பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Thursday, November 24, 2022

51. கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் உடனான நேர்காணல்

'திதுலன தாரக்கா' என்ற சிங்கள மொழியிலான நூல் வெளியீட்டை முன்னிறுத்திய விசேட நேர்காணல்


அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஓய்வுநிலை தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் உடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


அரசாங்க தகவல் திணைக்கள ஓய்வு நிலை தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஹசைன் எழுதிய இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலான"மின்னும் தாரகைகள்" நூல் சிங்களத்தில் வெளிவந்துவிட்டது என்ற செய்தி இலங்கை வாழ் இலக்கிய நெஞ்சங்களுக்கு ஓர் இனிப்பான செய்தியாகும்.

இவரது "மின்னும் தாரகைகள்" ஆய்வு நூல் கடந்த 2018.11.11 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட ஒரு மாபெரும் வெற்றி விழாவாக இது பலராலும் பேசப்பட்டது. இந்த ஆய்வு நூல்தான் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி இலங்கையில் வெளிவந்த முதலாவதும் முக்கியமானதுமான நூல் என சான்றோர்களால், பேராசிரியர்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வு நூலின் சிங்கள மொழி பெயர்ப்பும் நூலாசிரியர் நூருல் அயின் நஜ்முல் ஹுசைனினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளமை மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது. ஷஷதிதுலன தாரக்கா' (மின்னும் தாரகைகள்) என்ற பெயரிலேயே இந்த நூல் வெளிவந்துள்ளது. இலங்கை பெரும்பான்மை சமூகத்தினரிடையே இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் அரிய பெரிய நோக்கத்தோடு வெளிவரும் இந்த நூலும் இலங்கை இலக்கிய வரலாற்றில் தடம் பதிக்கும் ஒரு முக்கிய நூலாக இந்த நூலைக் கருத முடியும். ஏன் என்றால் இந்த நூலே இலங்கை இலக்கிய வரலாற்றில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆய்வு செய்யும் முதலாவது நூலாகக் காணப்படுவது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயமாகும். அதேபோல் சிங்கள மொழியிலும் "திதுலன தாரக்கா" என்ற இந்த நூலே முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆய்வு செய்யும் முதலாவது சிங்கள மொழியிலான நூலாக அமைகிறது. 2021.12.04 ஆம் திகதி "திதுலன தாரக்கா" என்ற நூல் வெளிவர இருக்கும் இந்த நிலையில் திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைனுடனான நேர்காணலை இனி பார்ப்போம்.

01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது புதிய வாசகர்களுக்காக மிகவும் சுருக்கமாகக் கூறுங்கள்?

நான் மலையகத்தைச் சேர்ந்தவள். கண்டி மாவட்டத்தின் ஹேவாஹெட்ட தொகுதியிலுள்ள உடுதெனிய என்ற சிற்றூரே நான் பிறந்த ஊர். அல்ஹாஜ் எம்.எம். ரஷீத் - உம்மு ஸல்மா ரஷீத் தம்பதிகளின் மூத்த புதல்வி. கல்வி கற்றது உடுதெனிய முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் மடவளை மதீனா தேசிய கல்லூரி. முதலாவது தொழில் பிரவேசமே ஊடக நிறுவனம்தான். அன்றைய ஜனரஞ்சக பத்திரிகையாக விளங்கிய தினபதி - சிந்தாமணி அலுவலக ஆசிரியபீட பயிற்சி பத்திரிகையாளராக 1980 ஆம் ஆண்டு நியமனம் பெற்றேன். பத்திரிகை உலக ஜாம்பவான் என்று போற்றப்படும் எஸ்.டி. சிவநாயகம் ஐயாவின் பாசறையில் பத்தாண்டுகள் பெற்ற பயிற்சியும் அனுபவமும் பக்குவமும்தான் இத்துறையில் நான் காலூன்றி நடை பயில வழிவகுத்தது. 1994 ஆம் ஆண்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நியமனம் பெற்றேன். அங்கும் சுமார் 20 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றேன்.


கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக தமிழ் மொழி மூல இதழியல் டிப்ளோமா பாடநெறி  1997 ஆம் ஆண்டுதான் ஆரம்பமானது. அந்த இதழியல் டிப்ளோமா பாடநெறியை சிறந்த முறையில் பூர்த்தி செய்து நல்ல பெறுபேறு பெற்றேன். கொழும்பு திறந்த வெளி பல்கலைக்கழகத்திலும் பத்திரிகைத் துறை பாடநெறியில் சித்தி எய்தினேன். தொலைக்கல்வி நிறுவனத்தின் ஊடகத்துறை டிப்ளோமா பட்டம் பெற்றேன். கணணித் துறையிலும் பல பயிற்சி நெறிகளையும் நிறைவு செய்துள்ளேன்.


02. ஊடக அதிகாரியாகப் பணியாற்றிய நீங்கள் நூலாசிரியராக எப்படி பரிணமித்தீர்கள்? அதற்கான காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள் யார்?

அரசாங்க தகவல் அதிகாரியாக நான் 1994 ஆம் ஆண்டு நியமனம் பெற்றேன். ஆனால் அதற்கு முன்னரே 1997 மார்ச் 16 ஆம் திகதி 'பண்பாடும் பெண்' என்ற பெயரில் எனது முதலாவது நூல் வெளிவந்தது. எனவே நான் நூலாசிரியரானது 1997 ஆம் ஆண்டில்தான். எனது முதலாவது நூல் வெளிவருவதற்கு முக்கிய காரண கர்த்தாவாகத் திகழ்ந்தவர் எனது பத்திரிகை உலக தந்தை எஸ்.டி. சிவநாயகம் ஐயாதான். தினபதி - சிந்தாமணி பத்திரிகைகளில் பிரசுரமான பெண்களைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகளே இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்த நூலுக்கு சிறந்ததொரு அணிந்துரையை தந்தவரும் சிவநாயகம் ஐயாதான். 'இந்த அணிந்துரையில் எதை வேண்டுமானாலும் நீங்கள் திருத்திக் கொள்ளுங்கள். என் மகளுக்கு ஒப்பான நூருல் அயின் என்று நான் எழுதியுள்ளேனே, அந்த வசனத்தை மட்டும் எடுத்து விடாதீர்கள்' என்று சிவநாயகம் ஐயா அன்று கூறிய அன்பார்ந்த வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ரீங்காரமிடுகின்றன. அன்னார் என் மேல் வைத்திருந்த அன்பு - பற்று எல்லாம் அலாதியானவை. 'ஊடகத் துறையில் இவள் ஜொலிப்பாள்'  என்று அன்றே எதிர்வு கூறி ஆசியுரை வழங்கியதும் அன்னார்தான். எனவே அன்னாரை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.

அடுத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் முன்னணியின் தலைவரான சகோதரர் ஃபிஸூலி முஹம்மதும் எனது முதல் நூல் வெளியீட்டின் முக்கிய காரண கர்த்தாதான். அன்றைய வீடமைப்பு அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வாவின் ஆசியுரையையும் பெற்றுத் தந்து, நூல் வெளியீட்டு விழாவையும் சிறப்பாக நடத்தி முடிக்க அன்னார் செய்த பங்களிப்பையும் இங்கு நன்றியுடன் நினைவு கூருகிறேன். அத்துடன் எனது கணவர் நஜ்முல் ஹுசைன், சகோதரர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், மற்றும் அந்த நூலின் அட்டைப் படத்தை வடிவமைத்த தம்பி ரஷீத் எம். ரியாழ் போன்றோரையும் இங்கு அன்புடன் நினைவு கூருகிறேன்.


03. இதுவரை வெளிவந்த உங்கள் நூல்கள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுங்கள்?

எனது முதலாவது நூல் 'பண்பாடும் பெண்' - 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது. அடுத்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி என்னால் தொகுக்கப்பட்ட எனது கணவரின் கவிதை நூல் 'நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள்' என்ற பெயரில் வெளிவந்தது. அதே ஆண்டு 2018.11.11 ஆம் திகதியன்று என்னால் எழுதப்பட்ட இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலான 'மின்னும் தாரகைகள்' என்ற நூல் வெளியிடப்பட்டது. 2018 டிசம்பரில் எனது கவிதைத் தொகுப்பு நூல் 'பூஞ்செண்டு' என்ற பெயரில் வெளிவந்தது. எனது நான்காவது நூலாகத்தான் 'திதுலன தாரக்கா' என்ற சிங்கள நூல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வெளிவரவிருக்கிறது.


04. வெளிவருகின்ற மின்னும் தாரகைகள் நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் பற்றி விசேடமாகக் கூற விரும்பும் செய்தி என்ன? ஏன் இந்த நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று நினைத்தீர்கள்?

2018.11.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட எனது 'மின்னும் தாரகைகள்' என்ற ஆய்வு நூலின் சிங்கள மொழிபெயர்ப்பே இந்த 'திதுலன தாரக்கா' என்ற நூலாகும். ஆனால் ஒரு திருத்தம். 'மின்னும் தாரகைகள்' தமிழ் நூலில் 'நூல்களை வெளியிட்ட நூலாசிரியர்கள்' 87 பேரின் தகவல்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால் எனது சிங்கள ஆய்வு நூலில், நூல்களை வெளியிட்ட நூலாசிரியர்கள் 124 பேரின் தகவல்களை உள்வாங்கியுள்ளேன். நூல்களை வெளியிடாவிட்டாலும் இலக்கியத்துக்கு பங்களிப்புச் செய்த முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள், வானொலிக்கு மட்டும் பங்களிப்புச் செய்த முஸ்லிம் வனிதையர்கள் என்ற இரு தலைப்புகளிலும் அத்தகையோரின் பெயர்ப் பட்டியலை மாத்திரமே இதில் பதிவு செய்துள்ளேன்.


பொருளாதார நெருக்கடி, புத்தகப் பிரசுரத்துக்கான தாள்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இத்தகையோரின் முழுமையான தகவல்களைத் தவிர்க்க வேண்டி ஏற்பட்டதையிட்டு வருந்துகிறேன். எனினும் அவர்களது பெயர்ப் பட்டியலையாவது பதிவு செய்ததையிட்டு மன ஆறுதலடைகிறேன்.


06. நூல்களை வெளியீடு செய்வதில் எவ்வகையான சிரமங்களை எதிர்கொண்டீர்கள்?

எனது 'பண்பாடும் பெண்', 'பூஞ்செண்டு' ஆகிய நூல்களுக்கு நான் பெரியளவில் சிரமங்களை எதிர் கொள்ளவில்லை. காரணம் அவை என் சொந்தப் படைப்புகள். ஆனால் 'மின்னும் தாரகைகள்' ஆய்வு நூலுக்கு நான் எதிர் கொண்ட சிரமங்கள் ஏராளம் - தாராளம். அவற்றை அந்த நூலிலேயே நான் பதிவு செய்துள்ளேன். ஒவ்வொரு ஆளுமையையும் நான் அணுகுவதற்கு பட்ட சிரமங்கள், ஒரு சில எழுத்தாளர்கள் தமது தகவல்களைத் தருவதற்கு போட்ட பீடிகைகள் அப்பப்பா... அவற்றை இப்போது நினைக்கும் போதும் நோகிறது எந்தன் நெஞ்சம். ஓரிரு இளம் எழுத்தாளர்களைத் தவிர இம்முறை பலர் மிகவும் ஆர்வத்துடன் தமது தகவல்களைத் தந்துதவினார்கள்.


ஆனால் இம்முறை எனது நூல் சிங்கள நூல் என்பதால் பக்க வடிவமைப்புச் (டுயலழரவ) செய்வதில் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. பக்க வடிவமைப்புச் செய்தவர் ஒரு சிங்கள சகோதரர். ஆனால் நான் தொகுத்த இந்த ஆய்வு நூலுக்குரிய படைப்பாளிகளின் நூல்கள் பெரும்பாலும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன.  எனவே இது இன்னாரது நூல் என்று இனங்காண்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. சில நூல்களின் அட்டைப் படங்கள் புகைப்படங்கள் என்பன மாற்றி மாற்றிப் போடப்பட்டிருந்தன. இதனை சரி செய்ய பல முறை எனது துணைவர் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவர் இல்லம் செல்ல வேண்டி ஏற்பட்டது. அதுமட்டுமல்ல கணினி மயப்படுத்தலில் கூட முஸ்லிம் பெயர்களில் பரிச்சயம் இல்லாததால் பலமுறை சீர் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இவ்வாறு எதிர்நோக்கிய சிரமங்கள் பல உள.


7. மொழிபெயர்ப்புத் துறையில் நீங்கள் செய்த செய்துவரும் ஏனைய பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

சிங்கள மொழிபெயர்ப்புத் துறையில் நான் செய்த பங்களிப்புகள் பல உள்ளன. பலருக்கு இவை தெரியாமல் இருக்கலாம். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நான் பணி புரிந்த காலப் பகுதியில்தான் நான் எனது சிங்கள மொழி ஆளுமையை பெரிதும் வளர்த்துக்கொண்டேன். அரசகரும மொழித் திணைக்களம் நடத்திய சிங்கள மொழி உயர் பாடநெறியை வெற்றிகரமாக முடிக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதன் பயனாக சுயமாகவே ஒரு சிங்கள காலாண்டு பத்திரிகையை வெளியிடும் பாரிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு மாவட்ட செயலகத்தில் ஊடகப் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய போது 'கொழம்ப புவத்' (கொழும்பு செய்திகள்) என்ற பெயரில் வெளிவந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நான் பணிபுரிந்தேன். அதே திணைக்களத்தின் சிங்கள சஞ்சிகையான 'தெசத்திய' சஞ்சிகையில் கூட சிறப்பு கட்டுரை ஆசிரியராக பல தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் நேர்காணல்களை தொடர்ந்து சிங்களத்தில் எழுதி வந்தேன். 'தொரதுரு',  'பொதுஜன' ஆகிய வாராந்த சிங்கள பத்திரிகைகளுக்கும் நிறையவே எழுதியுள்ளேன்.


அவ்வாறே கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய உடுவை தில்லை நடராஜாவின் மூன்று சிறுவர் கதைப் புத்தகங்களை சிங்களத்தில் மொழி பெயர்ப்புச் செய்துள்ளேன். கடற்கன்னி, பேசும் பேனா, மந்திர கண்ணாடி என்பன அந்த மூன்று நூல்கள் ஆகும். இவைத்தவிர எனது  கணவர் நஜ்முல் ஹுசைனின் கவிதைகளை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறேன். இறைவன் நாடினால் - காலம் கனிந்தால் இந்த கவிதைகளும் நூலுருப் பெறலாம்.


8. மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கும் போது அவற்றின் மூல நூல்களை வாசிப்பது போன்ற இரசனை கிடைக்குமா ?

மொழிபெயர்ப்பாளர் அந்த நூலை மொழிபெயர்க்கும் பாணியில்தான் இது தங்கியுள்ளது. குறித்த நூலை நன்கு படித்து, கிரகித்து அதன் இரசனை குன்றாமல் மொழி பெயர்க்கும் மொழிபெயர்ப்பாளரின் திறமையில்தான் அது தங்கி இருக்கிறது. வரிக்கு வரி மொழிபெயர்ப்புச் செய்யாமல் விடயத்தை நன்கு கிரகித்து எழுதினால் அந்த நூலின் இரசனை குன்றாது என்பது எனது கருத்தாகும். 


