பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, March 16, 2016

24. திருமதி. செல்வி திருச்சந்திரன் அவர்களுடனான நேர்காணல்

திருமதி. செல்வி திருச்சந்திரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்




01. உங்கள் பிறந்த இடம், கல்லூரி வாழ்க்கை என்பன பற்றிக் கூறுங்கள்?

பிறந்த இடம் யாழ்;ப்பாணம் - மானிப்பாய். கல்லூரி வாழ்க்கையைப் பற்றிக் கூறுவதென்றால் 05 ஆம் வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழகப் பிரவேசம் வரை கொக்குவில் இந்துக் கல்லூரியில் பயின்றேன். நான் படித்த காலகட்டத்தில் நன்கு படித்த முற்போக்கு சிந்தை கொண்ட அதிபரும், அந்த அதிபரின் போதனைகளால் கவரப்பட்ட ஆசிரியர்களும் இருந்தபடியால் கல்லூரி வாழ்க்கை மிகவும் சந்தோசமானதாகவும் சுதந்திர மனப்பான்மையை வளர்க்கக்கூடியதாகவும் அமைந்திருந்தது.


02. உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூறுங்கள்?

எனது குடும்பத்தில் இரண்டு அண்ணன்மார்களுக்கும் இரண்டு தங்கையருக்கும் நடுவில் மூத்த பெண் குழந்தையாகப் பிறந்தேன். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்து தகப்பனின் பொறுப்பான, அன்பான அரவணைப்பில் வளர்ந்தேன். இடதுசாரி சிந்தனைக்குட்பட்ட எனது தந்தையினதும் சகோதரர்களுடையதும் முற்போக்குக்  கருத்தியல்கள் என்னை மிகவும் பாதித்தன. அதே கருத்தியலுடன் இணைந்து எனது பிற்காலத்து வாழ்க்கைச் செயற்பாடுகள் நடந்தேறின. அன்பும் பண்பும் இணைந்து வளர்க்கப்பட்டேன். அந்த வளர்ச்சியில் எனது தந்தையின் அறிவார்ந்த  வழிகாட்டல்கள் பெரும் பங்கு வகித்துள்ளமையை ஒரு பெரும் பேறாக நான் இன்று உணர்கிறேன்.


03. உங்கள் தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பட்டதாரிப் படிப்பை முடித்த பின்பு படிப்புக்கு ஏற்ற தொழில் கிடைக்காதபடியால் மத்திய வங்கியில் ஒரு சாதாரண உத்தியோகத்தராக எனது தொழில் வாழ்க்கை தொடங்கியது. அதன்பின் இந்தியன் ஏயார்லைன்ஸ் விமான சேவையிலும், ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸிலும் அடுத்தடுத்து உயர் பதவிகளில் பணியாற்றும் வாய்ப்புகள் அமைந்தன. எதிர்பாராதவிதமாக அவ்வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். அதற்கான காரணம் என்னவென்று இன்றுவரை எனக்குத் தெரியாதுளூ தெரிவிக்கப்படவுமில்லை.

இந்தத் தொழில் அனுபவங்களால் விரக்தி அடைந்த நான் வீட்டிலேயே சும்மா இருந்து நூல்கள் வாசிக்கலாம் என முடிவு செய்தேன். அப்பொழுது 'பெண்ணின் குரல்' என்ற சஞ்சிகை என் கண்ணில் பட்டது. ஆங்கிலத்தில் வெளிவந்த ஏழiஉந ழக றுழஅநn என்ற இதழில் வெளிவந்த கட்டுரைகள் அதில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. அந்த மொழிபெயர்ப்பில் பிழைகளைச் சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்த கலாநிதி குமாரி ஜயவர்தனவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். சமூகத்தில் பெண்ணின் இரண்டாம் பட்ச நிலையை  உணர்ந்து கொண்ட நான், அதன் விமோசனத்திற்கு என்ன செய்யலாம் என்று தீவிர யோசனையுடன் இருந்த பொழுதே பெண்ணின் குரலும், ஏழiஉந ழக  றுழஅநn உம் என் கைக்கு எட்டின. நான் கூறிய கருத்துப் பிழைகளை ஏற்றுக்கொண்ட குமாரி ஜயவர்தன என்னை மிகவும் சிலாகித்து பெண்ணின் குரல் ஆங்கில தமிழ் இதழ்களாகிய ஏழiஉந ழக றுழஅநnஇ பெண்ணின் குரல் ஆகிய இரு சஞ்சிகைகளின் ஆசிரியர் பதவிகளையும் ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். இத்துடன் தொடங்கியது எனது பெண்ணிலைவாதப் புரட்சி. வர்க்கமும் சாதியும் இணைந்த ஒரு கருதுகோளுடன் உள்ளார்ந்திருந்த எனது அறிவு நிலை பெண்ணிலை வாதத்தையும் அத்துடன் இணைத்துக்கொண்டு பயணிக்கத் தொடங்கியது.


04. உங்களது வளர்ச்சிக்கு அல்லது முன்னேற்றத்துக்குக் காரணமாக இருந்தவர்கள் பற்றிக் கூறுங்கள்?

வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக அனேகம் பேர் இருந்தாலும் இதன் முழுமுதற் காரணமாக எனது தந்தையையே குறிப்பிட வேண்டும்.

ஆழ்ந்த அறிவுத்தேடல், ஓயாத வாசிப்பு, சமத்துவம், சுயாதீனம் போன்ற கொள்கைகளைத் தன் வாழ்வில் கடைப்பிடித்து, எதையும் ஏன், எதற்காக, எப்படி என்பன போன்ற கேள்விகளுக்கு இடம் கொடுத்து எமது ஆளுமையை விருத்தியடையச் செய்ய வேண்டும் என்ற கருத்திலேயே தனது பிள்ளைகளை அவர் வளர்த்தெடுத்தார். எப்பொழுதும் எச்சந்தர்ப்பத்திலும் தான் சரி என்று ஏற்றுக்கொண்ட கொள்கைகளைக் கைவிடாது நேர்மைத் திறனுடன் வாழ்ந்த அவரின் வழிகாட்டல்,  பிற்காலத்தில் எனது வளர்ச்சிக்கும், நேர்மைக்கும், முன்னேற்றத்துக்கும் காரணமாக அமைந்தது. அடிப்படையான பல முற்போக்குக் கருத்தியல்களை அவரிடம் நான் கற்றுக்கொண்டேன். அடுத்ததாகக் கலாநிதி குமாரி ஜயவர்தனவை குறிப்பிடலாம். எனது பட்ட மேற்படிப்புக்குத் தூண்டியவர் இவரே ஆவார். அவரின் ஊக்கத்தினாலேயே முதுமாணிப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்தேன். பிற்பாடு எனது ஊக்கத்தினால் PhD பட்டம் பெற்றேன்.


05. தங்களது வேறுபட்ட பணிகள், சமூக சேவைகள் பற்றிக் குறிப்பிட்டுங்கள். எந்தக் காலகட்டத்திலிருந்து இவ்வகையான பணிகளைச் செய்து வருகின்றீர்கள்?

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமை ஏற்ற காலம் முதல் பல்வேறு பணிகளும் சமூக சேவைகளையும் செய்து வருகிறேன். பெண்களுக்கு அறிவூட்டல் மேற்கொள்வதே எனது முக்கிய குறிக்கோளாக இருந்தது. சாதி நிலையில், வர்க்க நிலையில் தாழ்ந்த பெண்கள், அகதிகள், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றோருக்குப் பயிற்சி அளித்தல், அவர்களை வலுவூட்டல் என எனது பணிகள் விரிவடைந்தன.

1983ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வகையான பொதுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.


06. பொதுப் பணியில் ஈடுபட்ட உங்கள் அனுபவத்தில் மனதை ஈர்த்த  சங்கதிகள் சிலவற்றைச் சொல்லுங்களேன்?

பொதுப் பணியில் ஈடுபட்ட எனக்கு மனதை ஈர்த்த சம்பவங்கள் பல இருந்தாலும் ஒன்றை மட்டும் கூறுகிறேன். 1983 ஆம் ஆண்டில் முற்பகுதியில் நானும் என்னுடன் சேர்ந்து வேலை செய்த குமாரி ஜயவர்தனவும் பாலியல் தொழிலாளர் சிலரைச் சந்திக்கச் சென்றோம். எப்படி அவர்களுக்கு உதவலாம் என்பதை ஆராய்வதே எமது குறிக்கோள். பத்துப் பன்னிரண்டு பேர் கொழும்பு நகரத்தின் ஓர் ஒதுக்குப் புறத்தில் ஒன்றாக, ஒரு குழுவாக இருந்தார்கள். அவர்கள் செய்யும் தொழிலைப்பற்றி எந்தவித வெறுப்புணர்ச்சியும் அவர்களுக்கு இல்லை. ஊதியத்துக்கு உடலால் வேறு விதத்தில் உழைக்கிறோம் என்ற மனப்பான்மையே அவர்களிடமிருந்தது. ஆனால், அங்கு மகிழ்ச்சி இல்லை. திருப்தி இல்லை. போட்டி பொறாமை உணர்ச்சிகளுக்கு அங்கு இடமில்லை. கூட்டுணர்ச்சியே அங்கு மேலோங்கி இருந்தது.

எல்லோரும் அங்கே சமம். உயர்வு தாழ்வு, சாதி பேதம் இருக்கவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் அங்கு இருந்தார்கள். ஆனால், யாரும் தேசியம் பேச முற்படவில்லை. நீ என்னவள்  இல்லை என்று யாரும் கூற முற்படவில்லை. Pயசவைல ழக  ளுவயவரள என்ற அரசியல் சொல்லாடல் அங்கு இரண்டு மொழிகளுக்கு இருந்தது. சிங்களத்திலும் தமிழிலும் பேசினார்கள். ஏன் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்விக்கு, ஷஷவறுமை, கணவனால் கைவிடப்பட்டமை, பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டமை, அதனால் கைக்குழந்தையுடன் சமூகப் பிரஷ்டம் செய்யப்பட்டமை, தாயினால் அரங்கேற்றப்பட்டமை|| என்பவற்றை முக்கிய காரணங்களாக முன்வைத்தார்கள். இந்தத் தொழிலைவிட்டு விடுவீர்களா என்று கேட்டோம். ஒரு தொழிலும் இருக்க இடமும் கிடைத்தால் விட்டுவிடத் தயாராய் இருப்பதாகச் சொன்னார்கள். இதன் அடுத்த கட்டமாக, அவர்களில் பத்துப்  பேரை எங்கள் நிறுவனத்துக்கு வரச் சொல்லி வைத்திய பரிசோதனை செய்து நோய் ஒன்றும் இல்லை என்று உறுதிப்படுத்தி, வீட்டு வேலைக்குப் பயிற்சி அளித்து கூட்ட துடைக்க, நிலம் Pழடiளா பண்ண, (கிரைண்டர் முதலான) சமையல் உபகரணங்களை எப்படிப் பாவிப்பது, துணி ஸ்திரி போடுதல் முதலான இன்னோரன்னவற்றைக் கற்றுக்கொடுத்தோம். மூன்று மாதப் பயிற்சியும் சுகாதார வசதிகளும், சத்துணவும் வழங்கப்பட்டதையடுத்து மறுபிறவி எடுத்தவர்களாக மாறிவிட்டார்கள்.

எங்களுடைய கருத்தியலுடன் ஒத்துப் போகக் கூடிய தோழிகளைத் தெரிவு செய்து, அவர்களின் வீடுகளுக்கு அப்பெண்களை வேலைக்கு அனுப்பி வைத்தோம். உணவு, உடை, தங்குமிடம், வங்கியில் மாதச் சம்பளம் என்று அவர்களது வாழ்க்கை மாற்றமடைந்துவிட்டது. ஆனாலும் இப்பணி கடல் நீரில் ஒரு துளி போன்றதே என்பது எனது ஆழ்ந்த மனக்கிலேசம். இப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


07. சமகால இலக்கியங்கள் மீதான தங்களது பார்வை எப்படி இருக்கிறது? 

பொதுவாக சமகால இலக்கியங்களில் தீவிரமான பார்வை எனக்கு இல்லை. சில காத்திரமான இலக்கியங்களை வாசித்து சிலருடன் விவாதிப்பேன். அவ்வளவே. சமூகவியல், மானுடவியல் என்ற கற்கை நெறிகளுக்குள் ஆழ்ந்து அவற்றை வாசிப்பதாலும், அரசியல் கட்டுரைகளை வாசிப்பதாலும் இலக்கிய ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து விட்டதோ என்று நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. ஆனாலும் இலக்கிய ஆர்வத்தை இயன்ற மட்டும் வளர்த்தெடுக்கவே முயல்கின்றேன்.

நிறுவன நிர்வாகம், எழுத்து, சமூகப் பணி என்று ஓய்வின்றி வேலையில் ஈடுபட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். எனது ஆசை ஓய்வு பெற்றபின் இலக்கியத்தில் மூழ்கலாமென்பதே. அலை ஓய்ந்த பின் சூரிய நமஸ்காரம் போல்தான் இது ஆகிக் கொண்டேயிருக்கிறது. பலருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் எனக்கு திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கிறது.


08. இலக்கியம், பெண்ணியம் சம்பந்தமான ஈடுபாட்டில் தனித்துவமான சிறப்பு உங்களுக்கு உண்டு. இவற்றில் உங்களுக்கே உரிய சிறப்பு என்ன என்பதைக் கூற முடியுமா? 

பெண்ணிலைவாதக் கருத்தியல்களை உள்ளடக்கிய இலக்கியங்களை ஆய்வு செய்வதும், பெண்களுக்கு எதிராக பழமைவாதக் கருத்துக்களை முன்வைக்கும் இலக்கியங்களுக்கு எதிர்வாதம் வைப்பதும் என்னுடைய சிறப்பு என நான் கருதுகின்றேன்.


09. பல்வேறுபட்ட இலக்கியத் துறைகளில் (கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து) தங்களுக்கு மிகவும் பிடித்த துறை எது? ஏன்?

எனக்கு மிகவும் பிடித்த துறைகளாக நாவல்களையும் சிறுகதைகளையும் கூறலாம். பொதுவாக பத்தி எழுத்து எம் நாட்டில் சிறப்பாக அமையாதபடியால் அவற்றை நான் தவிர்த்துக் கொள்வேன். கவிதை இலக்கியத்தைப் புரிந்து கொள்ள தனிப்பட்ட இலக்கியப் பயிற்சியும் ஆர்வமும் இருக்க வேண்டும். இவை இரண்டும் எனக்கு போதியளவில் இல்லாதபடியால் கவிதையில் எனது ஈடுபாடு குறைவாகவே இருக்கும். ஆனாலும் கவிதைகளை நான் முற்றாக விலக்கிவிடுவதில்லை. ஆழியாள், அவ்வை, குட்டிரேவதி, நுஃமான் போன்றோரின் கவிதைகளை விரும்பிப் படித்து ரசிப்பேன்.


10. இலங்கையில் பெண்களின் சார்பிலக்கியத்தில் முழுமையாக ஈடுபடும் உங்களுக்குப் பிடித்தவர் எனக் கருதப்படுபவர் யார்? ஏன்?

இலங்கையில் பெண்ணிலைவாதக் கருத்துக்களை உள்டக்கிய இலக்கியங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. தேவகௌரியின் 'கற்பு' என்ற சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. ஒளவை, ஆழியாள் போன்றோரின் கவிதைகளும் என்னைப் பெரிதும் ஈர்த்தன. பவானி ஆழ்வார்ப்பிள்ளையின் சிறுகதைகள் பெண்ணிலைவாத இலக்கியத்திற்கு நம்நாட்டில் வித்திட்டவை என்று நான் கருதுகின்றேன்.

இவற்றை நான் குறிப்பிடும் பொழுது சிலர் விடுபட்டிருக்கலாம். சிலரது இலக்கியங்கள் என் கண்ணில் படாமல் போயிருக்கலாம். ஆகவே இக் கேள்வியின் பதில் பூரணத்துவம் அடையவில்லை என்பதை நான் உணர்கிறேன்.


11. இலங்கையில் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுவரும் பெண் எழுத்தாளர்கள் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

இலங்கையில் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பெண் எழுத்தாளர்கள் இன்னும் பல படிகளைத் தாண்ட வேண்டும் என்பதே என் கருத்து.


12. தற்காலப் பெண் படைப்பாளிகள் எதிர்நோக்கும் சவால்கள் என்று எதனைக் கருதுகிறீர்கள்? 

பெண் படைப்பாளிகள் எதிர்நோக்கும் சவால்கள் எவை என்பது என்னைவிட பெண் படைப்பாளிகளுக்கே நன்றாகத் தெரியும். ஆதலால் அதனை அப்படைப்பாளிகளிடமே கேட்க வேண்டும். அதேவேளை, இலங்கையின் தற்காலப் போக்கு அவர்களுக்கு மிகப்பெரும் சவால்களை உண்டாக்கியிருக்கும் என நான் கருதவில்லை.


13. மொழி, கருத்து - இலக்கியத்தில் முக்கிய பங்கைப் பெறுவது எதுவென நீங்கள் கருதுகிறீர்கள்?

இலக்கியத்தில் முக்கிய பங்கைப் பெறுவது எது எனத் தர்க்க ரீதியாக நிர்ணயித்துக் கூற முடியாது. கருத்து எவ்வளவு முக்கியமோ அந்தக் கருத்தைக் கொண்டு செல்லவும், வாசிப்போரின் மனதில் அதைப் பதிய வைக்கவும் தேர்தெடுக்கும் மொழியும் எடுத்துச் செல்லும் நடையும் முக்கியமானவை. ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது. மொழிப் பிரயோகம், நடை, கதையின் கருத்தியலை அண்டிய கரு எல்லாம் ஒன்றிணைந்தால் அவ்விலக்கியம் சுவை பெறும். கருத்தின் ஆழம் வாசகர் மனங்களைச் சிந்திக்கத் தூண்டும்.


14. நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்கள் இருப்பின் அதுப்பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். நான் இதுவரையில் 14 நூல்களை ஆங்கிலத்திலும், 09 நூல்களை தமிழிலும் எழுதியுள்ளேன். சில ஆங்கில நூல்களை ஆசிரியராக இருந்து பதிப்பித்துமுள்ளேன்.


15. எதிர்காலத்தில் எவ்வகையான நூல்களை வெளியிட உத்தேசம் கொண்டுள்ளீர்கள்?

எதிர்கால நூல்களை அந்தந்தக் கால எல்லைகள் நிர்ணயிக்கும் என்பதே எனது கருத்து. ஆனாலும் தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதி, வர்க்க பேதங்கள் அவற்றினுடாக வெளிப்படும் பெண்களது நிலைப்பாடு என்ன என்பதை ஆய்வு செய்ய எண்ணியுள்ளேன்.


16. இலக்கியவாதிகளின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

இலக்கியவாதிகள் ஒரு நிலைப்பட்ட உடலை மட்டும் கொண்டுள்ளவர்கள் அல்ல. அவர்களும் உணர்ச்சிகள், ஆவேசங்கள், கோபதாபங்கள் என்ற பல வகைப்பட்ட மனநிலைகளை உடையவர்களே. அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் சில அவர்களுக்கு முக்கியமாகப்படலாம். அவர்களது வாழ்க்கையை நிர்ணயித்த அம்சங்கள் ஆழப்பதிந்து வெளிப்பட வடிகால் தேடுபவைகளாக இருப்பதும் சகஜமே.

பேனா எடுத்து எழுதும் பொழுது இவற்றின் பிரதிபலிப்பு கட்டாயமாக இலக்கியத்தில் வந்து விழவே செய்யும். எல்லாமே பிரதிபலிக்காமல் விட்டாலும் எழுதும் நேரத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய உணர்ச்சிகள் எழுத்தில் பிரவகிக்கும். இது தடுக்க முடியாத ஒரு பிரவாகம். இதை நாம் கூறும் பொழுது இலக்கியவாதிகள் எழுதும் எழுத்துக்கும் அவர்களது வாழ்க்கை நிலைக்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறதென்று இலக்கியவாதிகளை கொச்சைப்படுத்தும் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்தையும் கூறியே தீர வேண்டும்.


17. இலக்கியத்தினூடாக நல்ல கருத்துக்களை வெளிக்கொணர்ந்து சமூகத்தில் எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனக் கருதுகிறீர்கள்?

இலக்கியம் வாசகர்களை சிந்திக்கத் தூண்டுகிறது. வாசகர்களது எண்ணங்களையும் கருத்துக்களையும் பாதிப்பவையாக நல்ல இலக்கியங்கள் இயக்கம் கொள்கின்றன. அந்நிலையில் சமூகத்தில் நிலவும் அக்கிரமங்களையும் அநீதிகளையும் இலக்கியங்கள் பாடுபொருளாகக் கொள்ளும் பொழுது வாசகர்களை தன்னுணர்ச்சி நிலையில் மாற்றம் கொள்ள வைக்கிறது.

சமூகத்தில் அநீதியும் அக்கிரமமும் ஒரு அம்சமாக இருக்கையில் வாசகர்கள் அவற்றை பொய் என்று கருதமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இலக்கியம் அவற்றை அகற்ற முயற்சிக்கலாம், குறைகளை நிறைவு செய்யலாம், இயக்கம் கொள்ளச் செய்யலாம். இவை கட்டாயமாக நடைபெறும் என்று கூற முடியாவிட்டாலும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். நடக்கிறது என்றும் கருதலாம். பப்லோ பிகாசோ (Pயடிடழ Piஉயளளழ) கூறிய ஒரு கருத்தை இங்கு நான் இணைக்க விரும்புகிறேன். கலை என்பது பொய்மையானது. அப்பொய் உங்களுக்கு உண்மையை உணர்த்துகிறது. Art is a lie that makes us realize the truth என்பதின் மொழி பெயர்ப்பே இது.


18. இன்றைய எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

எழுத்தாளர்களுக்கு அறிவுரை கூறும் நிலையில் நான் இல்லை. எழுத்தாளர்களுக்கு அவர்களின் வாசகர்கள் விமர்சனங்கள் மூலம் முன்வைக்கும் கருத்துக்களே அறிவுரையாகும்.

19. இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

உலகில் நடக்கும் சம்பவங்களையும் போக்குகளையும் கண்டும் கேட்டும் அவதானிக்கும் போது எனக்கு தோன்றுவது ஒரு விரக்தி மனப்பான்மையே. கோட்பாடுகளை மேற்கொண்டு, புரிந்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாதென்பதை நான் இப்போது உணர்ந்து கொண்டேன். கோட்பாடுகள் விரிய வேண்டும், அகன்று நீள வேண்டும்.

சில மக்கள் குழுக்களின் வக்கிர மனப்பான்மைகளை நாம் எப்படி விளங்கிக் கொள்வது. சிறு பெண்பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறைகள், இந்து, இஸ்லாம், பௌத்தம் என்ற மதங்களின் பெயரில் நடக்கும் கதிகலங்க வைக்கும் வன்முறைகள், பெற்றோரை நடு வீதியில் விட்டுச் செல்லும் புத்திரச் செல்வங்கள் இப்படியாக தொடரும் வன்முறைகளுக்கு தீர்வுகள் உண்டா? இவற்றுக்கான காரணங்கள் யாது? கேள்விகளுடன் நிறுத்திக் கொள்கிறேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

23. திருமதி. லறீனா அப்துல் ஹக் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2015.11.22

திருமதி. லறீனா அப்துல் ஹக் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



01. உங்களைப் பற்றிய அறிமுகத்தையும் உங்களது இலக்கியப் பிரவேசத்தின் பின்புலம் பற்றியும் கூறுங்கள்?

என்னுடைய முழுப்பெயர் லறீனா அப்துல் ஹக். பிறப்பிடம் மாத்தளை. என்னுடைய தாயார் பௌசுல் ஹினாயா. மாத்தளை ஃபர்வீன் என்ற புனைப் பெயரில் பத்திரிகைகளில் 30க்கும் அதிகமான தொடர் கதைகளை எழுதியுள்ளார். 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியில் பங்குபற்றி எப்போதும் முதல் பரிசைத் தட்டிக்கொண்டு வருவார். நல்ல இனிய குரல்வளம் அவருக்கு. அவரைப் பின்பற்றி, என்னுடைய 09 வயதில் பிரபல அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் தயாரித்தளித்த  'பாட்டுக்குப் பாட்டு' போட்டியில் நானும் பங்குபற்றி இரண்டாம் பரிசு பெற்றமை ஓர் இனிய ஞாபகம்தான்.
அவ்வாறே, ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில் பரீட்சை தமிழ் வினாப்பத்திரத்தில் எழுதிய கதைதான் என்னுடைய முதல் கதையாகும். 12 வயதில் நான் எழுதிய ஷஷஓ! பஸ்ஸே!' என்ற கவிதை பிற்காலத்தில் வீரகேசரியில் பிரசுரமானது. இதுவே பத்திரிகையில் பிரசுரமான எனது முதலாவது படைப்பாகும். மேலும் தமிழ்மொழித்தினம், சிங்கள மற்றும் ஆங்கில மொழித்தினப் போட்டிகள், மீலாத் விழாப் போட்டிகள் மற்றும் கலை விழாக்கள் என் கலை மற்றும் எழுத்தாற்றல் வளரக் களம் அமைத்துத் தந்தன.

என்னுடைய தந்தை கலகெதர எம்.எம். அப்துல் ஹக் பயிற்சிபெற்ற ஆங்கில ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றினாலும், சிங்கள சினிமாத் துறையின் பிரபல இசையமைப்பாளராகவும் இருந்தவர். 'சுஜீவா||, 'சுனேத்ரா||, 'சூகிரி கெல்ல||, 'கீதா||, 'ஒபய் மமய்' என்பன அவர் இசையமைத்த திரைப்படங்கள். ஜோதிபாலவின் விருதுபெற்ற பிரபல பாடலான 'சந்தன எல்லென் நாலா' பாடல் என்னுடைய தந்தையின் இசையமைப்பில் உருவானதுதான். என்னுடைய தாய்வழிப் பாட்டனார் ஓர் இந்தியர். திருநெல்வேலிக்காரர். சித்த வைத்தியராய் இருந்த அவர், கர்நாடக சங்கீதத்தில் குறிப்பிடத்தக்க பயிற்சி உடையவராய் இருந்தவர். அவருடைய கம்பீரக் குரலில், 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, செல்வக் களஞ்சியமே!|| என்ற பாரதி பாடலைக் கேட்டு அனுபவிப்பது ஒரு சுகானுபவம்தான். இந்தப் பின்னணியும் நான் கல்வி கற்ற மாத்தளை ஆமீனா மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் அதிபரின் ஊக்குவிப்புமே என்னை எழுத்து மற்றும் கலைத் துறைகளில் ஈடுபடுத்தின எனலாம்.


02. இதுவரை வெளியிட்ட புத்தகங்கள் / ஆக்கங்கள் பற்றிக் கூறுங்கள்?

01. எருமை மாடும் துளசிச்செடியும் (சிறுகதைத் தொகுதி) - 2003
02. வீசுக புயலே! (கவிதைத் தொகுதி) - 2003
03. தமிழ்மொழியும் இலக்கியமும்: சில சிந்தனைகள் (ஆய்வுக் கட்டுரைத் தொகுதி) 2003
04. ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும் (நாவல்) 2004
05. செ. கணேசலிங்கனின் அண்மைக்கால நாவல்களில் பெண் பாத்திரங்கள்: ஒரு பெண்ணிலை நோக்கு (ஆய்வுநூல்) - 2004
06. மௌனத்தின் ஓசைகள் - மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி 2008
07. வார்த்தைகளின் வலி தெரியாமல்... - சமூகவியல் கட்டுரைகள் 2012
08. 'பொருள் வெளி|| ஆய்வுக் கட்டுரைத் தொகுதி 2012
09. நீட்சிபெறும் சொற்கள் - கட்டுரைத் தொகுதி 2015
10. சுயமி - மெல்லிசைப் பாடல்கள் இறுவட்டு 2015

இவை தவிர, 'நம் அயலவர்கள்|| எனும் சிறுகதைத் தொகுதிக்காக 05 சிங்களச் சிறுகதைகளைத் தமிழிலும், 'அசல் வெசி அப்பி|| எனும் சிங்களச் சிறுகதைத் தொகுதிக்காக ரஞ்சகுமாரின் 'கோளறு பதிகம்|| சிறுகதையை (தம்மிக்க ஜயசிங்ஹ என்பாருடன் இணைந்து) சிங்கள மொழியிலும் மொழியாக்கம் செய்துள்ளேன். மேலும், ஆங்கிலத்திலிருந்து தமிழில் உரைகள், கட்டுரைகளை மொழிமாற்றம் செய்துள்ளேன்.  நான் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள ஹிஸ்ஸல்லே தம்மரத்தினத் தேரரின்  'சிங்கள மொழியில் தமிழ்மொழியின் செல்வாக்கு||, மார்ட்டின் விக்ரமசிங்கவின் 'கம்பெரலிய', மஞ்சுள வெடிவர்தனவின் ஷஷபத்தலங்குண்டுவ' எனும் சிங்கள நூல்களின் செவ்வையாக்கத்தில் ஈடுபட்டு வருகிறேன். அது முடிந்ததும் விரைவில் நூல்களைச் வெளியிடும் உத்தேசம் உண்டு. http://nilapenn.com/ என்பது என்னுடைய இணையத்தளமாகும்.

03. உங்கள் படைப்புகளுக்குக் கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

ஆய்வு
© இலங்கைத் தமிழ் இலக்கியப் பேரவையின் விருது
நூல்: பொருள்வெளி

சிறுகதை
©   வீரகேசரி பவளவிழா சிறுகதைப் போட்டி (2005) 03 ஆம் பரிசு
சிறுகதை: வேரில் வைத்த தீ

© அமரர் வரப்பிரகாஷ் நினைவுதின சிறுகதைப் போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்) (2000) 02ஆம் பரிசு
சிறுகதை: எருமை மாடும் துளசிச் செடியும்

© அவுஸ்திரேலிய கலை இலக்கிய சங்கத்தின் பத்தாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டையொட்டி நடாத்தப்பட்ட சர்வதேச சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு (2010)
சிறுகதை: எனக்கான 'வெளி||

கவிதை
© தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் :
01 ஆம் பரிசு (2000)

© அமரர் வரப்பிரகாஷ் நினைவுதின கவிதைப் போட்டி (பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்) (2000) 02 ஆம் பரிசு

பாடல்
© தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் :
பாடல் - 01 ஆம் பரிசு (2000)

© தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் :
03 ஆம் பரிசு (1993, 1995)

© தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் :
02 ஆம் பரிசு (1992)

சிறுவர் இலக்கியம்
© தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் :
02 ஆம் பரிசு (2003)

© தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பரிசளிப்புப் போட்டிகள் :
02 ஆம் பரிசு (1994)

நாடகம்
© பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க நாடகப் போட்டி : நினைவில் நின்ற நடிகைக்கான சுழற்கேடய விருது (1998)
நாடகம்: இதுவரை இவர்கள்...

கட்டுரை
© ஷஷநமக்கென்றொரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்' என்ற தலைப்பில் 'பாலைவனத்தூது' வலைதளம் நடத்திய சர்வதேச கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.

பாடல் இயற்றுதல் (வரிகள், மெட்டு, இசையமைப்பு)
© பேராதனைப் பல்கலைக்கழக சங்கீத நாட்டிய சங்க வருடாந்தப் போட்டிகள் : 03 ஆம் பரிசு (1999)

© வவுனியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் 2003 ஆம் ஆண்டு ஒழுங்குசெய்யப்பட்ட சர்வதேச மகளிர் தினவிழாவில்,
'பல்துறை ஆற்றல் கொண்ட முஸ்லிம் பெண்'ணுக்கான விருது கிடைக்கப்பெற்றது.

03. உங்களது பாடசாலைக் காலம், தொழில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?

நான் மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியில் பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரை கல்வி கற்றேன். என்னைப் பாலூட்டி வளர்த்தவர் என் அன்னை எனில், என்னைச் சீராட்டி வளர்த்த கலைத்தாய் மாத்தளை ஆமினா. எனது கல்விக்கு மட்டுமின்றி, எனக்குள் மறைந்திருந்த திறமைகளை இனங்கண்டு வளர்த்துவிட்டவர்கள் ஆமினாவின் ஆசிரியர்களும் அதிபருமே என்பதை நன்றியோடு நினைவுகூர்கின்றேன். அதனால்தான் நான் இயற்றி, மெட்டமைத்து, இசையமைத்துப் பாடிய மெல்லிசைப்பாடல் இறுவட்டினை ஷஷமாஃஆமினா மகளிர் கல்லூரியின் நினைவுகளுக்கு'ச் சமர்ப்பித்துள்ளேன். வறுமையில் உழன்ற காலத்தே என் ஆசிரியர்களில் அனேகமானவர்கள் என்னைக் கனிவோடு நடத்தி, பெரும் பக்கபலமாக இருந்தார்கள். திருமதி வஜீஹா மக்கீன், திருமதி ஆயிஷா இஸ்ஸதீன் ஆகிய ஆசிரியைகள் விஞ்ஞான, கணித பாடங்களில் நாம் அனைவருமே சித்தியடைய வேண்டும் என்ற தணியாத ஆவலினால் பாடசாலை விட்டு முற்றிலும் இலவசமாக மேலதிக வகுப்புகளை வைப்பார்கள். ஏனைய ஆசிரியர்களும் நம் கல்வி முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறையோடு உழைத்தார்கள். ஆக, அந்த அர்ப்பணிப்பு உணர்வினை நாம் அவர்களிடமிருந்தே பெற்றோம்.

மேலும்,  திறமைக்கு முதலிடம் அளித்து மாணவத் தலைவியராய் பணிகளை நம்மிடம் ஒப்படைத்ததன் அடியாய் கடமையுணர்வை, பொறுப்புணர்வை வளர்த்துக்கொண்டோம். கூடைப்பந்தாட்டம், ஓட்டப்பந்தயம், உயரம் பாய்தல், தூரம் பாய்தல் முதலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பையும் அக்கல்லூரி நமக்கு அளித்ததன் விளைவாய் தோல்விகளைக் கண்டு துவளாத மனோதிடமும், தன்னம்பிக்கை உணர்வும், தொடர்ந்து போராடும் தன்முனைப்பும் நம்மிடம் ஊன்றி வளர்ந்தன எனலாம். அந்தவகையில் ஆமினாவில் இருந்து உருவாகிப் கல்வி, மருத்துவம், பொறியியல் முதலான பல்வேறு துறைகளில் ஒளிவீசும் பல மாணவிகளை நாம் கண்டுகொள்ள முடியும்.  

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றபின் தமிழ்த் துறையில் இரண்டு வருடங்களும், மும்மொழித்துறைகளும் இணைந்து நெறிப்படுத்திய மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சுமார் நான்கு வருடங்களும் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். தற்போது சிங்களத் துறையில் வருகைநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றேன்.

04. உங்களது இலக்கியப் படைப்பில் சிறப்பெனக் கருதுவது எதை?

அப்படி ஒரு படைப்பை இனித்தான் தரவேண்டும் என நினைக்கிறேன். இதுவரை எழுதிய எதுவுமே எனக்குப் பூரண திருப்தியைத் தரவே இல்லை என்பதே உண்மை. அந்த விஷயத்தில் என் உள்ளம் நிரம்பாத வெற்றுக் குவளையாகவே இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ், இனியேனும்... என்ற நம்பிக்கையோடு முன்னகர்ந்தபடி இருக்கின்றேன்.

05. சமகாலத்து ஈழத்து இலக்கியம் பற்றிய உங்களது கணிப்பீடு என்ன?

அவ்வாறு கணிப்பிடும் அளவுக்கெல்லாம் நான் பெரிய ஆள் இல்லை.  ஆனால், இலக்கியத் துறையில் ஒப்பீட்டளவில் முன்னரிலும் பார்க்க பெண்களின் பங்குபற்றுதல் அதிகரித்து வருவது மன மகிழ்ச்சி தருகின்றது.

06. மரபு ரீதியாக கவர்ந்த இலக்கியம், புதுமையாக கவர்ந்த இலக்கியம் விளக்க முடியுமா?

சங்க இலக்கியங்கள் தொட்டு நவீன இலக்கியம் வரை பலதரப்பட்ட இலக்கியங்களையும் அவ்வவற்றுக்குரிய தனித்துவங்களை ஏற்று மதிப்பதால் தனிப்பட்டு ஒன்றிரண்டைச் சொல்வது அரிது எனக் கருதுகிறேன். என்றாலும், மிக அண்மையில் வாசித்த நூல்களுள் ரவிக்குமாரின் மழைமரம், தேன்மொழியின் நெற்குஞ்சம், தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி, யோ. கர்ணனின் தேவதைகளின் தீட்டுத்துணி, ஏ.பி.எம் இத்ரீஸின் புன்னகைக்கும் நபிகள், த. உருத்திராவின் ஆண்கோணி, பேராசிரியர் மௌனகுருவின் சார்வாகன் என்பன என்னை மிகவுமே கவர்ந்தன. இன்னும் நிறைய நூல்களை வாங்கி வைத்துள்ளேன். வாசிப்பதோடு அவை குறித்து எழுதவும் வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உண்டு. இன்ஷா அல்லாஹ், பார்ப்போம்.

07. எழுத்துலக வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நிறைய உள்ளன. என்றாலும் ஒருசிலவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன். மித்திரன் பத்திரிகையில் ஒரே காலகட்டத்தில் என்னுடைய தொடர்கதையும் என் தாயார் மாத்தளை ஃபர்வீனின் தொடர்கதையும் வெளிவந்தமை ஓர் இனிய அனுபவம். அவ்வாறே, என்னுடைய முதலாவது நூல் வெளியீட்டு விழா மறக்க முடியாத மற்றோர் அனுபவம். எனது முதல் சிறுகதைத் தொகுதியான ஷஷஎருமை மாடும் துளசிச் செடியும்', கவிதைத் தொகுதி 'வீசுக புயலே!' இரண்டையும் ஒருமிக்க நான் கல்வி கற்ற மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியிலேயே வெளியிட்டதும், பெருந்திரளானோர் அதில் கலந்துகொண்டு சிறப்பித்தமையும் என்றுமே மறக்க முடியாத இனிய நினைவு. விழாவை மிக விமரிசையாக ஒழுங்குசெய்த மாத்தளை இஸ்லாமிய இலக்கியப் பேரவைச் செயலாளர் பீர் முஹம்மது அவர்கள் என் நன்றிக்குரியவர். அடுத்து,

கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களின் கையெழுத்துப் பிரதியான 'இஸ்லாமியச் சரித்திரக் கதைகள்' எனும் கதைகூறும் கவிதை நூலினைப் பதிப்புக்கும் பொறுப்பினை ஏற்றமை என் வாழ்வின் மகத்தான ஒரு தருணம் எனக்கருதுகிறேன். மழையில் கரைந்த அவற்றின் சில பகுதிகளை மீட்டெடுப்பதில் எதிர்கொண்ட சவால்கள் மிகவும் சுவாரஷ்யமானவை. அவை குறித்து அந்நூலில் எழுதியுள்ளேன். இன்ஷா அல்லாஹ் அது வெகு விரைவில் வெளிவரும்.

08. சிறுகதைகளினூடாக சமூகத்துக்குள் ஏற்படுத்தக்கூடிய பல மாற்றங்களில் நீங்கள் எதை இலக்காகக் கொள்கிறீர்கள்?

மிகக் குறிப்பிட்டுச் சொல்வதானால், பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய புரிதலையும் விழிப்புணர்வையும் பரவலாக்கும் முனைப்பே எனக்குள் உள்ளது. அவ்வாறு பெரிதும் பெண்களின் பிரச்சினைகளைச் சுட்டி எழுதும்போது  'மேற்கின் மூளைச் சலவைக்கு உட்பட்ட பெண்ணியவாதி' என்று முத்திரை குத்தி நம்மை ஓரம்கட்டும் முயற்சிகள் ஆங்காங்கே மேலெழுந்தபோதிலும், தளர்ந்து ஒதுங்கிவிடும் உத்தேசம் இல்லை. புரிந்துணர்வுள்ள பல சகோதர சகோதரிகள் எப்போதும் எனக்குப் பக்கபலமாக இருப்பது மிகவும் நிறைவைத் தருகின்றது என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

09. இலங்கையில் வெளிவரும் கவிதைப் படைப்புகள் பற்றி என்ன சொல்வீர்கள்?

அவை மிகவும் காத்திரமாகவும் கூர்மையான சமூக விமர்சனங்களோடும் வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாகப் பெண்கள் இத்துறையில் பெருமளவு பங்கேற்கிறார்கள். அது மிகுந்த மனநிறைவுக்குரிய ஒன்று. ஒருவிஷயத்தை இங்கு சிறப்பாகக் குறிப்பிட விழைகின்றேன். பெண்கள் தமது கவிதைகளை வெறுமனே புலம்பலாக, ஒப்பாரியாக முன்வைக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை சமூகத்தளத்தில் சிலர் தொடர்ந்து  முன்வைக்கிறார்கள். தமிழிலக்கியம் உள்ளிட்டு உலகின் பிறமொழிக் கவிதை வரலாறு பற்றிய அடிப்படை அறிவற்ற சிலரின் இக்குற்றச்சாட்டு மிக இலகுவாகப் புறந்தள்ளக்கூடியதுதான் என்றாலும், அக்கருத்துக்களை சரியானது எனக்கருதும் பிறருக்காக ஒரு விளக்கத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அதாவது, காலங்காலமாக கவிதை என்ற வடிவம் மனித மனதின் நுண்ணுணர்வுகளைச் சொல்லும் மிகக் காத்திரமானதும் வாலாயமானதுமான ஓர் ஊடகமாகவே இயங்கிவருகிறது.  காலந்தோறும் மொழிகளில் எல்லாம் இன்பத்தைப் போலவே துன்பத்தைப் பாடவும் கவிதையே களமாய் இருந்துவருகிறது. சங்க காலம் முதல் இதனை நாம் காணலாம். அவ்வாறு துயர்தோய்ந்த உணர்வு வெளிப்பாட்டை வெற்றுப் புலம்பலாகவும் ஒப்பாரியாகவும் கொள்வதானால், அகத்திணைசார் முல்லைநில, பாலைநில மற்றும் நெய்தல் நிலப்பாடல்கள் சொல்லும் இருத்தல் மற்றும் இரங்கற் பாடல்களையும், பிரிதற் பாடல்களையும்கூட நாம் புறந்தள்ள வேண்டியதிருக்கும். அப்படி யாரும் புறந்தள்ளவில்லை. மாறாக, அன்றைய மக்களின் வாழ்வியலையும் மனவுணர்வுகளையும் படம்பிடித்துக்காட்டும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவை இன்றும் போற்றப்படுகின்றன.

அவ்வாறே, மிகப் பெரும்பாலான பெண்களின் கவிதைகளில் துயரும் வலியுமே அதிகம் மேலெழுகின்றன என்றுகொண்டால், அவற்றை அடியாகக் கொண்டு அவர்களினதும் சமூகத்தினதும் நிலைமை ஆராயப்படல் வேண்டும். குடும்பத்திலும் சமூகத்திலும் வறுமை, வன்முறை மற்றும் போர் முதலான பல்வேறு காரணங்களின் விளைவாகப் பெரிதும் பாதிக்கப்படும் பெண்களின் துக்கமும் இழப்பும் இரங்கலும் கேலிக்குரியவை அல்ல. அவை சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டுமுகத் தோற்றமே என்ற புரிதல் பரவலாக வேண்டும். ஏன் பெண்களில் மிகப்பெரும்பாலானோர் அவ்விதம் எழுதுகிறார்கள், அவர்களின் மன நெருக்கடிகளைக் கட்டமைக்கும் காரணிகள் எவை என்று சமூகவியல் நோக்கோடு ஆராயப்படுவதன் அடியாகவே அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கி நாம் நகரமுடியும் என்பதே நிதர்சனம். மாறாக, அக்குரல்களை நையாண்டி செய்து, அவற்றை எழ முடியாமல் இருட்டடிப்புச் செய்வதும், அக்குரல்களை மானசீக நெருக்கடிகளைப் பிரயோகித்து முடக்கிப் போட முயற்சிப்பதுமான அணுகுமுறைகளின் பின்னால் உள்ள குரூர 'அரசியல்' கண்டிக்கத்தக்கது.  

11. உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் யார்?

நிறையப் பேர் இருப்பதால் ஒருவரின் பெயரைக் குறிப்பிடுவதற்கு விரும்பவில்லை.

12. புத்தகம், இணையத்தளங்கள், பேஸ்புக் என்பன இலக்கியத்தை எவ்விதம் வளர்க்கின்றன?

இன்று இலக்கியம் பரவலான தளத்தைச் சென்றடைவதற்கு மேற்கண்ட எல்லா வடிவங்களுமே பெரிதும் துணைநிற்கின்றன என்றால் மிகையில்லை. அதேவேளை, இணையப் பாவனையின் விளைவாகப் படைப்பாக்கங்கள் பெருகி உள்ளமை கவனிக்கத்தக்கது. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் வருகையால், தரமற்ற படைப்புகள் முதற் தடவையிலேயே எந்தத் திருத்தமோ மேற்பார்வையோ இன்றி நேரடியாகவே பிரசுரமாவதால் தரமற்ற படைப்புகள் அதிகரித்துவருவதான குற்றச்சாட்டுகளும் எழாமல் இல்லை. அதேவேளை, பெண்களுக்கான படைப்பு வெளி இவற்றினூடே அதிகரித்திருப்பது மிக முக்கியமாகக் கவனங்கொள்ள வேண்டிய ஒன்று என்றே நினைக்கிறேன்.

புத்தகம் ஒன்றை வெளியிட ஆகும் செலவையும் சிரமங்களையும் அனுபவித்தவர்களுக்கு அதில் உள்ள சவால்கள் நன்கு தெரியும். ஆக, எழுத்தாற்றல் இருந்தாலும்கூட எல்லாப் பெண்களுக்கும் (ஆண்களுக்கும்தான்) தமது படைப்புகளை நூலுருவில் கொண்டுவரும் சாத்தியப்பாடு வாய்த்துவிடுவதில்லை. பெருங் கஷ்டப்பட்டு ஒன்றோ இரண்டோ நூல்களை வெளியிட்டாலும், விற்பனைசெய்து செய்த செலவை மீட்டெடுப்பதே குதிரைக் கொம்பாய் மாறிவிடும்போது ஒருகட்டத்தில் பின்வாங்கிவிடவும் நேர்கிறது. ஆனால், இணையவெளி அதற்கான மாற்றீடாய் அமைந்துள்ளது. தாம் நினைப்பதையும் எழுதுவதையும் சுதந்திரமாய் வெளிப்படுத்தும் பரந்த 'வெளி'யினை இணையம் வழங்கி உள்ளது.


முகநூலும் வலைப்பூக்களும் இணையத் தளங்களும் மிக இலகுவான வெளியீட்டுத் தளமாக மாறியுள்ளமை அனேக பெண்களுக்கான ஷஷஎழுத்துவெளி'யினை சாத்தியப்படுத்தி உள்ளது எனலாம். அதனை அவர்கள் முற்றுமுழுதாகக் காத்திரமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களா, இல்லையா என்பது அவரவரைப் பொறுத்த விடயம். அதேவேளை, பெரும் எழுத்தாளர்கள், முன்னோடிகளுடனும் சமமாகப் பழக, உரையாட, கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினையும் சமூக வலைதளங்கள் சாத்தியமாக்கி உள்ளமை ஆரோக்கியமான ஒருநிலைதான் என்பேன்.

13. தமிழ் இலக்கியத்தில் நீங்கள் அதிகம் ஆர்வம் காட்டும் துறை எது?

மொழிபெயர்ப்பும் ஆய்வும்

14. வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

எழுத்துத்துறையில் நானுமே இன்னும் வளர்ந்துவரும் நிலையிலேயே உள்ளேன். என்றாலும்  எனக்கும், வயதில் என்னிலும் இளையவர்களுக்கும்  கூறிக்கொள்ள விழைவது, நிறைய வாசிப்பும் தேடலும் இருந்தால்தான்  காலத்தை வென்று நிற்கும் நல்ல பல படைப்புகளை உருவாக்க முடியும். கூடியவரையில் எழுத்து மற்றும் வசனப்பிழைகள் இன்றி எழுதும் பயிற்சியை அதிகரித்துக்கொள்ளுதல் நன்று.

15. நம் நாட்டில் வெளிவரும் மொழிபெயர்ப்புகள் பற்றி என்ன கூறவிழைகிறீர்கள்?

சிங்கள - தமிழ், தமிழ் - சிங்கள மொழிபெயர்ப்புக்களைப் பொறுத்தவரையில் அவை இன்னுமின்னும் அதிகரிக்கப்படவும் செம்மைப்படுத்தப்படவும் பரவலாக்கப்படவும் வேண்டும். இதுவரையும் வந்துள்ள இலக்கிய மொழிபெயர்ப்புகளில் அனேகமானவை போர் மற்றும் போருக்குப் பின்னான நிலைமைகளை வெளிக்கொணரும் வகையிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. போரின் அவலங்கள் குறித்துச் சிங்கள மக்களும் அறிய வேண்டும் என்ற முனைப்பு தமிழ் எழுத்தாளர்களிடமும், தமிழ் எழுத்தாளர்களின் துயரங்களை நாமும் விளங்கித்தான் உள்ளோம் என்ற உணர்வுத் தோழமையை வெளிப்படுத்தும் உந்துதல் சிங்கள எழுத்தாளரிடையேயும் இருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதில் ஐயமில்லை.

ஆனால், அதுமட்டுமா இச்சமூகங்களுக்கு இடையிலான அடிப்படைப் பிரச்சினை என்ற கேள்வி இங்கு முக்கியமானது. அந்தவகையில், நம் நாட்டின் எல்லாச் சமூகங்களும் தமது அன்றாட வாழ்வில் அனுபவித்துவரும் துயரங்கள், ஊழல்கள், அடக்குமுறைகள், சுரண்டல்கள் முதலானவற்றையும் பரஸ்பரம் மொழிபெயர்ப்புகள் வழியே ஊடுகடத்துவதன் மூலம், சாதாரணப் பொதுமக்களின் பிரச்சினைகளை, இன்னொரு வகையில் சொல்வதானால் வர்க்க ரீதியான பிரச்சினைகளின் பொதுமைத்தன்மையை பரஸ்பரம் உணரவும் உணர்த்தவும் கூடியதாக இருக்கும். இதனடியாக, எல்லாப் பேதங்களையும் தாண்டி  மக்கள் வர்க்கரீதியாக ஒன்றிணைந்து  அவற்றை எதிர்கொண்டு வெல்லவும், அதிகார வர்க்கத்தின் அநீதிகளுக்கு எதிராகக் கரம்கோத்துச் செயற்படவும்கூடிய உந்துதலைப் பெறவும்கூடியதாக இருக்கும்,  சமூகக்குழுமங்களுக்கு இடையே வன்மத்தைத்தூண்டித் துண்டாடித் தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முனையும் ஆதிக்கவர்க்கத்தின் தந்திரங்களைப் பற்றிய விழிப்புணர்வையும் பெற முடியும். ஆகவே, அவ்வாறு மக்களனைவரும் சகோதரரே, எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் பல பொதுவானவையே என்பதை உணர்த்தும் படைப்புகளை நோக்கியே மொழிபெயர்ப்புக்கான கவனம் குவிமையம் கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயத் தேவை ஆகும். அவ்வாறே, அச்சுக்குப் போகுமுன் மொழிபெயர்ப்புகளின் தரத்தினை உறுதிசெய்யத்தக்க அமைப்பு ரீதியான பொறிமுறையொன்றும் கட்டமைக்கப்படல் வேண்டும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

22. திருமதி சுகிலா ஞானராசா அவர்களுடனான நேர்காணல்

திருமதி சுகிலா ஞானராசா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

01. உங்கள் குடும்பப் பின்னணி, கல்லூரி வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?

என் அப்பா துரைராசா, அம்மா ஞானேஸ்வரி நாங்கள் மூன்று பெண் பிள்ளைகள் (அக்கா, நான், தங்கை) எல்லோரும் ஒரே பாடசாலையில் படித்தோம். ஒரே மாதிரி உடை, சப்பாத்து போட்டு மூவரும் அப்பா, அம்மாவுடன் வெளியில் கூட்டிச் செல்லும் அழகும் சந்தோசமும் சொல்லில் வடிக்க முடியாது. அக்கா, தங்கை முன்பள்ளி ஆசிரியையாக யாழ்ப்பாணத்தில் பயிற்சி பெற்று அங்கு கடமையாற்றினார்கள். தற்போது அக்கா அமரர். தங்கை திருமண பந்தத்தில் இணைந்து வெளிநாடு சென்றுவிட்டார். நானும் உயர்தரம் முடித்துவிட்டு வெளிநாடு செல்ல இருந்தபோது நாட்டின் சூழ்நிலை காரணமாக தொண்டராசிரியராக 1985.03.09 இல் கலைமகள் வித்தியாலயத்தில் நுழைந்தேன். அதிபராக திரு. சிவப்பிரகாசம் ஐயா (அமரர்) முதன் முதல் எவ்வாறு வகுப்பில் நுழைவது, கற்பிப்பது, வகுப்பறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்றெல்லாம் என்னை வழிப்படுத்தினார். அன்றே ஆசிரியத் தொழிலில் எனக்கு பிடிப்பு ஏற்பட்டது. அவரையும் நன்றியுடன் நினைத்து அவர் காட்டிய வழியில் அவரது குடும்பத்தாருக்கு நன்றி கூறிக்கொள்கின்றேன்.

1988 இல் பரீட்சை மூலம் நாடாளவிய ரீதியில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. நானும் அதில் உள்வாங்கப்பட்டேன். கலைமகள் வித்தியாலயத்தில் சந்தோசமான பணி மனதுக்கு  நிறைவைத் தந்தது. 1990 - 1991 காலப்பகுதியில் ஆசிரிய பயிற்சிக்கு சென்றபோது இனி இல்லையென்ற சந்தோசம். வீட்டு நினைவு அடிக்கடி எட்டிப் பார்க்கும். திடீரென கூறாமல் வீட்டுக்கு வந்து விடுவோம். காலச்சூழல் பிழைத்தபோது திடீரென கலாசாலை மூடப்பட்டது. நாம் திக்குமுக்காடியே போனோம். ஆனால் ஒரு தலைவரின் கீழ் அவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒன்றிணைந்து பிரியாமல் சந்தோசமாக ஒத்துப்போவோம். முகம் கோணுவது, புறம் கூறுவது ஒன்றும் கிடையாது. அந்தக் காலம் என் அப்பா என்னை அடிக்கடி வந்து பார்ப்பார். அம்மாவின் கடிதம் கிழமைக்கு 03 க்கு குறையாமல் ஒழுக்கம், படிப்பு பற்றியே புத்தி கூறி வரும்.

மீண்டும் கலைமகள் வித்தியாலயம். திரு. என் இராஜநாதன் அதிபர். அவரிடம் ஆசிரியத் தொழில் பற்றி நிறையவே கற்றேன். எல்லாவற்றுக்கும் விளக்கம் தருவார். நிர்வாகத்திற்குள் நிறைய விடயங்களை சொல்லி வழிப்படுத்தி பொறுப்புகளைத் தருவார். அவரிடம் கற்ற விடயங்களை அனுபவத்தில் கண்டு கொண்டேன். அவரையும் அன்புடன், நன்றியுடன் நோக்குகின்றேன். தொழில் தேடல், கற்றல், கற்பித்தல் எல்லாம் என் கணவர் அதிபராக இருந்தமையினால் கற்றுக்கொண்டேன். பொறுமையே இல்லாத நான் பொறுமையை அவரிடம் இருந்தே கற்றுக்கொண்டேன். அவரும் நிறையவே வாசிப்பார். புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்குவார். புத்தகங்கள் எழுதுவார். இதனால் என் வாசிப்பு தேடல் நின்று போகாமல் தொடர்வதற்கு எனக்கு முழு உதவியும் ஒத்தாசையும் புரிந்தவர் என் கணவர்தான்.

தொடர்ந்து என்னை கற்க வைத்து, பட்டம் பெற வைத்ததும் அவருடைய வழிகாட்டல்தான். இன்னும் படிக்கவேண்டும் என்று வழிப் படுத்துவதும் அவர்தான். சில நேரங்களில் பாடசாலை, வீட்டு, வெளி என பல வேலைகள் இருக்கும்போதும், பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போதும் படிக்க முடியாது என்றுகூறி மறுத்துவிடுவேன். அந்த நேரங்களில் என் கணவர் தாயாக, தந்தையாக, சேவகனாக இருந்து என்னைக் கவனிப்பார். இன்று  வரைக்கும் எல்லாமே அவர் வழிப்படுத்தல்தான். இந்த இடத்தில் நான் உண்மையாகவே நன்றி உணர்வுடன் அவரை நினைத்துப் பார்க்கிறேன்.

என் தாய், தந்தை தேவையான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி, என் பிள்ளைகளையும் கவனித்து நான் முன்னேற வழி விட்டுத் தந்தவர்கள். இன்றுவரை அவர்களிடம் உதவிகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறேன். என் தந்தை விடுமுறை எடுக்க விடமாட்டார். அவருக்கு ஏதாவது சுகயீனம் என்றால் நான் தான் அழைத்துப் போக வேண்டும். அதனால் தனது சுகயீனத்தை வெளியில் காட்டமாட்டார். இங்கு ஒரு முக்கிய விடயம் என்னவெனில் அம்மாவின் முன்பெயரும் (ஞானேஸ்வரி) அப்பாவின் பின் பெயரும் (துரைராசா) சேர்ந்ததே என் கணவர் பெயர் ஞானராசா ஆக அமைந்திருக்கிறது. மாதா, பிதா சேர்ந்துதான் என் கணவர். இறைவன் தந்த கொடை. என் தாய், தந்தையையும் நன்றியோடு நோக்கி இறையாசியை வேண்டி நிற்கின்றேன்.

தந்தையின் தொழில் காரணமாக பல இடங்கள் சுற்றியுள்ளோம். அந்த வகையிலே மட்டக்களப்பிலே சந்திவெளி அ.த.க. பாடசாலை வீட்டிற்கு அருகில் இருந்தது. தற்காலத்து முன் பள்ளி போல் அங்கு பதிவில்லாது கல்வி ஆரம்பித்தது. அதன் பின் ஓட்டமாவடி மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த நான் பலவாறு சுற்றி திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் என் உயர்தர பரீட்சையில் சித்தியுடன் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தேன்.

சண்முகா இந்து கல்லூரியில் கடமையாற்றிய அதிபர் செல்வி. விஸ்வலிங்கம் அம்மையார் (அமரர்) தமிழ் சார்ந்த விடயங்களை பெரியார் வழிகாட்டல்கள் போன்றவற்றை தேடிக் கற்க எம்மை வழிப்படுத்தினார். பாடசாலை நூலகத்தில் புத்தகம் இல்லை என்றேன். வேறு எங்கு நூலகம் இருக்கின்றது என்று கூறமாட்டேன்.. உன் அப்பாவிடம் கேட்டு கூறியதை தொகுத்து எடு என்று கூறினார். இந்த பழக்கம் காலப்போக்கில் நூலகத்தில் எல்லாவிதமான புத்தகங்களையும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது. இன்று வரையும் வாசிக்காது அல்லது எழுதாது தூங்கியது கிடையாது.  இன்று இந்த அளவுக்கு பதப்படுத்தி நெறிப்படுத்திய அம்மையாரை நன்றியுடன் நினைத்து அவரது ஆத்ம சாந்திக்காக வேண்டி நிற்கின்றேன்.

சிந்தாமணி ஆசிரியை எங்களுக்கு இந்து நாகரிகம் படிப்பித்தார். ஒழுக்கம், நடை, உடை, நேர்த்தி போன்ற விடயங்களை தெளிவாக நேரடியாக எமக்குக் கூறுவார். கல்லூரி வாழ்க்கையில் நண்பியாக இணைந்து பயணித்தவர், தொடர்ந்து கொண்டும் இருப்பவர் நாராயணசாமி சாரதாதேவி தான். கள்ளம் கபடம் இல்லாத அவரது போக்கு என்னை கவர்ந்தது. அந்தக் குடும்ப உறுப்பினரையும் நேசிக்கிறேன்.

02. பல வருடங்களாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் தொழில் அனுபவம் பற்றி?

ஆம்! தரம் ஒன்றில்  பல மாணவர்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாது. அவர்களுக்கு மா, பலாப் பழம் ஒவ்வொரு துண்டைக் கொடுத்து மடியில் வைத்து சொல்லிக்கொடுத்து எழுதப் பழக்கியதை இன்னும் மறக்க முடியவில்லை. எங்கிருந்தாலும் என்னை நினைப்பதையும், என் சுக துக்கத்தில் பங்கு கொள்வதையும், விசேட தினங்களில் வாழ்த்துத் தெரிவிப்பதையும் பழக்கமாகவும் வழக்கமாக வைத்துள்ள அவர்களில் பலர்  ஆசிரியர்களாக, வைத்தியர்களாக நன்றியோடு இருக்கிறார்கள்.

தற்போதைய பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எந்த எதிர்பார்ப்பும், விழப்புணர்வும் ஒரு துளியேணும் இல்லை. எவ்வளவு கூறினாலும் அவர்களுக்கு உணர்வே வர மறுக்கிறது. அவர்களது வீட்டுச் சூழலும், சமூகமும் தான் இதற்குக் காரணம் என நினைக்கிறேன். சந்தோசங்களை சுமந்த நான் இப்போதுள்ள மாணவர்களை நினைத்து வேதனையுடன் இருக்கிறேன். எப்படியாவது என்னால் திருத்த முடியும் என்று நம்பிக்கை விதையை விதைத்துள்ளேன்.

03. உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?

ஆம்! அப்பா, அம்மா நன்றாக நிறையவே வாசிப்பார்கள். இன்று வரை வாசிப்பு பழக்கம் குறையவே இல்லை. கல்வி கற்கும் காலத்தில் கட்டுரைகளை அம்மா எழுதித் தருவார். பலமுறை வாசித்த பின் அதனை மீண்டும் வாங்கிக்கொண்டு வாசித்ததை யோசித்து எழுத வைப்பார். கதைகளை வாசித்தால் விமர்சிப்போம். அப்படி இருந்தால் நல்லது இப்படி இருந்தால் நல்லது என்று அப்பா சொல்லுவார்.


04. சிறுவர் இலக்கியத் துறைக்குள் நுழைவதற்காக முதற் காரணி எது?

எனது ஆசிரியப் பணி, பாட்டுக்களை புதுமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அவா. மற்றது குறிப்பிட்டதொரு விடயம் பற்றி எழுதித் தரும்படி கணவரிடம் கேட்டால் நீங்கள் எழுதுங்கள் வேண்டுமென்றால் திருத்தித் தருகிறேன் என்பார். அவர் எழுத்தாளராக, கவிஞராக இருப்பதால் எந்நேரமும் எதையாவது எழுதுவார். எழுத அமர்ந்து விட்டால் கதைக்கமாட்டார். அவர் எழுதும் நேரம் பார்த்து நானும் எழுதுவேன். பின் இருவரும் வாசித்துக் காட்ட மகள் ஸர்வினாவும், மகன் ஜனகனும் தீர்ப்பு வழங்குவார்கள். நிறைய எழுத எழுதத்தான் சொற்கள் வந்து குவியும் என கணவர் வழிப்படுத்துவார். மகளும் எழுதுவாள். மகன் நல்ல கருப்பொருள் எடுத்துத் தருவான். நான் எழுதுவதற்கு வீட்டுச் சூழலே காரணியாக அமைந்தது.

05. சிறுவர் இலக்கியத் துறையில் நீங்கள் வெளியிட்ட நூல் பற்றி குறிப்பிடுங்கள்?

இதுவரை சின்னச் சிட்டுக்குருவி என்ற தலைப்பில் அமைந்த நூல், கல்வி அமைச்சின் இலங்கை தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் 2010 ஆம் ஆண்டு சான்றிதழுக்கு உரியதாக தெரிவு செய்யப்பட்டு பாடசாலை நூலக புத்தகமாக அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த நூலுக்கான வெளியீட்டு விழாவினை 2012 ஆம் ஆண்டில் செய்தேன். பொருளாதார வசதியின்மையும் வேலைப்பளுவும் தொடர்ச்சியாக நூல்களை வெளியிட இடந்தரவில்லை. ஆனால் இன்னும் எழுதிக்கொண்டே இருக்கிறேன். சின்னச் சிட்டுக்குருவி பற்றிய இரசனைக் குறிப்பை பூங்காவனம் சஞ்சிகை துணை ஆசிரியை செல்வி எச்.எப். ரிஸ்னா தினகரன் பத்திரிகையில் சிறப்பாக எழுதியிருந்தார். பின்னர் அவரால்; தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்ட திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை என்ற நூலில் 181 - 184 வரையான பக்கங்களில் இதனையும் பதிவு செய்திருந்தார். எழுத்தாளர்களை மனம் திறந்து பாராட்டி, எழுதி உற்சாகப்படுத்தும் ரிஸ்னாவினதும், ரிம்ஸாவினதும் முயற்சி போற்றத்தக்கது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்னை இலக்கிய உலகிற்கு பூங்காவனம் சஞ்சிகை மூலம் அறிமுகப்படுத்திய பெருமை மேற்கூறிய இருவரையுமே சாரும் என்பதில் மனநிறைவு பெறுகிறேன்.

06. உங்கள் நூல் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தவர்கள் பற்றிக் கூறுங்கள்?

கேட்டவுடனே ஆம் என்று கூறி அஸ்ரா பிறின்டஸ் உரிமையாளர் திரு. எஸ். சிவபாலன் உதவி செய்தார். அந்த உதவி கிடைக்காது போயிருந்தால் நான் நூல் வெளியீடே செய்திருக்கமாட்டேன். அவர்களை ஒருபோதும் நான் மறக்க முடியாது நன்றியுடன் இருக்கிறேன். நீண்ட ஆயுளில் சுகதேகியாக வாழ வாழ்த்தி இறையாசி வேண்டி நிற்கின்றேன்.

07. நூல் வெளியீட்டு முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?

திருகோணமலை அஸ்ரா பதிப்பகம் உரிமையாளர் திரு. எஸ் சிவபாலன் அவர்களின் எழுத்தாளர் ஊக்குவிப்புத் திட்ட அனுசரணையால் ஓரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்பது உண்மை. ஆயினும் முற்று முழுதாக வெற்றிபெற முடியவில்லை. அநேகமான எழுத்தாளர்களுக்கு உள்ள இன்னலும் இடையூறும் எனக்கும் உண்டு.

08. தற்போது சிறுவர் இலக்கியத் துறைகளில் ஈடுபட்டு வருபவர்கள் பற்றிய தங்களது கணிப்பு எவ்வாறு உள்ளது?

சிறுவர் இலக்கியம் என்ற பெயரில் சிறுவர்களுக்கு பொருத்தமில்லாத பலவற்றையும் சிறுவர்களால் புரிந்து கொள்ள முடியாதவற்றையுமே பலர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். கற்பனையில் அற்புதம் காணும் இவர்கள்; உண்மையில் விழித்துக்கொள்ளாமல் உறங்கி விடுகிறார்கள். இன்றும் பேய்க் கதைகளையும் தேவலோகக் கதைகளையும் எழுதி பழமையை விட்டு வெளிவர முடியாதவர்களாக இருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. காலாகாலம் எழுதிவரும் விலங்குகளோடும் பறவைகளோடும் உரையாடுவதை விட்டுவிட்டு மனிதர்களோடு உறவாட வேண்டும், உரையாட வேண்டும். சிறுவர் இலக்கியத் துறையில் புதுமையும் புரட்சியும் இடம் பெற வழி ஏற்படுத்த வேண்டுமென விரும்புகின்றேன்.

09. சிறுவர் இலக்கியம் தவிர்ந்த வேறு துறைகளில் ஈடுபடும் எண்ணம் உண்டா?

ஆம்! கவிதை, கட்டுரை, திறனாய்வு போன்றவற்றில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது.

10. இனி வெளிவரும் உங்கள் படைப்புக்கள் எப்படி அமைய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் இளைஞர், முதியோர் என சமூகத்தின் பல தரப்பினருக்கும் பொருந்தக்கூடிய படைப்புக்களாக இருக்க வேண்டுமென ஆக்க முயற்சிகளை முன்னெடுக்க நினைத்துள்ளேன். உதாரணமாக கவிதை, கட்டுரை, உரையாடல், கதை முதலியன எழுத எண்ணியுள்ளேன். அதற்கான காலம் கனிந்தால் என் எண்ணம் ஈடேறும்.

11. உங்கள் ஆசிரியப் பணி அனுபவத்தில் இன்றைய மாணவர்களின் இலக்கியப் போக்கு, எழுத்துத் துறை நாட்டம் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

இன்றைய மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ளது. தமிழில் பிழையின்றி எழுத முடியாத மாணவர், கைப்பேசியினூடாக குறுஞ் செய்தியில் தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்யும் திறமையை வளர்த்துள்ளனர். திரையில் படங்களுடன் வரும் சொற்களை மட்டுமே இரசிக்கின்றனர். வாசிப்பதை கேட்டல் மூலம் கிரகித்துக் கொள்கின்றனர். இது எழுத்துத் துறைக்கு சவாலாகிறது. இந்நிலை மாற்றப்பட்டு வாசிப்பு முயற்சியில் பலர் ஈடுபட வேண்டும். இதற்கு வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் தமது பங்களிப்பை சிறந்த முறையில் நல்க வேண்டுமென வினயமுடன் கேட்டு நிற்கின்றேன்.

12. உங்களைக் கவர்ந்த பெண் எழுத்தாளர்கள் யாவர்?

திருமதி மனோன் மணி சண்முகதாஸ், திருமதி. சித்திரலேகா மௌனகுரு, வெலிகம  ரிம்ஸா முஹம்மத், வசந்தி தயாபரன் போன்ற இவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இன்றும் இலக்கிய முயற்சிகளில் முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் இலங்கையர், இலங்கை எழுத்தாளர்களை நேசிப்போம்.

13. தற்கால ஆசிரியர்களிடையே இலக்கிய ஆர்வம் எந்த அளவில் உள்ளது?

இளம் ஆசிரியர்கள் இலக்கியத்திலும், விளையாட்டிலும் ஆர்வமுடன் உள்ளனர். அதனை வளத்தெடுக்க அவர்களே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நேரம் இல்லை என்பது பொய். நாங்கள் தான் நேரத்தை ஒதுக்க வேண்டும். தேடலை மேம்படுத்த வேண்டும். பொருளாதார நிலை கடினமாக இருக்கும். அதற்காக ஆர்வத்தினை கைவிடக்கூடாது. திறமைக்கு முன்னுரிமை இல்லாது போகலாம். திறமையில்லாதது முன்னுக்கு வரலாம். சற்று கவலை, மனச்சோர்வு வரத்தான் செய்யும். அதனை மறந்து பயணித்தால் என்றோ ஒரு நாள் வெல்லுவோம், உயர்வோம் என்பதில் ஒரு துளியேனும் எனக்கு ஐயமில்லை. இதையே எல்லோரும் சிந்தித்தால்  வெற்றி நிச்சயம்.

14. இந்த நேர்காணல் மூலம் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

ஒன்றை பல தடவை வாசியுங்கள், நல்ல கருத்துக்களை சிந்தியுங்கள், நல்ல விடயங்களை மனதில் பதியுங்கள். சரி பிழைகளை நீங்களே நீதிபதியாக இருந்து தீர்ப்பினை எடுங்கள். மனசாட்சிக்கு விரோதமில்லாது வாழப் பழகுங்கள். ஏனெனில் மனிதனாகப் பிறந்துவிட்டோம். நாம்தான் நமது வாழ்க்கையை சோலையாக்க வேண்டும். கவலை வரும், நோய்கள் வரும். இவற்றிலிருந்து விடுபட நிறைய வாசியுங்கள்.  நிறைய எழுதுங்கள். தீர்ப்பு உங்கள் மனமே பேசட்டும். இறைவனை நினைத்து என்னால் முடியும் என்ற நம்பிக்கை விதையை விதையுங்கள்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்