பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, April 7, 2020

48. மின்னும் தாரகைகள் எனும் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலைத் தந்த நூலாசிரியை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களுடனான நேர்காணல்

'மின்னும் தாரகைகள்' என்ற நூல் வெளியீட்டை முன்னிறுத்திய விசேட நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.11.11

மின்னும் தாரகைகள் எனும் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலைத் தந்த நூலாசிரியை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் 

அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரியும் படைப்பிலக்கியவாதியும் இலங்கையின் சிரேஷ்ட முஸ்லிம் பெண் பத்திரிகையாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்;, மலையகத்தைச் சேர்ந்த ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியிலுள்ள உடுதெனிய என்ற சிற்றூரில் பிறந்தவர். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பொதுசனத் தொடர்புத்துறை சான்றிதழும், தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை "தினபதி - சிந்தாமணி" ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி' என்ற  பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரசார அதிகாரியாக நியமனம் பெற்ற இவர், அத்திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக (District Information Officer) பதவி பெற்றார். தகவல் திணைக்களத்தின் "திங்கள்" என்ற மாதாந்த சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் அத்திணைக்கள மாதாந்த "புத்தொளி" என்ற பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், திணைக்களத்தினால் சுமார் 35 வருடகாலமாக தொடர்ச்சியாக வெளிவரும் "தெசதிய" என்ற சிங்கள சஞ்சிகையின் சிறப்புக் கட்டுரையாசிரியராகவும் கடமை புரிந்தார்.

1975 ஆம் ஆண்டிலிருந்து இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர் அன்று முதல் இன்று வரை கவிதையாக கட்டுரையாக ஆய்வு நூலாக கவிதை நூலாக என எழுத்துலகிற்கு தனது பங்களிப்பை நல்கி வருகின்றார். ஏற்கனவே 'பண்பாடும் பெண்', 'பூஞ்செண்டு' என்று தனதான இரண்டு நூல்களைத் தந்த இவர், தற்சமயம் இலங்கை இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் முத்திரை பதிக்கும் ஒரு முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். இலங்கை இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஓர் ஆய்வு நூலை 460 பக்கங்களுடன் கூடியதாக ஷஷமின்னும் தாரகைகள்|| என்ற பெயரில் வெளியிடவிருக்கிறார். எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி (2018.11.11) கொழும்பில் இந்த சிறப்புமிக்க நூல் வெளியிடப்படவுள்ளது. எனவே இந்த காத்திரமான நூலை ஆக்கிய நூலாசிரியர் கலாபூஷணம் திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களை 'ஞாயிறு தினக்குரல்' பத்திரிகைக்காக நாம் சந்தித்து உரையாடினோம்.

அவருடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் இதோ:-


"தகவல் அதிகாரி"யாக பணியாற்றிய உங்கள் அநுபவங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

"தகவல் அதிகாரி"யாகப் பணியாற்றிய எனது அனுபவங்கள் பற்றி குறிப்பிட்டு சொல்வதாயின் தகவல் திணைக்களத்தினால் புதிதாக உள்வாங்கப்பட்ட பதவி தான் 'அரசாங்க தகவல் அதிகாரி' பதவி. போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 24 அதிகாரிகள் மாவட்ட தகவல் அதிகாரிகளாக நியமனம் பெற்றனர். இவர்களுள் நான் 'கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரி'யாக நியமிக்கப்பட்டேன். மூன்று மொழிகளிலும் கடமையாற்றக்கூடிய ஓர் அதிகாரியே கொழும்புக்கு நியமிக்கப்பட வேண்டும் என எமது திணைக்களம் என்னை இப்பதவிக்கு அமர்த்தியது. மாவட்ட செயலகங்கள் தோறும் தகவல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அந்த பிரிவுகளுக்கு கணனி, தொலைபேசி, தொலைகாட்சி, புகைப்படக்கருவி மற்றும் அலுவலக உபகரணங்கள் அடங்களாக அனைத்து வளங்களையும் எமது தகவல் திணைக்களமே வழங்கியது.

கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 13 பிரதேச செயலங்கள் இருக்கின்றன. இந்த 13 பிரதேச செயலகங்களினூடாக அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி நடவடிக்கை குறித்து மக்களை விழிப்பூட்டுவதே எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளாகும். மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்கள், மாவட்ட விவசாய கமிட்டி கூட்டம், மாவட்ட சூழல் பாதுகாப்புக்கமிட்டி கூட்டம், டெங்கு ஒழிப்புக் கூட்டம், மாதாந்த வீடமைப்பு கமிட்டி கூட்டம் இப்படி பல்வகையான கூட்டங்கள் இடம்பெறும். இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்வதுடன் அதில் பிரஸ்தாபிக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அச்சக மற்றும் இலத்திரன் ஊடகங்களுக்கு தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதுதான். எமக்கிருந்த பாரிய பொறுப்பாகும்.

அத்தோடு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளமான றறற.நெறள.டம என்ற இணையத்தளத்துக்கும் உடனுக்குடன் எமது தகவல்களை வழங்குதல், மாவட்ட வளங்கள் குறித்த தரவுகளை கணனி மயப்படுத்தல், மாவட்டத்தில் நிகழும் அரச மட்ட தேசிய நிகழ்வுகளுக்கு ஊடக இணைப்பாளராக செயல்படுவது போன்றவையும் எமது பணிகளாகும். மாவட்ட செயலகத்தில் தகவல் அதிகாரியாகக் கடமை புரிந்த காலப்பகுதி உண்மையிலேயே எனது அரச சேவையின் பொற்காலம் என்றே கூறத்தோன்றுகிறது. வேலைப் பளுவும் அதிகம் தான். ஆனால் எனக்கு எவ்வளவோ அனுபவங்களையும் அறிவுசார் உயர் அதிகாரிகள் வட்டத்தையும் பெற்றுத் தந்தது இந்த சேவை என்றால் அது மிகையாகாது.

அதுமட்டுமல்ல இந்த அரசாங்க தகவல் திணைக்களத்தில் மிக நீண்ட காலமாக (சுமார் 20 வருட காலமாக) தகவல் அதிகாரியாக கடமையாற்றிய ஒரேயொரு முஸ்லிம் பெண் என்ற பெருமையும் எனக்குண்டு என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.


இலங்கையில் பெண் எழுத்தாளர்களின் வளர்ச்சி குறிப்பிட்டு சொல்லும் படியாக இருக்கிறதா?

எனது இந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலுக்காக பெரும் எண்ணிக்கையான முஸ்லிம் படைப்பாளர்களின் நூல்களை பார்க்கும், படிக்கும் அரிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இதன்படி நோக்கும் போது இந்தத் தேடலின் போது நான் சந்தித்த பல பெண் இலக்கிய ஆளுமைகளைக் கண்டு உண்மையிலேயே நான் பிரமித்துப்போனேன். மும்மொழிகளிலும் ஆக்கங்கள் படைக்கும் ஆற்றல் உடையோர், சிறந்த கவி ஆளுமையுடையோர், சிறந்த சிறுகதை புனைவோர், நல்ல நாவல்களை எழுதுவோர் என பல்துறை ஆளுமைகொண்ட பெண்கள் பலரையும் சந்தித்தேன். இந்த நூலில் உள்வாங்கப்பட்டுள்ள அனைவரிடத்திலும் வௌ;வேறு திறமைகள் இருப்பதைக் கண்டு நான் வியந்து போனேன். இவர்கள் எல்லோரும் நம்நாட்டின் வளங்கள் (சுநளழரசஉநள). இவர்களை நான் "மின்னும் தாரகைகள்" எனப் பெயர் சூட்டியது பொருத்தம் என உணர்கிறேன். இவர்களில் சிலர்  மின்னும் தாரகைகளாக மட்டுமல்ல சுடர் விடும் சூரியனாகவும்  பிரகாசிக்கிறார்கள்  என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

அதேநேரம் இன்னுமொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும் இலக்கிய ஆளுமையுள்ள ஒரு சில பெண் படைப்பாளிகளிடையே மற்றவர்களையும் அரவணைத்துப்போகும் இணக்கப்பாடு சற்று குறைவாகக் காணப்படுவதுதான் கவலைக்குரியதாக உள்ளது. பெண் எழுத்தாளர்கள் என்ற வகையில் அனைவரும் பரஸ்பரம் இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து ஓரணியாய் செயல்பட்டால் எவ்வளது சிறப்பாக இருக்கும். அனைவரிடத்திலும் அந்த ஒற்றுமை மலர வேண்டும் என்று ஆசிக்கிறேன்.


உங்கள் எழுத்துக்கள் மூலம் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

நான் சமகால பிரச்சினைகனை வைத்து வானொலிக்கும் பத்திரிகைகளுக்கும் ஆக்கங்கள் எழுதுவது வழக்கம். இந்த வகையில் நான் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு எழுதும் பிரதியாக்கங்களும் கூட சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவே இருந்தன என்பதற்கு நிகழ்ச்சியைக் கேட்போர் கூறும் விமர்சனங்களே சான்று பகர்கின்றன. குறிப்பாகக் கூறுவதாயின் எனது உறவுக்கார மாமியார் ஒருவர் எனது முன்னிலையில் பேசும் போது ஷஷஐயோ மகளே! உங்கள் முன் ஏதும் பேச பயமாக இருக்கிறது. அப்புறம் நீங்க அதுபற்றி ரோடியோவிலையோ பேப்பரிலையோ எழுதி விடுவீங்க|| என்பார். இன்று அந்த மாமி உயிருடன் இல்லை. ஆனால் அவர் கூறிய ஆணித்தரமான வரிகள் என் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கின்றன. இதுவே எனது ஆக்கங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றத்துக்கு ஒரு சிறு உதாரணம் தானே?

மற்றுமொரு சிறு சம்பவத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். வழமையாக மீன் வியாபாரிகளாக பெரும்பாலும் ஆண்களைத்தான் காண்பதுண்டு. ஆனால் ஒரு பெண் தள்ளுவண்டியில் எமது வீடுகளுக்கு மீன் விற்பனை செய்ய வருவதுண்டு. மீனை வெட்டுவதற்காக இவர் எடுக்கும் பிரயத்தனம் தள்ளு வண்டியை தள்ளித் தள்ளி வரும் பரிதாபம் என் மனதை வருத்தியது. ஒரு நாள் அந்த பெண்மணியிடம் நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாய்? என்று அவரது சகல விபரங்களையும் பெற்று உடனே அவரது புகைப்படத்தையும் எடுத்து லங்காதீப என்ற சிங்கள பத்திரிகையில் அவர் பற்றிய சோகக் கதையைப் பிரசுரித்தேன். அதற்கடுத்த வாரம் அந்த பெண் மீன் வியாபாரி ஆட்டோ வண்டியில் மீன் வியாரம் செய்ய வந்தார். எனக்கும் அவரைக் கண்டதும் தூக்கி வாரிப்போட்டது. அவரும் தான் வந்த வண்டியை நிறுத்திவிட்டு ஓடோடி வந்து தனது கைகளை கூப்பி எனக்கு நன்றி கூறினார். நான் ஏன் எனக் கேட்க அவர் சொன்ன பதில் என்னை மெய்ச்சிலிர்க்கச் செய்தது.

"நோனா நீங்கள் எனது சோகக் கதையை பத்திரிகையில் பிரசுரித்தீர்களல்லவா? உடனே எங்கள் குடும்ப உறவினர் ஒருவர் தள்ளு வண்டியைவிட்டு இதில் போய் வியாபாரம் செய்யுமாறு இந்த ஆட்டோவைத் தந்தார். அவ்வாறே தொண்டர் நிறுவனம் ஒன்றும் வந்து எங்களுக்கு உதவ முன்வந்துள்ளது. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கட்டும் நோனா" என்றார். எனது எழுத்துக்களுக்குக் கிடைத்த இந்த வெற்றி குறித்து மனம் குளிர்ந்தது.

இவ்வாறு பல சம்பவங்கள் உண்டு. மனித உணர்வுகளை மதித்து அவலங்களை போக்குவதற்காக நாம் எம் பேனாiவை பயன்படுத்துவது ஒரு நற்கிரிகையாகவே இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த தாரக மந்திரத்தை உள்வாங்கியவளாகவே நான் எனது பேனாவைப் பயன்படுத்துகிறேன். அதனால் நான் மனத்திருப்தியுமடைகிறேன்.


"மின்னும் தாரகைகள்" நூலின் உள்ளடக்கம் பற்றி குறிப்பிட முடியுமா?

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றி சிறிய சிறிய பதிவுகள் வந்த போதிலும் இதுவரை காலமும் பரந்த அளவில் ஆராயப்படவில்லை என்பதை எனது நூலுக்கு அணிந்துரை தந்த பேராசிரியர் அனஸ் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் யார்? அவர்கள் எழுதி வெளியிட்ட நூல்கள் எவை? போன்ற விபரங்கள் யாராலும்; பரந்த அளவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் நடைபெறும் வேளைகளில் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. ஆனால் அந்த மாநாடுகள்  முடிவடைந்ததும் அதைப்பற்றி யாரும் அலட்டிக்கொள்வதில்லை. அதனை ஆராயத் துணியவுமில்லை.

2007 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சமர்ப்பிப்பதற்;காக "இலங்கை முஸ்லிம் பெண்களின் ஊடகப் பங்களிப்பு" என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினேன். இந்த ஆய்வுக்காக தகவல்களைத் திரட்டும் போதுதான் "இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள்" பற்றிய ஆய்வு நூல் ஒன்றையும் எழுத வேண்டும் என்ற எண்ணம் என் உள்ளத்தில் துளிர்விட்டது.

சுமார் பதினொரு வருட கால எனது இந்த நீண்ட நாள் கனவை நனவாக்க கடந்த பல மாதங்களாகப் பாடுபட்டேன். இப்போதுதான் அக்கனவு நனவாகிறது. நான் இந்த ஆய்வு நூலை எழுத எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்தவர் எனது மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய சகோதரியான மலையக இலக்கிய படைப்பாளி நயீமா சித்தீக் அவர்கள்தான். எனவே அன்னாரையும் இங்கு நன்றியுடன் நினைவூட்ட விரும்புகிறேன்.

இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய எனது ஆய்வு நூலான "மின்னும் தாரகைகள்" நூல் மூன்று அத்தியாயங்களை கொண்டதாக 460 பக்கங்களுடன் கூடிய ஒரு காத்திரமான நூலாக வெளிவருகிறது. "நூல்களை தந்த நூலாசிரியர் இவர்கள்..", "புத்தகம் வெளியிடாவிட்டாலும் இலக்கியத்தில் வித்தகம் புரிந்த பெண்மணிகள்.." மற்றும் "பேனா வாகனமேறி வானொலியில் வலம் வந்த வனிதையர்" போன்ற தலைப்புகளில்தான் இந்த மூன்று அத்தியாயங்களும் இடம்பெறுகின்றன. இந்த மூன்று அத்தியாயங்களிலிலும் சுமார் 140 பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆராய்ந்துள்ளேன். கோடிட்டுக் காட்டக்கூடிய பல தகவல்களையும் ''மின்னும் தாரகைகளிலிருந்து சிதறிய ஒளிக்கீற்றுக்கள்'' என்ற தலைப்பில் அவற்றைச் சுருக்கமாக  சுட்டிக் காட்டியுள்ளேன்.

அதுமாத்திரமல்ல இந்த ஆய்வு நூலுக்குப் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் சிறப்பான ஆழமான ஒரு அணிந்துரையையும் இந்தியப் பேராசிரியர் சேமுமு. முகம்மதலி அவர்கள் மன நிறைவான மதிப்புரையையும் தந்துள்ளனர்.

பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் தனது அணிந்துரையில் ஷஷபெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷமின்னும் தாரகை| என்ற ஆய்வு நூல் நம் கைகளுக்குக் கிடைத்துள்ளது. ஆவணப்படுத்தல் மதிப்பீடு செய்தல் என்பவற்றிற்கு மூலாதார எழுத்து வடிவம் ஒன்று தேவை. நூருல் அயின் நஜ்முல் ஹுசைனின் 'மின்னும் தாரகை' அவ்வாறான ஒரு தேவையை நிறைவேற்றுகிறது.

இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய விரிவான தரவுகளைத் தருவதற்கு நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எடுத்த நீண்டகால முயற்சியின் இலக்கிய அறுவடையாக இந்த 'மின்னும் தாரகையை' தயக்கமின்றிக் குறிப்பிட முடியும்.

இலங்கையில் எழுத்துத் துறையில் முஸ்லிம் பெண்களின் பங்களிப்புக்களின் வரலாறு மற்றும் தனி நபர் ரீதியில் ஒவ்வொருவரினதும் இலக்கிய வெளியீடுகள் இலக்கிய முயற்சிகள் பற்றி அறிவதற்கு ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இருந்த ஆவலை நூருல் அயினின் "மின்னும் தாரகை" ஆய்வு நூல் ஓரளவாவது நிறைவு செய்கிறது. ஒரு பெண்ணின் முயற்சியாக இப்பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒரு நிகழ்வாகும்" எனக் குறிப்பிடுகிறார்.

தென் கிழக்குப் பல்கலைக்கழக அரபு மொழித்துறைப் பேராசிரியர் மௌலவி எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்கள் இந்நூலைப் பற்றிக் குறிப்பிடுகையில் இந்நூல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒரு உசாத்துணை நூலாகத் திகழும் என்றும் ஒவ்வொரு வீடுகளில் இருக்க வேண்டிய புத்தகம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியப் பேராசிரியர் சே.மு.மு. முகம்மதலி அவர்கள் தந்த மதிப்புரையில் எனது இந்த ஆய்வு நூல் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இலங்கை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு செம்மைமிகு வகையில் முழுமையாக இன்னமும் ஆவணப்படுத்தப்படாமை நெஞ்சில் ஒரு முள்ளாகவே வலி தந்து கொண்டிருக்கிறது. எண்ணிலடங்காப் படைப்பாளர்கள் பவனி வரும் இலங்கைத் தீவினில் ஆய்வு கொண்டெழுதப் பல்கலைக்கழக வசதிகள் இருந்தும் காலம் இன்னும் கனியாதது பெற்ற பேற்றினில் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் பெண்மணிகளின் பங்கினை எடுத்துரைக்கும 'மின்னும் தாரகைகள்' நூலைத் தந்ததன் மூலம் நூருல் அயின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துள்ளாரென்றே கூறவேண்டும்.

இலங்கையின் முதலாம் முஸ்லிம் பெண் பண்டிதர் எனும் பெருமை பெற்ற 86 வயது நிந்தவூர் மைமூனா ஜெயினுலாப்தீன் முதல் 18 வயது இளம் படைப்பாளி ருஸ்தா பின்த் ஜவ்ரியா முடிய 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண் எழுத்தாளர்களைக் குறித்த தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்துள்ள இந்த ஆய்வு நூல், நூலாசிரியரின் பெரும் முயற்சிக்கும் உழைப்புக்கும் அச்சாரமாக அமைந்துள்ளதோடு இலங்கை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு பொன்னேடாகவும் சிறந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மும்மொழிகளிலும் படைப்பாற்றல் பெற்றிருந்த முஸ்லிம் பெண்மணிகளை - சிறுகதை, கவிதை, புதினம், கட்டுரை எனப் பல்வேறு தளங்களிலும் சுவடுகள் பொறித்துள்ள முஸ்லிம் பெண்மணிகளை - நூலாசிரியர் தக்க வகையில் தமிழ்கூறு நல்லுலகிற்கு அடையாளப்படுத்தியுள்ளார். நூலக அளவில் காரோட்டாமல் களம் சென்று நேர்காணல் கண்டு உணர்வு ஏர் உழுது சாதனைப் பெண்மணிகள் தம்மை வெளிக் கொணர்ந்திருக்கும் நூலாசிரியரின் திறன் போற்றுதற்குரியதாகும்."
இவ்வாறு தொடர்கிறது இந்தியப் பேராசிரியர் சேமுமு. முகம்மதலி அவர்களது மதிப்புரை.  இத்தகைய பெருந்தகைகளின் ஆசி உரைகள் கிடைத்தமை எனதிந்த ஆய்வு நூலுக்குக் கிடைத்த பெரும் பரிசாக கருதுகிறேன். இவ்வாறு இன்னும் பல சிறப்பம்சங்களும் நூலில் உண்டு.