9. சமகால இலக்கியம் மீதான உங்கள் பார்வை எப்படி இருக்கிறது?

மூத்த இலக்கியவாதிகளின் இலக்கியங்கள் என்றும் கனதியாகவே இருக்கின்றன. 'ஓல்ட் இஸ் கோல்ட்' என்பார்களே அதுபோல. அத்தகையோரின் இலக்கியங்கள் இன்றும் சுவை குன்றாத அமிர்தமே. ஆனால் சமகால இலக்கியங்களை நோக்கும் போது இன்றைய இளைய படைப்பாளிகளின் படைப்புகளில் சில மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு சிறப்பாக இருந்தாலும் மேலும் சிலரின் எழுத்துகளை ஜீரணிக்கவே முடியாதுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாகக் கூறுவதாயின் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களை விட சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாக நடமாடும் எமது இளைய தலைமுறையினர் இதனை முறையாக பயன்படுத்துகிறார்களா என்பதுதான் கேள்விக்குறி. 

ஆளுமைகளின் சிறந்த நூல்களைத் தேடி எடுத்து வாசிப்பதன் மூலம் இளைய சந்ததியினருக்கு நல்ல இலக்கியங்களை படைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. இளைய எழுத்தாளர்களுக்கு சிறப்பாக வழிகாட்டும் பொறுப்பு மூத்த எழுத்தாளர்களுக்கும் இருக்கின்றது என்பதையும் மறந்து விடக்கூடாது. இளைய எழுத்தாளர்களை தட்டிக் கொடுப்பதன் மூலமும் அவர்களது பிழைகளை மென்மையாக திருத்துவதன் மூலமும் நாளை அவர்களை சிறந்த எழுத்தாளர்களாக உருவாக்கலாம் என்பது எனது நம்பிக்கை.


10. இலக்கியப் பணி சார்ந்த உங்கள் கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

இலக்கிய உலகில் பல குத்து வெட்டுக்கள், சுயநலம், காழ்ப்புணர்ச்சிகள், காலை வாருதல் போன்ற அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை கண்டும், கேட்டும், பார்த்தும் வந்துள்ளேன். ஆனால் என்னைப் பொருத்தவரை இலக்கியம் சார்ந்த எனது கொள்கை என்ன என்பதை நீங்கள் எனது 'மின்னும் தாரகைகள்'; ஆய்வு நூலை முழுமையாக வாசித்தால் புரிந்து கொள்வீர்கள். எந்த ஒரு சுயநலமும் கருதாது பொது நலத்துடன் அனைத்து படைப்பாளிகளையும் நோக்கியுள்ளேன். இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்த இலங்கையின் அனைத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர்களையும் இலக்கிய வானில் 'மின்னும் தாரகைகளாக' மகுடம் சூடி மகிழ்ந்துள்ளேன். 

மூத்த ஆளுமைகளை நாம் மதிக்க வேண்டும். அவ்வாறு வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கு வளர வழி விட வேண்டும். அவர்களும் இத்துறையில் உயர நாம் ஏணியாக இருக்க வேண்டும். அவர்களை தட்டி விடாது தட்டிக் கொடுக்க வேண்டும். நாம் பிறரையும் நம்மைப் போலவே மதித்தால் பிறரால் நாம் மதிக்கப்படுவோம். இலக்கியப் பணி சார்ந்த எனது கொள்கை இதுதான்.


11. மலையக முஸ்லிம்களின் இலக்கியப் பங்களிப்புகள் பற்றி விசேடமாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

மலையக இலக்கியத்தின் சின்னங்களாக அறிஞர் சித்திலெப்பை போன்ற பலர் உள்ளனர். விசேடமாக கூறுவதாயின் வித்வதீபம் அருள்வாக்கி அப்துல் காதர் பிறந்த மண் மலையகம்தான். பாட்டால் விளக்கேற்றி, பாட்டால் விளக்கணைத்த இந்த மாபெரும் புலவரின் ஞாபகார்த்தமாக ஒரு முத்திரை வெளியிடுவதற்கு கூட திராணியற்றவர்களாகத் தவிக்கிறோம்.  இந்த நிலையில் மலையக முஸ்லிம்களின் இலக்கிய பங்களிப்புப் பற்றி மேலும் கூறி என்ன பயன் என எண்ணத் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல நான் கூட மலையகத்தில் பிறந்து வளர்ந்தவள். ஆனால் தொழில் நிமித்தம் தலைநகரை வசிப்பிடமாகக் கொண்டதனால் மலையக இலக்கிய அமைப்புகள் கூட எமது இலக்கியப் பங்களிப்புகளைக் கண்டுகொள்வதில்லை. அதுகூட வேதனைக்குரிய விடயமே. ஒரு கை தட்டினால் ஓசை கிளம்பாது. எனவே மலையகத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் இலக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே இலக்கியத்தை, எழுத்தை நேசிக்கும் எனது வேணவாவாகும்.


12. இலக்கிய உலகில் மறக்க முடியாத சம்பவம் ஏதும் உண்டா?

ஆமாம். எனது நான்கு தசாப்த ஊடக மற்றும் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத பல சம்பவங்கள் உண்டு. குறிப்பாக சொல்வதாயின் 2016 ஆம் ஆண்டு எமது இந்திய சுற்றுலாவின் போது நானும் எனது துணைவரும் தமிழ்நாடு பனையூரில் உள்ள கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அந்த மாபெரும் கவிஞரை நேரில் சந்தித்து உரையாடியது, அன்னார் எவ்வித மமதையும் இன்றி எம்மோடு பழகியது, நூல்களைப் பரிமாறிக்கொண்டமை போன்ற விடயங்கள் எனது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத பசுமை நினைவுகளே.


13. புலம்பெயர் இலக்கியங்கள் குறித்து உங்களது கணிப்பு யாது?

புலம்பெயர் இலக்கியவாதிகளின் இலக்கியச் செயற்பாடுகள் குறித்து அறியும் போது உள்ளம் புளகாங்கிதம் அடைகிறது. எங்கு சென்றாலும் இலக்கியத்தில் அவர்களுக்கு உள்ள ஈடுபாடுகள், தமிழ் மொழியின் மீது அவர்கள் காட்டும் பற்றுக் குறித்து நான் உண்மையிலேயே ஆச்சரியம் அடைவதுண்டு. ஞானம் சஞ்சிகையினால் மாதா மாதம் நடாத்தப்படும் இணையவழி கலந்துரையாடல்கள் மூலமாகவும் இதனை நான், நன்கு அவதானித்துள்ளேன். தமிழ் மெல்லச் சாகும் என்ற வாசகத்தை பொய்யாக்கி தமிழை வளர்க்கும் இந்த நல்ல இலக்கிய உள்ளங்களை மெச்சுகின்றேன்.


14. இலக்கியத் துறையில் உங்களின் பங்களிப்புகளுக்கு கிடைத்த விருதுகள், பட்டங்கள் பற்றி?

அரச மட்ட விருதான கலாபூசணம் விருது உட்பட பல்வேறு அமைப்புகளினால் இலக்கியத் தாரகை, ஊடகத் தாரகை, தகவல் ஜோதி, விவேக விண்மீன், கலா ஜோதி, கலையருவி, கவி தீபம் என எனக்கு கிடைத்த பட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் பட்டங்களுடன் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி எனது மின்னும் தாரகைகள் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவின் போது இலங்கையின் மூத்த இலக்கிய ஆளுமையும் நிந்தவூரின் முதல் முஸ்லிம் பெண் அதிபருமான பண்டிதர் மைமூனா ஸெயினுலாப்தீன் அவர்களால் அந்த விழாவின்போது 'தாரகைகளின் தண்மதி' என்று பட்டம் சூட்டி என்னை கௌரவப்படுத்தியமை என் நெஞ்சை நெகிழச் செய்த தருணமாகும்.


15. விருதுகள் தகுதியானவர்களுக்குத்தான் வழங்கப்படுகின்றனவா?

விருதுகளும் பட்டங்களும் கொச்சைப்படுத்தப்படுவதைத்தான் இன்று நம்மால் ஜீரணிக்க முடியாமல் உள்ளது. படித்தவர்களுக்கு கௌரவமாக வழங்கப்படும் 'கலாநிதி' பட்டங்கள் கூட நிதிக்காக கல்லாதவர்களுக்கு வழங்கப்படுவதாக முறைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் சான்றோர் பலர். ஒரு சில அமைப்புகள் பணம் கொடுத்தால் பட்டம் வழங்கும் வியாபாரத்தை மிகவும் கச்சிதமாக நடத்தி வருகின்றன. இந்த கைங்கரியத்தை இன்று முகநூலில் ஊடாக இயங்கும் சில குழுமங்களும் செய்து வருகின்றன. ஒருசில கவி வரிகளை எழுதுபவர்களுக்கெல்லாம் 'பாவேந்தர்', 'கவிவேந்தர்', 'கவிப்பேரரசி' என்றெல்லாம் உயர் பட்டங்களைச் சூட்டினால் மூத்த ஆளுமைகளுக்கு இவை அகௌரவம் ஆகாதா? எனவே இந்த பொன்னாடைகள் பட்டங்கள் எல்லாம் இன்று செல்லாக் காசாய் போய்விட்டன என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


16. இறுதியாக சொல்ல விரும்புவது?

'திதுலன தாரக்கா' (மின்னும் தாரகைகள்) என்ற எனது சிங்கள ஆய்வு நூலின் வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி சனிக்கிழமை (2021.12.04) காலை 10 மணிக்கு கொழும்பு அல் ஹிதாயா தேசிய கல்லூரி அல்ஹாஜ் பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது. கொரோனா கால நெருக்கடியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கே இவ் விழாவில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே என்னையும் என் எழுத்தையும் நேசிக்கும் அத்தனை அன்பு உள்ளங்களையும் மொத்தமாக இந்த விழாவுக்கு அழைக்க முடியாமைக்கு வருந்துகிறேன். நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எனது விழா சிறப்பாக நடைபெற பலரும் மனதார வாழ்த்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இறுதியாக எனது இந்த விழாவில் ஒரு புதுமையைப் புகுத்த உள்ளேன். நானறிந்த வகையில் கொழும்பில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது முதல் பிரதியைப் பெறுவது இதுவரை காலமும் ஓர் ஆண் மகனாகத்தான் இருந்தது. ஆனால் இந்த நிலையை மாற்றி ஒரு பெண் பிரமுகர் ஒருவரை எனது விழாவில் அறிமுகம் செய்து வைப்பதில் அக மிக மகிழ்கிறேன். ஆமாம் அக்கரைப்பற்றில் இருந்து அக்கறையுடன் வந்து எனது திதுலன தாரக்கா சிங்கள நூலின் முதல் பிரதியைப் பெற இருப்பவர் நூலாசிரியரும் ஓய்வு பெற்ற ஆசிரியையும் கவிதாயினியுமான மதீனா உம்மா என்ற என் மனதைக் கவர்ந்த சகோதரி என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனது வரலாற்று சிறப்புமிக்க சிங்கள நூலும் வரலாறு படைக்க வாழ்த்துங்களேன் என்ற கோரிக்கையுடன், இந்த நேர்காணலைச் செய்த சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மதுக்கும், 'தினக்குரல்' ஆசிரியருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment