பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Tuesday, April 7, 2020

43. இன்ஷிராஹ் இக்பால் உடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த திகதி - 2017.03.05

இன்ஷிராஹ் இக்பால் உடனான நேர்காணல்

நேர்கண்டவர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்



1. உங்கள் பிறப்பிடம், குடும்பப் பின்னணி பற்றிக் குறிப்பிடுங்கள்?

சப்ரகமுவ மாகாணத்தில், கேகாலை மாவட்டத்தில் மலைநாட்டின் நுழைவாயில் என்றழைக்கப்படும் எழில் மிகு மாவனல்லை நகரில்தான் நான் பிறந்தேன். நான்; பிறந்தது ஒரு இலக்கியச் சூழலில்தான் என்று கூற வேண்டும். எனது தந்தை மௌலவி. அலஹாஜ் ஏ.சீ.எம். இக்பாhல் மாவனல்லையைச் சேர்ந்தவர். அவர் ஒரு இலக்கிய ஆர்வலர். எனது தாயார் தர்காநகரைச் சேர்ந்த சுலைமா சமி இக்பால். இவர் இது வரை ஐந்து இலக்கிய நூல்களைத் தந்த சிறுகதை, நாவலாசிரியர். இவர்களின் சிரேஷ்ட புதல்வியான எனக்கு ஒரு தங்கையும், ஒரு தம்பியும் இருக்கிறார்கள்.


2. உங்களது முதலாவது ஆக்கம் எப்போது, எதில் வந்தது?

சிறு வயதிலேயே தினகரன் வாரமஞ்சரியில் சிறுவர் பகுதியில் எனது சிறு ஆக்கங்கள் வந்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதானால் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி எனது ஷமலையை அசைத்த மலர்| என்ற சிறுகதை நவமணியில் பிரசுரமானது. அப்போது எனக்குப் பதினான்கு வயது. அந்தச் சிறுகதை 2004 ஆம் ஆண்டு முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய மீலாத் போட்டியில் முதலிடம் பெற்ற கதையாகும்.


3. இதுவரை நீங்கள் வெளியிட்ட நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இதுவரை நான் 02 நூல்களை வெளியிட்டிருக்கிறேன். எனது முதலாவது நூலான 'பூ முகத்தில் புன்னகை' என்னும் சிறுகதைத் தொகுதி 2009 இல் வெளியானது. அப்போது நான் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்றுக் கொண்டிருந்தேன். அந்த நூலில் அதுவரை தேசிய, மாகாண ரீதியில் பரிசு பெற்ற சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருந்தேன். எனது இரண்டாவது படைப்பான 'நிழலைத் தேடி' சமூக நாவல் 2014 இல் எனது பல்கலைக்கழகக் காலத்தில் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளியானது. இந்நாவல் உயர் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட கவிதா டெலன்ட் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடமும் விருதும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


4. புதிதாக கவிதை எழுத வருபவர்களுக்கு மரபுக்கவிதை பற்றிய அறிவு அவசியம் என்று நினைக்கின்றீர்களா?

மரபுக் கவிதை எழுதுவதற்கு மொழிப் பயிற்சி அவசியம். ஏனென்றால் அது பொதுவாக ஒரு இலக்கணக் கட்டமைப்புக்குள் அமைந்தது. மொழியில் தனக்கிருக்கும் தேர்ச்சி, மொழிப்புலமை, மொழியின் அழகியல், ஓசை நயம் என்பவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தே மரபுக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. ஆனால் நவீன கவிதை என்னும் போது அது ஒரு கட்டமைப்புக்குள் அடங்காதது. கவிதை என்பது ஒரு தூய கலை. அதனை தர்க்க ரீதியாக அணுக முடியாது. நவீன கவிதைகளின் பேசுபொருள் பொதுவாக நவீன வாழ்வியல் ஏற்படுத்திய சிக்கல்கள், பிரச்சினைகள், தாக்கங்கள் என்பவை சார்ந்த உணர்வின் வெளிப்பாடுகளாகவே நோக்கப்படுகின்றன. எனவே புதிதாக கவிதை எழுத வருபவர்கள் மரபுக் கவிதைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றே நான் கருதுகின்றேன்.


5. இதுவரை எத்தனை சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்கள்? சிறுகதைகள் பற்றிய உங்கள் எண்ணப்பாடு எவ்வாறு உள்ளது?

நான் இதுவரை ஏறத்தாழ 30 சிறுகதைகள் எழுதியிருப்பேன். சிறுவயதிலிருந்தே எனக்கு கதை கேட்பதிலும் கதை சொல்வதிலும் நிறைய ஆர்வம் இருந்தது. எனது தாயார் ஒரு சிறுகதை எழுத்தாளர் என்பதால் என் கதைப் பசிக்கு வீட்டிலேயே நல்ல தீனி இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏராளமான சிறுகதை நூல்களை வாசித்திருக்கிறேன். சிறுகதை பற்றிக் கூறப் போனால் அது இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்திற்கு வழங்கிய கொடை என்றுதான் கூற வேண்டும். சிறுகதைகளுக்கு கதைக்கரு என்பது முக்கியம். இந்தக் கதைக்கரு எங்கேயிருந்து உருவாகின்றது என்று நோக்கினால் அது மனித வாழ்விலிருந்தே உருவாகின்றது. மனிதர்களின் அனுபவமும், எண்ணங்களும் சுதந்திரமாக வெளிப்படும் போது தோன்றும் படைப்பிலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் என்பவற்றுள் மனித வாழ்க்கைக்கு மிக நெருங்கிய வடிவமாக நான் சிறுகதையைக் கருதுவேன். சிறுகதைகள் எதிலிருந்தும் தோன்றலாம். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், சம்பவங்கள், அனுபவங்கள், கற்பனைகள் சிறுகதைகளாக மலரலாம். ஒரு சிறுகதையானது முடிவடையும் போது அதனைப் பற்றிய சிந்தனைகள் முடிந்து விடுவதில்லை. கதை முடிந்த பிறகும் அதன் சிந்தனைகள் நீண்டு கொண்டு சென்றால் அதை நான் ஒரு வெற்றிகரமான சிறுகதையாகக் கருதுவேன்.


06. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?

எழுத்தாளர்களைவிட எழுத்துக்களை அதிகமாக வாசிப்பவள் நான். எனது வாசிப்பில் சிறுகதை, நாவல் என்பவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருந்தேன். நான் முதன் முதலில் வாசித்த படைப்புக்கள் எனது தாயாரின் படைப்புக்கள். தாயின் வழியிலிருந்தே எனக்குள் இலக்கிய ஆர்வம் தோன்றியிருக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக எனக்கு அறிமுகமான படைப்புக்கள் தென்னிந்திய எழுத்தாளர் ஹிமானா செய்யத் அவர்களுடையது. அவரின் சிறுகதை நாவல்களைப் படித்த பின்புதான் எனக்குள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. சாதாரண ஒரு விடயத்தை சுவாரஷ்யமாக சொல்லும் பாணி அவருடையது. அதன் பின்பு எனது வாசிப்புத் தளம் விரிந்து கொண்டே சென்றது. என்னைப் பாதித்த எழுத்தாளர்கள் என்று சொல்வதானால் ஒரு பெரிய பட்டியல் இருக்கின்றது. எல்லோரையும் இங்கே குறிப்பிட முடியாது என்பதால் நான் பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை.


07. ஒப்பீட்டளவில் அதிக நேரகாலத்தை எடுத்து நாவல் எழுதுவது சிரமமாகத் தோன்றவில்லையா?

நாவல் எழுதுவதற்கு ஒப்பீட்டளவில் அதிக நேரகாலம் எடுத்தாலும் உண்மையில் அது எனக்குச் சிரமமாகத் தோன்றவில்லை. இதுவரை 02 நாவல்கள் எழுதியிருக்கின்றேன். (ஒன்று இன்னும் வெளியிடப்படவில்லை) அந்த அனுபவத்தில் சொல்கிறேன். நாவல் எழுதும் போது அதை நான் ஒரு எழுத்துப் பணியாகவே எண்ணவில்லை. அது என் வாழ்வுடன் ஐக்கியமாகி விடுகின்றது. அந்த நாவலைப் படைக்கும் காலகட்டத்தில் நான் அளவளாவுவது, பழகுவது, பேசுவது எல்லாம் அதில் வரும் கதாபாத்திரங்களுடனேயே.

