பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Saturday, January 30, 2021

49. UTV தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், பேச்சாளர் (ஊக்குவிப்புப் பேச்சாளர்) ரினோஸா நவ்சாத் அவர்களுடனான நேர்காணல்

 UTV தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், பேச்சாளர் (ஊக்குவிப்புப் பேச்சாளர்) ரினோஸா நவ்சாத் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை, குடும்பப் பின்னணி பற்றி எமது வாசகர்களுக்கு சுருக்கமாகக் கூறுங்கள்?


தற்பொழுது நான் தலைநகரத்தில் வசித்து வந்தாலும், என் பிறந்த ஊர் ராகமை. என் சிறுவயதிலிருந்து நினைவு தெரிந்தவரை கொழும்பில் மாபோலை எனும் நகரத்தில் என் உறவினர்கள் வசித்து வந்தனர். சிறுவயதிலிருந்து என் உம்மம்மாவிடமே வளர்ந்தேன். என் உம்மம்மாவிற்கு 10 பிள்ளைகள். ஆதலால் என் மாமா மற்றும் சித்திமார்களிடமே அதிகமாக இருக்க வேண்டியேற்பட்டது. 



எனக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுதே என் உம்மம்மா மற்றும் உறவினர்கள் அனுராதபுரம் நாச்சியாதீவு எனும் கிராமத்திற்கு குடிபெயர்ந்துவிட்டனர். பின்னர் என் பாலர் பாடசாலையைத் தவிர்த்து முதலாம் தரம் தொடக்கம் க.பொ.த. உயர் தரம் வரை நாச்சியாதீவு மு.ம. வித்தியாலயத்தில் கற்றேன். என் தாய் அவர்களின் ஏனைய சகோதரர்களை கவனிக்க மற்றும் பராமரிப்பதற்காகவும் குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாகவும் வெளிநாட்டுக்கு செல்லவேண்டியேற்பட்டது. தாய் சிறுவயதில் வெளிநாடு சென்றதன் காரணமாக என்னை என் உம்மம்மாவே பராமரித்தார். ஆரம்ப காலங்களில் தாய்க்கும் என் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக எனது தாயார் என் தந்தையை விவாகரத்து செய்துவிட தந்தை என்ற ஸ்தானத்தை என் தாயின் தம்பிமார்களே எனக்கு வழங்கி முழு ஒத்துழைப்பையும் தந்தனர். எனவே என் உயர் தரம் வரை என் மாமாமார் மற்றும் பாட்டியின் கட்டுப்பாட்டிலேயே வளர வேண்டிய சூழ்நிலை எனக்கு இருந்தது. அத்துடன் என் தாய்க்கு நான் ஒரே பிள்ளை என்பதால் எல்லோரும் மிகுந்த பாசத்துடனேயே என்னை வளர்த்து ஆளாக்கினர்.


02. நீங்கள் மாணவப்; பருவத்தில் இருந்த பொழுது பிற்காலத்தில் தொலைக்காட்சித் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆவலையோ அல்லது இலட்சியத்தையோ கொண்டிருந்தீர்களா? தொலைக்காட்சித் துறை மீது எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?

நிச்சயமாக எனக்கு நினைவு தெரிந்தவரை அவ்வாறான ஒரு எண்ணம் இருக்கவில்லை. ஆனால் தமிழ் மொழியின் மீது அதீத பற்று இருந்தது. நான் அதிகமாக  படிப்பதைத் தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதிலும், நகைச்சுவை பட்டி மன்றங்கள் பார்ப்பதிலும் அதிக நேரத்தை செலவிட்டேன். அத்துடன் என் கல்விக்கான முழு ஒத்துழைப்பும் பரந்தளவிலான சுதந்திரமும் என் வீட்டில் எனக்கு மிகையாகவே கிடைத்தது. தாய் என்னருகில் இல்லையெனினும் தாயின் கடமைகள் அனைத்தையும் உம்மம்மா மற்றும் மாமாமார், சித்திமார் என பலரும் தொடர்ந்து எனக்கு அளித்து வந்தனர். எனவே நான் அளவு கடந்து தொலைக்காட்சி பார்ப்பதையும் இணைப்பாட விதானங்களில் கவனம் செலுத்துவதையும் யாரும் தடுக்கவில்லை. அந்த அபரிமித சுதந்திரமே என்னை தொலைக்காட்சிப் பக்கம் திருப்ப மிகப்பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. காலம் செல்லச் செல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் நிகழ்ச்சி வழங்குநர்களாக நானும் மாரி அவர்களைப் போன்று கண்ணாடி முன்னின்றும் தனியாகப் பேசியும் எனக்குள்ளேயே பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதன்பின்பு தரம் 9 இல் கல்வி கற்கும் பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் துறை மீது ஒரு பாரிய ஈர்ப்பு ஏற்பட்டது. எதிர்காலத்தில் என் துறை ஊடகத் துறையாகத்தான் இருக்குமென்று பின்புதான் நானாகவே உணர்ந்துகொண்டேன்.


03. நீங்கள் எப்போது, எந்த வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குள் நுழைந்தீர்கள்?

நான் தரம் பதினொன்றில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பொழுது இலங்கையின் தேசிய தமிழ் தொலைக்காட்சியான நேத்ரா ரீவியில் "ராக மேடை" எனும் இசை நிகழ்ச்சி நடந்தேறியது. சுருதி, சங்கீதம் என்று ஒன்றும் தெரிந்திருக்காவிடினும் அன்றைய நாட்களில் பாடல்கள் பாடவேண்டும் என்று ஆசை இருந்ததால் "ராக மேடை" நிகழ்ச்சியில் பங்குகொண்டேன். மற்றும் இலங்கையின் தனியார் தொலைக்காட்சியான சக்தி ரீவி நடாத்திய "Grand Master" எனும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். அப்பொழுது என் அகவை பதினேழு இருக்கும். அங்கு சென்று வந்தவுடன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராகத்தான் நான் வரவேண்டும் என்று என் முழு உழைப்பையும் ஊடகத் துறைக்குள் நுழைந்து விடுவதற்கே செலவிட்டேன். பின் உயர் தரம் முடித்த கையோடு இலங்கை தொலைக்காட்சி பயிற்சி கல்லூரியில் (SLTTI) ஒரு வருடம் கல்வி கற்றுவிட்டு என் இருபத்து மூன்றாவது வயதில் தொலைக்காட்சிக்குள் நுழைந்தேன்.


04. தொலைக்காட்சியில் எவ்வாறு அறிமுகமாகினீர்கள்?

தொலைக்காட்சி பயிற்சிக் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பொழுது என் வசதி கருதி மல்வானையிலுள்ள என் பெரியப்பா வீட்டிலேயே தங்கியிருந்தேன். அக்கால கட்டங்களில் கவிதை எழுதவும், புத்தகங்கள் வாசிப்பதற்கும், நூல் வெளியீட்டு விழாக்களுக்கு செல்லவும் அதிகமான வாய்ப்புக்கள் கிடைத்தன, எனவே கவிதைகள் எழுதி மாதாந்தம் பௌர்ணமி தினத்தில் நடக்கும் கவியரங்கிற்கு சென்று கவிதை பாட எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது என் கவிதைகளைப் பாராட்டிய கிண்ணியா அமீர் அலி மற்றும் கவிஞர் மேமன் கவி ஆகியோர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஹஜ் பெருநாள் சிறப்பு கவியரங்கில் கவிதை வாசிக்க என்னையும் அழைத்தனர். ஊடகத் துறையில் டிப்ளோமா முடித்த கையயோடு அந்த வாய்ப்பும் கடந்த 2013 ஆம்  ஆண்டு கிடைக்க DAN  எனும் பிராந்திய தொலைக்காட்சியில் பகுதி நேர இஸ்லாமிய பிரிவாக செரண்டிப் எனும் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அங்கு நான் கவிதை வசித்து முடித்த கையோடு  எனக்கு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க அன்றய நாட்களில் செரண்டிப் அலைவரிசை பிரதானியாக இருந்த பஹத் ஏ. மஜீத் அவர்களினால் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது தான் தொலைக்காட்சி என்ற ஒன்றுக்குள் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக  காலடி எடுத்து வைத்தேன்.


05. இத்துறையில் உங்களுக்கு ஈடுபாடு காட்ட ஊக்குவித்தவர்கள் யார்?

உண்மையில் ஊக்குவித்தவர்கள் பற்றிக் கூறும்பொழுது என் குடும்பத்தினருக்கே முதலிடத்தைக் கொடுப்பேன். என் தாய், உம்மம்மா, மாமாமார், மாமி, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா மற்றும் என் ஆசிரியர்களும் என்னை அதிகப்படியாக ஊக்குவித்தார்கள்.


06. பல்வேறு தொலைக்காட்சிகளில் தொழில் புரிந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளலாமே?

ஆம். முதல் காலடி செரண்டிப் தொலைக்காட்சியில் பணிபுரிந்த 5 மாத காலப் பகுதிகள் தான். அலைவரிசை பிரதானியான பஹத் ஏ. மஜீத் மற்றும் நிகழ்ச்சி முகாமையாளராக கடமையாற்றிய இஹ்ஸான் முஹம்மத் மற்றும் இன்னும் இருவருடன் சேர்த்து மொத்தமாக நான்கு பேர்களே அத்தொலைக்காட்சியில் பணிபுரிந்தோம். பின்னர் ஒரு சில உயர் தலையீடு காரணமாக செரண்டிப் ரீவியிலிருந்து பஹத் ஏ. மஜீத் தவிர்ந்து ஏனையோர் அனைவரும் உதயம் ரீவிக்கு மாற்றம் பெற்றோம். 2015 முதல் 2019 வரை நான்கு வருடங்களாக ஏ.எல். இர்பான் என்பவர் அலைவரிசை பிரதானியாக கடமையாற்றினார். ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, பிரதியாக்கம் என ஆழ்ந்த அறிவும் திறமையும் என்னிடம் இருக்கவில்லை. ஆனாலும் இன்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருக்க முன்னாள் அலைவரிசை பிரதானி ஏ.எல். இர்பான் அவர்களின் கண்டிப்பும் வழிகாட்டலும் ஒருவகை காரணம் எனலாம். ஒரு வரியில் சொல்வதென்றால் "களிமண் சிலையான கதைதான் என் கதை" பல தொலைக்காட்சிகளிலில் பணிபுரியாவிட்டாலும் இவ்விரண்டு தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து மேற்கூறியதற்கு சமம். இன்னும் சுருக்கிச் சொல்வதென்றால் பல சுவாரஷ்யங்கள், பற்பல கண்டிப்புகள் எனலாம்.


07. தொலைக்காட்சித் துறையில் ஈடுபடுபவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், ஆளுமைகள் என்னவென்று கூற முடியுமா?

