பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, October 28, 2018

35. பிரமிளா பிரதீபன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.08.26

பிரமிளா பிரதீபன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களது பூர்வீகம், ஆரம்பப் பாடசாலை வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்? 

தாய், மனைவி, ஆசிரியை எனும் மூன்று கதாபாத்திரங்களுடன் எழுத்தாளர் எனும் பாத்திரத்தையும் சேர்த்துக் கொண்டவள் நான். பதுளை ஊவாகட்டவளையைப் பிறப்பிடமாகக் கொண்டு எனது ஆரம்ப கல்வியினை ஊவாகட்டவளை தமிழ் வித்தியாலயத்தில் பயின்றேன். தொடர்ந்து இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியிலும் பயின்ற நான் அதற்கு பின்னரான மேற்படிப்பிற்கு கொழும்பில் வசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

தொழில் எனும் வகையில் தனியார் றிறுவனமொன்றில் தொழினுட்பப் பிரிவில் வேலை செய்து கொண்டே மேற்படிப்பைத் தொடர்ந்த நான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின், நான் மிகவும் நேசிக்கும் ஆசிரியத் தொழிலுக்கு விண்ணப்பித்து ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்றேன். எனது வாழ்வின் பல்வேறு திருப்பங்களுக்கு எனது தொழிலனுபவங்களின்; பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.


உங்களது முதலாவது ஆக்கம் எதில், எப்போது வெளியானது? 

கவிதைத் துறையே எனது இலக்கியப் பயணத்தின் ஆரம்பம் எனலாம். 'சலனம்' எனும் கவிதை 2005 ஆம் ஆண்டு தினமுரசு பத்திரிகையில் வெளியாகி என்னை உற்சாகப்படுத்தியது. ஆனால் 'பீலிக்கரை' எனும் சிறுகதையினூடாகவே ஞானம் சஞ்சிகையில் இளம் எழுத்தாளராக அறிமுகமாகி எனது துறையினைத் தீர்மானித்துக் கொண்டு என் இலக்கியப் பயணத்தை இற்றைவரை தொடர்கிறேன்.


எழுத்தாளர்கள் என்போர் சமூகப் பிரக்ஞை உள்ளவர்கள் என்பார்கள். உங்களை எழுதத் தூண்டியது எது?  

நிச்சயமாக சமூகத்தின் மீதான ஒரு பிடிப்புதான். சிறுவயது முதலே மலையக மக்கள் மீதான பற்றுணர்வு என்னை தூண்டியபடியே இருந்ததென்பதை நான் நன்கு அவதானித்திருக்கிறேன். ஆனால் எழுத்துத் துறையை வலிந்து தெரிவு செய்து அதனை வெளிப்படுத்த வேண்டுமென நான் ஒருபோதும் முனைந்ததில்லை. என்னையறியாமல் நான் இனங்காட்டப்பட்டு எழுத்துத் துறைக்குள் பிரவேசித்த பின் என் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கின்றேன். கூடவே சமூகம் மீதான என் அகப்பார்வை எனக்கு பல்வேறு கருப்பொருள்களை தேடித் தருகின்றது.


உங்கள் எழுத்துக்களுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் என்று யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்?

முதலாவதாக நான் குறிப்பிட்டுக் கூற வேண்டியவர் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு. ஞானசேகரன் அவர்கள். எனக்கான களத்தை அமைத்து தந்து, என் அத்திவாரத்தை பலப்படுத்தியர் அவர். அடுத்ததாக என் பெற்றோர், கணவன் ஆகியோரை கூற முடிவதுடன் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் என்னை எழுதத் தூண்டுவதில் பெரும் பங்களிப்பைச் செய்தமையை குறிப்பிட்டு கூற விரும்புகிறேன்.


சமகாலக் எழுத்தாளர்கள் மீதான உங்கள் பார்வை எப்படியுள்ளது?  

சமகால எழுத்தாளர்கள் சிந்திக்கும் எல்லை மிக விரிவடைந்துள்ளது எனலாம். குறிப்பிட்ட ஒரு மரபுக்குள் இருந்து கட்டுடைப்பட்டு தற்போதைய இளைஞர்கள் மாற்று விடயங்கள் குறித்து எழுதுவதில் அவதானம் செலுத்துகின்றமையை அவதானிக்க முடிகிறது. (குறிப்பாக கவிதைகள்) புறச்சூழல் குறித்த படைப்புகளின் நிலைமைகள் மாறி தற்போது மனிதர்களின் உறவுகள், மனநிலை போன்ற அகச் சிந்தனைகள் குறித்தும் எழுத ஆரம்பித்திருக்கின்றார்கள். மேலும் தற்போதைய இளைஞர்கள் உலக இலக்கிய வாசிப்புகளிலும், அதுசார் கலந்துரையாடல்களிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றமையையும் காண முடிகிறது. கூறப்போனால் அவலங்கள் முதலான இருண்ட பக்கங்களது பார்வை விஸ்தாரமாகி வாழ்வின் அழகான பக்கங்களும் உணர்வுகளும் படைப்புகளாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.


நீங்கள் சிறுகதைகள் பலவற்றை எழுதியிருக்கிறீர்கள். அதுபற்றிக் கூறுங்கள்? 

சிறுகதை எனும் துறையினையே எனக்குரிய துறையாக நான் தீர்மானித்து வைத்திருந்தமையால் சிறுகதைகளை எழுதுவதில் என்னால் அதிகளவு கவனம் செலுத்த முடியுமாகவிருந்தது. 2007 ஆம் ஆண்டு ஷபீலிக்கரை| எனும் சிறுகதைத் தொகுப்பை புரவலர் புத்தக பூங்காவின் ஊடாகவும், 2010 ஆம் ஆண்டு 'பாக்குபட்டை' எனும் சிறுகதைத் தொகுப்பை மல்லிகைப் பந்தலினூடாகவும் வெளீயீடு செய்துள்ளளேன். 'பாக்குபட்டை' சிறுகதைத் தொகுப்பானது திரு. உபாலி லீலாரத்ன அவர்களால் சிங்கள மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு கொடகே வெளியீடாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.


உங்கள் சிறுகதைகளின் பேசுபொருள் பற்றிக் குறிப்பிடுங்கள்? 

என்னால் என் மண்ணை வேறு கண் கொண்டு பார்க்கும் திடமிருந்தது. அதன் அழகியலை விஸ்தரிக்கும் உணர்விருந்தது. எங்களுக்குள் மறைந்து கிடந்த அழகு, எளிமை, என்பவற்றை எனது அனுபவ பகிர்வினூடாக வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு எழுத ஆரம்பித்திருந்தேன். அநேகமாக என்னுடைய சிறுகதைகளிலெல்லாம் ஓரமாய் ஒரு சிறு வலி ஒட்டிக் கிடந்தாலும் கதையெங்கும் மலையகத்தின் அழகும் சந்தோஷச் சாரல்களும் அப்பிக்கிடக்க வேண்டுமென்பதே என்னுடைய விருப்பமாகவிருந்தது. இப்படியும் பார்க்கலாம் என்று எண்ணினேன். எழுதினேன். இதற்குள் என்னால் இயலுமான அளவு யதார்த்தங்களை உள்ளடக்கினேன்.

அநேகமாக நான் கூறவிரும்பும் கருப்பொருளை வெளித்தெரியாமல் தொக்கு வைத்த நிலையில், நேர்மறையான உத்தியைப் பயன்படுத்தி சிறுகதையின் உள்ளிருக்கும் கருத்தை வாசகனை சிந்திக்கத் தூண்ட வேண்டுமென்பதே என்னுடைய நோக்கு. இவற்றின் பேசுபொருளாக மலையக வாழ்வியல் பிரச்சனைகள், பெண்களின் வெளித்தெரியா அகவுணர்வு, சிறுவர்களின் ஏக்கம், மாணவர்களின் பிச்சனைகள் போன்றவையே பேசப்பட்டன.


''கட்டுபொல்'' நாவல் குறித்தும் இந்தப் பெயரைத் தெரிவு செய்ததற்கான காரணத்தையும் குறிப்பிட முடியுமா?

தேயிலை, தென்னை, இறப்பர், கோப்பி போன்ற உற்பத்திகளினூடாக மாத்திரமே பரவலாகப் பேசப்படும் மலையக மக்களுக்கு இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறதென காட்டுவதே எனது பிரதான நோக்கமாக இருந்தது. கட்டுபொல் (செம்பனை) எனும் மரச்செய்கை இலங்கையின் தென் பகுதியில் பல தோட்டப் பகுதிகளில் நடைமுறையில் காணப்பட்டாலும், அவை பேசப்படுவது மிகவும் குறைவென்றே எனக்குத் தோன்றியது. எம்மவர்கள் இங்கே தம் உயிர்ப்பயம் மறந்து தமது உழைப்பை உச்சளவில் அர்ப்பணிக்கின்றனர் என்பதுவும், அது யோசிக்கப்படாத ஒன்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கின்றமையும் என்னை உறுத்தத் தொடங்கியதன் விளைவே இந்நாவல்.

இந்நாவலானது இலங்கையின் தென் பகுதியில் உள்ள 'கல்கந்த' எனும் தோட்டப் பகுதி மக்களின் வாழ்வியல் அனுபவங்களினூடாகவே நகர்த்தப்படுகின்றது. 'கட்டுபொல்' எனும் சிங்கள மொழிச் சொல்லை நாவலின் பெயராக நான் தெரிவு செய்தமைக்கு இரண்டு காரணங்களை என்னால் குறிப்பிட்டுக் கூற முடியும்.

ஓன்று, மக்களிடத்தே நாளாந்த பேச்சு வழக்கில் இருந்த ஷகட்டுபொல்| எனும் சொல்லை வலிந்து தமிழ் மொழிக்கு மாற்றி எழுதுதலானது படைப்பின் உயிர்த்தன்மையை சிதைத்துவிடக் கூடுமென்பது என்னுடைய நிலைப்பாடாகவிருந்தது. இரண்டாவது காரணம், இப்பெயரானது இன நல்லிணத்திற்கு வழிவகுக்கக் கூடுமென்றும் நான் கருதியிருந்தமை.

சிங்களப் பெயருடனான தமிழ் நாவலொன்று இதுவரை இருக்கவில்லையென்றே அறிந்திருந்தேன். எனவே, வைத்துத்தான் பார்க்கலாமே எனும் உந்துதலில் பலரது விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டியே இப்பெயரைத் தெரிவு செய்தேன்.


சமகால நாவல் இலக்கியங்களின் வரவு கனிசமாகக் குறைந்து வருகின்றதே. அந்த  வகையில் உங்களது நாவலின் தனித்துவம் பற்றி யாது குறிப்பிடுவீர்கள்?

கவிதை இலக்கியத்துடனும் சிறுகதை இலக்கியத்துடனும் ஒப்பீட்டு நோக்கின் நாவல் இலக்கியத்தின் வருகையானது மிகக்குறைவென்பது கண்கூடு. இதற்கான காரணங்களாக படைப்பாளிகளின் காலம், மனநிலை என்பவை பங்களிப்புச் செய்திடினும் கூட, இலக்கியத்தின் செழிப்பிற்கு நாவலின் பங்களிப்பும் மிக அவசியமென்பேன்.


பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று கூறுவீர்கள்?

நாகரீகம் எனும் பெயரிலான மனநிலை மாற்றமும் மிகத் தீவிரமான இணையப் பாவனையும் இதற்குரிய பிரதான காரணங்களாக இருக்கக்கூடுமென எண்ண முடிகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆரம்ப கட்டம் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடம் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. நினைத்த மாத்திரத்தில் எல்லா வன்முறைகளையும் குறைத்து இல்லாதொழித்தல் சாத்தியமில்லை. சில குறிப்பிட்ட செயற்பாடுகளினூடாக எதிர்கால நேர்விளைவை உறுதிப்படுத்திக்கொள்ள இயலும். உதாரணம் கல்வி கலைத் திட்டத்திற்குள் சில விடய பரப்புகள் கட்டாயப்படுத்தப்படலாம். பாலியல் தொடர்பான தெளிவான அறிவு புகட்டப்படல், கற்பித்தல் செயற்பாடுகளில் மனப்பாங்கு விருத்திக்கு அதிக முக்கியத்துவமளிக்க ஆசிரியர்கள் வலியுறுத்தப்படல், ஆண் - பெண் கலப்பு பாடசாலை முறைமை அதிகரிக்கப்படல்  போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.


கல்வித் துறையில் குறிப்பாக ஆசிரியப் பணியில் தாங்கள் ஈடுபடுவதற்கு ஏதேனும் முக்கிய காரணங்கள் இருக்கின்றனவா?

நிச்சயமாக ஆம் என்பதே பதில். நான் மிகவும் நேசிக்கும் தொழில் இது. இதைவிடுத்து உயர் பதவிகளுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டிய போதிலும் கூட, ஏதேதோ காரணங்களை முன்வைத்து இத்தொழிலை தக்கவைத்துக் கொண்டேன். இதற்கான காரணங்கள் பல:- தொழிலை அனுபவித்து உணரல், நாளாந்தம் பல உயிர்களுடனான உறவாடல், சதா இளமையான மனது, விசித்திரமான அனுபவங்கள் ஆகியனவாகும்.

ஒரு ஆசிரியர் என்பவர் எத்தனை தூரம் முக்கியத்துவமானவர் என்பதை அனுபவ ரீதியாக உணர்கிறேன். ஆராய்ந்து பார்த்தால் வகுப்பறையின் ஒவ்வொரு குழந்தையும் தனித்தனி உலகமாய்த் தோன்றும். நாற்பது விதமான தனி நபர்களுக்கு நாற்பது நிமிடத்தில் ஒரே பாடத்தை நாற்பது கண்கள் கொண்டு கற்பிக்கும் சவால் நிறைந்த ஆசிரியத் தொழிலைவிட உயர்வாய் வேறேதும் இருக்க முடியுமா என்ன?


சிறுகதை, நாவல் தவிர்த்து வேறு எத்துறைகளில் உங்களுக்கு ஆர்வமுள்ளது?

கவிதை, கட்டுரைகள். 2008 ஆம் ஆண்டு கம்பன் கழகத்தினூடான கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் 'மகரந்தச் சிறகு' விருது எனக்கு கிடைக்கப் பெற்றமையைக் குறிப்பிட்டுக் கூற முடியும்.


படைப்பிலக்கியத் துறைக்குள் வந்ததை இப்பொழுது எவ்வாறு கருதுகின்றீர்கள்?

என்னவென்று சொல்வேன். மிகச் சரியான பாதைக்குள் நடந்துக்கொண்டிருக்கிறேன். ஆத்ம திருப்தியை அனுபவிக்கிறேன். சமுதாயத்திற்கு என்னூடான எதையாவதொன்றைச் செய்யும் வாய்ப்பைத் தந்த எழுத்துலகு எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். எழுத்து என்னை பல இடங்களில் அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறது. அளவற்ற தன்னம்பிக்கையைத் தந்திருக்கின்றது. சவால்களுக்கு முகம் கொடுக்கும் உயரிய பண்பைக் கூட எழுத்துதுறைதான் எனக்கு மிகச்சரியாக கற்பித்தது என்பேன். இத்துறைக்குள் வந்ததை பெரும் பேறென கருதுகின்றேன்.


உங்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுங்கள்? 

மல்லிகை ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவா அவர்கள் ஒரு தடவை (2011) தன் அநேக சொந்த அனுபவங்களை மனம் விட்டு என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார். அந்த சமயத்தில் பால்நிலை மறந்து, வயது மறந்து நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் சிறுவர்களாய் மாறி, நீண்ட நேரம் பேசினோம். சத்தமாகச் சிரித்தோம். அந்த சில மணி நேர பேச்சு என் மனதில் இன்னுமே ஆழப்பதிந்து போயிருக்கிறது. 


இதுவரை வெளிவந்துள்ள உங்களது நூல்களுக்கு, இலக்கியப் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் எவை?

கொடகே கையெழுத்து போட்டி 2017 சிறந்த நாவலுக்கான விருது, கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால் வழங்கப்பட்ட சிறந்த கவிதைக்கான மகரந்தச் சிறகு விருது 2008, உழைககும் மக்கள் கலை விழா - சிறந்த சிறுகதைக்கான விருது 2007 ஆகியனவாகும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


34. மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.06.24

மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

நான்  கண்டி மாவட்டத்தில் உள்ள தெஹிதெனிய மடிகே என்ற ஊரில் பிறந்தேன். என் தந்தை சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர். என் சகோதரியும் ஆரம்பத்தில் சிங்கள மொழிப் பாடசாலைக்குத்தான் சென்றார். வாசிப்புத் துறையில் எனக்கு இருந்த ஆர்வம் காரணமாகத்தான் நான் தமிழ் இலக்கியத்தில்  ஈடுபாடு காட்ட ஆரம்பித்தேன். நான் ஆரம்பத்திலிருந்து மரீனா இல்யாஸ் என்ற பெயரில் தான் எனது ஆக்கங்களை எழுதி களப்படுத்தி வந்தேன். இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் எனது அதிகமான நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

 உங்களது ஆரம்பக் கல்வி, பல்கலைக்கழக வாழ்வு, தொழில் அனுபவம் பற்றிக குறிப்பிடுங்கள்?

நான் ஆரம்பக் கல்வியை எங்கள் ஊரிலும் உயர் கல்வியை மாவனல்லை சாஹிராக் கல்லூரியிலும் கற்றேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டம் முடித்தேன். இலங்கைக்கு திரும்பி வந்ததும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றினேன். அதன் பிறகு நியூஸிலாந்தில் குடியேறிவிட்டேன்.

கலை இலக்கியத் துறைக்குள் எப்பொழுது, எவ்வாறான சூழலில் உள்வாங்கப்பட்டீர்கள்?

1980 ஆம் ஆண்டில் தினகரன் சிறுவர் உலகம் பகுதியில்தான் எனது முதலாவது ஆக்கம் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய பத்திரிகைகளிலும் எழுத ஆரம்பித்தேன்.

உங்களது முதலாவது ஆக்கம் எதில், எப்போது வெளியானது?

சிறுவர் உலகம் கட்டுரைகளை தொடர்ந்து, கவிதை, சிறுகதை, நாடகம்  போன்ற இலக்கிய வடிவங்களை 1980 களில்தான் எழுத ஆரம்பித்தேன். முதல் கவிதையும் முதல் சிறுகதையும் தினகரன் வார மஞ்சரியில்தான் பிரசுரமானது.

கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை எப்படியான சந்தர்ப்பங்களில் எழுதுகின்றீர்கள்?

எனது ஆரம்ப காலப் படைப்புக்களில் பல, பாடசாலை மட்டத்தில் நடந்த கலை இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்டவை. அவை சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட போதிலும், போட்டிகளில் வெற்றி பெறுவதே என் குறிக்கோளாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிற்காலப் படைப்புக்கள் என் அனுபவங்களையும்,  என்னைப் பாதித்த சமூக நிகழ்வுகளின் உந்துதலாலும் பிறந்தவை.



எழுத்துத் துறைக்குள் நுழைந்ததைப் பற்றி தற்போது என்ன நினைக்கிறீர்கள்?

அது ஓர் அழகிய விபத்து என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

உங்களது எழுத்து முயற்சிகளுக்கு ஊக்கம் தந்தவர்கள் பற்றி குறிப்பிட முடியுமா?

என்  பெற்றோர்களே எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தனர். திருமணத்தின் பின்பு என் கணவர் எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

இதுவரை வெளிவந்துள்ள உங்களது நூல்கள் பற்றி குறிப்பிட முடியுமா?

1998 இல் இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறேன். அவை ''குமுறுகின்ற எரிமலைகள்'' என்ற சிறுகதைத் தொகுதியும், ''தென்னிலங்கை முஸ்லிம்களின் இலக்கிய பங்களிப்பு'' பற்றிய ஓர் ஆய்வு நூலுமாகும். சகோதரர் புன்னியாமீன் வெளியிட்ட அரும்புகள் என்ற கவிதைத் தொகுப்பில் எனது ஆரம்ப காலக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு ஆகிய வடிவங்களுள் எவ்வடிவத்தின் தேவை அதிகம் உள்ளதெனக் கருதுகின்றீர்கள்?

எல்லோரும் எல்லாவற்றையும் படிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் சமூகத்தில் பல மட்டங்களிலும் இருப்பவர்களை சென்றடைய வேண்டுமானால் பல இலக்கிய வடிவங்களைக் கையாள வேண்டிய தேவை இருக்கிறது.

இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பெண் எழுத்தாளர்கள் பற்றிய உங்கள் கருத்தென்ன?

குடும்பப் பொறுப்புகளைச் சுமந்துகொண்டு இலக்கியப் பங்களிப்பு செய்வது சாதாரணமான விடயம் அல்ல. அதனால்தான் திருமணத்தின் பின்பு பல பெண்கள் எழுத்துலகிலிருந்து ஒதுங்கி விடுகிறார்கள். சவால்களை சமாளித்துக்கொண்டு தொடர்ந்து எழுதிவரும் பெண்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.


வானொலித் துறையில் உங்களுக்குக் களம் அமைத்துத் தந்தவர்கள் யாவர்? வானொலித் துறையில் உங்களது பங்களிப்புக்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

அந்த நாட்களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவில் நாடகத் தயாரிப்பாளராக இருந்த எம். அஷ்ரப்கான் அவர்கள் என் நாடகங்களுக்கு தொடர்ந்தும் களம் தந்து என்னை ஊக்கப்படுத்தி வந்தார். வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழத் தொடங்கிய பின் சிறிது காலம் என் கவனம் முழுவதும் குடும்பம், தொழில், சமூக சேவை என்ற வட்டத்துக்குள் இருந்தது. ஆனால் என்னைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் என்னை வானொலிக்கு அழைத்து வந்தவர் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வளர்பிறை முஸ்லிம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹுஸீன் அவர்கள்தான். அதுமட்டுமல்லாமல் லண்டன் முஸ்லிம் குரல் வானொலி வளர்பிறை நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் என்னை இணைத்துக்கொண்டார்.

நாடகங்கள் மட்டுமன்றி உரைச் சித்திரம், சிறுகதைகள், கவிதைகளும் எழுதி வருகிறேன். அல்குர்ஆன் வசனங்களை வைத்தும் கவிதைகள் எழுதியுள்ளேன். இவைதவிர, தன்னம்பிக்கையூட்டும் பேச்சுத் தொடரையும் வழங்குகிறேன். வானொலியில் என் மீள்பிரவேசத்துக்கு சகோதரர் முஹுஸீன் அவர்களே காரணம் என்பதை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

இதுவரை நீங்கள் எழுதியுள்ள நாடகங்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

இலங்கை வானொலியில் 25 இற்கும் மேற்பட்ட நாடகங்களுடன் ''பாறையில் பூத்த மலர்'' என்ற ஒரு தொடர் நாடகமும் எழுதியுள்ளேன். இவைதவிர அவுஸ்திரேலியா வானொலி வளர்பிறை நிகழ்ச்சியிலும் லண்டன் முஸ்லிம் குரல் வானொலி வளர்பிறை நிகழ்ச்சியிலும் எனது பல நாடகங்கள் ஒலிபரப்பாகி உள்ளன.

நாடகங்கள் எழுதும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் எவை?

நாடகத்தில் சொல்லவரும் கருத்து எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குப் பாத்திரப் படைப்பும் மிக மிக முக்கியம்.

நீங்கள் பாத்திரமேற்று நடித்த நாடகங்களின் பெயர்களையும், நீங்கள் விரும்பி ஏற்ற சில பாத்திரம் பற்றியும் குறிப்பிட முடியுமா?

பெருநாள் சட்டை, கடிவாளம் இல்லாத குதிரைகள், நெஞ்சு பொறுக்குதில்லையே, நிலை மாற வேண்டும், அக்கரைப் பச்சை போன்ற பல நாடகங்களை எழுதி நடித்துள்ளேன். பெருநாள் சட்டை என்ற நாடகத்தில் தாயாகவும் மகளாகவும் இரட்டை வேடமேற்று நடித்தேன். சிறுமியின் கதாபாத்திரம் மிகத் தத்ரூபமாக அமைந்தது என்று பல நேயர்கள் பாராட்டி இருந்தார்கள்.

உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஏதாவது மறக்க முடியாத அனுபவம் ஒன்றைக் கூற முடியுமா?

ஒரு வாகன விபத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் சக்கர நாட்காலியில் இருந்தேன். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கூடவே என் பிரார்த்தனைகளும் சேர்ந்து என்னை மீண்டும் எழுந்து நடக்க வைத்தது. இந்தக் காலப் பகுதியில்தான் உளவியல் துறையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன்பிறகே நான் ஓரு தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும் உருவாகினேன்.

மனநல ஆலோசகராக அல்லது உளவியல் துறையில் நீங்கள் செய்துள்ள பங்களிப்புக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

வெளிநாட்டு வாழ்க்கையில் நெறிதவறி வாழ்ந்து சீரழிந்துபோய் விவாகரத்தின் எல்லை வரை போன பல குடும்பங்களை நானும் என் கணவரும் சேர்ந்து ஒன்றிணைத்து வைத்துள்ளோம். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை நேர்வழிக்கு அழைத்து வந்துள்ளோம். தன்னம்பிக்கையூட்டும் பேச்சுக்கள் மூலம் நாகரீக மோகத்தில் நிலை தடுமாறிப்போன இளைஞர், யுவதிகள் திருந்தி வாழ்வதற்கு உதவி செய்துள்ளோம்.

மொழிபெயர்ப்புத் துறையில் உங்களுக்குள்ள ஈடுபாடுகள் பற்றி என்ன சொல்வீர்கள்?

மொழிபெயர்ப்புத் துறையில் ஆர்வம் இருந்தபோதும் தொடர்ச்சியாக எந்தப் பங்களிப்பும் செய்யக் கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கும்போது நல்ல ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.

உங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் பல வித்தியாசமான கட்டங்களைக் கடந்து வந்தவை. அவை பற்றி கூறுங்கள்?

இளமைப் பருவம் மிக இனிமையாகக் கழிந்தது. பல்கலைக்கழகம் சென்றபோது ''ராக்கிங்'' தொல்லைகளை பச்சையாக அம்பலப்படுத்தி நாடகம் எழுதியதால் நிறையப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தேன். அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு எழுதுவதில் தீவிரம் காட்டினேன். உயர் கல்விக்காக மலேசியா சென்ற பின்னர் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தினேன். புலம்பெயர்ந்து வாழத் தொடங்கிய பின்புதான் என் வாழ்க்கையில் புதிய பக்கங்களை புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன். என் சமூக சேவைப் பணிகள் அதன்பிறகே ஆரம்பித்தன. தொழில் ரீதியிலும் உச்சநிலைக்கு வளர்ந்தேன். ஒரே ஒரு துறையில் கவனம் செலுத்திய நிலை மாறி பல துறைகளில் கால் ஊன்றினேன். கணவரின் உதவியுடன் தஃவா பணியிலும் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

உங்கள் படைப்புக்களால் அல்லது நீங்கள் செய்த சேவைகளால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?

என் படைப்புகளால் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சமூக சேவையின் மூலம் தனி மனிதர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்கியிருக்கிறேன். வாழ்க்கையில் விரக்தியுற்று தற்கொலை வரை சென்ற பலரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறேன். திசை தெரியாமல் பயணிக்கும் படகுகளைப்போல் வாழ்க்கைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தோருக்கு கரை சேர வழிகாட்டி இருக்கிறேன். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன்.

உங்களது படைப்புகளுக்கு கிடைத்த வரவேற்புகள் பற்றி கூறுங்கள்?

தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர்களுக்கு பட்டமும் பாராட்டும் வழங்கும் ஒரு அணுகுமுறை இலங்கையில் இருப்பதை நான் அறிவேன். அப்படிப்பட்ட அணுகுமுறை என் கொள்கைக்குப் புறம்பானது. ஆனால் தனிப்பட்ட முறையில் வாசகர்களிடமிருந்தும் நேயர்களிடமிருந்தும் கிடைக்கும் பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெரிதும் மதிக்கிறேன்.

மூத்த எழுத்தாளர்களுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் பொதுவாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

நல்ல படைப்புக்களைப் பாராட்டி தட்டிக்கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதுவே ஆரோக்கியமான இலக்கிய உலகத்தை உருவாக்க உதவும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Tuesday, May 29, 2018

33. சந்திரகாந்தா முருகானந்தன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.04.22


சந்திரகாந்தா முருகானந்தன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


பெண்ணிய எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான திருமதி சந்திரகாந்தா முருகானந்தன் பெண்ணியம் தொடர்பான பல கட்டுரைகளையும், சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதியவர். மல்லிகை ஆண்டு மலரில் (2003) பிரசுரமான பெண்ணியக் கட்டுரை மூலம் எழுத்துலகில் கால் பதித்தவர்.

யாழ்ப்பாணத்திலுள்ள வடமராட்சி பிரதேசத்தில் பிறந்த இவரும் பெற்றோரைப் போலவே ஓர் ஆசிரியர். வர்த்தக ஆசிரியையான இவர் இரத்மலானை, கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார். மனிதநேய டிப்ளோமா பட்டம் பெற்ற இவர், பிரதி அதிபராக இருந்ததுடன் உளவளத் துணை செயற்பாட்டாளராக, உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனத் தலைவியாக இருந்து இடர் மிகுந்த போர்க் காலத்தில் மனித நேயப் பணி புரிந்தவர். இவரது கணவர் டாக்டர் ச. முருகானந்தன் நாடறிந்த பல்துறை எழுத்தாளராவார். இவருக்கு இரண்டு மகள்மார் உள்ளனர். மூத்த மகள் அகல்யா சட்டத்தரணியும் கணக்காளருமாவார். இளைய மகள் அனுசுயா பொறியியலாளர்.


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

யாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாயைச் சேர்ந்த நான் ஒர் எழுத்தாளர், ஆசிரியை. எனது தந்தை மாணிக்கம்;, தாய் அற்புதம். நான்; ஆரம்பக் கல்வியை வேதாரணியேஸ்வர வித்தியாலயத்திலும் உயர் கல்வியைக் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்று மனித உரிமையில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளேன்.

எனது முதலாவது ஆக்கமான 'இலக்கியப் படைப்புக்களில் பெண்ணியம்|| 2003 ஜனவரியில் மல்லிகை இதழில் வெளியானது. தொடர்ந்து சந்திரகாந்தா, சந்திரா, காந்தா, மகிழ்னன், முருகானந்தன் ஆகிய புனைப் பெயர்களில் 25 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 60 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 150 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளேன். இத்தகைய ஆக்கங்கள் தினக்குரல், வீரகேசரி, தினகரன், நவமணி, சுடரொளி, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், வெளிச்சம், ஜீவநதி, பூங்காவனம் ஆகிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.


உங்கள் பார்வையில் பெண்ணியம் பற்றிக் கூறுங்கள்?

 பெண்ணியம் என்பதன் உட்பொருள் பல நிலைகளில் நோக்கப்படுகிறது. பெண்ணியம் பற்றிய முழுமையான தெளிவு இன்னும் பெறப்படவில்லை என்று கூறலாம். பால் ரீதியில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்கள் அதிலிருந்து விடுபட்டு சம, சக ஜீவியாக நோக்கப்படும் நிலையை எட்டுவதே பெண்ணிய இலக்காகக் கொள்ளப்படுகிறது. சனத்தொகையில் சரிபாதிக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் பெண்கள் இன்னமும் அடக்குமுறைக்குள் இருப்பதை மறுக்க முடியாது. சமூகத்தில் அடிப்படை உரிமைகளின்றி வாழ்ந்துகொண்டிருக்கும் நிலை பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்தி மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதையே பெண்ணியம் எனலாம்.


நீங்கள் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் எவை? இவற்றுக்காகக் கிடைத்த பரிசில்கள், விருதுகள் யாவை?

01. பெண் விடுதலையும் சமத்துவமும் (கட்டுரை) 2005
02. விடியலைத் தேடும் புதுயுகப் பெண்கள் (கட்டுரை) 2007
03. வேள்வித் தீ (கவிதை) 2008
04. அனுசுயாவின் கரடி பொம்மை (சிறுகதை) 2010

ஆகிய 04 நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளேன். எனது சிறுகதைகளுக்காக இரண்டு தடவை தகவம் விருதும், கனக செந்திநாதன் கதா விருதும் கிடைத்துள்ளன. ஷஅனுசுயாவின் கரடி பொம்மை| இலங்கை இலக்கியப் பேரவையினால் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதினைப் பெற்றுள்ளது. இதுதவிர 15 தடவைகள் போட்டிகளில் பரிசும் பெற்றுள்ளேன்.


இன்று எமது நாட்டுப் பெண்களின் வாழ்வுநிலை மேம்பட்டுள்ளதாகக் கருதுகிறீர்களா?

கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து எமது பெண்களின் வாழ்நிலை ஏறுமுகமாகி வருவதை மறுக்க முடியாது. பெண்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பே இந்த ஆரோக்கியமான நிலைக்கு வித்திட்டது. காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு, வீட்டுக்குள் சிறைப்பட்டவளாய், அடுப்பிலும் நெருப்பிலும் வெந்து கொண்டிருந்த பெண்கள் கணவர்களால் சொத்துடைமையாகவும், பள்ளியறைப் பாவையாயுமே நோக்கப்பட்டு வந்தார்கள். ஒரு கொத்தடிமை போல் அதிகாலை முதல் - இரவு வரை அயராது உழைத்துக் களைக்க வேண்டியிருந்தது. இவை யாவும் அவளுக்கான கடமை என்பதாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான பெண்கள் தாம் அடிமைப்பட்டிருப்பதை அறியாதவர்களாக, இதுவே விதி என்பதுவாய் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். அத்துடன் கணவர்களினதும் குடும்பத் தலைவர்களினதும் சமூகத்தினதும் அடக்குமுறை இவர்கள் உணராதவாறு இவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தது. பிறப்பிலிருந்து இறப்புவரை இந்தச் சோகம் தொடர்ந்து நிலைத்திருந்தது. பெண்கள் சுயமாகச் சிந்தித்துத் தீர்மானம் எடுக்கவோ, சுதந்திரமாகச் செயற்படவோ அனுமதிக்கப்படவில்லை. குடும்ப வன்முறைகளாலும், பாலியல் வன்முறைகளாலும் இவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.


இன்று இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறீர்களா?

முழுமையான மாற்றத்தை இன்னும் எட்டவில்லை. எனினும் மாற்றத்திற்கான திசையில் பயணிக்கிறார்கள். அண்மைக் காலமாகப் பெண்கள் விழிப்படைய ஆரம்பித்திருக்கிறார்கள். தாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதையும் பால் சமத்துவ நிலை பற்றியும் உணர்ந்துகொண்டதே வெற்றிக்கான படிதான். மேற்தட்டு மற்றும் நடுத்தர மேற்தட்டுப் பெண்களிடையே பெண்ணியம் பற்றிய தெளிவு ஏற்பட்டுள்ள அளவு கீழ்தட்டு மக்கள் மத்தியிலும் உழைக்கும் தொழிலான வர்க்கப் பெண்கள் மத்தியிலும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. எனினும் எழுச்சிகள் ஏறுமுகமாக வேகம் கொள்வதை அவதானிக்க முடிகிறது.

கல்வி, அறிவு பெண்களின் கண்களைத் திறந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இதனால் இன்றைய பெண்கள் விழிப்புணர்வு பெற்றுத் தம்மைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள். அடிமைத் தனங்களையும் கண்மூடித்தனமான சம்பிரதாய ஒடுக்குமுறைகளையும் பின்தள்ளிவிட்டுச் சுதந்திரமாகவும் முற்போக்காகவும் சிந்தித்துச் செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். வேலை வாய்ப்பும் வருமானமீட்டலும் பெண்களின் நிலையை உயர்த்தியுள்ளன. ஆண்களில் முற்று முழுதாகத் தங்கியிருந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. சுயமாகச் சிந்திக்கவும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் இன்றைய பெண்கள் தொடங்கியுள்ளமை பெண் விடுதலையின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கின்றது.


சமூகத்தில் பெண்களுக்கெதிராக ஆணாதிக்கம் எவ்வாறு உருவானது என்று நினைக்கிறீர்கள்?

இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த காலத்தில் பெண்களே ஒவ்வொரு கூட்டத்திற்கும் தலைமை தாங்கினாள். நிலவுடைமைச் சமுதாயம் ஆரம்பித்த பின்னரே பெண்களின் நிலை வீழ்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. தாய் வழிச் சமூகத்திலிருந்து தந்தை வழிச் சமூகத் தோற்றமானது, பெண்ணையும் சொத்துடைமையாகப் பின்தள்ளியது எனலாம். குடும்ப அலகின் வருகைக்குப் பின்னரே பெண்ணின் மீதான ஆதிக்கம் அதிகரித்தது எனலாம். இதனால் உருவானதே ஆணாதிக்கம். இங்கு பாலியல் கட்டுப்பாடுகள் முதலில் பெண்ணுக்கே விதிக்கப்பட்டது. ஒருதலைப் பட்சமான போலிக் கற்பெனும் மாயையின் உருவாக்கமும் இதனாலேயே ஏற்பட்டது. சமூக ஒழுக்க நெறிகள் உருவாக்கப்பட்டபோது பாரபட்சமாக ஆண்களுக்கு சார்புடையதாக உருவாக்கப்பட்டது. மதமும் அதனோடு ஒன்றிய கலாசார பண்பாட்டு உருவாக்கங்களும் பெண்ணுக்குப் பாதகமாக உருவாக்கப்பட்டன.


பெண்ணிய மேம்பாட்டிற்கு மாறாகப் பெண்களே செயற்படுவதைக் காண முடிகிறதே?

மத, கலாசார அம்சங்களில் சிறுவயதிலிருந்தே ஊறி வளர்ந்து வந்த பெண்கள் சிலரிடம் இன்றும் கூட பெண் விடுதலைக்கு எதிரான சிந்தனைகள் இருக்கவே செய்கின்றன. இன்னொரு காரணம் பெண்களிடையே போட்டியும் பொறாமையும் அதிகமாக உள்ளமை. பெண்களில் குறை காண்பதும், ஒழுக்கம் தொடர்பாக அதிகம் விமர்சிப்பதும், விதவைகளை ஒதுக்கி வைப்பதும், சீதனம் கோருவதும், காதலை மறுப்பதும் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கிறார்கள். ஒழுக்கம் தொடர்பான விமர்சனங்களால் பல பெண்களின் வாழ்வு பாதிப்புக்குள்ளாகிறது. ஆனாலும் பெண்கள் பெண்களின் ஒழுக்கம் பற்றியே தூக்கிப் பிடிக்கிறார்கள். ஆண்கள் எப்படி நடந்தாலும் அதை அதிகம் தூக்கிப் பிடிப்பதில்லை. கற்பு என்ற ஒழுக்கநெறி இருபாலாருக்கும் இருக்க வேண்டும்.


பெண்ணிய மேம்பாடு பற்றி ஆண்கள் என்ன நினைக்கிறார்கள்?

காலம் காலமாகப் பெண்ணை வருத்தி சுகம் அனுபவித்து, ஆதிக்கம் செலுத்தி வந்த ஆண்கள் பலர் பெண் விடுதலையை நிராகரிக்கிறார்கள். பெண்ணுக்கு என்ன குறை என்று கேட்கவும் செய்கிறார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களின் போக்கில் மாற்றம் தெரிகிறது. பெண் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். ஆண்களின் இந்த மனமாற்றம் ஆரோக்கியமானது. பெண்களின் விழிப்புணர்வினாலும் போராட்டத்தினாலும் மட்டும் பால் சமத்துவத்தை எட்டிவிட முடியாது. இளைஞர்களின் புரிதலிலும் மன மாற்றத்திலுமே பெண்ணிய மேம்பாடு பெரிதும் தங்கியிருக்கிறது எனலாம். இன்று படித்த, உயர் பதவி வகிக்கின்ற கணிசமாக வருவாய் ஈட்டுகின்ற பெண்கள், குடும்பத்தில் சொல்லொணாத் துயரை அனுபவிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். பெண்ணின் குடும்ப, வேலைப் பளு குறைக்கப்பட வேண்டும். பெண்களின் ஆற்றல் ஆளுமைகளுக்குத் தடைபோடலாகாது.

பாலியல் சமத்துவ நிலை ஏற்பட வேண்டுமானால் திருமணத்தில் சுதந்திரம் வேண்டும். ஆண் - பெண் பிள்ளைகளிடையே சிறு வயது முதல் பாகுபாடு காண்பிக்கக் கூடாது. பெண்ணைச் சுமையாகக் கருதும் நிலை மாற வேண்டும். ஷசாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை| என்ற அபத்தங்கள் நீங்க வேண்டும். சொத்துரிமையில் பாகுபாடு இருக்கக் கூடாது. இவ்வாறான பல அம்சங்களில் ஆண்களின் சிந்தனைகளில் அண்மைக் காலமாக நல்ல மாற்றங்களை அவதானிக்க முடிகிறது. பெண்ணிய மேம்பாட்டை ஆண்களும் ஏற்றுக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.


பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தணியாமைக்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

வன்முறைகள் என்று நோக்கும்போது குடும்ப வன்முறைகளே அதிகமாக உள்ளன. ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து பெரும்பாலான ஆண்கள் விடுபடவில்லை. அவ்வாறு விடுபட்டு பெண்ணியத்தை ஆதரிக்கும் மனப்போக்கு உள்ளவர்கள் கூட ஆணாதிக்க சிந்தனைகளிலிருந்து முழுமையாக வெளிவரவில்லை. இன்றைய பெண் மேலோங்கி தமக்கு சமமாக வருவதைப் பல ஆண்களால் ஜீரணிக்க முடியவில்லை. குடும்ப வன்முறை தொடர்வதற்கு இதுவே காரணமாக உள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதற்கு பெண்கள் ஆண்களை விட வலிமை குன்றியவர்களாக இருப்பதும் ஒரு காரணம். பல சந்தர்ப்பங்களில் பெண்களை அடக்குவதற்கு தாக்குதலைப் பிரயோகிப்பதற்கு இது ஏதுவாக உள்ளது. பெண்கள் மன வலிமை மிக்கவர்களாக இருப்பினும் உடல் ரீதியில் பலம் குன்றியவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் அவ்வாறே கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதுமாத்திரமன்றி பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் பெண்களும் இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை மறுப்பதற்கில்லை. பிள்ளைகளை தண்டிப்பதும் கூட குடும்ப வன்முறை தான்.


அண்மைய நாட்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துச் செல்வதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பாலியல் வன்முறைகளில் மிகவும் மிலேச்சத்தனமானது சிறுமிகள் மீது பிரயோகிக்கப்படுகின்ற பாலியல் வன்முறைகளே. வீட்டில் சிறுமிகளை விட்டுவிட்டு பெண்கள் (தாயார்) வெளிநாட்டு வேலைக்குச் செல்லும்போது சிறுமிகள் தனிமையில் விடப்படுகிறார்கள். இதனைப் பயன்படுத்தி பருவ வயதில் உரிய வழிகாட்டலின்றி இருக்கும் சிறுமிகளை காமுகர்கள் வஞ்சகமாக ஏமாற்றி விடுகின்றார்கள்.

இவ்வாறான வன்முறைகளில் பெரும்பாலும் ஈடுபடுவது குடும்பத்தின் நெருங்கிய உறவுகளே. சில சமயங்களில் தந்தை ஸ்தானத்தில் உள்ளவர் கூட இவ்வாறான வன்கொடுமையில் ஈடுபடுகின்றமை மனித நாகரீகத்திற்கு புறம்பான இழி செயலாகும். இதற்கெல்லாம் காரணம் பெண் என்பவள் எப்போதும் உடலாக நோக்கப்படுவது தான். பருவ வயதை எட்டாத பச்சிளம் பாலகர்கள் கூட பலியாக்கப்படுவது கொடுமை. இவ்வாறான கொடுமைகளுக்கு மது, போதைப் பொருள், நீலப் படங்கள், இலத்திரனியல் மற்றும் இணைய சாதனங்களும் இன்னொரு காரணமாக உள்ளது.


இறுதியாக என்ன சொல்லப் போகின்றீர்கள்?

இன்றைய பெண்களின் மேம்பாட்டிற்கு ஒரு சில ஆலோசனைகளைக் கூறலாம். பெண்கள் தம்மை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் தான் முன்னேற்றமடைய முடியும். பாம்புகள் விழுங்கி பாதாளத்திற்கு இட்டுச் சென்றாலும் மனம் சோர்ந்து விடாமல் தொடர்ந்து முன்னேற்றம் பற்றிச் சிந்திக்க வேண்டும். தமது கல்வியறிவு, பதவி நிலை, பொருளாதாரம் என்பவற்றைப் பெற்றுக் கொண்டு ஏறுமுகமாகப் பயணிக்க வேண்டும்.

பெண்கள் தம்மிடையே உள்ள பேதங்களை மறந்து செயற்பட வேண்டும். சாதி, வர்க்கம், பதவி நிலை, பணம் என்ற எல்லைகளைத் தாண்டி ஷபெண்| என்ற அடையாளத்துடன் முன்னேற வேண்டும். ஆண்களுடன் அதிகம் முரண்படாமல் அவர்களைப் புரிய வைப்பதில் வெற்றி காண வேண்டும். குடும்பத்தில் பெண் தனது கடமைகளைப் புறந்தள்ளிவிட்டுச் செயற்பட முடியாது. அதேநேரம் தனக்கு எதிரான பாகுபாடுகளையும் வன்முறைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு சமத்துவத்தை அடைய வேண்டும். இப்பயணத்தில் பெண்களே பெண்களுக்கு எதிராகச் செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும். பெண்ணியப் பயணத்தில் ஆண்களையும் இணைந்து செயற்படும் போது பெண்ணிய இலக்குகளை எட்டுவது சாத்தியமாகும். ஒருபோதும் பெண் தனது சுயத்தை இழந்துவிடக் கூடாது!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

32. மூத்த பெண் எழுத்தாளர் ஆனந்தி அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.03.04

எழுத்தாளர் ஆனந்தி அவர்களுடனான நேர்காணல்


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

பூங்காவனம் வாசகர் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். நான் ஒரு யுகம் கண்ட பெண் படைப்பாளி ஐம்பது வருடங்களுக்கும் மேலாக கொஞ்சமும் நிலை தளராது இலக்கிய வாழ்விலான எழுத்துலகில் கால் கொண்டு உயிர்த்து நிற்கிற சிரஞ்சீவி சரித்திரம் என்னுடையது. இதில் நான் சந்தித்த சவால்களும் தீக்குளிப்புகளும் கண்ணைக் கட்டி மயக்குகிற ஒரு புறம் போக்கு  நிலைமை தான் எனக்கு. என் தலைக்கு மேலே எப்போதும் ஒளிவானம் தான். என் பெருமதிப்புக்குரிய பூங்காவனம் ஆசிரியை கேட்டுக்  கொண்டதற்கிணங்க, அந்த பிரமாண்டமான ஒளித் திரையை இப்போது விரிக்கிறேன்.

அழகான ஒரு கிராமத்தில், ஒரு பெரிய குடும்பத்தில் நான் பிறந்தேன். ஏழாலையென்றால் எப்போதுமே அதற்கு ஒரு தனிப் பெருமை. மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி அது. அதன் பாமரத்தனமான இயற்கை வளம் கொண்ட உயிர்ப்பு நிலையே என் அக சஞ்சாரமான விழிப்பு நிலைக்கு மூல காரணமாக இன்னும் இருந்து வருகிறது. நான் இப்படி ஆன்மீகப் பார்வை கொண்டு எழுதுவதற்கு இன்னுமொரு முக்கிய உந்து சக்தி, தெளிவாகச் சொல்வதானால்  காரண புருஷர் என் தந்தை. அவர் ஒரு பண்பட்ட ஆசிரிய திலகம் வாழ்க்கையையே  வேதமாக உணர்ந்தவர். எனக்கிருக்கிற ஆன்மீக ஞானமும் உயிர் நிலை பற்றிய அறிவும் அவர் எனக்களித்த பெரும் கொடைகள் மூலமே வாழ்க்கை தரிசனமான உண்மைகளை நான் கற்றுக் கொண்டேன். இருண்ட யுகத்திலிருந்து பிரகாசமாகப் புறப்பட்டு வரும் ஒரு ஒளித் தேவதை போல என் இருப்பு நிலை.


02. உங்களது இலக்கியப் பின்னணி குறித்து கூறுங்கள்?

நான் இலக்கிய உலகில் கால் பதித்து எழுதத் தொடங்கிய போது வயது பத்தொன்பது. எனக்குத் தமிழ் நன்றாக எழுத வரும் மிகச் சிறு வயதிலேயே கதைகள் வாசிக்கும் பழக்கம் இருந்ததால் அப்படி ஒரு எழுத்தாற்றால் எனக்குத் தானாகவே வந்தது. இராமநாதன் கல்லூரியில் தான் நான் படித்தேன். படிக்கிற காலத்திலேயே நான் எழுதும் கட்டுரைகளுக்கு ஒரு தனி மதிப்பு. ஆசிரியை தான் அதை படித்து மகிழ்வதோடு, படிக்கும் மாணவிகளுக்கும் வாசித்துக் காட்டிய சந்தர்ப்பங்களுமுண்டு. நான் எஸ்.எஸ்.ஸி மட்டும் தான் படித்தேன்.  படிப்பு முடிந்து வீட்டிலிருந்த போது தான் எழுதும் கலை எனக்குள் கண் திறந்து கொண்டது.

ஆரம்பத்தில் நான் ஆண் புனைப் பெயரில் தான் எழுதினேன். ஷஷதமிழ் குடி கொண்டான்|| என்ற புனைப் பெயர் அப்போது எனக்கு. முதலில் நான் அரசியல் கட்டுரைகள் தான் எழுதினேன். அந்தக் காலத்தில் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்காகத் தமிழன் என்றொரு பத்திரிகை வெளிவந்தது. அதில் தான் நான் முதன் முதலாக எழுதினேன். ஆக இரு அரசியல் கட்டுரைகள் மட்டும் தான் எழுதினேன். அதில் ஒரு கட்டுரை கல்கண்டு  என்ற தமிழ் நாட்டுப் பத்திரிகையில் மறுபிரசுரமாக வெளிவந்தது. அதில் எனது பெயர் குறிப்பிடும் போது தனிப் பெரும் தமிழ் எழுத்தாளர் தமிழ் குடிகொண்டான் என்று ஓர் அடைமொழியை அதன்   ஆசிரியர் தமிழ்வாணன் போட்டிருந்தார்.
எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை. ஏனென்றால் இன்னும் நான் நிறைய எழுத வேண்டி இருந்தது. ஒரு சிறுகதை கூட எழுதாத நிலையில், இந்தப் பட்டத்தை ஏற்க என் மனம் விரும்பவில்லை.  பின்னர் தான் நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன். இது ஒரு கசப்பான அனுபவம் எனக்கு. நான் எழுதத் தொடங்கிய போது நிறையச் சறுக்கல்கள். சவால்கள். சிலர் என் கதைகள் கனம் குறைந்தவை என்று தூக்கியும் எறிந்திருக்கிறார்கள்.  இது எனக்கு விழுந்த அடியல்ல. தமிழுக்கே விழுந்த அடியே என்று நான் மனம் வருந்தினேன். என்றாலும் நான் சளைக்கவில்லை. அதன் பிறகு ஈழநாடு பத்திரிகையில் எனது கதைகள் பிரசுரமாயின. கல்யாணத்துக்குப் பிறகு தான் நான் ஆனந்தியானேன். கல்யாணத்துக்கும் பிறகு வாழ்க்கை அனுபவம் நிறைய எனக்குக் கற்றுக் கொடுத்தது. அதை வேதமாகவே உணர்ந்து, இப்போது அதற்கமைவாகவே நான் கதை எழுதுகிறேன். என் கதைகளை ஊன்றிப் படிப்பவர்களுக்கு இது புரியும். நான் வித்தியாசமான நடையில் எழுதுவதாகச் சொல்கிறார்கள். எழுத்து நடையிலிருந்தே எனது கதை தான் என்பதைக் கண்டு பிடிக்க முடியுமென்று இலக்கியவாதி ஒருவர் சொன்னார்.


03. இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?

சிறுகதைகளாக நான் நிறைய எழுதியிருக்கிறேன். ஆரம்பத்தில் பெரிய பத்திரிகைகளில்  எனது கதைகளுக்கு, அங்கீகாரம் கிடைக்காமல் போனதால் நான் என்ற ஓர் உளவியல் சஞ்சிகையில் நான் எழுத நேர்ந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து அந்தப் பத்திரிகை இன்னும் வெளிவருகிறது. அதில் எனது கதைகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அது ஒரு கிறிஸ்தவப் பத்திரிகையாக இருந்தாலும், என் இலக்கியத் தாகத்துக்கு வடிகால் தேடியே அதில் நான் எழுத நேர்ந்தது. அவர்களும் இந்த முரண்பாடு வேற்றுமைகளைக் களைந்து,  எனது கதைகளை ஏற்றுக் கொண்டார்கள் அது எனக்கு ஒரு சகாப்த வெற்றி மாதிரி. இதுவே எனது எழுத்து யுகத்தின் ஆரம்ப நிலை.

கொழும்புக்கு வந்த பிறகு தான் மல்லிகை மூலம் இலக்கிய உலகுக்கு நான் அறிமுகமானேன். ஆசிரியர் டொமினிக் ஜீவா ஐயா அவர்களுக்கு என் எழுத்தின் மீது தனி மதிப்பு. அதைத் தொடர்ந்து இன்றும் நான் எழுதி வருகிறேன். வயதாகி விட்டாலும் வாழ்க்கையை ஆழ ஊடுருவி வேதமாகவே உணர்ந்து எழுதும் ஆற்றலின் உயிர்ப்பு மாறாத நிலையிலேயே எனது இந்த எழுத்து யுகம் தலை சாயாமல் நிற்கிறது. எனது கதைகளைப் படிப்பவர்களுக்கு இது புரியும். ஜீவநதி பத்திரிகையிலும் நான் நிறைய எழுதியிருக்கிறேன். எனது குறு நாவல்கள் இரண்டும் அதில் தான் பிரசுரமாயின.


04. நீங்கள் இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் இவ்வளவு கதைகள் எழுதியிருந்தும் ஆக இரு நூல்களை மட்டும் தான் என்னால் வெளியிட முடிந்தது. ''துருவ சஞ்சாரம்'' என்ற சிறுகதைத் தொகுதி மல்லிகைப் பந்தல் வெளியீடாகவும் மற்றைய நூலான ''ஆனந்தியின் இரு குறுநாவல்கள்'' என்ற நூல் ஜீவநதி வெளியீடாகவும் வெளிவந்தன. இது எனது இரு குறுநாவல்களைக் கொண்ட தொகுப்பு.

இதன் முதல் கதையான புது வீடு பற்றி இப்போது கூறுகிறேன். 1986 ஆம் ஆண்டு தான் நான் என்ற உளவியல் சஞ்சிகையில் குறுநாவலாக ஐந்து இதழ்களில் தொடர்சியாக வெளிவந்தது. அதன் முதல் அத்தியாயம் வெளிவந்தது. ஓர் ஆண்டு மலரில் அதன்  வெளியீட்டை ஒரு விழாவாக அவர்கள் கொண்டாடினார்கள். அதற்கு நானும் போனேன். நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் அது அரங்கேற்றம் கண்டது. அந்த விழாவில் பேசிய காலஞ் சென்ற பிரபல எழுத்தாளர் திரு செம்பியன் செல்வன் அவர்கள் என் குறு நாவல் பற்றிக் குறிப்பிடும்போது கைதேர்ந்த எழுத்தாளர்களின் கதை போல் என் கதையின் எழுத்து நடை இருப்பதாக அவர் பேசிய போது எனக்குப் புல்லரித்தது. இதை ஒரு புகழுக்காக நான் கூறவில்லை. அப்போது அவர் என்னை ஒரு அனுபவமற்ற இளம் எழுத்தாளராகவே எண்ணியிருக்கக் கூடும். நான் நீண்ட காலமாக எழுதி வருவதை அவர் அறியாத நிலையிலேயே அவர் அதைச் சொல்ல நேர்ந்தது. அப்போது அப்படித்தான் என் நிலைமை இருந்தது. இலை மறை காயாக நான் இருக்க நேர்ந்தது காலத்தின் கொடுமை.  இருந்தாலுமென்ன என் எழுத்து யுகம் இன்று களை கட்டி நிற்கிறது. இப்போது இணையத்திலும் என் கதைகள் நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிர்வது நான் செய்யும் எழுத்துத் தவத்தின் இனிய பெரும் பேறு. சிறுகதைகளுக்கான ஒரு வலைத்தளத்தில் என் கதைகளைப் பதிவேற்றியுள்ளேன். அதில் பார்வையிடலாம்.


05. நீங்கள் எழுத்துலகில் செய்த சாதனையாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

ஆரம்ப நிலையில் நான் எதிர் கொள்ள நேர்ந்த தோல்விகளுக்கு நடுவே மனம் தளராது   எழுத்து யுகத்தின் உச்சிக்குப் போய் நான் இன்னும் எழுதிக் கொண்டிருப்பதே ஒரு பெரும் சாதனை தான். அதிலும் வயதான பின்னும் எழுத்தூக்கமான பார்வை ஒளி கொண்டு பிரகாசிக்க நான் இன்னும் உயிர்த்து நிற்பதே அதைவிடப் பெரும் சாதனையல்லவா.


06. இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி, இலக்கியப் போக்கு பற்றி யாது கூறுவீர்கள்?

இப்போதுள்ள பெண் எழுத்தாளர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தனித்து எவரையும் அடையாளம் கண்டு சொல்வதற்கு அவர்களுடைய படைப்புக்களை நிறையவே வாசிக்க வேண்டும் நான்.


07. சிறுகதை, நாவல் குறித்த உங்கள் பார்வை என்ன?

சிறுகதை குறுகிய வட்டத்தினுள் இடம் பெறும் ஒரு குளம் மாதிரி. நாவலோ சமுத்திரம் போல ஆழத் தோண்டினால் தான் முத்துக் கிடைக்கும். இதற்கு மனிதர்களை மட்டுமல்ல  வாழ்வையும் ஒரு வேதமாகக் கற்க வேண்டும்.


08. எழுத்துத் துறை சார்ந்த உங்களது கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

வாழ்வியல் மாற்றங்களினூடே அசைவற்ற பிரம்மமான ஆன்மீக தேடல் வழியாகவே  எதிர்மறையான நிழல்களைப் புறம் தள்ளி மனிதர்களுக்குப் பயன் தரக் கூடிய நிஜ தரிசனமான பார்வை மூலம் நன்மைகளை வாழ்விக்கவே எனது நீண்ட கால இலக்கிய யாத்திரை. இதுவே தடம் மாறாத என் எழுத்துத் தவத்தின் இனிய குறிக்கோள். இதை ஓர் இறை பணியாகவே  நான் செய்து வருகிறேன். மனிதர்கள் புடம் கண்டு எழுதுவதன் மூலமே இறைவனையும் காண முடியும்.


09. புதிய சிறுகதை, நாவல் வெளியீடுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்றைய கால கட்டத்தில் எங்கள் எழுத்தாளர்களும் நிறைய எழுதுகிறார்கள். புத்தக வெளியீடும் செய்கிறார்கள். இது தமிழுக்குப் பெருமை சேர்க்கிற ஒரு நல்ல காரியம் தான். இதன் மூலம் தமிழ் தன் சாஸ்வத உயிர்ப்பு நிலை மாறாமல் களை கொண்டு பிரகாசித்தால்  மகிழ்ச்சியே. ஆனால் ஒரு கேள்வி. நவீன வாழ்க்கை மாற்றங்களில் காசு, பணம் புரள்வதால் வாசித்து அறிவைப் பெற வேண்டுமென்ற நிலை மாறி எல்லாம் தடம் புரண்ட போக்கில் இது எடுபடுமா என்று எனக்குத் தெரியவில்லை. காலம் தின்ற கரிக்குஞ்சுகள் மாதிரித் தான் பெரும்பாலானோர் நிலையும்.


10. வேறு எந்தத் துறைகளில் தற்போது ஆர்வங்காட்டி வருகிறீர்கள்?

இப்போது நன்றாக கவிதை எழுத வருகிறது.  முகநூலில் இறை கவிதையாக நிறைய எழுதி வருகிறேன். தினமும் கவிதை தான். விடியும் போதே என் கவிதை ஊற்றுக் கண் திறக்கும். என் கவிதையை வாசித்து விருப்பம் தெரிவிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. சுவாமி நித்யானந்தா அவர்ளை மனம் ஒன்றி வழிபடத் தொடங்கிய பிறகே எனக்கு இது வரமாகக் கிடைத்தது. என் கவிதையைப் படிக்கிற சிலர் கேட்பதுண்டு இவ்வளவு ஆழமாக அழகாகத் தமிழ் எழுதுகிறீர்களே எப்படி என்று கேட்கிறார்கள். இது நானாக எழுதுவதில்லை. ஆழமாக யோசிக்காமலே இப்படி எழுதுகிறேனென்றால் அது வேறொன்றுமிலை இறைவன் கொடுத்த வரம் தான்.


11. நீங்கள் எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கின்றீர்கள்? என்ன காரணம்?

சிறுவயதிலிருந்தே வாசித்து வருபவள் நான். தத்துவ நூல்கள், சமய நூல்களென்றால் மிகவும் பிடிக்கும். அந்தக் காலத்திலேயே நாவல்களும் நிறைய வாசித்திருக்கிறேன். கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம் நூலை நூறு தடவைகளாவது வாசித்திருப்பேன். ஜெயகாந்தனின் கதைகள், அகிலன் கதைகள், லஷ்மி கதைகள் எல்லாம் படித்திருக்கிறேன்.


12. இதுவரை உங்களுக்குக் கிடைத்த விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

விருதுகள் என்று பெரிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. 2009 இல் மூத்த எழுத்தாளர் என்று கௌரவித்து எனக்கு விருது தந்தார்கள். இது ஒன்று மட்டும் தான் எனக்கு கிடைத்த பெரிய விருது.


13. இலக்கிய உலகில் நிகழ்ந்த உங்களுக்கு மறக்க இயலாத சம்பவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

மறக்க முடியாத சம்பவங்களாய் நிறைய உண்டு. ஒன்றை மட்டும் சொல்கிறேன். கல்யாணத்துக்கு முன் இது நடந்தது. அப்போது நான் தமிழ் குடிகொண்டான், இதே பெயரோடு ஈழநாடு பத்திரிகையில் நான் முதன் முதலாக எழுதிய குறுநாவல் ஒன்று பிரசுரமானது, ஏனோ எதிர்பாராதவிதமாக அதை இடையில் நிறுத்தி விட்டார்கள்.

பின்னர் விசாரித்தபோது தகவல் சொன்னார்கள். எனது உறவினர்களில் எவரோ போய்ச் சொன்னார்களாம்.. இது தங்களையே தாக்கி எழுதப்பட்டிருப்பதாகவும் ஆகவே அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே தாங்கள் நிறுத்திவிட்டதாகவும். எனினும் ஷஷஅது மிகவும் நல்ல கதையாக இருந்ததால் முடிக்கவும் மனம் வரவில்லை|| என்று அவர்கள் சொன்ன போது எனக்கு எப்படியிருந்திருக்கும்.

கனம் இல்லை என்று தூக்கி எறியப்பட்ட என் கதைக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்தது வெற்றியே. ஆனால் ஒரு சின்ன மனவருத்தம், நிழலைப் பார்த்து மயங்கும் புத்தி எனக்கில்லை நிஜம் தலைகீழானால் வாழ்வின் கொடுமைகள் குறித்து தரிசனம் கண்டு எழுதக் கூடிய தர்மாவேசத்தின் தார்மீகக் கடமையின் விளைவாகவே என் எழுத்தும் இருக்கும். நான் பொதுப்பட எழுதியதை அவர்கள் ஏன் தலையில் சுமக்க நேர்ந்தது. இது குற்றமல்லவா?


14. இலக்கியப் படைப்புகளுக்கு கிடைக்கின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து யாது? 

இது ஒரு சிக்கலான கேள்வி மனம் திறந்து உண்மையைக் கூற நேர்ந்ததற்காக வருந்துகிறேன். என்னுடைய சொந்த அனுபவம் குறித்த கசப்பான உண்மை இது. விருதுகள் வழங்கும் ஒரு பெரிய நிறுவனம் அதன் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு சமயம் அதன் விருதுத் தேர்வுக்காக நானும் என் முதல் நூலை அனுப்பி வைத்திருந்தேன். விருது எனக்குக் கிடைக்கவில்லை. பின்னர் நெடுநாள் கழித்து அதன் தேர்வுக் குழுவில் அங்கம் வகிக்கும் ஒரு இலக்கியவாதியை நான் சந்திக்க நேர்ந்தது. முன்பே எனக்கு அவர் அறிமுகமாகியிருந்தார். என் நூல் வெளியீடு பற்றிக் கூறிய போது தான் அதை வாசிக்க வேண்டும் தருமாறு அவர் கேட்டுக் கொண்ட போது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. தேர்வுக்குழுவின் கண்ணில் படாமல் மறை பொருளானதா என் கதை? அங்கு அதையும் வாசித்தல்லவா ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். இதைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார் நன்றாக எழுதக் கூடியவர்களின் கதை பார்த்துத் தான் நாங்கள் தேர்ந்தெடுகிறோம். இந்தச் சறுக்கலுக்கு ஒரு சமாதானம் வேறு உலகம் எப்போதும் இருட்டில் தான் இருக்கிறது.


15. இறுதியாக வாசகர்களுக்காக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

எனது சொந்த இருப்பிலிருந்தே இதை சொல்கிறேன். எங்கள் மக்களிடையே வாசிக்கும் பழக்கம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். அதுவும் குப்பை கூளங்களையல்ல. ஆன்மாவை உயிரை தரிசனம் காட்டுவதற்கென்றே அறிவு சார்ந்த நூல்களைக் கதைகளை வாசித்தாலொழிய மாற்றம் நேராது. சுபீட்சம் தழைக்காது. வெறும் பணத்தினால் ஆவது வெறும் சலன மிதப்புகள் தாம். அதை மறந்து விட்டு வாழ்க்கையைத் தரிசனம் காண்பதொன்றே நிஜத்தின் வெற்றியாக அமையும். இதற்கு நல்ல வாசிப்பும் ஒரு சிறந்த மார்க்கமே இன்றைய இளைய தலை முறையினருக்கு இது விளங்க வேண்டுமென்பதே எனது பிராத்தனையுமாகும். நான் ஒரு யுகமாக எழுதி வருகிறேன். இதுவரை எந்தப் பத்திரிகையிலும் எனது நேர்காணல் இடம் பெறவில்லை. ஆனால் மிகவும் பெருந்தன்மையுடன் முதல் முறையாக என்னைக் கௌரவித்துப் பேட்டி கண்டு பத்திரிகையில் பிரசுரிக்க முன் வந்த உங்களுக்கு என்  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

31. கிண்ணியா பாயிஸா அலி அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.02.11

கிண்ணியா பாயிஸா அலி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் பிறந்து வாழ்ந்துவரும் ஊர் கிண்ணியா, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். ஆரோக்கியமான கடற்காற்றும் தென்னை மரங்களும் மா, பலா, வாழையெனப் பழத் தோட்டங்களும் நெல் வயல்களும் சேனைப் பயிர்களுமாய் அழகும் செழுமையும் நிறைந்த வளமான மண் இது. விருந்தோம்பும் உயர் பண்பும் ஒழுக்கமும் இறையச்சமும் நிறைந்த உள்ளங்கள் வாழுமிடம் கிண்ணியா. அத்தோடு அரசியல் சமுக சேவையாளர்களையும் கல்வியாளர்களையும் உருவாக்கிய பிரதேசம் இது. இதைவிடவும் மிகவும் பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவெனில் கவிஞர் அண்ணல் தொடங்கி கஹ்ஹார் ஏ.எம்.எம். அலி, அலி அக்பர், பீ.ரீ. அஸீஸ், ராஹிலா மஜித்நூன், ஜெனீரா கைருல் அமான், கஸ்புள்ளா, நஸ்புள்ளா, பெரோஸ்கான், நாஸிக் மஜித், நஸார் இஜாஸ் வரைக்குமான ஏராளமான எழுத்தாளர்களைப் பிரசவித்த ஊர் என்னுடையது.


 குடும்பத்தைப் பற்றிச் சொல்வதென்றால் தந்தை அப்துல் சலாம் இலங்கை போக்குவரத்து சபையில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். தீவிர வாசிப்பாளர். தாயார் றைஹானத் பெண்ணாசிரியர் - பெண் அதிபர் வரிசையில் முதன்மையானவராய் 36 வருடங்கள் அரச பணியாற்றியவர். இன்று வரைக்கும் ஒழுக்கம், இறை பக்தி, விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை, மென்மை, கனிவு, கடமையுணர்வு என்ற பதங்களுக்கெல்லாம் என் அன்புத் தாயைத் தவிர்ந்து வேறொருவரை என்னால் உதாரணமாகச் சொல்ல முடியாது. புரிந்துணர்வுடன் கூடிய 2 சகோதரர்கள், 2 சகோதரிகள்.

கணவர் முஹம்மட் அலி கணிதப் பாட ஆசிரியராகப் பணி புரிகிறார். 2 மகள்களும் 1 மகனுமாய்ப் பிள்ளைகள். மூத்த மகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் மகன் களனி பல்கலைக் கழகத்திலும் பொறியியல் கணனி தொழிநுட்ப பிரிவுகளில் பட்டப் படிப்பைத் தொடர்கின்றனர். இளைய மகள் தரம் 9 இல் கற்கிறார். அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ள தெரிந்த அமைதியான குடும்பம் என்னுடையது.


உங்களது பாடசாலைக் காலம், தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

தி/ கிண்/ முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி திஃகுறிஞ்சாக்கேணி அரபா மகா வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரையும் பின்னர் கிண்ணியா மத்திய கல்லூரில் உயர் தரத்தை விஞ்ஞான பிரிவிலும் கற்றேன்.

பாடசாலைக் காலங்கள் மறக்கவியலாத பசுமையான நினைவுகளாய் இன்றும் மனதில் நிறைந்துள்ளன. ஆரம்ப வகுப்புக்களில் கற்பித்த கமலா, ராணி, ஜெசிமா, ஆமினா, பாத்துமா, நளிமா (ராணி) ஆசிரியர்களின் அன்பும் பரிவும் சொல்லித் தீராதவை. அதிலும் தரம் 5 இல் கற்பித்த நளிமா (ராணி) ஆசிரியையின் கற்பித்தல் ஆலோசனை வழிகாட்டல் முறை தனித்துவமானது.

கடவுள் அமைத்துவைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை..
இன்னாருக்கு இன்னாரென்று
எழுதிவைத்தானே தேவன் அன்று..

S.P.B. யின் கணீரென்ற குரலில் இந்தப் பாடல் எங்கே ஒலித்தாலும் இன்று வரைக்கும் என் நினைவிற்கு வருவது (ராணி) டீச்சரின் பளிச்சென்ற அழகு முகமும் அவர் பயிற்றுவித்த கலை நிகழ்ச்சிகளும்தான். அதேபோல தரம் 5 புலமைப் பரீட்சைக்காகப் பாடசாலை விட்ட பிறகும் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி வரைக்கும் எங்களுக்காகப் பாடசாலையில் இருந்து மிகுந்த அர்ப்பணிப்போடு கற்பித்து எம்மை சித்தியடையச் செய்தார். (அந்த வருடம் 1983 என நினைக்கிறேன். கிண்ணியாப் பிரதேச மாணவரிடையே நான் மாத்திரமே சித்தியடைந்ததாகச் சொல்லப்பட்டது நினைவிருக்கின்றது) இது தொடர்பில் இறைவனுக்கு அடுத்து எனது பாடசாலையையும் ராணி ரீச்சரையும் இன்று வரைக்கும் நன்றியோடு நினைவுகொள்கிறேன்.

ஆனாலும் ராணி ரீச்சரின் ஆசிரியப் பணி எங்களது வகுப்போடு முடிவுக்கு வந்ததை அறிந்தபோது நானடைந்த கவலைக்கு அளவேயில்லை. முன்பள்ளி முதல் கல்வி கற்றுத் தந்த எல்லா ஆசிரியர்களையும் என்னுடைய பிரார்த்தனைகளில் இணைத்துக்கொள்ள ஒருபோதும் மறப்பதில்லை.

தொழில் அனுபவங்கள் என்னும் போது.. ஆசிரியர் போட்டிப் பரீட்சையொன்றில் சித்தியடைந்து 1998 இல் நியமனம் பெற்றுப் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராகப் பணி புரிகின்றேன்.

அப்போதைய இன வன்முறைக் காலப் பதட்டமான சூழல் கல்வியில் ஏற்படுத்திய நேரடித் தாக்கத்தால் எனக்குப் பல்கலைக்கழகத்தினூடாக உள்வாரியாகப் பயிழும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினூடாகப் (B.Sc) பட்டப் படிப்பைத் தொடர்ந்தேன். 2 வருடங்கள் முடிந்த நிலையில் அதனையும் கைவிடவேண்டிய நிர்ப்பந்தம். எனினும் மனந்தளராது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலமாக தமிழ் இலக்கியத்தில் இளமாணி, இதழியல் மக்கள் தொடர்பியலில் முதுமாணி வரை கற்றதோடு விசேட தேவைகள் சார் கல்வியில் பட்டமேல் டிப்ளோவைத் தொடர்கிறேன்.

இன்று வரைக்கும் பணியாற்றிய மூன்று பாடசாலைகளிலும் கற்பித்தல் அனுபவங்கள் மன நிறைவு தரும் வகையில் உள்ளன. க.பொ.த. பரீட்சையில் நான் கற்பித்த விஞ்ஞான பாடத்தில் நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன. 2012 இல் க.பொ.த. சாதாரண தரத்தில் விஞ்ஞான பாடத்தில் கிழக்கு மாகாணத்திலேயே எமது பாடசாலை இரண்டாம் இடம் பெற்றது. கற்பித்தல் என்று வரும்போது ஒருபோதும் நான் என்னுடைய திறமையில் மட்டுமே முழு நம்பிக்கை வைத்திருப்பதில்லை. எவ்வளவு இயலுமோ அவ்வளவுக்கு ஏனைய வளவாளர்களின் உதவிகளையும் எமது பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பேன். அந்தவகையில் எமது பிரதேசத்தில் உள்ள தேர்ந்த விஞ்ஞான ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஏனைய பாடசாலைகளில் ஆய்வு கூடங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், விஞ்ஞான பிரிவில் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்கள் என எல்லோரையும் சிறந்த முறையில் திட்டமிட்டு எமது பாடசாலை மாணவரின் விஞ்ஞானப் பாட சிறந்த அடைவுக்காகப் பயன்படுத்தினேன் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

இதனை விடவும் விஞ்ஞான வினாப் போட்டிகளில், ஒலிம்பிக் போட்டிகளில், மீலாத் விழா, கலை, இலக்கியப் போட்டிகளில் மாணவர்களைத் தயார் செய்தலிலும் எனது பங்களிப்புகள் கணிசமனான அளவில் உள்ளன. அத்தோடு விஞ்ஞான பாடம் தவிர்ந்த ஆரம்பக் கல்வி ஒன்றிணைந்த பாடங்கள், கணிதம், தமிழ், வாழ்க்கைத் தேர்ச்சி, சுகாதாரம், இஸ்லாம் போன்ற பாடங்களை கற்பித்த அனுபவமும் உண்டு. மேலும் என்ன பாடமாக இருந்தாலும் அதனை மாணவர்களுக்குக் கற்பிக்கும்போது கூடவே அதற்காக நாமும் கற்கிறோம். புதிது புதிதாய் நாமும் வளர்கிறோம் என்பது சந்தோசமான விடயம்.


உங்களது இலக்கியப் பிரவேசம் எந்தப் பின்புலத்தைக் காரணமாகக் கொண்டு நிகழ்ந்தது?

பெற்றார் வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள். பலவகையான புத்தகங்கள் வீட்டு அலுமாரியில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தினசரி, சிந்தாமணி, வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளுக்கும் குறைவில்லை. எனது மூத்த சகோதரர் றியாட் அம்புலி மாமா, ரத்னபாலா போன்ற சிறுவர் நூல்களையெல்லாம் நண்பர்களிடம் இருந்து வாங்கி வருவார். உற்சாகமாய் வாசிப்போம். எதை வாசித்தாலும் அதைப்பற்றி ஐந்து வரியாவது விமர்சனம் எழுதுமாறு உம்மா சொல்லுவார். நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு எழுதுவோம். குட்டிக் கதைகள், கவிதைகள், கட்டுரைகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலைப்புத் தந்து எழுதச் சொல்லுவார். சிறப்பான ஆக்கங்களுக்கான பரிசுகளுக்கும் குறைவில்லை. அத்தோடு அந்த ஆக்கங்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்கும் ஊக்கப்படுத்துவார். இப்படி ஆரம்பித்ததுதான் என்னுடைய இலக்கியப் பிரவேசம். இதைவிடவும் சகோதரர் அஷ்ரப் சிகாப்தீன், நாசிக் மஜீத், ராஹிலா மஜித்நூன், கிண்ணியா அமீரலி, நஸார் இஜாஸ் ஆகியோர் எனது தந்தை வழியில் இரத்த உறவுகள் என்பதையும் நினைவுகூர விரும்புகிறேன்.

பாடசாலைக் காலத்திலேயே பத்திரிகைகளில் சிறுவர் பகுதிக்கு, வானொலி சிறுவர் நிகழ்ச்சிகளுக்கு சின்னச் சின்ன கவிதை, கட்டுரை, கதைத் துணுக்குகள் எழுதியனுப்புவேன். அது பிரசுரமானால் சந்தோசமாயிருக்கும். பாடசாலையின் பெயர் முகவரியோடு வெளிவருவதால் வகுப்பு நண்பர்கள் ஆசிரியர்கள் சந்தோசமாக வாழ்த்துவார்கள், ஊக்கப்படுத்துவார்கள். அந்த உற்சாகத்தில் பாடப் புத்தகங்களோடு இதர வாசிப்பும் எழுத்தும் தொடர்ந்த வண்ணமேயிருந்தது.

கவிதையெனும்போது தரம் 10 இல் (1987 இல்) முதன் முதலில் தினகரனிலும் அடுத்து சிந்தாமணியிலும் கவிதைகள் வெளிவந்தன. அதில் முகவரி குறிப்பிடப்படாததால் யாரும் கண்டுகொள்ளாதது கொஞ்சம் கவலையாக இருந்தது. ஆனாலும் எனது பெரியப்பாவின் மகள் மஸாகினா சகோதரியின் வீட்டுக்குப் போனபோது பத்திரிகையில் வெளிவந்திருந்த எனது கவிதையை எடுத்துக்காட்டி என்னைப் பாராட்டினார். அன்று வாழ்க்கையிலே எனக்கு மறக்க முடியாத சந்தோச நாளாக இருந்தது. பிறகும் நிறைய மரபுக் கவிதைகள் எழுதினேன். எனினும் அவை தரமாயிருக்குமோ என்ற ஒருவிதத் தயக்கம் காரணமாக பத்திரிகைகளுக்கு அனுப்பவில்லை.

ஒரு தடவை அமீரலி நானா (கிண்ணியா அமீரலி) பாரதியார் கவிதைகள் எல்லாம் உதாரணம் காட்டி எதுகை, மோனை, சந்தம், சீர், அடி என மரபுக் கவிதை இலக்கணம் பற்றி ஏறத்தாள பத்து பக்கங்;களில் எழுதியனுப்பி இருந்தார். அதைக் கவனமாக வாசித்துப் பயிற்சிகள் செய்து பல மரபுக் கவிதைகள் எழுதினேன்.

நான் கற்றது உயர் தரம் விஞ்ஞானத் துறையென்பதால் கவிதைப் பயிற்சிகளை விடவும் பாட ரீதியான பயிற்சிகளுக்கு கூடிய நேரங்களைச் செலவளிக்க வேண்டியதாயிற்று. ஆனாலும் வாசிப்பை விட்டுவிடவில்லை. அத்தோடு உயர் தரம் படித்த காலத்திலும் கலை நிகழ்ச்சிகளுக்கான வில்லுப் பாட்டு, நாடகங்கள், இஸ்லாமிய கீதங்கள் தொடர்ச்சியாக எழுதினேன். இயல்பாகவே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் இருந்ததால் என்னாலும் எழுத முடியும் என்பதைப் பிரபலப்படுத்த முடியவில்லை. தற்போது சிறுவர் பாடல், நவீன கவிதை, ஆய்வுகள் தொடர்பில் அதிகம் ஈடுபாட்டோடு இயங்கி வருகிறேன். சிறுவர் இலக்கியத்தில் நற்சிந்தனைகள், மரபு ரீதியான விடயங்களோடு அறிவியல் சார்ந்த சிந்தனைகளையும் சிறுவர் பாடல்களில் புகுத்தி வருகிறேன்.

அதேபோல் கவிதைகளில் முக்கியமாக பெண்கள், சிறுவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக கவனத்தைச் செலுத்தியிருக்கிறேன். எனது பாடசாலை அனுபவங்களும் இதற்கு வலுச் சேர்த்தன எனலாம். இன்னும் பேச வேண்டிய, வெளிக்கொணர வேண்டிய தீர்வு காண வேண்டிய விடயங்கள் ஏராளம் உள்ளன. மேலும் கவிதைக் கட்டமைப்பு, வெளிப்பாட்டு முறைகள் தொடர்பிலும் பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இப்போது வசப்பட்டிருக்கும் முறைகள் மனசுக்குள்ளிருந்து கலைந்து போன பிறகுதான் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்.


இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. சிகரம் தொடவா                                     (2008) - சிறுவர் பாடல்
02. தங்கமீன் குஞ்சுகள்                                (2010) - சிறுவர் பாடல்
03. எஸ். பாயிஸா அலி கவிதைகள்  (2012) - கவிதை
04. கடல் முற்றம்                                           (2017) - கவிதை

இதுதவிர நான் எழுதிய திறனாய்வுக் கட்டுரைகள் இரு தொகுதிகள் வெளியிடும் அளவுக்கு உள்ளன. ஆனாலும் பொருளாதாரம் மிகப்பெரிய தடையல்லவா?


உங்கள் படைப்புகளுக்கு கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு ஒன்றியம் வழங்கிய சிறுவர் இலக்கியத்திற்கான தமிழியல் விருது (2011) அத்தோடு ரூபா 1000 பணப் பரிசு

02. கிழக்கு மாகாண சாகித்திய விருது (கவிதைத் தொகுதிக்கு) 2012 அத்தோடு ரூபா 10,000 பணப் பரிசும். மேலும் இந்நூலுக்கு இலங்கை அரசின் சாகித்திய விருதுக்கான சான்றிதழும் கிடைத்தது.

இதைவிடவும் பிரதேச, மாவட்ட ரீதியான பல்வேறு கௌரவிப்புகளும் கிடைத்தன.


ஊடகத்துறையில் உங்கள் அனுபவங்கள் எப்படி?

பத்திரிகைத் துறையில் நல்ல அனுபவம் உள்ளது. எனது முதுமாணிப் பட்டப் படிப்பைக்கூட இத்துறை சார்ந்துதான் தெரிவு செய்தேன். எங்கள் தேசம் - (கொழும்பு) பத்திரிகையில் பத்தி எழுத்தாளராக 2006 இல் இருந்தே பணியாற்றினேன். கட்டுரைகள், நேர்காணல், கவிதை, நூலாய்வுகள், சிறுகதை என தொடர்ச்சியாக என்னால் எழுத முடிந்தது. அத்தோடு ஷஆரோக்கிய தேசம்| எனும் பக்கத்தையும் மூன்று வருடங்களாகத் தயாரித்து வழங்கினேன்.

இதைவிடவும் உள்ளுர் கல்வி, கலாசாரம் நிகழ்வுகளைப் பல்வேறு ஊடகங்களுக்கும் செய்திக் குறிப்புகளாக அனுப்பியிருக்கிறேன். அத்தோடு பாடசாலை, பிரதேச செயலக நினைவுமலர், நிகழ்காலம் சஞ்சிகை குழுவிலும் இணைந்து பணியாற்றிய அனுபவம் உண்டு.

அத்தோடு உடன் பிறப்புக்கள் முஹம்மட் ரியாட், முஹம்மட் நளீஜ் அப்துல் சலாம் இருவருடனும் இணைந்து கிண்ணியா நெட் (மinnலைய.நெவ) எனும் அரசியல் கலாசாரம் சார்ந்த இணையத் தளத்தினையும் செயற்படுத்தி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் இதனை விரிவுபடுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.


உங்களுக்குப் பிடித்த சிறிய கவிதையொன்றைக் கூறுங்கள்?

எனக்கு பிடித்த சீனக் கவிதையொன்று:-

நான் கேட்கிறேன் மறக்கிறேன்
நான் பார்க்கிறேன் உணர்கிறேன்
நான் செய்கி;றேன் விளங்கிக் கொள்கிறேன்!

வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குக் கூறவிரும்புவது என்ன?

நிறைய வாசியுங்கள். நல்ல எழுத்தாளர்களின் நூல்களைத் தேடி வாசியுங்கள். வாசிப்பு ஒன்றே மனிதனைப் பூரணப்படுத்தும்.


ஒரு ஆசிரியராகக் கூறவிரும்புவது என்ன?

மாணவச் செல்வங்கள் எமது அமானிதங்கள். அவர்களை நமது குழந்தைகளைப் போலவே நடத்த வேண்டும்;. எக்காரணத்திற்காகவும் அவர்களை உடல் ரீதியாகவோ, உளரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது. எனது பெற்றார் என்னை ஒரு தடவைகூட அடித்ததில்லை. நானும் எனது பிள்ளைகளை அடித்து வளர்க்கவில்லை. கடினமான சொற்களைவிடப் பக்குவமான அணுகுமுறையினால் பிள்ளைகளைத் திருத்துவது சுலபம். தண்டனைகளால் ஒரு போதும் உலகை மாற்ற முடியாது.

மேலும் பாட ஆயத்தங்கள் இன்றி வகுப்பறைக்குப் போகக்கூடாது. எதனையும் செயன்முறைக்கூடாகக் கற்பிப்பதையே பிள்ளைகள் விரும்புகிறார்கள். உதாரணமாக தமிழ் மொழிப் பாடம் எனும்போது குறித்த அலகை உரையாடலாக, நாடகமாக, பாடலாக என மாணவரோடு மாணவராக நாமும் மாறி கற்பிக்க வேண்டும். நாம் கற்பிற்கும் பாட விடயங்கள் தொடர்பான நிறைவான அறிவைப் பெற்றிருப்பதோடு ஏனைய பாடங்களையும் மற்றும் தற்கால நடைமுறை விடயங்களையும் நாம் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இதைவிட அதிமுக்கியம் நாம் கற்பிக்கும் மாணவர்களைப் பற்றியும் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டியது நமது கடமையாகும். அத்தோடு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இறைவனைப் பயந்து கொள்ள வேண்டும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்