பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Monday, September 23, 2013

14. திருமதி கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2013.09.08

திருமதி கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

01. உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும் குறிப்பிடுங்கள்?

கொழும்பைச் சேர்ந்த துவான் தர்மா கிச்சிலான் என்பவருக்கும், கம்பளையைச் சேர்ந்த ஸ்ரோதி டிவங்சொ அஜ்மஈன் அப்பாஸ் ரெழியா பீபிக்கும் சிரேஷ்ட புதல்வியாவேன். எனக்கு மூன்று தம்பிகளும், மூன்று தங்கைகளும் இருக்கின்றனர்.


நாங்கள் மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள். எனது தந்தை ஒரு 'காரி'யாகவும் (குர்ஆன் ஓதுபவர்), மார்க்க உபன்னியாசங்கள் செய்யக் கூடியவராகவும் இருந்ததால் ஊர்ப் பள்ளி வாசலுக்கு நிறைய சேவைகளைச் செய்துள்ளார். கபூரியா அரபுக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த எனது தம்பிக்கு அரபியில்தான் கடிதங்களை எழுதுவார். அந்தக் காலத்தில் மார்க்கக் கல்வியையும், அரபையும் கற்றுக்கொள்ள சிரமப்பட்டிருக்கிறார். அச்சுத் தொழில்தான் தந்தையின் பிரதான தொழிலாக இருந்தது.

தந்தை மலாயரான போதும் இஸ்லாமியக் கோட்பாட்டில் உறுதியாக இருந்தார். மலாய் மொழியைப் பேசினாலும் இஸ்லாமியக் கலாசாரம் பண்பாடு பழக்க வழக்கங்களைத்தான் மேற்கொள்ள வேண்டும் என தன் குடும்பத்தினருக்கிடையே பிரசாரம் செய்தார். அநேகமாக மறுப்புத்தான் வந்தது. பழக்கத்தை விடுவது கஷ்டம் என்றனர் சிலர். மார்க்கம் சொல்வது சரிதான் என்ற போதும் சிலர் அதனைப் பின்பற்ற முயற்சிக்கவில்லை. இன்னும் சிலர் தாங்கள்தான் நாகரீகமானவர்கள் என்றனர். தந்தையின் முயற்சி தொடர்ந்தாலும் தனது குடும்பத்தை அழைத்து வந்து சோனக முஸ்லிம் மக்களோடு நீர்கொழும்பு பெரிய முல்லையில் குடியமர்த்தினார்.

1950களில் எனது தாயைக் கொண்டு அயலில் உள்ள பெண் பிள்ளைகளுக்கான ஒரு கழகம் அமைத்து ஓதல், சந்தர்ப்ப துஆக்கள், தொழுகை, ஹதீஸ்கள், பேச்சு, இஸ்லாமிய கீதங்கள் இவற்றில் பயிற்சியளித்தல், போட்டிகள் நடத்தல் முதலானவைகளை நடத்தினார். ஆக்கங்களையும் தந்தையே நிர்மாணிப்பார். காலப்போக்கில் வளர்ந்த பெண் பிள்ளைகளுக்காக ஆங்கில, சிங்கள மொழி டியூஷன் வகுப்பையும் தாய் நடத்தி வந்தார். மேலும் அயலவர்களுக்கு இலவசமாக முதலுதவிச் சேவைகளையும் என் பெற்றோர் செய்து வந்தனர். இவ்வாறான குடும்பப் பின்னணியிலிருந்து உருவாகியவள்தான் நான். இத்தகைய பெற்றோர் கிடைக்கப் பெற்றதும் எனது பாக்கியம்தான். எங்கள் இனத்தவர்கள், எங்கள் உடைகளையும் பண்பாடுகளையும் பார்த்து பழித்தனர். ஓரக் கண்ணால் ஏளனத்துடன் பார்த்து ஒதுங்கியும் கொண்டனர். ஆனால் மாஷா அல்லாஹ் இன்று மலாய் சமூகத்தை அல்லாஹ் ஆன்மீக ரீதியில் விழிப்புரச் செய்துகொண்டு வருகிறான். அல்ஹம்துலில்லாஹ். இந்த நிலையைக் கண்டு களிக்க என் பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை.

02. உங்களது இலக்கியப் பணியின் ஆரம்ப காலம் பற்றியும், அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

இங்கும் எனது பெற்றோரே முதன் முதலாக உறுதுணையாக இருந்தவர்கள்.  பாடசாலையில் இலக்கிய மன்றப் பொறுப்புகள் வாய்க்க முதல், தந்தையின் வழிகாட்டலில் தாயார் நடத்தி வந்த கழகத்தில் களம் அமைத்துத் தரப்பட்டமையே எனது இலக்கியப் பணியின் ஆரம்பமாகும். அடுத்த களம் நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி ஆகும். இக் கல்லூரியில் முதல் சிரேஷ்ட மாணவர் தலைவியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இளம் வயதிலிருந்தே இலக்கிய ஆர்வமும், கலையுணர்வும், விளையாட்டுத் திறனும் இயல்பாகக் காணப்பட்டதால் அவற்றை இனங்கண்டு கொண்ட ஆசான்கள் என்னை சரிவர நெறிப்படுத்தினர். இந்த இடத்தில் முக்கியமாக திருமதி பியற்றிஸ் லூக்கஸ் பெர்னாண்டோ ஆசிரியருக்கு என்றும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில் பாடசாலை நிர்வாகப் பொறுப்பு, 6 - 11 வரையுள்ள வகுப்புக்களுக்கு மொழி, இலக்கிய, கணித பாடங்களைக் கற்பிக்கும் பொறுப்பு விழாக்களின் போதும், இலக்கிய மன்ற நிகழ்ச்சிகளை முன்வைக்கும் போதும் ஹார்மோனியத்தின் உதவியுடன் மெலடி போட்டு இசைப்பார். இசைக்கேற்ப பயிற்சிகளையும் வழங்குவார். இறுதியில் அழகிய பாடலாகவோ, நடனமாகவோ, நாடகமாகவோ, கிராமியப் பாடலாகவோ அரங்கேறும். பெற்றோருக்கடுத்த முன்மாதிரி இவரே. இவ்வாறு பாடசாலை  கலை இலக்கிய மன்ற செயலாளராகவும் 1955 - 1960 வரை மாறி மாறி பத்திராதிபராகவும் இருந்த பொறுப்பு பாடசாலைப் படிப்பு முடியும் வரை நீடித்தது.


இதே காலத்தில் கலை இலக்கிய இரச ஞானத்தை வளர்க்கும் சூழல் இருந்தது. எங்கள் வீட்டுக்கு முன்னால் அக்கால பிஷொப் கார்டினால் குரேயின் பெற்றோரின் வீட்டு வளவில் நீர்கொழும்பு கலைஞர்கள் முதல், சினிமாக் கலைஞர்களும், டொக்டர் ஹியூகோ பெர்ணாந்துவின் தலைமையில் நாடகப் பயிற்சி, இசையமைப்பு முதலானவை இடம்பெறுவது வழக்கம். இந்த சந்தர்ப்பங்களை இரவு எத்தனை மணியானாலும் நானும், என் தம்பியும் தவறவிட்டதில்லை. இதற்கு முந்திய எங்கள் குடியிருப்பு எலோ ஜயமான்னவின் சொந்தக்காரர் வீடு. நடிகை ருக்மணி தேவியின் வீடும் பக்கத்தில்தான். இங்கும் சினிமா நடிகைகள் வருகை, நடனப் பயிற்சி என்பன இடம்பெறும். சிலவேளைகளில் ருக்மணி தேவி என்னை மேசை மீது தூக்கி வைத்து விளையாடுவார். நான்கு வயதில் ஐந்தாம் ஜுஸ்உ ஓதி முடித்ததைக் கண்டு 'இந்தக் குழந்தை அரபு மொழியை அல்லாவா இப்படி கடகடவென வாசிக்கிறது' என்று புதுமைப்படுவார். மேலும் நான் ஏழு வயது முடியும் முன்னே அல்குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தந்தையிடம் ஓதி முடித்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியோ விதவிதமான மொழி, கலை, கலாசார, பண்பாட்டுக் கோளங்கள் சூழ்ந்திருந்ததாலோ என்னவோ கலை உணர்வு, இயல், இசை, நாடகத் துறை முதலான சகல துறைகளிலும் கல்லூரி வாழ்க்கை, ஆசிரியப் பணி, ஆலோசகர் சேவை யாவற்றிலும் சிறந்து விளங்கினேன். தவிர சுகயீனமுற்ற பின்னும் என் பணி மெதுவாகவேணும் தொடர்கிறது.

03. நீங்கள் வானொலியிலும், ரூபவாஹினியிலும் அதிகமாகப் பங்களிப்புச் செய்துள்ளீர்கள். அது பற்றிக் குறிப்பிடுவீர்களா?

நான் ரூபவாஹினி, வானொலி நாடகங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் சில முஸ்லிம் நிகழ்ச்சி நாடகங்களாகவும், சில சிங்கள மொழி நிகழ்ச்சி நாடகங்களாகவும் இருக்கும். இன்னும் சில இளைஞர் இதய நிகழ்ச்சி நாடகங்களாகவும் இருக்கும். பொதுவாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் நடத்தப்படுகின்ற வானொலி நாடகக் கலைஞர் தேர்வுப் பரீட்சையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஒடிஷன் ஆர்டிஸ்ட்' ஆவேன். கடைசியாக நாடகத்தில் பங்கெடுக்க ஒப்பந்தப் பத்திரம் வந்திருந்தது. பங்குபற்றக் கிடைக்கவில்லை. அந்நேரம் படுத்த படுக்கையிலேயே உயர் இரத்த அழுத்தம் காரணமாக பாரிசவாதம் கண்டு முழுமையாக செயல் இழந்துவிட்டேன். அதிலிருந்து இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்திலிருந்து தொடர்ந்து என்னுடைய முறை வரும் போது வழமையாக அனுப்புகின்ற ஒப்பந்தப் பத்திரம் அனுப்பப்படவில்லை.  பொறுப்புதாரிகளும், சக கலைஞர்களும் பத்து வருடங்களாக என்னை மறந்து விட்டிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஊனமான நிலையிலும் வானொலி நாடகத்தில் பங்கேற்று நிறைவு செய்யக் கூடிய தகுதி இன்னும் எனக்கு இருக்கிறது. அதனாலன்றோ சர்வதேச அங்கவீனர் தினத்தில் புனருத்தாபன ஆஸ்பத்திரியில் நடந்த ஓரங்க நாடகத்தில் முதலிடம் பெற்றேன். அத்தோடு சிங்களப் பாடலில் இரண்டாம் இடமும் பெற்றேன்.

மேலும் 1986 இல் வானொலி முஸ்லிம் சேவையில் இளைஞர் இதய நிகழ்ச்சி ஒன்றில் ஒன்பது பாத்திரங்கள் கொண்ட பத்து நிமிட நாடகத்தினை  நானே தனி ஒருவராக நின்று 'மிமிக்ரி' முறையில் அந்த ஒன்பது பாத்திரங்களுக்கும் குரல் கொடுத்தேன். இந்நிகழ்ச்சி பற்றி முஸ்லிம் சேவை பணிப்பாளர் இரண்டு முறை வானொலியில் பாராட்டிப் பேசியுள்ளார். இதனைக் கேட்டு ரசித்தவர்களின் பாராட்டுக்களும் நிறையக் கிடைத்தன. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளின் பின் கொழும்புத் துறையில் நடந்த ஆசிரிய ஆலோசகர் பயிற்சிப் பாசறையில் இருவர் இந்த நிகழ்ச்சியை பிரஸ்தாபித்து பாராட்டிக் கொண்டிருந்தனர். அந்தப் பாசறையில் திருமதி. நவாஸ் ஆக இருந்த நான்தான் அந்த மிமிக்ரி கிச்சிலான் என்பது யாருக்கும் தெரியாது. நான் அளவில்h மகிழ்ச்சியோடு காது கொடுத்துக்கொண்டிருந்தேன்.