தொலைக்காட்சித் துறையில் பணிபுரிவோருக்கு இருக்க வேண்டிய ஆளுமைகள் பற்றி குறிப்பிட எனக்கு போதுமான அனுபவம் இல்லை. என்றாலும் எனக்கு தெரிந்தவற்றை நான் குறிப்பிடுவது நல்லது என்று நினைக்கின்றேன். ஒரு நிகழ்ச்சியை கமெராவின் முன் நின்று தொகுத்து வழங்குவதற்கு முதலில் கூச்ச சுபாவமும் தயக்கமும் இருத்தல் கூடாது என்பது முதல் தகுதி. ஒரு நிகழ்ச்சி வழங்குனரைப் பார்த்து திடீர் என்று ஒரு விடயத்தை கையில் கொடுத்து இதைப்பற்றி நீங்கள் அவசரமாக ஒரு காணொளி நேரடி நிகழ்ச்சியில் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளரால் கூறப்பட்டால் எவ்வித தயக்கமும் தாமதமும் இன்றி அதைச் செய்து கொடுக்கக்கூடிய திறன் ஒவ்வொரு நிகழ்ச்சித்தொகுப்பாளருக்கும் அத்தியவசிய தேவை. அதனால் தான் நாளாந்தம் அரசியல், பொது அறிவு, சினிமா என்ற அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சி வழங்குனரும் தயாராக இருத்தல் வேண்டும். ஒரு நிகழ்ச்சி வழங்குனரை தயாரிப்பாளர் "இதை செய், இது இப்படித்தான் வரவேண்டும், இப்படித்தான் வாசித்தல் வேண்டும்" என்று கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை அடிக்கடி ஏற்பட்டால் அது ஒரு நேர்த்தியான நிகழ்ச்சி வழங்குனருக்கு பொருத்தமாக இருக்காது. ஷஷஎள் என்றால் எண்ணையாக நிற்றல்' என்ற பழமொழி நிகழ்ச்சி வழங்குனர்களாக இருக்கும் ஓவ்வொரு தொகுப்பாளர்களுக்கும் பொருந்தும்.


08. 'ஒரு துளி' நிகழ்ச்சி உட்பட நீங்கள் தயாரித்து அல்லது தொகுத்து வழங்கும் ஏனைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

UTV யில் நான் மொத்தமாக ஐந்து நிகழ்ச்சிகளை தயாரித்தும், ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகின்றேன். அவற்றில் "ஒரு துளி" எனும் நிகழ்ச்சி சனிக் கிழமைகளில் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆவணப்படுத்தல் நிகழ்ச்சியாகும். அரசியல், சினிமா, அறிவியல் என பல துறைகளில் உச்சம் தொட்டவர்களினதும் வரலாறு மற்றும் தற்கால சுவாரஷ்யமான சர்ச்சைக்குரிய விடயங்களையும் தொகுத்து ஆராய்ந்து ஆவணப்படுதலே மேற்கூறிய "ஒரு துளி" நிகழ்ச்சி. 

நான்  தொகுத்து மற்றும் தயாரித்து வழங்கும் மற்றுமொரு நிகழ்ச்சி "சூப்பர் சமையல்" இந்நிகழ்ச்சி UTV யில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும். பெண்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் சுவையான மேலைத்தேய, கீழைத்தேய சமையல்களை தொகுத்து வழங்குதலே அந்நிகழ்ச்சி. அதுதவிர்ந்து "World 360" எனும் நிகழ்ச்சியும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு பொது அறிவுசார் நிகழ்ச்சித்தொகுப்பாகும். இதில் வைரலான விடயங்கள், சந்தைக்குப் புதிதாக அறிமுகமாகிய போக்குவரத்து சாதனங்கள், அறிவியல் என பல சுவாரஷ்யமான விடயங்ககளை 30 நிமிடங்களில் வழங்கும் ஒரு நிகழ்ச்சியே இது. அதுதவிர்ந்து ஷஷசினிமா சினிமா' எனும் நிகழ்ச்சி இலங்கை, இந்தியா மற்றும் உலக சினிமா பக்கங்களில் நிகழும் முக்கியமான நிகழ்வுகள் திரைப்படங்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. அத்துடன் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும் "Weekend Chat" எனும் நிகழ்ச்சியையும் தயாரிக்கின்றேன். இது முழுக்க முழுக்க நேயர்களுக்குப் பிடித்தமான பாடல்களைத் தெரிவு செய்து பாடல்கள் வழங்கும் நேரடி நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.


09. தற்போது நீங்கள் பிரதானமாக தயாரித்து அல்லது தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் யாவை?

நான் தயாரிக்கும் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

"ஒரு துளி" (ஆவணப்படுத்தல் நிகழ்ச்சி), "சினிமா சினிமா" (சினிமா செய்திகளின் தொகுப்பு), "World 360" (பொது அறிவு சார் மற்றும் அறிவியல், வர்த்தகம் கலந்த வைரல் நிகழ்வுகளின் தொகுப்பு), "Weekend Chat" (பாடல்கள்  வழங்கும் நேரடி நிகழ்ச்சி), "சூப்பர் சமையல்" இது நான் தயாரித்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி போன்நனவாகும்.


10. தொலைக்காட்சித் துறையில் ஈடுபட விரும்புபவர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

தொலைக்காட்சித் துறைக்குள் நுழைய வேண்டும் என்றால் நிச்சயமாக நம்மிடம் திறமை எனும் சாவி வேண்டும். அதுதவிர்ந்து பல இடங்களில் அவமானங்களை சந்திக்கும் சமாளிக்கும் திராணி வேண்டும். எந்தவொரு சிகரத்திலும் அவமானம் எனும் சொல்லை தாண்டி வராமல் ஏறி அரியாசனமிட்டு அமர்ந்துவிட முடியாது. இது தொலைக்காட்சிக்கு மிக அதிகமாகவே பொருந்தும். அத்துடன் பெண்ணாக இருந்தால் தைரியமும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் துணிவும் இருத்தலே போதுமானது.


11. ஒரு பெண்ணாக இத்துறையில் தொடர்ந்தும் இருப்பது சவாலானதாகத் தோன்றவில்லையா? இத்துறையில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் எப்படியானது?

நிச்சயமாக சவால்தான். மேற்கூறியது போன்று வாழ்க்கையில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து விடாமல் அதனுடன் வாழ்க்கை நடத்துவது மிகப்பெரும் சவால் தான். இது நம் தொழிலுக்கும் கூட பொருந்தும். பெண் என்பதைத் தாண்டி நான் ஒரு முஸ்லீம் பெண்ணாக இருப்பதால் பல அவமானகளையும் பழிச்சொற்களையும் கீழ்த்தரமான வார்த்தைகளையும் வசைகளையும் தாண்டி இத்துறையில் ஆணிவேராய் இறுக்கி பிடித்து நிற்கின்றேன் என்றால் இது என் இமாலய சாதனை என்றே கூறுவேன். சவால்கள் ஒவ்வொரு ரூபத்தில் வரும். சதிகளாகவோ, ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களாகவோ, புதிய ஆண்களது முகவரியற்ற நற்புக்களாகவோ, ஒரு பெண்ணை பல ரூபத்தில் சவால்கள் எதிர்கொள்ளும். ஆனால் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றியது போல் மிகவும் விழிப்போடு இருந்தால் எந்த சவாலையும் அத்திவாரமே இல்லாமல் அழித்து விடலாம்.


12. ஒரு நிகழ்ச்சித் தொகுப்;பாளர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள்?

மேற்கூறியது போல் ஒரு நிகழ்ச்சித்தொகுப்பாளர் சுறுசுறுப்பாகவும் பொது அறிவுத்திறன் கொண்டவராகவும் இருப்பதோடு சொற்களை மிகவும் தெளிவாக உச்சரிக்கக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். உதாரணமாக ஒரு நிகழ்ச்சித்தொகுப்பாளர் அவர் பிரதேச மொழியில் நிகழ்ச்சிகளில் பேசுவதைத் தவிர்த்தல் நல்லது. அத்துடன் இன்றய தலைமுறையினர் மத்தியில் அவர்களை சென்றடையும் வண்ணம் எவ்வாறு கூற வந்த விடயத்தை கொண்டு போய் சேர்த்தல் என்பதை ஆழமாக அறிந்திருத்தல் நல்லது. மற்றும் ஒரு நிகழ்ச்சித்தொகுப்பாளர்  தன்னுடைய தோற்றத்தில் அழகில்லாமலோ, நிறக்குறைவாகவோ, வழுக்கை தலையுடனோ இருக்கலாம். ஆனால் அவரது மூளையில் விடயம் இருக்க வேண்டும். நான் இதை கூறக் காரணம், ஒரு சில தனியார் தொலைக்காட்சிகளில் முகத்தோற்றத்திற்கும், நிறத்திற்கும், அழகுக்குமே முக்கியத்துவம் கொடுக்கின்றனரே ஒழிய திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே தான் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது. ஒரு தொகுப்பாளருக்கு இருக்கக் கூடாத விடயங்களை சுருங்கக் கூறினால் வித்யா கர்வம், அவசரம், தடுமாற்றம், உச்சரிப்புப் பிழை, நேர்த்தியற்ற ஆடை அலங்காரம் இவையனைத்தும் இருந்தால் நிச்சயம் ஒரு நேர்த்தியான நிகழ்ச்சித்தொகுப்பாளராக ஆக முடியாது. எனவே மேற்கூறியவற்றை தவிர்த்தல் நல்லது.


13. தொலைக்காட்சித துறையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களை எப்படி உணர்கின்றீர்கள்?

உலகமயமாதலின் விளைவில் தொழில் நுட்பம், ஊடகம், கல்வி முறை என அனைத்தும் அசுர வேகத்தில் மாறிக்கொண்டே வருகின்றது. இவற்றில் தொலைக்காட்சித் துறையிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நிகழ்ச்சிகளின் தன்மை, மொழியின் வளர்ச்சி, வௌ;வேறுபட்ட சிந்தனைகள் தற்கால சமுதாயத்திற்கு ஏற்றாற்போல நிகழ்ச்சிகளை வழங்கும் தனித்தன்மை, காட்சிப்படுத்தல் ரீதியாக சுருங்கச் சொல்லும் குறுஞ்செய்திகளுடன் கூடிய குறும்படங்கள் என தொழிநுட்ப ரீதியிலும் காட்சி வடிவமைப்பிலும் செய்திப் பிரிவுகளிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.


14. UTV தொலைக்காட்சிக்கு அண்மைக் காலமாக காத்திரமான பங்களிப்பை நல்கிவரும் உங்களின் தற்போதைய பணிகள் என்ன?

நான் ஒரு தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கும் பட்சத்தில் என் நிகழ்ச்சிகளுக்குரிய அனைத்துப் பணிகளையும் நான் மட்டுமே செய்து முடிப்பது வழக்கம். இதுவரை எனக்கென்று நான் உதவித் தயாரிப்பாளரையோ அல்லது பிரதி எழுத்தாளரையோ வைத்து நான் வேலை செய்ததில்லை. காரணம் தனியாக ஒரு சிந்தனை நின்று பணிபுரிந்தால் மட்டுமே திறம்படவும் நேர்த்தியாகவும் ஒரு வேலையை செய்து முடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஆகையினால் நிகழ்ச்சி செம்மையாக்கம் (Editing) தவிர்ந்து ஆய்வு செய்தல், பிரதி எழுதுதல், தகவல் சேகரித்தல், முன்னோட்டம் பார்த்தல் என அத்தனை பணிகளையும் தினமும் நானே தனியாக செய்து வருகின்றேன்.


15. Confident Group Of Ceylon பேஸ்புக் பக்கத்தில் கூடுதலாக உங்களது எவ்வகையான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளது? அதுபற்றியும் பகிர்ந்துகொள்ளலாமே? அதிகமான நேயர்கள் இப்பக்கத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளார்களே. இதுபற்றி?

ஆம் இப்பக்கம் என்னுடைய முகநூல் பக்கம். இதுதவிர YouTube தளத்திலும் கணக்கு வைத்துள்ளேன். இன்றைய இளைஞர் சமுதாயத்தை சரியான பாதையில் வழிநடாத்திக் கொண்டு செல்ல வேண்டும் மற்;றும்; இனிவரும் தலைமுறை அதீத கல்வியறிவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் ஒரு சில சமூகப் பிரச்சினைகளை இப்பக்கத்தில் பேசி வருகின்றேன். இப்பக்கத்தை பலபேர் விரும்பக் காரணம் நான் குறிப்பிட்ட ஒரு வட்டார மொழிக்குள் நின்றுவிடாமல் இன்றைய தமிழ் மக்களுக்குப் போய் சேரக்கூடிய இலகு தமிழில் நான் உரையாடுவதன் காரணமாவே இலங்கையர்களைவிட இந்தியத் தமிழர்கள் அதிகம் இப்பக்கத்தை ஆக்கிரமித்துள்ளனர்.


16. ஊடகத் துறையில் மறக்க முடியாத அனுபவமாக நீங்கள் எதனைக் குறிப்பிடுவீர்கள்?

மறக்க முடியாத அனுபவங்கள் பல உள்ளன. அவற்றில் நல்லவைகளும் உள்ளன. தீயவைகளும் உள்ளன. பல இடங்களில் அவமானப்பட்டிருக்கின்றேன். நான் பேசும் தமிழை கொச்சைப்படுத்தக் கேட்டிருக்கின்றேன். நான் அதிகமாக பேசுகின்றேன் எனப் பலர் விமர்சனம் செய்ததும், விமர்சனம் செய்து வருவதும் மறக்க முடியாத அனுபவங்கள் தான். சிலவற்றைக் கடந்ததுதான் என் தனித்துவமான ஊடகப் பயணமாக இருக்கிறது.


17. கவிதைகளோடு உங்களுக்கு எவ்வகையான ஈடுபாடு உள்ளது?

கல்வி கற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் கவிதைகள் வாசிப்பது அதிகம். கவிதை எழுதுவதும் அதிகம். ஆனால் தொலைக்காட்சிக்குள் காலடி வைத்த பின்பு புத்தகங்கள்  வாசிப்பதைத் தாண்டி கவிதைகளில் பெருமளவு ஈடுபாடு காட்டுவதில்லை.


18. உங்கள் பலம் என்று எதனை நினைக்கின்றீர்கள்?

எனது பலம் என்று நான் எப்பொழுதும் கூறுவது என் மன தைரியமும் என் கோபமும் மட்டுமே. முன்கோபமும் பெண்ணுக்கென்ற திமிரும் சற்று இருப்பதனால் தான் இதுவரை ஊடகத்துறைக்குள் தாக்குப்பிடித்து நிற்கின்றேன்.


19. இலங்கை ஊடகங்களில் இந்தியப் படைப்புக்கள் அதிலும் குறிப்பாக இந்திய சினிமாப் பாடல்கள் செல்வாக்குச் செலுத்துகின்றதே. தற்காலத்தில் தொலைக்காட்சிகளில் ஈழத்து கலைஞர்களது பாடல்களுக்கு வாய்ப்புக் கொடுக்கும் நிகழ்ச்சிகளைக் காண முடியாதுள்ளது ஏன்?

அது இலங்கை கலைஞர்களின் பிழையுமல்ல. நம் ஈழத்து இளம் தலைமுறையினரின் பிழையும் அல்ல. ஏனெனில் காலா காலம் தொட்டு வீடுகளில் உள்நாட்டு நிகழ்ச்சிகள் பார்ப்பதைவிட வெளிநாட்டு பாடல்களையும் நம் தாயகம் கடந்த தொலைக்காட்சி நாடகங்களையும் பார்த்துப் பழகியதால் நம் நாட்டுப் படைப்புகள் கண்களுக்கு புலப்படாமல் போனது. முற்றத்து மல்லிகை மனக்காது என்பது உண்மைதான். ஆனால் தற்போதைய கால கட்டங்களில் ஈழத்து படைப்பாளர்களும் திறனான அழகான விடயங்களை படைத்துக்கொண்டு வருவது அதிகமாகி வருகின்றமை சற்று மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவே உள்ளது.


20. உங்களது நேயர்களை அல்லது தொலைக்காட்சி நேயர்களை எவ்வகையில் நோக்குகின்றீர்கள்?

என்னை நம்புபவர்கள். என்னை விமர்சிப்பவர்கள். என்மீது அளவில்லா கண்ணியம் கொண்டவர்கள் என்றே நான் எப்போதும் எனது நேயர்களை நினைக்கின்றேன்.


21. இணைய தொலைக்காட்சிகளின் வருகை பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

இணையத் தொலைக்காட்சிகளின் வருகை ஓரளவு நல்லது தான். தொழிநுட்ப யுகத்தின் வருகை வளர வளர தொழில் நுட்ப ஊடக முறைகளும் மாறிக்கொண்டே வருகின்றன. மூன்று அல்லது நான்கு தசாப்தங்களுக்கு முன்னால் தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் மட்டுமே மனிதர்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. ஆனால் இன்று தொலைக்காட்சியின் பரிணாம மாற்றம் வெறும் உள்ளங்கைக்குள் புதைந்து கிடக்கிறது. தொடர்பு சாலைகளின் பரிமாற்றம், ஊடக வழிப் பரிமாற்றம், காட்சி வழிப் பறிமாற்றம் என அனைத்தும் கையில் உள்ள ஸ்மார்ட் தொலைபேசி மூலமாகவே அடைந்து கொள்ள முடிகின்றது. தொலைக்காட்சியின் யுகம் தாண்டி இன்று இணைய வழி தொலைக்காட்சிகள் பிறந்திருப்பது அடுத்த தலைமுறையினரின் அபரிமித ஊடக வழிகாட்டிகளாக இருப்பதற்குத்தான். சுருக்கமாகச் சொன்னால் நல்ல விடயம்தான்.


22. இத்துறையில் இதுவரை நீங்கள் பெற்ற பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இத்துறையில் கால்பதித்து ஆறு வருடங்கள் தாண்டிவிட்டன. மக்களிடத்தில் அங்ககீகாரமும் ஓரளவு கிடைத்திருக்கின்றது. இன்னும் கற்க வேண்டியவை பல உள்ளன என நம்புகின்றேன். விருதுகள் பற்றிக் கூறினால் 2019 ஆம் ஆண்டுக்கான அரச தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த ஆவணப் படமாக எனது "ஒரு துளி" எனும் ஆவண நிகழ்ச்சி பரிந்துரை செய்யப்பட்டது. ஆயினும் விருது கிடைக்கவில்லை. பரிந்துரைக்கான சான்றிதழ் மாத்திரமே கிடைத்தது. மனதளவில் சிறுகாயங்கள் இருந்தாலும் விருதுகள் பெறவில்லை என்பது பற்றி நான் இதுவரை கவலையடைந்ததில்லை. பார்வையாளர்கள் மற்றும் நேயர்கள் எனது நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு நான் எங்காவது செல்லும் வேலை அதைப்பற்றி மனந்திறந்து பாராட்டுவார்கள். அப்பொழுது கிடைக்கும் அளப்பரிய மகிழ்ச்சி விருதுகளையும்விட மேலானது. அவ்வாறான தருணங்கள் வாழ்வில் நூற்றுக் கணக்குக்கும் மேல் நிகழ்ந்துள்ளன.


23. இறுதியாக உங்கள் தொலைக்காட்சி நேயர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

என்னுடைய  தொலைக்காட்சி நேயர்களுக்கு முதலில் நான் கூற விரும்புவது நன்றிகள் மட்டுமே. அவர்கள் இல்லையென்றால் எனது நிகழ்ச்சிகள் புஸ்வானம் ஆகியிருக்கும். நான் தயாரித்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டுவார்கள். என் குடும்பத்தைத் தாண்டி என் பார்வையாளர்களுக்கு மட்டுமே நான் கோடான கோடி நன்றிகள் கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன். எனவே அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களின் ஆதரவு என்றும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


 நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்