பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, April 7, 2020

47. பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2018.11.04

பவானி சிவகுமாரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்?

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப் பிடமாகக் கொண்ட நான் குடும்பத்தின் மூத்த மகள். எனது தந்தை சு.சி. கதிர்வேலு அவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றியவர். மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரனும் கூடப் பிறந்தவர்கள். தொழில் ரீதியாக நான் ஓர் ஆங்கில ஆசிரியை. கல்வித் துறையில் முப்பது வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளேன். தற்போது வெள்ளவத்தை சாந்த. கிளேயர் கல்லூரியில் பிரதி அதிபராகக்க கடமையாற்றி வருகிறேன். நான், கணவன், மகள் என்ற மூவர் அடங்கிய சிறிய குடும்பம் என்னுடையது. எனது கணவர் தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர். எனது மகள் விஞ்ஞானப் பட்டதாரி. தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார்.


உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

1995 இல் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்ற காலத்தில் அக்கல்லூரியின் தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதன்முதல் பங்கேற்றேன். பயிற்சி பெறும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்ற அப்போட்டியில் (1995 இல்) எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இவ்வாறுதான் எனது எழுத்துலக பிரவேசம் நிகழ்ந்தது.


சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பரிசுக் கதைக்குப்  பின்னர் பன்னிரெண்டு வருடங்கள் நான் எழுதவே இல்லை. நம்புங்கள். இதன்பின்னர் வீரகேசரி பவள விழா விளம்பரம் பார்த்து எழுதினேன். நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அப்போட்டியில் எனது கதை தெரிவு செய்யப்பட்டது. பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம் என் கதைகளுக்கு பரிசில்கள் கிடைத்ததால் என் எழுத்துக்கு ஓர் அங்கீகாரம் இருப்பதாய் உணர்ந்தேன். இதுவே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவலை என்னுள் விதைத்தது.


இதுவரை வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

சிறுகதைத் துறையில் மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய், நிஜங்களின் தரிசனம் எனும் மூன்று சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளேன். மரம் வைத்தவன் எனும் என் முதல் நூலுக்கு அரச சாகித்திய விருது கிடைத்தது.


உங்கள் சிறுகதைகளில் யதார்த்தமான விடயங்கள் தான் அதிகமாக இருக்கின்றன. யதார்த்தம் படைப்பாகின்ற போதுதான் அது முழுமையாகின்றது என எண்ணுகின்றீர்களா?

நிச்சயமாக. யதார்த்தம் இல்லாத எந்த இலக்கியமுமே முழுமை அடைவதில்லை. சிறுகதைகளின் பண்புகளில் ஒன்று, தான் சார்ந்த சமூகத்தை அது பிரதிபலிப்பது தான். நான் பார்த்த, கேள்வியுற்ற, என்னை ஏதோ ஒரு விதத்தில் பாதித்த சம்பவத்தை கதை வடிவில் வெளிக்கொணர்கிறேன். நாம் அங்கம் வகிக்கும் சமூகத்தை இவை பிரதிபலிப்பதால் இவ்வாறான கதைகளையே வாசகர்களும் விரும்புகிறார்கள்.

நீங்கள் எழுதி வெளியிட்ட சிறுகதைகளில் உங்களுக்குப் பிடித்தமான கதைகள் எது? ஏன்?

நான் எழுதியவை எல்லாமே எனக்கு பிடித்தவைதான். குறிப்பாக இலவு காக்கும் கிளிகள், புதை மணலா நீ டானியலா?, வெளிச்ச வீடு, விலகும் மழை மேகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

"இலவு காக்கும் கிளிகள்" ஒரு ஆபிரிக்க போராளியைப் பற்றியும் அவனைச் சூழ்ந்துள்ள அவலத்தைப் பற்றியும் பேசுகிறது. கதை இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஊர்கள், பெயர்கள் போன்றவற்றை இன்டர்நெட் ஊடே பெற்றேன்.

இதுபோல் "புதை மணலா நீ டானியலா?" ஒரு நாட்டில் நடந்த கதையை ஐரோப்பிய நாடொன்றில் நடப்பதாய் எழுதுவது போல சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது. இதில் நான் வெற்றி கண்டிருப்பதாய் நினைக்கிறேன்.

ஊருக்கெல்லாம் வெளிச்சம் கொடுத்து இன்று ஒளியிழந்து நிற்கும் வெளிச்ச வீட்டை ஒரு பெண்ணுக்கு ஒப்பிட்டு எழுதப்பட்ட கதை "வெளிச்ச வீடு" ஆகும். "விலகும் மழை மேகம்" ஒரு கூத்துக் கலைஞன் பற்றியது. ஒரு கலையை மையமாக வைத்து எழுதப்பட்டது. இதற்கு சரியான முறையில் பாடல் வரிகள் இடம் பெற வேண்டும் என்பதற்காக கூத்துக்கலை சம்பந்தப்பட்ட புத்தகங்களைவிலைகொடுத்து வாங்க வேண்டி இருந்தது. நூலுருவில் இன்னும் வெளிவராத எனக்குப் பிடித்த கதைகள் இருக்கின்றன.

எனது சிறுகதைகள் பற்றிய பின்வரும் ஆய்வுகளும் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.

* "பவானி சிவகுமாரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு"
   திருமதி. லதாமணி அருந்தவச் செல்வம்
   தமிழ் முதுகலைமாணித் தேர்வு (ஆ.யு)
   2011 யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

* "பவானி சிவகுமாரன் சிறுகதைகள் ஓர் ஆய்வு"
  செல்வி. சுதர்சினி நாகரட்ணம்
  தமிழ் சிறப்புக் கலைமாணி
  2014 சப்ரகமுவ பல்கலைக்கழகம்


உங்கள் படைப்புகளுக்குக்கு கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?

நான் கதை எழுதி முடிந்தவுடனேயே என் ஆசிரியர் குழாமிடமிருந்து சுடச்சுட விமர்சனங்கள் கிடைத்துவிடும். உலகளாவிய ரீதியில் எனக்கு முதற் பரிசை ஈட்டித் தந்த "அற்ற குளத்துப் பறவைகள்" என்ற கதையைப் போட்டிக்கு அனுப்ப முன்பே அதை வாசித்த ஆசிரியர் ஒருவர் நிச்சயம் இதற்குப் பரிசுண்டு என்று சொன்னார்.

என் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்ட பேச்சாளர்கள், வெளிச்ச வீடு, இலவு காக்கும் கிளிகள், தேடலே வாழ்க்கையாய் போன்ற பல கதைகளை சிலாகித்துப் பேசினார்கள். என் கதைகளுக்குக் கிடைத்த விமர்சனங்கள் எல்லாம் உற்சாகமூட்டும் டொனிக் என்றுதான் சொல்ல வேண்டும்.



சிறுகதைகள் என்றால் அவற்றில் முக்கியமாக எந்தெந்த அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்?

முதலில் நல்ல கரு அமைய வேண்டும். அதன் பின் அதனைச் சுற்றிப் பின்னப்படும் இசைவான சம்பவங்கள், சம்பவத்தின் துணையோடு அவற்றைக் கொண்டு செல்லும் ஆற்றொழுக்கமான நடை, பிரதேசப் பேச்சு, வழக்கிலமைந்த கதைக்கு வலுவூட்டும் உரையாடல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக கதாசிரியரின் மொழியாட்சி. இவை யாவும் நல்லதொரு சிறுகதைக்கு அவசியம்.


உங்களுக்கு இதுவரை கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்?

* பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தமிழ்ச்சங்கம் சிறுகதைப் போட்டியில் "பார்வைகள்! மனிதர்கள்!" என்ற கதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. (1995)

* பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கப் பரிசுக் கதை  "கருணை இன்னும் சாகவில்லை" (2000)

* வீரகேசரி பவளவிழாப் போட்டி பரிசுக் கதை "உறவைத் தேடும் தீவுகள்" (2005)

* உலகளாவிய ரீதியில் பூபாள ராhகங்கள் நடாத்திய சிறுகதைப் போட்டி "அற்ற குளத்துப் பறவைகள்" என்ற கதைக்கு முதற் பரிசு கிடைத்தது. (2006)

* முதல் சிறுகதைத் தொகுதியான "மரம் வைத்தவன்" தொகுதிக்கு அரச சாகித்திய விருது கிடைத்தது. (2007)

* தகவம் சிறப்புப் பரிசு நாலாம் காலாண்டு "விலகும் மழை மேகம்" - தினக்குரல் (2007)

* அமரர் செம்பியன் செல்வன் ஞாபகர்த்தப் போட்டி பரிசுக் கதை "சீண்டச் சீண்டத் தொடரும்" (2007)

* பூபாள ராகங்கள் போட்டிப் பரிசு "மரணங்கள் நடுவே ஜனனம்" (2007)

* தகவம் சிறப்புப் பரிசு இரண்டாம் காலாண்டு "கனவுலகின் வெளியே" - தாயகம் (2008)

* பூபாளராகங்கள் பரிசுக் கதை "குடை பிடிக்கும் நினைவுகள்" (2008)

* கலாபூஷணம் புலோலியூர் சதாசிவம் ஞாபகர்த்தப் போட்டியில் "நம்மவர்கள்'' சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது. (2009)

* மேல் மாகாண சாகித்திய விருது (2010)

* தகவம் சிறப்புப் பரிசு - இரண்டாம் காலாண்டு "நிழல் கொஞ்சம் தா" - ஜீவநதி (2010)

* தகவம் சிறப்புப் பரிசு - மூன்றாம் காலாண்டு "மீண்டும் புதிதாய்ப் பிறப்போம்" - வீரகேசரி (2010)


எவ்வகையான புத்தகங்களை அல்லது யாருடைய புத்தகங்களை அதிகமாக வாசிக்கிறீர்கள்? ஏன்?

கையில் கிடைக்கும் எல்லா வகையான புத்தகங்களையும் வாசிப்பது வழக்கம். இருந்தும் எனது துறை சிறுகதை என்பதால் சிறுகதைகளைத் தேடி வாசிப்பேன். பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களை அதிகம் வாசிப்பேன். ஈழத்து எழுத்தாளர்களில் அன்னலட்சுமி ராஜதுரை தொடக்கம் தாமரைச் செல்வி, கோகிலா மகேந்திரன், தாட்சாயிணி என்பவர்களுடன் இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை இப்பட்டியல் நீளும்.

தமிழ் நாட்டு எழுத்தாளர்களில் சிவசங்கரி, வாசந்தி, அனுராதா ரமணன் இவர்களுடைய கதைகளை அதிகம் வாசிப்பேன். பெண் எழுத்தாளர்களின் பார்வைகள், ஆண் எழுத்தாளர்களில் நின்றும் பல விடயங்களில்  வேறுபடுகின்றன. குறிப்பாக ஒரு குடும்பத்தில் நிகழும் சிறு சம்பவங்களைக் கருவாக்கி கதை சொல்வதில் இவர்கள் ஆண் எழுத்தாளர்களைவிட ஒரு படி மேல்.


வளர்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் என்று இவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. சிறு துணுக்குகளைக்கூட கதையாக்கி விடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இதற்கு இவர்கள் எழுதும் பல கதைகள் சாட்சி. ஒரு கட்டுக்குள்ளும் சிக்காமல் எழுதும் இவர்களை கரு, சம்பவம், மொழியாட்சி... என்று பயமுறுத்த விரும்பவில்லை. ஒன்று சொல்லலாம்.

இப்போதுதான் இன்டர்நெட் இருக்கிறதே. ஒன்றைப்பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை அதனூடாகப் பெறலாம். இதிலிருந்து பல தரமான படைப்புக்களைத் தர முடியும். நூல் நிலையத்தில் புத்தகங்களை தேடிப் புரட்டும் சிக்கல்கள் இன்றில்லை. சிறிய வசனங்களில் கதையை நகர்த்துவது, கதைக்கு வேகத்தையும், சுவாரசியத்தையும் தரும். குறிப்பாக வாசகனுக்கு தலையிடியைத் தராது!!!


நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment