பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, January 27, 2017

26. தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2016.06.26

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


 உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இயற்கை வண்ண எழில் கொஞ்சும் தியத்தலாவையை பிறப்பிடமாகக் கொண்டவள். எனது தந்தை கே.எம். ஹலால்தீன் அவர்கள். தாயார் பீ.யூ. நஸீஹா அவர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்). நான் கஹகொல்லை அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயம், வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம், பண்டாரவளை சேர் ராசிக் பரீட் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் எனது கற்றல் செயற்பாடுகளைத் தொடர்ந்தேன். தனியார் நிறுவனங்களில் கணினிப் பயிற்சிப் பாடநெறிகளை நிறைவுசெய்து, பின்னர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் இதழியல்துறை பாடநெறியைப் பயின்றேன். தற்போது கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணி புரிகின்றேன்.


கவிதை எழுதும் ஆர்வம் எப்படி வந்தது? இந்த ஆற்றலை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

இயற்கை அழகு என்னில் பல கற்பனைகளை விதைத்துவிட்டதாலும், இயல்பிலேயே வாசிப்புப் பழக்கம் எனக்குள் அதிகரித்துக் காணப்பட்டதாலும் எழுத்துத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. அதற்கான ஆரம்பகால முயற்சியாக எனது பாடசாலை பாடக்கொப்பிகளின் கடைசிப் பக்கங்களில் நான் சின்னச் சின்ன கவிதைகளை எழுதியிருக்கின்றேன். அவற்றை எதேச்சையாக கண்டுவிடும் நண்பர்கள் அவற்றைப் பாராட்டும்போது உள்ளுக்குள் மகிழ்ந்திருக்கிறேன். அதுவரை எனது வீட்டார் அறியாதிருந்த இறைவன் தந்த இந்த ஆற்றலை நான் பாடசாலை மட்டங்களில் கவிதை, சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில் மற்றும் சான்றிதழ்களைக் கொண்டுவந்து காட்டியபோது அறிந்துகொண்டார்கள். வாழ்த்தினார்கள். பத்திரிகைகளுக்கு அனுப்புமாறு சொன்னார்கள். பத்திரிகையில் முதன்முதலாக நான் எழுதியனுப்பிய கவிதை பிரசுரிக்கப்பட்டதைக் கண்டு மிக மகிழ்ந்தேன். அதிலிருந்தே என் எழுத்துப் பயணம் ஆரம்பமானது.


உங்களது முதலாவது ஆக்கம் எதில், எப்போது வெளிவந்தது?

2004 ஆம் ஆண்டு மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் காத்திருப்பு என்ற தலைப்பில் எனது முதலாவது கவிதை வெளியானது. அந்த அனுபவம் கூட அலாதியானது. ஏனெனில் வழமை போல நான் வாசிப்பதற்காகவே பத்திரிகையைப் புரட்டினேன். கவிதைகள் கருப்பு எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தன. கவிதைப் பக்கத்தை ஆழ்ந்து வாசிப்பதற்கு முதல் ஏனைய பக்கங்களையும் பார்த்துவிட்டு இறுதியில் கவிதைகளை என் கண்கள் மேய்ந்துகொண்டிருந்தன. அப்போதுதான் கறுப்பு பெட்டியில் வெள்ளை எழுத்துக்களாக என் கவிதை பிரசுரிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். கனவா என்று எண்ணினேன். அந்தத் தருணம் மறக்க முடியாதது.


படைப்பிலக்கியத் துறையில் சுமார் எத்தனை வருட காலம் பணியாற்றி வருகின்றீர்கள்? இதுவரை எத்தனை நூல்களை வெளியீடு செய்துள்ளீர்கள்? 

சுமார் 12 வருடங்களாக எனது எழுத்துப் பயணம் தொடர்கின்றது. ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதுபோல் எனது வாசிப்பும் குடும்பத்தாரின் ஒத்தாசையும் எனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தபோதிலும், இன்று புத்தகங்களை வெளியிட்டு அறியப்பட்ட எழுத்தாளராக மாறிய ஒரு தருணம் இருக்கின்றது. அந்தத் தருணத்தை ஏற்படுத்தித் தந்தது (ரிம்ஸா முஹம்மத்) நீங்கள்தான். உங்களுக்கு என் முதற்கண் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டியது என் கடமையாகும். இதுவரை 09 நூல்கள் வெளியிட்டிருக்கின்றேன். அவை:-

01. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை) - 2012
02. வைகறை (சிறுகதை) - 2012
03. காக்கா குளிப்பு (சிறுவர் கதை) - 2012
04. மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) - 2012
05. வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை) - 2012
06. இதோ! பஞ்சு காய்கள் (சிறுவர் கதை) - 2012
07. திறந்த கதவுள் தெரிந்தவை (விமர்சனம்) - 2013
08. நட்சத்திரம் (சிறுவர் பாடல்கள்) - 2014
09. மெல்லிசைத் தூறல்கள் (பாடல்கள்) - 2016


மெல்லிசைத் தூறல்கள் நூல் உங்கள் பாடல்களை மாத்திரம் உள்ளடக்கி வெளியிடப்பட்ட நூலா? மெல்லிசைத் தூறல்கள் என்ற உங்கள் பாடல் நூல் பற்றி சொல்லுங்கள்?

ஆம். எனது 36 பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றை நூலாக வெளியிட்டேன். இப்பாடல்கள் ஆன்மீகம், சமூக அக்கரை, மனித நேயம், பெற்றோரின் பெருமை, காதல் ஆகியவற்றுடன் இன்னும் பல பாடுபொருள்களில் எழுதப்பட்டுள்ளன. மெல்லிசைத் தூறல்கள் என்ற இந்ந நூலுக்கு அணிந்துரையை பேராசிரியர் துரை மனோகரன் அவர்களும், வாழ்த்துரையை திருமதி. ரதி தேவசுந்தரம் அவர்களும் வழங்கியிருக்கின்றார்கள். அத்துடன் பின்னட்டைக் குறிப்பை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்கள் வழங்கியிருக்கின்றார்கள். நூலை வாசித்தவர்கள் பாடல்கள் குறித்து மிகவும் பாராட்டிப் பேசினார்கள். இந்தப் பாடல் துறையினூடாக நான் பல எழுத்தாளர்களது அறிமுகங்களைப் பெற்றிருக்கின்றேன். அது எனக்கு மிக்க மகிழ்ச்சியாகும்.


பாடல் துறையில் உங்களுக்கு எற்பட்ட ஆர்வம் பற்றி?

எனது தாயார் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளுக்காக இஸ்லாமிய பாடல்களை இயற்றுவார். அதை நான் நன்கு அவதானித்திருக்கின்றேன். அதே போல பாடசாலைத் தோழிகளுடன் சேர்ந்து சில பாடல் மெட்டுக்களுக்கு நான் பாடல் வரிகளை எழுதிருக்கின்றேன். அதன் பிறகு அண்மையில் ரூபவாஹினி அலைவரிசையில் இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு பாடல் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத்தோடு மண்வாசனையில் மகரந்தப் பூக்கள் என்ற 11 பாடலாசிரியர்களின் பாடல்களடங்கிய இறுவட்டிலும் எனது பாடல் இணைக்கப்பட்டு வெளிவந்துள்ளது. மேலும் பல இசையமைப் பாளர்களின் பார்வைக்கு எனது பாடல்களை அனுப்பியிருக்கின்றேன். நேரம் கூடிவருகையில் வரிகள் இசையைப் பெற்று பாடலாக வெளிவரும்.


கவிதையை எழுதுவதற்கும், பாடல்களை எழுதுவதற்கும் எம்மாதிரியான வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

கவிதைகள் ஒரு சீரான நடையில் எழுத வேண்டும் என்ற வரையறைக்குள் அடங்குவதில்லை. உணர்வுகளை வெளிப்படுத்தி கருத்துச் செறிவுடன் புதுக் கவிதையாகவோ மரபுக் கவிதையாகவோ எழுதப்படுகின்றது. பாடல்களைப் பொறுத்தளவில் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகியன ஒன்றுக்கொன்று ஒத்த கருத்துடையனவாகவும் முதலாம் சரணமும் இரண்டாம் சரணமும் வார்த்தைப் பிசகின்றி ஒரே தாள லயத்துடன் பாடக்கூடிய விதத்திலும் அமைந்திருத்தல் அவசியமாகும். அத்துடன் இவை ரசிகர்களின் முணுமுணுப்புக்கு ஏற்றாற்போன்ற வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டும், அழகிய கற்பனைகளைக் கொண்டும் அமைந்திருப்பது அவசியமாகும்.


தொலைக்காட்சி, வானொலிகளில் உங்கள் பாடல்கள் ஒளி, ஒலிபரப்பப்பட்டள்ளனவா?

இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே என்ற எனது பாடல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தானத்தின் நேத்ரா அலை வரிசையில் திரு. டோனி ஹஸன் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்டது. அத்துடன் மக்காவில் பிறந்த மாணிக்கமே என்ற பாடல் ஈழத்து இசை முரசு பாடகர் கலைக்கமல் அவர்களாலும் இசையமைத்து பாடப்பட்டுள்ளதுடன் அவர் வெளியிட்ட மண் வாசனையில் மகரந்தப் பூக்கள் என்ற பாடல் இறுவட்டிலும் வெளிவந்துள்ளது. இப்பாடல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.


நீங்கள் எழுதிய பாடல் வரிகளை பாடகரின் குரலில் கேட்கும் போது உங்களது மனநிலை எப்படியிருக்கும்?

அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியாது. நாம் எழுதிய வரிகளின் இன்னொரு கலைஞரின் இசைக்கும், குரலுக்கும் உட்பட்டு ஒரு பாடலாக வெளிவருகின்றபோது அதை ரசிக்கும் முதல் ரசிகனாக பாடலாசிரியரே காணப்படுவார் என்பது என்னளவில் நிஜமானது.


கவிஞர்கள் சிலர் மெல்லிசைப் பாடல்கள் எழுதுவதில் அக்கரை காட்டுவது ஏன்?

கவிஞர்கள் பொதுவாக இளகிய மனம் படைத்தவர்கள். அவர்களுக்கு கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் படைப்பாக்கம் செய்யும் திறன் அவர்களிடம் காணப்படுகின்றது. அந்தவகையில் மெல்லிசைப் பாடல்களுக்கான இலகுவான வரிகளை எழுதிவிட அவர்களது உள்ளம் துடிக்கின்றது. அதேபோல இசையமைப்பாளர்கள் பாடல் எழுதுவதற்காக அநேகமாக கவிஞர்களையே நாடுகின்றார்கள். இதன் காரணமாக இத்துறையிலும் ஈடுபாடு காட்ட கவிஞர்களால் முடியுமாக இருக்கிறது எனலாம்.


இதுவரை எத்தனை பாடல்களை எழுதியிருக்கிறீர்கள்?

இதுவரை 70 தொடக்கம் 80 வரையான பாடல்களை எழுதியிருக்கின்றேன். இவை தவிர பல பாடல்கள் இன்னும் முழுமைப்படுத்தப்படாமல் இருக்கின்றன. தொழில் நடவடிக்கைகளின் காரணமாகவும், ஏனைய துறைசார்ந்த படைப்புக்கள் காரணமாகவும் முழுதாக இத்துறையில் ஈடுபட முடியாத சூழ்நிலை காணப்படுகின்றமை இந்தப் பின்னடைவுக்குக் காரணம். எனினும் ஓய்வுநேரங்கள் கிடைக்கும் வரை காத்திருக்காமல் நேரம் ஒதுக்கிக்கொண்டு என் பாடல்களை வெகு சீக்கிரம் அழகாக செதுக்கிக்கொள்வேன்.


நீங்கள் பாடல்கள் எழுதும் போது கூடுதலாக எதனை மையப்படுத்தி எழுதுகிறீர்கள்?

இசையமைப்பாளர்கள் பல்வேறுபட்ட சூழ்நிலைகளைச் சொல்லி பாடல் வரிகள் எழுதித் தருமாறு கேட்டபார்கள். சில அமைப்புக்கள் பாடல் போட்டிகள் குறித்த தலைப்புக்களைத் தந்து பாடல்களை எழுதுமாறு பணித்திருக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களைத் தவிர, என் மனதுக்கு  குதூகலமளிக்கக் கூடிய எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி நான் பாடல்களை எழுதியிருக்கின்றேன். எழுதி வருகின்றேன்.


ஒரு பாடலை வழி நடத்துவது இசை அல்லது மெட்டு என்றால் அங்கே பாடலாசிரியரின் பங்களிப்பு எப்படி அமைகிறது?

சில பாடலாசிரியர்கள் இசைக்கு பாட்டெழுதுவார்கள், சிலர் பாடலாசிரியர்கள் தாம் ஏற்கனவே எழுதி வைத்த பாடல் வரிகளை இசையமைப்பாளர்களிடம் கொடுப்பார்கள். சில இசையமைப்பாளர்கள் தேவைப்பட்டால் தமக்கு ஏற்றாற்போல சொற்களை மாற்றிக் கொள்வார்கள். இன்னும் சிலர் இசையமைப்பாளருடன் ஒன்றாக இருந்து பாடலை உடனே எழுதுவார்கள். எந்த வகை என்றாலும் பாடலாசிரியர் தன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு பாட்டெழுதும் சூழ்நிலையே காணப்படுகின்றது. வரியோ, இசையோ தனித்து நின்று பாடலை வழிநடத்துவது இயலாத காரியம். வரியும் இசையும் நன்றாக இருந்தால் பாடல் சிறப்பாக அமையும்.


தற்காலப் பாடல்களுக்கு ஆயுள் குறைவு. இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

இத்தகைய மனப்போக்கு சிலரிடம் காணப்பட்டு வருவது உண்மை. அதற்கான காரணம் பழைய பாடல்கள் கருத்து செறிவுள்ளதாக அமைந்திருந்ததுடன் மக்களும் பாடல்களை விரும்பி ரசித்தமையாகும். அதுபோல அவை காலத்தால் அழியாத இசையைப் பெற்றிருந்தமையுமாகும். இன்று பல இசையமைப்பாளர்கள் உருவாகியதன் பின்னணியில் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய இசையமைப்புக்கள் மிகவும் அரிதாகக் காணப்படுவதுடன் அநேக பாடல்கள்; இரட்டை அர்த்தம் தரக்கூடிய, கிளர்ச்சியூட்டக் கூடியனவாக இருப்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடல் கேட்பதற்கும் பாடுவதற்கும் அனுமதிப்பதில்லை. அதுதவிர இன்று சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடும் பலர் ஒரு கலைஞனின் படைப்புக்களை பார்ப்பதைவிட வீணாக நேரம் கழிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.


உங்களுக்கு கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பரிசுகள்

2011 ஆம் ஆண்டில் ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், புத்தகப் பரிசும்

2011 ஆம் ஆண்டில் யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், பணப்பரிசும்

2011 ஆம் ஆண்டில் மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், பணப்பரிசும்

2012 ஆம் ஆண்டில் யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டும் பத்திரமும், பணப்பரிசும், பதக்கமும்

2014 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கம்பன் கழக கவிதைப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்றமைக்கான சான்றிதழும் வெள்ளிப் பதக்கமும்

2015 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கம்பன் கழக கவிதைப்போட்டியில் முதலாம் இடம் பெற்றமைக்கான சான்றிதழும் தங்கப் பதக்கமும்

2016 ஆம் ஆண்டு தெல்லிப்பளை கலை இலக்கியக் களம் தேசிய ரீதியில் நடத்திய திறந்த மட்ட கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்றமைக்காக சான்றிதழும் பணப்பரிசும்

விருதுகள்

 சிறந்த பாடலாசிரியர்
 சிறந்த சிறுகதை எழுத்தாளர்
 காவிய பிரதீப
 எழுசுடர்


எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இன்னும் இரண்டு கவிதை நூல்களும், ஒரு பாடல் நூலும், சிறுவர் பாடல் நூலும் கைவசம் இருக்கின்றன. அவற்றையும் வெளியிட வேண்டும் என்பதே தற்போதைய திட்டம்.


உங்களுக்கென்று வலைத்தளங்கள் இருக்கின்றனவா?

ஆம். எனது கவிதைகள், சிறுகதைகள், நூல் விமர்சனங்கள், பாடல்கள், சிறுவர் படைப்புக்கள் ஆகியவற்றுக்காக நான் 05 வலைத்தளங்களை உருவாக்கி அதில் பதிவேற்றி வருகின்றேன். அவை பின்வருமாறு:-


புதிய எழுத்தாளர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

எழுத்தாளராக பரிணமிக்க விரும்புபவர்கள் ஏனைய காத்திரமான எழுத்தாளர்களின் படைப்புக்கள் யாவற்றையும் வாசிக்க வேண்டும். எடுத்த எடுப்பில் ஒருவர் பிரபலமாக வேண்டும் என்றோ முகப்புத்தகத்தில் மூழ்கிக் கிடப்பதனாலோ அல்லது பலர் லைக் இடுகின்றார்கள் என்பதற்காகவோ தான் ஒரு பெரிய எழுத்தாளர் என்று எண்ணும் எண்ணத்தைக் கைவிட்டு, யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். கவிதைகளை மாத்திரம் எழுதுவதால் எழுத்தாளராக முடியாது. இலக்கியத்தின் ஏனைய பக்கங்களையும் புரட்டிப் பார்க்க வேண்டும். வாசிப்பில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்