இது தவிர வானொலிக்காக சிறுகதை, கவிதை, கட்டுரை, உரையாடல்கள், நாடகங்கள் முதலியவற்றுக்கான பிரதிகள் எழுதுவதுடன் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிகளிலும் இவற்றின் பங்களிப்புக்கள் இடம்பெறும். இச்சமயம் பிரதியமைத்தல், குரல் கொடுத்தல் என பங்களிப்பு நடைபெறும். அவ்வாறே மாணவர் மன்றம், இல்முல் இஸ்லாம், பெருநாள் விசேட நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு பிரதி அமைத்து, பயிற்சியுமளித்து ஏனையவர்களையும் பங்கு பெற வைத்ததுடன் நானும் பங்கு பற்றியுள்ளேன். அத்துடன் புதுக் கலைஞர்களை தோற்றுவிப்பதான சிங்கள, தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளேன். மேலும் வானொலி வர்த்தக சேவையில் (விசித்ராங்க கீ)  சிங்கள நிகழ்ச்சியிலும், 'குருகெதர' நிகழ்ச்சியிலும் விசேட நிகழ்சசிகளின் போதும் மெல்லிசை, கிராமிய சஞ்சிகை இளைஞர் இதயத்திலும் பாடியுள்ளேன்.

04. சிங்கள் மொழியில் தேர்ச்சி பெற்றுள்ள நீங்கள் அந்த மொழி மூலம் எத்தகைய பங்களிப்பினை செய்து வருகின்றீர்கள்?

எனது சிங்கள மொழித் தேர்வை விசேட தகைமையாகக் கொண்டே ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெற்றேன். அல் ஹிலால் மத்திய கல்லூரியின் சிங்கள மொழிப் பிரிவு பாடசாலையிலும் கற்பித்துள்ளேன். இந்தப் பிரிவில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளிலும், இஸ்லாமிய விசேட தின விழாக்களின் போதும் சிங்கள மொழி மூலம் நிகழ்ச்சிகளை அமைத்து, பயிற்றுவித்து வழிப்படுத்தல் இடம்பெறும்.

ஒரு காலத்தில் அமைச்சுக்கோ, காரியாலயத்துக்கோ கடிதப் பரிமாற்றங்கள் சிங்களத்திலேயே இடம்பெற வேண்டிய நிலை இருந்தது. இக்காலத்தில் சம்பளப் படிவங்கள் முதற்கொண்டு அவ்வப்போது தேவையான சகல காரியாலயக் கடிதங்களை எழுதும் பொறுப்புக்களை அதிபர், என்னிடமே ஒப்படைத்திருந்தார். சில வேளைகளில் கல்விக் காரியாலயங்களினால் தமிழ், முஸ்லிம் பாடசாலை ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகள், அறிவித்தல்கள் கொடுக்கும்போது மொழிபெயர்ப்புக்காக என்னையே அழைப்பார்கள்.

19991 இல் 'சஹன' என்ற சிங்களப் பத்திரிகையில் எனது முதல் சிங்களக் கட்டுரை வெளியானது. அதாவது 'வெளிநாட்டுக்கு பணிப் பெண்களாக செல்வோருக்கு பயிற்சிகள் அவசியப்படுவது ஏன்?' என்ற தலைப்பில் அக்கட்டுரை சிங்களத்தில் எழுதப்பட்டது. பொதுவாக என் வாழ்க்கையோடு, தொழிலோடு சம்பந்தப்பட்ட எந்த இடத்திலானாலும் அந்நிய சமூகத்தினர், எம் சமூகத்தைப் பற்றியோ, கலாச்சார பண்பாடுகள் பற்றியோ தவறான கருத்துக்களை வெளியிடும்போது அதை தெளிவுபடுத்த சிங்கள மொழியே எனக்கு உதவியது. மேலும் நான் 'மீப்புர' சிங்கள பத்திரிகையின் எழுத்தாளருமாவேன். அதுபோல இலங்கை ரூபவாஹினியில் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவில் நடைபெற்றுவந்த 'சிதி ஜய' என்ற சிங்கள நிகழ்ச்சியினூடாக அநேகமான முஸ்லிம் கலாசார நிகழ்ச்சிகளை சிங்கள மொழி மூலம் முன்வைத்துள்ளேன்.

05. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் சிங்கள மொழியிலும்  ஆயிரக்கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ள உங்களது நூல் வெளியீட்டு முயற்சிகள் எதிர்காலங்களில் எப்படி இருக்கும்?

அல்லாஹ் தான் அறிவான். எனது பெருளாதார தகுதிகளுக்கு மிஞ்சின ஒன்றாகவே இன்று நடக்கின்ற நூல் வெளியீட்டு விழா சம்பிரதாயங்களை எண்ணுகின்றேன். உடல் நலமற்ற, ஆள் வளமற்ற, தனித்த எனக்கு பண பலத்தை வலிந்து தேடினாலும், அது எட்டாக்கனி போலத் தோன்றுகின்றது. ஆதலால் அதற்காக கொட்டாவி விட்டுக் கொண்டிராமல் எனது ஆயிரக்கணக்கான எழுத்தாக்கங்களை எழுதிக் கொண்டுதான் இருக்கின்றேன். கையெழுத்துப் பிரதிகளாக அவை தூங்கிக் கிடக்கின்றன. புத்தக வெளியீடு அரங்கேறும் நாள் பற்றி அல்லாஹ்வே அறிவான்.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். இலங்கையில் முன்னணியிலுள்ள சுதேச வைத்திய நிபுணர்களால் நடத்தப்பட்டு வருகின்ற ஊனமுற்றோர் சங்கம், விசேட தினங்களில் ஊனமுற்றோரை வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று காட்சிப்படுத்துவதில் உள்ள அக்கறை, ஊனமுற்றோரின் வளம் குறைந்த நிலையிலும், வலுவிழந்த கைகளைப் பயன்படுத்தி ஆக்கங்களை வெளிக்கொண்டு வந்து அவர்களது ஆன்ம பலத்தை மேம்படுத்துவதில் இல்லை.

பாரிசவாதம், புற்று நோய், மாரடைப்பு ஆகிய நோய்களோடு இன்னும் சில நோய்கள் ஒன்றன்பின் ஒன்றாக என்னைப் பீடித்துக் கொண்டன. இறுதியாக நடந்த சத்திர சிகிச்சைக்கு முன்பு என்னைப் பிழைக்க வைக்க முடியாத சாத்தியக் கூறுகள் இருப்பதால் வைத்தியர்களால் உபதேசிக்கப்பட்டேன். என் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வாங்கினர். குடும்பத்தில் பொறுப்பு தாரியிடமும் கடிதம் வாங்கினர். எனது சிக்கலான நிலையை ஒரு பெண் டாக்டர் நாசூக்காக விளக்க முற்பட்டார். நான் அவரிடம் 'டாக்டர் எனது நிலைமை எனக்குத் தெரியும். நான் விரும்பித்தான் இந்த சத்திர சிகிச்சை பெற்றுக்கொள்ள முனைந்திருக்கிறேன். வைத்திய விஞ்ஞானப்படி உங்களால் முடிந்த மேல்மட்ட முயற்சிகளை எல்லாம் மேற்கொள்ளுங்கள். எது நடந்தாலும் சரியே. உங்கள் அனைவராலும் எனது உயிரைப் பிடித்து நிறுத்த முடியாது. அது இறைவன் கைவசம் உள்ளது' என்றேன். டாக்டர் அவரது பெருவிரலை உயர்த்திக் காட்டியமை 'சரியாகச் சொன்னீர்கள்' என்றவாறு இருந்தது. அதிசயமாக நீண்ட நேரம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மறுநாள் ஆப்ரேஷன் முடிந்ததும் மாரடைப்பால் துடிதுடித்து உயிருக்காகப் போராடியிருக்கிறேன். எனக்கு நினைவு திரும்ப மூன்று நாட்கள் ஆகின. இறைவன் அருளால் மீண்டுவிட்டேன். பாரிசவாதத்தால் 11 வருடங்களாக நடக்க முடியாமல் வலது பக்கங்கள் முற்றாக செயலிழந்த நிலை. இடது பக்க கை, கால்கள் சிறிதளவு இயக்கம் கொண்டுள்ளன. எப்படியோ இறைவனின் சோதனையோ, வேதனையோ என்னை அணுகிவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை பாவமன்னிப்பு தேடிக்கொள்ளும் சந்தர்ப்பமாக பொறுமையுடன் ஏற்கிறேன். இப்படியான நிலையில் நான் இருக்கும் போது எனது புத்தகம் வெளியிட வேண்டும் என்ற கனவை எப்படி தனியாக நிறைவேற்றிக்கொள்வது? இறைவன்தான் உதவி செய்ய வேண்டும்.

06. தற்போது இயங்கி வரும் இலக்கிய அமைப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆமாம் நினைக்காதிருக்க முடியுமா? மழை பெய்தால்தான் காளான்கள் முளைத்து, மாலையாகும்போது அதன் நிலைமை கெட்டு விடுவதை பார்க்கிறோமல்லவா? இலக்கிய அமைப்புக்களின் நிலையும் அப்படித்தான். விழா என்றால், வெளியீடு என்றால், மாநாடு என்றால் இந்த அமைப்புக்கள் உஷாரடையும். தலையெடுத்தது போக இன்னும் ஒரு காத்திரமான அமைப்பு வீராப்புடன் எட்ட நின்று பார்த்திருக்கும். எல்லாப் பகுதிகளிலும் அமைப்புக்களின் தோற்றப்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். எல்லா அமைப்புகளுக்குள்ளும் ஒற்றுமையான கூட்டமைப்பு உருவாக வேண்டும். இலங்கையில் தேசிய ரீதியாக நடக்கும் கலை இலக்கியப் போட்டிகள், முஸ்லிம் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடைபெறுகின்ற கலை, கலாசார இலக்கியப் போட்டிகள் பற்றி இந்த எல்லா அமைப்புக்களும் தெரிந்திருத்தல் வேண்டும். விருதுகளும், அவ்விருதுகளை அடைவதற்கான தகைமைகள் பற்றிய தெளிவையும் பெற்றிருக்க வேண்டும்.

நவீன முஸ்லிம் இலக்கியப் படைப்புகள் தோன்றக் கூடியதான கேள்விகளை பிறக்கச் செய்தல், சுய ஆக்கங்களையும் வரவேற்று மதிப்பீடு செய்தல், சிரேஷ்ட கலைஞர்களையும், கல்விமான்களையும் கொண்டு தலைநகரில் மாத்திரமல்ல நாட்டின் எல்லாப் பாகங்களிலும் பயிற்சிப் பாசறை இந்த அமைப்புக்களினூடாக நடத்தப்பட வேண்டும். கலை இலக்கியவாதிகளை பதிவுசெய்து அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இலங்கையில் சகோதர சமூகத்தில் காணப்படுவது போல கலைஞர்கள் (சினிமாக் கலைஞர்கள் மாத்திரமல்லர்) மதிக்கப்பட வேண்டும். அவர்களில் வயோதிபக் கலைஞர்கள், குருட்டு, செவிட்டு, முடக் கலைஞர்கள் போன்ற இயலாதவர்களின் ஆக்கங்களை வெளியிட்டுக்கொள்ளவும், நலன்புரி சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் கூடியதான கூட்டுறவு நிதியமைப்பின் தேவை தேசிய ரீதியாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். தேசிய ரீதியாகவோ, சர்வதேச ரீதியாகவோ விழாக்களை ஆடம்பரமாக்குவதைக் கட்டுப்படுத்தி ஆக்கபூர்வமான செயல்களுக்கு மூலதனம் இட வேண்டியது புத்திசாலித்தனமானதும், காலத்தின் தேவையுமாகும். எந்த விதத்திலும் இவ்வமைப்புக்கள் அரசியலை சார்ந்திருக்கக் கூடாது. இதுவே என் கருத்தாகும்.

07. உங்களுக்குப்பிடித்த எழுத்தாளர்கள் யார்? ஏன்?

சிரேஷ், கனிஷ்ட, புதிய, சிறிய சகல எழுத்தாளர்களையும் மதிக்கின்றேன். அவர்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். ஏனெனில் எல்லோராலும் எழுத்தாளராக முடியாது. எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பலதரப்பட்டவை. அதன் ரகங்கள், ரசங்கள் பல வகை. கனிகள் பலதரப் பட்டவையானாலும் அனைத்தும் நாவுக்கு ருசியானவையே. அதுபோலவே எழுத்துக்களும். எழுத்துக்களை ஆழ்ந்து படித்தால்தான் அதன் ஆழமும், ரசமும் புரியும். படைப்புக்களைத் தரும் எழுத்தாளர்கள் யாவரும் மதிக்கத்தக்கவர்களே.

08. தற்போதைய இளம் பரம்பரையினர் கலை கலாசார இலக்கிய அம்சங்களில் ஈடுபாடு காட்டுவது மிகக் குறைவு. இந்த நிலை பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

இளம் பரம்பரையினரின் கலை கலாசார இலக்கிய அம்சங்களின் ஈடுபாடு குறைவதற்கு நான் அவதானித்த வகையில் மொழி வளமின்மை, பெற்றோர், ஆசிரியர்களின் ஊக்குவிப்பு இன்மை என்பனவும் காரணமாகும். இவர்கள் இலக்கிய அறிவில் இருந்து தூரமாகிக் கொண்டிருக்கின்றனர். மொழியோடு சம்பந்தப்பட்ட பாடப் புத்தகங்களில் கூட இலக்கிய ரசனை ஊட்டக்கூடிய விடயங்கள் தாராளமாக உண்டு. அவற்றை பிரயோகத்தில் கொண்டு வர சங்டப்படுவது ஏனோ? பாடசாலைச் சூழல் ஒரு இலக்கிய சூன்ய ஸ்தானமாகிவிட்டால் மாணவர் உள்ளங்களில் சுய நிர்மாணங்கள் உதயமாவது எப்படி? 'வாழ்க்கையில் இருந்து தூரமாகிய இலக்கியம் ஒன்றில்லை. இலக்கியம் என்பது ஆகாயத்தில் தொங்குகின்ற எதுவுமில்லை' என யாரோ சொன்னதை நானும் சொல்கின்றேன்.

09. நலன்புரி நிலையத்தில் தாங்கள் புரிந்த சேவைகள் பற்றி குறிப்பிடுங்கள்?

நான் 'பாத்திமா வெல்பெயார் சென்டர்' என்ற நலன்புரி நிலையத்தில் சேவையாற்றினேன். இது அகில இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தினால் நடத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களில் ஒன்றாகும். ஆசிரிய உலகத்திலும், வெளியிலும் பெற்ற அனுபவங்களை எல்லாம் திரட்டிப் பிரயோகித்து பாத்திமா நலன்புரி நிலையத்தினை வளர்த்துச் செல்ல என்னை நான் திருப்தியோடு அர்ப்பணித்துக் கொண்டேன். இறையச்சத்தில் உறுதியற்ற, இறை கட்டளைகளை மீறி நடக்கும் ஒரு சிலரால் பல்வேறு சோதனைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. அவற்றுக்கு எல்லாம் சளைக்காது இறைவனிடமே முறையிடுவேன்.

இங்கு எனது கடமைகள் பலவாயின. யாரும் என்னை வற்புறுத்தி வேலைகளை செய்யும்படி சொல்லவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி நானாகவே அவசியத் தேவைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து நிறைவு செய்வேன். எனது பெண் ஊழியர்களை சம்பளத்துக்கான சிரமம் போக, மேலதிக பணிகளைச் செய்ய அவர்களுக்கு மனத் திருப்தி, இறை திருப்தி பற்றி சொன்னமை உதவியாயிற்று. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நானும் இவர்கள் கூடவே இயங்கி வருவதால் யாரும் அலுத்துக் கொள்வதில்லை. இல்லத்தின் உள்ளகப் பொறுப்புக்கள்    இவ்வாறு நிறைவேற்றுவதைக் கண்ட உயர்மட்ட நிர்வாக சபை என் சேவைகளைப் பாராட்டியது.

10. இதுவரை நீங்கள் பெற்றுள்ள பரிசுகள், விருதுகள் பற்றி குறிப்பிடுங்கள்?

நான் ஒன்பது வயதிலிருந்து இதுவரை பெற்றுள்ள பரிசுகள் ஏராளம். பல துறைகளிலும் நான் பெற்ற பரிசுகளுக்குரிய சான்றிதழ்கள் என்னால் சுமக்க முடியாதளவு உள்ளன. இவற்றில் நான் நடக்க முடியாதபடி, எழுத முடியாதபடி ஊனமானதன் பின்னால் மெல்ல மெல்ல பலமில்லாத இடது கையின் சிறிய அசைவாட்டத்தின் இசைவில் கிறுக்கியவற்றுக்கு பெற்ற இலக்கியப் பரிசுகளையே மிகச் சிறப்பானவையாகக் கருதுகிறேன்.

தற்போதைய கலாசார அமைச்சினால் நடத்தப்படுகின்ற இலக்கிய கலைப் போட்டிகளிலே திறந்த பிரிவில் 2007 இலிருந்து வருடாந்தம் வெற்றிக்குரிய இடங்களைப் பெற்றுள்ளேன்.

* 2009 கலாபூஷண விருது கிடைத்தமை
* 2012 ஞானம் சஞ்சிகை சர்வதே ரீதியில் நடத்திய போட்டியில் 7 ஆம் இடம் பெற்று ஆறுதல் பரிசு கிடைத்தமை
* அல்ஹஸனாத் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆறுதல் பரிசு
* ஓசையில் ஆக்கக் கவிதை போட்டியில் சிறப்புச் சான்றிதழ்

இது தவிர பட்டியல் படுத்தி சொல்ல முடியாதளவு இன்னும் பல பரிசுகள், சான்றிதழ்கள் கிடைத்திருக்கின்றன!!!

தொடர்புகளுக்கு:-

Mrs. Kitchilan Amathur Raheem
56/9, Moor Street, Negombo.

Phone – 0772499707, 0314925157


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Thursday, April 18, 2013

13. திருமதி பவானி வேதாஸ் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2013.11.17

திருமதி பவானி வேதாஸ் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கண்டி நகரில்தான். படித்தது கண்டி நல்லாயன் மகளிர்க் கல்லூரியில். எனது தகப்பனார் றேல்வேயில் புகையிரத நிலைய பிரதம அதிபராகப் பணியாற்றியவர். எனது தாயாரின் ஊர் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருவாடானை. தகப்பனாரின் தகப்பன் சிவகங்கையில் இருந்து இலங்கை வந்தவர். பெற்றோரின் தகப்பனார்கள் பெரிய கங்காணிகளாக இருந்தவர்கள். படிப்பறிவற்ற இருதரப்பு தாத்தாமாரும் தம் பிள்ளைகளை அக்காலத்திலேயே ஆங்கில மொழி மூலம் கல்வியைக் கற்க வைத்திருந்தமை வியப்பான உண்மை.

 உயிரியல் பிரிவில் பல்கலைக்கழக அனுமதி கிட்டாததில் நான் விஞ்ஞான ஆசிரியையானேன். கலைப்பிரிவில் பட்டத்தையும், பட்டப் பின் படிப்பையும் தொடர்ந்து பூரணப்படுத்தினேன். எனது கணவர் கந்தப்பளை சிமிர்னா ஆலயத்தின் தலைமைப் போதகர். ஸிந்து கன்யா என்பது என் அன்பு, ஆசை, ஆஸ்தி அனைத்துக்கும் சொந்தமான என் ஒரே மகள்.

நீங்கள் இலக்கியத்தில் நுழைந்த முதல் தருணம் பற்றி?

2003 ஆம் ஆண்டு 83 இனக்கலவரம் முடிந்த இருபதாவது ஆண்டு. சிங்களவர்கள் தமிழர்களுக்கு செய்த கோர அட்டுழியங்களை எல்லாரும் மறுப்பு எழுதி, பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு தெரிந்த ஒரு சிங்கள இளம் பெண், தான் பணியாற்றிய வடபுலத்தைச் சார்ந்த ஒரு குடும்பத்தாரின் உடமைகளைக் காப்பற்ற முயன்றாள். முடியாமல் போனதில் புகைவண்டி முன்னே பாய்ந்து உயிரையே விட்டு விட்டாள். வெறும் 17 வயதுப் பெண். கள்ளமே இல்லாத அந்த சிங்கள யுவதியின் தியாகத்தை எழுதுவது என் கடமை என எண்ணினேன். பிரசுரமாகும் என எதிர்பார்க்கவில்லை. சிங்களவர்களின் கெட்டதையே எல்லாரும் பேசும் போது, இல்லை தமிழர்கள் பொருட்டு தம் உயிரையும் கொடுக்கும் அளவு சிங்களவர்களில் நல்லவர்கள் உண்டு என நான் கண்ட விடயத்தை எழுதத் துணிந்தேன். `நீத்தா' என்ற அப்பெண்ணை இட்டு நினைவில் நீங்காதவள் என்ற தலைப்பில் உண்மைச் சம்பவத்தை எழுதினேன். வீரகேசரியில் திருமதி. ரேணுகா பிரபாகரன் அதை பிரசுரித்தது முதல் பவானி என்ற என் மூன்று எழுத்துப் பெயரும் சின்னதாக, மிகச் சின்னதாக எழுத்துத் துறையில் மின்ன ஆரம்பித்தது.

இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் வெற்றிகராமானதாக இருந்ததா?

இல்லவே இல்லை. என் எழுத்துக்கள் எவையுமே அச்சாகிடவே இல்லை. 87 ஆம் ஆண்டளவில் அல்பிரட் கிருஷ்ணப் பிள்ளையைப் பற்றி `கிறிஸ்தவ கம்பர்' என எழுதிய ஆக்கம் ஒன்று `சிந்தாமணி' பத்திரிகையில் புகைப்படத்துடன் பிரசுரமானது. அவ்வளவேதான்! `ஏன் என் ஆக்கங்கள் பிரசுரமாவதே இல்லை' என எனக்கும் புரியவே இல்லை. சில ஆக்கங்களை வாசிக்கையில் `இதைவிட நன்றாகத் தானே எழுதுகிறோம்' என சுய பச்சாதாபமும் தோன்றும். காலஞ்சென்ற ரூபராணி ஜோசப் அவர்கள் சாகித்திய விருதுகள், உட்பட பல உயரிய பட்டங்களை, எழுத்து, பேச்சு, கவிதை என்பவற்றுக்காக ஈட்டியவர். அவர் என் குரு. அவர் என்னைக் காணும் போதெல்லாம் ஷஎழுதும், எழுதும் நீர் பாடசாலைக் காலங்களிலும் எழுதியவர்தானே| என ஊக்குவித்தார். `எதுவுமே பிரசுரமாகவில்லையே மிஸ்' என நான் நொந்து சொன்னேன். 'அப்படி சொல்லாதேயும். அறிஞர் அண்ணாவைப் பாரும்' என புள்ளி விபரங்கள் வழங்கி வழிப்படுத்தினார்.

ஏன் இப்போதும்கூட வீரேகேசரியைத் தவிர வேறெதிலுமே என் சிறுகதைகள் வெளிவராதது வருத்தம்தான்.

நீங்கள் எழுத்துலகில் செய்த பணிகள் பற்றி குறிப்பிடுவீர்களா?

இலங்கை வேதாகமக் கல்லூரி பேராதனை, சில ஆங்கில புத்தகங்களை தமிழாக்கம் செய்யும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். விஞ்ஞான ஆசிரியை என்பதால் விவசாய காடாக்கம், எச்.ஐ.வி என்பவற்றை மிகவும் ஆர்வமாக செயலாற்ற முடிந்தது.

விசுவாசிகளுக்கு வழிகாட்டி, சமாதான உருவாக்கம் போன்ற சமய சார்பான நூல்களையும் மொழிபெயர்த்து உள்ளேன். முரண்பாடுகளுக்கு மத்தியில் பெண்கள் என்ற புத்தகம், என் மொழி பெயர்ப்பில் என்னை மிகவும் பாதித்த நூல். சிங்கள மிஷனரிப் பெண்மணி ஒருவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பெண்களுக்காக பரிந்து எழுதி இருந்தார். தானியேல் என்பது இலங்கையில் பிரபல கிறிஸ்தவ ஊழியரின் நூல். இவற்றை தமிழில் மொழியாக்கம் செய்திட தேவன் என்னைத் தெரிந்துக் கொண்டதற்காக தாழ்மையுடன் நன்றி சொல்கிறேன். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வேறு பணிகள் எழுத்தளவில் ஆற்றவில்லை.

சிறுகதை சார்ந்த உங்களது நிலைப்பாடு என்னவென்று சொல்லுங்கள்?