பண்பாடும் பெண் (1997) என்ற நூல் வெளிவந்து சுமார் 21 வருடங்கள் கழிந்தே "மின்னும் தாரகைகள்" (2018) எனும் நூல் வெளிவருகிறது. இவ்வளவு கால இடைவெளியை ஒரு நூல் வெளியீட்டுக்கு எழுத்துக் கொண்டதற்கான விசேட காரணங்கள் ஏதும் உண்டா? 

நான் அரசாங்க தகவல் திணைக்களத்தில் தகவல் அதிகாரியாக கடமை புரிந்த கால கட்டத்தில் தமிழ்மொழி மூல அதிகாரிகள் ஒரு சிலரே அங்கு கடமையாற்றினோம். மும்மொழிகளிலும் சேவையாற்றும் ஆற்றல் இருந்ததால் எமது அன்றாட கடமைகளுக்கு மேலதிகமான வேலைகள் பலவற்றைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதுண்டு. எனவே அலுவலகம் சென்றால் அங்குள்ள வேலைகளைச் செய்யவே நேரம் பற்றாக்குறை. வீட்டுக்கு வந்தால் வீட்டு வேலைகள், குடும்பப் பொறுப்புக்கள் என்றே காலம் கடந்தன. ஓய்வாக இருந்து எமது தனிப்பட்ட வேலைகளைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. வாரத்தில் இரு நாள் விடுமுறையில் இரண்டாயிரம் கடமைகளைச் செய்ய வேண்டிய நிலை. இதுவே எனது நூலாக்க தாமதங்களுக்குக் காரணம்.

அண்மையில் நான் எனது அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்துதான் தேங்கிக் கிடந்த எனது இலக்கிய முயற்சிகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதனால் தான் வீடு முழுவதிலும் நிரம்பிக் கிடந்த எனது கணவர் நஜ்முல் ஹுசைனின் கவிதைகளையெல்லாம் திரட்டி "நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள்" என்ற ஒரு தொகுப்பை கடந்த ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி வெளியிட்டேன். அத்தோடு நான் வானொலியில் பாடிய மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த எனது கவிதைகளை "பூஞ்செண்டு" என்ற பெயரில் தொகுத்துள்ளேன். அந்த வேலைகள் முடிந்த உடன் தான் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய எனது இந்த ஆய்வு நூலான "மின்னும் தாரகைகள்" நூலை எழுத ஆரம்பித்தேன். சுமார் ஒரு வருட கால முயற்சிதான் இந்த ஆய்வு நூல். எனவே தேக்க நிலையில் இருந்த எனது இலக்கிய படையல்களை தற்சமயம் ஊக்கத்துடன் வெளியிடக் கிடைத்தமை குறித்து உள்ளம் பூரிப்படைகிறேன்.


"மின்னும் தாரகைகள்" நூலின் நூலின் வெளியீடு பற்றிக் குறிப்பிட முடியுமா?

எனது ஒரு வருட கால  அயராத முயற்சியினால் உருவான எனதிந்த நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி (2018.11.11) கொழும்பு ஸ்ரீசங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள அல் ஹிதாயா கல்லூரி பஹார்தீன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மலையக முன்னணி எழுத்தாளரான கலாபூஷணம் நயீமா சித்தீக் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகவும் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பௌஸி விசேட அதிதியாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மூஷான் இன்டர்நெஷனல் தலைவரான அல்ஹாஜ் முஸ்லிம் சலாஹுத்தீன் எனது ஷஷமின்னும் தாரகை|| நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளவிருக்கிறார்.  சிறப்பதிதிகள் ஊடக அதிதிகள் மற்றும் பிரமுகர்கள் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

அத்தோடு  முக்கியமாக ஒரு விடயத்தைக் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த விழாவின் கதாநாயகி நான் மட்டுமல்ல இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள "மின்னும் தாரகை" களாக என்னால் வர்ணிக்கப்பட்ட அனைத்து எழுத்தாளர்களும் கதாநாயகிகள்தான். எனவே அவர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்பதே என் வேணவா! அதனால் "மின்னும் தாரகை"களான எல்லாப் பெண் எழுத்தாளர்களும் இவ்வெளியீட்டு விழாவில் கட்டாயமாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என நான் அவர்களை வினயமாய் கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு எனது அபிமான அன்பர்கள், நண்பர்கள், உறவினர்கள்  அனைவரும் இந்த விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.


சிங்கள மொழியில் நீங்கள் செய்த இலக்கியப் பங்களிப்புக்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தமிழில் ஒரு சஞ்சிகை வெளியிடப்படவுள்ளதாகவும் அதற்காக தமிழ் உத்தியோகத்தர் தேவை என்ற விளம்பரம் ஒன்றை அடுத்தே நான் தகவல் திணைக்களத்துக்குக் காலடி எடுத்து வைத்தேன். ஆனால் விளம்பரத்தில் இருந்த படி தமிழ் சஞ்சிகை வெளியிடும் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் இடம்பெற்றன. அப்போது தான் அந்த திணைக்களத்திலிருந்து சுமார் 35 வருடங்களாக தொடர்ச்சியாக வெளிவரும் "தெசதிய" என்ற சஞ்சிகையின் ஆசிரியரான காலஞ்சென்ற வின்சன்ட் பெரியப்பெரும அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. என்னைக் கண்ட உடனேயே அவர் "உங்களுக்கு சிங்கள மொழி தெரியும் தானே? எங்கள் சஞ்சிகைக்கும் உதவலாமே?" என்று என்னை முதன்முதலாகத் தட்டிக்கொடுத்தார். அவர் தந்த உற்சாகத்தினால்தான் சிங்களத்தில் ஆக்கங்கள் படைக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டேன். ஆக்கங்களை எழுதிக் கொடுத்துவிட்டதுடன் எனது கடமை முடிந்துவிட்டதாக நான் கருதுவதில்லை. நான் எழுதிய சிங்களப பிரதியை எவ்வாறு எடிட் பண்ணியுள்ளார்கள்? அதில் நான் எங்கு பிழை விட்டுள்ளேன்? என்றெல்லாம் ஆராய்வேன். ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளை - சஞ்சிகைகளை  வாசிக்கும் போது  அதில் எனக்குத் தெரியாத சிங்கள சொற்கள் இருந்தால் அதுபற்றி இவர்களிடம் கேட்டு விளக்கங்களை பெற்றுக்கொள்வேன். இவ்வாறுதான் நான் எனது சிங்கள மொழித் திறனை வளர்த்துக்கொண்டேன்.

இச்சந்தர்ப்பத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தினால் அரச அதிகாரிகளுக்கான சிங்கள உயர் கல்வி பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பாடநெறியை மேற்கொள்வதற்கும் திணைக்கள அதிகாரிகள் எனக்கு அலுவலக விடுமுறை தந்தார்கள். இச்சலுகைகளை முறையாக பயன்படுத்தி சிறந்த முறையில் பரீட்சை எழுதினேன். அந்தக் கால கட்டத்தில் பரீட்சை எழுதிய திணைக்களத்தின் ஏனைய உத்தியோகத்தர்களை விட நான்தான் அதிக புள்ளிகளைப்பெற்று சிறந்த முறையில் சித்தியடைந்தேன். எனது இந்த பெறுபேறுகளைக் கண்ட திணைக்களத்தின் நிருவாக அதிகாரி கூட "இனி சிங்கள இலக்கணங்களைப் பற்றி ஹுசைன் மிஸ்ஸிடம் தான் நீங்கள் கேட்டுப் படிக்க வேண்டி வரும்" என்று கூறி சக சிங்கள உத்தியோகத்தர்களிடம் என்னைப் பற்றி பெருமையாகக் கூறினார்.

இவ்வாறு சிங்கள இலக்கணத்தையும் நன்கு புரிந்து கொண்டதால் சிங்களத்தில் ஆக்கங்களை எழுதுவது எனக்கு மேலும் இலகுவானது. ஷஷதெசதிய|| சஞ்சிகையின் ஆசிரியர் வின்சன்ட் பெரியப்பெரும அவர்கள்  எனக்கு ஒவ்வொரு தலைப்பில் எழுதுமாறு பணிப்பார். நானும் மிகவும் விருப்பத்துடன் எழுதுவேன். மாதா மாதம் வெளிவரும் "தெசதிய" சஞ்சிகையில் எனது கட்டுரைகளும் வெளிவரும். அத்தோடு அச்சஞ்சிகையின் சிரேஷ்ட சிறப்புக் கட்டுரையாளர்களின் பெயர்ப் பட்டியலிலும் எனது பெயரையும் குறிப்பிட்டு  என்னை கௌரவப்படுத்தினார்.

சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் சில சொற்களிடையே நிலவும் ஒற்றுமைகள் குறித்து (உதாரணமாக படிக்கம - படிக்கம், இலக்கம - இலக்கம், இடியப்ப - இடியப்பம்) ஆராய்ந்து ஒரு புத்தகம் வெளியிடுவோம் என்று என்னை சதா ஊக்கப்படுத்திய "தெசதிய" சஞ்சிகை ஆசிரியர் வின்சன்ட் பெரியப்பெரும திடீரென காலமானார். அதனால் அந்த முயற்சி கைக்கூடவில்லை. அவரின் மறைவையடுத்து வசந்தப்பிரிய ராமநாயக்க அவர்கள் ஷஷதெசதிய|| சஞ்சிகையின் ஆசிரியரானார். ஏற்கனவே என்னை நன்கு தெரிந்து வைத்திருந்த அவரும் எனக்கு அச்சஞ்சிகையில் நிறையவே எழுதுவதற்குச் சந்தர்ப்பம் தந்தார்.

தீவிரவாதம் தலைவிரித்தாடிய கால கட்டத்தில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்கல் திட்டம் குறித்து இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் கட்சி தலைவர்களினதும் கருத்துக்களைக் கேட்டறிந்து அரசியல் பேட்டித்தொடர் ஒன்றை செய்யுமாறு "தெசதிய" சஞ்சிகையின் ஆசிரியரான வசந்தப்பிரிய ராமநாயக்க என்னைப் பணித்தார். அதற்கிணங்க டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி, தர்மலிங்கம் சித்தார்த்தன், டீ. சந்திரசேகரன், பீ.பீ. தேவராஜ், இரா சம்பந்தன். சுரேஸ் பிரேமசந்திரன், ஈரோஸ் தலைவரான சங்கர் ராஜ் போன்றோரை நான் பல்வேறு அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பேட்டி கண்டு சிங்கள சஞ்சிகையில் பிரசுரித்துள்ளேன். அன்றைய யாழ் மேயராக இருந்த பொன்னுத்துரை சிவபாலன் குண்டுவெடிப்புக்கு இலக்காகுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அவரை கடைசியாக பேட்டி கண்டது நான்தான்;. எமது சிங்கள சஞ்சிகையில் அவரது பேட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்.

அது மட்டுமல்ல. ஈரோஸ் தலைவரான சங்கர் ராஜை நான் இச்சஞ்சிகைக்கான பேட்டி கண்டுக்கொண்டிருந்த வேளைதான் கொழும்பு மத்திய வங்கி குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. நாம் இருந்த அந்த அலுவலக சுவர்களில் கூட அதிர்வு ஏற்பட்டது. இதைக் கண்ணுற்ற எமது அலுவலக புகைப்படப்பிடிப்பாளரும் என்னை வாகனத்தில் அழைத்து வந்த வாகன சாரதியும் "{ஐயோ மிஸ்!.. இப்படியான இடங்களுக்கு எம்மை அழைத்து வர வேண்டாம். எங்களுக்குப் பிள்ளை குட்டிகள் உண்டு. நாங்கள் காப்புறுதி செய்துமில்லை. எனவே எங்களுக்கு ஆபத்து நேர்ந்தால் எங்கள் பிள்ளைகள் அனாதையாகி விடுவர்" என அங்கலாய்த்தார்கள். இவ்வாறான பயங்கர அனுபவங்களை எனது ஊடகப் பணியிலே எதிர்கொண்டுள்ளேன். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரான பிராகரனைத்தவிர ஏனைய தமிழ் கட்சித் தலைவர்கள் அனைவரையும் நான் இச்சஞ்சிகைக்காக பேட்டி கண்டுள்ளேன்.


ஏன் பிரபாகரனையும் சந்தித்திருக்கலாமே?

ஆமாம் பிரபாகரனையும் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. பீ.பீ.சீ. வானொலியின் தமிழ் சேவையில் கடமையாற்றிய ஆனந்தி சூரியகுமாரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் தங்கியிருக்கும் பங்கருக்குச் சென்று பேட்டி காண விருப்பதாகக் கூறி அதற்கான அனுமதியைப் பெற எமது திணைக்களத்துக்கு வந்தார். அச்சமயம் தான் "தங்கச்சி என்னோடு வாரும்" என்று என்னையும் கூட வருமாறு அழைத்தார். ஆனால் எனது கணவர்தான் அதற்குச் சம்மதிக்கவில்லை. இல்லையேல் அவரையும் பேட்டி கண்டிருப்பேன்.

இவ்வாறு கடும் போராட்டங்களுக்கும் பீதிகளுக்கும் மத்தியில் நான் எழுதிய அந்த அரசியல் பேட்டித்தொடருக்காக அரச கரும மொழித் திணைக்களம் "இன ஐக்கியத்துக்கான ஊடக பங்களிப்பு" என்ற மகுடத்தில் எனக்கு சான்றிதழும் பொற்கிழியும் வழங்கி கௌரவித்தது. இவை தவிர, எமது திணக்களத்தின் வாராந்த வெளியீடான 'தொரத்துரு' என்ற பத்திரிகைக்கும் மற்றும் 'பொதுஜன' என்ற பத்திரிகைக்கும் நான் நிறையப் பங்களிப்புக்களைச் செய்துள்ளேன்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக (District Information Officer) பதவி உயர்வு பெற்ற நான் கொழும்பு மாவட்ட செயலக தகவல் பிரிவுக்குப் பொறுப்பதிகாரியாகவும் சுமார் பத்தாண்டு காலம் கடமை புரிந்;தேன். இக்காலப் பகுதியில் (2007 ஆம் ஆண்டு முதல்) 'கொழம்ப புவத்' (கொழும்புச் செய்திகள்) என்ற பெயரில் சிங்கள மொழி மூல காலாண்டு பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டேன். கொழும்பு மாவட்டத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கலை, கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வெளிவந்த இப்பத்திரிகை; உயர் அதிகாரிகளினால் மட்டுமன்றி அன்றைய பொது நிர்வாக அமைச்சரின்  பாராட்டையும் பெற்றது.

சிங்கள மொழிபெயர்ப்பாளர் பரீட்சையிலும் சித்தியடைந்த எனக்கு அரச அங்கீகாரம் பெற்ற சிங்கள மொழிபெயர்ப்பாளராகவும் நியமனம் கிடைத்தது. நான் உடுவை தில்லை நடராஜாவின் கடற்கன்னி, மந்திரக்கண்ணாடி, பேசும் பேனா ஆகிய மூன்று சிறுவர் நூல்களையும் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளேன். அத்தோடு எனது கணவரின் புதுக்கவிதைகளை தற்சமயம் சிங்களத்தில் மொழிபெயர்த்து வருகிறேன். அது மாத்திரமன்றி அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள எனது "மின்னும் தாரகைகள்" என்ற ஆய்வு நூலையும் "திலென தரு" என்ற அதே பெயரில் சிங்களத்தில் மொழிபெயர்க்கும் உத்தேசம் உண்டு. காலம் கனிந்தால் பார்ப்போம்.


உங்கள் நினைவுகளில் இடம்பிடித்து இன்னும் மறக்க முடியாத ஏதாவது சம்பவம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனது ஊடகத்துறை, எழுத்துத்துறை வாழ்வில் மறக்க முடியாத நிறைய சம்பவங்கள் உண்டு. நான் ஏற்கனவே குறிப்பிட்ட மத்திய வங்கி குண்டு வெடிப்புச் சம்பவம் எனது ஊடக வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. அவ்வாறே கடந்த ஆண்டு நான் இந்தியா சென்றிருந்த வேளை கவிக்கோ அப்துர் ரகுமான் அவர்களை பனையூரிலுள்ள அன்னாரின் இல்லத்துக்கே போய்ச் சந்தித்து உரையாடிய இந்த இனிய காலைப்பொழுதும் என் இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத நினைவுதான். அவ்வாறே டென்மார்க் சிவமீரா அறக்கட்டளை நிறுவனமும் தமிழ்நாடு வளரி சஞ்சிகையும் இணைந்து நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் நான் எழுதிய ஷஷமலையகப் பெண்கள் மனம் மகிழ்வதெப்போது?|| என்ற என் கவிதைக்கு முதலாம் இடம் கிடைத்தமையும் அதற்காகக் கிடைத்த சிவமீரா ஞாபகர்த்த விருதும் பொற்கிழியும் எனது இலக்கிய வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வேயாகும்.


வானொலி, தொலைக்காட்சிகளிலும் நீங்கள் இலக்கியப் பங்களிப்புக்கள் செய்ததுண்டா?

வானொலியில் நிறையவே பங்களிப்புச் செய்துள்ளேன். சுமார் 17 வருட காலங்களாக முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் என்ற நிகழ்ச்சிக்கு பிரதித் தயாரிப்பாளராக இருந்துள்ளேன். பெருநாள் தின விசேட கவியரங்குகளில் மூத்த கவிஞர்கள் தலைமையில் கவிபாடியுள்ளேன். அன்றைய காலகட்டத்தில் அதிகாலை வேளை ஒலிபரப்பாகும் இஸ்லாமிய நற்சிந்தனை நிகழ்ச்சிகளிலும் எமக்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளன. தமிழ் சேவையில் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி நிகழ்ச்சிக்கும் நிறைய ஆக்கங்கள் எழுதியுள்ளேன். அவ்வாறே தொலைக்காட்சியில் அவ்வப்போது நேர்காணல்கள் பலவற்றிலும் கலந்தரையாடல்களிலும் கலந்துக்கொண்டுள்ளேன். நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான கவியரங்குகளிலும் பங்குபற்றியுள்ளேன். அவுஸ்திரேலிய தமிழ் வானொலியின் வளர்பிறை நிகழ்ச்சியிலும் எனது கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.


'தற்போது கிடைக்கும் இலக்கிய விருதுகள் பொருத்தமானவர்களுக்குத் தான் கிடைக்கிறது' என்று கருத முடியுமா?

பொருத்தமற்றவர்களுக்கு கிடைப்பது தான் பிரச்சினை. அதுபற்றி காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இன்று இலக்கியவாதிகளுக்கான பட்டங்கள் விருதுகள் என்பன ஒரு சில அமைப்புகளினால் மலினப்படுத்தப்பட்டுவிட்டன. எனவே முகநூலில் ஓரிரு கவிதை எழுதியவர்களுக்கெல்லாம் பெரும் கவி பட்டங்கள். சில விழாக்களில் பார்வையாளர்களை விட விருது பெற்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகக் காணப்படுவதாக சபையோர் சிலர் அங்கலாய்த்த சந்தர்ப்;பங்;களும் உண்டு. இதுமட்டுமல்ல அரச மட்டத்தில் வழங்கப்படும் ஒரு சில உயர் பட்டங்களைக் கூட சில அமைப்புகள் வழங்கி அந்த பட்டங்களை கொச்சைப்படுத்துகின்றன. இவற்றை அரசாங்க அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதுதான் வியப்பைத் தருகிறது. இதுபற்றி வேறென்ன சொல்வது?


எழுத்துத் துறையில் உங்களது குடும்பத்தவர்களது ஊக்குவிப்புப் பற்றியும் அதிலும் விசேடமாக உங்களுடைய கணவரின் ஊக்குவிப்புப் பற்றியும் குறிப்பிடுங்கள்?

அன்றைய காலங்களில் எனது ஆக்கங்கள் பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்தால் அதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தப் பத்திரிகையை வாங்க என்னுயிர் தந்தை கடை கடையாக அலைவார். எனது பிறந்த ஊர் உடுதெனிய என்ற ஒரு கிராமமாகும். அங்கே ஓரிரு கடைகளில் மட்டுமே தமிழ் பத்திரிகைகள் கிடைக்கும். எனவே அந்தக் கடைகளைத் தேடிச்சென்று பத்திரிகை வாங்கி வருவார். முதலில் என் தந்தையே அதனை வாசித்து விடுவார்;. பின்னர் என் தாயாருக்கு அதை வாசித்துக் காட்டுமாறு கேட்பார். அப்போதெல்லாம் நான் என் தந்தையின் பெயரை முன்னிறுத்தி ரஷீத் நூருல் அயின் என்று தான் எழுதுவேன். எனது தந்தை சகலரையும் பகிடி பண்ணி சிரிக்க வைப்பதில் வல்லவர். எனது தாயாரைப் பார்த்து, "இதோ என்னுடைய பெயர் தான் மகளுடைய பெயருடன் வந்திருக்கிறது. உங்களுடையதல்லவே?" என்று கூறி தாயாரைச் சீண்டி விட்டுச் சிரிப்பார்கள். அந்த நினைவுகள் என்னுள்ளத்தில் இன்றும் பசுமையாக இருக்கிறது. எனது முன்னேற்றத்தின் முதற்படியே என்னுயிர் பெற்றோர்கள்தான்.

அதையடுத்து எனதன்புச்சோதர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்தான் என் எழுத்துலக வழிகாட்டி என்பேன். என்னை முதன்முதலாக தினபதி - சிந்தாமணி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதே இந்தத் தம்பி தான். எனவே எனது எழுத்துலக வளர்ச்சியில் பெற்றோரையடுத்து இந்த தம்பிக்கு பெரும் பங்குண்டு. அவ்வாறே காலஞ்சென்ற என்னுயிர் தம்பி மௌலவி ரஷீத் எம். ராஸிக் அவர்களும் எனது ஆக்கங்களை விரும்பிப் படிப்பவர். பத்திரிகையில் ஏதும் ஆக்கங்கள் பிரசுரமானால் குடும்பத்தினர் அனைவருக்கும் அதுபற்றி தகவல் கொடுத்து மகிழ்பவர் அவர்தான். ஏனைய எனது உடன் பிறப்புக்களும் எனது இலக்கிய வளர்ச்சியில் இன்பம் காண்பவர்கள்தான்.  அவ்வாறே வானொலியில் முதன்முதலாக நேரில் பங்கு கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவர் எனதன்பு மௌலவி அல்ஹாஜ் எம்.எச்.எம். சுபைர் மாமா மற்றும் மௌலவியா மலீஹா சுபைர் மாமி ஆகியோராவர். கொழும்பில் நான் தொழில் புரிவதற்காக தங்குமிடவசதி தந்து நான் இவ்வளவு தூரம் பயணிக்க வழி சமைத்ததே அவர்கள் தந்த ஒத்துழைப்புத்தான். எனவே அவர்களை இங்கு நான் நன்றியுடன் நினைவுபடுத்துகிறேன்.

அத்தோடு நான் தொழில் நிமித்தம் கொழும்புக்கு வருமுன்னர் 1979 ஆம் ஆண்டளவில் "ஐன் கல்வி வட்டம்" என்ற பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தேன். இந்த நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவ மணிகளுக்கு வானொலி முஸ்லிம் சேவையில் ஷஷபிஞ்சு மனம்|| என்ற சிறுவர் நிகழ்ச்சியில் அன்றைய நிகழ்ச்சி தயாரிப்பாளரும் முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளருமான அல்ஹாஜ். எம்.இஸட். அஹமட் முனவ்வர் அவர்கள் சந்தர்ப்பம் தந்தார். அந்த அரிய சந்தர்ப்பத்தை என்னால் என்றும் மறக்கவே முடியாது. கிராமபுற சிறுவர் சிறுமிகளுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை அன்றைய காலகட்டத்தில் ஊரிலேயே பெரும் மகிழ்ச்சிப் பிரவாகமாக இருந்தது. எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கி சகோதரர் அஹமட் முனவ்வர் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமணம் பல பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு கை விலங்கு போட்டது என்கிறார்கள். ஒருசில பெண் எழுத்தாளர்களை பொறுத்தவரை அது நிதர்சனமான உண்மைதான்.  ஆனால் என்னைப் பொருத்தவரை திருமணம் எனக்கு பூவிலங்கு போட்டது என்பேன்;.  திருமணத்தையடுத்து எனது முன்னேற்றத்தின் முதுகெலும்பே என் கணவர்தான். எனது இல்லறத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலும் எனக்கு பக்கபலமாக இருக்கும் எனது வாழ்க்கை துணைவரின் துணையை எண்ணி மகிழ்கிறேன். ஒரு ஆணின் வெற்றியின் பின்னால் பெண் இருக்கிறாள் என்பார்கள். அதுபோலவே எனது வெற்றியின் பின்னால் எனது கணவரும் இருக்கிறார் என்பதில் நான் பேருவகையடைகிறேன். அவரில்லாமல் நானில்லை. எனவே எழுத்துத்துறை வளர்ச்சியிலும் ஊக்குவிப்பிலும் என்னுயிர் கணவரின் பங்களிப்பு அபரிமிதமானது.

எனது கணவர் தனது பெற்றோரைப் பற்றி எழுதிய கவிதையொன்றில் ஷஷநான் பறப்பதற்காய் அவர்கள் சிறகடிக்கிறார்கள்|| என்று குறிப்பிட்டிருந்தார். என் மனதைக் கவர்ந்த அதே கவி வரிகளை இன்று நான் பாடுகிறேன். ஷஷஇலக்கிய வானிலே நான் பறப்பதற்காய் அவர் சிறகடிக்கிறார்|| என்றே சொல்லத் தோன்றுகிறது. துறைசார் துணைவர் கணவராக வாய்க்கப் பெற்றமை குறித்து இறைவனுக்கு நன்றி பாராட்டுகிறேன்.


இதுவரை உங்களுக்கு அல்லது உங்கள் படைப்புக்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கிடைத்த விருதுகள் பட்டங்களை குறிப்பிட்டால் பட்டியல் நீண்டு விடும். சுருக்கமாக கூறுகிறேன்.

2006 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் கலாபூஷணம்  அரச விருது
2009 ஆம் ஆண்டு மகளிர் விவகார அமைச்சின் சர்வதேச மகளிர் தின கௌரவம் (இலங்கையின் அப்போதைய முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது)
அகில இன நல்லுறவு ஒன்றியத்தால் "இலக்கியத் தாரகை" - "தகவல் ஜோதி"
முஸ்லிம் கலைஞர் முன்னணியினால் "ஊடகத் தாரகை"
மலையக கலை கலாசாரப் பேரவையினால் இரத்தினதீபம் விருது
அகில உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில், படைப்பாளர் விருது
சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தினால்  மாக்கான் மாக்கார் விருது
மத்திய மாகாண கல்வி அமைச்சினால்  சிறந்த எழுத்தாளர் விருது
கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி தமிழ் தின விழாவின் போது கௌரவ விருது
டென்மார்க் சிவமீரா அறக்கட்டளை நிறுவனமும்  தமிழ்நாடு வளரி சஞ்சிகையும் இணைந்து நடத்திய சர்வதேச கவிதைப் போட்டியில் "மலையகப் பெண்கள் மனம் மகிழ்வதெப்போது?" என்ற எனது கவிதைக்கு முதலாம் இடம் கிடைத்ததையிட்டு சிவமீரா ஞாபகர்த்த விருதும் பொற்கிழியும் கிடைத்தது.


எதிர்கால எழுத்து முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

என்னால் முடிந்த வரை முயன்று எனது படைப்புளை நூலாக்கம் செய்வதே எனது எதிர்கால நோக்கமாகும்.  பல்கலைக்கழக பத்திரிகைத்துறை டிப்ளோமா பாடநெறிக்காக நான்  சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையான "எய்ட்ஸ் நோயும் பெண்களும்", உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்காக என்னால் எழுதப்பட்ட "இலங்கை முஸ்லிம் பெண்களின் ஊடகப் பங்களிப்பு" ஆகிய எனது ஆய்வுக் கட்டுரைகள் இரண்டும் நூலுருப் பெற தயாரான நிலையில் உள்ளன. அவ்வாறே எனது கணவர் எழுதியுள்ள கவிதைகள் அனைத்தையும் கூட கணனி மயப்படுத்தி முடித்துவிட்டேன். இறைவன் நாடினால் அவற்றையும் நூலுருப்படுத்துவதுடன் என்னால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வரும் எனது கணவரின் கவிதை தொகுதி ஒன்றையும், "மின்னும் தாரகைகள்" என்ற  ஆய்வு நூலையும் சிங்கள மொழியில் வெளியிட வேண்டும் என்ற ஆவலில் உள்ளேன். காலம் கனிந்தால் பார்ப்போம்.


இளம் எழுத்தாளர்களுக்கு மூத்த எழுத்தாளர் என்ற வகையில் நீங்கள் கூறும் ஆலோசனைகள் யாவை?

மூத்த எழுத்தாளர்களை மதிக்கும் பக்குவம் அவர்களுக்கு வர வேண்டும். அத்தோடு மூத்த படைப்பாளிகளின் எழுத்துக்களை படிக்க வேண்டும்இ நிறைய நிறைய வாசிக்க வேண்டும். வாசிப்பை நேசிப்பதன் மூலமே இளம் எழுத்தாளர்கள் தமது ஆளுமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். இன்று நவீன தொழில் நுட்பம் இளசுகளை ஆட்கொண்டுவிட்டது. பால் குடிக்கும் குழந்தை கூட கையடக்க தொலைபேசியின் அலறலை அறிந்துகொள்கிறது. "உலகமே ஒரே கூரையின் கீழ்" என்பார்கள். எனவே எங்களது காலத்தைப்போல பத்திரிகைகளையோ புத்தகங்களையோ தேடித்தேடி அலையத் தேவையில்லை. தமது கையடக்க தொலைபேசியிலேயே இவை அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஓடும் பஸ்ஸிலும் சரி நடக்கும் பாதையிலும் சரி, வீட்டிலும் சரி இந்தக் கையடக்க தொலைபேசிகளை (ஸ்மார்ட் போன்களை) நவீன தொழில் நுட்ப  கருவிகளையும் இளசுகள் தேவையற்ற விடயங்களுக்கு பயன்படுத்தாமல் புத்தகங்களை வாசிப்பதற்கு பயன்படுத்தினால் நல்ல  புத்தி ஜீவிகளாக நாளைய சமூகத்தை கட்டியெழுப்பலாம். இளம் எழுத்தாளர்களுக்கு அடியேன் கூறும் அறிவுரை இது தான்.


இறுதியாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? 

அகில இலங்கை ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி சுமார் 140 முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களது படைப்புகள், பங்களிப்புகள் பற்றியும் இந்நூலில் பதிவு செய்துள்ளேன். அதுமாத்திரமன்றி இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து கடல் கடந்த நாடுகளில் வாழும் ஒரு சில பெண் எழுத்தாளர்களையும் இந்த ஆய்வில் உள்வாங்கியுள்ளேன். எனினும் எனது இந்த ஆய்வு நூலில் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியுள்ளேன் என்று எனக்கு உறுதியாக கூற முடியாது. ஒரு சிலர் விடுபட்டிருக்கலாம். இன்னும் சிலர் தமது தகவல்களை தருவதில் அசமந்தப் போக்கை கடைபிடித்தனர். இந்த நூலை அச்சகத்துக்கு ஒப்படைத்த பின்னர் கூட இரண்டு நூலாசிரியர்களின் தகவல் எனக்குக் கிடைத்தன. அவற்றை இந்த நூலில் சேர்த்துக்கொள்ள முடியாமற் போனதையிட்டு வருந்துகிறேன்.
எனினும் எனது சக்திக்கு ஏற்றவரை இந்த ஆய்வுகளின் மூலம் 140 முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை இனங் கண்டுள்ளேன். எந்த ஓர் ஊடக விளம்பரமுமின்றி மேற்கொண்ட எனதிந்த ஆய்வு நடவடிக்கை இவ்வளவு பெருவெற்றியை தந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அத்தோடு தகவல்கள் கிடைக்காத மேலும் பலரின் பெயர் பட்டியலையும் இணைத்துள்ளேன். எனினும் இந்த நூலில் விடுபட்டுள்ள ஏனைய பெண் எழுத்தாளர்கள் தத்தமது தகவல்களை தாமதியாது எனக்குத் தந்துதவினால் இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த பதிப்பிலாவது அவற்றை சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா? எனவே இத்தகையோர் தயவு செய்து என்னோடு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக இதனைத்தான் நான் கூற விரும்பினேன்.

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

2 comments:

  1. இனிய வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  2. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 23 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    24 ஆவது வலைத்தளமாக தங்கள் வலைத்தளம் இணைக்கப்பட்டுள்ளது.

    தற்போது, தங்களது 48. மின்னும் தாரகைகள் எனும் இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலைத் தந்த நூலாசிரியை கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களுடனான நேர்காணல் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete