பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, March 29, 2020

40. காத்தான்குடி பாத்திமா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2020.01.26

காத்தான்குடி பாத்திமா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

எனது பெயர் பாத்திமா  முகம்மத். இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பில் காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவள். காத்தான்குடி பாத்திமா என்ற பெயரில் இலக்கிய உலகிற்குள் வந்தவள். எனது கணவர் ஏ.எம்.முகம்மத். இவர் ஓய்வு பெற்ற அதிபர். எனக்கு ஒரே மகன். இவர் டாக்டராகப் பணிபுரிகிறார்.


உங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் எனது கல்வியைத் தொடர்ந்தேன். பின் அரச முகாமைத்துவ உதவியாளராக கிட்டத்தட்ட முப்பத்து மூன்று வருடங்கள் கடமை  செய்து சென்ற வருடம் ஓய்வு பெற்றேன். சுகாதார சேவைகள் பிராந்திய அலுவலகம் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச செயலகம் என்பவை எனது அரச பணிக்கான தளங்களாக அமைந்தன.


நீங்கள் எழுத்துத் துறைக்குள் காலடி வைத்த சந்தர்ப்பம் பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக, எப்போது ஆரம்பித்தது?

நான் பாடசாலைக் காலத்திலேயே கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதைப் பொழுது போக்காகக் கொண்டேன். எனது தந்தை மர்{ஹம் காசீம் முகம்மத் வாழும் காலத்தில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தார்கள். அதேபோல எனது கல்லூரியின் தமிழ் ஆசிரியர்களான திருமதி அகஸ்டீன் ஜோசப், எம்.எஸ்.எஸ்.ஹமீட், மருதமைந்தன் ஆகியோர்கள் எனது திறமை கண்டு என்னை மென்மேலும் ஊக்குவித்தார்கள். கல்லூரியில் எட்டாம் ஆண்டு படிக்கும் போதே அக்கல்லூரியில் பவள மல்லிகை என்றதொரு கையெழுத்துப் பத்திரிகையை ஆரம்பித்து அதன் பிரதான ஆசிரியராக நானே இருந்து திறம்பட நடாத்தி கல்லூரி மட்டத்திலும் கல்வித் திணைக்கள மட்டத்திலும்  பாராட்டப்பட்டேன். 1972ம் ஆண்டு மிகச் சிறிய வயதில் தேசிய பத்திரிகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவரத் தொடங்கின. தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மற்றும் உள்ளுர் சஞ்சிகைகள் என்பவற்றில் நிறையவே எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தன.


உங்களது சிறுகதைப் படைப்புக்கள் பற்றிக் கூற விரும்புவது? சிறுகதைகளை எழுதும் போது அவற்றுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக்கொள்கின்றீர்கள்?

நான் அடிக்கடி கூறுவேன் ஒரு எழுத்தாளன் என்பவன் கற்பனையில், ஆழமாய் சிந்திப்பதில், பரந்து சிந்திப்பதில், மற்றவர் துயரங்களில் அல்லது கஷ்டங்களில் தன்னையும் கற்பனை மூலம் ஆற்றுப்படுத்தி அதுபற்றி தனக்குள்ளே வினா எழுப்பி அதற்காக விடை காணத் துடிப்பதில் விளைவதுதான் கவிதை, அல்லது சிறுகதை. அந்தவகையில் நான் சமூக சேவையிலும் அதீத ஈடுபாடு காட்டுவதனால் பலரது துயரம், கஷ்ட நிலை என்பவற்றில் எனது ஆழ்ந்த கவனத்தைச் செலுத்துவேன். அவர்களது கண்ணீர் களையப்படத்தக்கதாக கருவொன்றை எனக்குள் ஏற்படுத்திக் கொண்டு சிறுகதைகளை உருவாக்குவேன். முற்போக்கான சீர்திருத்தங்களை இந்தச் சமூகத்தில் கொண்டுவரத் தக்கதாக எனது ஆக்கங்கள் அமைய வேண்டும் என்பதையே எனது எதிர்பார்ப்பாகக் கொள்வேன்.


இதுவரை எத்தனை நூல்களை வெளியிட்டுள்ளீர்கள்? 

இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.

01. அத்தனையும் முத்துக்கள் (சிறுகதை) 2003
02. பொய்த் தூக்கங்கள் (சிறுகதை) 2004
03. நா இடற வாய் தவறி (கவிதை) 2009

என்பனவே அவையாகும். இன்ஷா அல்லாஹ் நான்காவது நூல் விரைவில் வெளிவரலாம்.


உங்களது முதலாவது நூல் வெளியீட்டின் போது உங்களது மனநிலை எவ்வாறிருந்தது?

எனது சிறுகதைகளை நூலுருவாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம்  எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை. எனினும் எனது கணவர், மகன், மற்றும் வாசகர்கள், இலக்கிய அன்பர்கள் இந்த எண்ணத்தை எனக்கு ஊட்டினார்கள். அதிலும் நவ இலக்கிய மன்றத்தின் தலைவர் பாவலர் சாந்திமுகைதீன்  ஹாஜியார் என் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.இஸற். அஹ்மத் முனவ்வர் என் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பைச் செய்த என் அன்புச் சகோதரராவார். இந்த எனது முதலாவது நூல் வெளியீட்டில் பொருளாதாரத்தில் எனக்கு எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. ஆனால் வெளியீட்டின் வெற்றியைப் பற்றியே சிந்தித்தேன். நான் பிறந்தவூரான காத்தான்குடி, இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றும் ஒரு ஊர். இஸ்லாமியப் பெண்ணான என்னை இந்தச் சமூகம் அங்கீகரிக்குமா எனப் பயந்தேன். இறை உதவியால் நான் எதிர்பார்த்ததை விடவும் பல மடங்கான வெற்றியாக எனது புத்தக வெளியீடு அமைந்தது. ஊர் முழுமையாக ஒத்துழைத்தது. அல்ஹமதுலில்லாஹ்.


'அத்தனையும் முத்துக்கள்' என்ற உங்களது சிறுகதை நூல் பற்றி என்ன சொல்வீர்கள்?

இது எனது முதலாவது நூற் பிரசவம். இதிலமைந்த பெரும்பாலான கதைகள் தேசிய மற்றும் பிரபல்யமான பத்திரிகைகளில் வெளிவந்தவை. பொதுவாக இதிலுள்ள அநேகமான சிறுகதைகள்  என் இளமைக் காலத்தில் அப்போதிருந்த மனநிலையில் எழுதப்பட்டவை. காதல் தோல்வி, பொதுவாக பெண்கள் சீதனத்தைக் காரணம் காட்டி ஏமாற்றப்படுதல், பலதார திருமணங்களில் சமூகத்தில் செய்யப்படும் துஷ்பிரயோகங்கள் என்பன போன்ற நிகழ்வுகள் எனது எண்ணக் கோப்பில் ஏற்படுத்திய தாக்கங்களினால் பிரசவமானவை. என் முழு உணர்வுகளையும் ஒன்றாய்த் திரட்டி எழுத்துருக்களைத் தாங்கிய நூல் இது.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியை திருமதி றூபி வலன்ரீனா பிரான்ஸிஸ் இந்நூலைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். ஷஷபாத்திமாவின் சிறுகதைகள் சிறுகதை என்ற வரம்பிற்குள் சட்டமிட்டு மாட்ட முடியாதவை. மன உணர்வுகளால் ஆன வெளிப்பாடுகளே அவைகள்' என்று. அதேவேளை எனது இன்னுமொரு சிறுகதைத் தொகுப்பிற்கு வனப்புரை வழங்கிய பிரபல கல்விமானும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியும் நாடறிந்த எழுத்தாளருமான மர்கூம் ஏ.எல்.எம். பளீல் அவர்கள் தனது வனப்புரையில் ஷஷபாத்திமாவின் சிறுகதைகள் ஒரு கைதேர்ந்த திரைப்பட இயக்குனர் போல கதையின் ஆரம்பத்திலிருந்து ஆரம்பமாகி பின்னர் கதையை விபரித்து முழுக்கதையும் விளங்கும் படியாகும் திரைப்படம் போல அமைந்துள்ளமை சிறுகதைத் துறையில் அவருக்குள்ள ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு சிறுகதைகளையும் விரிவாக்கினால் ஒவ்வொரு நாவலாகப் பரிணமிக்கும் சிறந்த கருப் பொருளைக் கொண்டிருக்கிறது' எனக் கூறியுள்ளார். எனவே ''அத்தனையும் முத்துக்கள்'' என்ற எனது முதலாவது நூல் என் உணர்வுகளைப் பொறுத்த வரையில் முத்துக்களே..


நீங்கள் இந்தத் துறையில் பெற்றுக்கொண்ட மறக்க முடியாத அனுபவமாக எதை முன் வைப்பீர்கள்?

பல அனுபவங்கள் உள்ளன. அவை இனிப்பாகவும் அமைந்திருக்கின்றன. கசப்பாகவும் அமைந்தன. ஒரு பெண் எழுத்துத் துறையில் அல்லது இலக்கியத் துறையில் நிமிர்ந்து நிற்பது என்றால் இலேசுப்பட்ட விடயமல்ல. சவால்கள் பல ரூபமாகவும் வரலாம். அவற்றைச் சமாளிக்கின்ற திறமை, விடா முயற்சி, தைரியம் என்பன ஒருங்கே அமைந்திருப்பது அதுவும் ஒரு பெண்ணிடம் என்பது இறையருள் என்றே நம்புகின்றேன். இவை என்னிடம் மிகுதமாக இருந்தன. இப்போதும் இருக்கின்றன. எனக்கு மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றை நான் வாசகர்களுக்குச் சொல்லித்தானாக வேண்டும்.

எனது முதலாவது புத்தக வெளியீட்டு விழாவுக்கு எமதூரிலுள்ள பிரபலமான இரண்டு இலக்கியவாதிகளிடம் எனது விழாவில் அதிதிகளாகக் கலந்து கொள்ளுமாறும் அவர்களது பெயர்களை அழைப்பிதழில் இடுவதற்கு சம்மதிக்குமாறும் கேட்டு நின்றேன். அதற்கு அவர்கள் என்னிடம் நேரடியாக எந்தப் பதிலும் சொல்லாது பிறிதொரு நபரிடம், ''பெண்கள் புத்தகம் வெளியீடு செய்வது வெற்றி பெறாது'' என்ற பொருட்படப் பேசி தங்களது விருப்பமின்மையை மறைமுகமாகத் தெரிவித்தனர். இது இவ்வாறிருக்க எனது புத்தக வெளியீட்டை அரசியல் கலப்பற்றதாக நடாத்த வேண்டுமென்ற என் விருப்பத்திற்கிணங்க எனது அழைப்பிதழைத் தயாரித்ததோடு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் அந்நாள் பணிப்பாளர் அஹ்மத் முனவ்வர் ஹாஜியாரையே நான் பிரதம அதிதியாகவும் அழைத்தேன். என் விழாவுக்கு வர மறுப்புத் தெரிவித்த எனதூர் இரண்டு இலக்கியவாதிகளும் வானொலியில் தங்களுக்கான களந்தேடி அலைபவர்கள், ஏங்கிக் கிடப்பவர்கள் என்பதும் எனக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும். எனவே வானொலியோடு தொடர்புடைய ஒருவர் எனது விழாவுக்கு வருகிறார் என்பதனால் அந்த இலக்கியவாதிகள் இருவரும் என் வீடு தேடிவந்து என்னென்னவோ சொல்லி நின்றபோது நான் அழைப்பிதழும் அச்சிட்டாகிவிட்டது எனக்கூறியபோது அவர்கள் பரவாயில்லை எங்களுக்கு பேச ஒரு சந்தர்ப்பம் தந்தால் போதுமென்றார்கள். அவர்களது பரிதாபம் கண்டு அச்சந்தர்ப்பத்தை அவர்களுக்கே வழங்கவேண்டியதாயிற்று. இதுவே எனது எழுத்துலக வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். வெட்டுக்குத்தும், குழி பறிப்பும், காட்டிக்கொடுப்பும் நிறைந்த இலக்கிய உலகில் நானொரு பீனிக்ஸ் பறவையானேன்.


முற்போக்குச் சிந்தனை கொண்டு நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை எது? ஏன்?

என் கதைகளில் அநேகமாக எனக்கு எல்லாக் கதைகளும் பிடிக்கும். அதிலும் பெண்களுக்கு சமூகத்தில் இஸ்லாத்தைப் பிழையாக விளங்கிக்கொண்டு இஸ்லாத்தின் திருமணச் சட்டங்களைப் பிழையாக விளங்கி, அதனைத் துஷ்பிரயோகம் செய்கின்ற வகையில் ஒரு மனைவி குழந்தைகள் வாழவைக்கப்பட வேண்டியவர்களாக இருக்க அவர்களைக் கைவிட்டு மறுமணம் என்ற பெயரில் துரோகம் செய்கின்ற ஆண்கள், இதற்கு உடந்தையாக இருந்து செயற்படும் பள்ளிவாயல்களின் பரிபாலன சபைகள் என்பவற்றை என் கருத்துக்கள் மூலம் விளாசியிருக்கிறேன். அத்தோடு இளவயதில்  சந்தர்ப்ப வசத்தால் காதல் என்ற மாய வலையில் மாட்டிப் பின் முதுகெலும்பற்ற ஆண்களால் சீதனத்துக்காக ஏமாற்றும் ஆண்களையும் சாடியிருக்கிறேன். மட்டுமல்ல எனது சிறுகதைகளில் தமிழின் மூவகை நிலையான தன்மை, முன்னிலை, படர்க்கை என்பதில் எனது அநேக கதைகளில் பாதிக்கப்படும் பாத்திரமாக நானே மாறியிருக்கிறேன். அதாவது கதாபாத்திரமாக தமிழின் தன்மை நிலையாக நான், எனக்கு, என்னை என்றே கதைகளில் பேசியிருக்கிறேன். எனவே இந்த உணர்வுதான் எனது சிறுகதைகள். எனது பிரசவங்கள் எனக்கு மிகவும்; பிடிக்கும்.


உங்களது படைப்புக்கள் அதிகமாகவே பெண்களின் பிரச்சினைகளைத்தான் பேசியிருக்கின்றதா? என்ன காரணம்?

வாழ்க்கையின்  பல்தரப்பட்ட சுமைகளையும்  தூக்குவதற்கும்  கல்லடிபடுவதற்கும், துயரங்களை அனுபவிப்பதற்கும் என்று அகப்படுபவர்கள் பெண்களே. இது முஸ்லிம் சமுகத்தில் மட்டுமல்ல மற்ற எல்லாச் சமுகத்திலும் இந்த அவல நிலையுண்டு. எனவே என்னிடம் பல பெண்கள் வருவார்கள். அவர்கள் தங்களின் பிரச்சினைகளைச் சொல்லி அழுவார்கள். சுற்றுப்புறச் சூழலிலும் பெண்களின் வாழ்வின் துயரக் கதைகளை மிக அதிகமாகக் கண்டிருக்கிறேன். இதுபற்றி நன்கு சிந்தித்திருக்கிறேன். இந்தச் சிந்தனை எனக்கு சிறு வயதிலிருந்தே என்னோடு தொடர்ந்திருக்கிறது. இஸ்லாமிய திருமணச் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்தல், சட்டங்களைத் தங்களுக்கு சார்பாக வளைத்தல், பணப்பலம், செல்வாக்கு, ஆணாதிக்கம், சீதனக் கொடுமை, வறுமை போன்ற இத்தகைய நச்சு விதைகளின் முன்னெடுப்பு அநேகமான பெண்களின் திருமண வாழ்வைக் காவு கொள்வது என் சிந்தையில் சுழலும்போது பல சிறுகதைக் கருக்கள் உருவாகி இந்தச் சமுக ஒழுக்கக் கேடுகளை உரக்கக் கூவி ஆவேஷப்படுத்தும். இதனை எனது இரண்டாவது நூலான பொய்த் தூக்கங்கள் என்பதில் எனது கண்ணியத்துக்குரிய மர்கூம் பளீல் சேர் அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


உங்களது சிறுகதைகளுக்கு கிடைத்த ஆதரவுகள் அல்லது வரவேற்புகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

எனது படைப்புக்களுக்கு நிறைய வரவேற்புக்கள் கிடைத்திருக்கிறது. எனது கதைக் கருக்கள் பலராலும் பாராட்டப்பட்டிருக்கின்றன. அதற்கு இப்போதும் என்னால் மிகுந்த கரிசனையோடு பாதுகாத்து ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் வாசகர்களின் பாராட்டுக் கடிங்கள் சாட்சி. அத்தோடு எனது சிறுகதைகளுக்கு மிகவும் ஆதரவு தந்து ஊக்கப்படுத்திய பெரியார்களில் தினகரன் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற ஆர். சிவகுருநாதன் ஐயா முதன்மையானவர். அத்தோடு புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன், மன்னார் எச்.எம்.ஷரீப், எம்.எச்.எம்.ஸம்ஸ், எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோரின் பாராட்டுக்கள் எனக்கு உத்வேகம் தந்தவையாகும். கிடைத்த விருதுகளும், பரிசுகளும், பொன்னாடைகளும் எனது உற்சாகத்தின் ஊன்று கோல்களாயின.


''நா இடற வாய் தவறி'' என்ற உங்களது கவிதைத் தொகுதி குறித்து என்ன குறிப்பிடப் போகின்றீர்கள்?

அது கவிதைத் தொகுப்பு என்று சொல்வதைவிட என் மன உணர்வுகளின் குவியல்கள் என்றே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தமிழை, உணர்வை, என் உள்ளத்தை, என் விருப்பு வெறுப்புக்களை, என் வேதனைகளை, வெற்றிகளை அந்தத் தொகுதியில் கொட்டியிருக்கிறேன். அது கவிதைத் தொகுப்பா அல்லது உணர்வுத் தொகுப்பா என்று வாசிக்கின்ற வாசகர்களையே பெயர் வைக்குமாறு நான் உரிமை வழங்கியிருக்கிறேன்.


பெண்களுக்கெதிரான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இவ்வாறான சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த எவ்வாறான முன்னெடுப்புகளை முன்னெடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இவ்வாறான காட்டுமிராண்டிச் சம்பவங்கள்தான் இன்று உலகைப் பிடித்துள்ள பெரும் பீடை. இதனைத் தடுப்பதற்கு ஒரே வழி தண்டனைகளை மிக மிகக் கடுமையாக்குவதுதான். தண்டனைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். காலதாமதமின்றி மிகக் குறுகிய காலத்திற்குள் தண்டனைகளை வழங்க வேண்டும். இக்குற்றங்களின் கொடுரத்தை சகல தரப்பாரும் உணர்ந்து தண்டனைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அத்துடன் பெண்களுக்கு உரிய முறையில் விழிப்புணர்வுகள் ஊட்டப்பட வேண்டும். அத்தோடு நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்கள், அவற்றின் விளைவுகள், அவற்றுக்கான தண்டனைகள் பற்றி பாடசாலைக் கல்வியிலும் இளம் சந்ததியினருக்குப் பாடம் நடாத்தப்பட வேண்டும். இவை மூலம் நல்ல பயன் கிட்டுமென எண்ணுகின்றேன்.


உங்கள் எழுத்து முயற்சிகளின் இலக்குகள் என்னவாக இருக்கிறது?

நான் இதுவரை காலமும் எழுதிய ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு இலக்கை வைத்தே எழுதப்பட்டிருப்பதாக நம்புகின்றேன். பெண்களுக்கான நீதி வேண்டும். இஸ்லாமியத் திருமணச் சட்டங்கள் கொச்சைப்படுத்தப்படக் கூடாது, சமுகத்தில் பெண்கள் ஓரங்கட்டப்படக் கூடாது, சீதனம் இழிவானதாக்கப்பட வேண்டும் என்ற இலக்கோடு சமுக இடர்பாடுகள் என்பன களையப்பட வேண்டும் என்ற நோக்கோடு சிறுகதைகளில் நான் பயணிக்கின்றேன்.


சமகாலமாக நாவல் இலக்கியங்களின் வரவு கணிசமாக குறைந்து வருகின்றது. அந்தவகையில் நீங்கள் நாவல்கள் எழுதுவதிலும் அக்கரை காட்டலாமே?

இதே கேள்வியை என்னிடம் பலர் கேட்கிறார்கள். எனக்கும் அதில் விருப்பம் உள்ளது. விரைவில் அந்த முயற்சியிலும் இறங்கலாமா என எனக்குள்ளே நான் கேள்வி கேட்கின்றேன். இன்னும் சில மாதங்களில் ''பொய்த் தூக்கங்கள்'' என்ற எனது சிறுகதை நாவலாக விரிவாகி வெளிவரலாம்.


சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் உங்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

கலாபூஷண விருது அடங்கலாக எனக்கு முப்பது விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. பாராட்டுகள், பொற்கிழிகள் என்பவையும் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் நான் எனது எந்த ஆக்கத்தையும் போட்டிகளுக்கு அனுப்புவதில்லை. எனது ஒவ்வொரு ஆக்கமும் நான் பிரசவித்த குழந்தைகள். இவற்றைப் போட்டிக்கு உட்படுத்திப் பெறுமதியிட்டு கொச்சைப்படுத்துவதை நான் விரும்புவதில்லை.


எதிர்காலச் சந்ததிகளுக்கு நீங்கள் கூறும் அனுபவ மொழிகள் யாவை?

இளம் எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் தடம் பதிக்க வேண்டுமானால் முதலில் தன்னம்பிக்கை அவசியம். தோல்விகளை, புறக்கணிப்புக்களைச் சகித்து மென்மேலும் முயற்சித்தல் அவசியம். தனது படைப்புக்களில் நம்பிக்கை வைக்க வேண்டும். பெரிய இலக்கியவாதிகளை மதித்து அவர்களின் ஆலோசனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். ஓரிரண்டு ஆக்கங்களை யாத்துவிட்டு புகழையும் மாலை மரியாதையையும் எதிர்பார்க்கக் கூடாது. கௌரவங்களை நாங்கள் தேடிப்போகக் கூடாது. இவையே எனது வாழ்வில் நான் கடைப்பிடித்த விடயங்கள். அதனையே இக்கால இளம் எழுத்தாளர்களுக்கும் ஆலோசனையாக வழங்குகின்றேன்.


இலக்கியங்களில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் வகிபங்கு எவ்வாறுள்ளது?

மிக மிகக் குறைவு. ஒன்றிரெண்று தோன்றினாலும் வந்த வேகத்தில் அவர்கள் மறைந்து கொள்கிறார்கள். காரணம் குடும்பச் சுமை, தைரியமின்மை, பெற்றோர்களின் உடன் பிறப்புக்களின் கட்டிய கணவர்மாரின் ஒத்துழைப்பின்மை, ஊக்குவிப்பின்னை, ஊடகங்களின் புறக்கணிப்புகள் இவையே காரணிகளாகலாம். எனினும் பாடசாலைகளில உயர் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவிகளில் இத்தகைய இலக்கிய உணர்வுகள் உள்ளவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். பெண்களின் வகிபாகம் குறைந்திருப்பது என்னைப் பொறுத்தவரை மிகவும் வேதனையான விடயம்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் தற்சமயம் சற்று சுகவீனமடைந்திருந்த போதிலும் இடைக்கிடை எனது சில ஆக்கங்களை பிரசுரத்திற்காக ஊடகங்களுக்கு அனுப்புகிறேன். இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறேன். என் எழுத்து முயற்சிகளுக்கு எனது கணவர் மிகவும் உறுதுணையாக இருக்கிறார். இறைவனின் உதவியால் இன்னும் எனது பல படைப்புக்களையும் இலக்கிய உலகிற்கு அவ்வப்போது வழங்கலாமென்ற நம்பிக்கையுடனுள்ளேன்.


இறுதியாகப் பகிர்ந்துகொள்ள விரும்புவது என்ன?

இலக்கிய உலகமென்பது பரந்தது விரிந்தது. அங்கே பாசமும் உண்டு. பயங்கரமும் உண்டு. இதில் காலூன்ற நினைப்பவர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும். வெல்லத் துணிந்துவிட்டால் அது வெல்லக் கிடங்காகிவிடும். நானறிந்தவரை எந்த எழுத்தாளனும் கவலைகளால் ஹார்ட் அட்டெக்கை அணைக்கவில்லை. கவலைகளைக் காகிதத்தில் இறக்கி வைத்தால் இதயத்தில் சுமைகள் தேங்குவதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை வழங்கிய தங்கை ரிம்ஸா முஹம்மத் உட்பட தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் குலாம் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

39. மஸீதா புன்னியாமீன் அவர்களுடனான நேர்காணல்


இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.10.27

மஸீதா புன்னியாமீன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

இலங்கையில் தென்னகத் தலைநகர் காலியில் கட்டுக்கொடை கிராமம் எனது பிறப்பிடம். பாலர் கல்வி முதல் உயர்தரம் வரை கல்விப் பயணத்தில் தென்னகமே கைகொடுத்தது. வசதி வாய்ப்புகள் குறைந்திருந்தாலும் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் முன்னின்ற குடும்பமொன்றில் பத்துப் பேரில் நான் ஆறாவது பிள்ளையாகப் பிறந்தேன்.


உங்களது இலக்கியப் பின்னணி குறித்து கூறுங்கள்?

சிறுவயது முதல் வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவள். தந்தையார் வாங்கி வரும் புதினப் பத்திரிகைகளின் முதல் வாசகி நானே. வகுப்பறைக் கற்றலில் கட்டுரை எழுதி தமிழ்ப் பாட ஆசிரியரிடம் பாராட்டு பலமுறை பெற்றுள்ளேன். உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கற்கையில் கல்லூரி அதிபர் காலஞ்சென்ற எம்.எஸ்.ஏ. மஜீத் அவர்கள் என் எழுத்தாற்றலை இனங்கண்டு, 'தென்றல்' என்ற காலாண்டுச் சஞ்சிகைக்குப் பத்திராதிபராக்கினார். அவரது காலப் பிரிவிலேயே இலங்கை ஹிஜ்ரா கவுன்ஸில் பாடசாலை மாணவரிடையே அகில இலங்கை ரீதியில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதலாமிடம் எனக்குக் கிடைத்தது. எனது பௌதிகவியல் பாட ஆசிரியர், பிற்காலத்தில் தென்மாகாண விஞ்ஞானப் பிரிவின் வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலஞ்சென்ற ஏ.ஆர்.எம்.எம். நாஸிம் அவர்கள் பத்திரிகைகளில் அவ்வப்போது பிரசுரமான எனது ஆக்கங்களைப் படித்துவிட்டு ஊக்கம் தந்தார்.


இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?

1980 களில் இலக்கிய வானில் புதுக்கவிதை வடிவம் சிறகடித்துப் பறந்த காலம் எல்லோரையும் போல நானும் எழுதிய கிறுக்கல்களின் சில அச்சில் வராமலே போயின. என் இலக்கிய முயற்சிகளின் தொடர்ச்சி 1980 களில் தினகரன் பத்திரிகையின் கவிதைப் பூங்கா பகுதியில் 'பெருமூச்சு' என்ற தலைப்பில் என் புதுக் கவிதையைப் பிரசுரித்து ஆனந்தத்தில் ஆழ்த்தியது.  அதன்பிறகு சிந்தாமணியும் எனது புதுக் கவிதைகளை அங்கீகரித்து அரங்கேற்றியது. அந்நாளில் தினகரன் ஆசிரியர் பீடத்தை அலங்கரித்த சகோதரர் ஏ.எச். சித்தீக் காரியப்பர் எனது புதுக் கவிதைகளை மெருகூட்டி, பிரசுரமாகக் களமமைத்துத் தந்தவர் என்பதனை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். எனது தந்தையின் பெயர் ஹம்ஸா. எனது ஆரம்ப கால எழுத்துலகப் பிரவேசம் கட்டுகொடை மஸீதா ஹம்ஸா என்ற பெயரிலேயே நிகழ்ந்த வண்ணமிருந்தது. 


நீங்கள் எழுத்துலகில் செய்த சாதனையாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

சாதனை என்பது பிறர் பிரமிக்கத்தக்க வகையில், பயன்பெறும் வகையில் ஒருவரால் ஆற்றப்படும் ஓர் ஆக்கபூர்வமான செயற்பாடு அல்லது சேவை என்பதே என் கருத்து. என்னைப் பொருத்தமட்டில் இலக்கியத் துறையில் நான் சாதித்தது என்ன? என்னுடைய செயற்பாடுகள் எதனையும் நான் சாதனையாக கருதியதில்லை. 


ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் நூல்கள் பலதை வெளியிட்ட அனுபவம் பற்றிக் கூறுங்கள்?

நானும் என் துணைவர் புன்னியாமீனும் ஆசிரியர்கள். கணிதமும் விஞ்ஞானமும் என் துறையாக இருக்க, வரலாறும் அரசறிவியலும் அவர் துறையாக இருந்தது. கணவரது இலக்கிய நூல்களோடு, இளந்தலைமுறையினருக்கும் களமமைக்கும் நோக்கில் புதிய மொட்டுகள், அரும்புகள், பாலங்கள் என கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். கூடவே வரலாறு நூல்கள் பலவற்றையும் வெளியிட்டு தனது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முனைந்தார். எனது முதல் நூல்கூட 'விஞ்ஞான வினாச் சரம்' என்று என் தொழிற்றுறை சார்பாகவே உருவாக்கப்பட்டது. 

ஒரு பரீட்சார்த்த முயற்சியாகவே நாமிருவரும் தரம் ஐந்து மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களை ஆரம்பித்தோம். 1994 ஆம் ஆண்டு வரை தமிழ், கணிதம் என்ற இரு பாடங்களோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 1995 ஆம் ஆண்டிலிருந்து பாட அறிவுடன் நுண்ணறிவு, பொது அறிவு என விரிவடைந்து இரு பாகங்களாக நடைபெறத் தொடங்கியது. அதன் பிற்பாடுதான் நாம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டோம். நாமே எதிர்பாராத அளவுக்கு அவை எமக்கு அமோக ஆதரவை வழங்கின. இதன் காரணமாக 93 நூல்கள் எம்மால் வெளியிடப்பட்டுள்ளன.


இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, இலக்கியப் போக்கு பற்றி யாது கூறுவீர்கள்?

ஒரு காலமிருந்தது. பெண் எழுத்தாளர்கள் புற்றீசல் போல பெருகி வந்து, அதில் பலர் காலப் போக்கில் காணாமற் போனோர் பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். திருமணம், குடும்பச் சுமை, தொழில் வாய்ப்பு போன்ற இன்னோரன்ன காரணங்கள் இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கலாம். முன்பெல்லாம் ஒரு ஆக்கத்தை எழுதி அதனை தபாலிட்டுவிட்டு பிரசுரமாகியிருக்குமோ எனக் காத்திருந்து ஏமாந்து, நாட்கள் கழிந்து பிரசுரமான பின் மிக்க மகிழ்ந்த அந்த சந்தர்ப்பங்கள்.. இப்போது அப்படியல்ல. இன்று இலத்திரனியல் யுகத்தில் ஏராளமான பெண் எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களது ஆக்கங்கள் வெளியுலகம் சென்றடைவதற்கு இருக்கின்ற தடைகள் மிகக் குறைவு. தரமான ஆக்கங்களை படைக்கும் பெண் எழுத்தாளர்கள் இன்னும் உருவாக வேண்டும்.


எழுத்துத் துறை சார்ந்த உங்களது கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

எழுத்தாற்றல் இறைவன் கொடுத்த வரம். போர்வாளின் முனையைவிட பேனா முனை வலிமையானது என்பார்கள். எழுதுவதற்கு விரும்பும் ஒருவர் முதலில் எழுத்தை நேசிக்க வேண்டும். சமூகத்தை நேசிக்க வேண்டும். எழுதப்படும் ஆக்கங்களின் கனதியும் காத்திரமும் ஏதேனும் வகையில் ஊடுருவி சமூகத்தின் நாடி பிடித்துப் பார்க்க வேண்டும்.


உங்கள் எழுத்துக்களினூடாக எதைச் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

எனது இலக்கியப் பயணத்தின் பின்னூட்டமாக என் துணைவர் புன்னியாமீன் இருந்தார். அவரது எழுத்துக்களும் சமூக நோக்கும் உலகின் பல பாகங்களிலும் பேசப்பட, நான் என்னால் இயன்றதைச் செய்துள்ளேன். நான் சாதிக்க நாடியதைவிட அவரது எழுத்துலக சாதனைகளால் நான் திருப்தியடைகிறேன். 


இன்றைய புதிய கவிஞர்களின் வருகை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

முகநூல் - இலக்கியப் பிரியர்களுக்கு வரப்பிரசாதம். நூல்களை வாசிக்க விரும்பாதவர்கள்கூட முகநூலில் முகம் புதைக்கின்றார்கள். அதி இலகுவாக களமமைத்துக் கொடுப்பதனால் முகநூல் கவிஞர்களுக்கு அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இதனால் கவிதை என்று ஏதோ எழுதித் தலையைச் சுற்ற வைக்கும் கவிதைகளுக்குத் தட்டுப்பாடு இல்லை. இப்படியும் இவர்களால் எழுத முடியுமா என்று உண்மையில் சிலருடைய கவிதைகள் பிரமிக்க வைக்கும்.



மரபுக்கவிதை, புதுக்கவிதை குறித்த உங்கள் பார்வை என்ன?

கவிதை எழுதுவது என்பது எளிமையான காரியமல்ல. நாலே வரிகளில் நல்லதைச சொல்வதற்கு எவ்வளவோ பிரயத்தனப்பட வேண்டும். அதிலும் மரபுக் கவிதை படைப்போரிடம் இலக்கிய ஆளுமை அதிகமாக இருக்க வேண்டும். நயம், நளினம் போன்றே அர்த்தமும் நிறைந்ததே மரபுக் கவிதை. வெறும் வார்த்தைக் கோலங்கள் புதுக்கவிதையாவதில்லை. மிகவும் எளிமையான வார்த்தைகளை மெல்லிய உணர்வுகளின் பின்னலாக வாசிப்போரைக் கவரும் வகையில் கோர்த்துக் கருத்துச் சிக்கனமாக முன்வைப்பது புதுக்கவிதை என்பது எனது கருத்து. 


நீங்கள் எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கின்றீர்கள்? என்ன காரணம்?

ஓர் எழுத்தாளன் உருவாவதே வாசிப்பில் காட்டும் தீவிர ஆர்வத்தினால்தான். நான் எல்லா வகையான புத்தகங்களையும் வாசிப்பதில் நாட்டம் கொண்டிருக்கின்றேன். கற்கும் காலத்தில் பாடசாலை நூலகத்திலிருந்து நாவல்களை எடுத்துச் சென்று வாசிப்பேன். மு.வரதராசன், அகிலன், ரமணி சந்திரன் என்று இந்தப் பட்டியல் நீளும். இந்திய நாவலாசிரியர்களின் நூல்களுக்கு அமோக வரவேற்பு இருந்த காலமல்லவா? புதுக்கவிதையின் முன்னோடி மு.மேத்தா அவர்களின் கவிதைகள் என்னை வெகுவாக ஈர்த்தவை. திக்குவல்லைக் கமால், திக்குவல்லை ஸப்வான் இவர்களுடைய சிறுகதைகளை எப்போதும் விருப்புடன் வாசிக்கின்றேன். திக்குவல்லை கமால் அவர்களின் பிரதேசப் பேச்சுவழக்கு நடை எனக்கு மிகவும் பிடிக்கும். மலையகத்தில் வாழ்ந்தாலும் நான் தென்னகத்தைச் சேர்ந்தவளாயிருப்பது அந்த ஈர்ப்புக்குக் காரணமாகலாம். நான் எழுத ஆரம்பித்த காலங்களில் என் துணைவர் புன்னியாமீன் சிறுகதைககள் வாயிலாகத்தான் இலக்கியத்தில் இடம்பிடித்து வந்தார். அவரது சிறுகதை நடை என்னை மிகவும் கவர்ந்தது. பின்னாளில் அவரது சிறுகதைகளின் நடையே எனது சிறுகதைகளிலும் மருவியிருந்ததை மறுக்க முடியாது.


நீங்கள் இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

காலஞ்சென்ற புன்னியாமீன் அவர்களின் சிந்தனை வட்டத்தினால் நூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர்களின் நூல்கள் அச்சுருப்பெற்றன. அதன் நூறாவது வெளியீடான 'ஒற்றைத்தாயின் இரட்டைக் குழந்தை' கவிநூல் கலைமகள் ஹிதாயா ரிஸ்வியினதும், எனதும் கவிதைகள் கலந்ததொரு கூட்டு முயற்சியாகியது. அதன் பின்னர் பாட ரீதியிலான 'விஞ்ஞான வினாச்சரம்' எனும் வினா விடைத் தொகுப்பு ஒன்று என்னால் உருவாக்கம் பெற்றது. துணைவருடன் இணைந்ததாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பாட விளக்கமாகவும், பயிற்சி நூல்களாகவும் 93 நூல்கள் வெளியிடப்பட்டன. 'மூடுதிரை' என்ற சிறுகதைத் தொகுதியே எனது தனியானதொரு இலக்கிய நூலாக அமைந்தது. அதனையடுத்து 'நல்லவனாவேன்' என்ற சிறுவர் பாடல் நூல் கல்வியமைச்சின் கல்வி நூல் வெளியீட்டு ஆலோசனை சபையின் அங்கீகாரத்துடன் அச்சுறுப் பெற்றது. 

மற்றுமொரு சிறுகதைத் தொகுதிக்கும், சிறுவர் இலக்கியத்துக்கும் ஆயத்தமான நிலையில்தான் என் துணைவரின் இழப்பு நேர்ந்தது. என் துணைவரின் கடைசி இரண்டரை மாத வாழ்க்கையினை என் அனுபவங்களை ஒரு நூலில் வடிக்க மனதில் சின்னதாயொரு தேக்கமும் குடிகொண்டிருக்கிறது.


இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து யாது?

பாராட்டு ஒரு மனிதனை பாராளும் அளவுக்கு இட்டுச் செல்லக் கூடியது. எந்தவொரு சராசரி மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. ஓர் எழுத்தாக்கத்திற்கு, நூலுக்கு, இலக்கிய முயற்சிக்கு பாரபட்சமின்றி செய்யப்படும் விமர்சனங்கள் அந்த படைப்புகளுக்குச் சொந்தக்காரனை வளம் படுத்த வேண்டும். குறைகளோடு நிறைகளும் சுட்டிக்காட்டப்படுவதன் மூலம் படைப்பாளி தன்னை புடம் போட்டுக்கொள்ள முடியும்.

விருதுகள் நம்மைத் தேடி வரவேண்டுமேயன்றி நாம் விருதுகளை தேடிப் போகக் கூடாது. ஒரு படைப்பாளியில் ஏதோவொரு திறமையை இனங்கண்டதால்தான் விருதுகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. ஒரு விருதுக்காக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் தொடர்பான அத்தனை விபரங்களையும் கொடுத்துதவுவது உரியவர் கடமை. அதற்காக தம்மைத் தாமே பீற்றிக் கொள்ளல், விருதினைக் கேட்டுப் பெறல் என்ற குற்றச்சாட்டுக்கள் உருவாகின்ற நிலைமை மாற வேண்டும்.


இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க இயலாத சம்பவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

கலாசார அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்படும் அகில இலங்கை அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் 'மரிக்க மறுக்கும் மனிதம்' என்ற எனது சிறுகதைத் தொகுதிக்கு முதலாமிடம் கிடைத்தது. அதன் பரிசேற்பு வைபவத்திற்கு நானும் என் துணைவரும் சென்றிருந்தோம். அந்த வைபவத்தில் மாற்றமான ஒரு நிகழ்வு நடந்தேறியது. சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெவ்வேறாக நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற தமிழ் சிறுகதை சிங்களத்திலும், சிங்கள சிறுகதை தமிழிலும் விமர்சனம் செய்யப்பட்டது. மட்டுமன்றி ஒப்பிட்டும் நோக்கப்பட்டது. இந்த விமர்சனத்தை செய்தவர் வேறு யாருமல்ல. நாடறிந்த சிங்கள எழுத்தாளரும், தமிழை நன்றாகப் பேசி எழுதக்கூடிய விசேட ஆற்றல் கொண்டவருமான திருவாளர் மடுளுகிரிய விஜேரத்ன ஆவார். அவரும் எனது துணைவரும் நெருங்கிய நண்பர்கள். எனது 'முடுதிரை' நூல் வெளியீட்டு விழாவின் போது, கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டவர். புன்னியாமீனின் துணைவியார்தான் இந்தச் சிறுகதைக்குச் சொந்தக்காரர் என்ற விபரம் அவருக்குத் தெரியாது. விழாவின் இடைவேளையின் போதுதான் அவர்கள் சந்தித்து முகமன் கூறிக் கொண்டார்கள். அதன்பிறகுதான் அவருக்கு எனது சிறுகதை அது என்பது தெரியவர மிகவும் சந்தோஷப்பட்டார். எனது சிறுகதை மாற்றுமொழியில் விமர்சனம் செய்யப்பட்ட அந்த சம்பவம் எனக்குக் கிடைத்த விருதினையும், பொற்கிழியையும்விட மனதுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. 


இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

வயது வித்தியாசமின்றி அலைபேசிகளை அணைத்துக் கொண்டு அலை பாயும் எண்ணங்களோடு மக்கள் அலையும் கவியுலகத்தில் நூல்களை வாசிப்போரின் எண்ணிக்கை அருகி வருவதை கண்கூடாகப் காண்கின்றோம். எதிர்காலத்தில் நூலகங்களில் பத்திரப்படுத்தப்பட்ட நூல்கள் வெறும் காட்சிப் பொருளாக மாறிவிடுமோ என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளது. வாசிப்பு வாழ்க்கையின் மூச்சாக வேண்டும். விலைமதிப்பற்ற புத்தகங்கள் தூசுதட்டப்படாமல் தேக்கமடையும் நிலைமை மாற்றமடைய வேண்டும். எனவே நல்ல நூல்களை வாசியுங்கள். நல்ல விடயங்களை குறிப்பில் எடுங்கள். மனதிலும், அலைபேசியிலும் தரவேற்றம் செய்து பகிருங்கள். தமது தரம் உயர வேண்டுமென விரும்பும் பெண் எழுத்தாளர்கள் நல்ல நூல்களை அவசியம் வாசிக்க வேண்டும்.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்