`உள்ளதை உள்ளது என்றும், இல்லாததை இல்லை என்றும் சொல்ல வேண்டும்' என வேதாகமத்தில் ஒரு வசனம் இருக்கிறது. சமூகத்தில் நாம் சந்திப்பவற்றில், நாம் காணாது தவறுகிற பக்கங்களும் இருக்கின்றன. அதைக் கண்டுகொள்ளும் போது `அச்சச்சோ! பாவமே!' என மனம் தயவு பண்ணும். அதைச் சுட்டிக் காட்டி மற்றவர்களை நெகிழ்வாக்கி உணரப் பண்ண வேண்டும்.

உதாரணமாக நான் அறிந்த ஒரு பெண்மணி, எல்லாருமே அவளிடம் கணிசமான உதவிகளைப் பெற்றுக் கொண்டே, ஷபிழையானவள்| என அவள் இல்லாத இடத்தில் தூற்றுவார்கள். ஒரு வெசாக் தினம் அவள் குடியிருந்த தெருவில் நான் நடந்துபோன போது அவள் தன் பலகை வீட்டில் இருந்துகொண்டு படைத்தவரிடம் கண்ணீருடன் வாய்விட்டு மன்றாடும் சத்தம் பாதைக்கே கேட்டது. பலரும் காணத் தவறிய அவள் பக்தியை என் எழுத்து மூலம் பறைசாற்றிச் சொல்ல வேண்டும். ரசனைக்காக மிகைப்படுத்தவும் கூடாது. குறைத்திடவும் கூடாது. ஏனெனில் என் எழுத்துக்கள் நிஜ நபர்கள். நனவு சம்பவங்கள்.
 
சிறுகதைகளினூடாக சமூகத்துக்கு நீங்கள் சொல்ல விளைவது என்ன?

சமூகம் எனக்கு சொன்னவற்றை, தந்தவற்றை நான் அப்படியே எழுத்தாக்குகிறேன். சமூகத்துக்கு சொல்லும் அளவுக்கு எனக்கு ஆற்றல், சக்தி கிடையாது. வாழ்க்கை எனக்கு தந்த நோவுகள், அந்த வலிகளின் ஊடாகவும் நான் ரசித்தவைகள், இழப்புகள், இழப்புகளிலும் சில பூரணத்துவங்கள்... இப்படி பழக்கமாகிவிட்டது. யுத்தம் - வடக்கில், கிழக்கில் விதவைகள் எனும் போது, ஆமாம் இங்கேயும் பாருங்கள் சிங்கள விதவைகள்... என காட்ட முயல்கிறேன். பெற்றவள் புகைப்படத்தை காட்டியபடி ஷகண்டு பிடித்துத் தாருங்கள்| என கதறுகையிலும், அழுதுகொண்டே ஷகாணியை உங்களுக்கே விற்கிறோம். ராணுவத்திற்குப் போய் இறந்து போன எம் இரண்டு மகன்மாரின் கல்லறைகளை மட்டும் தயவு செய்து இடித்து விடாதீர்கள். அதற்காக காணிக்கு உரிய பணத்தை கணிசமாக குறைக்கவும் தயார்| என காது கேளாத தகப்பனும், தளர்ந்த தாயும் நம் பகுதியில் மன்றாட்டமாக கெஞ்சுகையிலும்; அதை எழுத்தில் சொல்ல வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

இன்றைய புதிய எழுத்தாளார்களின் படைப்புகளின் தரம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

புதிய எழுத்தாளர்களில் ஒரு சிலர் அசர வைக்கிறார்கள். நன்றாக இருக்கிறது என வியந்து சிலாகிக்கப் பண்ணி, அவர்களது பெயரைப் பதியப் பண்ணுகிறார்கள். பலர் அயரப் பண்ணுகிறார்கள். மொழி வளம் இல்லை. அரைத்த மாவையே அரைப்பது போல புதிய கற்பனைத் திறன் ஏதுமின்றி... `எப்படி இவை பிரசுரமாகின்றன?' என வியப்பாக இருக்கும்.

நீங்கள் எவ்வகையான கருக்களை கையாண்டு சிறுகதைகளை எழுதுகின்றீர்கள்?


உண்மை சம்பவங்கள்தான் என் கருக்கள். சிறு வயது முதலே டயறி எழுதும் பழக்கம் எனக்கு இருந்தது. மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது இல்லை. அப்படி சொன்னவை கேட்பவர்களால் நிலைமையை மேலும் மோசமாக்கிய அனுபவங்களே நேர்ந்தன. எனவே என்னை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை என பக்கம், பக்கமாக என் உணர்வுகளை எழுதினேன். ஜெயகாந்தன் கதைகள் அவர் மீது பயம் கலந்த மரியாதையை எனக்கு ஏற்படுத்திற்று. வித்தியாசமான நடை முறை சம்பவங்களை எனக்குள் வாங்கிக்கொள்ளவும் எழுத்துக்களில் வெளிப்படுத்தவும் முடிந்தது. கற்பனை பண்ணிக்கொண்டு சிரமப்படவே தேவையில்லை. சுற்றிலும் நம் முன்னே நடமாடும் சகலரும், நிகழும் சகலதும் கதைகளில் கருக்கள்தான்.

இலக்கிய படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

என் அளவில் என் சிறுகதைகளுக்கோ, என் புத்தகத்துக்கோ பிரசுரமான எந்த ஒரு வேளையிலும் விமர்சனம் கிட்டவில்லை. எதை தவிர்த்திருக்கலாம் எவற்றை சேர்த்திருக்கலாம் என்னுடைய எழுத்துகளின் (பிளஸ்) என்ன? - (மயினஸ்) என்ன? என்றெல்லாம் யாரவது ஆக்கபூர்வமாக சொல்ல மாட்டார்களா என்று ஏக்கமாக உணர்வது உண்டு.

விருதுகள் எனும் போது சிலரின் பெயர்கள் மனனமாகும் அளவு மறுபடி, மறுபடி இடம் பெறுகிறது என எண்ணும் படியாக உள்ளது.

சில இலக்கிய அமைப்புக்கள் வசதி குறைந்தவர்களின் நூல்களை பிரிசுரித்து வருகின்றன இவ்வாறு பிரசுரமாகும் நூல்களின் வடிவமைப்பு, தரம் பற்றிய என்ன சொல்வீர்கள்?

என் ஷவிடுமுறைக்கு விடுமுறை| சிறு கதைகளின் தொகுப்பு ஷபுரவலர் புத்தகப் பூங்கா|வினரால் பிரசுரிக்கப்பட்டது. நூல் அமைப்பு, வடிவம், தரம் வெகு நேர்த்தி என்றே எல்லாரும் புகழ்ந்தார்கள். சிலரைப் பொறாமை கொள்ளச்;; செய்யும் அளவிற்கு அமைந்திருந்தது. வேறு பிரசுர நூல் அமைப்பு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதுதான் உண்மை.

அவ்வாறு இலக்கிய அமைப்புகளினூடாக புத்தகம் வெளியிட்டதையடுத்து நீங்கள் இதுவரை இன்னொரு நூலை சுயமாக வெளியிடக்கூடிய நிலைப்பாடு நிலவுகிறதா?

முற்றாகவே இல்லை. யாருமே புத்தகங்களை விலை கொடுத்து வாங்கி, வாசிக்க முன் வருவது இல்லை. கதைகள் வாசிக்கும் ஆர்வமும் மிகவும் குறைந்து போய்விட்டது. ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் என்ற மட்டத்தில்கூட என் புத்தகத்தை பணம் கொடுத்து வாங்கியது திலக லோஜினி என்கிற ஒரே ஒரு ஆசிரியைதான். அதே போன்று ஆலயத்தில் போதகர்கள், விசுவாசிகள் என்ற தோதாவில் ஒரே ஒரு இளம் பெண், கிறிஸ்தவ எழுத்தாளர்கள் கருத்தரங்கு ஒன்றின் போது வாங்கிக் கொண்டாள். எல்லோரும் இலவசமாக வாங்கிக் கொள்ளவே எதிர்பார்க்கிறார்கள். இல்லாவிட்டால்  வாசித்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறார்கள். அடுத்த வெளியீட்டுக்கு பணம் எங்கே கிடைக்கிறது?

விடுமுறைக்கு விடுமுறை என்ற சிறுகதை நூலை வெளியிட்டதையடுத்து நீங்கள் இதுவரை இன்னொரு நூலை வெளியிடாமைக்கு காரணம் என்ன?

நூல் வெளியீட்டுக்கு மறு மாதமே நான் ஷஸ்டோரோக்கால்| பாதிக்கப்பட்டு பிழைக்க மாட்டேன் என்கிற அடைமொழியுடன் மருத்துவ மனையில் அனுமதி பெற்றேன். இடது கண் முற்றாக ஷபார்க்க மாட்டேன்| என மூடிக்கொண்டது. காது மடலை எட்டிப் பிடித்திட உதட்டுக் கோணல் முயன்றது. எல்லாருமே அதிசயிக்கும்படி நான் நம்பி நமஸ்கரிக்கிற தேவன் மீள்வதற்கு உதவினார். வகை, வகையாய் மருத்துவ பரிசோதனைகளும், வித விதமான வில்லைகளும்... எனப் போராடும் போது நிரம்ப கஷ்டம், மனதுள்ளும் வெளியிலும். என் ஒரே பெண்னை அடுத்த ஸ்டோரோக்குக்கு முன் ஒழுங்குப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம், கண்டி வீட்டை வாங்கிடும் தேவை, பெண்ணின் திருமணம் என நடுத்தரமான ஒரு நோயாளி ஆசிரியையின் சாதனைகள் ஆகின. வீரகேசரியில் வெளியான பல கதைகள் அடுத்த புத்தக வெளியீட்டுக்கு தாரளமாகவே இருக்கின்றன. கர்த்தர் தம் சித்தப்படி, திட்டத்தின்படி வழி நடத்துவார்.

இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க இயலாத சம்பவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

ஷமலையக தமிழ் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தேவை| என்ற பத்திரிகை விளம்பரம் ஒன்றைக் கண்டேன். வீரகேசரியில் வெளியான
பத்திரிகை சேமிப்பில் இருந்து எனது சிறுகதைகளை அப்படியே அனுப்பி வைத்தேன். தமிழ் நாட்டில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நம் நாட்டு பிரபல எழுத்தாளர் தம் ஆய்வுக்கு அவற்றை பயன்படுத்திக் கொண்டதாக கண்டியிலுள்ள அவர் நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். நம் எழுத்து அப்படியெல்லாம் கூட பயன்படுகிறதே! என்பதில் மகிழ்ச்சி. ஆனாலும் என்ன ஏது எப்படி என எதுவுமே தெரியாமலே போய்விட்டமை மிகவும் வேதனை.

கனகசெந்தி கதா விருது கிடைத்த கதைகளை எல்லாம் தொகுத்து மீரா பதிப்பகத்தார் ஒரு புத்தகமாக வெளியிடப் போவதாகச் சொல்லி ஷஎன் இனிய தோழனே| கதையை பிரசுரிக்க அனுமதி கேட்டிருந்தார்கள். என் எழுத்தை புத்தகத்தில் காண ஒரு வாய்ப்பு என வழமைபோல் ஆண்டவருக்கு நன்றி சொன்னேன். பிறகு எந்த தகவலும் இல்லை. பிற்பாடு ஒரு சந்தர்ப்பத்தில் என் வகுப்பு மாணவன், தான் ஒரு கண்காட்சிக்குப் போயிருந்த போது என் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டிருந்ததால் அந்தப் புத்தகத்தைத் தன் பணத்தில் வாங்கிக் கொண்டு வந்து காட்டினான். என் கதை உள்ளே இடம் பெற்றிருந்தது.

பத்திரிகையில் விருது விபரத்தோடு சரி. கதைக்கும் பிற்பாடு அந்த புத்தகத்துக்கும்கூட விருது வழங்கப்பட்டதாக தகவல்கள் அறிந்தேன். விருதுகளை விடுங்கள் ஆகக் கடைசியாக ஒரு புத்தகப் பிரதியையாவது எனக்கு அனுப்பியிருக்கக் கூடாதா? 

மலையக பிரபல எழுத்தாளர்கள் ஒரு சிலருடன் தொடர்பு கொண்டேன் என் புத்தகத்தையும், வெளிவராத கதைகளையும்கூட அனுப்பினேன். தினகரன், தினக்குரல் என்றும் கூட கதைத்தும் பார்த்தேன். மலையக சாகித்திய விருதுக்குப்பின் கூட என் எழுத்துக்கு அங்கீகாரம் கிட்டாமல் போனது மிக ஏமாற்றம்.

பூங்காவனம் இதழ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மலையக பெண் எழுத்தாளர்கள் விரல் விட்டு எண்ணும் நிலையிலும் எவருமே அல்லது என் சமூகத்தவர் எனக்கு உதவிட முன்வரவில்லை. வீரகேசரியைத் தவிர விடுமுறைக்கு விடுமுறை சிறுகதை நூல்கூட விமர்சிக்கப்படவே இல்லை.

இந்நிலையில் என்னை தமிழ்ப் பெண் என ஒதுக்காமல் தாங்களாகவே சகல உபகாரங்களை பூங்காவனம் இதழ் ஊடாகவும், அதற்கும் மேலாகவும் செய்கிறீர்கள். பிரதியாக என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆயினும் சஞ்சிகையைப் போலவே பூங்காவனமாக தங்கள் வாழ்வின் சகலமும் அமைய வாழ்த்துகளும் - பிரார்த்தனைகளும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Wednesday, February 6, 2013

பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் 13 க்கான ஆக்கங்களைக் கோரல்

பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் 13 க்கான ஆக்கங்களைக் கோரல்

தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Poongavanam Literary Circle முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இச்சஞ்சிகையின் 13 ஆவது இதழில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன் ஆக்கங்களை அனுப்ப வேண்டும். இச் சஞ்சிகைக்கான கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். 

குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும்.

இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது ஆண்டுச்சந்தா 600 ரூபாவை செலுத்தி சந்தாவை பதிவு செய்து கொள்ளவும்.

இவை எமது Account Number Details ஆகும்.

Commercial Bank,
Mount Lavinia Branch,
M.F. Rimza,
Account Number :- 8930020287.

என்ற இலக்கத்திற்கு காசு, காசோலைகளை வைப்பிலிட்டு அவற்றின் பற்றுச் சீட்டுக்களையும், அல்லது காசுக் கட்டளைகளாயின் (M.F. Rimza) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.

ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-

“Poongavanam”
21 E, Sri Dharmapala Road,
Mount Lavinia.
Mobile:- 077 5009 222

E-mail:- poongavanam100.com
Website:- www.poongavanam100.blogspot.com

12. திருமதி. சுலைமா சமி அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2013.11.10

திருமதி. சுலைமா சமி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்கு கூறுங்கள்?

நான் களுத்துரை மாவட்டத்தின் தர்காநகர் மீரிப்பன்னையை பிறப்பிடமாகவும், மாவனல்லை கிரிங்கதெனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டுள்ளேன். துந்துவையைச் சேர்ந்த காலம் சென்ற அப்துல் சமி, காலம் சென்ற தர்காநகர் உம்மு தமீமா ஆகியோரின் மகளாக பிறந்த எனக்கு ஐந்து உடன் பிறப்புக்கள். முஹம்மது இஸ்ஹாக், முஹம்மது அன்வர், முஹம்மது மஃரூப், நூருல் ஐன் (ஆசிரியை) சித்தி நிலோபா ஆகியோரே அவர்களாவார்கள். ஆரம்ப வகுப்பு முதல் உயர்தரம் வரை தர்காநகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் (தற்போது தேசிய கல்லூரி) கற்றேன். பின்னர் அதே பாடசாலையில் சில வருடங்கள் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளேன்.



இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?

1977 ஆம் ஆண்டு எனது பதினேழாவது வயதில் தினகரன் பத்திரிகையூடாக எனது எழுத்துப் பயணம் ஆரம்பமானது. அதே காலகட்டத்தில் ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய சஞ்சிகைகளிலும் என் ஆக்கங்கள் வெளிவந்தன. அன்று தொடக்கம் இன்று வரை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

1984 தொடக்கம் 1996 வரையிலான பத்தாண்டு காலப்பகுதியில்  இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வந்த நெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கான பிரதி தயாரிப்பாளராக இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதி வந்துள்ளேன். இந்நிகழ்ச்சி மூலம் எழுத வாசிக்கத் தெரியாதவர்களும் எனது அபிமான நேயர்களாக இருந்தமை என்னை மிகவும் மகிழ்ச்சிப் படுத்திய விடயமாகும்.


இலங்கையின் பெண் எழுத்தளர்களின் வளர்ச்சி, இலக்கியப் போக்கு பற்றி நீங்கள் யாது கூறுவீர்கள்?

இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வரவும், வளர்ச்சியும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நாவல் துறையிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.


இலக்கியப் பணி சார்ந்த உங்களது கொள்கை என்ன?

எனது இலக்கியப்பணி இஸ்லாமிய வரையரைகளுக்கு உட்பட்டு அதன் வரம்புகளை மீறாது சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய செய்திகளை, விழிப்புணர்வை எனது எழுத்துக்களினூடாக தெரிவிப்பதாகும்.



இலக்கியப் பணியினூடாக எதை சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

எனது இலக்கியப் பணிகளினூடாக எதைச் சாதிக்க விரும்புகிறேன் என்பதைவிட எதைச் சாதித்துள்ளேன் என்பது மிகவும் பொருந்தும். ஏனெனில் எனது எழுத்தினூடாக பல சந்தர்ப்பங்களில் பல சாதனைகளை அடையக் கண்டுள்ளேன். எனது பல கதைகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அறிவேன். இன்னும் எனது எழுத்தினூடாக சமூகத்தில் விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என விரும்புகின்றேன். அதிகமாக நாவல்கள் எழுத வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.


நாவல், சிறுகதை துறைகளில் சிறந்த பங்களிப்புக்களைச் செய்து வருகின்றீர்கள். அவற்றிற்காக நீங்கள் பெற்ற பரிசுகள், விருதுகளைப் பட்டியற்படுத்திக் கூறுங்கள்?

எழுத்து வன்மைக்காக மாவட்ட, மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் சுமார் எழுபத்தைந்து தடவைகளுக்கு மேல் பரிசுகளும் தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளேன். 1997 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்தளை மாவட்ட மத்திய குழு தேசிய ரீதியில் தமிழ், முஸ்லிம் படைப்பிலக்கிய வாதிகளுக்கிடையில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்று அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்  அவர்களினால் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டேன். இதைத்தவிர 2006  ஆம் ஆண்டு அரச சாகித்திய சிறுகதைப் போட்டியில் உண்டியல் என்ற எனது சிறுகதை தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 2006 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு ஆக்கம்; எனும் கருத்திட்டத்தில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், கவிதைப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டேன்.

 மேலும் 2007 ஆம் ஆண்டிற்கான சப்ரகமுவ மாகாண சாகித்திய கலை நிர்மாணப் போட்டியில் எனது சிறுகதைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி இரண்டாம் இடத்தையும், 2008 இல் இதே போட்டியில் எனது சிறுகதைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. 2011 ஆம் ஆண்டிற்கான இதே போட்டியில் மற்றும் சிறுகதைகள் அடங்கிய பிரதி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. 2012 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மாகாண அரச சாகித்திய சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தையும், கவிதை, பாடல் இயற்றல், சிறுவர் கதை ஆகிய போட்டிகளில் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டேன்.

இதைத் தவிர 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் நர்கிஸ் சஞ்சிகையும், மல்லாரிப் பதிப்பகமும் இணைந்து நடத்திய சர்வதேச இஸ்லாமிய நாவல் போட்டியில் எனது ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கு சிறப்புப் பரிசு கிடைத்தது. அந்தப் போட்டியில் கலந்து கொண்ட சகோதரி ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்களின் இது ஒரு ராட்சஷியின் கதை என்ற நாவலுக்கும் பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. இதே அமைப்புக்கள் 2009 ஆம் ஆண்டு சர்வதேசிய ரீதியில் நடத்திய சிறுகதை, கவிதை போட்டிகளிலும் எனது படைப்புக்களுக்குப் பரிசு கிடைத்தது. மேலும் 2009 ஆண்டு வெளிவந்த படைப்பிலக்கியங்களுக்கான அரச சாகித்திய தெரிவில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட மூன்று நாவல்களில் ஒன்றான ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.

அதே போல் புதிய சிறகுகள் என்ற அமைப்பின் நாவல் தெரிவிலும் விருதுக்காக இதே நாவல் சிபாரிசு செய்யப்பட்டது. இன்னும் 2011 ஆம் ஆண்டு இறுதியில் பாணந்துறையில் இயங்கும் ஜனசங்கதய என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பு நடாத்திய தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசையும், அதே ஆண்டு மலையக தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளேன். 2011 ஆம் ஆண்டு அல்ஹஸனாத் இஸ்லாமிய சஞ்சிகை நடத்திய நாடளாவிய சிறுகதைப் போட்டியிலும் எனக்கு பரிசு கிடைத்துள்ளது.

இவை தவிர களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, பம்பலப்பிட்டி இஸ்லாமிய செயலகம், தேசிய இளைஞர் சேவை மன்றம், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம், கல்வி அமைச்சு, அரசாங்க கலாச்சார திணைக்களம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் நடத்திய இலக்கியப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளேன். 2002 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையும், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும் இணைந்து நடத்திய குறிஞ்சித் தென்னவன் நினைவு இலக்கிய விழாவில் அன்றைய மத்திய மாகாண கல்வி அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டேன். 2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மகாநாட்டில் இஸ்லாமிய இலக்கிய பங்களிப்புக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். அகில இன நல்லுறவு ஒன்றியம் நடத்திய 2008 ஆம் ஆண்டிற்கான பாராட்டு விழாவில் சாமஸ்ரீ கலாஜோதி பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்.


இப்படி பரிசுகளும், பாராட்டுக்களும் கிடைத்த நேரங்களில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தன?

உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட தேசிய, சர்வதேச போட்டிகளில் எனது படைப்புக்களுக்கு பரிசு கிடைத்தபோது என் உணர்வுகளை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. இந்தப் பரிசுகளும், பாராட்டுக்களும் எனது எழுத்துக்களுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரம் என்றே நான் கருதுகின்றேன்.


இதுவரை நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

வைகறைப் பூக்கள் (1987), மனச்சுமைகள் (1988), திசை மாறிய தீர்மானங்கள் (2003) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், ஊற்றை மறந்த நதிகள் (2009) என்ற சமூக நாவலையும் வெளியிட்டுள்ளேன். இந்த அத்தனை வெளியீடுகளும் எனக்கு வெற்றியையே தந்தன. திசை மாறிய தீர்மானங்கள் என்ற சிறுகதைத் தொகுதி மத்திய மாகாண கல்வி அமைச்சினால் சிறந்த நூலுக்காக விருதையும் பொற்கிழியையும் பெற்றுத்தந்ததோடு மேல் மாகாண கல்வி அமைச்சினால் பாடசாலை நூலகங்களுக்கு வழங்கவென முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், இன்றைய பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அஸ்லம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நூறு புத்தகங்களும், மிலேனியம் கல்வி ஸ்தாபன தவைலர் எஸ்.எச் மௌலானா அவர்களினால் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களும் கொள்வனவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


இன்றைய புதிய எழுத்தாளர்களின் இலக்கியப் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதிகமான எழுத்தாளர்கள் காதல் என்ற கருப் பொருளையே பெரும்பாலும் கையாள்கிறார்கள். சமூகத்தில் எம்மைச் சுற்றி எழுதுவதற்கான நிகழ்வுகள் நிறையவே இருந்தும் காதலை மட்டும் சுற்றிச் சுற்றி வருவது அவ்வளவு ஆரோக்கிமானதல்ல.


உங்கள் கணவர் ஏ.சீ.எம். இக்பால் மௌலவி அவர்கள் தங்களின் இலக்கியப் பணிக்கு எவ்வகையில் உதவி செய்கிறார் என்பதை குறிப்பிடுவீர்களா?

திருமணத்தின் பின் ஒரு பெண் எழுத்துத் துறையில் நீடித்து நிற்பதென்பது கேள்விக்குரிய விடயம்தான். பல பெண் எழுத்தாளர்கள் திருமண வாழ்வில் நுழைந்த பின் எழுதுவதையே நிறுத்திவிடுவதுண்டு. ஆனால் என் நிலை இதற்கு மாறாக அமைந்துவிட்டது. என்னை மென்மேலும் எழுதத் தூண்டுவதும், உற்சாகப்படுத்துவதும், என் வெற்றிக்கு துணை நின்று உழைப்பதும் என் கணவர்தான். எனது எழுத்து முயற்சிகளில் அவரது பங்களிப்புப் பற்றி கூறியாக வேண்டும். எனக்காகவே எக்மி பதிப்பகம் எனும் பதிப்பகத்தை ஆரம்பித்து அதன் மூலம் பல நூல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.


உங்கள் மகளான இன்ஷிரா இக்பால் அவர்கள் இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டி வருவது பற்றி?

எனது மகள் இன்ஷிரா இக்பால் சிறு வயதிலிருந்தே இலக்கியத் துறையில் மிகவும் ஆர்வமுடையவள். பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளையும் பெற்றுள்ளார். பூ முகத்தில் புன்னகை என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார். இதைத்தவிர அண்மையில் ஒரு சமூக நாவலையும் எழுதியுள்ளார். இவரின் இலக்கியத்துறை ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தந்துள்ளது. இவரைப் போன்றே எனது மற்றொரு மகளான இன்ஷிபா இக்பாலும் எழுத்தார்வம் உள்ளவர். பல கதைகளையும் எழுதியுள்ளார். எனது மகன் அஷ்பாக் அஹமத் சிறந்த ஓவியராவார். அற்புதமாக ஓவியங்களை வரையும் ஆற்றல் உள்ளவர்.


இலக்கியப் படைப்புக்களுக்கு கிடைகின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து?

இலக்கியப் படைப்புக்களுக்கு விமர்சனங்கள் நிச்சயம் தேவை. அந்த விமர்சனங்கள் தான் ஒரு படைப்பாளியை சிறந்த படைப்பாளியாக உருவாக்க உதவும். விமர்சனங்கள் என்ற பெயரில் ஒரு படைப்பாளியை, படைப்பை மட்டம் தட்டி எழுதக்கூடாது.

விருதுகளைப்பற்றி சொல்வதானால், விருதுகள் என்பது ஒரு படைப்பாளிக்கு கிடைக்கின்ற மிகப்பெரிய அங்கீகாரமாகும். இருந்தாலும் இன்று (சில இடங்களில்) வழங்கப்படுகின்ற விருதுகளும், பட்டங்களும் தகுதியானவர்களுக்கு, பொறுத்தமானவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரியவில்லை. ஆள் பார்த்து, முகம் பார்த்து பணத்தைப் பெற்றுக் கொண்டும், பொன்னாடைகளை உரியவர்களிடமிருந்து வாங்கியும் வழங்கப்படுவது ஒரு கேலிக்கூத்தாகும்.


நீங்கள் இனங்களுக்கிடையில் உறவைப் பேணும் வகையில் பல   கதைகளையும், வலது குறைந்தோர் சம்பந்தமான பல கதைகளையும் எழுதியிருப்பதாக அறிகிறோம். அது பற்றிக் கூறுங்கள்?

எமது நாட்டைப் பொறுத்தவரை பல்லின மக்களும் வாழும் நாடு இது. இனங்களுக்கிடையே நல்லுறவும், புரிந்துணர்வும் இருந்தால்தான் நாடும், மக்களும் நன்றாக இருக்க முடியும். எனவே தான் இனங்களை இணைக்கின்ற சிறுகதைகளையும் எழுதி வருகிறேன். அவற்றிற்காக பரிசுகளும் பெற்றுள்ளேன்.

மேலும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் விழிப்புலன் இழந்த மாணவர்களுக்கு ஆசிரியப்பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தை எனக்குத் தந்த நிலையத்தின் ஸ்தாபகரும், அர்ப்பணிப்போடு பணி புரியும் ஆயுட்காலத் தலைவருமான சகோதரர் அல்ஹாஜ் ஜிப்ரி ஹனிபா அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். அந்த மாணவர்களுடன் நெருங்கிப் பழகிய என்னால் அவர்களின் உணர்வுகள், மனக்காயங்கள், எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள் என்பவற்றை இலகுவில் புரிந்து கொள்ள முடிந்தது. அவற்றை வைத்து பல சிறுகதைகளையும் எழுதியுள்ளேன்.


இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க இயலாத சம்பவங்கள் இருப்பின் குறிப்பிடுங்கள்?

மறக்க முடியாத சம்பவங்கள் சில இருந்த போதும் ஓரிரண்டைக் குறிப்பிடலாம். 1983 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவை மன்றம் களுத்துறை மாவட்டத்தில் நடத்திய ஹஜ் விழா போட்டிகள் நான்கில் (இஸ்லாமிய கீதம், கவிதை, அறபு எழுத்தணி, கட்டுரை) நானும் கலந்து கொண்டேன். அந்த நான்கு போட்டிகளிலுமே எனக்கு முதலிடம் கிடைத்தது. மேடையில் பரிசு வாங்கிவிட்டு கீழே இறங்க முன் அடுத்த பரிசுக்காக அழைக்கப்பட்டேன். இப்படி நான்கு தடவைகளும் அழைக்கப்பட்ட போது அந்தப் பரிசுகளை பார்வையாளரின் கரகோசத்துக்கு மத்தியில் வாங்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தேன். இது மறக்க முடியாத அனுபவம். 2003 ஆம் ஆண்டில் திசை மாறிய தீர்மானங்கள் வெளியீட்டு விழாவிற்கு தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான டாக்டர் ஹிமானா சையத் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். என் அழைப்பை மதித்து என்னை கௌரவப்படுத்திய அன்றைய நிகழ்வை என்றும் மறக்க மடியாது.

ஏற்கனகவே நான் கூறிய முஸ்லிம் காங்கிரஸ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசாக தங்கப் பதக்கம் கிடைத்தது. இரண்டரைப் பவுண் எடையுள்ள தங்கப் பதக்கத்தை அன்றைய நிகழ்வில் தலைவர் அஷ்ரப் அவர்களின் கரங்களால் பெற்றுக் கொண்டேன். இந்த பரிசை, கௌரவத்தை என்றும் மறக்க முடியாது. இவை தவிர நான் பல போட்டிகளில் கலந்து பரிசு பெற்ற போதும் 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் தென் இந்தியாவில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட சர்வதேச நாவல், சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பரிசு கிடைத்தமை மறக்க முடியாத அனுபவமாகும்.


பூங்காவனம் இதழ் பற்றிய உங்கள் கருத்து என்ன? 

பூங்காவனத்தின் பன்னிரண்டாவது இதழ் இது. தொடர்ந்தும் பல சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டுக் கொண்டிருப்பதே ஒரு சாதனைதான். இதழ் ஆசிரியருக்கும், ஆசிரிய குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். பூங்காவனத்தில் பூத்திருக்கின்ற ஆக்கங்கள் அனைத்தும் தரம் வாய்ந்தவைகளாக உள்ளன. இதற்கு முன்னும் பெண்களால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைகள், இலக்கிய இதழ்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன். இருப்பினும் அவற்றோடு ஒப்பிடும் போது பூங்காவனம் தரமானதொரு இலக்கிய இதழாக இருக்கிறது!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

பூங்காவனம் 11 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

பூங்காவனம் 11 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

சமூக இலக்கிய காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் பதினொறாவது இதழ் தற்பொழுது பூத்து மணம் பரப்புகிறது. பெண் எழுத்தாளர்களின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறை திருமதி வசந்தி தயாபரன் அவர்களின் படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. இவரைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் செய்திருக்கிறார்கள். இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலரான திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் இலக்கிய குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் இலக்கிய உலகில் முன்னணி வகிக்கக் கூடியவராக இருக்கிறார். இவர் பிரபல கலை இலக்கிய படைப்பாளியான வ. இராசையா அவர்களின் புதல்வியும், பிரபல படைப்பாளியான திரு மு. தயாபரன் அவர்களின் துணைவியும் ஆவார். சிறுவயது முதலே இலக்கிய முனைப்பு கொண்ட இவர் சிறந்த சிறுகதைகளையும், அதிகமான கட்டுரைகளையும் சஞ்சிகைகளில் எழுதிவருவதோடு தகவம் கதைஞர் வட்டத்திலும் செயலாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஓலை இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார். சமூக இலக்கிய காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் பதினொறாவது இதழ் தற்பொழுது பூத்து மணம் பரப்புகிறது. பெண் எழுத்தாளர்களின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறை திருமதி வசந்தி தயாபரன் அவர்களின் படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. இவரைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் செய்திருக்கிறார்கள். இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலரான திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் இலக்கிய குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் இலக்கிய உலகில் முன்னணி வகிக்கக் கூடியவராக இருக்கிறார். 

இவர் பிரபல கலை இலக்கிய படைப்பாளியான வ. இராசையா அவர்களின் புதல்வியும், பிரபல படைப்பாளியான திரு மு. தயாபரன் அவர்களின் துணைவியும் ஆவார். சிறுவயது முதலே இலக்கிய முனைப்பு கொண்ட இவர் சிறந்த சிறுகதைகளையும், அதிகமான கட்டுரைகளையும் சஞ்சிகைகளில் எழுதிவருவதோடு தகவம் கதைஞர் வட்டத்திலும் செயலாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஓலை இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார்.  மல்லிகை, ஞானம் போன்ற முன்னணி சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதிவரும் இவர் குடை நடை கடை, மண்புழு மாமா வேலை செய்கிறார், அழகிய ஆட்டம், பச்சை உலகம் என நான்கு சிறுவர் கதை நூல்களையும்,  காலமாம் வனம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். குடை நடை கடை என்ற சிறுவர் இலக்கிய நூல் தமிழ் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான பாலியல் நடவடிக்கைகளால் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள்  நோய்வாய்ப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். எனவே ஒழுக்க சீர்கேடின்றி மனதாலும் உடலாலும் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 01 திகதி எயிட்ஸ் விழிப்புணர்வு தினத்தை சுட்டிக்காட்டி வாசகர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.
த. எலிசபெத், நிந்தவூர் ஷிப்லி, ஜுமானா ஜுனைட், ரொஷான் ஏ. ஜிப்ரி, பதுளை பாஹிரா, வெலிப்பண்ணை அத்தாஸ், பி.ரி. அஸீஸ், வி. விஜயகாந்த், மன்னார் அமுதன், சீனா உதயகுமார், ஏறாவூர் தாஹிர் ஆகியோரின் கவிதைகளும், எஸ்.ஆர். பாலசந்திரன், றாபி எஸ். மப்றாஸ், எம்.பி.எம். நிஸ்வான், சூசை எட்வேட் ஆகியோரின் சிறுகதைகளும் மருதூர் ஜமால்தீனின் உருவகக் கதையொன்றும் இடம்பெற்றுள்ளன. வழமை போல கவிஞர் ஏ. இக்பால் தனது இலக்கிய அனுபவங்களில் ஒரு பகுதியை இந்த இதழிலும் தந்திருக்கிறார். அதேவேளை நுணாவிலூர் கா. விசயரத்தினம் சிறந்த இலக்கிய கட்டுரை ஒன்றினைத் தந்திருக்கிறார். எம்.எஸ்.எம். ஸப்ரி, ரிம்ஸா முஹம்மத் ஆகியோர் நூல் மதிப்புரைகளை செய்திருக்கிறார்கள். 
மேலும் நூலகப் பூங்காவில் வௌ;வேறு எழுத்தாளர்கள் எழுதிய பதினாறு நூல்களைப் பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன. பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்கள் இந்த இதழிலும் இடம்பெற்றிருக்கின்றன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் 48 பக்கங்களில் குறுகிய உள்ளடக்கத்தில் வாசகர்களுக்குத் தேவையான சகல அம்சங்ளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது பூங்காவனம் 11 ஆவது இதழ். 
சஞ்சிகை - பூங்காவனம் இதழ் 11
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் - poongavanam100@gmail.com
விலை - 80 ரூபாய்


http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1244:-11-&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62

பூங்காவனம் பத்தாவது இதழ் மீதான ஒரு பார்வை


பூங்காவனம் பத்தாவது இதழ் மீதான ஒரு பார்வை

எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை


மூத்த பெண் எழுத்தாளர்களில் முகப்புப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம்இ இம்முறையும் வழமை போல் தனது பத்தாவது இதழில் மூத்த பெண் எழுத்தாளர் திருமதி ஸகியா சித்தீக் பரீத் அவர்களின் புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முன்னர் வெளியிட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் பூங்காவனப் புகைப்படங்களை உள் அட்டையில் பதித்து இருக்கிறது.

இது பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் காலமானபடியால் புகுமுக மாணவர்களுக்கு அறிவுரையாகப் பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர் குழுவினர். பகிடிவதை என்றும், ஸ்ட்ரைக் என்றும் வீணான வெறும் காரியங்களில் ஈடுபட்டு தமது கல்விக் காலத்தை வீணே கழிக்கும் மாணவர்களுக்கு அவர்களது அறிவுரைகள் மிகவும் பிரயோசனமானதாக அமையும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

மூன்று சிறுகதைகளையும், ஒன்பது அருமையான கவிதைகளையும், இரண்டு கட்டுரைகளையும், நேர்காணல், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்ற சகல அம்சங்களையும் 10 ஆவது இதழ் தந்திருக்கிறது. இதில் முகப்புப்பட நாயகி திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்களை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இதழாசிரியர்கள் நேர்கண்டிருக்கிறார்கள். பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்கள் மாவனல்லையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஓர் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார். கொழும்பு ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள், விடியலின் விழுதுகள், இதயத்தின் ஓசைகள், முதுசம் என்ற தலைப்புக்களில் 04 நூல்களை இவர் இதுவரை வெளியிட்டுள்ளார். இதில் ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற நூல் சிங்களம்இ ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு, ஓர் ஆவண நூலாகவும் விளங்குகிறது.

தமது இலக்கியப் பிரவேசத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தைக் கைக்கொண்டதனால் தனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாகவும், தந்தை முதற்கொண்டு பல ஆசான்களுக்கும் அவருக்கு எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விடியலின் விழுதுகள் 16 சிறுகதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதியாகும். இதயத்தின் ஓசைகள் ஒரு கவிதைத் தொகுப்பாகும். முதுசம் 2500 க்கும் மேற்பட்ட பொன்மொழிகளை உள்ளடக்கிய நூலாகவும் காணப்படுகிறது. பொது அறிவுக் களஞ்சியம் என்ற நூல் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு பரீட்சை வழிகாட்டி நூலாகத் தற்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. அதே வேளை, நூல் வெளியீடு என்பது மிகவும் சிரமமான ஒரு காரியம் என்பதனால் தனது மூன்று நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட்டதாகக் குறிப்பிடும் அவர், படைப்புகளுக்கான விமர்சனங்கள் அவசியம் தேவைப்படும் ஒன்று. அவை குறைகளை மாத்திரம் சுட்டிக் காட்டாமல் நிறைகளையும் எடுத்துக் காட்டுவதாக அமைய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். தனது வானொலித் தொடர்பு 1985 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டப் பின் படிப்பை மேற்கொள்ளும் போது விரிவுரையாளர் திருமதி பூமணி குலசிங்கம் அவர்களின் தொடர்பு கிடைத்ததனால் ஏற்பட்டதாகக் கூறும் அவர், வானொலிக் கலந்துரையாடல்கள் உட்பட நிகழ்ச்சிப் பிரதிகள் மூலம் பங்களிப்புச் செய்ய முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயன்வத்தை நூராணியா மகாவித்தியாலயம், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றிலும் ஆசிரியையாகக் கடமையாற்றி 28 வருடங்கள் ஆசிரியப் பணிபுரிந்துள்ளார். இலக்கியத் தாரகை, கலாபூஷணம், சாமஸ்ரீ தேசமான்ய பட்டமும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை, சென்னை, மலேசியா, காயல்பட்டினம் போன்ற இடங்களில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளிலும் பங்குபற்றி சான்றிதழ்கள் பெற்றுள்ள ஒரு பெண் படைப்பாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தம் சுகம் ஒன்றையே கருதி தவறான வழியை நாடும் ஒவ்வொரு காதலரும், தமக்குப் பிறக்கும் குழந்தை வளர்ந்து பெரியவனாகி சமூக அந்தஸ்துடன் வாழ நேரும் போது தப்புக்கள் என்றோ ஒரு நாள் வெளியாகி தமது பிள்ளையை ஈட்டியால் குத்தும் என்பதை உணராது தவறுக்கு மேல் தவறு செய்கின்றனர். களவை நாடுமுன் அன்றே அந்தத் தவற்றைத் திருத்திக் கொண்டிருந்தால் பர்சான் போன்ற இபாதத்துடன் (மார்க்கப் பற்றுடன்) வாழும் நல்லவர்கள் வாழ்க்கை நாசமாகிவிடாது என்பதைப் புலப்படுத்துகிறது மருதமுனை றாபி எஸ். மப்ராஸ் எழுதிய என்றோ செய்த விணை என்ற சிறுகதை.

அதே போன்று சிறுபிள்ளைகள் மனதில் விதைக்கப்படுகின்ற எண்ணங்கள் உண்மையானவைகளாகவும், தெளிவானவைகளாகவும் இருக்க வேண்டும். சமாளிப்புக்களாக அவை இருக்கும் பட்சத்தில் அந்தப் பிள்ளையின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்றதொரு கருத்தினைத் தாட்சாயினியின் தொடராத சொந்தங்கள் என்ற சிறுகதை தெளிவுபடுத்துகிறது.

காதல் என்பது வயதின் தேவைதான். என்றாலும் காதலிக்கும் போது அளிக்கப்படும் வாக்குறுதிகள் பாதுகாக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.  பொய் வாக்குறுதிகளை அளிப்பதனால் ஆணோ, பெண்ணோ இருவருமோ பாதிக்கப்பட நேருகிறது. முடிவில் ஏமாற்றம் ஒன்றே மிஞ்சும். அத்தகையதொரு காதல் ஜோடியைச் சிதையாத இதயம் தந்திருக்கிறது. கதையில் வரும் காதலி வீணா தன் மாஜிக் காதலன் பாபுவின் நிலை கண்டு இறுதி நேரத்திலும்இ அவனுக்கு உதவ முன்வந்தது அவளது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் அவளைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் போனது பாபுவின் துரதிஷ்டம்தான் என்பதைத் தனது கதையினூடே பொத்துவில் மனாப் எடுத்துக் காட்டுகிறார்.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இந்த இதழிலும் தொடர்கிறது. இதிலே பலர் இரவலாகத் தன்னிடமிருந்து எடுத்துச் சென்ற பெருமதி வாய்ந்த புத்தகங்கள் திரும்பி வராததைப் பற்றி ஆதங்கித்து எழுதியிருக்கிறார். அவரது குருகுல சீடர்களில் ஒருவரான பதுளை பாஹிரா அழகான ஒரு கவிதையையும் தந்திருக்கிறார்.

பேரும் புகழும் தேடி அலையும் மனிதனைப் பற்றி லண்டனில் இருந்து நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் திருக்குறள்இ அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் போன்ற சங்க இலக்கிய நூல்களில் இருந்து உதாரணங்களைக் காட்டி சிறந்ததொரு கட்டுரையைத் தந்துள்ளார்.

நீலாவணை ம. புவிலக்ஷி, புத்தளம் ஜுமானா ஜுனைட், யோ. புரட்சி, மருதூர் ஜமால்தீன், பூனாகலை நித்தியஜோதி, கலைமகன் பைரூஸ், கிண்ணியா பி.ரி. அஸீஸ், நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரது கவிதைகளும் இதழில் இடம்பிடித்துள்ளன.

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதை நூலுக்கான மதிப்பீட்டை வெலிகம ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். இன்னும் இன்னும் அந்தக் குரலைக் கேட்கக் கூடாதா? என்ற ஆர்வத்தை அது தூண்டிவிடுகிறது. ஒவ்வொரு இலக்கியவாதியும், வாசகனும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர வாசகர் கருத்துக்கள், வரப்பெற்ற நூல்களின் விபரங்கள் உட்பட பூங்காவனம் துணையாசிரியர் செல்வி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் நூல்வெளியீட்டுப் புகைப்படங்கள் பின் அட்டையின் உட்பக்கத்தை அலங்கரித்து பூங்காவனத்தின் பத்தாவது இதழை மணம் கமழச் செய்கிறது!!!

இதழின் பெயர்- பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை
இதழாசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் பதிப்பகம்
முகவரி - 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.
தொலைபேசி – 0775009222
விலை - 80 ரூபாய்

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை 08


பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சனம்

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சனம்

- எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை.



பூங்காவனத்தின் 08ஆவது இதழ் பூத்து வாசகர்கள் கைகளில் தவழும் இவ்வேளையில் அதனைப் பற்றிய சில கருத்துக்களை இங்கு பதியலாம் என நினைக்கிறேன். தரமான பெண் படைப்பாளிகள் வரிசையில் இம்முறை இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவராகத் திகழும் திருமதி நூருல் ஐன் பூங்காவனத்தின் அட்டைப் படத்தை அலங்கரிக்கிறார். நீண்டதொரு பேட்டியினை திருமதி நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைன் அவர்கன் வழங்கியிருக்கிறார். வழமைபோல் இளம் கவிக்குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மதும், இளம் பெண் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் நேர்காணல் செய்திருக்கிறார்கள். இலங்கையிலே ஊடகத்துறை முஸ்லிம் பெண் ஊடக, மற்றும் தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாகத் திகழும் நூருல் ஐன் அவர்கள் நீண்ட எழுத்தனுபவங்களை அழகாக விபரித்திருக்கிறார். மகளிர் தினச் செய்தியாகவும், புத்தாண்டுச் செய்தியாகவும் ஆசிரியர் குழு தெரிவித்திருக்கும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. நாகரிகம்தான் பெண்ணியம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பெண்ணிய சிந்தனை வாதிகள் பெண்ணியம் என்றால் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் அர்த்தம் பொதிந்தவை.

குடும்பத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பெற்றோர் தவறான வழியில் நடப்பதனால் பிள்ளைகளும் தவறான வழிக்குப் போவார்கள் என்பதற்கு உதாரணமாக இக்ராம் எம். தாஹா எழுதியுள்ள 'வழிகாட்டி' என்ற சிறுகதையும், தங்கைப் பாசத்தினால் தங்கைக்காக ஒரு தங்கச் சங்கிலியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திருவிழாக்காண அம்மா கொடுத்த பணத்தை ஒரு சதமேனும் வீணாக்காமல் மின்னும் சங்கிலி ஒன்றை வாங்கிய கோபு, ஏனைய தனது நண்பர்கள் தமது காசை வீணாகச் செலவழித்ததன் பின், தான் மாத்திரம் காரியவாதி என்பதை நிரூபித்துவிட்டான் என்பதை சூசை எட்வட்டின் 'காரியவாதி' என்ற சிறுகதையும், காதலுக்காக பெற்றோரின் மனதைப் புண்படுத்திவிடும் பிள்ளைகள் அதன் உண்மை நிலையை அறிந்ததும் தவறை நினைத்து மனம் வருந்த நேரும் என்பதை விளக்கும் எஸ். ஆர். பாலச்சந்திரனின் 'சரசு ஏன் அழுகிறாள்?' என்ற சிறுகதையும், தப்பான சில காரியங்களால் நட்பானது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. உயிருக்கு உயிரான நண்பர்கள் வாழ்விலும்கூட அது புகுந்து விளையாடும். ஆரம்பத்திலேயே அதற்குத் தடை போட்டுவிட்டாள் பிரச்சினைகளுக்கு வழிகாணலாம் என்ற உண்மையை 'சமூகமே நீ உணர்வாயா?' என்ற ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதியுள்ள சிறுகதையுமாகச் சேர்ந்து நான்கு சிறுகதைகள் பூங்காவனத்தில் இடம்பிடித்துள்ளன.

பதுளை பாஹிரா, கவிமலர், குறிஞ்சி நிலா, பி.ரி. அஸீஸ், கலைமகன் பைரூஸ் ஆகியோரின் கவிதைகள் இதழைச் சிறப்பிக்கின்றன. இதிலே மறைந்த பல்கலை நாயகன் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் நினைவாக அண்ணாவுக்கொரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார் குறிஞ்சி நிலா.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (லண்டன்) தொல்காப்பியரின் காலத்தை உறுதி செய்யும் கட்டுரை ஒன்றினையும் தந்துள்ளார்.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இந்த இதழிலும் தொடர்கிறது. இந்தக் காலத்தில் எழுதப்படும் கவிதைகள் எந்த ரகத்தைச் சேர்ந்தன என்பதை இனங்காண முடியாதபடி வாசகனை மயக்கத்துக்கு உள்ளாக்குகிறது என்பதை 'கவிதை ஒரு மறுவாசிப்பு' என்ற கட்டுரையின் வாயிலாக நாச்சியாதீவு பர்வின் விளக்கியிருக்கிறார்.

இறுதியில் விமர்சகரும், திறனாய்வாளருமான 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/ மதிப்பீடுகள் சில' என்ற நூலைப் பற்றிய ரசனைக் குறிப்பை எச்.எப். ரிஸ்னா தந்து பூங்காவனத்தை சிறப்பித்திருக்கிறார். சிறுகதை, கட்டுரை, கவிதை, கருத்துக்கள், ரசனைக் குறிப்புகள் என இன்னோரன்ன இலக்கியச் சிறப்பியல்புகள் கொண்டதாக இம்முறை பூங்காவனம் பூத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது!!!

நூல் - பூங்காவனம் (காலாண்டு சஞ்சிகை)
ஆசிரியர் குழு - ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா
முகவரி - 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.
தொலைபேசி - 077 5009222, 0719 200580.
மின்னஞ்சல் - bestqueen12@yahoo.com
விலை - 80 ரூபாய்

இந்த விமர்சனத்தை பதிவுகள் வலைத்தளத்தில் பார்வையிட கீழே க்ளிக் செய்யவும்

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=738:2012-04-15-00-14-46&catid=14:2011-03-03-17-27-43

பூங்காவனம் இதழ் 03


பூங்காவனம் இதழ் 03 பற்றி தினக்குரல் பத்திரிகை (2010.12.26)ல் மா.பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட விமர்சனம்

சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்


சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்

சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்

நன்றி - இணுவிலி மாறன்


11. திருமதி. வசந்தி தயாபரன் அவர்களுடனான நேர்காணல்

திருமதி. வசந்தி தயாபரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்




இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலர். இலக்கியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளவர். வங்கிப் பணியிலிருந்து இளைப்பாறிய பின்னர் இலக்கியப் பணிகளுடன் சமூக சேவைகள் பலவும் ஆற்றி வருகிறார். இவர் சில சிறந்த சிறுகதைகளையும், சஞ்சிகைகளுக்காக நிறைந்தளவு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சமகால இலக்கியம் மற்றும் கலைகளை திறம்பட விமர்சித்து வருபவர். தமிழ் ஆக்க எழுத்தாளர்களுடைய படைப்புகளைச் சுமந்து வருகின்ற தகவம் தமிழ் இலக்கிய இதழின் செயலாளர். தமிழும் இலக்கியமும் இசையும் இவரோடு குழந்தைப் பருவம் முதல் இணைந்து பயணித்து வருகின்றன. தகவம் இராசையா மாஸ்டரின் புதல்வியாக இருந்தமை இவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும். இவரது தாயார் அர்ப்பணிப்புடனும் ஒழுங்காகவும் பணியாற்றிய ஓர் ஆசிரியையாவார். சிறுவர் இலக்கியத்தில் இவரது பங்களிப்பு காத்திரமானதாகும். அவரிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களை பூங்காவனம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.


01. உங்களை  இலக்கியத் துறையில் ஈடுபட வைத்தது உங்கள் குடும்பப் பின்னணி என்று நினைக்கிறேன். உங்கள் குடும்பம் பற்றியும், இலக்கியத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்வீர்களா?

எனது பெற்றோர் ஆசிரியர்களாக இருந்தனர். எனது தந்தையார், வ. இராசையா அவர்கள் எப்போதும் நூல்களுடன் உறவாடுபவர். இரவிலும் நெடுநேரம் கண்விழித்து எழுதிக்கொண்டிருப்பவர். தன் மாணவர்களது பல்துறை ஆற்றல்களையும் ஊக்குவிப்பவர். வானொலி, கலை இலக்கியம், ஆசிரியப் பணி என அர்ப்பணிப்புடன் இயங்குபவர். அவரை அண்ணாந்து பார்த்து வளர்ந்தது என் சிறு பராயம்.

கடமை உணர்வும், சுறுசுறுப்பும் மிக்கதோர் ஆசிரியையாக பதுளை - திக்வல்லை - கொழும்பு ஆகிய இடங்களில் பணிபுரிந்தவர் எனது தாயார். இஸ்லாமிய பாடசாலைகளில் மிக நீண்டகாலம் சேவை புரிந்தார். இசை, நடனம், கூத்து முதலான கலைகளில் பரீச்சயமும் பற்றும் கொண்டவர். எமக்கும் அவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கினார். மொத்தத்தில் எனது தந்தையார் உட்பட எமது இலக்கியப் பயணத்திற்கு உகந்த சூழ்நிலையை இன்று வரை ஏற்படுத்தித் தருபவர் எனது தாயார்.

நாவிலே வந்து உரைவாய் சரஸ்வதி!|| என்று என்னை வாழ்த்தி வளர்த்த என் அம்மம்மா, நிறையவே வாசிப்பவரும் கதை சொல்லிச் சொல்லி கதைச் சுவையை ஊட்டி வளர்த்தவருமான என் பெரியம்மா இருவரும் கூட என் நினைவில் நிற்பவர்கள்.


என்னைச் சூழ இருந்த உறவுகளும், தந்தையாரின் இலக்கிய உறவுகளும், சந்தர்ப்பங்களும் என்னை இலக்கியத் துறைக்குள் இழுத்து வந்தன. பதின்ம வயதுகளில் வானொலிக்குச் சில எழுத்தாக்கங்களை வழங்கியதும், இலங்கை வங்கி இலக்கிய மன்றத்தில் இணைந்துகொண்டு கவிதையும், கட்டுரையும் எழுதி தமிழலை சஞ்சிகையில் அவை அச்சேறியதும் மூன்று தசாப்தங்களுக்கு முன்னைய கதை. தகவம் உறுப்பினராகி ஆக்க இலக்கியத்துள் நுழைந்ததும் கொழும்பு தமிழ் சங்கத்தில் இணைந்ததும் என அது இன்றுவரை வளர்கிறது.


02. சிறுவர் இலக்கியத்திற்காக நீங்கள் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளீர்கள். அதுபற்றி...

இதுவரை நான்கு நூல்கள் வெளிவந்துள்ளன. அவை:-

1. குடை நடை கடை
2. மண்புழு மாமா வேலை செய்கிறார்
3. அழகிய ஆட்டம்
4. பச்சை உலகம்

என்பனவாகும்.

இவை எனக்கு ஓரளவு திருப்தியைத் தந்தனவெனினும் சிறுவர் இலக்கியத்தில் நான் செல்ல வேண்டிய பாதை இன்னும் நீண்டு கிடக்கிறது. எனது தந்தையார் ஈழத்துச் சிறுவர் இலக்கிய கருத்தாக்களில் ஒருவராவார். ஷஷஒரு படைப்பாளி என்பவன் சிறுவர்களுக்கான இலக்கியங்களைப் படைத்தால் மட்டுமே அவனது படைத்தல் என்ற பொறுப்பு முழுமையடையும்|| என்ற அவரது அறிவுரை என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.


03. காலமாம் வனம் என்ற சிறுகதைத் தொகுதியை நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். இந்தத் தலையங்கத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

''காலமாம் வனம்'' என்ற தலையங்கம் பாரதி என்ற மகாகவி தந்தது. என்னுள்ளே முணுமுணுப்பாக ஒலித்துக்கொண்டிருக்கும் அழகும் ஆழமும் பொதிந்த சொற்றொடர் அது.

வெற்றி தோல்விகளை காலமே தீர்மானிக்கிறது. எமக்கு முன்னே நீண்டு கிடக்கின்ற வனத்தினூடு ஆர்வமும் திகைப்பும் கலந்த மனதுடன் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். மாறுதல்கள், புதிய அநுபவங்கள் என்பன கணந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. நாம் கடந்து வந்த பாதையைப் பதிவு செய்கிறோம். ஓவியங்கள் சிற்பங்கள் போலவே, அவையும் தத்தமது காலத்தின் உருவத்தையும் சிறப்பையும் காலங்கடந்தும் பேசுமா இல்லையா என்பதைக் கூட, அதே காலம் தான் நிர்ணயிக்க முடியும்.


04. இன்றைய கால கட்டத்தில் நிறையப் பெண்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் முழுமையாகக் கவனிக்கப்படுகிறார்களா?

சமூகம் தம்மைக் கவனிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எழுதுபவர்கள் மிகக் குறைவு. மாறாக தமது எழுத்துக்கள் கவனிக்கப்படுகின்றனவா என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கக் கூடும்.

போர்களும், வன்முறைகளும்,  மன வக்கிரங்களும் அதிகரிக்கும் தோறும் நீங்கள் கூறுவது போல் நிறையப் பெண்கள் எழுத வருவது இயல்பானதொன்றே. பெண்களைக் கவனிக்கும் அளவுக்கு அவர்களது எழுத்தின் உணர்வோட்டம் கவனிக்கப்படுகிறதா என்பது ஒரு வினாவே. சமூகத்தின் பார்வையில் ஏற்படவேண்டிய மாற்றங்களே பெண் எழுத்துக்கான பிரக்ஞையைத் தோற்றுவிக்கக் கூடியன.


05. பெண்ணிய சிந்தனைகளைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

பெண்ணியச் சிந்தனைகள் காலாதிகாலமாக உயிர்ப்புடன்தான் உள்ளன. இன்று அவை கூர்மை பெற்றுள்ளன. பண்பாட்டுப் போர்வைகளை சற்றே அகற்றி, திறந்த மனதோடு இவை அணுகப்படல் வேண்டும். அவற்றுக்கான வழிகளும், வெளிப்படுத்தும் முறைகளும் மனிதரிடையே மாறுபடக்கூடும்.


06. எதிர்காலத்தில் கவிதைகள், நாவல்கள் ஆகிய தொகுதிகளை வெளியிடும் எண்ணம் உண்டா?

இந்தக் கேள்விக்கு ஆம் என்பதே விடையாக அமைகிறது. ஆயினும் முதலில் நல்லதொரு வாசகியாக என்னை வளப்படுத்திக்கொண்டு, செம்மையான திருத்தமான படைப்புகளை வெளிக் கொண்டுவர விரும்புகிறேன்.




07. உங்கள் இலக்கிய முயற்சிகளுக்கு கரங்கொடுக்கும் உங்கள் துணைவர் திரு. மு. தயாபரன் அவர்களின் பங்களிப்பைப் பற்றிச் சொல்லுங்கள்?

தமிழ்தான் எங்களைப் பிணைத்தது. எனவே முதலில் அவர் எனது இழக்கியத் தோழர். அதனைத் தொடர்ந்து அன்புக் கணவராக, தந்தைக்குத் தந்தையாக, என்னை எனக்கறிவித்த என் குருவாக யாதுமாகி நிற்கிறார்.


08. பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றீர்கள். அந்த அனுபவம் பற்றி?



அனுபவப் பகிர்வுதான் கருத்துப் பகிர்வாக மலர்ச்சி பெறுகிறது. கொழும்பு தமிழ்ச்சங்கம் அதற்கான அடித்தளத்தை எனக்கு வழங்குகிறது. (கொண்டும், கொடுத்தும்) வளர்வதற்கு இவையெல்லாம் உதவுகின்றன.




09. இதுவரை நீங்கள் எழுதிய எல்லா படைப்புக்களும் அச்சில் வெளிவந்துள்ளனவா?

இல்லை. எனது எழுத்துக்களை நானே மீளவும் தரக்கணிப்புச் செய்துவிட்டு அச்சேற்ற விரும்புகிறேன்.



10. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?



'குடை நடை கடை' என்ற இனது சிறுவர் இலக்கியம் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் (தமிழியல்) விருதைப் பெற்றது. அதனைத் தவிர வேறெந்த விருதினையும் நான் பெற்றுக்கொண்டதில்லை. ஆனால் எழுதும்போதும், அதன் பின்பும் நான் பெறுகின்ற உள நிறைவு நான் மதிக்கின்ற ஒரு பரிசு. சமூகத்திற்கு எம்மை அடையாளப்படுத்தவும், அதன் அங்கீகாரத்தைப் பெறவும் விருதுகள் உதவுகின்றன. ஆனால் அவை தேடிப் பெறுவன அல்லவே.

11. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சமூக அக்கறை என்பதே எழுத்தின் உயிர்நாடி என்பது எனது முடிபு. மாறிவரும் மதிப்பீடுகளிடையே அர்ப்பணிப்பு, தனித்தன்மை என்ற பண்புகள்தாம் எழுத்தை வாழவைக்க வல்லன என்று நான் நம்புகின்றேன். பூங்காவனம் பூத்தக்குலுங்க வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்