பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, November 23, 2022

50. கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபீ அவர்களுடனான நேர்காணல்

 கலாநிதி மரீனா இல்யாஸ் ஷாபீ அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

நான் மலையகத்தில் பிறந்து வளர்ந்தேன். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், இஸ்லாமிய கற்கைத்துறைத் தலைவராகவும் பணியாற்றிய எம்.வை. ஷாபீ அவர்களைத் திருமணம் செய்தேன். தற்போது என் கணவருடன் நியூஸிலாந்தில் வசித்து வருகிறேன்.


தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்பப் பின்னணி, இளமைப் பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள்?


நான் கடந்து வந்த பாதையை நினைத்தத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நான் தெஹிதெனிய மடிகே என்ற ஒரு குக்கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தேன். இது சிங்களக் கிராமங்களுக்கு மத்தியில் உள்ள ஒரு சிறிய பிரதேசம். இலக்கித் துறையில் முன்மாதிரிகளோ வழிகாட்டல்களோ எனக்கு இருக்கவில்லை. குறைந்தபட்சம் எங்கள் ஊரில் ஒரு நூலகம்கூட இருக்கவில்லை. என் தந்தை மர்ஹூம் இல்யாஸ் அவர்கள் சிங்கள மொழியில் கல்வி பயின்றவர். ஆனால், என்னில் வாசிப்புப் பழக்கத்தை விதைத்தவர் அவர்தான். நான் விரும்பும் பத்திரிகைகளையும் நூல்களையும் வாங்கித் தந்தார். வானொலி, பத்திகைகளில் எனது ஆக்கங்கள் வெளிவந்த போதெல்லாம் பரிசில்கள் வாங்கித்தந்து என்னை உற்சாகப்படுத்தினார். ஆதனால்தான், நான் தொடர்ந்தும் எழுதி வந்தேன்.


நீங்கள் உங்களுடைய ஆரம்பக் கல்வியை எங்கு கற்றீர்கள் என்று கூற முடியுமா?

ஆரம்பக் கல்வியை எனது ஊர் பாடசாலையான தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றேன். பின்னர் மாவனல்ல சாஹிரா கல்லூரியில் என் கல்வியை தொடர்ந்தேன். படிக்கும் காலத்தில் இருந்தே மாணவர் மன்றம் நிகழ்ச்சிகளில் தலைமை ஏற்று நடாத்தி உள்ளேன். மீலாத் விழா, தமிழ்த்தின விழா என்று எல்லா வகையான கலை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று என் திறமையை வளர்த்துக்கொண்டேன். மேடைப் பேச்சுகளிலும் விவாத அரங்குகளிலும் பங்கு பற்றினேன். தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மும்மொழிக் கற்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு  காட்டினேன்.


தங்களது பல்கலைக்கழக வாழ்வு, பார்த்த தொழில்கள் பற்றிக் கூறுங்கள்?

நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றேன். ஆங்கில ஆசிரியையாக சிறிதுகாலம் பணியாற்றினேன். மலேசியாவில் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் முதுமாணிப் பட்டம் பெற்றபின், தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் ஆங்கில விரிவுரையாளராக சிறிது காலம் பணியாற்றினேன். நியூஸிலாந்தில் விக்டோரியாப் பல்கலைக்கழத்திலும் மேற்படிப்பைத் தொடர்ந்தேன். இன்று கல்வி ஆலோசகராகவும், விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறேன். 


தங்களது முதற் படைப்பு எப்போது எதில் வெளியானது? இலங்கையில் இருந்த காலத்தில் எந்தெந்தப் பத்திரிகைகளில் எழுதினீர்கள்?

எனது முதலாவது கட்டுரை, முதல் சிறுகதை, முதல் கவிதை எல்லாமே தினகரனில்தான்  வெளியானது. 1980 களின் ஆரம்பத்தில் தினகரன் சிறுவர் பகுதியில் நிறைய எழுதினேன். பின்னர் தினகரன், சிந்தாமணி, நவமணி, மித்திரன், வீரகேசரி போன்ற தேசிய நாளிதழ்களில் எல்லாம் என் ஆக்கங்கள் வெளியாகின. வானொலியிலும் நிறையவே எழுதினேன். சஞ்சிகைகளிலும் என் படைப்புகள் வெளியாகி உள்ளன. 


ஏன் புலம்பெயர்ந்து செல்லவேண்டி ஏற்பட்டது?

உலகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை சிறு வயதில் இருந்தே எனக்கிருந்தது. திருமணத்தின் பின்னர் என் கணவரும் அதே எண்ணத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. திருமணம் ஆனபின் ஒரு வாரத்துக்கும் குறைவாகவே இலங்கையில் இருந்தோம். பின்பு மேற்படிப்புக்காக இருவரும் சேர்ந்து மலேசியாவுக்குச் சென்றோம். நாங்கள் சர்வதேச பல்கலைக்கழகத்தில் படித்ததால், வெளிநாட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு நிறையவே கிடைத்தது. அங்கு படிக்கும்போதே, பகுதி நேர தொழிலும் செய்தேன். நமது நாட்டின் கல்விமுறை, வேலைத்தளம் என்பன வித்தியாசமாக இருந்தன. கற்றல், கற்பித்தல் முறைகளில் மாற்றங்களை அவதானித்தேன். வெளியுலகம் பற்றிய என் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. குறுகிய மனப்பான்மையில் இருந்து விடுபட்டு பரந்த மனதுடன் சிந்திக்க ஆரம்பித்தேன். சமூக செயற்பாடுகளில் அக்கறை ஏற்படாத தொடங்கியது. இந்த மாற்றங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. வேறு நாட்டில் வேறு சூழ்நிலைகளிலும் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. மேலும் படிக்க வேண்டும் என்று இருவருமே ஆசைப்பட்டோம். உயர் கல்விக்கான வாய்ப்புகளும் சூழலும் இருவருக்குமே தேவைப்பட்டன. அதற்கான  சந்தர்ப்பம் கிடைத்ததும் புலம் பெயர்ந்தோம்.


இதுவரை வெளிவந்த தங்களது நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்?

01. குமுறுகின்ற எரிமலைகள் - சிறுகதைத் தொகுப்பு

02. தென்னிலங்கை முஸ்லிம்களின் சிறுகதைகள் - ஓர் ஆய்வு 

03. இரவைக் காக்கும் இமைகள் - கவிதைத் தொகுப்பு 

ஆகிய மூன்று நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளேன். அதாவது "குமுறுகின்ற எரிமலைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பும் "தென்னிலங்கை முஸ்லிம்களின்  தமிழ்ச் சிறுகதைகள் - ஓர் ஆய்வு" நூலும் 1998 ஆம் ஆண்டு கல்ஹின்னை தமிழ் மன்றம் மூலமாக வெளியிடப்பட்டன. ஷஷகுமுறுகின்ற எரிமலைகள்' சிறுகதைத் தொகுப்பில் எனது ஆரம்ப கால 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.


"இரவைக் காக்கும் இமைகள்" - கவிதைத் தொகுப்பு 2020 இல் வெள்ளாப்புவெளி  பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மேமன் கவி அவர்களின் தலைமையில் இணையத்தில் வெளியீட்டு விழா நடந்தது. புரவலர் ஹாஷிம் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்கள். உள்நாட்டு இலக்கியவாதிகளும் ஆர்வலர்களும் மட்டுமன்றி ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், துபாய், இந்தியா, ஜப்பான்  போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும் பலர் இணையம் மூலமாக எங்களோடு இணைந்து கொண்டனர். கொரோனா சூழ்நிலையில் இணையவெளியில் வெளியீட்டு விழா நடாத்தப்பட்ட முதலாவது  நூல் இதுவாகும். 


கடைசியாக வெளியிட்ட உங்களது "இரவைக் காக்கும் இமைகள்" கவிதை நூலின் தலைப்பு, உள்ளடக்கம் பற்றி என்ன கூறப் போகின்றீர்கள்?

நான் ஆரம்ப காலத்தில் எழுதிவந்த கவிதைகள் பலவற்றின் பிரதிகளைத் தொலைத்துவிட்டேன். சேமிப்பில் இருந்த ஆரம்ப காலகட கவிதைதைகள் சிலவற்றுடன் சேர்த்து அண்மைக் காலப் கவிதைகளையும் ஒன்று திரட்டி 30 கவிதைகளைத் தாங்கி "இரவைக் காக்கும் இமைகள்" கவிதை நூல் வெளிவந்திருக்கிறது.


கிட்டத்தட்டட இரண்டு தசாப்தங்களைக் கடந்து கவிதை நூலை வெளியிட்டமைக்கான காரணம் என்ன?

இரண்டு தசாப்தங்களாக வெளிநாட்டில் வசித்து வருவதுதான். காரணம் நூல் வெளியீட்டை முழுவதுமாகப் பொறுப் பேற்றுச் செய்ய நம்பிக்கைக்குரிய ஒருவரின் தேடலில் இருந்தேன் என்றே சொல்லலாம்.


மலையக இலக்கிய வளர்ச்சி பற்றி என்ன சொல்வீர்கள்?

மலையகத்தில் இலக்கியவாதிகள் தனித்தனியாக  இயங்கி வருவதாக நினைக்கிறேன். தலை  நகரிலும் கிழக்கிலங்கையிலும் இலக்கியம் சம்பந்தமான நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் பற்றி அடிக்கடி  கேள்விப்படுகிறேன். ஆனால், மலையகத்தில் இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய செய்திகள் வெளியுலகத்துக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. அல்லது அத்தகைய செய்திகள் என்னை வந்தடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


எழுத்துத் துறை தவிர்ந்த வேறு எவ்வகையான செயற்பாடுகளில் இயங்கி வருகிறீர்கள்?

நானும் என் கணவரும் சமூக சேவையில்  மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறோம். இதுபற்றிய விளம்பரங்களோ, புகைப்படங்களோ எங்கும் வெளிவரக்கூடாது என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறோம். அகதிகளாக வந்து குடியேறிய குடும்பங்களின் நலனிலும் கவனம் செலுத்தி வருகிறோம். உற்சாகமூட்டும் பேச்சாளராகவும் நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை சமூகத்துக்கு சொல்லி வருகிறேன். உளவியல் துறையிலும் ஈடுபாடு உண்டு. இன, மத நல்லிணக்க செயற்பாடுகளில் என் கணவருடன் சேர்ந்து பணியாற்றுகிறேன்.


எழுத்துத் துறையில் உங்களை வியப்பில் ஆழ்த்தியவர்கள் யார்? ஏன்?

ஒரு படைப்புக்கு வாசகர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி இருக்குமானால் அதுவே ஓர் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. மூத்த எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இன்றைய சூழலில் நிறைய இளம் எழுத்தாளர்களும் காத்திரமான படைப்புக்களை முன்வைக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். ஒருசிலரை மட்டும் பெயர்ப் பட்டியல் போட்டுக்காட்ட விரும்பவில்லை.


நீங்கள் எழுதி, நடித்த நாடகங்கள் பற்றிக் கூறுங்கள்?

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஏராளமான நாடகங்கள் எழுதியுள்ளேன். இதில் ஷஷபாறையில் பூத்த மலர்' என்ற தொடர் நாடகமும் அடங்கும். நான் முதன் முதலில் குரல் கொடுக்க ஆரம்பித்தது ஆவுஸ்திரேலியா வானொலி வளர்பிறை முஸ்லிம் நிகழ்ச்சியில்தான். இதற்கான சந்தர்ப்பத்தை நிகழ்ச்சித்  தயாரிப்பாளர் முஹம்மது முஹுசீன் அவர்கள் எனக்கு வழங்கினார்கள். பின்னர் ஒரே நாடகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குரலில் பேசி நடித்த அனுபவமும் உண்டு. ஷஷஇலையுதிர் காலம்' என்ற நாடகத்தில் - ஓர் இளம் பெண், நடுத்தர வயதுப் பெண், ஒரு மூதாட்டி என்று மூன்று வேடங்களில் நடித்தேன். நான் இரட்டை வேடமேற்று நடித்த ஷஷபெருநாள் சட்டை' என்ற நாடகம் நேயர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றதால் பல தடவை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது. 


உங்களது எழுத்துக்கள் மற்றும் நாடகங்கள் மூலமாக சமூகத்தில் எவ்வகையான மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே அநேகமாக படைப்புகளை முன்வைக்கிறேன். வாழ்க்கையில் சரிந்து விழுந்து, நம்பிக்கையைத் தொலைத்து வாடுவோருக்கு ஊக்கமூட்டும் ஊன்றுகோலாக என் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளிலும் கவனம் செலுத்தி வருகிறேன். 


உளவியல் துறையில் உங்களுக்குள்ள ஈடுபாடுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

மேலைத்தேய உளவியல் ஆலோசனை முறைகள் முழுக்க முழுக்க தனிமனிதனை முன்னிறுத்தியே வழங்கப்படுகின்றன. சமயங்களில் அவர்களது ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் எங்கள் சமயக் கோட்பாடுகளுடன் முரண்படுகின்றன. இதற்காகவே, நானும் என்  கணவரும் சேர்ந்து இஸ்லாத்தை வழிகாட்டியாகக் கொண்ட உளவியல் வழிகாட்டல் முறையை ஆரம்பித்தோம்.

கணவன் - மனைவிக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படும்போதும், பெற்றோர் - பிள்ளைகளுக்கிடையில் பிளவுகள் ஏற்படும்போதும் மறுமை வாழ்க்கையை முன்னிறுத்தி, அல்லாஹ்வின் அளப்பரிய கருணையையும் மன்னிக்கும் மனப்பான்மையையும் நினைவூட்டி அவர்களுக்கு வழிகாட்டுவதே எங்கள் நோக்கமாகும்.


முகநூலை அதிகமான இலக்கியவாதிகள் பயன்படுத்துகின்றார்களே. இதுபற்றி நீங்கள் நினைப்பது என்ன? காத்திரமான இலக்கியப் பங்களிப்புக்களை முகநூலினுடாக செய்ய முடியுமா?

முகநூல் என்பது ஓர் ஊடகம் மட்டுமே. அதனை பாவிக்கும் விதத்திலேயே அதன் பயன்பாடு அடங்கி இருக்கிறது. முகநூல் மூலமும் காத்திரமான இலக்கிய பங்களிப்பு செய்யலாம். நம் படைப்புக்கள் எல்லை தாண்டிப் பயணிக்கும் வாய்ப்பு முகநூலில் கிடைக்கிறது. முகநூல் மூலமே நான் இலக்கிய உலகில் மறு பிறவி எடுத்தேன் என்றால் அது மிகையாகாது.


முகநூல் மூலம் வாசிப்பு அதிகரிப்பதாகக் கருத முடியுமா?

இன்றைய தலைமுறையினர் இணையத்தில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், நீளமான பதிவுகளை பலர் கடந்து செல்வதையும் பார்க்கிறோம். இது ஆரோக்கியமான வாசிப்பின் அடையாளம் அல்ல.


இலக்கிய உலகில் கற்றுக்கொண்டவற்றில் நீங்கள் வாசகர்களுக்குக் கூற விரும்புவது என்ன?

நல்ல எழுத்தாளராக வேண்டுமானால் பரந்த வாசிப்புப் பழக்கம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள் இருந்துகொண்டு வாசிக்காமல் பல்வேறுபட்ட எழுத்தாளர்களின் படைப்புகளையும் வாசிக்க வேண்டும். படைப்புகளை விமர்சனப் பார்வையுடன் நோக்கும் திறனையும் இதன்மூலம் வளர்த்துக்கொள்ளலாம்.


உள்நாட்டு இலக்கியப் படைப்புக்கள், வெளிநாட்டு இலக்கியப் படைப்புக்கள் ஆகியவற்றில் தாங்கள் அவதானிக்கும் பிரதான வேற்றுமைகள் எவை?

இலக்கியங்கள் தான் வாழும் சூழலையும் அரசியல் பொருளாதாரக் காரணிகளையும் உள்ளடக்கியே  படைக்கப்படுகின்றன. அந்த வகையில் பார்த்தால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இலக்கியப் படைப்புக்களில் வேற்றுமைகளைவிட ஒற்றுமைகள்தான் மேலோங்கி இருக்கின்றன.


நீங்கள் நேசித்து வாசித்த படைப்பைப் பற்றியும் அதன் சுவாரஷியத் தன்மை பற்றியும் குறிப்பிட முடியுமா?

நான் அண்மையில் வாசித்து முடித்த நூல், ஷஷஹுஸ்னாவின் கதை'. 2019 இல் நியூஸிலாந்து பள்ளிவாசல்கள் இரண்டில் நடந்த மிலேச்சத்தனமான மனித வேட்டைத் தாக்குதலில் உயிரிழந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை சரிதையை அவர் கணவர் எழுதியிருக்கிறார். 

வாழ்வியல் பண்புகளும் வரலாறும் கலந்த ஒரு சிறந்த நூலாக, "ஹுஸ்னாவின் கதை" வெளிவந்திருக்கிறது. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது - அன்பால்தான் அது சாத்தியம் என்ற சுலோகத்தோடு வெளிவந்திருக்கும் இந்த ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்க்கும் ஆவலில் இருக்கிறேன்.


சமகாலமாக நாவல் இலக்கியங்களின் வரவு கணிசமாக குறைந்து வருகின்றது. அந்தவகையில் நீங்கள் நாவல்கள் வெளியிட ஆர்வம் காட்டவில்லையா?

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் சூழலை மையமாக வைத்து இதுவரை எந்த நாவலும் வெளியிடப்படவில்லை என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சியில் ஈடுபட என்னைத் தயார்படுத்திக்கொண்டு வருகிறேன். மனதுக்குள் சில நாவல்கள் கருக்கட்டி இருக்கின்றன. காலமும் நேரமும் சாதகமாக வந்தால் எழுதி முடிக்கும் எண்ணமுண்டு. 


உங்களுக்கு அல்லது உங்களுடைய படைப்புக்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், கௌரவங்கள் ஏதும் இருப்பின்?

படிக்கும்போது  பாடசாலை மட்டத்திலும், மாவட்ட, மாகாண, தேசிய ரீதியிலும் பல பரிசுகள் வாங்கியுள்ளேன். பல்கலைக்கழக மட்டத்தில் பீடங்களுக்கிடையிலான இலக்கியப் போட்டிகளிலும் வெற்றியீட்டி உள்ளேன்.  

1999 இல் மத்திய மாகாண முஸ்லிம் கலைஞர் கௌரவிப்பில் 'கலைச்சுடர்' பட்டம் வழங்கி  கௌரவிக்கப்பட்டேன். அதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்து வந்துவிட்டேன்.


இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

இந்த வருடம் பயணக் கட்டுரைத் தொகுப்பொன்றை வெளியிட ஆர்வமாக இருந்தேன். ஆனால், டிசம்பர் மாதம் கொரோனா சூழ்நிலையில் நான் வெளியிட்ட ஷஷஇரவைக் காக்கும் இமைகள்' நூல் இன்னும் மக்களை சென்றடையவில்லை. இலங்கை நாட்டின் பல பகுதிகள் முடக்கப்பட்டிருக்கின்றன. எனவே, நாட்டில் நிலைமை சீராகும் வரையில் அந்த எண்ணத்தை ஒத்தி வைத்துள்ளேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment