பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Saturday, May 25, 2019

37. ஊவா சமூக வானொலியின் சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான பாத்திமா றிஸ்வானா அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2019.05.19

ஊவா சமூக வானொலியின் சிரேஷ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் அறிவிப்பாளருமான பாத்திமா றிஸ்வானா அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


01. உங்கள் குடும்பப் பின்னணி, பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் வெலிமடை தேர்தல் தொகுதியிலுள்ள குருத்தலாவவை மஹத்தன்னையில் வசித்து வருகின்றேன். என்னுடைய பெற்றோரை நேசத்தோடு அறிமுகம் செய்கின்றேன். தந்தை எம்.எம். மொஹம்மட் பாருக், தாய் சுவைரா பீபீ. தந்தை எம்மை விட்டுப் பிரிந்து ஒரு வருடமாகிறது. எனக்கு மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். என்னுடைய கணவர் மொஹம்மட் றிஸ்வான். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மொஹம்மட் அஷ்பான், மொஹம்மட் ஹனான். நான் ஆரம்பக் கல்வி முதல் உயர் தரம் வரை குருத்தலாவவை ப/ முஸ்லிம் தேசிய பாடசாலையில் கல்வி பயின்றேன்.


02. உங்களுடைய முதலாவது படைப்பு எதனூடாக, எப்போது ஆரம்பித்தது?

என்னுடைய முதல் படைப்பு ஒரு கலப்பு நிகழ்ச்சி. அதாவது சிங்களம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்ச்சி. 2002 ஆம் ஆண்டு கொத்மலை FM இல் ஒலிபரப்பப்பட்டது. ஊவா சமூக வானொலி ஆரம்பிப்பதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இரண்டு வருடங்கள் ஊடகப் பயிற்சி வழங்கப்பட்டது. அக்காலத்தில்தான் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. நாம் நிகழ்ச்சியை தொகுத்தும் தயாரித்தும் வழங்கினோம்.


03. வானொலித் துறைக்குள் எவ்வாறு ஈர்க்கப்பட்டீர்கள்?

பாடசாலைக் காலங்களில் ஒரு ஆசிரியையாக வர வேண்டும் என்பது என்னுடைய இலட்சியமாக இருந்தது. கல்விப் பொ.த. உயர் தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்றேன். உயர் கல்வியைத் தொடர்வதற்கு எண்ணியிருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தேன். அவ்வேளை ப/ அல் இல்மா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் ஜனாப் ஜே.எம். ஜவுபர் அவர்கள் அப்போது ஊவா மாகாணத்தில் அமைக்க இருக்கின்ற வானொலிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அத்தோடு விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அவர் தபால் செய்தார். 

வானொலித் துறை எனக்கு புதிய விடயமாக இருந்தது. ஆரம்ப காலங்களில் அறிமுகமில்லாத துறைக்குள் செல்வதற்குத் தயக்கம் இருந்தது. அத்தோடு நான் அதிக கூச்ச சுபாவமுடையவள். பாடசாலை நாட்களில் மேடை ஏறியது கிடையாது. ஆசிரியர்கள் என்னிடம் கேள்விகளைக் கேட்பதற்குக்கூட தயங்குவார்கள். இப்படியிருக்க எப்படி வானொலியில் பேசுவது? எல்லோருக்கும் போலவே அது எனக்கும் ஒரு கேள்வியாக இருந்தது. வானொலிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகப் பரீட்சை இரண்டு நாட்களாக நடைபெற்றது. நானும் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றினேன். தமிழ் மொழி ஒலிபரப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்ட ஏழு பேரில் நானும் ஒருத்தியாக இருந்தேன். அன்று முதல் வானொலி பற்றிய தேடல் அதிகமாக இருந்தது. அத்தோடு என்னுடைய பெற்றோரின் ஒத்துழைப்பு எனக்குப் பூரணமாகவே கிடைக்கப்பெற்றது.


04. ஓர் ஒலிபரப்பாளருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்னவென்று சொல்ல முடியுமா?

நம்முடைய தாய் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. அதுவும் இலங்கை தமிழுக்கென்று தனியிடம் உள்ளது. உலகின் தலைசிறந்த அறிவிப்பாளர்கள் பட்டியலில் நம் நாட்டு அறிவிப்பாளர்கள் முதன்மை நிலையில் உள்ளார்கள். இதை யாராலும் மறுக்க முடியாது. எனவே மொழி வளத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் வாசிக்க வேண்டும். மொழியை நேசிக்க வேண்டும். தேடலில் ஆர்வமுடையவர்களாக இருக்க வேண்டும். நேர முகாமைத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உண்மைத் தன்மையும் நடுநிலையும் கடைப்பிடிக்க வேண்டும். 


05. ஆரம்ப காலத்தில் வானொலித் துறையில் களம் அமைத்து தந்தவர்கள் யார்?

வானொலி துறைக்கு வருவதற்கு முன்னர் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய அநுபவம் எனக்கு இல்லை. வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டதுமில்லை. இத்துறைக்கு உள்வாங்கப்பட்ட பின்னர் ஊவா மாகாண கல்வி அமைச்சு எனது திறமைக்கான களத்தினை அமைத்துத் தந்தது. ஊவா சமூக வானொலியின் முன்னாள் முகாமையாளர்கள் மற்றும் தற்போதைய முகாமையாளர் ஆகியோரும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருந்திருக்கின்றார்கள்.


06. 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற நிகழ்ச்சி தவிர நீங்கள் தயாரித்து வழங்கும் அல்லது தொகுத்து வழங்கும் ஏனைய நிகழ்ச்சிகள் யாவை?

பிரதி வியாழன் தோரும் இரவு 9.15 முதல் 10.00 மணி வரை ஒலிபரப்பாகும், 'நெஞ்சம் மறப்பதில்லை' நிகழ்ச்சி என்னை அடையாளப்படுத்திய நிகழ்ச்சி. இதுதவிர பூவையர்  பூங்கா (பெண்கள் நிகழ்ச்சி), சித்திர சிட்டுக்கள் (சிறுவர் நிகழ்ச்சி), இன்று வரை இணையத்தளம், இலக்கியப் பார்வை, சிறுதூரல் ஆகிய நிகழ்ச்சிகளை தாயாரித்தும் தொகுத்தும் வழங்கி வருகின்றேன்.


07. ஊவா சமூக வானொலிக்கு நீண்ட காலமாக பங்களிப்பை நல்கி வரும் உங்களின் தற்போதைய பணிகள் என்ன? 

ஆரம்பத்தில் சமூகத் தொடர்பாட்டாளராக இணைந்துகொண்டேன். இப்போது சிரேஷ்ட நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கின்றேன். இதுதவிர ஊவா சமூக வானொலியும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைலழகமும் இணைந்து நடாத்தும் ஊடக கற்கை நெறிக்கு வளவாளராகவும் இருக்கின்றேன். ஊவா சமூக வானொலியின் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மற்றும் பெண்கள் சிறுவர் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளராகவும் இருக்கின்றேன். 2003 இல் ஆரம்பித்த இந்தப் பயணம் 2019 இலும் அதாவது சுமார் 16 வருட காலம் தொடர்ந்து செல்கின்றது என்பதில் உண்மையில் மிகுந்த மனநிறைவடைகின்றேன்.


08. நீங்கள் பாத்திரமேற்று நடித்த நாடகங்களின் பெயர்களைக் குறிப்பிட முடியுமா?

முதன் முதலில் வானொலி நாடகத்தில் நடிக்கும் சந்தர்ப்பத்தை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் பிரிவு வழங்கியது. வளர்பிறை நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள் எனக்கு ஊக்கத்தை தந்ததோடு அவர் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சந்தர்ப்பத்தையும் வழங்கினார். என்னுடைய குரலை உலகரியச் செய்தவர்களில் இவரும் ஒருவர். நான் நடித்த நாடகங்கள் நிலைமாற வேண்டும்இ நெஞ்சுப் பொறுக்குதில்லையே ஆகியவையாகும். இந்த நாடகங்களை மரீனா இல்யாஸ் ஷாபி அவர்கள் எழுதியிருந்தார்.


09. ஓர் அறிவிப்பாளராகவும் நாடக நடிகராகவும் இரு வேறு பரிணாமங்களில் உங்களால் எவ்வாறு ஈடுபட முடிகிறது?

ஒரு அறிவிப்பாளர் என்ற வகையில் குறுகிய வட்டத்திற்குள் இருக்க விரும்பவில்லை. வானொலி நாடகத்தில் நடிப்பது ஒரு புதிய அநுபவம். அத்தோடு அது எனக்கு மிகவும் பிடித்த விடயம். எனக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டுடிருக்கின்றேன். இவ்விரு பரிணாமங்களும் என் வாழ்க்கையோடு ஒன்றிப்போயுள்ளது. 


10. உங்கள் வாழ்வில் நீங்கள் ஒலிபரப்புத் துறையில் எதிர் நோக்கிய சவால்கள் எவை?

பெண்ணாக இருப்பதே சவால்தான். ஊடகத் துறையிலும் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கின்றேன். உணர்கின்ற ஒவ்வொரு தருணமும் ஒரு படி முன்னேறுகின்றேன். 

சவால்கள் அத்தனையும் சாதிப்பதற்கே என்பது என்னுடைய தாரக மந்திரம். என்னைப் பொருத்தவரையில் என்னுடைய குடும்பத்தினர் விஷேடமாக காலஞ்சென்ற என்னுடைய தந்தை அதிக அன்பையும் ஆர்வத்தையும் ஊட்டி என்னை வளர்த்தவர். என்னுடைய தாய் எப்போதும் எனக்குப் பக்க பலமாக இருப்பவர்இ என் உடன் பிறப்புக்களின் பாசத்தால் பல வேளைகளில் அதிசயித்திருக்கின்றேன். என்னுடைய கணவர் மற்றும் என்னுடைய பிள்ளைகளின் அன்பும் ஒத்துழைப்பும் தாராளமாகவே கிடைக்கின்றது. ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால் பல பெண்களுக்கு குடும்பத்தின் ஒத்துழைப்பு கிடைக்காததால் அவர்களுடைய திறமைகள், கனவுகள் புதைக்கப்படுகின்றது. அதுவே பெரிய சவாலாக இருக்கிறது. ஒரு பெண் ஊடகவியாலாளர் என்ற வகையில் இதனை நான் நன்கறிவேன்.


11. உங்கள் வானொலியில் ஒலிபரப்பப்படும் மெல்லிசைப் பாடல்கள் பற்றி?

நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் போது பாடல் தெரிவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பேசும் விடயமும் பாடலும் பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் நேயர்களும் நம்முடன் இருப்பார்கள். ஊவா சமூக வானொலியின் பாடல் தெரிவுகள் அருமை என நேயர்கள் பாராட்டுகின்றார்கள். நாம் பாடல் தெரிவில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.


12. அந்தக் காலங்களில் போல் வானொலிகளில் உள்நாட்டுப் பாடலாசிரியர்களின் பாடல்களுக்குப் போதியளவு வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை என்று சொல்லப்படுகின்றதே அதுபற்றி?

நம் நாட்டுப் பாடல்களுக்கு மட்டுமல்ல நம் நாட்டின் ஏனைய படைப்புகளுக்கும் வானொலியில் களம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதில் இன்னுமொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும். தென்னிந்திய பாடலாசிரியர்களுக்கு சவால் விடுமளவிற்கு திறமையான பாடலாசிரியர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். 

ஒரு பாடலுக்கு பாடல் வரிகள் மட்டும் போதுமானதா? வரிகளுடன் இசை, குரல் இவை மூன்றும் சரியாக அமையும் பட்சத்தில் பாடல் வெற்றி பெறும். அப்படிப்பட்ட சூழல் நமது நாட்டில் உள்ளனவா என்றும் யோசிக்க வேண்டும். அப்படியே பல போரட்டங்களுக்கு மத்தியில் பாடல்கள் வெளிவந்தாலும் தென்னிந்திய பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் நாட்டு பாடல்களுக்கு நேயர்கள் மத்தியில் வழங்கப்படுகிறதா? எந்தளவிற்கு வரவேற்பு இருக்கிறது? என்பதையும் கவனிக்க வேண்டும். 

உள்நாட்டு உற்பத்திப் பொருட்களைவிட வெளிநாட்டு உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதில் காட்டுகின்ற ஆர்வம் போல் தான் உள் நாட்டு படைப்புக்களுக்கும் நேர்ந்திருக்கிறது. இது ஒரு துரதிர்ஷ்டமான நிலை. 

ஊவா சமூக வானொலி தயாரிக்கும் பல நிகழ்ச்சிகளில் நம் நாட்டு படைப்பாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி வருகின்றோம். நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியும் அவ்வாறானதொரு நிகழ்ச்சிதான். படைப்பாளர்களுக்குத் தொடர்ந்தும் நாம் சந்தர்ப்பத்தை வழங்குவோம். அத்தோடு களம் கிடைக்கவில்லை என்று சொல்பவர்கள் தமக்கு கிடைக்கின்ற களத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கின்றோமா? என்று சிந்திக்க வேண்டும்.


13. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதிலிருந்து பெண்கள் மீண்டெழ வேண்டும் என்ற நோக்கில் ஓர் ஒலிபரப்பாளராக நீங்கள் முன்னெடுக்கும் விடயங்கள் எவை?

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன என்று ஆழமாய் தேடிப் பார்க்கும் போது பெண்களும் காரணமாக இருக்கின்றார்கள். எனவே பெண்களை மட்டுமல்ல இந்த விடயத்தில் சமூகத்தையும் விழிப்புணர்வூட்ட வேண்டும். பூவையர் பூங்கா பெண்கள் நிகழ்ச்சியில் இதற்காக நான் குரல் கொடுத்தும் இருக்கின்றேன். இதனை ஊவாவின் நேயர்கள் நன்கறிவார்கள். தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்.


14. வானொலித் துறையில் நீங்கள் இதுவரைக்கும் பெற்ற பட்டங்கள்இ விருதுகள் யாவை?

2005 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சர் (முன்னாள்) கௌரவ விஜித் விஜிமுனி சொய்சா அவர்கள் விருது வழங்கி கௌரவித்தார். 2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். 2016 ஆம் ஆண்டு கிழக்கில் லக்ஸ்டோ மீடியா நிறுவனம் 'கலைச்சுடர்' என்ற பட்டத்தையும் விருதும் வழங்கி கௌரவித்தார்கள். 2019 ஆம் ஆண்டு இவ்வருடம் ஊடகத் துறைக்கான ஜனாதிபதி விருது முதல் முறையாக கிடைக்கப்பெற்றது. 2019 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் 2018 ஆம் ஆண்டில் ஒலிபரப்பான சிறந்த கல்வி நிகழ்ச்சிக்கான (தமிழ்) விருது கிடைக்கப் பெற்றது. இவற்றையெல்லாம் ஊடகத் துறையில் எனக்கு கிடைக்கப்பெற்ற அங்கீகாரமாகக் கருதுகின்றேன். இன்னும் இத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்திருக்கின்றது.


15. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களிப்புச் செய்த அநுபவம் உண்டா?

முகநூல்; தொலைக்காட்சியான தாருஸ் ஸபா தொலைக்காட்சியில் சாகரம் என்ற நிகழ்ச்சியில் என்னை நேர் கண்டார்கள். இதுதவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றியது இல்லை.


16. இணைய வானொலி, இணைய தொலைக்காட்சி இவற்றுக்கு தற்காலத்தில் போதியளவு நேயர்கள் உண்டா?

இல்லை என்று சொல்ல முடியாது. காலத்திற்கேற்ப ஊடகத்துறையில் ஏற்பட்ட மாற்றம் இணைய ஊடகங்கள் என்று சொல்லலாம். தமிழன் 24, தாய் டீவீ (தொலைக்காட்சி) ஆகிய இணையத்தள ஊடகங்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றேன். இந்த நிகழ்ச்சிகளுக்கு உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் அதிக வரவேற்பு கிடைக்கின்றது.


17. இறுதியாக ஒலிபரப்பு துறையில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் ஊடகத் துறையில் பாண்டித்தியம் பெற்றவள் இல்லை என்று கருதுகின்றேன். இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. நான் பின்பற்றுகினற சில விடயங்களை குறிப்பிடுகின்றேன். மொழியை நேசியுங்கள், வாசியுங்கள், தேடுங்கள். குறகிய வட்டத்திற்குள் நிற்காமல் எல்லாத் துறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். வானொலி நிகழ்ச்சிகளைக் கேளுங்கள்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment