பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, February 6, 2013

05. திருமதி. எம்.எஸ். தேவகௌரி அவர்களுடனான ஒரு நேர்காணல்

திருமதி. எம்.எஸ். தேவகௌரி அவர்களுடனான ஒரு நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்



பெயர் - எம்.எஸ். தேவகௌரி

பிறந்தது படித்தது - கிளிநொச்சி

பட்டப்படிப்பு - யாழ்ப்பாணப் பல்கலைகழகம் (தமிழ் சிறப்பு)
கொழும்பு பல்கலைக்கழகம் பத்திரிகையியல் டிப்ளோமா

முதல் தொழில் - கல்வித்திணைக்களம் - எழுதுவினைஞர்

ஆர்வத்துடன் இணைந்தது - வீரகேசரி - பத்திரிகையாளர் (1993)
தினக்குரல் - ஞாயிறு பதிலாசிரியர் (1997)

தற்போது - இலங்கை இதழியல் கல்லூரி விரிவுரையாளர் (2005 முதல்)

பிடித்தது - பயணங்கள்

நூலானது - பல்கலைக்கழக ஆய்வு - 80களில் மல்லிகை விமர்சனங்கள்

பங்களிப்பு - ஊடகத்துறை பால்நிலை சமத்துவம் பற்றி பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், நூல்களை செம்மைப்படுத்தல் ((Book Editing) கல்வித்திணைக்களம், பெண்கள் தொடர்பாக கூட்டமைப்பு

தனிப்பட்ட இணைய பக்கம் - www.paadini.blogspot.com

தொடர்புகட்கு - thevagowry@gmail.com


இலங்கை ஊடகவியல் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் நீங்கள் அத்துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் என்ன?

ஊடகத்துறையை நான் தேர்ந்தெடுத்ததே சிந்தனைச் சுதந்திரத்திற்கான வழியாக அது இருந்தததாலேயே. அதை கற்பிக்கும்போதும் மற்றவர்களிடையே சிந்தனையை விரிவுபடுத்தி ஆளுமையில் பல பரிமாணங்கள் ஏற்படுத்த முடியும். அதை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்த முடியும். இந்த வழியை நான் மற்றவர்களுக்கு முறைமைப்படுத்தப்பட்ட கல்வியினூடாக வழங்கும்போது தொழில் திருப்தி ஏற்படுகிறது.


ஏற்கனவே பத்திரிகைத்துறையில் கடமையாற்றிய நீங்கள், அந்த அனுபவம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அது எனக்கு ஒரு தொழிலாகத் தெரியவில்லை. வாழ்ந்ததே அதற்குள்தான். அதை வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு, தவறுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவனம், பல ஊடகத்தொடர்பாளர்களை திருப்திப்படுத்த வேண்டிய கடமை எல்லாமே என்னைப் பட்டை தீட்டிக்கொள்ள சிறந்த அனுபவமாக இருந்தது.


நீங்கள் சிறுகதைத் துறையில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். தற்போதைய எழுத்து நிலை எவ்வாறு இருக்கிறது?

ஆம். உண்மைகளை மட்டுமே எழுதப் பழக்கிய பத்திரிகைத் துறையில் இணைந்த பின் கற்பனை பண்ண முடியவில்லை. இனி மீண்டும் முயற்சிக்க வேண்டும்.


ஊடக்கல்வியை கற்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

எதுவும் முறைமைப்படுத்தப்பட்ட கல்வி முறைக்குள்ளால் வரும்போது அதில் நேர்த்தி திறன் அதிகமாகவே இருக்கும். ஊடகத்துறையும் அவ்வாறானதே. பயிற்சியினூடாகத்தான் இதை நாம் வழங்குகின்றோம். இலகுவில் விரைவாக ஊடகத்துறை நுணுக்கங்களைப் பெற்றுக்கொள்ள இத்தகைய கல்வியைப் பெறுவதே சிறந்த வழி.


ஊடகக் கல்வியானது படப்பிடிப்பு, செய்தி சேகரித்தல் போன்றவற்றில் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?

ஊடகக்கல்வி என்பது எழுதுவதற்கோ, செய்தி வாசிப்பதற்கோ பழகுவது மட்டுமல்ல. ஒரு ஊடகவியலாளன் பத்திரிகையுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்றால் ஒரு செய்தியைக் கண்டுபிடிப்பது, அதை சரிவர பெற்றுக் கொள்வது, அதற்கான புகைப்படம் எடுப்பது, அதைக் கணினி மயப்படுத்துவது, சரி பிழை பார்ப்பது, பக்க வடிவமைப்புச் செய்வது என சகல துறைகளிலும் அறிவுறை, நடைமுறைப் பயிற்சியும் வழங்குகிறோம். இன்று நவீன ஊடகங்களின் வருகை ஊடக இணையத்தளங்களை உருவாக்கியுள்ளது. இது பல்லூடக செயற்பாட்டைக் கொண்டது. அதாவது பத்திரிகை வானொலி தொலைக்காட்சி மூன்றும் இணைந்த செயற்பாடு. எனவே ஒரு ஊடகவியலாளனும் பல்துறைத் திறன் மிக்கவராக இருத்தல் வேண்டும். எனவே மாணவர்களுக்கு வெளியில் சென்று செய்தி சேகரிக்கவும், அதை எப்படி எழுத வேண்டும் என்றும் அதற்கான படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்றும், பக்கத்தை எப்படி வடிவமைக்க வேண்டும் என்றும் பயிற்சியளிக்கிறோம். இவை இன்றைய நவீன யுகத்தில் மிக முக்கியமானவை.


இன்று இலங்கையில் எத்தனை ஊடகக்கல்வி நிறுவனங்கள் தொழிற்படுகின்றன? அதில் எத்தனை மாணவர்கள் கல்வி கற்கின்றனர்? எத்தகைய தகைமை கொண்டோர் இந்தத் துறைக்குள் சேர்க்கப்படுகின்றனர் என்று கூறுங்கள்? அது பற்றி விரிவாக குறிப்பிடுவீர்களா?

ஊடகக்கல்வி நிறுவனம் என்ற வகையில் முழுநேரக் கற்கை நெறியாக முதன் முதல் ஆரம்பித்ததும் தொடர்ந்து செல்வதும் இலங்கையின் ஊடகவியல் கல்லூரி மட்டுமே. இது இலங்கையிலுள்ள ஊடக நிறுவங்களின் தலைவர்களின் அமைப்பு, பத்திரிகையாசிரியர்களின் அமைப்பு, சுதந்திர ஊடகவியலாளர்கள் அமைப்பு, மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்த பல அமைப்புகள் இணைந்து உருவாக்கியதே இலங்கை ஊடகவியல் கல்லூரி. இதற்கு ஆலோசனையும் அனுசரனையும் வழங்கி வருவது சுவீடன் நாட்டின் போஜோ என்ற ஊடகவியற் கற்கைக்கான நிறுவனமும் சுவீடன் கல்மா பல்கலைகழகமுமாகும்.

இங்கே தமிழ், சிங்கள, ஆங்கில மொழி மூலம் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகிய பிரிவுகளில் கற்பிக்கப்படுகிறது. இது ஒருவருட ஊடகவியல் டிப்ளோமா பயிற்சி நெறி. திங்கள் தொடக்கம் வெள்ளி வரையான முழுநேர கற்கை நெறி. க.பொ.த. உயர் தரத்தில் 3 பாடங்களில் சித்திபெற்ற ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் பொதுப் பரீட்சை ஒன்றின் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஒவ்வொரு மொழியிலும் ஒரு பிரிவில் பத்து மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படுவர். பத்துப்பேருக்கும் சிறந்த பயிற்சி வழங்குவதே இதன் நோக்கம். நிரந்தர விரிவுரையாளர்களும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இங்கு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவர்.


ஊடகவியலாளர்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லர். இலக்கியவாதிகள் ஊடகவியலாளராக இருக்கின்றனர் என்ற கருத்தோடு ஒன்றிக்கிறீர்களா? ஏன்?

ஊடகவியலாளர்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லர். அதே போல் இலக்கியவாதிகளும் ஊடகவியலாளராக செயற்படுகின்றனர் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இலக்கியவாதிகளில் சிலர் ஊடகவியலாளர்களாக இணைந்து செயலாற்றுகின்றனர். ஊடகவியல் என்பது உண்மையை துல்லியமாக பக்கச்சார்பின்றி முன்வைத்தலாகும். இதற்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இலக்கியவாதிகளின் சமூக ஆர்வம், மொழி ஆளுமை ஊடகவியல் துறைக்கு பெரிதும் கைகொடுக்கும். ஆரம்பத்தில் எழுதத் தெரிந்த இலக்கியவாதிகள்தான் ஊடகத்துறையில் இணைந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் கைலாசபதி ஒரு சிறந்த இலக்கியவாதி, விமர்சகர், ஆய்வாளர். அவர் தினகரன் ஆசிரியராக இருந்தவர்.


உங்களிடம் கல்வி கற்கும் மாணவர்களிடம் இலக்கிய ஆர்வத்தை எப்படி ஊக்குவிக்கலாம் என நினைக்கிறீர்கள்?

ஒரு ஊடகவியலாளனுக்கு எல்லாத்துறையிலும் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இலங்கை எழுத்தாளர்கள், சிறந்த நூல்கள், விமர்சனங்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுவோம். மாணவர்களும் தமது ஆர்வத்தால் எமது நூலக வளங்களை நன்கே பயன்படுத்துவர்.


ஊடகத்துறையில் ஏற்படும் சவால்கள் என்று எதையேனும் குறிப்பிடலாமா?

உண்மையை மிகச்சரியாக பக்கச்சார்பின்றி முன்வைத்தலே ஊடகத் தொழிலின் அடிப்படை. அதுவே பெரிய சவால்தான். பிறரிடம் கருத்துருவாக்கம் செய்யும் ஊடகங்களை கையாள்வது தனிமனித ஆளுமையுடன் சம்பந்தப்பட்டது. ஒரு செய்தியை ஊடகவியலாளர்கள் இனம் கண்டாலும் அதை சரியாக ஊடகங்களில் முன்வைக்கும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எனவே ஊடகத்துறையே ஒரு சவால் மிக்க துறைதான். சிறந்த முறையில் பணியாற்றுவதற்கு வெளியிலிருந்தும் உள்ளுக்குள் இருந்தும் பல தடைகள் பல வடிவங்களில் வரும். அவற்றை கடப்பதும் லாவகமாக கையாள்வதும் எம் முன் உள்ள சவால்தான்.


இளம் ஊடகவியலாளர்களுக்கு அல்லது ஊடகத்துறை மாணவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

ஊடகத்தினூடாக வெளிவரும் ஒவ்வொரு சொல்லும் மக்களிடையே அதிக தாக்கத்தை விளைவிக்க வல்லன. மக்களிடையே கருத்துருவாக்கத்தை மேற்கொள்ள பாரியளவில் பங்களிப்பவை ஊடகங்களே. எனவே உண்மையான செய்திகளை துல்லியமாகவும் நியாயமாகவும் பக்கச்சார்பின்றியும் முன்வைக்க அதிகபட்சம் முயல வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருடைய தலையீட்டுக்காகவும் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல வேண்டாம். எப்போதும் ஊடகவியலாளருக்கான ஒழுக்க நியமங்களை கருத்தில் கொள்ளுங்கள்.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதைப்போல் ஊடகவியலாளர் (Journalist) என்று சொல்லிப் பெருமைப் பட தொழில் வாண்மை (Professional) தொழிலாக இது மாறவேண்டும். அதற்காக தொழில் தகைமையை வளர்த்து உயர்தர ஊடக கலாச்சாரத்தை பேணிக்கொண்டு செயற்பட சகலரும் ஒத்துழைக்க வேண்டும்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment