பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Friday, December 22, 2017

30. கோகிலா மகேந்திரன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.09.03

கோகிலா மகேந்திரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் பிறந்த கிராமம் விழிசிட்டி. தெல்லிப்பழையின் தென்மேற்குப் பகுதியில் அமைந்த வாழையும் கமுகும் வெற்றிலையும் நிறைந்த அழகிய சிறு கிராமம். மழைக்கால அருணோதயம் போன்றிருந்த இளமைக்காலம். யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் அமைவது தெல்லிப்பழை. எனது தந்தையார் சிவசுப்பிரமணியம். தமிழாசிரியர், பண்ணிசையாளர், புராண படனம், இசை நாடகம் செய்பவர். நீண்டகாலம் தெல்லிப்பழை சைவப் பிரகாச வித்தியாசாலையின் அதிபராகப் பணிபுரிந்தவர். வெள்ளை வாத்தியார், புது வாத்தியார் என்று தெல்லிப்பழை மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். தாயார் செல்லமுத்து. அதிகம் படிக்காதவர். ஆயினும் கிராமத்தில் அனைவரிடமும் மிகுந்த அன்புடன் பழகுபவர். அவர்களது பிரச்சினைகளைத் தனிப்படக் கேட்டு தனக்குத் தெரிந்த வகையில் தீர்வு சொல்லும் பழக்கமுடையவர். நான் இவர்களுக்கு ஒரே பிள்ளை.



உங்கள் பாடசாலைக்காலம், தொழில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

எமது கிராமத்துப் பாடசாலையாகிய விழிசிட்டி சிவஞான வித்தியாசாலையில் (இப்போது இது பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலை என வழங்கப்படுகிறது) ஆரம்பக் கல்வியைத் தொடங்கி இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வியைத் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் பெற்றேன். எனது ஆளுமை வளர்ச்சியில் பெரும்பங்கை வகித்தவர்கள் (குடும்பத்தினர் உட்பட) மகாஜனக் கல்லூரியின் சில ஆசிரியர்கள். அப்போதைய கல்லூரி அதிபர் தெ.து. ஜெயரத்தினம் அவர்களிடம் ஆங்கிலமும், கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை அவர்களிடம் தமிழும், ச.பொ. கனகசபாபதி அவர்களிடம் விலங்கியலும், பார் மாஸ்டரிடம் (திரு. ப. சுப்பிரமணியம்) இரசாயனவியலும் கற்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமையாது. சிறுகதை, கவிதை, நாடகம், விளையாட்டு, பேச்சு, விவாதம், தலைமைத்துவம் என்று வாழ்வின் பல பகுதிகளிலும் சிறப்படையத் தேவையான உரத்தைப் போட்டது மகாஜனா. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மதுரைப் பண்டிதர் க. சச்சிதானந்தம் அவர்களிடம் தமிழும் உளவியலும் கற்க முடிந்தது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடுமையாக என்னைக் கவரவில்லை.

தொழில் என்று பார்த்தால், நான் எந்தப் பதவியில் இருந்தாலும் அடிப்படையில் ஆசிரியர்தான். 1974 இல் விஞ்ஞான ஆசிரியராக நியமனம் பெற்றேன். 1989 இல் அதிபர் தரப் பரீட்சையில் சித்தியெய்தி அதிபரானேன். 1999 முதல் வலிகாமம் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமை புரிந்தேன். இடையில் விஞ்ஞான பாடச் சேவைக்கால ஆலோசகராக, ஆசிரியர் பயிற்சியின் வருகை விரிவுரையாளராக, பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்துக்கான வருகை விரிவுரையாளராக என்று பலமுகம் கொண்டேன்.  உளவளத்துணைப் பயிற்சி முடித்து உளவளத்துணையாளரானேன். அனர்த்த காலத்தில் வடக்குக் கிழக்கில் 150 இற்கும் மேற்பட்ட ஆசிரிய உளவளத்துணையாளர்களைப் பயிற்றுவிக்கும்  பொறுப்பை ஏற்று செம்மையாகச் செய்தேன். ஓய்வுபெற்று கொழும்பில் இருந்தபோது உளவைத்திய நிபுணர் எஸ். சிவதாஸ் அவர்களுடன் இணைந்து ஒரு உளவளத்துணை நிலையத்தில் வழிகாட்டல் செய்தேன். பின்னர் அவுஸ்திரேலியா சென்று சிட்னி நகரில் தமிழ்ப் பாடசாலையில் தமிழ் கற்பித்தேன். அரச பாடசாலைகள் இரண்டில் இந்து சமயம் (ஆங்கிலமொழி மூலம்) கற்பித்தேன். வயதானவர்களுக்கு உளவளத்துணை வழங்கினேன். மீண்டும் 2013 இல் இங்கு வந்து தனியார் பாடசாலையில் ஆங்கிலமும் விஞ்ஞானமும் கற்பித்தேன். இப்போது ஒரு வருடத்துக்கு மேலாக  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உளசமூக வள நிலையத்தின் ஒரு செயற்றிட்டத்துக்கான ஆலோசகராகப் பணிபுரிகின்றேன். ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளில் வளவாளராக இருக்கிறேன். இப்படியாகப் பரந்த தொழில் அனுபவம் இருக்கின்றது.


உங்களது இலக்கியப் பிரவேசம் எந்த ஒரு பின்புலத்தைக் காரணமாகக்கொண்டு நிகழ்ந்தது?

விழிசிட்டி கிராமத்தவர் அநேகம்பேர் சைவ உணவுக்காரர்கள். மென்மையான கலை உள்ளம் படைத்தவர்கள். தேவாரங்களைப் பண்ணோடு இசைப்பதில் புகழ்பெற்றவர்கள். எமது உறவினர்கள் பலர் பிள்ளை மரபுப் பண்டிதர்கள் (கதிரிப்பிள்ளை, சங்கரப்பிள்ளை) எனது தந்தையார், சி. கதிரிப்பிள்ளையின் மாணவர். பாரம்பரிய இலக்கியங்களிலும் புராணங்களிலும் அறிவு மிகுந்தவர்.
சிறுவயதில் நாள்தோறும் கிணற்றடியில் குளிக்கும்போது எனக்குத் திருக்குறள் பாடம் நடக்கும். துவா மிதித்து இறைக்கும்போது அவரும் சிறிய தந்தையாரும் பாடும் தேவாரங்களும், இசை நாடகப் பாடங்களும் இலக்கியப் பாடங்களும் காதில் விழும்.

பாரம்பரிய மரபணுச் செல்வாக்கானது மொழி பற்றிய நுண்மதியில் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். சிறு பராய அனுபவங்கள் தூண்டியாக அமைந்திருக்கலாம். மகாஜனாவில் கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை, நாகலிங்க மாஸ்டர், வித்துவான் வேந்தனார் போன்ற நல்ல தமிழ் அறிஞர்களிடம் கற்றபோது அந்த வளர்ச்சி சிறப்பாக அமைந்திருக்கலாம். கற்றல் பொதுவில் மகிழ்வானது. கலைகள் உள நலத்தை வளர்ப்பவை. கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை அவர்களின் நாடகங்களில் நடித்து அகில இலங்கை ரீதியில் முதற் பரிசுகளைப் பெற்றபோது கலை, இலக்கிய மகிழ்வு பிடிபட்டது. கவிஞரது நாடகப் பிரதிகள் ஒவ்வொன்றும் சிறந்த இலக்கியங்கள். அவற்றை நான் மனனம் செய்ய நேர்ந்தது எனது அதிர்ஷ்டம்.

க.பொ.த சா.தரம் கற்ற காலத்தில் ஷமலர்களைப் போல் தங்கை| என்ற ஒரு குறுநாவல் எழுதினேன். அது எங்கேயும் பிரசுரமாகவில்லை. எனது நண்பிகள் வாசித்துப் பாராட்டியதோடு சரி. ஆயினும் அது ஒரு நல்ல பிரவேசம் என்று நம்புகிறேன்.


கல்வித்துறையிலும், இலக்கியத்துறையிலும் சரிசமமாக உயர்வடைவதற்கான  காரணங்கள் யாவை?

கல்வித்துறையோ, இலக்கியத்துறையோ, கலைத்துறையோ, உளவியல்துறையோ எதில் ஈடுபடும்போதும் அதை முழு மனதுடனும் விருப்புடனும் செய்வது எனது இயல்பு. நேர்மையாக உழைப்பேன். அதிலே ஒரு மனநிறைவு இருக்கிறது. ஆiனெ குரடநௌள என்று உளவியல் கூறும். எனது மன நிறைவுக்காகவே நான் அப்படிச் செய்வேன். அது எனக்கு உயர்வைத் தந்ததா என்பதை மற்றவர்கள் கூற வேண்டும்.


இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் கூறுங்கள்?

சிறுகதைத் தொகுதிகள்

01. மனித சொரூபங்கள் - 1982
02. முரண்பாடுகளின் அறுவடை - 1983
   அறிமுகவிழா - 1984 ( புலோலியூர் ஆ. இரத்தினவேலோனின் சிறுகதைகளும் சிறுகதை விமர்சனங்களும் கொண்டது)
03. பிரசவ வலிகள் - 1986
04. வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் - 1997
05. முகங்களும் மூடிகளும் - 2003
06. மனதைக் கழுவும் மகா சமர்த்தர்கள் - தொகுப்பாசிரியர் - 2008
07. வரிக்குயில் - 2016 - ஒன்பது சிறுகதையும் விமர்சனமும்)

நாவல்கள்

01. துயிலும் ஒரு நாள் கலையும் - 1986
02. தூவானம் கவனம் - 1989

நாடகங்கள் 

01. குயில்கள் - 2001 (இரண்டாம் பதிப்பு 2005)
02. கிரேக்கத்தின் தொல்சீர் அரங்கு - 1997
03. அரங்க கலையில் ஐம்பதாண்டு - 2003

விஞ்ஞானப் புனைகதை

விஞ்ஞானக் கதைகள் - 2000

தனி மனித ஆளுமை

01. தங்கத் தலைவி (கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றியது)
02. விழிமுத்து (தாயார் பற்றியது) - 1999
03. விழிசைச்சிவம் (தந்தையார் பற்றியது) - 2009
04. கனக சபைக்குச் சென்ற கனகசபை (பதிப்பாசிரியர்)

உளவியல்

01. சிறுவர் உளநலம் (பதிப்பாசிரியர்களில் ஒருவர்) 2002 (மறுபதிப்பு 2005. ஆங்கில சிங்கள மொழியாக்கம் 2003, மூன்றாம் பதிப்பு 2017)
02. மகிழ்வுடன் வாழ்தல் (பதிப்பாசிரியர்களில் ஒருவர்) 2003
03. சின்னச் சின்னப் பிள்ளைகள் (பதிப்பாசிரியர்களில் ஒருவர்)  - 2005
04. உள்ளக் கமலம் - பதிப்பாசிரியர் - 2006
05. முற்றத்தில் சிந்திய முத்துக்கள் - பதிப்பாசிரியர் - 2006
06. சுனாமியில் சிதறிய சித்திரங்கள் - பதிப்பாசிரியர் - 2006
07. எங்கே நிம்மதி - 2000
08. மகச்சோர்வு - 2006
09. மனமெனும் தோணி - 2008
10. உள்ளம் பெருங் கோயில் - 2009
11. உள்ளத்துள் உறைதல் - 2011

பெண்ணிய உளவியல்

நேர்கொண்ட பார்வை - 2015

புனைவு இலக்கியம் 

புலச் சிதறல் - 2013

நீங்கள் இதுவரை கல்வி, இலக்கியத் துறைகளில் செய்த பங்களிப்பு பற்றிக் கூறுங்கள்?

ஒரு ஆசிரியராக ஆயிரக்கணக்கணக்கான மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும், கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், உளவளத்துணை மாணவர்களுக்கும் கற்பித்துள்ளேன். விஞ்ஞானம், கணிதம், சுகாதாரமும் உடற்கல்வியும், மனைப்பொருளியல், உளவளத்துணை, நாடகமும் அரங்கியலும், தமிழ், ஆங்கிலம், சைவ சமயம், தலைமைத்துவம், விழுமியம் என்று கற்பித்த பாடப்பரப்புகள் மிக அதிகம். சிறுகதை, கவிதை, நாடகம் பட்டறைகள் பல செய்துள்ளோம். எனக்குத் தெரிந்ததை மிகத் தாராளமாய் மற்றவர்களுக்குக் கொடுத்த இந்தப்பணி இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் நடைபெற்றது. இதுதான் நான் செய்த பங்களிப்பு. கலை இலக்கியப் போட்டிகள் நடைபெறவும் பரிசில்கள் வழங்கவும் உதவியுள்ளேன்.

நாடகங்கள் பலவற்றை எழுதினேன். நடித்தேன். நெறியாழ்கை செய்தேன். தயாரித்தேன். வட இலங்கைச் சங்கீத சபை நடத்தும் பரீட்சைகளுக்கு நாடகமும் அரங்கியலும் துறைக்குள் பல மாணவர்களைத் தயார்படுத்தினேன். அத்துடன் பல வருடங்கள் கலாவித்தகர் பட்டம் வரை பரீட்சகராக இருக்கிறேன்.

தெல்லிப்பழை கலை இலக்கியக் களத்தின் இணைச் செயலாளராய் 1986 முதல் இன்றுவரை பணிபுரிகிறேன். சோலைக்குயில் அலை காற்றுக் களத் தலைவராக 1988இல் இல் இருந்து இன்றுவரை பணிபுரிகிறேன். இந்த அமைப்பு நாடகங்கள் செய்வதோடு உளவளத்துணை வழங்குதலில் பாரிய பங்களிப்பு செய்து வருகின்றது.

வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகள் பலவற்றில் எமது நாட்டில், இங்கிலாந்தில், அவுஸ்திரேலியாவில் பங்குபற்றியுள்ளேன். கட்டுரைகள், கவிதைகள், உருவகங்கள் பலவும் எழுதியுள்ளேன்.


உங்கள் இலக்கிய, கல்வி வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவமொன்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்?

சம்பவங்கள் இல்லாத வாழ்வு இல்லை. சம்பவங்களே சரித்திரமாகின்றன. மானிட அநீதிகள் ஒவ்வொன்றும் சம்பவங்கள்தான். உள ஆரோக்கியமுள்ளவர்கள் அவற்றை மடைமாற்றம் (ளுரடிடiஅயவழைn) செய்கின்றனர். நானும் பலவற்றை எனது ஆக்கங்களில் வெளிப்படுத்தி உள்ளேன். எவ்வளவு கற்பனை, எவ்வளவு உண்மை, எது சொந்த அனுபவம், எது பார்த்த கேட்ட அனுபவம் என்று பிரித்துக்கூறுவது அழகில்லை.

இன்று கல்வியில் நாட்டம்கொண்ட மாணவர்களுக்கு இலக்கிய நாட்டம் வர என்ன செய்யலாம்?

இலக்கியத்தில் ஈடுபடுவதால் வரும் நன்மைகளைப் பற்றி பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களின் சிறு வயதில் இருந்தே சொல்லி வரலாம். இலக்கிய இன்பத்தை நுகர உதவலாம். நாம் அவர்களுக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்து காட்டலாம். அவர்கள் நல்ல நூல்களை வாசிக்கும்போது, சிறந்த கற்பனை வளத்துடன் எழுதும்போது நேர் மீள வலியுறுத்தல் செய்யலாம். பாராட்டலாம். பரிசு தரலாம். உலகளாவிய ரீதியில் நல்ல எழுத்தாளர்கள் அதிகளவு பொருட்செல்வத்தை ஈட்டிக்கொள்கிறார்கள் என்பதுபற்றி எடுத்துரைக்கலாம். இணையத்தளங்களில் அவைபற்றிய செய்திகளைப் பார்க்கத் தூண்டலாம்.


உளவியல் துறையில் உங்களது பங்களிப்பு பற்றிக் கூறுங்கள். இத்துறையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

எமது உடல் உறுப்புகளில் முற்றுமுழுதாய் புரிந்துகொள்ள முடியாதது மனம். அதனால் படிக்கும் காலத்திலேயே மனம் பற்றி நிறையவே வாசிப்பேன். அதற்கு மகாஜனக் கல்லூரி நூலகம் உதவியது. பின்னர் தோழிகளுடன் கூடி விவாதிப்போம். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது உளவியல் கட்டுரை எழுதும் வழக்கம் ஏற்பட்டது. எமது பிரதேசத்தில் அனர்த்தம் ஏற்பட்ட பிறகு அதைப்பற்றி வரன்முறையாகப் படித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பினேன். படித்தேன்.


உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?

டேல் கானேகி - Dale Carnegie


சிறுகதைகளினூடாக சமூகத்துக்குள் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களில் நீங்கள் எதனை இலக்காகக் கொள்கின்றீர்கள்?

அப்படியெல்லாம் பெரிதாகத் திட்டமிடுவதில்லை. பல நல்ல எழுத்தாளர்களால் எனது ஆளுமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. எனது சிநேகிதிகளில் ஏற்பட்டது. அதேபோல யாராவது ஒருவராவது மாறுவார் என்ற எதிர்பார்ப்பு. அவ்வளவுதான்.


உங்கள் முயற்சிகளுக்கு வழிகாட்டிகள் யாரும் இருக்கிறார்களா?

சிறுபராயத்தில் தந்தையார் இருந்தார். மாணவப் பருவத்தில் ஆசிரியர்கள். அதற்குப் பிறகு நல்ல விமர்சகர்களும், வாசகர்களுமே வழிகாட்டினர். நல்ல விமர்சகர்களை ஆரோக்கியமான விமர்சகர்களை (ஊழளெவசரஉவiஎந ஊசவைiஉள) நானே தேடிப் போய்க் கேட்பதுண்டு. அவர்கள் சொல்லும் அபிப்பிராயங்களுக்கு ஏற்றபடி மாற்றங்கள் செய்வதுண்டு.


உங்கள் படைப்புகளுக்குக் கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இலக்கியத் துறையில் தேசிய மட்ட சாகித்திய விருது
அ) இந்து சமய தமிழ் கலாசார இராஜாங்க அமைச்சின் சாகித்திய விருது    - பிரசவங்கள் (சிறுகதைத் தொகுதி) 1986
ஆ) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் சாகித்திய விருது - வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் (சிறுகதைத் தொகுதி) 1997

இலக்கியத் துறையில் சர்வதேச மட்டப் பிரிவு
நோர்வே தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டி - 1986

இலக்கியத் துறையில் மாகாண மட்டப் பரிசு
  வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் இலக்கிய நூற் பரிசு - வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் - 1997
 வடக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பரிசு - மனம் எனும் தோணி உளவியல் நூலுக்கு (பல்துறை) 2008
  இலங்கை பல்கலைக்கழகம் பேராதனை தமிழ்ச் சங்கம் வழங்கிய சிறந்த நடிகைக்குரிய விருது - 1973
  சுடர் சஞ்சிகைப் பரிசு - 1979
  சுடர் சஞ்சிகைப் பரிசு - 1980 (முரண்பாடுகளின் அறுவடை)
  நீர்பாசனத் திணைக்களம் நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு - 1985
  இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் நடத்திய சிறுகதை, கவிதைப் போட்டிப் பரிசு - 1982
  தாரகை நடத்திய சிறுகதைப் போட்டிப் பரிசு - 1984
  முரசொலி நடத்திய குறுநாவல் போட்டிப் பரிசு - 1987
  தகவம் சிறுகதைப் பரிசு - 1987
யாழ். இலக்கிய வட்டம் நடத்திய குழந்தைப் பாடல் தொகுப்புப் போட்டிப் பரிசு - 1989
  மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சித் திணைக்களம் - இலக்கிய வித்தகர் பட்டம் பெற்றமைக்கான பாராட்டும் பரிசும் - 1991
  மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் கௌரவம் - 1994
  தெல்லிப்பழைக் கோட்டம் நடத்திய சர்வதேச ஆசிரியர் தினப் போட்டியில் கவிதைப் போட்டிப் பரிசு - 1997
  குயில்கள் நாடகத் தொகுதிக்கு இலக்கியப் பேரவைச் சான்றிதழ் - 2000
  தகவம் - நாலாம் காலாண்டு சிறப்புப் பரிசு - 2007
  இலக்கியப் பேரவைச் சான்றிதழ் - முகங்களும் மூடிகளும் - 2008
- மனம் எனும் தோணி - 2009
  இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு அரும்பணி ஆற்றியமைக்கான கொடகே தேசிய விருது - 2009
  கொழும்புத் தமிழ்ச்சங்கம் - பெண்கள் தின மாண்புறு மகளிர் கௌரவம் - 2016
 இரா. உதயணன் இலக்கிய விருது - ''நேர்கொண்ட பாவை'' - 2016
 தகவம் - மூத்த எழுத்தாளர் கௌரவம் - 2014

கௌரவப் பட்டங்கள் 
இலக்கிய வித்தகர், கலைச்சுடர், சமூக திலகம், கலைப் பிரவாகம்


வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

நிகழும் கணத்தில் வாழுங்கள். நிறைய வாசியுங்கள். தேர்ந்த வாசிப்பாக இருக்கட்டும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

29. மாத்தளை ஜெஸீமா ஹமீட் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.0121

மாத்தளை ஜெஸீமா ஹமீட் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்? 

நான் ஜெஸீமா ஹமீட். தந்தை ஹமீட். தாய் கதீஜா பீபி. மாத்தளை மாவட்டத்தின், அழகிய தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த சின்ன செல்வகந்தை எனும் சிற்றூரில் பிறந்த எனக்கு, 4 சகோதரரிகள், 3 சகோதரர்கள். க
டைக்குட்டி நான்.


02. உங்கள் பாடசாலை வாழ்க்கை, பல்கலைக்கழக வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

பிட்டகந்த, கந்தேனுவர தமிழ் வித்தியாலயங்களில் கல்வி பெற்று மாத்தளை ஆமினா மகளிர் பாடசாலையில் உயர்தரம் கற்றேன். பின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2003 இல் வரலாற்று துறையில் சிறப்பு பட்டம் பெற்றேன். அதே பல்கலைக்கழகத்தில் 2003 - 2005 வரை துணை விரிவுரையாளராக இருந்த போதே வரலாற்று துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டேன். 2006 இல் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் நிறைவு செய்தேன். தற்போது மாஃகுரிவெல ஹமீதியா கல்லூரியில் வரலாற்று ஆசிரியையாக கடமையாற்றுகின்றேன்.


03. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் துணை விரிவுரையாளராகக் கடமையாற்றிய போதும், தற்போது ஆசிரியையாகக் கடமையாற்றும் போதும் என்ன வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?

ஆம் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாம் எதையும் ஆழமாக கற்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. காரணம் அது தேடல் கல்வி. ஆனால் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அத்தனை விடயங்களையும் கற்பிக்க வேண்டும். காரணம் உயர்தர பரீட்சை ஒவ்வொரு மாணவனதும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கிய தடைதாண்டல். எனவேதான் ஆசிரியராகவிருந்து பலரது பல்கலைக்கழக வாய்ப்புக்கு வழிகாட்டுவதை பெரும்பேறாகக் கருதுகிறேன்.


04. இலக்கியத் துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்த சூழ்நிலைகள் எவை?

சிறுவயதிலேயே நான் துடுதுடுவென பேசுவதை என் தந்தை வியந்து பாராட்டுவார். ஊக்குவிப்பார். பின் பாடசாலை காலங்களில் பெற்ற பயிற்சியும் எனது வாசிப்பு ஈடுபாடும் எனக்குள் ஏதோ இருப்பதை உணர்த்தின. அத்தோடு பல்கலைக்கழக சஞ்சிகை வெளியீடுகளும், சங்கப்பலகையும் என் எழுத்துக்கும் சிந்தனைக்கும் களமமைத்தன. சமூகத்தின் அவலங்களையும் பெண் படும் துயரங்களையும் இலக்கிய பங்களிப்பினூடாக தட்டிக் கேட்க முடியுமென்ற என் துணிச்சலுமே என் இலக்கிய பங்களிப்புக்கான சூழலை வடிவமைத்தது.


05. கவிதைகள் எழுதுவதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

என் ஊரின் அழகும் ஆச்சரியமும் எனை ரசிக்கத் தூண்டியமை. கந்தேனுவரை தமிழ் வித்தியாலய தமிழ்ப்பாட ஆசிரியை திருமதி பாக்கியலட்சுமி அவர்களின் தூண்டல். ஆமினா மகளிர் பாடசாலையின் என் உயர்தர வகுப்பு ஆசிரியர் திருமதி ஆயிஸா நோனா அவர்கள் எனை கவிதைப் போட்டிகளில் பங்குபெறச் செய்தமை. என்னுயிர்த் தோழி ரீஸா தந்த கவிதைப் பயிற்சி. உயர்தர வகுப்புத் தோழிகளின் ஒத்துழைப்பு என்பனவே என் கவிதை வாழ்க்கையை தீர்மானித்தன.

06. நீங்கள் வெளியிட்ட நூல் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை 5 நூல்களை வெளியிட்டுள்ளேன். அவை:-

01. நிழலின் காலடியோசை (கவிதைத் தொகுப்பு)
02. இலங்கையின் ஆட்சியாளர்கள் (வரலாறு)
03. வரலாற்று தேசப்படங்களும் பயிற்சிகளும் (தரம் 06 - 13 வரை)
04. இலங்கை வரலாறு (உயர்தர வகுப்பு பரீட்சை வழிகாட்டி நூல்)
05. ஐரோப்பிய வரலாறு (உயர்தர வகுப்பு பரீட்சை வழிகாட்டி நூல்)


07. அண்மையில் நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்று கூறுங்கள்?

இரக்கமற்ற சகலருக்கும்!

இரக்கமென்பது
வரட்டு கௌரவமில்லை
அதுவொரு வாஞ்சை..
நேசிப்பவர்களுக்கு
இன்முகம் காட்டும் நேர்மை..
வாசிப்பவர்களுக்கும் கூட
வசந்தம் தூவும் புத்துணர்வு..

இந்த யுத்த பூமியை
சாந்தி இல்லமாய்
மாற்ற  விழையும்
ஒரு சாத்வீக ஆயுதம்..

அதைக்கூட இம்சையாய்ப் பார்த்து
இழித்துரைத்துப் பேச
ஏனிந்த சனக்கூட்டம்
இப்படி முண்டியடிக்கிறது?

அன்புதான்
அமைதி தேசத்துக்கான
முதல் விதை..
அதிலும் நாம் விசம் கலந்தால்
எப்படித்தான் விடியும்  அகிலம்?

கருணையற்ற உலகமதில்
பேய்களும் பிசாசுகளும்
இராஜாங்கம் நடத்த
மனிதம் என்பது மட்டும்
ஆவியாகக் கூட
அலைய இடமின்றி
அலைக்கழித்துத் திணரும்
அற்புத உலகொன்றிலா
நாம் வாழப் போகிறோம்?


08. நாடகத் துறையில் உங்களது ஈடுபாடுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்? இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் எத்தனை அவை பற்றியும் குறிப்பிடுங்கள்?

சிறுவயதிலிருந்தே எமதூரில் நடைபெறும் நாடக கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். கந்தேனுவரை பாடசாலையில் படிக்கும்போது எனது தமிழ்ப்பாட ஆசிரியை தயாரித்த ஷஷகடவுளைக் காட்டிய சிறும|| எனும் நாடகத்தில் ஒரு இளவரசராக தோன்றி அனைவரதும் பாராட்டையும் பெற்றேன். அப்போதிருந்தே துளிர்த்த நாடக ஈடுபாடு ஆசிரியையான பின் தமிழ்த்தின, மீலாத் போட்டிகளுக்கான நாடகங்களை எழுதத் தொடங்கினேன்.

01. கவ்வாத்து மலைக் கனவுகள்
02. கல்யாண ஊர்வலம்
03. ஸ்கைப் கல்யாணம்

என நானெழுதிய மூன்று நாடகங்களுமே அகில இலங்கை ரீதியாக முதலிடத்தை பெற்றுக்கொண்டன.

எனது நாடகத்துறை வெற்றியில் மறைந்த அரபு எழுத்தணிக் கலைஞர், உக்குவளை இஸ்லாமிய எழுத்தாளர் அமைப்பு தலைவர் ரைத்தலாவெல அஸீஸ் அவர்களுக்கும் பங்குண்டு. காரணம் அவரால் தயாரிக்கப்பட்டு கந்துரட்ட வானொலி பதிவு செய்த ஷஷகனம் கோட்டார் அவர்களே|| எனும் நாடகத்தில் ஒரு பெண் வழக்கறிஞராக குரல் கொடுக்கும் சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கி, நாடக தயாரிப்பு பற்றிய அறிவுரைகளையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம் வானொலியின் சஞ்சாரம் நிகழ்ச்சி எனது ஷஷதிருமண ஊர்வலம்|| நாடக பிரதியை இரு முறை ஒளிபரப்பியது. திக்வல்லை ஸப்வான் அவர்கள் அடிக்கடி நாடக பிரதியை அனுப்புமாறு கேட்டபோதும் எனது வேலைப்பளு காரணமாக முடியாமல் போனது. இன்ஷா அல்லாஹ் எழுதுவேன்.

09. தொழில் மற்றும் வீட்டுப் பொறுப்புக்களுக்கு மத்தியில் இலக்கியப் பங்களிப்புக்கள் செய்வது சிரமம் என்று நினைக்கவில்லையா?

வீட்டு பொறுப்புக்களுக்கு மத்தியில் இலக்கிய பங்களிப்பு செய்வது சிரமமான காரியம் என்ற காரணத்தினால்தான் இன்று அதிகமான முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் களத்திலிருந்து காணாமல் போயிருக்கிறார்கள். எனவே குடும்பமும், தொழிலும் எந்தளவுக்கு முக்கியமானதோ அதுபோலவே சமூக பொறுப்பும் முக்கியம் எனக் கருதி அதற்கேற்றாற் போல எனது செயற்பாடுகளை ஒழுங்கு படுத்துகிறேன். அவற்றை இலகுபடுத்திக் கொள்வதில் எனது கணவர் (கலீல்) எப்போதும் முன்னிற்கிறார். அதனால் என் இலக்கிய பயணம் தொடர்ந்து செல்லுமென்றே எதிர்பார்க்கின்றேன்.

10. கவிதை, நாடகம் தவிர வேறு எந்தத் துறைகளில் ஈடுபாடு உள்ளது?

கவிதை, நாடகம் என்பனவற்றோடு பேச்சு, ஆய்வு, மாணவர்களுக்கான நூல் வெளியீடு, சமூகப்பணி, முஸ்லிம் பெண்கள் விழிப்புணர்வு செயற்பாடுகள் என என் துறைகள் விரிவடைந்துகொண்டே செல்கிறது.

11. உங்கள் படைப்புக்களுக்கான ஊடகங்களின் உதவி எந்தளவில் உள்ளது?

பாடசாலை காலத்திலிருந்தே எழுதி வருகிறேன். அப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு எதை அனுப்பினாலும் பிரசுரமாவதில்லை. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ஞானம் சஞ்சிகை என் கவிதைகளுக்கு களம் தந்தது. எனினும் இன்று சமூக வலைதளங்களில் நாங்களாகவே முன் வந்து எங்களது திறமைகளை வெளிக்காட்டத் தொடங்கிய பின்னரே ஏனைய அச்சூடகங்களும் எம்மை வரவேற்கத் தொடங்கியிருப்பதாக கருதுகிறேன்.


12. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?

எனக்கு பிடித்த இந்திய எழுத்தாளர்களாக கல்கி, மு.வரதராஜன், ஜெயகாந்தன், அகிலன், பார்த்தசாரதி ஆகியோரைக் குறிப்பிடலாம். இலங்கையில் மாத்தளை மலரன்பன், அல் அஸுமத், லறீனா அப்துல் ஹக், தி.ஞானசேகரன், அந்தனி ஜீவா ஆகியோர் என்பேன். என்னைப் பாதித்த கவிஞர்கள் மு.மேத்தா, பஹீமா ஜஹான் போன்றோராவார்.

13.  இதுவரை கிடைத்துள்ள பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அதிகமான சான்றிதழ்களையும் பரிசில்களையும் பெற்றுள்ளேன். தேசிய ரீதியாக 45 ஆவது முஸ்லிம் கல்வி மகாநாடு நடத்திய திறந்த ஆய்வு கட்டுரை போட்டியில் முதலிடம், 2002 இல் உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மகாநாடு நடத்திய ஆய்வு கட்டுரை போட்டியில் மூன்றாமிடம் பெற்றேன். சாகித்திய கலையிலக்கிய போட்டிகளில் கவிதை, பாடலாக்கம், கட்டுரைகளுக்கு பல முதலிடங்களைப் பெற்றுள்ளேன். 2011 இல் மலேசியாவில் இடம் பெற்ற உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தது. 2014 மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான விபுலானந்தர் மன்றம் ஷஷமலையக தமிழருவி' விருது வழங்கி கௌரவித்தது. 2016 டிசம்பரில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழிலக்கிய மகாநாட்டிலும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். புகழனைத்தும் இறைவனுக்கே.

14. எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலை மாணவர்களுக்கான மூன்று நூல்களை அச்சில் வைத்துள்ளேன். சில சிறுகதைகள் எழுதும் ஆர்வத்திலுள்ளேன். ஒரு கவிதை நூல் வெளியீடு செய்யும் எண்ணமும், ஒரு குறுந்திரைப்பட முயற்சியில் இறங்கும் எண்ணமும் உள்ளது.


15. புதிதாக எழுதத்துவங்கும் எழுத்தாளர்களுக்கு என்ன கூறுவீர்கள்?

ஒரு புத்தகம் நூறு மனிதர்களுக்கு சமம் என்பார்கள். யார் எழுத வந்தாலும் வாசிப்பில் ஈடுபாடு இல்லையெனில் அவ்வெழுத்துக்கள் எதுவித சமூக அங்கீகாரத்தையும் பெறப்போவதில்லை. எனவே இந்த சமுதாயத்தை வாசிப்புடைய சமுதாயமாக மாற்ற வேண்டுமெனில் வாசிப்பு நிறைந்த எழுத்தாளர்கள் உருவாதல் அவசியம். எழுதுதல் என்பது ஓர் இறைப்பணி அதனால்தான் ஒரு பேனா முனை கூரிய வாளைவிட வலிமையானது எனப்படுகிறது. எனவே எழுதத் தொடங்குபவர்கள் எந்த சூழ்நிலை வந்தாலும் எழுதுவதை கைவிடமாட்டேன் என்ற துணிச்சலோடு வாருங்கள் வெற்றி நிச்சயம்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்