ஒரு நாவல் வாசகனின் மனதில் பல்வேறுபட்ட உணர்ச்சிப் பேரலைகளை உண்டாக்கி விடும். ஒரு இடத்தில் மெல்லிய புன்னகையையும், இன்னொரு இடத்தில் மனதிற்குள் பேரிடரின் தாக்கமொன்றையும் உருவாக்கிவிடும். அதே போன்றதே நாவல் எழுதும் என் மனநிலையும். எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நாவலுடன் நானும் நகர்ந்து கொண்டிருப்பேன். அதன் பாத்திரங்களாகவும், பாத்திரங்களுடன் வாழ்ந்தும் விடுவேன். அதனால் எனக்கு நாவல் எழுதுவதென்பது மனதுக்கு நேசமான ஒரு விடயமாகவே இருக்கின்றது. சிரமத்தைத் தரவில்லை. எனது ஆசையெல்லாம் காலத்தின் நகர்வுடன் பல ஆண்டுகள் எடுத்தேனும் ஒரு நல்ல நாவலைப்படைக்க வேண்டும் என்பதே.


08. ஈழத்து இலக்கியப் போக்கு பற்றி என்ன சொல்வீர்கள்?

இன்று இலங்கையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நிறைய இளம் படைப்பாளிகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது ஒரு ஆரோக்கியமான விடயமே. ஆனால் தம்மை ஒரு தரமான படைப்பாளியாக அடையாளப்படுத்துபவர்கள் இலங்கையின் இலக்கியப் போக்கில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றார்கள் என்பதே முக்கியமானது. இவர்களின் படைப்புக்கள் பெரும்பாலும் சமகாலப் பிரச்சினைகள் அல்லது புனையப்பட்ட கற்பனை வடிவங்களாக பல்வேறு தரநிலைகளில் வெளிப்படுகின்றது. இவ்வாறு ஒரே பாணியிலான படைப்புக்களை வெளியிடும் ஈழத்து இலக்கிய உலகம் அதன் பாரம்பரியக் கட்டுக்களை உடைத்துக் கொண்டு புதிய சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புக்களைத் தர வேண்டும்.


09. புதிதாக எழுத ஆரம்பிப்பவர்கள் பொதுவாக கவிதைத் துறையிலேயே ஈடுபாடு காட்டுவார்கள். நீங்கள் விதிவிலக்காக சிறுகதை, நாவல் துறைகளில் ஈடுபாடு காட்டி வருகிறீர்கள். இதற்கான விஷேட காரணங்கள் ஏதும் உண்டா?

நான் ஏற்கனவே கூறிய காரணம்தான். சிறுவயதிலிருந்தே கதைகளின் மீது நான் கொண்ட காதல்தான் காரணம். என் வாழ்க்கையில் நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் எனக்குள் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குகின்றார்கள். ஒரே பாத்திரம் பல வகையான கதைகளை உருவாக்கும். நிஜ வாழ்க்கையைவிட கற்பனையில் வாழும் போது மகிழ்ந்து போகிறேன் நான். கற்பனையில் எனக்குப் பிடித்த பாத்திரமாக பல கதைகளில் உலாவுவேன் நான். இதுவே காரணம்.


10. வாசகர்களுக்கு விளங்காத முறையில் எழுதுவது வித்துவத்தனமானது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றிய உங்கள் கருத்து யாது?

இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. உண்மையிலேயே தனது மொழிப் புலமையையும், ஆற்றலையும் வெளிக்காட்ட மற்றவர்களுக்கு விளங்காத முறையில் எழுதுவதே வித்துவத்தனமானது என்று நினைத்துக் கொண்டு எழுதுபவர்கள். இரண்டாவது படைப்பாளியின் படைப்பிற்கும் வாசகனின் புரிந்துணர்வுக்கும் இடையிலான முரண்பாடுகள்.

முதலாவது வகையான படைப்புக்கள் உண்மையில் இலக்கியத்திற்கு எந்த விதமான பிரயோசனமும் அற்றவை. ஏனென்றால் இந்த வகைப் படைப்புக்கள் இலக்கியத்தின் நோக்கத்தைத் திருப்தி செய்வதில்லை. இரண்டாவது வகையை எடுத்தால், படைப்பாளி என்பவன் சுதந்திரமானவன். அவனின் சிந்தனைகளைச் சிறைப்படுத்த முடியாது. குறிப்பாக கவிதையை எடுத்துக் கொண்டால் அது கட்டுரை, சிறுகதை, நாவல் போல நேரடியான இலக்கிய வகையல்ல. கவிதையில் உருவகங்கள், உவமைகள் முக்கியமானவை. அவை கவிஞனின் சூழலைப் பொறுத்து வேறுபடும். வாசகனுக்கு வாசிப்பு போதாத போது, புரிதலில் குறைபாடுகள் இருக்கும் போது அப்படைப்பு ஒரு விளங்காத தன்மையை ஏற்படுத்தும் இது படைப்பாளியின் பிழையல்ல.


