பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, April 7, 2020

42. வஸீலா ஸாஹிர் உடனான நேர்காணல்

வஸீலா ஸாஹிர் உடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்



உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

நான் பிறந்தது மாத்தளை, வாழ்ந்தது மினுவாங்கொடை. இப்போது வசிப்பதோ நீர்கொழும்பு. அழகின் அரங்கம் என் மகள் அஸ்ரிகா, அன்பின் அவதாரங்கள் ஆசிக், ஆதில், அசீம். இறைவன் எனக்களித்த பெரும் செல்வங்கள் இவர்கள்.

உங்கள் பாடசாலை வாழ்க்கை பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் படித்தது கல்லொளுவை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தான். எனது பாடசாலைக் காலத்திலேயே நான் வாசிப்பில் தீவிர ஆர்வம் காட்டி வந்தேன். பல கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று அந்தப் பாடசாலை நாட்களிலேயே நான் பல நூல்களை வாசித்தேன். இந்தப் பாடசாலைக் காலம் எனக்கு ஒரு பொற்காலமாகும்.


நீங்கள் எப்போது, எந்த வயதில் எழுத்துத் துறைக்குள் நுழைந்தீர்கள்? உங்களது முதலாவது எழுத்து முயற்சி எதனூடாக ஆரம்பித்தது?


ஒவ்வொரு நாட்களும் நான் காத்திருந்தேன். என்னில் என் எழுத்துகள் எந்த வடிவத்தை செதுக்கப் போகின்றது என்று. என் எதிர்பார்ப்புகளின் கனவுகள் உறங்கிக் கொண்டுதான் இருந்தது. இப்படியாக காலம் நகர்கையில் முதன் முதலாக 1986 இல் எழுத்துத் துறையில் கால் பதித்தேன். என் எழுத்துக்கள் சிந்தாமணி வார ஏட்டில், 'சங்கீதா' என்ற புனைப் பெயரில் களம் கண்டன. என் கன்னிக் கதையான அந்த நிலவுக்குள் சில ரணங்கள், சங்கீதாவைத் தேட வைத்தது. அதன் பின்னர் நான் வஸீலா அபூபக்கர் என்று பயணித்தேன். தொடர்ந்து இன்றுவரை வஸீலா ஸாஹிர் ஆக, வலம் வருகின்றேன்.


நீங்கள் பல்வேறு வகையான ஆக்கங்களையும் எழுதத் தூண்டப்பட்ட சம்பவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் வௌ;வேறு மொழிகளைப் பேசினாலும் அவர்களுடைய இதயம் ஒரே மொழியில் தான் பேசுகிறது. அது கண்ணீராலும் புன்னகையாலும் ஆன மொழி. எல்லோருக்கும் பொது மொழி. திணிக்கப்படும் மொழி அல்ல. சுவாசத்தை போல் காதலைப் போல் சுயமாகச் சுரக்கும் மொழி. இந்தக் கண்ணீர் காயங்களின் இரத்தம். இந்த புன்னகை நம் பொது வெற்றிகளின் திருவிழாத் தீபம். இந்த தீபங்கள் என்னுள் தீயாக காயங்கள் பலவற்றை ஏற்படுத்தியது. நான் தூண்டப்பட்டேன். இருட்டில் ஒற்றை விண்மீன் போல் எத்தனை உள்ளங்கள் சோக விஷக் கண்களால் சுட்டெரிக்கப்படுகிறார்கள் என்பதனை நன்கு உணர்ந்தேன். அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே என் ஊக்கங்கள் ஆக்கங்களாக, கொண்டு வரப்பட்டது.


உங்களது சிறுகதைகளின் தனித்துவம் பற்றிக் குறிப்பிட முடியுமா?


தனித்துவம் என்று சொல்ல முடியாது. உணர்வுச் சுரத்தில் அவை கனமான கதைகள். வெளி உலகை பார்க்கும் கண்களை தேட வைக்கிறது. ஒரு விரத வேதனையை, சாதனை செய்யச் தூண்டுகிறது.

இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

01. நிலவுக்கு சில ரணங்கள் (2016 ஜுன்)
02. மொழியின் மரணம் (2016 டிசம்பர்)

ஆகிய 02 சிறுகதைத் தொகுதிகளையே நான் இதுவரை வெளியிட்டுள்ளேன். மொழியின் மரணம் என்ற சிறுகதை நூல் சென்னை பூவரசி வெளியீட்டகத்தினால் வெளிவந்தது குறிப்படத்தக்கது.


உங்கள் ''நிலவுக்குள் சில ரணங்கள்'' என்ற சிறுகதை நூலின் வரவு பற்றி என்ன குறிப்பிடுவீர்கள்? இந்த நூலில் உள்ளடங்கியுள்ள கருப்பொருட்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்?

விண் மேகங்கள் மழை பொழியத்தான். என் கண் மேகங்கள், பொழிந்த முதல் மழை நிலவுக்குள் சில ரணங்கள். மொழி சமூகம் வளர்த்த நந்தவனம். ஒவ்வொரு சொல்லும் ஒரு மலர் - நிலவுதான். கவிதையை தூண்டும். ஆனால் அந்த நிலவுக்குள்ளே ரணங்கள் என்றால் - நிலவு தான் கவிதையை புனைய வேண்டும். தன்னையும் தான் மறந்து தாழ்போட்டுக் கொண்டு உறங்கும் அபலைகள். இன்பங்கள் இன்றி அன்றிலைப் போல் துணையை பிரிந்து அறுந்த நூல் போல் அவதிப்படும். அவலங்கள் பனி சுமந்து சோகத்தில் தலையசைக்கும் தாரகைகளின் தாபங்கள். பல்வேறு வேடங்களில், தங்களை ஒப்பனை செய்து வாழப் பழகிக் கொள்ளும். இதயங்களின் ஒப்பனையை நீக்கி, உண்மை நிலையை உணர்த்தும் சக்தி வலிமை என் எழுத்துக்களில் உண்டு.


உங்களது இரண்டாவது சிறுகதை நூலான ''மொழியின் மரணம்'' பற்றி என்ன சொல்வீர்கள்? ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்? இந்த நூலினூடாக நீங்கள் இலக்கிய உலகுக்கு குறிப்பாகக் குறிப்பிட விரும்புவது என்ன?

தண்ணீர் இரும்பை விட கனமானது. ஆனால் இரகசியமோ தண்ணீரை விடக் கனமானது. அது நெஞ்சுகுள்ளேயே இருக்கும் வரை நிம்மதி கிட்டாது. என் கதாபாத்திரத்தின் மனதின் சுமைகள், மரணமானது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.

எனது மொழியின் மரணம் சிறுகதைத் தொகுதி கடந்த 2016.12.03 இந்தியாவில் பூவரசி பதிப்பகத்தினால் கவிஞர் சல்மா அவர்களினால் வெளியிடப்பட்டது. முதல் பிரதி பேரா. கோவை மு.சரளா பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் அமிர்தம் சூர்யா வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் கவிதாயினி ஈழவாணி அவர்கள் இந்த நிகழ்வை நடத்த எனக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார்.

இந்த கதையை நாவலாக விரித்து எழுத வேண்டும் என்று இருக்கையில் இது சிறுகதையாக முடிந்தது. கதைகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் அவசரம் போல என் காலங்களும் என்னை அவசரப்படுத்தியது. அதன்பின் இந்தக் கதை என் தோழி எழுத்தாளர் நஸீமா மூலம் எழுத்தாளர் ஜின்னா சார் மூலம் படைப்புக் குழு அமீரக வாசகர் வட்டத்தில் மகளிர் தின சிறப்பு தேர்வாக என்னுடைய மொழியின் மரணம் சிறுகதை தெரிவு செய்யப்பட்டது. பின் அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த நூலுக்கான விருதில் என்னுடைய சிறுகதை நூல் மொழியின் மரணம் தெரிவு செய்யப்பட்டது. 2017.03.18 ஆம் திகதி சென்னை மியூசிக் அகடமியில் இடம்பெற்ற விருது விழாவில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என். வள்ளி நாயகம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழக வேந்தர் கெல்வின் குமார் சிறப்புரை ஆற்றினார். சென்னை மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் இந்த விழாவில் வாழ்த்துரை வழங்கினார். இலக்கிய உலகம் அது ஒரு பெரும் சமுத்திரம். நான் ஒரு குட்டி மீன். சமுத்திரம் குட்டி மீனான என்னையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவா.


உங்கள் சிறுகதைகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று நம்புகின்றீர்களா?


நிச்சயமாக. துள்ளித் திரியும் பருவத்தில் துவண்டு போகும் துயரத்தில் துணையின்றி தூக்கமின்றி கண்ணீரை அருவியாக பொழிந்து கலங்கிய நெஞ்சோடும், பிசைந்த கைகளோடு திக்குத் தெரியா செல்லா காசுகளாக சொல்லால் கொல்லப்பட்டு துரத்தப்படும் அபலையான உங்களை நான் வடிக்கின்றேன். அவர்களின் துடிப்புக்களை கனவுகள் இமைபோல் வசிக்கும் கல்யாண கனவுகள் கைப்பிடி அளவு தானியம் விதைத்தால் தாரகை அளவு கதிர்கள் விளையாதோ? என்று பல தாரகைகளின் கனவுகள் தவிடுபொடியாக்கிய தசாப்தங்களை தட்டி எழுப்பும் என் எழுத்து. ஸ
எல்லோருடைய கண்ணீரும் நம் கண்ணீரில் இருக்கிறது. எல்லோருடைய புன்னகையும் நம் புன்னகையில் இருக்கிறது. இதை உணர்ந்து சமூகத்தில் சுமூகமாக எழுதுவதால் பல மாற்றங்களை நான் காண்கின்றேன். ஒரு வேதனை என்னுள் இருந்தது. அமைதியாக அதை உணர்கின்றேன். வெறும் வானத்தில் வானவில்லின் விலாசம் மேகத்தில் இல்லை. அதன் கண்ணீர்ச் சுமையில் தான் இருக்கிறது. நான் விலாசம் கொடுக்கின்றேன். சுமைகளை சுகமாகுகின்றேன். இருட்டில் அச்சத்திற்கு ஆறுதலாகவும் தனிமைக்குத் துணையாகவும் என் எழுத்துக்கள் மாற்றங்களை தருகின்றன.


சிறுகதைகள் எவ்வாறு படைக்கப்பட வேண்டும்? ஒரு சிறந்த சிறுகதை எவற்றைப் பிரதிபலிக்க வேண்டும்?

ஒவ்வொரு சிறுகதைகளுக்கும் தனித்தனி முகவரி வேண்டும். நான் எதைக் கூற வருகின்றேன் என்று என்னிடம் கதை கேட்பவருக்கு நன்கு புரிய வேண்டும். சமூகத்தைப் பொருத்தவரை பெண் என்பவள் ஓர் ஏழை, நடிகை. வாழ்க்கை நாடகத்தில் அவளுக்கு எந்தப் பாத்திரம் தரப்படுகிறதோ அதை அவள் முனுமுனுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தப் பாத்திரத்தை அவள் வெறுமனே நடிக்கக் கூடாது. அவள் அந்தப் பாத்திரமாகவே மாற வேண்டும். கடைசிவரை கதை, வசனம், இயக்குதல் ஒப்பனை எல்லாமே சமூகம் தான். அவருடைய சொந்த விருப்பு வெறுப்புக்கு அதில் இடமில்லை. சமூகத்தின் கவலை எல்லாம் நாடகம் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதுதான். பொதுவாக என்னுடைய கதைகள் பெண்கள் படும் அவலங்களையும் அவமானங்களையும் தான் பிரதிபலிக்கின்றது. நான் கதை கூறும் பாங்கு அப்படித்தான். இருப்பினும் கதைகள் யாவும் யதார்த்தங்களை பிரதிபலிக்க வேண்டும் என்பதே முக்கியமான விடயமாகும்.


ஆரம்ப காலத்தில் கவிதைகளை எழுதிய நீங்கள் முதலில் சிறுகதை நூலை வெளியிடக் காரணம் என்ன?

அவனியில் அன்னையின் வயிற்றில் இருந்து அவதரிக்கும் முன்னே 4 மாத கருவாக இருந்த பொழுதே, என் அன்புத் தந்தை அபூபக்கர் காலமானார். தந்தையின் கரம் பற்றி நடைபோட நாட்டமில்லை. இருப்பினும் அந்த உன்னதமான உயர்ந்த மனிதனின் மகள் நான் என்று சொல்லிக்கொள்ள பெருமைபடுகின்றேன். காரணம் என் தந்தையும் ஒரு எழுத்தாளர். அந்த விருட்சத்தின் சிறு துளியே இந்த வஸீலா அபூபக்கர். கவிஞர், எழுத்தாளர் இந்தப் பெருமை என்னைப் பெற்றவர்கள் தந்தது. அன்பு உம்மா செகீனா, வாப்பா அபூபக்கர். காரணமும் அதுதான் கவிதைகள் என் மூச்சு என்றால் கதைகள் என் பேச்சு.


ஆரம்பத்தில் வானொலிக்கு பல்வேறு ஆக்கங்களை எழுதிய நீங்கள் பத்திரிகைத் துறையில் உங்களது ஆக்கங்களைக் களப்படுத்தி வந்ததற்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா?

என்னுடைய கவிதைகளை கவர வைத்த, காலஞ்சென்ற இராசையா ஆசிரியர் மற்றும் பலகத்துறை ஜெலீல் ஆசிரியர் இவர்களின் ஊடே ஊடுருவிய கவிதைகள் பிறர் மத்தியில் பாராட்டப்பட்டது. ஷஷஉன்னால் முடியும்' என்ற வாசகத்தின் வரப்பிரசாதமாக என் தமிழ்ப் பாட ஆசிரியை ஜெஸ்மினா கலீல் (புத்தளம்) என்னை கதை எழுத ஊக்குவித்தார். எழுதிய கதைகளை பிற மாணவர்களுக்கு வாசித்துக் காட்டி என்னை உயரப் பறக்கவிட்டார். இன்னும் என் நெஞ்சில் இவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பது உண்மை என் முயற்சியின் பயிற்சியாளர்கள் இவர்கள். இவ்வாறு எழுதிய படைப்புக்களை பத்திரிகையிலும் கலப்படுத்துவது காலத்தின் தேவையாகிவிட்டது.


இலக்கிய வடிவங்களில் கவிதைக்கும் சிறுகதைக்கும் இடையில் எந்த மாதிரியான வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

இறைவனின் அருட்கொடைகளில் எழுத்தும் ஒரு கொடை வரம் தான். கவிஞன், எழுத்தாளன், படைப்பாளிகள் ஒரு அபூர்வ சக்திகள் புதிய தரிசனங்களை தருகிறது. கவிதை வாழ்க்கையின் அகல நீளங்களை அளந்து சொல்கிறது, கதைகள். கவிதைகள் நம்மீது சுகந்தம் இறைக்கும் புதிய காற்றாய் ததும்பும் கதைகள் உலகை பார்க்கும் கண்களாய் கதை சொல்லும். இரண்டும் இரண்டு வகையானது.


இலக்கிய இரசனையுள்ளவர்கள் நூல்களை வெளியிடுவது வழமை. உங்களது நூல் வெளியீடுகளுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள் யார்?

என்னுடைய எழுத்துக்களின் தந்தை, மூத்த எழுத்தாளரும் இருதுறை (சிறுகதை, கவிதை) விற்பனரும் எனது மதிப்புக்குரிய ஆசான் கலாபூஷணம் மூ. பஷீர், லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்கள் உபதலைவர் எம்.ஏ.எம். நிலாம், பிரதம ஆசிரியர் நவமணி தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அல். என்.எம். அமீன், மனித நேயன் இர்ஷாத், ஏ.காதர், கிண்ணியா அமீர் அலி, காவ்யாபிமானி கலைவாதி கலீல், சாய்ந்தமருது எம்.எஸ்.எம். ஷாகிர், மதனி உவைஸ், செயற்திட்ட உத்தியோகஸ்தர் ஹிஷாம் சுஹைல். என்னுடைய அருமை மகள் அஸ்ரிகா இப்படி கூறிக்கொண்டே போகலாம். எனக்கு முதல் எழுத தொடங்கியவர் என் சகோதரி ஜெமீலா அபூபக்கர். அவள் எழுதுவதைப் பார்த்து எழுதியவள் நான் இன்று என்னை பார்த்து பெருமைப்படுகின்றாள் என் சகோதரி ஜெமீலா.


பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றிய நீங்கள் மாணவர்களிடையே இலக்கிய வளர்ச்சியைத் தூண்ட என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

என் ஆசிரியர் வட்டத்துக்குள் பல வண்ணங்கள் இலக்கிய தாகத்துடன் என்னை வட்டமிட்டது உண்மை. அவர்களுக்கு அதிகளவு வாசிப்பை பழக்கியதுடன் நல்ல பல நூல்களை வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தினேன். மாணவிகளில் ஒரு சிலர் கதை, கவிதைப் போட்டிகளில் பங்குபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தேன். அதன் வெற்றிகளைக் கொண்டாட என்று அவர்களுக்கு மேடை அமைத்து பரிசுகளையும் பாராட்டுகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்த மாணவிகள் இன்றும் எழுதிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் ஆக்கங்களை பத்திரிகைகளில் பிரசுரித்து அவர்களை உற்சாகபடுத்தினேன். பல சிறுகதைகள் எழுதி அதை புத்தகமாக வெளியிட அந்த உள்ளங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


பெண் படைப்பாளிகளின் வருகைபற்றி என்ன சொல்வீர்கள்?

இறைவன் தனது படைப்புகளைப் பற்றி கூறும் பொழுது தான் சகல படைப்புகளையும் சோடி சோடியாக படைத்துள்ளதாக இறைவன் கூறுகின்றான். இவ்வுலகை கட்டியாழும் படைப்பினங்களின் மனிதனே முதலிடம் பெறுகின்றான். அதே தோரணையில் மனிதனும் ஆண், பெண் எனும் சோடிகளாக படைக்கப்பட்டுள்ளான். மனிதன் இப்பூவுலகில் வியாபித்து வாழ்வதுடன் தனது ஆதிக்கத்தையும் செலுத்தி வருகின்றான். இதில் புதுப்புது விஞ்ஞான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப அறிவு, விஞ்ஞானம், களஞ்சியம், விண்ணியல், மருத்துவம், கலை கலாசாரம், மொழி ஊடகம், தொலை தொடர்பாடல் போன்ற அனைத்தும் நாளுக்கு நாள் முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் அடைந்து வருவது உள்ளங்கை நெல்லிக்கனி போல இவ் அபிவிருத்திகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் ஊடகமானது சமூக மாற்றத்திற்கும் சமூக அபிவிருத்திக்கும் இதன் பங்குதாரிகளாக ஆண், பெண் இரு பாலருக்கும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஊடகம் எனும் பொழுது. சமூக ஊடகங்களே முதல் இடம் வகிக்கின்றது. சமூக ஊடகம் எனும் பொழுது. ஊடகங்களை மாறுபட்டதாகவும் இலகுவாக கையாளக்ககூடியதாகவும் சகலரையும் சென்றடைய கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளமை பெண் படைப்பாளிகள் சகல துறைகளிலும் ஈடுபடுவதற்கு பங்களிப்பை செய்வதற்கும் உறுதுணையாக இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. முன்னைய காலங்களில் போன்றல்லாது தற்காலத்தில் அதிகமான பெண் படைப்பாளிகளும் கலைஞர்களும் பெண் ஊடகவியலாளர்களும் ஊடகம் எனும் களத்தில் அதிக ஈடுபாடையும் பங்களிப்புகளையும் செய்து வருகின்றார்கள். இந்நிலைமையானது மிகவும் வரவேற்கத்தக்கதாக இன்றைய காலகட்டங்களில் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது. பெண்கள் தமது சேவையை இப்பணிக்கு மிகவும் நிதானமாகவும் சூட்சுமமாக அவதானத்துடனும் நுட்பத்துடனும் பங்காற்ற வாய்ப்பு பெற்றுள்ளமை இதற்கான காரணங்களாகக் கூற முடியும். எனவே இன்றைய நவீன காலத்தில் இவ்வாறான சாதகமான சூழ்நிலைகளில்  பெண்கள் சிரமமின்றி இலக்கியம் படைக்க முடிகின்றது. இது வரவேற்கத்தக்கதாக அமைகிறது.


