பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, September 7, 2014

18. திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு வீரகேசரியில் வெளிவந்த திகதி - 2015.03.28

திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்கள் பிறந்த இடம், கல்லூரி வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் வடமராட்சி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவள். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் கல்வி கற்றேன். பாடசாலைக் காலங்களில் நடனம், நாடகம், விளையாட்டு, பேச்சு, கவிதை என பல துறைகளிலும் பங்களிப்புச் செய்தேன்.

02. உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூறுங்கள்?

எனது குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம். எனது கணவர், இரண்டு பெண் பிள்ளைகள் நான் மற்றும் உறவினர்கள் சேர்ந்ததே என் குடும்பம்.

03. உங்கள் குடும்பத்தினருக்கும் கலைத் துறையில் ஈடுபாடு உண்டா?

எனது கணவர், மகள்மார் இருவர், நான் நால்வருமே கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர்கள்தாம். எனது கணவர் நாடகத்துறையில் பங்குகொண்டு மேடை நாடகங்களில் நடித்தவர். அதேபோன்று மகள்மார் இருவருமே வீணை வாசிப்பதிலும் பரத நாட்டியத்திலும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். நானும் கல்லூரிக் காலத்தில் பல ஆங்கில நாடகங்களில் நடித்து, பரிசும் பெற்றிருக்கிறேன்.  மேலும் சில மேலைத்தேய இசைக்கருவிகள் இசைக்கும் பயிற்சியும் உண்டு. அந்த ஈடுபாடு தான் என்னால் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் நுண்கலைக்குழுச் செயலாளராக இருந்து சிறப்பான இசை விழா ஒன்றை நடத்த உந்து சக்தியாக அமைந்தது

04. உங்களது இலக்கியத் துறை ஈடுபாடுகள் பற்றி விளக்கமாகக் கூறுவீர்களா?

எனது இலக்கியத்துறை ஈடுபாட்டைச் சொல்வதானால் இயல்பாகவே என்னிடம் இலக்கிய ஆர்வம் இருக்கிறது. அவ்வார்வத்தை ஈடுபாடாக மாற்ற துணை இருந்தது எனது கணவரின் அதீத இலக்கிய ஈடுபாடும் இலக்கியத்தேடலும் தான். எனது தொழிற்துறை வேலைப்பளுவால் நான் சோர்ந்து போகும்போதெல்லாம் இலக்கியத்தேடலும் இரசனையும் தான் என்னைப் புத்துணர்வு பெறச்செய்கின்றன. எனது வீட்டில் இருக்கும் ஏறத்தாழ ஐயாயிரம் பல்துறை நூல்களைக் கொண்ட நூலகம் துணையாக இருக்கிறது.

05. இலக்கிய உலகில் மறக்க முடியாதவர்கள் யாராவது உண்டா? 

இலக்கிய உலகில் மறக்க முடியாதவர்கள் யாராவது உண்டா என்றால் எல்லோருமே மறக்க முடியாதவர்கள் தான். மனிதன் இதயம் என்றும் மாசுபடாதிருக்க உள்ளத்துக் கறைகளைக் களையும் வண்ணம் இலக்கியம் படைத்தோரெல்லாம் மறக்க முடியாத மாணிக்கங்கள்தான்.

06. எப்படி சட்டத் துறைக்குள் வந்தீர்கள்? அதற்கான காரணகர்த்தா யார்?

பாடசாலைக்காலத்தில் உயர்தரக்கல்வி பயின்று கொண்டிருக்கும் போதே சட்டத்துறையில் நுழைய வேண்டுமென்ற வேட்கை இருந்தது. அவ்விருப்பம் அவ்வேளை நிறைவேறவில்லை. ஆசிரியப் பணியில் இணைந்து சிலகாலம் கடமையாற்றினேன். ஆயினும் எனது சட்டத்துறை வேட்கை தணலாகவே இருந்தது. அதனை கொழுந்து விட்டெரியும் தீயாக என்னால் மாற்ற முடிந்தது எனது திருமணத்தின் பின்னர்தான். இரு குழந்தைகளுக்குத் தாயான பின்னர் சட்டம் பயின்று சட்டத்தரணியானேன்.



07. சட்டத் தொழில், இலக்கிய நிகழ்வுகளில் ஈடுபாடு, எழுத்தாற்றல், நல்ல பேச்சாற்றல் நிறைந்த உங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் என்ற திரைப்பாடல் வரிகளுக்கொப்ப பல்வேறுபட்ட இன்பமான  தளர்வான இரண்டும் கலந்த மனநிலைகளைத் தோற்றுவித்த அனுபவங்கள் நிறையவே உண்டு. சட்டத்தொழில் சமூகத்துக்குப் பணியாற்ற வாய்ப்புத் தந்தாலும் அவ்வப்போது மனச்சோர்வு தரும். அவ்வேளைகளில் என் சோர்வைப் போக்கி எழுச்சி தருவது இலக்கிய நிகழ்வுகளில் எனது ஈடுபாடுதான். சட்டத்தரணி ஒருவரின் மூலதனமே பேச்சாற்றல் தான். இப்பேச்சாற்றல் பள்ளிக்காலத்தில் இருந்து எனது அன்னையாரின் தூண்டுதலால் எனக்கு வாய்க்கப் பெற்றது.

08. உங்கள் ஆக்கங்கள் மேடைப் பேச்சுக்களாக மாத்திரம் அமைந்ததா? அவற்றை நூலுருவாக்கும் எண்ணம் உண்டா?

மேடைப் பேச்சுக்களை நூலுருவில் கொண்டுவர மிகுந்த ஆசை. ஆயினும் செயற்படுத்துவதில் இருக்கும் சிக்கலால் தள்ளிக்கொண்டே போகிறது.



09. உங்கள் நினைவில் நீங்காத சம்பவம் இருப்பின் குறிப்பிடுங்கள்?

சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்ததைக் கூறலாம்.

10. உங்கள் ஓய்வு நேரங்களில் எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை நீங்கள் அதிகமாக வாசிக்கிறீர்கள்? காரணம் என்ன?

ஓய்வு நேரங்கள் என்பதைவிட எனது சட்டத்தொழிற் கடமைகள் முடிவடைந்து மீதியாக இருக்கும் நேரங்கள் என்பதே பொருத்தமானதாயிருக்கும். அவ்வேளைகளில் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்த புதிய சிந்தனை எழுத்தாளர்களின் படைப்புக்கள், டாக்டர் சாலினி, ஆண்டாள் பிரியதர்சினி, பிரேமா போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்கள் எஸ். இராமகிருஷ்ணனின் கட்டுரை நூல்கள் என்பவற்றை ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு.

11. இலக்கிய படைப்பில் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், கட்டுரை இவற்றுள் அதிக ஆர்வத்துடன் நோக்குவது எதை? ஏன்? 

கவிதைகளையும் கட்டுரைகளையும் ஆர்வத்துடன் நோக்குவேன். ஏனெனில் கவிதைகள் தெளிவான ஆழமான சொற்செட்டோடு அமைவதனாலும் கட்டுரைகள் பல நூறு அறிஞர்களின் கருத்துக்களை உசாத்துணை கொண்டு எழுதப்படுவதாலும் நான் விரும்பிப் படிக்கிறேன்.

12. சட்டத் துறையில் கல்வி கற்கும் இளையவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

சட்டத்துறை என்பது ஒரு மனிதனின் அறிவு விரிவாக்கத்துக்குப் பெருந்துணையாக அமைவது. சமுதாயத்தில் இரண்டு வர்க்கங்கள் இருப்பதாய் கருதுபவள் நான். ஓன்று ஏமாற்றும் வர்க்கம் மற்றையது ஏமாறும் வர்க்கம். சட்டம் ஏமாறும் வர்க்கத்துக்கு தடுப்பு வேலியாகவும் ஏமாற்றும் வர்க்கத்துக்கு எரியூட்டும் தீயாகவும் இருப்பது. சட்டத்துறையில் கல்வி கற்கும் இளைஞர்கள் தமது துறையை வெறுமனே வருவாய்த் துறையாக எண்ணாமல் தம் கூரிய அறிவு மேலும் கூர்மையாக, அறிவை மேம்படுத்திக் கொண்டு சமூக அக்கறையோடு பணியாற்ற முனைதல் வேண்டும். அவர்தம் உழைப்பு வாழ்வில் உறுதியை நல்கும் என்பது திடம்.

13. உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், பாராட்டுக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலைக் காலங்களில் அகில இலங்கை ரீதியாக நடந்த பேச்சுப் போட்டிகளில் தங்கப் பதக்கமும் நாடகத்தில் சிறந்த நடிகைக்கான பரிசும் கிடைத்தது.

14. சட்டம், இலக்கியம் தவிர்த்து வேறு என்ன துறைகளில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?

இசை, நடனம் என்பவற்றிலும் ஈடுபாடுண்டு.

15. புத்தகம், இணையம், பேஸ்புக் என்பன இலக்கியத்தை எவ்விதம் வளர்க்கின்றன?

இவை மூன்றுமே இலக்கியப் பங்களிப்பைச் செய்கின்றன என்றால் அது மிகையல்ல. புத்தகம் வெளியிடுவதில் சிக்கல்களை எதிர்கொள்வோர் இணையம் முகநூல் வழி இலகுவாக பலநூற்றுக்கணக்கான வாசகர்களை தம்வசம் கொண்டுள்ளனர். உடனடியாகவே அவர்களின் ஆக்கங்களுக்கான விமர்சனத்தையும் அவர்களால் இதன்வழி பெற்றுக்கொள்ள முடிகிறது.

16. தற்காலத்தில் இலக்கிய வளர்ச்சி எந்த அளவில் இருக்கின்றது என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

நான் ஒன்றும் இலக்கிய விற்பன்னம் படைத்தவளல்ல. ஆனால் வளர்ந்துள்ளது என்று மட்டும் சொல்ல முடியும்.

17. இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்கும் புதிய எழுத்தாளர்கள் பற்றி அல்லது எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

சமூக அக்கறையோடு எழுதுங்கள்.

18. தலைநகரில் இன்று நிறையவே நூல் வெளியீடுகள் நடைபெறுகின்றன. இது குறித்த உங்கள் கருத்து என்ன?

ஒருவகையில் ஆரோக்கியமாக இருந்தாலும் அனைத்து நூல்களும் சமூகத்துக்குப் பயனுள்ளனவா என்ற வினாவும் எழாமல் இல்லை.

19. ஆண், பெண் ஒழுக்க விழுமியத்தை இலக்கியம் மூலம் எப்படி கட்டிக்காக்கலாம்?

உலகம் தழுவிய அமைதிக்கும் இன்பத்துக்கும் ஒழுக்க விழுமியங்களே அச்சாணியாக அமைகின்றன. இன்றைய பல இலக்கியங்கள் ஒழுக்க விழுமியத்தை வெளிப்படுத்துவதில் மெத்தனப் போக்கையே கையாள்கின்றன. யதார்த்தம் நடைமுறை என்ற சொற்பதங்கள் மூலம் விழுமியங்களின் வீரியம் நீர்க்கச் செய்யப்படுகிறது. எனவே மனித ஒழுக்க விழுமியம் குறித்து இலக்கியங்கள் வரையறை செய்து வரம்புகளிடுதல் அவசியம். இச்செயற்பாடுகள் மூலம் மாந்தரின் ஒழுக்க விழுமியங்கள் கட்டிக் காக்கப்படலாம்.

20. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

17. கெக்கிறாவ சுலைஹா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2014.07.20

கெக்கிறாவ சுலைஹா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்கள் பிறந்த இடம், கல்லூரி வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுவீர்களா? 

பிறந்த இடம் கெகிறாவ பிரதேசம்தான். வடமத்திய மாகாணத்தில், அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ளது நம்மூர். தமிழ் மணக்க மணக்க செழித்த ஊர் ஒரு காலத்தில். நிறைய தமிழர்கள் வாழ்ந்தார்கள். இனக் கலவரங்களில் அவர்கள் இடம்பெயர்ந்து விட்டதில் பாரிய வெறுமை ஏற்பட்டுப் போயிற்று. தமிழ் ஆசான்களை நிறைய சந்தித்திருக்கிறோம். கெகிறாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற பின்னர் உயர்தர விஞ்ஞான நெறிக் கற்கைக்காக கண்டி பெண்கள் உயர் கல்லூரியில் சேர்ந்தேன்.

02. பாடசாலைக் காலம் முடிவுற்று நீங்கள் கால் பதித்த தொழிற் துறை பற்றிக் குறிப்பிடுவீர்களா?

ஊர் பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியையாக 1992 இல் நியமனம் பெற்றேன். கூடவே, உயர்தரக் கலைப்பிரிவு பாடங்களையும் ஓய்வு கிடைக்கிற போதெல்லாம் கற்று பேராதனைப் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவானேன். ஆங்கில முன்பயிற்சியில் (GELTஎனக்கு வாய்த்த திரு. எஸ். சோமபால இலங்கசிங்ஹ அவர்கள் என் ஆங்கில இலக்கண, இலக்கிய அறிவுக்கு அழகிய அடித்தளமிட்டார். துரதிர்ஷ்டவசமாக, பல்கலைக்கழகப் படிப்பைத் தொடர முடியாது போயிற்று. ஆங்கில ஆசிரியப் பயிற்சிக்காக பேராதனை விஷேட ஆங்கில ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்தேன். தீராத என் வாசிப்புத் தேடலுக்கு அங்கிருந்த விசாலமான வாசிகசாலை நிறைய உதவிற்று. Anees Jung  எழுதிய Unveiling India’> ‘Night of The New Moon மற்றும் கலீல் ஜிப்ரானின் Broken Wings, The Prophet  உட்பட அவரது பெரும்பாலான நூல்களையும், இளவரசி டயானா பற்றி Andrew Hutson எழுதிய 'Diana - Her True Story' முதலிய நூல்களையும் அந்த வாசிகசாலையே எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.

03. உங்கள் இலக்கியத் துறைப் பிரவேசம் எப்போது நிகழ்ந்தது? எழுத்துத் துறையில் உங்களை ஊக்குவித்தவர்கள் பற்றிச் சொல்லுங்களேன்?

சகோதரி ஸஹானா சிறு வயதிலிருந்தே எழுத்துத் துறையில் ஆர்வம் காட்டி வந்தாள். மிகுந்த தயக்கங்களுடன் கூடியதே எனதான எழுத்துலகப் பிரவேசம். இந்தத் துறைக்குள் என்னை இழுத்தவர்களில் சகோதரி ஸஹானா, திரு. மேமன்கவி ஆகியோர் மிக முக்கியமானவர்கள். 1988, 1989 களில் என எண்ணுகிறேன். அவ்வப்போது எதை எதையோ எழுதி சகோதரி ஸஹானாவின் பார்வைக்குக் கொடுப்பேன். அவளே அதன் தகுதி கண்டு பிரசுரத்துக்கான வழிவகைகளைச் செய்வாள். அதிகபட்ச எனது நேரங்கள் ஒரு வாசகியாய் கழிந்தன. தேடித்தேடி வாசிக்கும் வாஞ்சை எப்போதும் இருந்தே வந்தது. வாசித்தவற்றில் மனசுள் நின்றவைகளை பதித்து வைத்துக்கொள்ளும் பழக்கமும் இருந்தது. மேமன்கவி அவர்கள் எனது தேர்ந்த வாசிப்புக்கு நிறைய தீனி போட்டார். படித்த குறிஞ்சி மலர், பொன்விலங்கு போன்ற நாவல்கள், கவியரசர் பாடல்கள், இலங்கை வானொலி, பள்ளிக்கூடத்தே கிடைத்த உந்துதல்கள் எல்லாமும் எதையாவது எழுதலாம் என்ற நம்பிக்கையை ஊட்டின. ஷமல்லிகை| எனது முதல் மொழிபெயர்ப்புக் கவிதையான ஷஓ! ஆபிரிக்கா| வை 1989 இல் பிரசுரித்தது.

04. நூலுருப்பெற்ற உங்களது படைப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?

2009 இல் பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்| முதல் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி பண்ணாமத்துக் கவிராயர் அவர்களின் அணிந்துரையுடன் வெளியானது. சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய மண்டலப் பரிசு, மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது என்பவற்றைப் பெற்றது.

2010 இல் அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு| முதல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுதி அன்பு ஜவஹர்ஷா அவர்களின் அணிந்துரையுடன் வெளியானது. இலங்கை கலை இலக்கியப் பேரவையின் சான்றிதழ் பெற்றது.

2011இல் இந்த நிலம் எனது| மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி வெளியானது. அதுவும் இலங்கை கலை இலக்கியப் பேரவையின் சான்றிதழ் பெற்றது. நூலக அனுசரணைக்கான போட்டிக்காக முன்வைக்கப்பட்டு முடிவை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது, மன்சூர் ஏ காதிர் அவர்களின் அணிந்துரை பெற்ற மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதி வானம்பாடியும் ரோஜாவும். பேராசிரியர் நுஹ்மான் அவர்களது அணிந்துரையோடு எனது மூன்றாவது மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி பூக்களின் கனவுகள்| விரைவில் அச்சுக்கு செல்லவுள்ளது.

05. எந்தெந்த பத்திரிகைகளில், எந்தெந்த சஞ்சிகைகளில் உங்களது ஆக்கங்களைக் களப்படுத்தி வருகிறீர்கள்? எவ்வகையான கருப்பொருட்களில் எழுதி வருகிறீர்கள்?

மல்லிகையில் இதுவரை காலமும் என் ஆக்கங்கள் வந்தபடிதான் இருந்தன. ஜீவநதி, ஞானம், விடிவெள்ளி அலைகள் போன்ற சஞ்சிகைகளில் எழுதி வருகிறேன்.

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற எல்லா வகைகளும் என் ஆர்வத்துக்குரியன. குறிப்பாக, மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட அம்சங்கள், போர்ச் சூழலில் வதையுறும் ஆன்மாக்களின் துயரங்கள், பெண்களின் கண்ணீர் போன்ற கருக்களை சுமந்த எந்த படைப்பாயினும் அவை என் கவனத்தை வெகுவாக ஈர்ப்பன. மட்டுமன்றி, ஏழையின் அவல வாழ்வு, இயற்கை மீதில் மனிதனின் கோரத் தலையீடு, பள்ளிக்கூட அனுபவங்கள் இன்னபிறவும் என்னை அக்கறை கொள்ள வைப்பன.

06. மொழிபெயர்ப்புப் படைப்புகளை இலக்கிய உலகத்துக்கு அதிகம் வழங்கும் நீங்கள் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் நுட்பங்கள் என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

மனித சமூகத்தைவிட்டு நீங்கியிருந்து, அல்லது தொலைவுபட்டிருந்து கவி புனைபவன் கவிஞனேயல்லன் என்பார் வில்லியம் வேட்ஸ்வேர்த்;;. கவிஞன் என்பான் மனிதர்களோடு பேசும் சக மனிதனே என்பார் அவர்.  கவிதையென்பது மனுஷனை சக மனுஷனோடு இணைக்குமோர் தெய்வீகக் கலை என்றாகிறது. சக்திமிக்க உணர்ச்சிகளின் தன்னிச்சையான வழிந்தோடுகையே கவிதை எனவும், அதன் மொழி சாதாரண மனிதனின் மொழியே|| எனவும் அவர் சொல்வதற்கொப்ப, இலகு மொழிநடையில் பொருள் சிதையாது ஆங்கிலத்தில் அவர்கள் தந்ததை நாம் கொடுத்துவிட்டாலே போதும், நாம் சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள்தாம். அவர்களது பண்பாட்டு கலாசார வேறுபாடுகள், அந்தப் பின்னணியில் அவர்களது உணர்வுக் கோலங்கள் போன்றவற்றை அதி தீவிரமான சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தித் தீண்டாமல் வைத்திருப்பதைவிட, அவற்றை நமக்குப் புரிந்த வண்ணம் மற்றவர்க்கும் புரிய வைக்கிற மாதிரி மொழிமாற்றினால், அந்தப் புதுச்சிந்தனைகளுக்கு கௌரவம் கொடுத்ததாக ஆகும். இலக்கணச் சுத்தத்தோடு எழுதும் பண்டிதர்கள் தேவையில்லை நமக்கு. அந்தப் புதுச் சிந்தனையின் வரவு அதையும்விட முக்கியமானது.

07. மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட விரும்பும் புது எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

புதிய விடயங்களை தேடிக் கற்றுத் தமிழுக்குத் தர முயலலாம். எழுதுவதற்கும் முன்னால் நிறைய வாசிக்க வேண்டும். தொழில்நுட்பச் சாதனங்களை மட்டுமே அதிகம் நம்பியிருக்க முடியாது. தேடல்கள், பரந்துபட்ட வாசிப்பு அத்தியாவசியமானவை.

08. இன்று மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டு வரும் ஏனைய படைப்பாளிகள் பற்றி யாது கூறுவீர்கள்?

அது பற்றிப் பேசுகிற அளவுக்கெல்லாம் நான் வளர்ந்துவிட்டதாகக் கருதவில்லை.

09. தரமான தமிழ்க் கவிதைகளை ஈழத்து இலக்கியத்திற்கு தந்தவர்கள் என யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்?

தரமான கவிதைகளைத் தந்தவர்கள் என்று தரம் பிரித்துச் சொல்லுமளவுக்கெல்லாம் தகுதி பெற்றவளாக நான் என்னை இன்னும் காணவில்லை. எனக்குப் பிடித்த கவிஞர்;கள் என்று கேட்டால்; மஹா கவியையும், நீலாவணனையும் சொல்வேன்.

10. மொழிபெயர்ப்பு அன்றி உங்கள் சுய படைப்புகளை எழுதி வெளியீடு செய்யும் எண்ணம் உண்டா? அவ்வகையான படைப்புகளை வெளிக்கொணர தாங்கள் காட்டும் தாமதத்துக்கு ஏதும் விஷேட காரணங்கள் உள்ளதா?

சுயமான கவிதைகள், மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். என் இலக்கியத்தின் மீதில் அக்கறை கொண்ட பலர், என் சுயபடைப்பு ஒன்றின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. என் கவிதைத் தொகுதியொன்று பற்றிச் சிந்தித்து வருகிறேன்.

கவிதை ஒரு மேலான மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்கு என்பார் ஆங்கிலக் கவி டி.எஸ். எலியட். தமிழிலே நாம் கண்டு கொள்ளாத பக்கங்களை அதிகம் தொட்ட பிறமொழிக் கவிதைகளை நிறைய தரிசித்தேன். நீண்டகால மரபு கொண்ட தமிழ்க் கவிப் பூந்தோப்பு விதவிமான மலர்களால் நிரம்பி அழகு காட்டி நின்றது. எனினும், ஆங்கிலத்தில் வித்தியாசமான கருக்கள் கூடி வந்தமை பெருந்திகைப்பை ஏற்படுத்திற்று. எனவே அவற்றை நான் புரிந்து கொண்ட விதமாய் மொழிமாற்றி தமிழ்க் கவிதைகளில் கலந்துவிடச் செய்வதென்பது முதன்மை நிலை நிற்பதெனக் கண்டு கொண்டேன். மேலும், பாடசாலைகளில் இரசனை இல்லாத வெற்று ஆங்கில ஆசிரியர்களால் கவிதைகள் தொடர்ச்சியாக கைவிடப்பட்டு வந்த நிலையும் இருந்து வந்தது. அவர்கள் கற்பிக்காது கைவிட்டுப்போகும் அத்தகு கவிதைகளை இந்தச் சிறார்கள் அறிய வழி ஏது என யோசித்தும் மொழிபெயர்ப்பை என் ஊடகமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன். இவையே எனது சுயபடைப்பு தாமதத்துக்கு காரணமாக அமைந்துவிட்டது.



11. இலக்கிய மன்றங்கள் எதிலேனும் அங்கம் வகிக்கிறீர்களா? தற்கால இலக்கிய அமைப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதிலும் அங்கம் வகிக்கவில்;லை. நமது பிரதேச இலக்கியச்சூழல் என்றால் வரட்சிதான் நிலவுகிறது. இலக்கிய அமைப்புகள் நிஜமாகவே இந்நிலையை மாற்ற தமது நேரத்தையும், பொருளாதாரத்தையும்  செலவிட்டு பெரும் எத்தனிப்பும் செய்து வருகின்றன. சகோதர இனத்தவர்கள் நாட்டியம், நாடகம், இசை என்றெல்லாம் கலையினது அடிவேர் வரைத் தொட்டுத் துழாவிக் கொண்டிருக்க, நாமோ இப்போதுதான் கண்விழித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம்.

12. பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் நீங்கள் மாணவர்களின் இலக்கிய முயற்சி, வாசிப்பு ஆர்வம் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

இன்றைய கல்வி நிறுவனங்கள் சமூக ஜீவிகளை அதிகபட்சம் உருவாக்குவதில் தோற்றுப்போய் இருக்கும்   நிலையைக் காண்கிறோம். தன்னைச் சுற்றித் தீங்கே நடந்தாலும், குருட்டுக் கண்களுடன் அதைக் கடந்து போய் விடுகின்ற மாணவர் பரம்பரையை இன்றைய கல்விப் புலங்கள் காட்டித் தந்துள்ளன என உணர்கிறேன். மக்கள்பால் நிற்கின்ற, அவர்தம் துயரங்களை தம் துயரமாய் உணர்கின்ற, அன்பு வயப்படுகின்ற மாணவர் பரம்பரை ஒன்றை உருவாக்கும் கனவு நெஞ்சு நிறைய உள்ளது. வெளியிலிருந்து வருகின்ற கெடுபிடிகள், அரசியல் தலையீடுகள் சங்கடத்துக்கு உள்ளாக்கி நிலைதடுமாறவும் செய்வதுண்டுதான். வாசிப்பு மூலமே மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதால் புத்தகங்களை வாங்கியும், நன்கொடையாகப் பெற்றும் மாணவர்களுக்கு  விளக்கங்கள் வழங்கி வாசிக்கக் கொடுத்து வருகிறேன். கணிசமான மாணவர்கள் வாசிப்பில் மிக ஆர்வம் காட்டுகிறார்கள். மாலை நேரத்தில் வாசிப்புக்கு வசதிகள் செய்து கொடுக்கிறேன்.

கலை சிந்திக்கவும், சீர்திருத்தவும் உதவுகிற ஒரு வியத்தகு கருவி. பொழுதுபோக்குக்காக கண்டதை தேர்ந்தெடுக்கவிடாமல் மொழியாற்றலை உயர் மட்டத்துக்குக் கொண்டு செல்லக் கூடிய கலை நிகழ்ச்சிகளை, போட்டிகளை மாதந்தோறும் பாடசாலை மட்டத்தில் நடத்தலாம். நம் வாசிகசாலைகளை உயிர்ப்பூட்டலாம். அறியாமையின் பாதையில் வெகு வேகமாக நம் மாணாக்கரை இட்டுச் செல்கிற தொழில்நுட்பச் சாதனங்களின் மத்தியிலே இது ஒரு பகீரதப் பிரயத்தனம்தான்.

13. உங்கள் இலக்கிய முன்னோடி என்று யாரைச் சொல்வீர்கள்?

இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பண்ணாமத்துக் கவிராயர் எங்களின் ஆங்கில ஆசானாக வாய்க்கப் பெற்றமை எம் வாழ்க்கையில் அழகிய தாக்கத்தை விளைவித்துள்ளது என்று கருதுகிறேன்.

1979, 1980 களில் தரம் 06, 07 களில் நான் கற்றுக் கொண்டிருந்தபோது, கெகிறாவ முஸ்லிம் மஹா வித்தியாலயத்துக்கு வந்திருந்த ஆங்கில ஆசான் திரு. எஸ்.எம். பாரூக் அவர்களே பண்ணாமத்துக் கவிராயர் என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. எமது வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருந்த அவரது இல்லத்துக்கு மாலை நேரங்களில் டியூசன் வகுப்புக்கு அனுப்பப்பட்டாள் அக்கா. அக்காவோடு சில நேரங்களில் நானும் போனேன். அவரது வீட்டில் அவர் வாசிக்கின்ற புத்தகங்கள் இறாக்கைகளில் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நம் ஆங்கிலப் பாடநூல்களில் இருந்த கெகில்லே அரசனின் தீர்ப்பு, அக்பரின் அரசவையிலே பாடங்களையெல்லாம் அவர் சுவைபடக் கற்றுத் தந்த விதம் இப்போதும் ஞாபகத்திலிருக்கிறது.

சின்னச் சின்ன ஆங்கிலப் பாட்டுக்கள், கவிதைகள் போன்றவற்றையும் நமக்குக் கற்றுத் தந்தார். வேட்ஸ்வேர்த்| கவிதைகள் கூட அதிலடங்கும். நாம் சின்னப் பிள்ளைகளாக இருந்தபோதிலும் நம்மோடு ஷசங்கராபரணம்| போன்ற படங்கள் பற்றியெல்லாம் அவர் பேசினார். அவரை நெருங்கப் பயமிருந்தது. தொலைவில் இருந்தபடியே அவரது இலக்கிய கம்பீரத்தை நான் உறிஞ்சிக் கொண்டேனா? ஆமாம், நான் அப்படித்தான் நினைக்கிறேன். அவர் கொப்பிகளில் சரி|அடையாளமிடும் பாங்குகூட வித்தியாசமானது. கொஞ்ச காலத்தில் மாற்றலாகிச் சென்றுவிட்டாலும் மனசில் நிறைந்து நின்றார். அவரது கவிதைகளை பத்திரிகைகளில் கண்டால் தேடித்தேடி அவற்றைப் பெற்று டயறிகளில் ஒட்டிக் கொள்வேன். அவரிடம் தம்பட்டம் அடிக்கிற குணம் இல்லை. ஒரு நாளேனும் மேதாவித்தனம் பேசியதுமில்லை அவர். ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்த பேராசான் அவர். வாழ்வின் ஓட்டத்தே எத்தனையோ திருப்பங்கள். அவர் மீதான பிடிப்பு அவர் ஈர்க்கப்பட்ட துறையின்பால் என்னையும் ஈர்த்தது. அவரது ஷகாற்றின் மௌனம்| நூல் வெளியீட்டு விழாவுக்கு மாத்தளைக்குச் சென்று வந்தோம். தொலைவிலிருந்தே என் ஏகலைவக் கனாக்களை வழிநடத்திய துரோணாச்சாரியார் அவர்.



14. நினைவில் நீங்காத சம்பவம் ஏதும் இருக்கிறதா? இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்?

2009 இல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய மண்டலப் பரிசினை எனது ஷபட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்| என்னும் முதல் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு பெற்றுக் கொண்டமைபற்றி இங்கே பேசப் பிரியப்படுகிறேன் நான்.

மொழிமாற்றம் செய்த சுமார் எழுபது கவிதைகள் என் கைவசமிருக்க புத்தகமாய் அதைப் போட்டுவிட வேண்டுமென்ற ஆவல் ஆட்டிப்படைத்தது என்னை. 2003 களில் நூலக சபை மூலமாக அது வெளிவரட்டும் என்று மேமன்கவியவர்கள் அபிப்பிராயப்பட, அதை தட்டச்சிற் பதித்து, இரண்டு பிரதிகள் செய்து பண்ணாமத்துக் கவிராயரின் அணிந்துரையையும் எடுத்து 2004 இல் விண்ணப்பித்தேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அது அங்கு கிடப்பிற் கிடந்தது. பொறுமையிழந்து நான் நச்சரிக்கத் தொடங்க, தகுதியற்றது எனக் காரணம் சொல்லி அதைத் திருப்பி அனுப்பியிருந்தது நூலக சபை. பிரதிகள் இங்கும் அங்குமாக அலைந்ததில் பண்ணாமத்துக் கவியின் அணிந்துரையும் தொலைந்து போய்விட்டது. புகைப்படப் பிரதி எதுவும் எடுத்து வைத்திருக்கவும் இல்லை.

என் மதிப்பிற்குரிய ஆசிரியத் தந்தை அன்பு ஜவஹர்ஷா இக்கவிதைத் தொகுப்பு கட்டாயம் அச்சில் வரவேண்டும் மகள்|| என்று அடிக்கடி சொல்லி வந்தார். புத்தகங்களை அச்சிட்டு எழுத்தாளர்களுக்கு உதவுகின்ற பல ஆர்வலர்களிடமும் உதவுமாறு கேட்டுப் பார்த்தேன். பதிலில்லை. இறுதியாக நானே மறுபடியும் அதை ஒவ்வொன்றாய்க் கோர்த்தேன். மறுபடியும் அணிந்துரைக்காக பண்ணாமத்துக் கவியவர்களிடம் போய் நின்றேன். எவரும் செய்யாத உதவி. மறுபடி ஒரு புதிய அணிந்துரை தந்தார். 2009 இல் என் ஷபட்டுப்பூச்சியின் பின்னுகைபோலும்| முதற் குழந்தை முகம் பார்த்துச் சிரித்தாள். சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாஹித்திய மண்டலப் பரிசினை நான் 2010 செப்டம்பர் 30 அன்று அலரி மாளிகையில் பெற்ற கணத்தே என் கண்முன்னே முதற் தோற்றம் காட்டி நின்றார்கள் பண்ணாமத்துக் கவியவர்களும், அன்பு ஜவஹர்ஷா அவர்களும். அதே கவிதை நூலுக்கு அதே ஆண்டின் தமிழியல் விருதும் கிடைக்கப் பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சியானது.

15. இறுதியாகச் சொல்ல விரும்பும் சேதி.....?

மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பது ஒரு பெருந்தவம். மொழியின் விசாலித்த அறிவை அது வேண்டி நிற்கிறது. நிறைய வாசிக்கவும், வளப்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. கூடவே தாய்மொழியில் நன்கு வளரவும் வேண்டும். ஒரு மொழியில் தேர்ந்த அறிவு இன்றி இன்னொரு மொழியின் சாகரத்துள் நினைத்தவாறு உள்நுழைய முடியாது. எனவே நிறைய தேடல் வேண்டும் என்பதே எனதான சேதியாகிறது!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

16. திருமதி ஷானாஸ் பர்வீன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2014.08.24

திருமதி ஷானாஸ் பர்வீன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் குறிப்பிடுங்கள்?

நான் கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டுள்ளேன். கொழும்பைச் சேர்ந்த எஸ்.எம். அன்சார், காலஞ்சென்ற மெய்தீம் பீபீ ஆகியோரின் மூத்த மகளாகப் பிறந்த எனக்கு நான்கு உடன் பிறப்புக்கள். ஒரு தங்கையும், மூன்று தம்பிமாரும் உள்ளனர். கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன். பிறகு பல இடங்களில் தொழில் நுட்பக் கல்வியைக் கற்றேன். இன்று ஒரு தையல் ஆசிரியையாக மாணவிகளுக்கு பல வருடங்களாக தையல் கலையைக் கற்பித்து வருகின்றேன்.

தையல் ஆசிரியையாக மட்டுமல்லாமல் எழுத்துத் துறையிலும் ஈடுபட்டு வருகின்றீர்கள். உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

நான் சிறுவயதிலிருந்தே பத்திரிகை வாசிப்பது, வானொலி கேட்பது போன்ற விடயங்களில் அதிக அக்கறை காட்டி வந்தேன். அந்த பழக்கத்தால் காலப் போக்கில் பத்திரிகைகளுக்கும், வானொலிக்கும் நான் பல ஆக்கங்களை எழுதி அனுப்பினேன். அவை பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் களப்படுத்தப்பட்டன.

எவ்வகை சார்ந்த  விடயம் பற்றி பத்திரிகைகளில் நீங்கள் எழுதி வருகின்றீர்கள்?

நான் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், விவாதங்கள், தையல் குறிப்புக்கள், சமையல் குறிப்புக்கள் போன்றவற்றை எழுதியனுப்புவதுண்டு. அவ்வாறு வெளிவந்த ஆக்கங்களை நான் கட்டுக் கட்டாக சேகரித்து கோப்புக்களாக்கி வைத்துள்ளேன். இதுதவிர குறுக்கெழுத்துப் போட்டியிலும் பங்குகொள்வேன்.

என் மனதைப் பாதித்த விடயங்களை கருப்பொருட்களாக வைத்து சிறுகதைகளையும் எழுதியுள்ளேன். இந்த சிறுகதைகள் பூங்காவனம் சஞ்சிகையிலும், மித்திரன் வாரமலரிலும் வெளிவந்துள்ளன.

எழுத்துத் துறையில் நீங்கள் ஈடுபடுவதற்கு முன்னோடியாய் இருந்தவர்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

எழுத்துத் துறையில் ஈடுபடுவதற்கு முன்னோடியாய் இருந்தவர்கள் நான் கல்வி கற்ற பாடசாலை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் தான்.

உங்கள் குடும்பத்தினருக்கும் கலைத்துறையில் ஈடுபாடு உண்டா?

நாங்கள் சிறுவயதினராக இருக்கும் போது என்னுடைய தாயின் தகப்பனுக்கு (தாத்தாவுக்கு), என்னுடைய தாயார், தாயாரின் சகோதரிகள் எல்லோரும் இரவில் (இஷாத் தொழுகையின் பின்னர்) அந்தந்த நாள் பத்திரிகைகளை வாசித்துக் காட்டுவார்கள். காலப்போக்கில் நானும், எனது தங்கை பரீனாவும்  பத்திரிகைகளை வாசித்துக் காட்டுவோம். அந்தப் பழக்கமே எங்களை பத்திரிகைகள், புத்தகங்கள், நாவல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றை வாசிப்பதற்கு ஊக்குவிப்பாக அமைந்தது என்று கூற வேண்டும்.

எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை நீங்கள் அதிகமாக வாசிக்கிறீர்கள்? காரணம் என்ன?

அந்தக் காலத்தில் எனது தாயார், அவரது சகோதரிகள் அநேகமாக இந்தியப் புத்தகங்களைத்தான் வாங்கி வாசிப்பார்கள். அவர்கள் வாசித்த பின் நாங்கள் அவற்றை எடுத்து வாசிப்போம். ஆனந்த விகடன், கல்கி, ராணி, குமுதம், இத்தியாதி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இது தவிர இந்துமதி, சிவசங்கரி, சுஜாதா, மணியன், ரமணி சந்திரன் ஆகியோரின் புத்தகங்களையும் விரும்பி வாசிப்பதுண்டு.

இப்போதெல்லாம் நிறையவே இலங்கைக் கலைஞர்களின் புத்தங்கள் வாசிக்கக் கிடைப்பதால் எல்லோருடைய புத்தகங்களையும் விரும்பி வாசிப்பேன்.

தையல் கலைகளிலும், சமையல் கலைகளிலும் நீங்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளீர்கள். இத்துறையில் உங்களது பங்களிப்பு பற்றியும் இதற்காக உங்களை ஊக்குவித்தவர்கள் பற்றியும் உதவியவர்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

எனக்கு 12 வயதிலிருந்து தையல் கலையில் ஆர்வம் அதிகம். என்னுடைய தாயார் நன்றாக தைப்பார்கள். அவரின் பக்கத்தில் இருந்து அவர் துணியை வெட்டும் அழகைப் பார்த்து அதே போல் நானும் துணியை வெட்டித் தைப்பேன்.

அந்த ஆர்வத்தில் அரச தையல் பயிற்சி நிலையத்தில், கைத் தையல் வகுப்பில் சேர்ந்து கற்றேன். அதற்குப் பிறகு Scientificial Method  இல் தையல் பயிற்சி பெற்று Diploma சான்றிதழ் பெற்றேன். பிறகு கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தையல், சமையல், கேக் அலங்காரம், பெயின்டிங், சிகை அலங்காரம், பூ வேலைப்பாடு போன்றவற்றையும் சிறப்பாகக் கற்றேன். பிறகு படிப்படியாக எல்லாப் புதிய நுணுக்கங்களுடன் கூடிய தொழில் நுட்ப பாடங்களை முறையாக கற்கத் தொடங்கினேன்.

முதன் முதலாக கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் பாடசாலை முன்னாள் அதிபர் அவர்கள் என்னிடம் சிகையலங்கார வகுப்பை மாணவிகளுக்காக நடாத்தும்படி கேட்டுக் கொண்டார்கள். பல வருட காலமாக சிகை அலங்கார வகுப்பை நான் அங்கு நடாத்தி வந்தேன். தொடர்ந்து வெளியிடங்களிலும் கற்பித்துக் கொண்டே, வீட்டிலும் வகுப்புக்களை நடாத்தினேன். இப்போது வீட்டில் மாத்திரமே எனது எல்லா வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றேன்.

தையல் வகுப்புக்களில் தற்போது Block இல்லாமல்
(Tailoring Method) புடைவையில் கீறி புது முறையில் சொல்லிக் கொடுக்கிறேன்.

தற்போது சமையல் கலை வகுப்புக்களையும் நடாத்தி வருவதாக அறிகின்றேன். அதுபற்றி குறிப்பிடுங்கள்?

நானும் என்னுடன் இணைந்து எனது சகோதரியுமே சமையல் கலை வகுப்புக்களை நடாத்தி வருகின்றோம். இந்தத் துறையிலே எல்லாப் புதுப்புது வடிவங்களிலும் கற்பிக்கின்றோம். General Cookery, Bakery, Cake Icing, Stuctures, Suger Flower  இப்படி பல புதிய விடயங்களை ஒரு நாள் வகுப்புக்களாகவும் நடாத்தி வருகின்றேன்.

உங்களது வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கும் பணியாகத்தான் உங்கள் பணிகளைக் கணிக்கிறீர்களா? ஏன்?

எழுத்துத் துறையை எடுத்துக் கொண்டால் என் சிற்றரிவுக்கு எட்டிய விடயங்களையே நான் எழுதி வருகின்றேன். சமையல் கலை, தையல் கலை ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் வெறுமனே இருக்காமல் நான் கற்ற கலைகளை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் ஒரு ஆத்ம திருப்தி எனக்குள் ஏற்படுவதை உணர்கின்றேன். அந்த வகையில் என்னுடைய பணியை மிகவும் திருப்திகரமாக செய்து வருகின்றேன்.

என்னிடம் கற்கும் மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக அவர்களின் படைப்புக்களை வருடா வருடம் கண்காட்சி நிகழ்ச்சிகளை செய்து காட்சிப்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அவற்றுக்கு சிறந்த கல்விமான்களைக் கொண்டு சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கி வருகின்றேன்.

சமையல் கலைகளின் இன்றைய போக்கு பற்றிய உங்களது கருத்து யாது?

இன்றைய இளைய தலைமுறையினர் இன்டர்நெட் மூலம் சமையல் கலைகளைப் பார்த்து, தாமே அதுபோல் செய்து பார்க்கின்றனர். அது பரவாயில்லை. என்ன இருந்தாலும் ஒரு வகுப்பிற்குப் போய் ஆசிரியரிடம் முறையாகக் கற்று, சக மாணவிகளுடனும் பழகி, தனது கைகளினால் செய்முறைப் பயிற்சிகளை முறையாகச் செய்வதுதான் சிறந்த முறையாகும்.

வீட்டில் சமைப்பதைவிட இன்றைய இளைய தலைமுறையினர் பாஸ்ட்புட் கடைகளை நாடி ஓடுவதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. காலப் போக்கில் வீட்டில் சமைத்து உண்பது குறைந்துவிடும் என்று நினைக்கின்றேன்.

மேற்படி துறைகள் தவிர்ந்த வேறு ஏதாவது துறைகளிலும் ஈடுபாடு காட்டி வருகின்றீர்களா?

எனது தங்கையின் மகளுடன் சேர்ந்து ஒரு முன்பள்ளி பாலர் பாடசாலை நடாத்த ஆர்வமாக இருக்கின்றேன். சிறார்களுக்கான கல்வித் துறையில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்று எண்ணுகின்றேன். எங்கள் வீட்டிலேயே இந்த முயற்சியையும் மேற்கொள்ள முடியும். ஒரே கூரையின் கீழ் எல்லா துறைகளையும் வௌ;வேறாக சிறப்பாக செய்ய முடியும் என்று நினைக்கின்றேன். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் உதவி செய்ய வேண்டும்.

இறுதியாக இளம் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப இன்றைய இளம் பெண்கள் ஏதாவது ஒரு தொழில்நுட்ப பாடத்தைக் கற்க வேண்டும். தமது எதிர்கால வாழ்வின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு கைத்தொழில்களை கற்றுக்கொள்ள வேண்டும். நானும் என் மாணவிகளுக்கு நல்லதொரு தரமான சான்றிதழைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து மிகவும் சிரமத்துக்கு மத்தியில் மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற் கல்வி ஆணைக்குழு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்பு கொண்டு அங்கே என் வகுப்புக்களைப் பதிவு செய்து தரமான (T.V.E.C சான்றிதழை வழங்கிக்கொண்டு வருகின்றேன்.

ஆனால் எங்கள் சமுதாய பிள்ளைகளுக்கு அதன் பெறுமதி தெரிவதில்லை. ஒரு கற்கை நெறியை ஆரம்பித்து, அதை முழுமையாக பூரணப்படுத்துவதில்லை. இடையிலேயே அதனை விட்டுச் சென்று விடுகிறார்கள். எந்த ஒரு துறையையும் பூரணமாக நிறைவு செய்தால்தான் பலனைப் பெற முடியும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்து இக்கால இளைய சமுதாயம் மீண்டும் மீண்டும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதே எனது அவாவாகும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்