11. தொண்ணூறுகளுக்குப் பின் தோன்றிய பெண் எழுத்தாளர்கள் குறிப்பாக நாவல் எழுதும் முயற்சிகளில் ஈடுபடுவது மிக மிக அரிது. இதற்கு என்ன காரணம் கூறுவீர்கள்?

முக்கியமாகக் கூறப்போனால் நாவல் எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் தேவை. ஒரு சீரான நீரோட்டம் போல நகர வேண்டும் என்றால் அதைப் படைக்க நேரமெடுக்கும். இன்றைய அவசரச் சூழலின் வேலைப் பளுக்கள் ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்ததாக இன்றைய இலத்திரனியல் சூழலில் நிறைய வாசகர்கள் காட்சி இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு விட்டார்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.


12. பெண்ணியம் சார்ந்த உங்கள் கொள்கை என்னவென்று கூறுங்கள்?

இன்று உலகில் மிகவும் தவறாக விளங்கப்பட்ட வார்த்தை பெண்ணியம். என்னைப் பொருத்தவரையில் எல்லா விடயங்களிலும் பெண்கள் சம உரிமை கோருவது பொருத்தமில்லை. ஏனென்றால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உடலியல், உளவியல் ரீதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் சில விடயங்களில் சம உரிமை வேண்டும் என்றே கருதுவேன்.

பெண்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம் தரப்பட வேண்டும். ஒரு தவறு செய்யும் போது பெண்ணின் தவறு பாரதூரமானதாகவும் ஆணின் அதே தவறு சாதாரணமானதாகவும் கருதப்படும் நிலை மாற வேண்டும். யார் செய்தாலும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும். பெண்ணானவள் திருமணத்திற்குப் பின்பு எதையும் சாதிக்க முடியாது. ஆணானவன் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்ற சமூகத்தின் கட்டுக்கோப்புக்கள் உடைத்தெறியப்பட வேண்டும்.


13. உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாடசாலையில் கற்கும் போதே நான் நிறைய தமிழ்த்தினப் போட்டிகள், ஆங்கில தினப் போட்டிகள், மீலாத்தினப் போட்டிகள், சாகித்திய விழாப் போட்டிகள், இதர போட்டிகளில் கலந்து கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை, விவாதம் போன்ற பிரிவுகளில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்வதானால் எட்டாந் தரத்தில் கல்வி பயின்ற போது பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் நடாத்திய தேசிய ரீதியான சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடமும், 2006 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகம் நடாத்திய உலக சிறுவர் தின சிறுகதைப் போட்டியில் முதலாமிடமும், 2008 இல் சாகித்திய விழாப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாமிடமும், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் நடத்திய தேசிய மீலாத் போட்டிகளில் முதலாமிடமும் பெற்றேன். அதுமட்டுமில்லாமல் உயர் கல்வி அமைச்சு 2012 ஆம் ஆண்டு நடாத்திய கவிதா டெலன்ட் போட்டியில் எனது ஷநிழலைத் தேடி| நாவல் முதலிடமும் விருதும் பெற்றது எனக்கு மறக்க முடியாத நிகழ்வு. 2014 இல் அதே நிகழ்வில் எனது சிறுகதைத் தொகுப்புக்கு ஆறுதல் பரிசும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.


14. இறுதியாக என்ன சொல்லப் போகின்றீர்கள்?

பலரும் சொல்வது போல ஒரு படைப்பாளியின் சிந்தனை பரந்ததாக இருக்க வேண்டும். பேசப்படாத நிறைய விடயங்கள் பேசப்பட வேண்டும். எழுதப்பட வேண்டும். வாசிப்புத்தளம் விரிவுபடுத்தப்பட வேண்டும். 'நிறைய வாசியுங்கள். குறைவாக எழுதுங்கள்'!!!


நேர்கண்டவர்:- ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment