பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் 13 க்கான ஆக்கங்களைக் கோரல்

பூங்காவனம் சஞ்சிகையின் இதழ் 13 க்கான ஆக்கங்களைக் கோரல்

தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Poongavanam Literary Circle முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இச்சஞ்சிகையின் 13 ஆவது இதழில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன் ஆக்கங்களை அனுப்ப வேண்டும். இச் சஞ்சிகைக்கான கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். 

குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும்.

இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது ஆண்டுச்சந்தா 600 ரூபாவை செலுத்தி சந்தாவை பதிவு செய்து கொள்ளவும்.

இவை எமது Account Number Details ஆகும்.

Commercial Bank,
Mount Lavinia Branch,
M.F. Rimza,
Account Number :- 8930020287.

என்ற இலக்கத்திற்கு காசு, காசோலைகளை வைப்பிலிட்டு அவற்றின் பற்றுச் சீட்டுக்களையும், அல்லது காசுக் கட்டளைகளாயின் (M.F. Rimza) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.

ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-

“Poongavanam”
21 E, Sri Dharmapala Road,
Mount Lavinia.
Mobile:- 077 5009 222

E-mail:- poongavanam100.com
Website:- www.poongavanam100.blogspot.com

12. திருமதி. சுலைமா சமி அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2013.11.10

திருமதி. சுலைமா சமி அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்கு கூறுங்கள்?

நான் களுத்துரை மாவட்டத்தின் தர்காநகர் மீரிப்பன்னையை பிறப்பிடமாகவும், மாவனல்லை கிரிங்கதெனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டுள்ளேன். துந்துவையைச் சேர்ந்த காலம் சென்ற அப்துல் சமி, காலம் சென்ற தர்காநகர் உம்மு தமீமா ஆகியோரின் மகளாக பிறந்த எனக்கு ஐந்து உடன் பிறப்புக்கள். முஹம்மது இஸ்ஹாக், முஹம்மது அன்வர், முஹம்மது மஃரூப், நூருல் ஐன் (ஆசிரியை) சித்தி நிலோபா ஆகியோரே அவர்களாவார்கள். ஆரம்ப வகுப்பு முதல் உயர்தரம் வரை தர்காநகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் (தற்போது தேசிய கல்லூரி) கற்றேன். பின்னர் அதே பாடசாலையில் சில வருடங்கள் ஆசிரியராகவும் பணி புரிந்துள்ளேன்.



இலக்கிய வாழ்வில் உங்களின் ஆரம்ப காலம் எவ்வாறு இருந்தது?

1977 ஆம் ஆண்டு எனது பதினேழாவது வயதில் தினகரன் பத்திரிகையூடாக எனது எழுத்துப் பயணம் ஆரம்பமானது. அதே காலகட்டத்தில் ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய சஞ்சிகைகளிலும் என் ஆக்கங்கள் வெளிவந்தன. அன்று தொடக்கம் இன்று வரை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

1984 தொடக்கம் 1996 வரையிலான பத்தாண்டு காலப்பகுதியில்  இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வந்த நெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கான பிரதி தயாரிப்பாளராக இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதி வந்துள்ளேன். இந்நிகழ்ச்சி மூலம் எழுத வாசிக்கத் தெரியாதவர்களும் எனது அபிமான நேயர்களாக இருந்தமை என்னை மிகவும் மகிழ்ச்சிப் படுத்திய விடயமாகும்.


இலங்கையின் பெண் எழுத்தளர்களின் வளர்ச்சி, இலக்கியப் போக்கு பற்றி நீங்கள் யாது கூறுவீர்கள்?

இலங்கையின் பெண் எழுத்தாளர்களின் வரவும், வளர்ச்சியும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நாவல் துறையிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.


இலக்கியப் பணி சார்ந்த உங்களது கொள்கை என்ன?

எனது இலக்கியப்பணி இஸ்லாமிய வரையரைகளுக்கு உட்பட்டு அதன் வரம்புகளை மீறாது சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய செய்திகளை, விழிப்புணர்வை எனது எழுத்துக்களினூடாக தெரிவிப்பதாகும்.



இலக்கியப் பணியினூடாக எதை சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

எனது இலக்கியப் பணிகளினூடாக எதைச் சாதிக்க விரும்புகிறேன் என்பதைவிட எதைச் சாதித்துள்ளேன் என்பது மிகவும் பொருந்தும். ஏனெனில் எனது எழுத்தினூடாக பல சந்தர்ப்பங்களில் பல சாதனைகளை அடையக் கண்டுள்ளேன். எனது பல கதைகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அறிவேன். இன்னும் எனது எழுத்தினூடாக சமூகத்தில் விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என விரும்புகின்றேன். அதிகமாக நாவல்கள் எழுத வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.


நாவல், சிறுகதை துறைகளில் சிறந்த பங்களிப்புக்களைச் செய்து வருகின்றீர்கள். அவற்றிற்காக நீங்கள் பெற்ற பரிசுகள், விருதுகளைப் பட்டியற்படுத்திக் கூறுங்கள்?

எழுத்து வன்மைக்காக மாவட்ட, மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் சுமார் எழுபத்தைந்து தடவைகளுக்கு மேல் பரிசுகளும் தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளேன். 1997 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்தளை மாவட்ட மத்திய குழு தேசிய ரீதியில் தமிழ், முஸ்லிம் படைப்பிலக்கிய வாதிகளுக்கிடையில் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்று அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்  அவர்களினால் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டேன். இதைத்தவிர 2006  ஆம் ஆண்டு அரச சாகித்திய சிறுகதைப் போட்டியில் உண்டியல் என்ற எனது சிறுகதை தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 2006 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு ஆக்கம்; எனும் கருத்திட்டத்தில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், கவிதைப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டேன்.

 மேலும் 2007 ஆம் ஆண்டிற்கான சப்ரகமுவ மாகாண சாகித்திய கலை நிர்மாணப் போட்டியில் எனது சிறுகதைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி இரண்டாம் இடத்தையும், 2008 இல் இதே போட்டியில் எனது சிறுகதைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. 2011 ஆம் ஆண்டிற்கான இதே போட்டியில் மற்றும் சிறுகதைகள் அடங்கிய பிரதி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. 2012 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மாகாண அரச சாகித்திய சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தையும், கவிதை, பாடல் இயற்றல், சிறுவர் கதை ஆகிய போட்டிகளில் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டேன்.

இதைத் தவிர 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் நர்கிஸ் சஞ்சிகையும், மல்லாரிப் பதிப்பகமும் இணைந்து நடத்திய சர்வதேச இஸ்லாமிய நாவல் போட்டியில் எனது ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கு சிறப்புப் பரிசு கிடைத்தது. அந்தப் போட்டியில் கலந்து கொண்ட சகோதரி ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்களின் இது ஒரு ராட்சஷியின் கதை என்ற நாவலுக்கும் பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. இதே அமைப்புக்கள் 2009 ஆம் ஆண்டு சர்வதேசிய ரீதியில் நடத்திய சிறுகதை, கவிதை போட்டிகளிலும் எனது படைப்புக்களுக்குப் பரிசு கிடைத்தது. மேலும் 2009 ஆண்டு வெளிவந்த படைப்பிலக்கியங்களுக்கான அரச சாகித்திய தெரிவில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்ட மூன்று நாவல்களில் ஒன்றான ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.

அதே போல் புதிய சிறகுகள் என்ற அமைப்பின் நாவல் தெரிவிலும் விருதுக்காக இதே நாவல் சிபாரிசு செய்யப்பட்டது. இன்னும் 2011 ஆம் ஆண்டு இறுதியில் பாணந்துறையில் இயங்கும் ஜனசங்கதய என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பு நடாத்திய தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசையும், அதே ஆண்டு மலையக தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய தேசிய ரீதியிலான சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளேன். 2011 ஆம் ஆண்டு அல்ஹஸனாத் இஸ்லாமிய சஞ்சிகை நடத்திய நாடளாவிய சிறுகதைப் போட்டியிலும் எனக்கு பரிசு கிடைத்துள்ளது.

இவை தவிர களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணி, பம்பலப்பிட்டி இஸ்லாமிய செயலகம், தேசிய இளைஞர் சேவை மன்றம், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம், கல்வி அமைச்சு, அரசாங்க கலாச்சார திணைக்களம் போன்ற பல்வேறு அமைப்புக்கள் நடத்திய இலக்கியப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளேன். 2002 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையும், கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியமும் இணைந்து நடத்திய குறிஞ்சித் தென்னவன் நினைவு இலக்கிய விழாவில் அன்றைய மத்திய மாகாண கல்வி அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டேன். 2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மகாநாட்டில் இஸ்லாமிய இலக்கிய பங்களிப்புக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். அகில இன நல்லுறவு ஒன்றியம் நடத்திய 2008 ஆம் ஆண்டிற்கான பாராட்டு விழாவில் சாமஸ்ரீ கலாஜோதி பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்.


இப்படி பரிசுகளும், பாராட்டுக்களும் கிடைத்த நேரங்களில் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தன?

உண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட தேசிய, சர்வதேச போட்டிகளில் எனது படைப்புக்களுக்கு பரிசு கிடைத்தபோது என் உணர்வுகளை வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை. இந்தப் பரிசுகளும், பாராட்டுக்களும் எனது எழுத்துக்களுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரம் என்றே நான் கருதுகின்றேன்.


இதுவரை நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

வைகறைப் பூக்கள் (1987), மனச்சுமைகள் (1988), திசை மாறிய தீர்மானங்கள் (2003) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், ஊற்றை மறந்த நதிகள் (2009) என்ற சமூக நாவலையும் வெளியிட்டுள்ளேன். இந்த அத்தனை வெளியீடுகளும் எனக்கு வெற்றியையே தந்தன. திசை மாறிய தீர்மானங்கள் என்ற சிறுகதைத் தொகுதி மத்திய மாகாண கல்வி அமைச்சினால் சிறந்த நூலுக்காக விருதையும் பொற்கிழியையும் பெற்றுத்தந்ததோடு மேல் மாகாண கல்வி அமைச்சினால் பாடசாலை நூலகங்களுக்கு வழங்கவென முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், இன்றைய பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அஸ்லம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நூறு புத்தகங்களும், மிலேனியம் கல்வி ஸ்தாபன தவைலர் எஸ்.எச் மௌலானா அவர்களினால் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களும் கொள்வனவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


இன்றைய புதிய எழுத்தாளர்களின் இலக்கியப் போக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதிகமான எழுத்தாளர்கள் காதல் என்ற கருப் பொருளையே பெரும்பாலும் கையாள்கிறார்கள். சமூகத்தில் எம்மைச் சுற்றி எழுதுவதற்கான நிகழ்வுகள் நிறையவே இருந்தும் காதலை மட்டும் சுற்றிச் சுற்றி வருவது அவ்வளவு ஆரோக்கிமானதல்ல.


உங்கள் கணவர் ஏ.சீ.எம். இக்பால் மௌலவி அவர்கள் தங்களின் இலக்கியப் பணிக்கு எவ்வகையில் உதவி செய்கிறார் என்பதை குறிப்பிடுவீர்களா?

திருமணத்தின் பின் ஒரு பெண் எழுத்துத் துறையில் நீடித்து நிற்பதென்பது கேள்விக்குரிய விடயம்தான். பல பெண் எழுத்தாளர்கள் திருமண வாழ்வில் நுழைந்த பின் எழுதுவதையே நிறுத்திவிடுவதுண்டு. ஆனால் என் நிலை இதற்கு மாறாக அமைந்துவிட்டது. என்னை மென்மேலும் எழுதத் தூண்டுவதும், உற்சாகப்படுத்துவதும், என் வெற்றிக்கு துணை நின்று உழைப்பதும் என் கணவர்தான். எனது எழுத்து முயற்சிகளில் அவரது பங்களிப்புப் பற்றி கூறியாக வேண்டும். எனக்காகவே எக்மி பதிப்பகம் எனும் பதிப்பகத்தை ஆரம்பித்து அதன் மூலம் பல நூல்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.


உங்கள் மகளான இன்ஷிரா இக்பால் அவர்கள் இலக்கியத் துறையில் ஈடுபாடு காட்டி வருவது பற்றி?

எனது மகள் இன்ஷிரா இக்பால் சிறு வயதிலிருந்தே இலக்கியத் துறையில் மிகவும் ஆர்வமுடையவள். பல சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளையும் பெற்றுள்ளார். பூ முகத்தில் புன்னகை என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார். இதைத்தவிர அண்மையில் ஒரு சமூக நாவலையும் எழுதியுள்ளார். இவரின் இலக்கியத்துறை ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தந்துள்ளது. இவரைப் போன்றே எனது மற்றொரு மகளான இன்ஷிபா இக்பாலும் எழுத்தார்வம் உள்ளவர். பல கதைகளையும் எழுதியுள்ளார். எனது மகன் அஷ்பாக் அஹமத் சிறந்த ஓவியராவார். அற்புதமாக ஓவியங்களை வரையும் ஆற்றல் உள்ளவர்.


இலக்கியப் படைப்புக்களுக்கு கிடைகின்ற விமர்சனங்கள், விருதுகள் பற்றிய உங்கள் கருத்து?

இலக்கியப் படைப்புக்களுக்கு விமர்சனங்கள் நிச்சயம் தேவை. அந்த விமர்சனங்கள் தான் ஒரு படைப்பாளியை சிறந்த படைப்பாளியாக உருவாக்க உதவும். விமர்சனங்கள் என்ற பெயரில் ஒரு படைப்பாளியை, படைப்பை மட்டம் தட்டி எழுதக்கூடாது.

விருதுகளைப்பற்றி சொல்வதானால், விருதுகள் என்பது ஒரு படைப்பாளிக்கு கிடைக்கின்ற மிகப்பெரிய அங்கீகாரமாகும். இருந்தாலும் இன்று (சில இடங்களில்) வழங்கப்படுகின்ற விருதுகளும், பட்டங்களும் தகுதியானவர்களுக்கு, பொறுத்தமானவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரியவில்லை. ஆள் பார்த்து, முகம் பார்த்து பணத்தைப் பெற்றுக் கொண்டும், பொன்னாடைகளை உரியவர்களிடமிருந்து வாங்கியும் வழங்கப்படுவது ஒரு கேலிக்கூத்தாகும்.


நீங்கள் இனங்களுக்கிடையில் உறவைப் பேணும் வகையில் பல   கதைகளையும், வலது குறைந்தோர் சம்பந்தமான பல கதைகளையும் எழுதியிருப்பதாக அறிகிறோம். அது பற்றிக் கூறுங்கள்?

எமது நாட்டைப் பொறுத்தவரை பல்லின மக்களும் வாழும் நாடு இது. இனங்களுக்கிடையே நல்லுறவும், புரிந்துணர்வும் இருந்தால்தான் நாடும், மக்களும் நன்றாக இருக்க முடியும். எனவே தான் இனங்களை இணைக்கின்ற சிறுகதைகளையும் எழுதி வருகிறேன். அவற்றிற்காக பரிசுகளும் பெற்றுள்ளேன்.

மேலும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் விழிப்புலன் இழந்த மாணவர்களுக்கு ஆசிரியப்பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தை எனக்குத் தந்த நிலையத்தின் ஸ்தாபகரும், அர்ப்பணிப்போடு பணி புரியும் ஆயுட்காலத் தலைவருமான சகோதரர் அல்ஹாஜ் ஜிப்ரி ஹனிபா அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். அந்த மாணவர்களுடன் நெருங்கிப் பழகிய என்னால் அவர்களின் உணர்வுகள், மனக்காயங்கள், எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள் என்பவற்றை இலகுவில் புரிந்து கொள்ள முடிந்தது. அவற்றை வைத்து பல சிறுகதைகளையும் எழுதியுள்ளேன்.


இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க இயலாத சம்பவங்கள் இருப்பின் குறிப்பிடுங்கள்?

மறக்க முடியாத சம்பவங்கள் சில இருந்த போதும் ஓரிரண்டைக் குறிப்பிடலாம். 1983 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் சேவை மன்றம் களுத்துறை மாவட்டத்தில் நடத்திய ஹஜ் விழா போட்டிகள் நான்கில் (இஸ்லாமிய கீதம், கவிதை, அறபு எழுத்தணி, கட்டுரை) நானும் கலந்து கொண்டேன். அந்த நான்கு போட்டிகளிலுமே எனக்கு முதலிடம் கிடைத்தது. மேடையில் பரிசு வாங்கிவிட்டு கீழே இறங்க முன் அடுத்த பரிசுக்காக அழைக்கப்பட்டேன். இப்படி நான்கு தடவைகளும் அழைக்கப்பட்ட போது அந்தப் பரிசுகளை பார்வையாளரின் கரகோசத்துக்கு மத்தியில் வாங்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தேன். இது மறக்க முடியாத அனுபவம். 2003 ஆம் ஆண்டில் திசை மாறிய தீர்மானங்கள் வெளியீட்டு விழாவிற்கு தமிழகத்தின் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான டாக்டர் ஹிமானா சையத் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். என் அழைப்பை மதித்து என்னை கௌரவப்படுத்திய அன்றைய நிகழ்வை என்றும் மறக்க மடியாது.

ஏற்கனகவே நான் கூறிய முஸ்லிம் காங்கிரஸ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசாக தங்கப் பதக்கம் கிடைத்தது. இரண்டரைப் பவுண் எடையுள்ள தங்கப் பதக்கத்தை அன்றைய நிகழ்வில் தலைவர் அஷ்ரப் அவர்களின் கரங்களால் பெற்றுக் கொண்டேன். இந்த பரிசை, கௌரவத்தை என்றும் மறக்க முடியாது. இவை தவிர நான் பல போட்டிகளில் கலந்து பரிசு பெற்ற போதும் 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் தென் இந்தியாவில் நடந்த நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட சர்வதேச நாவல், சிறுகதை, கவிதைப் போட்டிகளில் பரிசு கிடைத்தமை மறக்க முடியாத அனுபவமாகும்.


பூங்காவனம் இதழ் பற்றிய உங்கள் கருத்து என்ன? 

பூங்காவனத்தின் பன்னிரண்டாவது இதழ் இது. தொடர்ந்தும் பல சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டுக் கொண்டிருப்பதே ஒரு சாதனைதான். இதழ் ஆசிரியருக்கும், ஆசிரிய குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். பூங்காவனத்தில் பூத்திருக்கின்ற ஆக்கங்கள் அனைத்தும் தரம் வாய்ந்தவைகளாக உள்ளன. இதற்கு முன்னும் பெண்களால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைகள், இலக்கிய இதழ்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன். இருப்பினும் அவற்றோடு ஒப்பிடும் போது பூங்காவனம் தரமானதொரு இலக்கிய இதழாக இருக்கிறது!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

பூங்காவனம் 11 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

பூங்காவனம் 11 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

சமூக இலக்கிய காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் பதினொறாவது இதழ் தற்பொழுது பூத்து மணம் பரப்புகிறது. பெண் எழுத்தாளர்களின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறை திருமதி வசந்தி தயாபரன் அவர்களின் படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. இவரைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் செய்திருக்கிறார்கள். இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலரான திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் இலக்கிய குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் இலக்கிய உலகில் முன்னணி வகிக்கக் கூடியவராக இருக்கிறார். இவர் பிரபல கலை இலக்கிய படைப்பாளியான வ. இராசையா அவர்களின் புதல்வியும், பிரபல படைப்பாளியான திரு மு. தயாபரன் அவர்களின் துணைவியும் ஆவார். சிறுவயது முதலே இலக்கிய முனைப்பு கொண்ட இவர் சிறந்த சிறுகதைகளையும், அதிகமான கட்டுரைகளையும் சஞ்சிகைகளில் எழுதிவருவதோடு தகவம் கதைஞர் வட்டத்திலும் செயலாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஓலை இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார். சமூக இலக்கிய காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் பதினொறாவது இதழ் தற்பொழுது பூத்து மணம் பரப்புகிறது. பெண் எழுத்தாளர்களின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறை திருமதி வசந்தி தயாபரன் அவர்களின் படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. இவரைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் செய்திருக்கிறார்கள். இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலரான திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் இலக்கிய குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் இலக்கிய உலகில் முன்னணி வகிக்கக் கூடியவராக இருக்கிறார். 

இவர் பிரபல கலை இலக்கிய படைப்பாளியான வ. இராசையா அவர்களின் புதல்வியும், பிரபல படைப்பாளியான திரு மு. தயாபரன் அவர்களின் துணைவியும் ஆவார். சிறுவயது முதலே இலக்கிய முனைப்பு கொண்ட இவர் சிறந்த சிறுகதைகளையும், அதிகமான கட்டுரைகளையும் சஞ்சிகைகளில் எழுதிவருவதோடு தகவம் கதைஞர் வட்டத்திலும் செயலாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஓலை இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார்.  மல்லிகை, ஞானம் போன்ற முன்னணி சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதிவரும் இவர் குடை நடை கடை, மண்புழு மாமா வேலை செய்கிறார், அழகிய ஆட்டம், பச்சை உலகம் என நான்கு சிறுவர் கதை நூல்களையும்,  காலமாம் வனம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். குடை நடை கடை என்ற சிறுவர் இலக்கிய நூல் தமிழ் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான பாலியல் நடவடிக்கைகளால் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள்  நோய்வாய்ப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். எனவே ஒழுக்க சீர்கேடின்றி மனதாலும் உடலாலும் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 01 திகதி எயிட்ஸ் விழிப்புணர்வு தினத்தை சுட்டிக்காட்டி வாசகர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.
த. எலிசபெத், நிந்தவூர் ஷிப்லி, ஜுமானா ஜுனைட், ரொஷான் ஏ. ஜிப்ரி, பதுளை பாஹிரா, வெலிப்பண்ணை அத்தாஸ், பி.ரி. அஸீஸ், வி. விஜயகாந்த், மன்னார் அமுதன், சீனா உதயகுமார், ஏறாவூர் தாஹிர் ஆகியோரின் கவிதைகளும், எஸ்.ஆர். பாலசந்திரன், றாபி எஸ். மப்றாஸ், எம்.பி.எம். நிஸ்வான், சூசை எட்வேட் ஆகியோரின் சிறுகதைகளும் மருதூர் ஜமால்தீனின் உருவகக் கதையொன்றும் இடம்பெற்றுள்ளன. வழமை போல கவிஞர் ஏ. இக்பால் தனது இலக்கிய அனுபவங்களில் ஒரு பகுதியை இந்த இதழிலும் தந்திருக்கிறார். அதேவேளை நுணாவிலூர் கா. விசயரத்தினம் சிறந்த இலக்கிய கட்டுரை ஒன்றினைத் தந்திருக்கிறார். எம்.எஸ்.எம். ஸப்ரி, ரிம்ஸா முஹம்மத் ஆகியோர் நூல் மதிப்புரைகளை செய்திருக்கிறார்கள். 
மேலும் நூலகப் பூங்காவில் வௌ;வேறு எழுத்தாளர்கள் எழுதிய பதினாறு நூல்களைப் பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன. பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்கள் இந்த இதழிலும் இடம்பெற்றிருக்கின்றன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் 48 பக்கங்களில் குறுகிய உள்ளடக்கத்தில் வாசகர்களுக்குத் தேவையான சகல அம்சங்ளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது பூங்காவனம் 11 ஆவது இதழ். 
சஞ்சிகை - பூங்காவனம் இதழ் 11
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் - poongavanam100@gmail.com
விலை - 80 ரூபாய்


http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1244:-11-&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62

பூங்காவனம் பத்தாவது இதழ் மீதான ஒரு பார்வை


பூங்காவனம் பத்தாவது இதழ் மீதான ஒரு பார்வை

எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை


மூத்த பெண் எழுத்தாளர்களில் முகப்புப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம்இ இம்முறையும் வழமை போல் தனது பத்தாவது இதழில் மூத்த பெண் எழுத்தாளர் திருமதி ஸகியா சித்தீக் பரீத் அவர்களின் புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முன்னர் வெளியிட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் பூங்காவனப் புகைப்படங்களை உள் அட்டையில் பதித்து இருக்கிறது.

இது பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் காலமானபடியால் புகுமுக மாணவர்களுக்கு அறிவுரையாகப் பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர் குழுவினர். பகிடிவதை என்றும், ஸ்ட்ரைக் என்றும் வீணான வெறும் காரியங்களில் ஈடுபட்டு தமது கல்விக் காலத்தை வீணே கழிக்கும் மாணவர்களுக்கு அவர்களது அறிவுரைகள் மிகவும் பிரயோசனமானதாக அமையும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

மூன்று சிறுகதைகளையும், ஒன்பது அருமையான கவிதைகளையும், இரண்டு கட்டுரைகளையும், நேர்காணல், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்ற சகல அம்சங்களையும் 10 ஆவது இதழ் தந்திருக்கிறது. இதில் முகப்புப்பட நாயகி திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்களை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இதழாசிரியர்கள் நேர்கண்டிருக்கிறார்கள். பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்கள் மாவனல்லையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஓர் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார். கொழும்பு ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள், விடியலின் விழுதுகள், இதயத்தின் ஓசைகள், முதுசம் என்ற தலைப்புக்களில் 04 நூல்களை இவர் இதுவரை வெளியிட்டுள்ளார். இதில் ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற நூல் சிங்களம்இ ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு, ஓர் ஆவண நூலாகவும் விளங்குகிறது.

தமது இலக்கியப் பிரவேசத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், சிறுவயது முதலே வாசிப்புப் பழக்கத்தைக் கைக்கொண்டதனால் தனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாகவும், தந்தை முதற்கொண்டு பல ஆசான்களுக்கும் அவருக்கு எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். விடியலின் விழுதுகள் 16 சிறுகதைகளைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதியாகும். இதயத்தின் ஓசைகள் ஒரு கவிதைத் தொகுப்பாகும். முதுசம் 2500 க்கும் மேற்பட்ட பொன்மொழிகளை உள்ளடக்கிய நூலாகவும் காணப்படுகிறது. பொது அறிவுக் களஞ்சியம் என்ற நூல் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு பரீட்சை வழிகாட்டி நூலாகத் தற்பொழுது தயாராகிக் கொண்டிருக்கிறது. அதே வேளை, நூல் வெளியீடு என்பது மிகவும் சிரமமான ஒரு காரியம் என்பதனால் தனது மூன்று நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட்டதாகக் குறிப்பிடும் அவர், படைப்புகளுக்கான விமர்சனங்கள் அவசியம் தேவைப்படும் ஒன்று. அவை குறைகளை மாத்திரம் சுட்டிக் காட்டாமல் நிறைகளையும் எடுத்துக் காட்டுவதாக அமைய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். தனது வானொலித் தொடர்பு 1985 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டப் பின் படிப்பை மேற்கொள்ளும் போது விரிவுரையாளர் திருமதி பூமணி குலசிங்கம் அவர்களின் தொடர்பு கிடைத்ததனால் ஏற்பட்டதாகக் கூறும் அவர், வானொலிக் கலந்துரையாடல்கள் உட்பட நிகழ்ச்சிப் பிரதிகள் மூலம் பங்களிப்புச் செய்ய முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயன்வத்தை நூராணியா மகாவித்தியாலயம், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றிலும் ஆசிரியையாகக் கடமையாற்றி 28 வருடங்கள் ஆசிரியப் பணிபுரிந்துள்ளார். இலக்கியத் தாரகை, கலாபூஷணம், சாமஸ்ரீ தேசமான்ய பட்டமும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை, சென்னை, மலேசியா, காயல்பட்டினம் போன்ற இடங்களில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளிலும் பங்குபற்றி சான்றிதழ்கள் பெற்றுள்ள ஒரு பெண் படைப்பாளி என்பது குறிப்பிடத்தக்கது.

தம் சுகம் ஒன்றையே கருதி தவறான வழியை நாடும் ஒவ்வொரு காதலரும், தமக்குப் பிறக்கும் குழந்தை வளர்ந்து பெரியவனாகி சமூக அந்தஸ்துடன் வாழ நேரும் போது தப்புக்கள் என்றோ ஒரு நாள் வெளியாகி தமது பிள்ளையை ஈட்டியால் குத்தும் என்பதை உணராது தவறுக்கு மேல் தவறு செய்கின்றனர். களவை நாடுமுன் அன்றே அந்தத் தவற்றைத் திருத்திக் கொண்டிருந்தால் பர்சான் போன்ற இபாதத்துடன் (மார்க்கப் பற்றுடன்) வாழும் நல்லவர்கள் வாழ்க்கை நாசமாகிவிடாது என்பதைப் புலப்படுத்துகிறது மருதமுனை றாபி எஸ். மப்ராஸ் எழுதிய என்றோ செய்த விணை என்ற சிறுகதை.

அதே போன்று சிறுபிள்ளைகள் மனதில் விதைக்கப்படுகின்ற எண்ணங்கள் உண்மையானவைகளாகவும், தெளிவானவைகளாகவும் இருக்க வேண்டும். சமாளிப்புக்களாக அவை இருக்கும் பட்சத்தில் அந்தப் பிள்ளையின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்றதொரு கருத்தினைத் தாட்சாயினியின் தொடராத சொந்தங்கள் என்ற சிறுகதை தெளிவுபடுத்துகிறது.

காதல் என்பது வயதின் தேவைதான். என்றாலும் காதலிக்கும் போது அளிக்கப்படும் வாக்குறுதிகள் பாதுகாக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.  பொய் வாக்குறுதிகளை அளிப்பதனால் ஆணோ, பெண்ணோ இருவருமோ பாதிக்கப்பட நேருகிறது. முடிவில் ஏமாற்றம் ஒன்றே மிஞ்சும். அத்தகையதொரு காதல் ஜோடியைச் சிதையாத இதயம் தந்திருக்கிறது. கதையில் வரும் காதலி வீணா தன் மாஜிக் காதலன் பாபுவின் நிலை கண்டு இறுதி நேரத்திலும்இ அவனுக்கு உதவ முன்வந்தது அவளது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆனால் அவளைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் போனது பாபுவின் துரதிஷ்டம்தான் என்பதைத் தனது கதையினூடே பொத்துவில் மனாப் எடுத்துக் காட்டுகிறார்.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இந்த இதழிலும் தொடர்கிறது. இதிலே பலர் இரவலாகத் தன்னிடமிருந்து எடுத்துச் சென்ற பெருமதி வாய்ந்த புத்தகங்கள் திரும்பி வராததைப் பற்றி ஆதங்கித்து எழுதியிருக்கிறார். அவரது குருகுல சீடர்களில் ஒருவரான பதுளை பாஹிரா அழகான ஒரு கவிதையையும் தந்திருக்கிறார்.

பேரும் புகழும் தேடி அலையும் மனிதனைப் பற்றி லண்டனில் இருந்து நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் திருக்குறள்இ அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம் போன்ற சங்க இலக்கிய நூல்களில் இருந்து உதாரணங்களைக் காட்டி சிறந்ததொரு கட்டுரையைத் தந்துள்ளார்.

நீலாவணை ம. புவிலக்ஷி, புத்தளம் ஜுமானா ஜுனைட், யோ. புரட்சி, மருதூர் ஜமால்தீன், பூனாகலை நித்தியஜோதி, கலைமகன் பைரூஸ், கிண்ணியா பி.ரி. அஸீஸ், நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரது கவிதைகளும் இதழில் இடம்பிடித்துள்ளன.

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதை நூலுக்கான மதிப்பீட்டை வெலிகம ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். இன்னும் இன்னும் அந்தக் குரலைக் கேட்கக் கூடாதா? என்ற ஆர்வத்தை அது தூண்டிவிடுகிறது. ஒவ்வொரு இலக்கியவாதியும், வாசகனும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர வாசகர் கருத்துக்கள், வரப்பெற்ற நூல்களின் விபரங்கள் உட்பட பூங்காவனம் துணையாசிரியர் செல்வி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் நூல்வெளியீட்டுப் புகைப்படங்கள் பின் அட்டையின் உட்பக்கத்தை அலங்கரித்து பூங்காவனத்தின் பத்தாவது இதழை மணம் கமழச் செய்கிறது!!!

இதழின் பெயர்- பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை
இதழாசிரியர் - ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் பதிப்பகம்
முகவரி - 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.
தொலைபேசி – 0775009222
விலை - 80 ரூபாய்

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை 08


பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சனம்

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகை பற்றிய விமர்சனம்

- எம்.எம். மன்ஸுர் - மாவனல்லை.



பூங்காவனத்தின் 08ஆவது இதழ் பூத்து வாசகர்கள் கைகளில் தவழும் இவ்வேளையில் அதனைப் பற்றிய சில கருத்துக்களை இங்கு பதியலாம் என நினைக்கிறேன். தரமான பெண் படைப்பாளிகள் வரிசையில் இம்முறை இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவராகத் திகழும் திருமதி நூருல் ஐன் பூங்காவனத்தின் அட்டைப் படத்தை அலங்கரிக்கிறார். நீண்டதொரு பேட்டியினை திருமதி நூருல் ஐன் நஜ்முல் ஹுஸைன் அவர்கன் வழங்கியிருக்கிறார். வழமைபோல் இளம் கவிக்குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மதும், இளம் பெண் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவும் நேர்காணல் செய்திருக்கிறார்கள். இலங்கையிலே ஊடகத்துறை முஸ்லிம் பெண் ஊடக, மற்றும் தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாகத் திகழும் நூருல் ஐன் அவர்கள் நீண்ட எழுத்தனுபவங்களை அழகாக விபரித்திருக்கிறார். மகளிர் தினச் செய்தியாகவும், புத்தாண்டுச் செய்தியாகவும் ஆசிரியர் குழு தெரிவித்திருக்கும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. நாகரிகம்தான் பெண்ணியம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பெண்ணிய சிந்தனை வாதிகள் பெண்ணியம் என்றால் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் அர்த்தம் பொதிந்தவை.

குடும்பத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பெற்றோர் தவறான வழியில் நடப்பதனால் பிள்ளைகளும் தவறான வழிக்குப் போவார்கள் என்பதற்கு உதாரணமாக இக்ராம் எம். தாஹா எழுதியுள்ள 'வழிகாட்டி' என்ற சிறுகதையும், தங்கைப் பாசத்தினால் தங்கைக்காக ஒரு தங்கச் சங்கிலியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திருவிழாக்காண அம்மா கொடுத்த பணத்தை ஒரு சதமேனும் வீணாக்காமல் மின்னும் சங்கிலி ஒன்றை வாங்கிய கோபு, ஏனைய தனது நண்பர்கள் தமது காசை வீணாகச் செலவழித்ததன் பின், தான் மாத்திரம் காரியவாதி என்பதை நிரூபித்துவிட்டான் என்பதை சூசை எட்வட்டின் 'காரியவாதி' என்ற சிறுகதையும், காதலுக்காக பெற்றோரின் மனதைப் புண்படுத்திவிடும் பிள்ளைகள் அதன் உண்மை நிலையை அறிந்ததும் தவறை நினைத்து மனம் வருந்த நேரும் என்பதை விளக்கும் எஸ். ஆர். பாலச்சந்திரனின் 'சரசு ஏன் அழுகிறாள்?' என்ற சிறுகதையும், தப்பான சில காரியங்களால் நட்பானது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. உயிருக்கு உயிரான நண்பர்கள் வாழ்விலும்கூட அது புகுந்து விளையாடும். ஆரம்பத்திலேயே அதற்குத் தடை போட்டுவிட்டாள் பிரச்சினைகளுக்கு வழிகாணலாம் என்ற உண்மையை 'சமூகமே நீ உணர்வாயா?' என்ற ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதியுள்ள சிறுகதையுமாகச் சேர்ந்து நான்கு சிறுகதைகள் பூங்காவனத்தில் இடம்பிடித்துள்ளன.

பதுளை பாஹிரா, கவிமலர், குறிஞ்சி நிலா, பி.ரி. அஸீஸ், கலைமகன் பைரூஸ் ஆகியோரின் கவிதைகள் இதழைச் சிறப்பிக்கின்றன. இதிலே மறைந்த பல்கலை நாயகன் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் நினைவாக அண்ணாவுக்கொரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார் குறிஞ்சி நிலா.

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (லண்டன்) தொல்காப்பியரின் காலத்தை உறுதி செய்யும் கட்டுரை ஒன்றினையும் தந்துள்ளார்.

கவிஞர் ஏ. இக்பாலின் இலக்கிய அனுபவ அலசல் இந்த இதழிலும் தொடர்கிறது. இந்தக் காலத்தில் எழுதப்படும் கவிதைகள் எந்த ரகத்தைச் சேர்ந்தன என்பதை இனங்காண முடியாதபடி வாசகனை மயக்கத்துக்கு உள்ளாக்குகிறது என்பதை 'கவிதை ஒரு மறுவாசிப்பு' என்ற கட்டுரையின் வாயிலாக நாச்சியாதீவு பர்வின் விளக்கியிருக்கிறார்.

இறுதியில் விமர்சகரும், திறனாய்வாளருமான 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/ மதிப்பீடுகள் சில' என்ற நூலைப் பற்றிய ரசனைக் குறிப்பை எச்.எப். ரிஸ்னா தந்து பூங்காவனத்தை சிறப்பித்திருக்கிறார். சிறுகதை, கட்டுரை, கவிதை, கருத்துக்கள், ரசனைக் குறிப்புகள் என இன்னோரன்ன இலக்கியச் சிறப்பியல்புகள் கொண்டதாக இம்முறை பூங்காவனம் பூத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது!!!

நூல் - பூங்காவனம் (காலாண்டு சஞ்சிகை)
ஆசிரியர் குழு - ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா
முகவரி - 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia.
தொலைபேசி - 077 5009222, 0719 200580.
மின்னஞ்சல் - bestqueen12@yahoo.com
விலை - 80 ரூபாய்

இந்த விமர்சனத்தை பதிவுகள் வலைத்தளத்தில் பார்வையிட கீழே க்ளிக் செய்யவும்

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=738:2012-04-15-00-14-46&catid=14:2011-03-03-17-27-43

பூங்காவனம் இதழ் 03


பூங்காவனம் இதழ் 03 பற்றி தினக்குரல் பத்திரிகை (2010.12.26)ல் மா.பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட விமர்சனம்

சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்


சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்

சுடர்ஒளி பத்தரிகையில் பூங்காவனம் 2வது சஞ்சிகைக்கான விமர்சனம்

நன்றி - இணுவிலி மாறன்


11. திருமதி. வசந்தி தயாபரன் அவர்களுடனான நேர்காணல்

திருமதி. வசந்தி தயாபரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்




இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலர். இலக்கியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளவர். வங்கிப் பணியிலிருந்து இளைப்பாறிய பின்னர் இலக்கியப் பணிகளுடன் சமூக சேவைகள் பலவும் ஆற்றி வருகிறார். இவர் சில சிறந்த சிறுகதைகளையும், சஞ்சிகைகளுக்காக நிறைந்தளவு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சமகால இலக்கியம் மற்றும் கலைகளை திறம்பட விமர்சித்து வருபவர். தமிழ் ஆக்க எழுத்தாளர்களுடைய படைப்புகளைச் சுமந்து வருகின்ற தகவம் தமிழ் இலக்கிய இதழின் செயலாளர். தமிழும் இலக்கியமும் இசையும் இவரோடு குழந்தைப் பருவம் முதல் இணைந்து பயணித்து வருகின்றன. தகவம் இராசையா மாஸ்டரின் புதல்வியாக இருந்தமை இவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும். இவரது தாயார் அர்ப்பணிப்புடனும் ஒழுங்காகவும் பணியாற்றிய ஓர் ஆசிரியையாவார். சிறுவர் இலக்கியத்தில் இவரது பங்களிப்பு காத்திரமானதாகும். அவரிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களை பூங்காவனம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.


01. உங்களை  இலக்கியத் துறையில் ஈடுபட வைத்தது உங்கள் குடும்பப் பின்னணி என்று நினைக்கிறேன். உங்கள் குடும்பம் பற்றியும், இலக்கியத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொள்வீர்களா?

எனது பெற்றோர் ஆசிரியர்களாக இருந்தனர். எனது தந்தையார், வ. இராசையா அவர்கள் எப்போதும் நூல்களுடன் உறவாடுபவர். இரவிலும் நெடுநேரம் கண்விழித்து எழுதிக்கொண்டிருப்பவர். தன் மாணவர்களது பல்துறை ஆற்றல்களையும் ஊக்குவிப்பவர். வானொலி, கலை இலக்கியம், ஆசிரியப் பணி என அர்ப்பணிப்புடன் இயங்குபவர். அவரை அண்ணாந்து பார்த்து வளர்ந்தது என் சிறு பராயம்.

கடமை உணர்வும், சுறுசுறுப்பும் மிக்கதோர் ஆசிரியையாக பதுளை - திக்வல்லை - கொழும்பு ஆகிய இடங்களில் பணிபுரிந்தவர் எனது தாயார். இஸ்லாமிய பாடசாலைகளில் மிக நீண்டகாலம் சேவை புரிந்தார். இசை, நடனம், கூத்து முதலான கலைகளில் பரீச்சயமும் பற்றும் கொண்டவர். எமக்கும் அவற்றைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கினார். மொத்தத்தில் எனது தந்தையார் உட்பட எமது இலக்கியப் பயணத்திற்கு உகந்த சூழ்நிலையை இன்று வரை ஏற்படுத்தித் தருபவர் எனது தாயார்.

நாவிலே வந்து உரைவாய் சரஸ்வதி!|| என்று என்னை வாழ்த்தி வளர்த்த என் அம்மம்மா, நிறையவே வாசிப்பவரும் கதை சொல்லிச் சொல்லி கதைச் சுவையை ஊட்டி வளர்த்தவருமான என் பெரியம்மா இருவரும் கூட என் நினைவில் நிற்பவர்கள்.


என்னைச் சூழ இருந்த உறவுகளும், தந்தையாரின் இலக்கிய உறவுகளும், சந்தர்ப்பங்களும் என்னை இலக்கியத் துறைக்குள் இழுத்து வந்தன. பதின்ம வயதுகளில் வானொலிக்குச் சில எழுத்தாக்கங்களை வழங்கியதும், இலங்கை வங்கி இலக்கிய மன்றத்தில் இணைந்துகொண்டு கவிதையும், கட்டுரையும் எழுதி தமிழலை சஞ்சிகையில் அவை அச்சேறியதும் மூன்று தசாப்தங்களுக்கு முன்னைய கதை. தகவம் உறுப்பினராகி ஆக்க இலக்கியத்துள் நுழைந்ததும் கொழும்பு தமிழ் சங்கத்தில் இணைந்ததும் என அது இன்றுவரை வளர்கிறது.


02. சிறுவர் இலக்கியத்திற்காக நீங்கள் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளீர்கள். அதுபற்றி...

இதுவரை நான்கு நூல்கள் வெளிவந்துள்ளன. அவை:-

1. குடை நடை கடை
2. மண்புழு மாமா வேலை செய்கிறார்
3. அழகிய ஆட்டம்
4. பச்சை உலகம்

என்பனவாகும்.

இவை எனக்கு ஓரளவு திருப்தியைத் தந்தனவெனினும் சிறுவர் இலக்கியத்தில் நான் செல்ல வேண்டிய பாதை இன்னும் நீண்டு கிடக்கிறது. எனது தந்தையார் ஈழத்துச் சிறுவர் இலக்கிய கருத்தாக்களில் ஒருவராவார். ஷஷஒரு படைப்பாளி என்பவன் சிறுவர்களுக்கான இலக்கியங்களைப் படைத்தால் மட்டுமே அவனது படைத்தல் என்ற பொறுப்பு முழுமையடையும்|| என்ற அவரது அறிவுரை என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.


03. காலமாம் வனம் என்ற சிறுகதைத் தொகுதியை நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். இந்தத் தலையங்கத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

''காலமாம் வனம்'' என்ற தலையங்கம் பாரதி என்ற மகாகவி தந்தது. என்னுள்ளே முணுமுணுப்பாக ஒலித்துக்கொண்டிருக்கும் அழகும் ஆழமும் பொதிந்த சொற்றொடர் அது.

வெற்றி தோல்விகளை காலமே தீர்மானிக்கிறது. எமக்கு முன்னே நீண்டு கிடக்கின்ற வனத்தினூடு ஆர்வமும் திகைப்பும் கலந்த மனதுடன் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் நாம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். மாறுதல்கள், புதிய அநுபவங்கள் என்பன கணந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. நாம் கடந்து வந்த பாதையைப் பதிவு செய்கிறோம். ஓவியங்கள் சிற்பங்கள் போலவே, அவையும் தத்தமது காலத்தின் உருவத்தையும் சிறப்பையும் காலங்கடந்தும் பேசுமா இல்லையா என்பதைக் கூட, அதே காலம் தான் நிர்ணயிக்க முடியும்.


04. இன்றைய கால கட்டத்தில் நிறையப் பெண்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் முழுமையாகக் கவனிக்கப்படுகிறார்களா?

சமூகம் தம்மைக் கவனிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் எழுதுபவர்கள் மிகக் குறைவு. மாறாக தமது எழுத்துக்கள் கவனிக்கப்படுகின்றனவா என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கக் கூடும்.

போர்களும், வன்முறைகளும்,  மன வக்கிரங்களும் அதிகரிக்கும் தோறும் நீங்கள் கூறுவது போல் நிறையப் பெண்கள் எழுத வருவது இயல்பானதொன்றே. பெண்களைக் கவனிக்கும் அளவுக்கு அவர்களது எழுத்தின் உணர்வோட்டம் கவனிக்கப்படுகிறதா என்பது ஒரு வினாவே. சமூகத்தின் பார்வையில் ஏற்படவேண்டிய மாற்றங்களே பெண் எழுத்துக்கான பிரக்ஞையைத் தோற்றுவிக்கக் கூடியன.


05. பெண்ணிய சிந்தனைகளைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

பெண்ணியச் சிந்தனைகள் காலாதிகாலமாக உயிர்ப்புடன்தான் உள்ளன. இன்று அவை கூர்மை பெற்றுள்ளன. பண்பாட்டுப் போர்வைகளை சற்றே அகற்றி, திறந்த மனதோடு இவை அணுகப்படல் வேண்டும். அவற்றுக்கான வழிகளும், வெளிப்படுத்தும் முறைகளும் மனிதரிடையே மாறுபடக்கூடும்.


06. எதிர்காலத்தில் கவிதைகள், நாவல்கள் ஆகிய தொகுதிகளை வெளியிடும் எண்ணம் உண்டா?

இந்தக் கேள்விக்கு ஆம் என்பதே விடையாக அமைகிறது. ஆயினும் முதலில் நல்லதொரு வாசகியாக என்னை வளப்படுத்திக்கொண்டு, செம்மையான திருத்தமான படைப்புகளை வெளிக் கொண்டுவர விரும்புகிறேன்.




07. உங்கள் இலக்கிய முயற்சிகளுக்கு கரங்கொடுக்கும் உங்கள் துணைவர் திரு. மு. தயாபரன் அவர்களின் பங்களிப்பைப் பற்றிச் சொல்லுங்கள்?

தமிழ்தான் எங்களைப் பிணைத்தது. எனவே முதலில் அவர் எனது இழக்கியத் தோழர். அதனைத் தொடர்ந்து அன்புக் கணவராக, தந்தைக்குத் தந்தையாக, என்னை எனக்கறிவித்த என் குருவாக யாதுமாகி நிற்கிறார்.


08. பல இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றீர்கள். அந்த அனுபவம் பற்றி?



அனுபவப் பகிர்வுதான் கருத்துப் பகிர்வாக மலர்ச்சி பெறுகிறது. கொழும்பு தமிழ்ச்சங்கம் அதற்கான அடித்தளத்தை எனக்கு வழங்குகிறது. (கொண்டும், கொடுத்தும்) வளர்வதற்கு இவையெல்லாம் உதவுகின்றன.




09. இதுவரை நீங்கள் எழுதிய எல்லா படைப்புக்களும் அச்சில் வெளிவந்துள்ளனவா?

இல்லை. எனது எழுத்துக்களை நானே மீளவும் தரக்கணிப்புச் செய்துவிட்டு அச்சேற்ற விரும்புகிறேன்.



10. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?



'குடை நடை கடை' என்ற இனது சிறுவர் இலக்கியம் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் (தமிழியல்) விருதைப் பெற்றது. அதனைத் தவிர வேறெந்த விருதினையும் நான் பெற்றுக்கொண்டதில்லை. ஆனால் எழுதும்போதும், அதன் பின்பும் நான் பெறுகின்ற உள நிறைவு நான் மதிக்கின்ற ஒரு பரிசு. சமூகத்திற்கு எம்மை அடையாளப்படுத்தவும், அதன் அங்கீகாரத்தைப் பெறவும் விருதுகள் உதவுகின்றன. ஆனால் அவை தேடிப் பெறுவன அல்லவே.

11. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சமூக அக்கறை என்பதே எழுத்தின் உயிர்நாடி என்பது எனது முடிபு. மாறிவரும் மதிப்பீடுகளிடையே அர்ப்பணிப்பு, தனித்தன்மை என்ற பண்புகள்தாம் எழுத்தை வாழவைக்க வல்லன என்று நான் நம்புகின்றேன். பூங்காவனம் பூத்தக்குலுங்க வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

10 திருமதி. ஸக்கியா சித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2014.04.06

திருமதி. ஸக்கியா சித்தீக் பரீத் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

மாவனல்லை தெல்கஹகொடயை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவலையை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் பீ.ஏ பட்டதாரியாவார். இதுவரை 04 நூல்களை வெளியிட்டுள்ள இவர் அகில இலங்கை சமாதான நீதிவான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பூங்காவனம் பத்தாவது இதழுக்காக அவரை நேர்கண்டபோது பகிர்ந்துகொண்ட விடயங்களை வாசகர்களுக்கு தருகிறோம்.



உங்கள் இலக்கியப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?

எனது தந்தை தினமும் பத்திரிகை வாசிக்கும் பழக்கமுள்ளவர். சிறு வயதிலிருக்கும் போதே என்னையும் பத்திரிகை வாசிக்கத் தூண்டினார். விடுமுறை நாட்களில் தந்தையின் முன்னால் இருந்து பத்திரிகை வாசித்துக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. தினகரன் வார இறுதியில் வெளியாகும் சிறுவர் மலர் என்ற பகுதியை விரும்பி வாசிப்பேன். அதிலுள்ள ஆக்கங்களை வாசிக்கும்போது எனக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

வெண்ணிலாவே என்று தலைப்பிட்டு ஒரு சிறு பாடலையும், கிராமக் காட்சி என்ற ஆக்கத்தையும் எழுதினேன். அதனை தபாலில் சேர்க்க தந்தை உதவினார். அடுத்தடுத்த சிறுவர் மலர்களில் அவை வெளிவந்ததைக் கண்டு ஆனந்தமடைந்தேன். எனது தந்தை என்னைப் பாராட்டி ஒரு பேனையை பரிசாக தந்தார். அதுவரை பென்சிலால் எழுதிய எனக்கு பேனாவால் எழுதக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது. இதனையே எனது இலக்கியப் பிரவேசமாகக் கருதுகிறேன்.


உங்களது முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள்?

எனது பெற்றோருக்குப் பின் மத்ரஸாவில் எனக்கு குர்ஆனைக் கற்றுத் தந்த ஹிங்குலோயாவைச் சேர்ந்த முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் மிகவும் அழகான முறையில் தலைப் பாத்திஹா, மவ்லூது, பைத்களைச் சொல்லித் தந்தார். அல்குர்ஆனில் காணப்படும் எதுகை, மோனை, சந்தம் என்பன என்னைக் கவர்ந்தன. அத்தோடு எனது கல்விக் கண்களைத் திறந்துவிட்ட எல்லா ஆசான்களும் ஏதோ ஒரு வகையில் எனது முன்னோடிகளாகின்றனர்.


உங்களது இலக்கியப் பணி, எழுத்துப் பணிகளின் வளர்ச்சிப் போக்கு எத்தகையது?

நான் சிறு வயதிலிருந்தே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தேன். படிக்கும் காலத்தில் மாணவர் மன்றத்தில் பாடுவேன். பேசுவேன். கதை சொல்வேன். போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றுள்ளேன். உயன்வத்தை நூராணியா மகா வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வி கற்கும் காலத்தில் கலா மன்றத்தால் வெளியிடப்பட்ட தேனருவி என்ற கையெழுத்து சிற்றிதழை எழுத கல்லூரியில் பணிபுரிந்த பண்டிதர் சிவசம்பு என்ற ஆசான் என்னை வழிப்படுத்தினார். ஏனைய ஆசான்களினதும் நெறிப்படுத்தலின் கீழ் எழுதுவதற்கு களமமைத்துக் கொண்டேன்.

1985 களுக்குப்பின் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு பிரதிகள் எழுதவும், பங்கு பற்றவும் சந்தர்ப்பம் கிட்டியது. கொழும்புப் பல்கழைக் கழகத்தில் நான் டிப்ளோமா பட்டப்பின் படிப்பு நெறியை மேற்கொள்ளும்போது சமூகவியல்துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்த மதிப்புக்குரிய பூமணி குலசிங்கம் அவர்கள் இன ஐக்கியம் சம்பந்தமான கலந்துரையாடல்களுக்கு என்னை இலங்கை வானொலிக்கு அழைத்துச் சென்றார். அப்போது நிகழ்ச்சிக்கான பிரதிகளையும் எழுதிப் பங்கு பற்றினேன்.

அத்துடன் இலங்கை வானாலி முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் பகுதிக்கு பல வருடங்களாக பிரதிகள் எழுதியதுடன் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியும் வந்தேன். முன்னைய நாள் முஸ்லிம் நிகழ்ச்சிப் பணிப்பாளர்களாகப் பணிபுரிந்த எனது அன்புக்குரிய மாணவன் நூராணியா ஹசன், அல்ஹாஜ் எம்.இஸட். அஹமட் முனவ்வர் அவர்களும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சகோதரி புர்கான் பீ. இப்திகார் அவர்களும் இதற்கான சந்தர்ப்பத்தை அமைத்துத் தந்தனர். அவர்களை நன்றியோடு ஞாபகப்படுத்துகிறேன்.


இதுவரை நீங்கள் எத்தனை நூல்கள் எழுதியுள்ளீர்கள். அதுபற்றி கூறுங்கள்?

இதுவரை 04 நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். நான் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் பணிபுரிந்த காலத்தில் விழிப்பு என்ற சிற்றிதழை மாணவர் ஆக்கங்களைக் கொண்டதாக வெளியிட்டேன். 


நான் எழுதிய முதலாவது நூல் ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற தலைப்பில் எழுதிய ஓர் ஆவண நூலாகும். இந்நூல் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டதாகும். இந்நூலை எழுதுவதற்கு என்னை ஆர்வப்படுத்தியவர் அன்று ஸாஹிராவின் கல்வி ஆலோசகராகப் பணிபுரிந்த கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களாவார். இந்நூலை எனது அறிவுக் கண்களை திறந்துவிட்ட ஆலிம் முஹம்மது லெப்பை அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

எனது இரண்டாவது நூல் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத் தொகுப்பாகும். இத்தொகுப்பில் பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், கஷ்டங்களைப் பிரதிபலிக்கும் 16 சிறுகதைகளைத் தொகுத்துள்ளேன். இச் சிறுகதைகளுக்கான கருக்கள் அனைத்தும் யதார்த்தமானவையாகும். இந்நூலை எனது அருமைப் பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளேன்.

மூன்றாவதாக இதயத்தின் ஓசைகள் என்ற கவிதைத் தொகுப்பில் தம்பிக்கு, தங்கைக்கு, தோழிக்கு போன்ற தலைப்பிட்ட சில கவிதைகளோடு சமாதானம், தாலாட்டு, அகதி, தேயிலைத் தோட்டப் பெண் என்ற தலைப்பில் கவிதைகளும், மறைந்த தலைவர் மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுக்கு ஓர் அஞ்சலிக் கவிதையும், எனது அன்புக்குரியதொரு மாணவனுக்கு ஓர் அஞ்சலிக் கவிதையுமாக எழுதி இத்தொகுப்பை பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முதலாவது அதிபர் ஆயிஷா ரவூப் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன். 

முதிசம் என்ற தலைப்பிட்ட எனது நான்காவது நூல் நான் கணவனை இழந்து இத்தா அனுஷ்டிக்கும் காலப் பகுதியில் எழுதியதாகும். இது 2500க்கும் மேற்பட்ட மொன்மொழிகளை உள்ளடக்கியதொரு தொகுப்பாகும். இதனை எனது அன்புக் கணவர் அப்துர் ரஸாக் பரீத் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.

ஐந்தாவது நூலாக பொது அறிவுக் களஞ்சியம் என்ற தலைப்பில் பரீட்சைகளுக்கான வழிகாட்டி நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது. 


நூல்களை வெளியிடும்போது நீங்கள் சந்தித்த சவால்கள்?

எல்லோரும் சொல்வார்கள் ஒரு நூலை வெளியிடுதல் என்பது, ஒரு குழந்தையைப் பிரசவிப்பது போன்று கஷ்டமானது என்று. அதைத்தான் நானும் சொல்ல வேண்டும். நான் ஒரே மேடையில் மூன்று நூல்களை வெளியிட்டு வேலையை இலகுவாக்கிக் கொண்டேன். எனது முதலாவது நூல் வெளியீடு கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் 2004ல் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழ்தின விழாவின் ஓர் அங்கமாக நிறைவேறியது. 


அன்று பிரதமராக இருந்த மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாகவும், இந்தியாவிலிருந்து கவிக்கோ அப்துல் ரஹ்மான், பேராசிரியை பர்வீன் சுல்தானா போன்றோர் சிறப்பதிதிகளாகவும், நாடறிந்த தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் பார்வையாளர்களாகவும் வருகை தந்திருந்த அச்சிறப்பான விழாவில் எனது முதலாவது நூலை வெளியிடக் கிடைத்தமையை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்நூல் மூலம் என்னை மிகவும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஸாஹிராக் கல்லூரிக்கு நன்றி பாராட்டுவது எனது கடமையாகும்.

அடுத்த மூன்று நூல்களையும் வெளியிடுவதற்கு நான்z பலரிடம் உதவி கேட்க வேண்டியிருந்தது. பெண்களைப் பொறுத்தவரை நூல்களை எழுதலாம். ஆனால் வெளியீடு என்பதில் அலைந்து திரிவது சிரமமான காரியம் என்று நினைக்கிறேன். இறைவனின் கிருபையால் எனது மூன்று நூல்களையும் ஒரே மேடையில் வெளியிட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ யின் தலைமைப் பீடம் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் ஞாபகார்த்த மண்டபத்தை வழங்கி உதவி செய்தது. ஏ.எல்.எம். இப்றாஹிம், என்.எம். அமீன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வை வை.எம்.எம்.ஏ. யின் மாதர் பிரிவாகிய வை.டப்ளியு.எம்.ஏ. யின் தலைவி மக்கியா முஸம்மில், திருமதி ஸித்தீக், பவாஸா தாஹா மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்பாடு செய்து தந்தார்கள்.

இலங்கை முற்போக்கு இஸ்லாமிய இலக்கியச் சங்கத் தலைவர் மருதூர் ஏ. மஜீத், செயலாளர் டாக்டர். தாஸிம் அஹமத், ஊடகவியலாளர் எம்ஏ.எம். நிலாம், கலைவாதி கலீல் போன்ற சகோதரர்கள் விழாவை சிறப்பாக நடாத்தி நூல்களை வெளியீடு செய்து, எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமும் தந்தார்கள் என்பதை நன்றியோடு கூறுகிறேன். மண்டபம் நிறைந்த எனது அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் இப்போதும் என் கண்முன்னே தோன்றுகிறார்கள்.


படைப்புகளுக்கான விமர்சனங்களை எப்படி நோக்குகிறீர்கள்?

விமர்சனங்கள் கட்டாயம் அவசியமானது. விமர்சனங்கள் இருந்தால்தான் படைப்பாளிகளால் முன்னேற முடியும். ஆனால் விமர்சனங்கள் குறை கூறுவதாக மட்டும் இருக்கக் கூடாது. குறைகளோடு நிறைகளும் பேசப்பட வேண்டும். அப்போதுதான் படைப்பாளிகள் மேலும் ஊக்கமடைவார்கள். உதாரணத்துக்கு ஒரு புறாவைப் பறக்கவிட்டு கைகளைப் பலமாக தட்டும் போது புறா மேலே மேலே உயர்ந்து பறப்பதைப் போல கலைஞர்களையும் பாராட்டப் பாராட்ட அவர்கள் உயர் நிலைக்குச் சென்று சமூகத்திற்குப் பயனுள்ள படைப்புக்களை வழங்குவார்கள். அத்தோடு படைப்பாளிகளைப் பொறுத்தவரை போட்டி போட்டு முன்னேறலாம். ஆனால் மற்றொருவரை வீழ்த்துவதற்கு எத்தனிப்பதும், பொறாமைப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டியவைகளாகும்.


எதிர்காலத்தில் எத்தகைய இலக்கிய பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ளீர்கள்? 

சிறுவர் இலக்கியங்களின் வளர்ச்சி போதாது என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் பெண்கள் சம்பந்தமான வலுவூட்டல், சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கப் பணிகளோடு சிறுவர் இலக்கியம் சம்மந்தமாகவும் கவனத்தைத் திருப்ப நினைத்துள்ளேன்.


நீங்கள் பல வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளீர்கள். இன்றைய மாணவர்களின் இலக்கியப் போக்கு? எழுத்துத்துறை பற்றி என்ன கூறுவீர்கள்?

இன்றைய மாணவர்களின் இலக்கியம், எழுத்து, வாசிப்புத் துறைகள் கவலைக்கு இடமானதாகவே காணப்படுகின்றது. வாசிப்பு என்பது மாணவர்களைவிட்டு வெகு தூரமாகி விட்டது. மாணவர்கள் தொலைக்காட்சி, மின்னஞ்சல், சினிமா என்று வீண் பொழுது போக்குகளில் நேரத்தை வீணடிப்பதைக் காண்கிறோம். இலக்கியம் எழுத்துத் துறை வளர்ச்சிக்குப் பதிலாக இன்றைய மாணவர்களிடையே விரும்பத்தகாத மாற்றங்களும், துர்நடத்தைகளும் மலிந்துவிட்டன.

மாணவியர் ஓரளவு இலக்கியம், எழுத்துத் துறைகளில் ஈடுபாடு காட்டினார்கள். அண்மைக் காலங்களில் அவர்களும் கையடக்கத் தொலைபேசிகளோடும், டியூஷன் கலாச்சாரத்தோடும் தமது காலநேரத்தை வீணடிக்கும் போக்கைக் காண முடிகிறது.

பன்முக ஆளுமை கொண்டவர்களாக மாணவ சமுதாயத்தை மாற்ற பெற்றோரும், ஆசான்களும், சமூகமும் முன் வரவேண்டியது அவசரமும் அவசியமுமாகும் எனக் கருதுகிறேன்.


இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றி குறிப்பிடுங்கள்?

* நான் பாடசாலையில் கற்கும் காலத்தில் மாகாண, மாவட்ட மட்டப் பரிசில்கள் பெற்றுள்ளேன். நான் கல்வி கற்ற, கற்பித்த உயன்வத்தை நூராணியா மகா வித்தியாலய மண்டபத்தில் உயன்வத்தை ரம்ஜான் அவர்களின் கீழ் இயங்கும் ப்ரியநிலா இலக்கிய வட்டம் 2005 இல் எனக்கு இலக்கியத் தாரகை என்ற பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.

* 2009 இல் கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய கலை இலக்கிய மகோற்சவத்தின் நிமித்தம் நடாத்திய கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசும், நற்சான்றிதழும் கிடைத்தது.

*  இலங்கை, சென்னை, மலேசியா, காயல்பட்டிணம் போன்ற இடங்களில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் அனைத்திலும் பங்கு பற்றி சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.

* 2006 இல் கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆளுனர் சபை நல்லாசிரியர் விருது வழங்கி என்னை கௌரவித்தது. எனது 28 வருடகால ஆசிரியப் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே அதனைக் கருதி மனத்திருப்தி கொள்கின்றேன்.

* இளம் முஸ்லிம் மாதர் சங்கத்தில் தொடர்ந்து 30 வருடங்கள் சேவை புரிந்த என்னை அச்சங்க உறுப்பினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

* 2011 இலங்கை அரசாங்கத்தால் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற கலாபூஷண விருது கலாச்சார அமைச்சால் எனக்கு வழங்கப்பட்டது.

* 2011 இல் அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம் மூலம் சாமஸ்ரீ, தேசமான்ய விருதுகள் கிடைத்தன.

* 2012ல் அகில இலங்கை மனித உரிமை அமைப்பின் நான்காவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் சேவைக்கான விருதும், தங்கப் பதக்கமும், நற்சான்றிதழும் கிடைத்தன.

என்னைப் பொறுத்தவரை பட்டம், பதவிகள், கௌரவங்களை விட மேலும் என்னைத் தகுதியாக்கிக் கொள்வதும், சமூகத்திற்குச் சேவை செய்வதுமே எனது நோக்கமாகும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

09. திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களுடனான நேர்காணல்

திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

உங்களின் குடும்பச் சூழல், வாழ்வுநிலை பற்றி கூறுங்கள்?

எனது தந்தையாரின் பெயர் சின்னத்துரை. தாயாரின் பெயர் கமலாம்பிகை. நான் மலேசியாவில் 1948 ஆம் ஆண்டு பிறந்தேன்;. எனக்கு இரு மகள்மாரும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இரு பெண் பிள்ளைகளுக்கும் திருமணமாகி இரு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். நான் மக்கள் வங்கியில் முகாமையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன்.


எழுத்துத்துறைக்குள் தாங்கள் காலடி எடுத்து வைக்க முன்னோடியாக இருந்தவர்கள் பற்றி?


சிறு வயதில் கதைகள் கூறி அதில் ஒன்றவைத்த என் பேரனாரைத்தான் முதல் காரணகர்த்தாவாகச் சொல்வேன். அடுத்துப் பல சஞ்சிகைகளை வாங்கி தானும் வாசித்து, என்னையும் வாசிக்கப் பழக்கிய என் தாயார். தமிழில் ஆர்வங்கொள்ள வைத்த எனது தமிழாசிரியர் வித்துவான் நவரத்தினம் அவர்கள். எனது ஆரம்பகால எழுத்துகளை வெளிவரச்செய்து ஊக்கமளித்த திரு. வ.இராசையா, திரு. மனோகரன் மயில்வாகனம், திரு. இ.சங்கர் முதலியோரைக் குறிப்பிடலாம்.


சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

சிறுகதைகளை வாசித்து வந்த எனக்கு நானும் எழுதினால் என்ன என்றோர் எண்ணம் இயல்பாகவே ஏற்பட்டது. வேறு குறிப்பிடத்தக்க சம்பவம் எதுவும் நடந்ததாக நினைவில்லை.


சிறுகதைத் துறையில் ஈடுபட்டுவரும் நீங்கள் இதுவரை எத்தனை தொகுதிகளை வெளியிட்டிருக்கிறீர்கள்? அவை யாவை?

இதுவரை நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். தற்போது 'இன்னும் பேசவேண்டும்' என்னும் ஒரு தொகுதியை வெளியிட ஆவன செய்துகொண்டிருக்கிறேன். ஏற்கனவே வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகள் உணர்வின் நிழல்கள் (1997), ஈன்ற பொழுதில் (1999), கணநேர நினைவலைகள், மனம் விந்தையானதுதான் (2006) ஆகியனவாகும்.
இவற்றைவிட அரை நிமிட நேரம் என்னும் ஆன்மிகக் கட்டுரைத் தொகுதி, உனக்கொன்றுரைப்பேன் (2009) என்னும் பெண்களுக்கு அறிவுரை கூறும் கடித இலக்கியம், நடைச்சித்திரத் தொகுப்பான எண்ணிலாக்குணமுடையோர் (2010), சமயம் சார்ந்த முன்னோர் சொன்ன கதைகள் (2011) ஆகிய எனது ஆக்கங்களையும் இருபாலைச் சேனாதிராய முதலியாரின் ஆக்கங்களின் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளேன்.

தாங்களின் ஆரம்பகாலப் படைப்புகளுக்கும், தற்போதைய படைப்புகளுக்கும் இடையில் எவ்வகையான வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?


அதிகமான வித்தியாசங்களை அவதானிக்கிறேன். ஆரம்பகாலக் கதைகளில் சிறுபிள்ளைத்தனமான எழுத்து, வாழ்வின் அனுபவங்கள் குறைவாகப் பிரதிபலிப்பது எனப் பல குறைகளைக் கூறலாம். இன்றைய எனது எழுத்திலும் எனக்கு முழுமையான திருப்தியில்லை. மேலும் சிறப்பாக எழுதியிருக்கலாமே என்றே எண்ணுவேன்.


இதுவரை கிடைத்த விருதுகள் பற்றி?

பெற்ற விருதுகளாக - சார்க் மகளிர் அமைப்பு (ஸ்ரீ லங்கா) சிறுகதை (தமிழ்) முதற்பரிசு

கனகசெந்தில் கதாவிருது, சிரித்திரன் சுந்தர் விருது, தகவம் பரிசு, பூபாள ராகங்கள் பரிசு போன்றவற்றைக் கூறலாம்.


சிறுகதைகளில் யதார்த்தமான விடயங்கள்; உள்ளடக்கப்படுகின்ற போதுதான் அது முழுமையாகின்றது என எண்ணுகின்றீர்களா?

நடைபெறுகின்ற நிகழ்வுகள் கருவாக அமையும் வேளையில் யதார்த்தமாக இருக்கவேண்டும் எனக் கூறினாலும் சில அதீத கற்பனைகள் கதைகளாகும் போது அங்கு யதார்த்தத்தைக் காண்பது இயலாது. உதாரணமாக எனது காத்திருப்பு என்ற கதை, இங்கு போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது எழுதப்பட்டது. அதில் போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் வேகமாகப் புனரமைக்கப்படுவதைக் கற்பனை செய்திருக்கிறேன்.

வெளிநாடு சென்றவர்கள் போட்டியிட்டு மீள வருவதாகக் கற்பனை செய்திருக்கிறேன். கற்பனை மெய்ப்படவேண்டும் என்ற கதையிலும் 2000ஆம் ஆண்டிலேயே அற்புதமான ஒரு யாழ்ப்பாணத்தைக் கற்பனை செய்தேன். இன்னும் அவை யதார்த்தமாகவில்லை. எனவே நான் உங்கள் கூற்றை ஒப்புக்கொள்ள முடியாதல்லவா? இதே போன்று விஞ்ஞான ரீதியாக எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்வு ஒன்றைக் கருவாகக் கொண்டு எழுதப்படும் கதைகளையும் கூறலாம்.


சிறுகதைகளுக்கான கருப்பொருளை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றீர்கள்?

நாளும் பொழுதும் வாழ்க்கையில் சந்திக்கும் ஏதோ ஒன்று அடிமனதைத் தொட்டு மறக்கமுடியாத ஒன்றாகிப்போய் அதை எழுதித்தானாகவேண்டும் என்ற உந்துதலோடு கதையாகிறது. இப்படியில்லாமல் எழுதிக்கொடுக்க வேண்டும் என்பதற்காக எழுதுபவை கனதியற்றுப் போவதாய் நான் உணர்வதுண்டு.


சிறுகதைகள் என்றால் அவற்றில் முக்கியமாக எந்தெந்த அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்?

நான் எழுதும்போதுகூட இந்தக் கதைக்கு இந்த இந்த அம்சங்கள் அமையவேண்டுமென எதையும் வரையறுத்துக்கொள்வதில்லை. இலக்கணத்தின்படி இலக்கியம் அமையவேண்டுமென வரையறுக்கக் கூடாதென்றே நான் நினைக்கிறேன்.



சிறுகதைகளின் இன்றைய போக்கு பற்றிய உங்கள் கருத்து யாது?


பல நல்ல சிறுகதைகள் வெளிவருகின்றன. ஆனால் பல்வேறு காரணங்களால் போதிய முதிர்வடையாதவையும் இடம்பிடித்துக் கொள்கின்றன. தேக்க நிலையைவிடப் பின்னோக்கிச் செல்கின்றோமோ என்ற அச்சமும் சிலவேளைகளில் தலை நீட்டுகின்றது.


எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக நீங்கள் வாசிக்கிறீர்கள்? ஏன்?

தற்போது நான் சமய நூல்களையே விரும்புகின்றேன். வயோதிபம் காரணமாகவிருக்கலாம்.



வளர்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

எல்லோரும் கூறும் ஒன்றுதான். முதலில் நிறைய வாசியுங்கள். உங்கள் கதையைப் பட்டை தீட்டி ஒளிரச் செய்யுங்கள். பத்திரிகை பிரசுரிக்காது விடுவதால் உங்கள் கதை தரமற்றது என்றெண்ணி நம்பிக்கையிழந்துவிடாதீர்கள். அவர்களாலும் வரும் கதைகள் எல்லாவற்றையும் வெளியிடவியலாதுதானே. தொடர்ந்து முயலுங்கள். வெற்றியடைவீர்கள்.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

தாங்கள் என்னைப் பேட்டி காண எண்ணியது எனக்கு வியப்பைத் தந்தது. இச்சந்தர்ப்பத்திற்கு முதலில் நான் நன்றி கூறுகிறேன். அடுத்து சஞ்சிகை நடத்துவது சவால்மிக்கதாக இருக்கும்போது அதில் காலூன்றி இலக்கியப்பணி புரியும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்