸ்லிம் சமுகத்தில் மட்டுமல்ல மற்ற எல்லாச் சமுகத்திலும் இந்த அவல நிலையுண்டு. எனவே என்னிடம் பல பெண்கள் வருவார்கள். அவர்கள் தங்களின் பிரச்சினைகளைச் சொல்லி அழுவார்கள். சுற்றுப்புறச் சூழலிலும் பெண்களின் வாழ்வின் துயரக் கதைகளை மிக அதிகமாகக் கண்டிருக்கிறேன். இதுபற்றி நன்கு சிந்தித்திருக்கிறேன். இந்தச் சிந்தனை எனக்கு சிறு வயதிலிருந்தே என்னோடு தொடர்ந்திருக்கிறது. இஸ்லாமிய திருமணச் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்தல், சட்டங்களைத் தங்களுக்கு சார்பாக வளைத்தல், பணப்பலம், செல்வாக்கு, ஆணாதிக்கம், சீதனக் கொடுமை, வறுமை போன்ற இத்தகைய நச்சு விதைகளின் முன்னெடுப்பு அநேகமான பெண்களின் திருமண வாழ்வைக் காவு கொள்வது என் சிந்தையில் சுழலும்போது பல சிறுகதைக் கருக்கள் உருவாகி இந்தச் சமுக ஒழுக்கக் கேடுகளை உரக்கக் கூவி ஆவேஷப்படுத்தும். இதனை எனது இரண்டாவது நூலான பொய்த் தூக்கங்கள் என்பதில் எனது கண்ணியத்துக்குரிய மர்கூம் பளீல் சேர் அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


உங்களது சிறுகதைகளுக்கு கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

எனது படைப்புக்களுக்கு நிறைய வரவேற்புக்கள் கிடைத்திருக்கிறது. எனது கதைக் கருக்கள் பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றன. அதற்கு இப்போதும் என்னால் மிகுந்த கரிசனையோடு பாதுகாத்து ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் வாசகர்களின் பாராட்டுக் கடிங்கள் சாட்சி. அத்தோடு எனது சிறுகதைகளுக்கு மிகவும் ஆதரவு தந்து ஊக்கப்படுத்திய பெரியார்களில் தினகரன் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற ஆர். சிவகுருநாதன் ஐயா முதன்மையானவர். அத்தோடு புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன், மன்னார் எச்.எம்.ஷரீப், எம்.எச்.எம்.ஸம்ஸ், எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோரின் பாராட்டுக்கள் எனக்கு உத்வேகம் தந்தவையாகும். கிடைத்த விருதுகளும், பரிசுகளும், பொன்னாடைகளும் எனது உற்சாகத்தின் ஊன்று கோல்களாயின.


''நா இடற வாய் தவறி'' என்ற உங்களது கவிதைத் தொகுதி குறித்து என்ன குறிப்பிடப் போகின்றீர்கள்?

அது கவிதைத் தொகுப்பு என்று சொல்வதைவிட என் மன உணர்வுகளின் குவியல்கள் என்றே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழை, உணர்வை, என் உள்ளத்தை, என் விருப்பு வெறுப்புக்களை, என் வேதனைகளை, வெற்றிகளை அந்தத் தொகுதியில் கொட்டியிருக்கிறேன். அது கவிதைத் தொகுப்பா அல்லது உணர்வுத் தொகுப்பா என்று வாசிக்கின்ற வாசகர்களையே பெயர் வைக்குமாறு நான் உரிமை வழங்கியிருக்கிறேன்.


பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இவ்வாறான சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எவ்வாறான முன்னெடுப்புகளை முன்னெடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இவ்வாறான காட்டுமிராண்டிச் சம்பவங்கள்தான் இன்று உலகைப் பிடித்துள்ள பெரும் பீடை. இதனைத் தடுப்பதற்கு ஒரே வழி தண்டனைகளை மிக மிகக் கடுமையாக்குவதுதான். தண்டனைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். காலதாமதமின்றி மிகக் குறுகிய காலத்திற்குள் தண்டனைகளை வழங்க வேண்டும். இக்குற்றங்களின் கொடுரத்தை சகல தரப்பாரும் உணர்ந்து தண்டனைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அத்துடன் பெண்களுக்கு உரிய முறையில் விழிப்புணர்வுகள் ஊட்டப்பட வேண்டும். அத்தோடு நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்கள், அவற்றின் விளைவுகள், அவற்றுக்கான தண்டனைகள் பற்றி பாடசாலைக் கல்வியிலும் இளம் சந்ததியினருக்குப் பாடம் நடாத்தப்பட வேண்டும். இவை மூலம் நல்ல பயன் கிட்டுமென எண்ணுகின்றேன்.


உங்கள் எழுத்து முயற்சிகளின் இலக்குகள் என்னவாக இருக்கிறது?

நான் இதுவரை காலமும் எழுதிய ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு இலக்கை வைத்தே எழுதப்பட்டிருப்பதாக நம்புகின்றேன். பெண்களுக்கான நீதி வேண்டும். இஸ்லாமியத் திருமணச் சட்டங்கள் கொச்சைப்படுத்தப்படக் கூடாது, சமுகத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படக் கூடாது, சீதனம் இழிவானதாக்கப்பட வேண்டும் என்ற இலக்கோடு சமுக இடர்பாடுகள் என்பன களையப்பட வேண்டும் என்ற நோக்கோடு சிறுகதைகளில் நான் பயணிக்கின்றேன்.


சமகாலமாக நாவல் இலக்கியங்களின் வரவு கணிசமாக குறைந்து வருகின்றது. அந்தவகையில் நீங்கள் நாவல்கள் எழுதுவதிலும் அக்கரை காட்டலாமே?

இதே கேள்வியை என்னிடம் பலர் கேட்கிறார்கள். எனக்கும் அதில் விருப்பம் உள்ளது. விரைவில் அந்த முயற்சியிலும் இறங்கலாமா என எனக்குள்ளே நான் கேள்வி கேட்கின்றேன். இன்னும் சில மாதங்களில் ''பொய்த் தூக்கங்கள்'' என்ற எனது சிறுகதை நாவலாக விரிவாகி வெளிவரலாம்.


சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் உங்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

கலாபூஷண விருது அடங்கலாக எனக்கு முப்பது விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. பாராட்டுகள், பொற்கிழிகள் என்பவையும் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் நான் எனது எந்த ஆக்கத்தையும் போட்டிகளுக்கு அனுப்புவதில்லை. எனது ஒவ்வொரு ஆக்கமும் நான் பிரசவித்த குழந்தைகள். இவற்றைப் போட்டிக்கு உட்படுத்திப் பெறுமதியிட்டு கொச்சைப்படுத்துவதை நான் விரும்புவதில்லை.


எதிர்காலச் சந்ததிகளுக்கு நீங்கள் கூறும் அனுபவ மொழிகள் யாவை?

இளம் எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் தடம் பதிக்க வேண்டுமானால் முதலில் தன்னம்பிக்கை அவசியம். தோல்விகளை, புறக்கணிப்புக்களைச் சகித்து மென்மேலும் முயற்சித்தல் அவசியம். தனது படைப்புக்களில் நம்பிக்கை வைக்க வேண்டும். பெரிய இலக்கியவாதிகளை மதித்து அவர்களின் ஆலோசனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். ஓரிரண்டு ஆக்கங்களை யாத்துவிட்டு புகழையும் மாலை மரியாதையையும் எதிர்பார்க்கக் கூடாது. கௌரவங்களை நாங்கள் தேடிப்போகக் கூடாது. இவையே எனது வாழ்வில் நான் கடைப்பிடித்த விடயங்கள். அதனையே இக்கால இளம் எழுத்தாளர்களுக்கும் ஆலோசனையாக வழங்குகின்றேன்.


இலக்கியங்களில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் வகிபங்கு எவ்வாறுள்ளது?

மிக மிகக் குறைவு. ஒன்றிரெண்று தோன்றினாலும் வந்த வேகத்தில் அவர்கள் மறைந்து கொள்கிறார்கள். காரணம் குடும்பச் சுமை, தைரியமின்மை, பெற்றோர்களின் உடன் பிறப்புக்களின் கட்டிய கணவர்மாரின் ஒத்துழைப்பின்மை, ஊக்குவிப்பின்னை, ஊடகங்களின் புறக்கணிப்புகள் இவையே காரணிகளாகலாம். எனினும் பாடசாலைகளில உயர் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவிகளில் இத்தகைய இலக்கிய உணர்வுகள் உள்ளவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். பெண்களின் வகிபாகம் குறைந்திருப்பது என்னைப் பொறுத்தவரை மிகவும் வேதனையான விடயம்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் தற்சமயம் சற்று சுகவீனமடைந்திருந்த போதிலும் இடைக்கிடை எனது சில ஆக்கங்களை பிரசுரத்திற்காக ஊடகங்களுக்கு அனுப்புகிறேன். இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன். என் எழுத்து முயற்சிகளுக்கு எனது கணவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இறைவனின் உதவியால் இன்னும் எனது பல படைப்புக்களையும் இலக்கிய உலகிற்கு அவ்வப்போது வழங்கலாமென்ற நம்பிக்கையுடனுள்ளேன்.


இறுதியாகப் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்ன?

இலக்கிய உலகமென்பது பரந்தது விரிந்தது. அங்கே பாசமும் உண்டு. பயங்கரமும் உண்டு. இதில் காலூன்ற நினைப்பவர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும். வெல்லத் துணிந்துவிட்டால் அது வெல்லக் கிடங்காகிவிடும். நானறிந்தவரை எந்த எழுத்தாளனும் கவலைகளால் ஹார்ட் அட்டெக்கை அணைக்கவில்லை. கவலைகளைக் காகிதத்தில் இறக்கி வைத்தால் இதயத்தில் சுமைகள் தேங்குவதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை வழங்கிய தங்கை ரிம்ஸா முஹம்மத் உட்பட தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் குலாம் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

39. மஸீதா புன்னியாமீன் அவர்களுடனான நேர்காணல்


இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.10.27

மஸீதா புன்னியாமீன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

இலங்கையில் தென்னகத் தலைநகர் காலியில் கட்டுக்கொடை கிராமம் எனது பிறப்பிடம். பாலர் கல்வி முதல் உயர்தரம் வரை கல்விப் பயணத்தில் தென்னகமே கைகொடுத்தது. வசதி வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் முன்னின்ற குடும்பமொன்றில் பத்துப் பேரில் நான் ஆறாவது பிள்ளையாகப் பிறந்தேன்.


உங்களது இலக்கியப் பின்னணி குறித்து கூறுங்கள்?

சிறுவயது முதல் வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவள். தந்தையார் வாங்கி வரும் புதினப் பத்திரிகைகளின் முதல் வாசகி நானே. வகுப்பறைக் கற்றலில் கட்டுரை எழுதி தமிழ்ப் பாட ஆசிரியரிடம் பாராட்டு பலமுறை பெற்றுள்ளேன். உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கற்கையில் கல்லூரி அதிபர் காலஞ்சென்ற எம்.எஸ்.ஏ. மஜீத் அவர்கள் என் எழுத்தாற்றலை இனங்கண்டு, 'தென்றல்' என்ற காலாண்டுச் சஞ்சிகைக்குப் பத்திராதிபராக்கினார். அவரது காலப் பிரிவிலேயே இலங்கை ஹிஜ்ரா கவுன்ஸில் பாடசாலை மாணவரிடையே அகில இலங்கை ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதலாமிடம் எனக்குக் கிடைத்தது. எனது பௌதிகவியல் பாட ஆசிரியர், பிற்காலத்தில் தென்மாகாண விஞ்ஞானப் பிரிவின் வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலஞ்சென்ற ஏ.ஆர்.எம்.எம். நாஸிம் அவர்கள் பத்திரிகைகளில் அவ்வப்போது பிரசுரமான எனது ஆக்கங்களைப் படித்துவிட்டு ஊக்கம் தந்தார்.


இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?

1980 களில் இலக்கிய வானில் புதுக்கவிதை வடிவம் சிறகடித்துப் பறந்த காலம் எல்லோரையும் போல நானும் எழுதிய கிறுக்கல்களின் சில அச்சில் வராமலே போயின. என் இலக்கிய முயற்சிகளின் தொடர்ச்சி 1980 களில் தினகரன் பத்திரிகையின் கவிதைப் பூங்கா பகுதியில் 'பெருமூச்சு' என்ற தலைப்பில் என் புதுக் கவிதையைப் பிரசுரித்து ஆனந்தத்தில் ஆழ்த்தியது.  அதன்பிறகு சிந்தாமணியும் எனது புதுக் கவிதைகளை அங்கீகரித்து அரங்கேற்றியது. அந்நாளில் தினகரன் ஆசிரியர் பீடத்தை அலங்கரித்த சகோதரர் ஏ.எச். சித்தீக் காரியப்பர் எனது புதுக் கவிதைகளை மெருகூட்டி, பிரசுரமாகக் களமமைத்துத் தந்தவர் என்பதனை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். எனது தந்தையின் பெயர் ஹம்ஸா. எனது ஆரம்ப கால எழுத்துலகப் பிரவேசம் கட்டுகொடை மஸீதா ஹம்ஸா என்ற பெயரிலேயே நிகழ்ந்த வண்ணமிருந்தது. 


நீங்கள் எழுத்துலகில் செய்த சாதனையாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

சாதனை என்பது பிறர் பிரமிக்கத்தக்க வகையில், பயன்பெறும் வகையில் ஒருவரால் ஆற்றப்படும் ஓர் ஆக்கபூர்வமான செயற்பாடு அல்லது சேவை என்பதே என் கருத்து. என்னைப் பொருத்தமட்டில் இலக்கியத் துறையில் நான் சாதித்தது என்ன? என்னுடைய செயற்பாடுகள் எதனையும் நான் சாதனையாக கருதியதில்லை. 


ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் நூல்கள் பலதை வெளியிட்ட அனுபவம் பற்றிக் கூறுங்கள்?

நானும் என் துணைவர் புன்னியாமீனும் ஆசிரியர்கள். கணிதமும் விஞ்ஞானமும் என் துறையாக இருக்க, வரலாறும் அரசறிவியலும் அவர் துறையாக இருந்தது. கணவரது இலக்கிய நூல்களோடு, இளந்தலைமுறையினருக்கும் களமமைக்கும் நோக்கில் புதிய மொட்டுகள், அரும்புகள், பாலங்கள் என கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். கூடவே வரலாறு நூல்கள் பலவற்றையும் வெளியிட்டு தனது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முனைந்தார். எனது முதல் நூல்கூட 'விஞ்ஞான வினாச் சரம்' என்று என் தொழிற்றுறை சார்பாகவே உருவாக்கப்பட்டது. 

ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே நாமிருவரும் தரம் ஐந்து மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை ஆரம்பித்தோம். 1994 ஆம் ஆண்டு வரை தமிழ், கணிதம் என்ற இரு பாடங்களோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 1995 ஆம் ஆண்டிலிருந்து பாட அறிவுடன் நுண்ணறிவு, பொது அறிவு என விரிவடைந்து இரு பாகங்களாக நடைபெறத் தொடங்கியது. அதன் பிற்பாடுதான் நாம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டோம். நாமே எதிர்பாராத அளவுக்கு அவை எமக்கு அமோக ஆதரவை வழங்கின. இதன் காரணமாக 93 நூல்கள் எம்மால் வெளியிடப்பட்டுள்ளன.


இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, இலக்கியப் போக்கு பற்றி யாது கூறுவீர்கள்?

ஒரு காலமிருந்தது. பெண் எழுத்தாளர்கள் புற்றீசல் போல பெருகி வந்து, அதில் பலர் காலப் போக்கில் காணாமற் போனோர் பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். திருமணம், குடும்பச் சுமை, தொழில் வாய்ப்பு போன்ற இன்னோரன்ன காரணங்கள் இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கலாம். முன்பெல்லாம் ஒரு ஆக்கத்தை எழுதி அதனை தபாலிட்டுவிட்டு பிரசுரமாகியிருக்குமோ எனக் காத்திருந்து ஏமாந்து, நாட்கள் கழிந்து பிரசுரமான பின் மிக்க மகிழ்ந்த அந்த சந்தர்ப்பங்கள்.. இப்போது அப்படியல்ல. இன்று இலத்திரனியல் யுகத்தில் ஏராளமான பெண் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது ஆக்கங்கள் வெளியுலகம் சென்றடைவதற்கு இருக்கின்ற தடைகள் மிகக் குறைவு. தரமான ஆக்கங்களை படைக்கும் பெண் எழுத்தாளர்கள் இன்னும் உருவாக வேண்டும்.


எழுத்துத் துறை சார்ந்த உங்களது கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

எழுத்தாற்றல் இறைவன் கொடுத்த வரம். போர்வாளின் முனையைவிட பேனா முனை வலிமையானது என்பார்கள். எழுதுவதற்கு விரும்பும் ஒருவர் முதலில் எழுத்தை நேசிக்க வேண்டும். சமூகத்தை நேசிக்க வேண்டும். எழுதப்படும் ஆக்கங்களின் கனதியும் காத்திரமும் ஏதேனும் வகையில் ஊடுருவி சமூகத்தின் நாடி பிடித்துப் பார்க்க வேண்டும்.


உங்கள் எழுத்துக்களினூடாக எதைச் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

எனது இலக்கியப் பயணத்தின் பின்னூட்டமாக என் துணைவர் புன்னியாமீன் இருந்தார். அவரது எழுத்துக்களும் சமூக நோக்கும் உலகின் பல பாகங்களிலும் பேசப்பட, நான் என்னால் இயன்றதைச் செய்துள்ளேன். நான் சாதிக்க நாடியதைவிட அவரது எழுத்துலக சாதனைகளால் நான் திருப்தியடைகிறேன். 


இன்றைய புதிய கவிஞர்களின் வருகை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முகநூல் - இலக்கியப் பிரியர்களுக்கு வரப்பிரசாதம். நூல்களை வாசிக்க விரும்பாதவர்கள்கூட முகநூலில் முகம் புதைக்கின்றார்கள். அதி இலகுவாக களமமைத்துக் கொடுப்பதனால் முகநூல் கவிஞர்களுக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இதனால் கவிதை என்று ஏதோ எழுதித் தலையைச் சுற்ற வைக்கும் கவிதைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை. இப்படியும் இவர்களால் எழுத முடியுமா என்று உண்மையில் சிலருடைய கவிதைகள் பிரமிக்க வைக்கும்.



மரபுக்கவிதை, புதுக்கவிதை குறித்த உங்கள் பார்வை என்ன?

கவிதை எழுதுவது என்பது எளிமையான காரியமல்ல. நாலே வரிகளில் நல்லதைச சொல்வதற்கு எவ்வளவோ பிரயத்தனப்பட வேண்டும். அதிலும் மரபுக் கவிதை படைப்போரிடம் இலக்கிய ஆளுமை அதிகமாக இருக்க வேண்டும். நயம், நளினம் போன்றே அர்த்தமும் நிறைந்ததே மரபுக் கவிதை. வெறும் வார்த்தைக் கோலங்கள் புதுக்கவிதையாவதில்லை. மிகவும் எளிமையான வார்த்தைகளை மெல்லிய உணர்வுகளின் பின்னலாக வாசிப்போரைக் கவரும் வகையில் கோர்த்துக் கருத்துச் சிக்கனமாக முன்வைப்பது புதுக்கவிதை என்பது எனது கருத்து. 


நீங்கள் எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கின்றீர்கள்? என்ன காரணம்?

ஓர் எழுத்தாளன் உருவாவதே வாசிப்பில் காட்டும் தீவிர ஆர்வத்தினால்தான். நான் எல்லா வகையான புத்தகங்களையும் வாசிப்பதில் நாட்டம் கொண்டிருக்கின்றேன். கற்கும் காலத்தில் பாடசாலை நூலகத்திலிருந்து நாவல்களை எடுத்துச் சென்று வாசிப்பேன். மு.வரதராசன், அகிலன், ரமணி சந்திரன் என்று இந்தப் பட்டியல் நீளும். இந்திய நாவலாசிரியர்களின் நூல்களுக்கு அமோக வரவேற்பு இருந்த காலமல்லவா? புதுக்கவிதையின் முன்னோடி மு.மேத்தா அவர்களின் கவிதைகள் என்னை வெகுவாக ஈர்த்தவை. திக்குவல்லைக் கமால், திக்குவல்லை ஸப்வான் இவர்களுடைய சிறுகதைகளை எப்போதும் விருப்புடன் வாசிக்கின்றேன். திக்குவல்லை கமால் அவர்களின் பிரதேசப் பேச்சுவழக்கு நடை எனக்கு மிகவும் பிடிக்கும். மலையகத்தில் வாழ்ந்தாலும் நான் தென்னகத்தைச் சேர்ந்தவளாயிருப்பது அந்த ஈர்ப்புக்குக் காரணமாகலாம். நான் எழுத ஆரம்பித்த காலங்களில் என் துணைவர் புன்னியாமீன் சிறுகதைககள் வாயிலாகத்தான் இலக்கியத்தில் இடம்பிடித்து வந்தார். அவரது சிறுகதை நடை என்னை மிகவும் கவர்ந்தது. பின்னாளில் அவரது சிறுகதைகளின் நடையே எனது சிறுகதைகளிலும் மருவியிருந்ததை மறுக்க முடியாது.


நீங்கள் இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

காலஞ்சென்ற புன்னியாமீன் அவர்களின் சிந்தனை வட்டத்தினால் நூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர்களின் நூல்கள் அச்சுருப்பெற்றன. அதன் நூறாவது வெளியீடான 'ஒற்றைத்தாயின் இரட்டைக் குழந்தை' கவிநூல் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியினதும், எனதும் கவிதைகள் கலந்ததொரு கூட்டு முயற்சியாகியது. அதன் பின்னர் பாட ரீதியிலான 'விஞ்ஞான வினாச்சரம்' எனும் வினா விடைத் தொகுப்பு ஒன்று என்னால் உருவாக்கம் பெற்றது. துணைவருடன் இணைந்ததாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பாட விளக்கமாகவும், பயிற்சி நூல்களாகவும் 93 நூல்கள் வெளியிடப்பட்டன. 'மூடுதிரை' என்ற சிறுகதைத் தொகுதியே எனது தனியானதொரு இலக்கிய நூலாக அமைந்தது. அதனையடுத்து 'நல்லவனாவேன்' என்ற சிறுவர் பாடல் நூல் கல்வியமைச்சின் கல்வி நூல் வெளியீட்டு ஆலோசனை சபையின் அங்கீகாரத்துடன் அச்சுறுப் பெற்றது. 

மற்றுமொரு சிறுகதைத் தொகுதிக்கும், சிறுவர் இலக்கியத்துக்கும் ஆயத்தமான நிலையில்தான் என் துணைவரின் இழப்பு நேர்ந்தது. என் துணைவரின் கடைசி இரண்டரை மாத வாழ்க்கையினை என் அனுபவங்களை ஒரு நூலில் வடிக்க மனதில் சின்னதாயொரு தேக்கமும் குடிகொண்டிருக்கிறது.


இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து யாது?

பாராட்டு ஒரு மனிதனை பாராளும் அளவுக்கு இட்டுச் செல்லக் கூடியது. எந்தவொரு சராசரி மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் எழுத்தாக்கத்திற்கு, நூலுக்கு, இலக்கிய முயற்சிக்கு பாரபட்சமின்றி செய்யப்படும் விமர்சனங்கள் அந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரனை வளம் படுத்த வேண்டும். குறைகளோடு நிறைகளும் சுட்டிக்காட்டப்படுவதன் மூலம் படைப்பாளி தன்னை புடம் போட்டுக்கொள்ள முடியும்.

விருதுகள் நம்மைத் தேடி வரவேண்டுமேயன்றி நாம் விருதுகளை தேடிப் போகக் கூடாது. ஒரு படைப்பாளியில் ஏதோவொரு திறமையை இனங்கண்டதால்தான் விருதுகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. ஒரு விருதுக்காக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் தொடர்பான அத்தனை விபரங்களையும் கொடுத்துதவுவது உரியவர் கடமை. அதற்காக தம்மைத் தாமே பீற்றிக் கொள்ளல், விருதினைக் கேட்டுப் பெறல் என்ற குற்றச்சாட்டுக்கள் உருவாகின்ற நிலைமை மாற வேண்டும்.


இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க இயலாத சம்பவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

கலாசார அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படும் அகில இலங்கை அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் 'மரிக்க மறுக்கும் மனிதம்' என்ற எனது சிறுகதைத் தொகுதிக்கு முதலாமிடம் கிடைத்தது. அதன் பரிசேற்பு வைபவத்திற்கு நானும் என் துணைவரும் சென்றிருந்தோம். அந்த வைபவத்தில் மாற்றமான ஒரு நிகழ்வு நடந்தேறியது. சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெவ்வேறாக நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற தமிழ் சிறுகதை சிங்களத்திலும், சிங்கள சிறுகதை தமிழிலும் விமர்சனம் செய்யப்பட்டது. மட்டுமன்றி ஒப்பிட்டும் நோக்கப்பட்டது. இந்த விமர்சனத்தை செய்தவர் வேறு யாருமல்ல. நாடறிந்த சிங்கள எழுத்தாளரும், தமிழை நன்றாகப் பேசி எழுதக்கூடிய விசேட ஆற்றல் கொண்டவருமான திருவாளர் மடுளுகிரிய விஜேரத்ன ஆவார். அவரும் எனது துணைவரும் நெருங்கிய நண்பர்கள். எனது 'முடுதிரை' நூல் வெளியீட்டு விழாவின் போது, கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டவர். புன்னியாமீனின் துணைவியார்தான் இந்தச் சிறுகதைக்குச் சொந்தக்காரர் என்ற விபரம் அவருக்குத் தெரியாது. விழாவின் இடைவேளையின் போதுதான் அவர்கள் சந்தித்து முகமன் கூறிக் கொண்டார்கள். அதன்பிறகுதான் அவருக்கு எனது சிறுகதை அது என்பது தெரியவர மிகவும் சந்தோஷப்பட்டார். எனது சிறுகதை மாற்றுமொழியில் விமர்சனம் செய்யப்பட்ட அந்த சம்பவம் எனக்குக் கிடைத்த விருதினையும், பொற்கிழியையும்விட மனதுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. 


இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

வயது வித்தியாசமின்றி அலைபேசிகளை அணைத்துக் கொண்டு அலை பாயும் எண்ணங்களோடு மக்கள் அலையும் கவியுலகத்தில் நூல்களை வாசிப்போரின் எண்ணிக்கை அருகி வருவதை கண்கூடாகப் காண்கின்றோம். எதிர்காலத்தில் நூலகங்களில் பத்திரப்படுத்தப்பட்ட நூல்கள் வெறும் காட்சிப் பொருளாக மாறிவிடுமோ என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளது. வாசிப்பு வாழ்க்கையின் மூச்சாக வேண்டும். விலைமதிப்பற்ற புத்தகங்கள் தூசுதட்டப்படாமல் தேக்கமடையும் நிலைமை மாற்றமடைய வேண்டும். எனவே நல்ல நூல்களை வாசியுங்கள். நல்ல விடயங்களை குறிப்பில் எடுங்கள். மனதிலும், அலைபேசியிலும் தரவேற்றம் செய்து பகிருங்கள். தமது தரம் உயர வேண்டுமென விரும்பும் பெண் எழுத்தாளர்கள் நல்ல நூல்களை அவசியம் வாசிக்க வேண்டும்.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Wednesday, October 16, 2019

38. வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா (லதா கந்தையா) உடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2020.03.15

வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா (லதா கந்தையா) உடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்? உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனது தந்தை கந்தையா. தாயார் நாகம்மா. அவர்களின் ஏக புத்திரியாக 1979.04.24 இல் பிறந்தேன். மகிழ்ச்சியான விவசாயக் குடும்பம் என்னுடையது. எனது ஆரம்பக் கல்வி கிளிநொச்சி சென்திரேசா மகளிர் கல்லூரியில் ஆரம்பமானது. இயற்கையின் வசந்தங்களும் வாய்க்கால் வரப்புகளையும் கொண்ட கரடிப்போக்கு எனது சொந்த ஊர். எங்கள் மகிழ்ச்சி, இலங்கையில் பிறந்த காரணத்தால் எனக்கு நீடித்துக் கிடைக்கவில்லை. இனப்போர் எனது பெற்றோர்களை 1986  இல் காவு கொண்டது. உற்றார் உறவினரற்று நான் அநாதை விடுதியில் வளர்ந்தேன்.

உயர் கல்வியை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கற்றேன். சட்டமும் பயின்றேன். கலைமானி பட்டமும் பெற்றேன். வாழ்க்கைத் துணையும் நன்றாக அமைந்தது. மூன்று பிள்ளைகளுக்கு தாயானேன். இறுதி 2009 யுத்தத்தில் எனது இரண்டரை வயது மகனையும் இழந்தேன். கடைசியில் கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார். இரண்டு பிள்ளைகளோடும் பெருந்துயரை மறைத்து வாழக் கற்றுக்கொண்டேன். அதுபோலவே வாழ்கின்றேன்.

உங்கள் தொழில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வீர்களா?

ஆசிரியராக நான் வளர்ந்த அநாதை விடுதியிலேயே பணியாற்றினேன். ஊடகத்திலும் எழுத்துத் துறையிலும் கால் பதித்தேன். ''விடுதலைக் கனல்'', என்ற கவிதை நூலை 15 வது வயதிலும் ''சுவாசம் மட்டுமே சுடுகலனாய்...'' என்ற கவிதை நூலை போர் முடிந்த பின்பு 2018 இலும் வெளியிட்டேன். பத்திரிகைகளுக்கு எழுதிய சிறுகதைகள், போர் அனுபவங்கள், குறுநாவல், கவிதைகள் நூலுருப்பெறக் காத்திருக்கின்றன. பெண் தலைமைக் குடும்ப பெண்ணான நான் பிள்ளைகளையும் பொறுப்பாக வளர்த்து நூல்களையும் வெளியிடுவதானது சாதாரணமான விடயமல்ல என்பதை தாங்களும் உணர முடியும் என நினைக்கிறேன்.

எழுத்துத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரண கர்த்தா யார்?

எனது வகுப்பாசியரான சௌபாக்கியலீலா ஆசிரியரே என்னுள் மறைந்திருந்த திறனைத் தட்டி ஊக்கப்படுத்திய முதல் நல்லுள்ளம். அவரோடு நான் வளர்ந்த அநாதை விடுதியில் வளர்த்த சிலரும், அங்கு வளர்ந்த சகோதரிகள் பலரும் எனக்கு ஆதரவாக இருந்து நல்ல ரசிகர்களாக இருந்தார்கள்.

''வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா'' என்பது உங்கள் புனைப் பெயர் என்று நினைக்கின்றேன். அந்தப் பெயரைப் புனைப் பெயராகத் தெரிவு செய்தமைக்கு விசேட காரணம் என்ன?

அது நான் வளர்ந்த அநாதை விடுதியில், அதைப் பராமரித்த தலைவர் பிரபாகரன் அவர்கள் எனக்கு வைத்த பெயர் அது. அவர் மேல் உள்ள பிரியத்தால் அந்தப் பெயரை கைவிடாது தொடர்ந்தும் வைத்திருக்கிறேன்.

உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?

எல்லோருமே நன்றாக படித்தவர்கள். அம்மா 28 வயதிலும் அப்பா 30 வயதிலுமாக இறக்கும் போது எனக்கு 07 வயது. ஆனால் எனது பெற்றோர் மூன்று மொழிப் புலமை உள்ளவர்கள் என்பது எனக்குத் தெரியும்.

எத்தனை ஆண்டுகளாக கவிதைகளை எழுதி வருகின்றீர்கள்? நீங்கள் எழுதிய முதலாவது நூலை வெளியிடும் போது உங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வு எப்படி இருந்தது?

12 வயதில் இருந்து இன்றுவரை கவிதைகளை எழுதி வருகின்றேன். முதலாவது புத்தகத்தை வெளியிடும் போது சொல்லும்படி பரவசம் ஏதும் இருக்கவில்லை. பல வஞ்சனைகளையும் பொறாமைகளையும் கடந்து தான் அதை வெளியிட வேண்டியிருந்தது. அதன் பிறகு நான் சொல்லெனாத் துன்பங்களையும் அனுபவித்தேன். அதுபற்றி விரிவாக கூற விரும்பவில்லை.

இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. விடுதலைக்கனல் (1995)
02. சுவாசம் மட்டுமே சுடுகலனாய்... (2018)
ஆகிய இரண்டு கவிதை நூல்களை மட்டுமே இதுவரை வெளியிட்டுள்ளேன்.

நீங்கள் முதலாவதாக வெளியிட்ட ''விடுதலைக் கனல்'' என்ற கவிதை நூலின் பேசு பொருள் பற்றி யாது குறிப்பிடுவீர்கள்? ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

அது விடுதலைக்கான பாடல்களைக் கொண்ட கவிதைப் புத்தகம். அதனால் அவ்வாறான ஒரு பெயரைத் தெரிவு செய்தேன்.

''சுவாசம் மட்டுமே சுடுகலனாய்'' என்ற நூலின் ஊடாக வாசகர்களுக்கு விசேடமாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

என் மன உணர்வுகளின் தொகுப்புத்தான் சுவாசம் மட்டுமே சுடுகலனாய்... என்ற கவிதைப் புத்தகம். அரசியல், காதல், விரக்தி, ஏளனம் போன்ற பல்வேறுபட்ட உணர்வுகளை உள்ளடக்கிய கவிதைகளைக் கொண்டது.

உங்களது நூல்களை வெளியிட ஊக்குவித்தவர்கள் யார்?

நண்பர்கள், நலன் விரும்பிகள், முகநூல் வாசகர்கள், என் பிள்ளைகள் எனப் பலருண்டு. நானாக முயன்றால் தவிர வேறேதும் அதிசயங்கள் நடக்கப் போவதில்லை.

நீங்கள் எழுதிய கவிதைகளில், நீங்கள் அதிகம் நேசிக்கும் கவிதை எது?

பல உண்டு. நேசிப்பதால் தானே என்னால் எழுத முடிகிறது. குறிப்பாக ஒன்றைச் சொன்னால், அண்மையில் சிம்மாசனம் என்ற தலைப்பில் எழுதிய பின்வரும் கவிதை மிகப் பிடிக்கும்.

நான் கேட்காமலே
அந்த சிம்மாசனத்தை
அவர்கள் எனக்குத் தந்தார்கள்..

அது இருளாக இருந்தது..
தண்ணீரால் நிறைந்திருந்தது..
தகதகப்பாக இருந்தது..

அந்த சிம்மாசனத்தை அவர்கள்
தங்களின் அன்பின் பரிசாக
எனக்குத் தந்தார்கள்..

சிம்மாசனத்தை தந்த அவர்களே
அதற்கு காவலர்களாயும்
இருந்தார்கள்..

வேடிக்கை என்ன என்றால்
அதைத் தந்தவர்களே,  நான்
அந்த சிம்மாசனத்தை விட்டு
விக்கினம் இன்றி
இறங்கி விட வேண்டும்
என்று தான் அடிக்கடி
வேண்டுதலும் செய்தார்கள்..

அந்தச் சிம்மாசனம் எனக்கு
தகதகப்பாக இருந்தது..
சோலைகள் அற்ற தீவு அது..
ஆனால் குளிர்ச்சி இருந்தது..
நீந்தினேன்..
ஒளியற்ற கருங்குகை அது
அதனால் வெளிச்சத்தை தேடி
சில சமயம் தவமிருந்தேன்..
வெறிகொண்ட பறவையின்
சிறகுதைப்பு போல சடசடத்தேன்..

ஒருநாள்,
அந்த கருங்கடல் தீவின்
சிம்மாசனத்தை எட்டி உதைத்து
வழிகண்டு வெளியேறினேன்..
வெளிச்சத்தை முதன் முதலாக
கண்டு திகைத்தேன்..
மலைத்தேன்..
வெளிச்சத்திலும் அழுதேன்..

மறுபடியும் அந்த சிம்மாசனம்
எனக்கு கிடைக்கப் போவதில்லை..
சிம்மாசனங்கள் நிரந்தரமற்றவை..
தேடலும் வெளிச்சமுமே
நிரந்தரம் என்பதை
கற்றுக் கொண்டேன்..
புதிதாய்ப் பிறந்தேன்..
பிறந்தபோது தான்
வெளிச்சத்தில்
இன்னும் விதம்விதமான
சிம்மாசனங்கள்
வழி முழுதும் காத்திருந்தன!

கவிதைத் துறையில் ஈடுபாடு காட்டி வரும் ஈழத்துப் பெண் கவிஞர்கள் பற்றிய உங்களது பார்வை எப்படி இருக்கிறது?

இலக்கிய கர்த்தாவின் வாழ்விட அமைவும் மனநிலையுமே அந்த அந்தப் படைப்பாளர்களது கருப்பொருளாகிறது. போர்க்காலப் பதிவுகள் தற்காலத்தில் அடிபட்டுப் போக வேறு வகையான கருப்பொருட்கள் பிறப்பெடுத்துள்ளன. அதற்கேற்ப ஈழத்துப் பெண்களும் தமது படைப்புக்களை படைத்து வருகிறார்கள். பெண்கள் படைப்புத் துறைக்கு வருதல் என்பது ஒப்பீட்டளவில் குறைவு. அதை உடைத்தெறிந்து வந்தோர் தம் படைப்பின் திறத்தால் பேசப்படுவோராக நிலைத்திருக்கிறார்கள். அதி புத்திசாலிப் படைப்பாளர்கள் பலரை வறுமை கவ்விக் கொண்டுள்ளது துரதிர்ஷ்டமே.

புதுக் கவிதைக்கும், மரபுக் கவிதைக்கும் என்ன வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?

மரபுக் கவிதைகள் இலக்கண வரம்புடையது. பொருள் கொள்ளல் கடினம். புதுக் கவிதை பாமரருக்கும் நன்கு விளங்கக்கூடியது. இலக்கியம் பாமரர் வரை சென்றாலே அது வெற்றியுடையது. அந்தக் காலத்தைப் போல மரத்தடியிலும் திண்ணைகளிலும் கூடியிருந்து மரபுக் கவிதைகளைப் பிரித்துப் போதிக்க தற்காலத்தில் யாருக்கும் நேரமும் இல்லை. அவற்றை சுவைபட கேட்கவும் இளையோருக்கு விருப்பில்லை. சுவை மாறுபட்டு விட்டது.

கவிதைகளினூடாக சமூகத்துக்குள் ஏற்படுத்தக்கூடிய பல மாற்றங்களில் நீங்கள் எதை இலக்காகக் கொள்கிறீர்கள்?

புரிந்துணர்வையும் விடுதலையுணர்வையும் மனித சுதந்திரத்தையும்தான். கவிதைகள் எப்போதுமே பல்வேறு உத்திகளை தன்வசம் வைத்திருக்கும் அழகிய களஞ்சியம். அணிச் சிறப்புகளும் ஓசை நயமும் கொண்ட மனதைப் பிரதிபலிக்கும் வர்ணம். அந்த வர்ணத்தை காலத்துக்கு ஏற்ற வகையில் சமூகத்துக்குள் தீட்டக்கூடிய கூரிய ஞானத்தைக் கொண்டவரே கவிஞராகவும் இருக்க முடியும். அந்த காலமறிந்த உத்தியை எனது மனமும் எனது கவிதைகளிலே ஏந்திச் செல்கிறது. அது வாசிப்போரின் மனதில் வாசிப்பாளரின் மனநிலையைப் பொறுத்து மாற்றங்களை  ஏற்படுத்தும்.

வானொலியிலும் உங்களது பங்களிப்புக்களைச் செய்துள்ளீர்களா?

ஆம். இலங்கை வானொலியிலும் எனது பங்களிப்புக்களைச் செய்துள்ளேன். புலிகளின் குரல் வானொலி, தமிழீழ வானொலி, அவுஸ்திரேலியா தமிழ் வானொலி, நோர்வே வானொலி, கனேடிய வானொலி என எனது ஆக்கங்கள், பேட்டிகள் வெளிவந்துள்ளன.

உங்கள் படைப்புக்களுக்கு ஊடகங்கள் எந்த வகைகளில் உதவுகின்றன?

ஊடகங்கள் பெண்களின்; முன்னேற்றத்தைத் தட்டி உற்சாகப்படுத்துவது ஒப்பீட்டளவில் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அரிதிலும் அரிதான பெண்களே தம்மளவில் ஒளிர்கிறார்கள். வெளிக் கொண்டு வரப்படுகிறார்கள். வீட்டு நிர்வாகம், பிள்ளைகளைக் கவனித்தல், வேலைப் பொறுப்பு என பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து தம் திறமைகளை வெளிக்கொணரும் பெண் படைப்பாளர்களை ஊடகங்கள் வெளிக்கொணருதலே சமூக மறுமலர்ச்சி என்று சொல்ல முடியும். சமுகத்தின் அத்திவாரமாக பெண் உள்ளாள் என்பதை யாவரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அவ்வாறான பெண்ணை ஊடகங்கள் வெட்ட வெளிச்சமாக கொண்டுவர வேண்டும். அந்தவகையில் பல ஊடகங்கள் என்னை உற்சாகப்படுத்தி உதவியுள்ளன.

''நெருஞ்சிமுள்'' முழு நீளத் திரைப்படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் பற்றியும் குறிப்பிட முடியுமா?

''நெருஞ்சி முள்'' முழு நீளத் திரைப்படம். காணாமல் போன கணவனைத் தேடும் பெண்ணுக்கு ஏற்படும் நெருக்கடிகள், சமூக அழுத்தங்கள், அரசியல்வாதிகளின் சூழ்ச்சி, இனமதமற்ற மனிதாபிமானம் போன்றவற்றை கூறும் படம். இந்த முழு நீளத் திரைப்படத்தில் நானே கதாநாயகி. இலங்கையின் 15 திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியிடப்பட்ட இலங்கைப் படைப்பும் இதுவே. தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்களக் கலைஞர்களாலும் பாராட்டுப் பெற்ற படம் இது. இன வன்முறையைத் தூண்டி போரை மட்டுமே விரும்புவோருக்கு இந்தப் படம் விருப்பத்துக்கு உரியதாக இருக்காது என நினைக்கிறேன். இதில் விசேடமாக எனது இரண்டு பிள்ளைகளும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.

இலக்கிய உலகில் நீங்கள் கற்றுக்கொண்டவற்றில் இதுவரை உங்கள் நெஞ்சத்தைவிட்டு மறக்காத நிகழ்வொன்றைக் குறிப்பிடுங்கள்?

நான் தழைத்த போதே பிடுங்கி எறியப்பட்டவள். எறிந்த இடமெல்லாம் தழைக்கக் கற்றுக்கொண்டேன். என்னை எரிக்க நினைத்தவர்கள், என் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் தற்போது முகவரியற்று இருக்கிறார்கள். கடவுள் தன் கிருபையோடு என்னை கரம் பிடித்து வீழ்ந்து விடாது வழிநடத்துகிறார். 2019 இல் இந்தியாவில் பூவரசி அறக்கட்டளை என்னை அழைத்து ஷஷபாலுமகேந்திரா படைப்பூக்க விருது' தந்து கௌரவித்தது. நாடு கடந்து கௌரவம் பெற்ற அந்தப் பொழுது பேரின்பம் மிக்கது. விருதுகளுக்கு அப்பால் எனக்கு நல்ல ரசிகர்கள் இருப்பது பல மடங்கு விருதுகளுக்கு சமனானது.

உங்களுடைய எழுத்தாள நண்பர்களாக யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்? உள்ளுர், சர்வதேச எழுத்தாளர்களுடனான உங்களது தொடர்புகள், உறவுகள் எப்படியுள்ளது?

பலருள்ளனர். தனிப்பட பெயர் சுட்டி ஒருவரை ஒருவர் தவறவிட வேண்டாமென நினைக்கிறேன். புலத்திலும் புலம்பெயர் சமூகத்திலும் என்னோடு நெருக்கமான படைப்பாளர்கள் பலருள்ளார்கள். எல்லோருமே வஞ்சகம் சூதற்ற நல்ல மனமுடையவர்களாக நீடித்து நட்பாக இருக்க வேண்டுமென்பதே எனது வேண்டுதலாகும்.

கவிதைத் துறை, நடிப்புத் துறை தவிர வேறு எந்தத் துறையில் ஈடுபாடு காட்டுகிறீர்கள்?

ஊடகம். வரைதல். ஆசிரியத்துவம். ஆவணக் காணொளிகள் தயாரித்தல். அதாவது ஊடகத் துறையில் புகைப்பட ஆவணப்படுத்தல், வரைதல். காணொளி மூலமான ஆவணப்படுத்தல்களையும் செய்கிறேன். வெளிநாடு செல்லும் பெண்களுக்கு அடிப்படை ஆங்கிலத்தை படிப்பிக்கிறேன். ஓய்வுப் பொழுதுகளில் சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் எழுதுகிறேன்.

யுத்தத்துக்கு முற்பட்ட இலக்கிய முயற்சிகளுக்கும், யுத்தத்துக்கு பிற்பட்ட இலக்கிய முயற்சிகளுக்கும் இடைப்பட்ட வேறுபாடுகளாக எதனைக் காணலாம்?

யுத்தத்துக்கு முன்னராக இருந்தாலும் சரி, அதன் பின்னராக இருந்தாலும் சரி ஒன்றோடு ஒன்று தொடர்ச்சியாக இருப்பது வழமை. ஆனால் யுத்த இலக்கியங்கள் பல ஒருபக்க நியாயத்தோடும் நிறுவலோடும் மறைப்புகளோடும் பதியப்படுவது துயரமானது. அவை காலப்போக்கில் ஒரு பக்கமாகவே கருதப்படும்.

எழுத்துலகில் நீங்கள் எதிர் நோக்கும் சவால்கள் என்ன?

உண்மையை உள்ளபடி யதார்த்தமாக எழுதுவதனால் பலரது அச்சுறுத்தலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆளாகியுள்ளேன். அண்மையில் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டேன். இவை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிசிடம் அறிவிக்கப்பட்டுள்ள போதும் தொடர்கிறது. அச்சுறுத்தல் காரணமாக எனது எழுத்துத் துறை தன்னளவில் சுதந்திரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரிதிலும் அரிதாக உண்மையோடு எழுத்துலகை நேசிக்கும் பெண்களுக்கு இது மாபெரும் அச்சுறுத்தலே.

பெண்ணுக்கு உடல் ரீதியாக பாதுகாப்போடு போரட வேண்டிய தேவை மட்டுமன்றி அவள் தன் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் போராடிக்கொண்டு தான் இருக்கிறாள்.

இதுவரை உங்களுக்குக் கிடைத்த வரவேற்புக்கள், பாராட்டுக்கள், பரிசுகள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனது முதல் கவிதைக்கு உடனடியாகவே பாடசாலை ஒன்று கூடலில் பலத்த பாராட்டும் கரகோசமும் கிடைத்தது. பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், மாவட்ட மட்டமென பாடசாலைக் காலத்தில் பல முதலிடங்களை எனதாக்கியுள்ளேன். போட்டிக்கு வருவோர் தலைப்புக்கு ஏற்றது போல பெரியவர்களால் எழுதி மனனம் செய்து வந்தெழுதுவதை அவதானித்துள்ளேன். நான் அங்கு தான் என் மனதில் வந்ததை எழுதி முதலிடங்களைப் பெற்றுள்ளேன். தலைவர் வே. பிரபாகரன் அவர்களிடம் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். எனது படைப்புக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. பாலுமகேந்திரா படைப்பூக்க விருது இந்தியாவில் பெற்றேன். விருதுகள் இன்னும் என்னை நோக்கி குவியலாம். காலம் அதை பதிவு செய்யும்.

இப்போது பல அமைப்புக்களால் வழங்கப்படும் விருதுகள் தகுதியானவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றனவா?

இல்லை. பணம் கொடுத்து, முகமன் பார்த்து பகட்டுக்காக தகுதியற்ற பலருக்கும் விருது கொடுக்கும் இழிநிலைச் சமூகம் ஒன்று இன்று பரவலாகத் தோன்றியுள்ளது. அது மிகவும் வருந்தத்தக்கதே. சில இடங்களில் மட்டும் விருது என்பது தகுதி கேட்டு தானே கொடுக்கப்படுகிறது. உரிய தகுதி உடையவர்களுக்கு அது கிடைக்கிறது. பெரும்பாலும் தகுதியற்ற முறையில் செயற்பாடுகள் நடைபெறுவதாகவே பலரும் பேசிக்கொள்கிறார்கள். அது மிகவும் வருந்தத்தக்கதே.

இறுதியாக வேறு ஏதாவது சொல்ல விரும்பினால்...?

ஆயுதப் போரோடு பிறந்து, அதிலிருந்து மீண்டு, வாழ்க்கைப் போரோடும் போராடித் தழைத்து தலைநிமிர்ந்த என்னை நீங்கள் பேட்டி காண அழைத்தமைக்கு முதல்கண் நன்றிகள். என்னைப்போல நிறையவே திறமை மிக்க படைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் இனங்கண்டு ஊக்குவிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு வேண்டிய ஆரோக்கியத்தையும் வரத்தையும் கடவுள் நிறைய நிறையத் தரவேண்டுமென பிரார்த்திக்கிறேன். நன்றி!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்