பொதுவாக கலைஞர்கள், பிரபலமானவர்கள் மக்கள் மத்தியில் பேசப்படுபவர்கள். ஆனால் அவர்களது நிஜ வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் சோகம் நிறைந்திருக்கும். இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

எல்லாக் கலைஞர்களும் தங்களுடைய அனுபவங்களின் ஊடாக தங்களுடைய வலியைக் கொண்டு படைப்புகளை உருவாக்குபவர்கள். தங்களுடைய அனுபவங்களின் ஊடாக மக்களுக்கு புதிய படிப்பினையும் புதிய பாதையையும் உருவாக்குபவர்கள் இவர்கள். கலைஞர்கள் அடிப்படையில் மென் உணர்வு கொண்டவர்கள். அவ் மென் உணர்வு என்பது கதை, கவிதை, கட்டுரை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்கும். அவ் மென் உணர்வு வளமானதாக இருக்கும். அவ் மென் உணர்வு என்பது தியாகம், துரோகம், வன்மம் இவைகளை விட்டுக்கொடுத்தல் மூலம் கலைஞர்கள் உருவாகிறார்கள்.

அடுத்து கலை உணர்வு மிக்கவர்கள் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதாந்த வருமானம் இருப்பதில்லை. அதனால்தான் 50 வீதம் சந்தோசம் 50 வீதம் சோகமாக இருக்கிறது. இன்னும் சில மேன்மை குணம் படைத்தவர்கள், சால்ஸ் இஸ்டைல், பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். பண்ணைக்கு சொந்தக்காரர். ஆனால் இவர் பிறருடைய சோகங்களை எழுதி இருக்கிறார். நிஜ வாழ்க்கையில் சந்தோசமாக இருந்தவர் ஆனால் எழுதுவது எல்லாமே சோகமாக இருக்கும்.


இளையவர்களிடையே இணையப் பாவணை அதிகரித்து வாசிப்புத்திறன் அருகிவரும் இந்தக் காலகட்டத்தில் வாசிப்பை மேம்படுத்த என்ன செய்யலாம்?

வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். இதை இன்றைய இளம் சமுதாயம் முழுமனதோடு ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அல்லது அவர்கள் இதுதொடர்பில் மறக்கடிக்கப்பட்டு உள்ளனர். புத்தகங்களைச் சுமந்த கைகள் இன்று மொபைல்களை சுமக்கிறது. உலக செய்திகளை வானொலி, பத்திரிகை என்று பார்த்த கண்கள் சிந்தித்து செயற்பட்ட சமுதாயம் போய் இன்று சீக்கிரம் என்று செயல்படுகின்ற சமுதாயம் ஆரம்பித்துள்ளது. வாசிப்பதற்கோ நேரமில்லை, நேசிப்பதோ மொபைல், இதில் யோசிக்க எங்கே அவர்களுக்கு நேரம்.


பல தசாப்த இலக்கிய வாழ்வில் கிடைத்த வரவேற்புகள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் கூற முடியுமா?

எனக்கு பல்வேறு வரவேற்புக்கள், பரிசுகள், விருதுகள் கிடைத்துள்ளன. அதில் அமெரிக்க பல்கலைக்கழக விருது, இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வக விருது ஆகியவற்றையே நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னுடைய எழுத்துக்களில் நேசிக்கும் மக்களை அதிகரிக்க வேண்டும். வெளிநாடுகளில் புத்தகங்களை வெளியிட வேண்டும். அண்மையில் குவைத் போக இருக்கின்றேன். தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் என்னுடைய நாவல் 'ஊசி முனை காயங்கள்|| ஆகும். இதனை விரைவில் வெளியிட இறைவன் அருள்புரிய வேண்டும். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.

வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு தாங்கள் கூறும் செய்தி என்ன?
இருள் ஒளியை அனுமதிக்க வேண்டும். அல்லது இருள் இருளாகவே இருக்கும். கற்கள் விழுந்து கொண்டேயிருக்கும், குளம் கலங்கிக் கொண்டே இருக்கும். சேறாகி நாற்றம் எடுக்கும். உண்மையாக முயற்சி செய் உயர்வடைவாய். உன்னை நீ அறிந்தால் உலகம் தானே உன்னை அறிந்து கொள்ளும்.

நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment